ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.
காலையிலிருந்து தொலைபேசி அடித்தபடியிருந்தது. நல்லதோ கெட்டதோ மக்களுக்கு நாளிதழ்களில் ஏதும் செய்தியாக வந்தால் ஒரு ஈடுபாடுதான். அழைத்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள் மற்றும் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எனக்குத் தெரிந்தவர்கள். வருடக்கணக்காய் மனதில் போட்டு, அக்கு வேறு ஆணி வேறாய் ஆராய்ந்து தக்க சமயம் பார்த்து எடுத்த முடிவானதால் எனக்கு இதில் பெரிய ஆரவாரம் ஒன்றையும் உணர முடியவில்லை.வீட்டின் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி சர்க்கரையில்லாத தேநீரைச் சுவைத்தேன். இந்தச் சக்கரையை நிறுத்த சில வருடங்களுக்கு முன்னால் நான் பட்டபாட்டை இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டிக்கொண்டு வரும். ஆனால், இப்போதோ இனிப்பு சேர்த்த தேநீர் நாவிற்குப் பிடிப்பதில்லை. தேவையானதெல்லாம் சூடான துவர்ப்புச் சுவை மட்டுமே.
வயதான சீனத் தம்பதி காலை நடை போவது என் கவனத்தை ஈர்த்தது. எப்போதும் நான் பார்ப்பவர்கள் தான். இருவரும் பேசிக்கொள்வது மிக அரிது. எனினும் கண்ணசைவும், உடலுறுப்புகளின் அசைவுகளுமே அவர்களுக்கு பாஷையானது என்பது ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் உயர்ந்த விஷயமாகப்படும். காலம் முழுவதும் பேசிப்பேசி இப்போது மெளனமே தங்கள் மொழியாகக் கொண்டிருந்த அவர்களைக் காணும் போதெல்லாம் ஒரு புறம் சிறு பொறாமைப் பட்டாலும், என் மனம் முழுவதும் ஏனோ சொல்லத்தெரியாத ஆனந்தம் நிறையும். நிச்சயம் வயதில் என்னைவிட குறைந்தது பத்து வயதாவது மூத்தவர்களாய் இருப்பார்கள். பஞ்சாய் இருந்த இருவரது தலை முடியும் அவர்களது வயதைக் காட்டுவதாய் மற்றவர் போல நான் என்றும் நினைத்ததில்லை. அவை முதிர்ச்சியின் அழகான அடையாளங்கள் அல்லவா!
டிரிங் டிரிங்,..
“அம்மா, நல்லவேள, எங்க வீட்டுல இல்லாமப் போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன். ஏம்மா இப்பிடியெல்லாம் செய்யிறீங்க ? எங்க மாமியார் போன் அடிச்சி நாக்க புடிங்கிக்கறாப்போல கேக்கறாங்க தெரியுமா ? லீவு எடுத்துட்டு தான் உங்கள வந்து பாக்கணும்னு நினச்சேன்.முடிஞ்சா இந்த வாரக்கடைசியில வரேன்.நல்லாத் தானே இருந்தீங்க, என்னாச்சி, உங்க கூட்டாளி, மணிமேகல ஆண்டி மலேசியாவுக்குப் போனதுமே, உங்களுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல ? இல்ல, அதான் இப்பிடியெல்லாம் செய்யறீங்களா ? இந்த வயசுல உங்களுக்குத் தேவையாம்மா இதெல்லாம் ?”, என்னைப் பேசவே விடாமல் தொலை பேசியில் இளைய மகள் ப்ரியா ஏதோ தன் மாணவனை எச்சரிப்பதைப்போல படபடவென்று பொரிந்து தள்ளுகிறாள்.
“ என்னம்மா பெரிசா செஞ்சிட்டேன், ஊருல உலகத்துல இல்லாதத ? ஆமா,.இதுல உனக்கோ உங்க மாமியாருக்கோ என்ன வந்திடிச்சு ? எனக்கு இப்போ வேண்டியதெல்லாம், ஒரு கம்பானியன்,..,.. ,..”
“ ஐயோ அம்மா, இப்போ பேச எனக்கு நேரமில்ல. நா மறுபடியும் வீட்டுக்குப் போயி சாயங்காலமா போன் அடிக்கிறேன், சரியா ?”, கூறிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமலேயே தொலைபேசியையும் வைத்து விடுகிறாள்.
0 0 0
உலகமே ஏன் இத்தனை சுயநலமாகப் போனது ? நினைத்து நினைத்து எனக்கு அலுப்பும் எரிச்சலுமே மிஞ்சியது. சொந்த ரத்தத்திடமே கூட மனிதன் சுயநலம் காட்ட ஆரம்பித்து விட்டான். தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்று நம்பிய தலைமுறையைச் சேர்ந்தவளாய் நான் இருந்ததும் இதற்குக் காரணமோ ?! மகள் பிறந்ததுமே தன்னுடையது இல்லையென்று வளர்க்கவேண்டுமென்று இதனால் தான் சொன்னார்கள் போலும்! சொந்தத்தாயின் மனநிலையைப் புரிந்துகொள்ளக்கூட ப்ரியாவுக்கு அவகாசமில்லை. அவளுக்கு தன் குடும்பம், தன் புக்ககத்தார் மட்டுமே முக்கியமாய் இருந்தது.
நிச்சயம் என் மகன் என் முடிவை வரவேற்பான். அவன் அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் கூப்பிட்டால் நிச்சயம் இத்தனை காட்டமாய் பேசமாட்டான். அவன் தொலைபேசியைத் தான் நான் எதிர் பார்த்த படியிருந்தேன். இந்த வாரம் இன்னும் அவன் அழைக்கவில்லை.
திடாரென்று வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். இந்த நேரத்தில் யாரது என்று எண்ணியபடியே கதவைத்திறந்தால், மூத்தவள் ராகினி நின்றிருந்தாள். “வா ராகினி, நீ இன்னிக்கி வேலைக்கி போகலையா ?”, என்ற எனக்கு ஒரு முறைப்பையே பதிலாகக் கொடுத்தாள். முகத்தில் எப்போதும் குடி இருக்கும் புன்னகையை வீட்டிலேயே விட்டுவிட்டாள் போலும், அவசரமாய் உள்ளே நுழைந்து இருக்கையில் பொத்தென்று உட்காருகிறாள்.
“ஏம்மா, பேப்பர்ல உங்க படம் வரணும்னு எத்தன நாளா உங்களுக்கு ஆசை ? சொல்லியிருந்தா அன்னையர் தினத்துல ஒரு வாழ்த்து கொடுத்து உங்க போட்டோவையும் போட்டிருப்பேனே. இப்போ இதெல்லாம் என்னம்மா ? கேக்கறவங்களுக்கு எப்பிடித்தான் பதில் சொல்றதோ தெரியல. இன்னிக்கி என்னவானாலும் லீவு போட்டுட்டு உங்க அம்மா கிட்ட பேசிட்டு வான்னு அவரு தான் அனுப்பிச்சாரு.“
“அதிருக்கட்டும் நீ பசியாறிட்டியா ?“
“ ஏம்மா உங்களுக்கு சீரியஸ்னசே புரியலையா ? நா எதப்பத்திப் பேசறேன், நீங்க என்னடான்னா பசியாறிட்டியான்றீங்க. “
“ சரி பேசுவோம். என்ன தெரியணும் உனக்கு ?
“எதுக்கிதெல்லாம் ? தனியா இருக்க போரடிச்சா மலேசியாவுக்கு மாமா வீட்டுக்கு போயிட்டு வாங்கம்மா. அத விட்டுட்டு இப்பிடியெல்லாம் விளம்பரம் கொடுத்திட்டிருக்கீங்களே, அதுவும் எங்களயெல்லாம் ஒரு வார்த்த கூட கேக்கல நீங்க.”
“ அது மட்டும் சொல்லாத ராகினி.போன வருஷம் ஒரு தடவ நா ப்ரியாகிட்டயும் உங்கிட்டயும் இது பத்தி பேசினேன் நீங்க ரெண்டு பேரும் ஏதோ நான் ஜோக்கடிக்கறதா சிரிச்சிட்டு போயிட்டாங்க. அப்பதான் எனக்கு யார் உதவியும் கிடைக்கும்ற நம்பிக்கையே போயிடிச்சி. யோசிச்சித்தான் ஆங்கில பத்திரிக்கைக்கு நேர்ல போயி விளம்பரம் கொடுத்தேன். அங்க இருக்கறவங்கதான் ஒரு கதயாவே போட்டுடறதா சொன்னாங்க. சரி இதுல என்ன இருக்குன்னு நெனச்சி, அவங்க கேள்விக்கெல்லாம் பதில் சொன்னேன்.”
“ அப்ப நீங்க நிஜமாவே ஒரு கல்யாணம் செஞ்சிக்கறதுக்குத் தயாராயிட்டாங்களாம்மா ?” — அவநம்பிக்கையும் ஆச்சரியமும் ராகினி முகத்தில் அப்பியிருந்தது.
“ ஆமா, .. .இல்லாமயா நாளிதழ்ல விளம்பரம் கொடுத்தேன்.”
“ அம்மா, இப்போ உங்க வயசென்ன ?”
“ இதென்ன நீயும் பத்திரிக்கைக்காரங்க மாதிரி கேக்கற ?”
“ சிரிக்காதீங்கம்மா,.. சொல்லுங்க.”
“ இந்த ஆறாம் மாசம் வந்தா அறுவத்தொண்ணு முடியும்.”
“ ஏம்மா இந்த வயசுல எதுக்கும்மா உங்களுக்குக் கல்யாணம் ? ஒரு பக்கம் சிரிப்பு வருது. இன்னொரு பக்கம் கோபமா வருது. இருங்க, நா டோய்லெட் போயிட்டு வரேம்மா.” எழுந்து குளியலறைக்குள் போகிறாள்.
0 0
மணமுடித்து இரண்டு பிள்ளைகள் பெற்ற ராகினிக்கே என் நிலை புரியாவிட்டால் இவளையும் விட ஆறு வயது இளையவளான ப்ரியா எப்படிப் புரிந்து கொள்வாள் என்று நினைத்தால் எனக்கு சற்று மலைப்பாகவே இருக்கிறது. ப்ரியா இரண்டு வயதாகும் போதே கணவனைப் பறிகொடுத்த எனக்கு மூவரையும் வளர்த்து ஆளாக்குவதற்குள் அறுபதல்ல, நூறு வருட ஆயாசம் ஏற்பட்டிருந்ததென்னவோ உண்மை. கணவன் இருந்தபோதும் பெரிதாக ஒன்றும் வாழ்ந்து விடவில்லை. அதனால் தானோ என்னவோ அவர் இறப்பு என்னை மற்றவர் நினைத்த அளவிற்கு பாதிக்கவில்லை. நேயமே இல்லாது தன் உடல் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்துகொண்டு வாழ்ந்த அம்மனிதனின் போக்கு எனக்குப் புரியவே வருடங்கள் ஆயின. இதற்குள் மூன்று குழந்தைகள் பிறந்து விட்டிருந்தன.
“ ம்,.. இப்போ, இந்த வயசுல உங்களுக்கு கல்யாணம் எதுக்குன்னு கேட்டேன்”, குளியலறையிலிருந்து வெளியில் வந்து, விட்ட இடத்தில் ராகினி தொடர்ந்தாள்.
“ அதென்ன, இந்த வயசுல இந்த வயசுலன்னுஅழுத்தி அழுத்தி சொல்ற ?”
“ ஆமாம்மா, இப்போ உங்கள யாரும் கல்யாணம் செய்ய வந்தாலும் நிச்சயமா அது உங்க சொத்துக்காகத் தான் இருக்கும். தவிர எதுக்கும்மா உங்களுக்கு இதெல்லாம் ?”
“ இல்ல ராகினி, உனக்குப்புரியுமோ தெரியல. எனக்கு இப்போ தேவையா இருக்கறதெல்லாம் ஒரு நல்ல நட்பு. ஒரு நல்ல பேச்சுத் துணை தான்.
நா படிக்கிற புத்தகத்தப் பத்தி பேச, காலைல வாக்கிங் போகும் போது கூட பேசிகிட்டே வர, என்னோட சேர்ந்து டாவி பார்க்க இப்பிடி தான் நான் ஒரு துணைக்காக ஏங்கறேன் தெரியுமா ?”
“ ஓஹோ,..”,விழுந்து விழுந்து சிரித்துவிட்டு,”அம்மா, உங்களுக்கு இப்போ பிரச்சனையே தனிமை தான். நா வேணா ஒரு வாரம் இங்க வந்து இருக்கட்டுமா ? இங்கேயிருந்தே வேலைக்குப் போறேன். இல்ல, ஒரு வாரம் லீவு கூட போட்டுட்டு உங்கள எங்கயாவது வெளியூருக்குக் கூட்டிட்டுப்போறேன், என்ன சொல்றீங்கம்மா ?” என்று கேட்கிறாள்.
“ இல்ல, அதெல்லாம் வேண்டாம். ராகினி, பொழுது போறதொண்ணும் எனக்கு சிரமமில்ல. இது எனக்கென்ன புதுசா ? இருக்கப் போறது இன்னும் ஒரு சில வருஷங்கள்,..”
“ அதேதான் நானும் சொல்றேன், இப்போ போயி கல்யாணம் அது இதுன்னு எதுக்குன்னு தான் கேக்கறேன்.”
“ என்னைப் பேச விடாம நீ குறுக்க குறுக்கப் பேசாத. “ என்றேன் காட்டமாக.
“ சரி,சரி சொல்லுங்க.”
“ எனக்குத் தேவை நல்ல ஒரு நட்பு. கல்யாணம், கணவன் என்பதெல்லாம் கூட ஒரு சடங்கிற்காகவும் சமூகத்தைத் திருப்திப் படுத்தவுமே. இது உனக்குப் புரியுதா ?எனக்கு உடல் தேவைகள் இருக்கும்னு நீ நம்பறியா ? அதுவும் நீ சொல்றா மாதிரி இந்த வயசுல ? நட்புக்கு உங்களுக்கு தான் நிறையா சினேகிதிங்க இருக்காங்களேன்னு நீ கேப்ப. நிறையா பேர் இருக்காங்க தான். ஆனாலும் எல்லாருமே தன் குடும்பம் குழந்தைகள்னு இருக்காங்க. நான் எப்போவாவது போன் அடிச்சி பேசினா கூட அவங்களுக்கு மனசும் நேரமும் இருந்தா தான் பேசுவாங்க. இல்லன்னா பேச மாட்டாங்க.அவங்களயும் குத்தம் சொல்லமுடியாது. சூழ்நிலை அப்படி. இதில் வம்பு பேச்சு பேசுபவர்களும் அதிகம். அது எனக்குப்புடிக்காது.”
“ விளம்பரத்தப் பார்த்ததும் உங்களுக்கு பிடிக்கிறா மாதிரி நட்ப மட்டும் எதிர் பார்த்து நல்லவங்க யாரும் வருவாங்கன்னு நம்பறீங்களா ? உங்களோட நோக்கம் எனக்குப்புரியும். மத்தவங்களுக்குப் புரியாதும்மா. பலவிதமா பேசுவாங்காம்மா.”
“ எனக்கும் நல்லாத் தெரியும் உண்மையான நட்பு கிடைகிறது மிகவும் கஷ்டம்னு. ஆனா உலகத்துல இன்னும் நல்லவங்க இருக்காங்கன்னு மட்டும் நான் நம்பறேன்.”
“ ஏம்மா, அப்பா செத்துப்போயி ஒரு முப்பது வருஷமிருக்குமா ? இத்தன வருஷத்துல தோணாம இப்போ ஏம்மா உங்களுக்கு தோணிச்சு ?
“ உங்க மூணு பேரையும் படிக்க வைக்க, கல்யாணம் கட்டிக்குடுக்கன்னு இருந்துட்டதால எனக்கு தோணல. இப்போ ப்ரியா கல்யாணம் முடிஞ்சி, நாலு வருஷமா தான் இதப் பத்தியே யோசிச்சேன்”
“ நீங்க என்ன தான் சொன்னாலும், இதுல பல பிரச்சனையிருக்கு. எனக்கு என் வீட்டுக்காரர மட்டும் எப்படியாவது சமாளிச்சா போதும். ஆனா ப்ரியாவுக்கு, அவங்க வீட்டுல எல்லாரையும் சமாளிக்க முடியும்னு எனக்குத் தோணல. அவங்களப்பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே.”
“ இதுல அவங்களுக்கென்னம்மா கஷ்டம் ?”
“அம்மா சொல்றது ஈஸி. அவங்களுக்கெல்லாம் பதில் சொல்ற போது தான் அந்தக் கஷ்டம் புரியும். ரமேஷுக்கு இன்னும் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். தெரிஞ்சா நிச்சயமா அவனுக்கும் இதெல்லாம் பிடிக்காதுன்னு தான் தோணுது. சரிம்மா, நான் கிட்ட இருக்கற பேங்குக்குப் போயிட்டு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். உங்களுக்கு கடையில ஏதும் வாங்கணுமா ?”
“ எனக்கு ஒண்ணும் வேணாம். நீ போயிட்டு வா. நா சமைக்கிறேன்.” ராகினி சென்றதும் கதவை மூடி விட்டு, சமையலறையில் நுழைந்து உருளைக்கிழங்கு இருக்கிறதா என்று பார்த்து எடுத்து அவளுக்குப் பிடித்த பொரியல் செய்ய ஆரம்பிக்கிறேன்.
000
வீட்டில் அப்போதெல்லாம் ஒரு பணிப்பெண்ணுக்கு இருக்கக்கூடிய மதிப்பைத்தான் எனக்குக் கணவனாய் இருந்த ஆள் கொடுத்திருந்தான். பல சமயங்களில் அதுவும் கூட இருந்ததில்லை. நேசம், நட்பு இவற்றையறியாத அத்தகைய ஒரு பிறவியை என் வாழ்வில் இதுவரை நான் கண்டதில்லை. பிள்ளைகளிடமும் கூட நட்பு இருந்ததில்லை.
இத்தனை நியாயம் பேசுகிறாளே ராகினி, இவள் எத்தனை முறை பகலில் நான் ரகசியமாகக் கண்ணீர் விடும் போது என்னிடம் காரணம் கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் பிஞ்சு மனதில் நஞ்சு வேண்டாமே என்று எண்ணி, அம்மாவுக்கு வயிற்றுவலி என்றோ, இல்லை அம்மாவுக்கு தலை வலி என்று பல விதமாய் கூறி மழுப்பியிருக்கிறேன். நட்புக்காக ஏங்கிய அந்த நாட்கள் இன்றும் பசுமையாய் இருக்கின்றன. மருந்திற்கும் கூட நான் வேண்டி ஏங்கிய நட்பு கிடைக்காததாலேயே அந்த ஆளுக்குத் தேவையாயிருந்த ஒன்றே ஒன்று எனக்கு பெரும் வெறுப்பைக் கொடுத்தது. இந்நிலையில், இன்றைய தேதியில் கல்யாணம் எனக்குத் தந்த பொருள் ‘நட்பு ‘ மட்டுமே. வயதும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதையெல்லாம் நான் பெற்ற பிள்ளைகளுக்கே கூட புரியவைக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.
அப்போதெல்லாம் தோன்றாதது இப்போது ஏன் என்கிறாள். அப்போது தோன்றியிருந்தாலும், நானும் தேடி ஒரு நட்பைப்பெற்று, மணமுடித்திருந்தால் மூவரின் கதியென்னவென்று யோசிக்கத் தோன்றவில்லையே அவளுக்கு. என் மூன்று குழந்தைகளுக்கும் எந்த விதமான சிரமங்களும் கூடாதென்றே நான் ஒரே மனதாக அவர்களை தனியாளாய் வளர்க்கத்தொடங்கினேன். இப்போது எல்லோருமே நல்ல நிலையில் அவரவர் வாழ்க்கையில் ஒன்றிய பிறகு, எனக்கு இருக்கும் இந்தத் தனிமை என் பழைய ஏக்கத்தை மறுபடியும் துளிர்ப்பித்துள்ளது. இது இவர்களுக்கு ஏன் இத்தனை மனசஞ்சலத்தைக் கொடுக்கிறது என்று தான் புரியவில்லை. இதையெல்லாம் சொன்னால், தன் கடமையைச் செய்து விட்டு அம்மா சொல்லிக் காண்பிக்கிறாள் என்று தோன்றும்.
ஒருவழியாக ராகினிக்குப்பிடித்த மீன் சம்பாலும் உருளைக்கிழங்கு பொரியலும் செய்து முடித்து மின்விசிறியடியில் உட்கார்ந்ததுமே, ராகினி வந்தாள்.
“பயங்கரமான வெயில்மா. கொடையாவது எடுத்துகிட்டுப் போயிருக்கலாம் . மறந்துட்டேனே,உஸ் அப்பாடா,..”, என்று உட்கார்ந்தவளின் கையில் குளிர்சாதனைப் பெட்டியிலிருந்து எடுத்த தண்ணீரை புட்டியுடன் நீட்டுகிறேன். அப்படியே மடமடவென்று குடிக்கிறாள்.
“ உனக்குப்பிடிச்ச சமையல் செஞ்சிருக்கேன், சாப்பிடாம நீ பாட்டுக்கு கிளம்பிடாத. இப்போ சாப்பிடுவோமா, இல்ல கொஞ்சம் நேரம் போகட்டுமா ?”
‘இல்லம்மா, ஒரு மணி நேரம் போகட்டும்மா”, என்று இருக்கையிலேயே சாய்கிறாள். “சாப்பிட்டுட்டு நா கிளம்பறேன்மா. பிள்ளைங்கள இன்னிக்கி வெளிய கூட்டிட்டுப் போறேன்னிருக்கேன்”, என்கிறாள்.
“ ஆமா, ப்ரியாவும் சரி, நீயும் சரி வரதே இல்ல. போன் அடிக்கறதோட சரி. வந்தாலும் தங்கறதில்ல. ஓடறீங்க.”
“ என்னம்மா செய்யறது. வேலைக்கு போவணுமே. இன்னிக்கி உங்க கூட பேசத்தானே வந்தேன்.”
“பேசவா வந்த,சண்ட போடத் தானே வந்த ?”
“ சண்டையெல்லாம் ஒண்ணுமில்லையே. ஆனா நீங்க நினைக்கிறது மட்டும் வேணாம்மா. சரியா வராது. நீங்க வேணா பாருங்களேன். இதுனால எத்தன பிரச்சனைகள் வரப்போகுதுன்னு. நாலு பக்கத்துலேயிருந்தும் கேள்வி கிளம்பும். சரி, சரி வரீங்களா சாப்பிடலாம்.”
இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கைப்பையைத் தூக்கிக் கொண்டு
மறுபடியும் அடுத்த வாரம் வருவதாய் சொல்லிவிட்டுக் கிளம்பிச்சென்று விடுகிறாள்.
0 0
இன்றைய தேதியில் நான் இருக்கும் வீடு தவிர , வங்கிக்கணக்கில் கணிசமான தொகையும் உள்ளதால் என் நிலை பரவாயில்லை. அதுவும் இல்லையென்றால், யோசிக்கவே முடியவில்லை. பொருளாதாரத் தேவைகளுக்கும் மற்றவரை நாடும்படி இருக்கும்.அமெரிக்காவுக்கே தன்னுடன் வந்துவிடும் படி ரமேஷும் எத்தனையோ முறை சொல்லி விட்டான். பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு போவதற்கு மனமில்லாமல் ‘இப்போ வரேன் ‘, ‘அப்போ வரேன் ‘ என்று தள்ளிப் போட்டபடியிருக்கிறேன். ஏதோ ஓரிரு மாதங்களுக்கு வேண்டுமானால் போய் வரலாம். அதுவும் அங்கு குளிர்காலம் இல்லாத நேரமாய் போகவேண்டும். இல்லையென்றால், என் மூட்டு வலி தலை தூக்கி என்னோடு
உடன் இருப்போரையும் சேர்த்து பாடாய் படுத்தி விடுமே. மாலை இத்தனை நேரமாகியும் ரமேஷ் இன்னும் அழைக்கவில்லையே என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது.
டிரிங் டிரிங் ,..
தொலை பேசியை எடுத்தால் ரமேஷே தான் ! “காலையிலேயிருந்து உன்னோட போனத்தான் எதிர் பார்த்தபடி இருக்கேன். ரமேஷ் எப்பிடியிருக்க ? மது நல்லாயிருக்காளா ? வேலை அதிகம்னு சொன்ன, போன் பண்ண மாட்டியோன்னு நினைச்சேன்.”
“ அம்மா நான் நல்லா இருக்கேன். மதுவும் நல்லா இருக்கா. இப்போதான் ராகினி போன் செஞ்சா. விவரமெல்லாம் சொன்னா. விளம்பரம் கொடுத்திருக்கீங்களாமே ? ம் ,.. ஆமாவா ? நீங்க உடனே கிளம்பி இங்க வாங்கம்மா. தனியா இருக்கறது உங்களுக்கு சிரமமா இருக்குன்னு தெரியுது. நான் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யறேன். சீக்கிரமே வந்து சேருங்கம்மா.” — அவன் குரலில் அக்கறையோடு சிறு எரிச்சலும் தெரிந்தது.
“இருப்பா, இரு. இப்ப என்ன ஆயிடிச்சின்னு அக்காளும் தம்பியும் குதிக்கிறீங்க. இப்போ நான் அங்க வராப்புல இல்ல. உன்னால முடிங்ச போது வா. முடியறப்பயெல்லாம் போன் அடி. நான் அப்புறமா வரேன்.”
“ இங்கயும் வரமாட்டாங்க. தனியா இருக்கறதால ஏதேதோ செய்யத் தோணுது உங்களுக்கு.” — அலுத்துக்கொண்டான்.
“ கொஞ்சம் இரு. நீ என்ன விடலப்பையன் கிட்ட பேசறா மாதிரி பேசற. நான் தனியா இருந்துகிட்டு ஏதேதோ செய்யிறேனா ? எனக்கு ஒரு நட்பு தேவைன்னு தோணினதால விளம்பரம் கொடுத்தேன். இது உங்களுக்கெல்லாம் பிடிக்கலன்னும் தெரியுது. நீங்கல்லாம் கொஞ்சம் பொறுமையா நல்லா யோசிங்க. அப்ப புரியும்.”
சிறிது நேரம் மறுபுறத்தில் மெளனம் நிலவியது. யோசிக்க ஆரம்பித்து விட்டானோ ?“அம்மா நம்ம ஜனங்க, சொந்தக்காரங்க எல்லாரும் சிரிப்பாங்கம்மா.”
“ம்,. அவங்கல்லாம் தானே நா ஒத்தையா நின்னு கஷ்டப்பாட்டு உங்களையெல்லாம் வளத்தப்ப கூட வந்து நின்னு கை கொடுத்தாங்க. என்ன ரமேஷ் பேசற நீ. அமெரிக்காவுல இருக்கற உன்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்க்கல”,ஏமாற்றத்துடன் நான் சொன்னதும்,
“ அம்மா, இருக்கறது அமெரிக்கான்னாலும் ஆப்பிரிக்கான்னாலும் அடிப்படையில நானும் ஒரு இந்திய இனத்தச் சேர்ந்தவன் தானே ? அம்மா எனக்கு வேலை அதிகமாயிருக்கு. இன்னும் ரெண்டு வாரத்துக்கு நான் போன் பண்ணுவேன்னு தோணல. ஏதாவதுன்னா நீங்க தான் போன் அடிக்கணும், சரியா ?” — ரமேஷ் சொல்கிறான்.
“ என்னப்பா திடார்னு வேல அதிகமாயிடிச்சா ? “
“ இல்லம்மா ஒவ்வொரு வருஷமும் இதே நேரத்துல எனக்கு வேலை கூடுமேம்மா. நீங்க மறந்துட்டாங்களா ? சரிம்மா நா வரேன். நீங்க யாரையாவது நல்லவருன்னு நம்பிடப் போறீங்க, முடிவெடுக்கறதுக்கு முன்னாடி எங்க கிட்டயும் ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்மா நீங்க. சரி இனிமேலாவது ப்ரியா, ராகினிய கலக்காம ஒண்ணும் செய்யாதீங்க. மலேசியாவுக்கு மாமா வீட்டுக்கு போயிட்டு வாங்களேம்மா. “
“ வேணாம்ப்பா. நீ கவலப்படாத. நான் நல்லாதானே இருக்கேன். விளம்பரம் குடுத்தா என்ன, தகுந்த வயதான ஒருத்தர் எனக்குப் பிடிக்கிறாப் போல கிடைக்கணுமே. எதானாலும் போன் அடிச்சி சொல்றேன். நீ கவலப்படாதே. வேலையில சாப்பாட்ட மறந்துடாத. வேளைக்குச் சாப்பிட்டு ரெஸ்ட் எடு ரமேஷ்.சரியா ?”
“சரிம்மா. நா வைக்கறேன். நீங்க உடம்பப்பார்த்துக்குங்க. மூட்டு வலி வந்தா உடனே டாக்டரப் போயிப் பாருங்க.”
“சரிப்பா. போன வைக்கிறேன்.”
ரமேஷின் குரலைக்கேட்டதும், எனக்கு வழக்கம் போலவே அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. இரவு தூங்கி எழுந்ததும் சரியாகி விடும். எதற்கும் இல்லாத ஆற்றல் இந்த காலத்திற்கு மட்டும் அல்லவோ இருக்கிறது!
0 0
‘வசந்தம் சென்ட்ரல் ‘ வழங்கிய நாடகத்தில் ஒன்ற மறுத்தது மனம். கண்கள் தன்னிச்சையாக திரையில் ஆழ்ந்திருந்தபோதிலும், ரமேஷுடன் பேசிய உரையாடல் தான் மனத்தில் ஓடிய படியிருந்தது.என் மகன் என் நிலையைப் புரிந்து கொள்வான் என்று நம்பிய என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. நான் தான் அதிரடியாக முடிவெடுத்து விட்டேனோ ? அப்படியும் இல்லையே! நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகவே யோசித்துத் தானே விளம்பரம் கொடுக்கப்போனேன். அமைதியாக முடிந்திருக்க வேண்டியதைப் பத்திரிக்கையாளர்கள் கதையாகக் கொடுத்தது தான் தவறாகி விட்டது. இதற்குச் சம்மதித்திருக்கக் கூடாது. ஆரவாரம் தான் ப்ரியாவிற்கும் ராகினிக்கும் பிடிக்கவில்லை. ஆனால், இதை நானே எதிர் பார்க்கவில்லையே!
மறுபடியும் தொலைபேசி சிணுங்க, ப்ரியா தான் பேசினாள்.
“அம்மா நான் என்னோட ரூம்லேயிருந்து பேசறேன். அவரும் டாவி பார்த்துகிட்டிருக்காரு. அக்கா வந்தாளாமே. போன் அடிச்சா. விவரமெல்லாம் சொன்னா. உங்க பிரச்சனை எங்களுக்கு புரியுதும்மா. நான் நாளைக்கு லீவு போட்டிருக்கேன். காலையில வந்து உங்கள ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்.”
“ எங்க ?”
“ வாங்களேன் காலையில போவோம். உங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்மா.”
“ கோயிலுக்கா ? ‘
“இல்ல. காலையில பார்க்கலாம். வச்சிடறேன். பை மா.”சட்டென்று தொலைபேசியை வைத்தும் விடுகிறாள். இவள் எங்கு அழைத்துக் கொண்டு போகப்போகிறாள் ? பெரிய மர்மாக புதிர் போட்டு விட்டு மேலே பேசாமல் வைத்தும் விட்டாளே ?! எல்லோரையும் விட வயதில் சிறியவளாக வளர்ந்திருந்த காரணத்தாலேயே ப்ரியாவிற்கு வீட்டில் என்னைத் தவிர,அண்ணன் மற்றும் அக்காவிடமும் செல்லம் அதிகம்.படபடவென்று பேசுவதில் விவரங்கள் அதிகம் இருக்காது. பொறுமை குறைவு. ராகினி மூத்தவள் என்ற காரணத்தாலேயோ என்னவோ நிதானம் உடன் வளர்ந்திருந்தது. ரமேஷிற்கு என்னிடம் மற்றவரை விட பாசம் அதிகம். ஆனால் மூவருமே இப்போது அவரவர் குடும்பம் வேலையென்றானதும் என்னைப் பற்றி நினைப்பது குறைவு;இதுவும் காலத்தின் கட்டாயம். அவர்களையும் சொல்லியும் குற்றமில்லையே.
ஏறி வந்த வாகனத்தையும் ஓட்டி வந்த ஓட்டுனரைமட்டுமே நினைத்திருந்தால் மேற்கொண்டு ஆகவேண்டிய அலுவலகங்களில் வேலைகள் ஆகுமோ, இல்லை முன்னேற்றம் தானிருக்குமா ?!நாளை ப்ரியா எங்கே அழைத்துப்போகப்போகிறாள் என்று என்னால் ஊகிக்கவே முடியவில்லை. இரவுக்கஞ்சியைக் குடித்து விட்டு சிறிது நேரம் படித்துக்கொண்டே தூங்கி விட்டேன்.
காலையில் எழுந்திருக்கும் போதே புது உற்சாகம் உடம்பிலும் மனதிலும் இருப்பதை உணர்ந்தேன். காலையில் தினசரி நடப்பது வழக்கமாதலால், காலணியை மாட்டிக்கொண்டு நடக்கப்போனேன். வழியெல்லாம் தெரிந்த முகங்கள்; பலர் பதிலுக்குப் புன்னகைத்தனர்.இன்று ப்ரியா வருவதாய் சொன்னது நினைவில் வந்ததும் எங்கே கூட்டிக்கொண்டு போகப்போகிறாள் என்று நடந்தவாறே யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு விவரமும் அவள் சொல்லாததால், கேள்விக்கு பதில் கிடைக்கவே இல்லை.
நடந்து விட்டு, வீடு வந்து சேர்ந்து ஐந்து நிமிடங்கள் இளைப்பாறினேன். பிறகு குளித்து விட்டு குளியலறையிலிருந்து வெளியில் வரவும், ப்ரியா வந்து சேரவும் சரியாக இருந்தது.
“ வா ப்ரியா, இந்நேரத்துக்கு, வேலைக்குப்போகாத நாள்ள நீ படுக்கையை விட்டு எழவே மாட்டியே, இன்னிக்கி என்ன சீக்கிரமே எழுந்திட்டியா ?” — சிரித்தபடி நான் கேட்டதும், “இன்னிக்கி, எனக்கு இதவிட வேற முக்கியமான வேலை இல்ல. அதான் தினமும் போலவே எழுந்திட்டேன். ரமேஷ் போன் அடிச்சானா ?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
“ ஆமா போன் அடிச்சான். மாப்பிள்ள எப்பிடியிருக்காரு. சீனாவுக்கு வேல விஷயமா போகப்போறாருன்னியே, எப்போ போகப்போறாரு ?”
“போயிகிட்டே பேசுவோம்மா. வெளிய பசியாறிக்கலாம். நீங்க கிளம்புங்க, ம், சீக்கிரம்மா”, காலில் சுடு கஞ்சியைக் கொட்டிக்கொண்டவள் போல தவித்தாள்.
“ என்ன அவசரம் இப்போ ? ஆமா எங்க போறோம்.”
“ வாங்க, உங்களுக்கே புரியும். இந்த ஐடியாவே உங்க மாப்பிள்ளையோடது தான்.”
உடையை மாற்றிக்கொண்டு அவளுடைய அவசர நடைக்கு ஈடு கொடுத்து கீழே வந்தால், வாடகை உந்துவண்டியைக் கை நீட்டி நிறுத்தினாள். செம்பவாங்கிலிருந்து கிளம்பினோம். ஓட்டுனரிடம், ‘ஈஷுன் ‘ என்றதும், “ப்ரியா, ஈஷுன்ல எங்க போறோம் ?” அடக்கமுடியாமல் நான் கேட்டது, “அம்மா அங்க நாராயண மிஷன் முதியோர் இல்லத்துக்கு தான் போறோம்”, என்றாள் ப்ரியா.
“யாரப்பாக்க ?”
“யாரையுமில்ல.”
“பின்ன ?”
“அம்மா, இந்த நாலு வருஷத்துல நேத்திக்கி தான் உங்க மாப்பிள்ள உருப்படியா ஒரு யோசனை சொல்லியிருக்காரு. உங்களுக்கு அந்த இடம் பிடிச்சிருந்தா, அங்க தங்கிக்கலாம். நல்லா கவனிப்பாங்க. நிறைய பேர் இருக்காங்க. நீங்க எதிர் பார்க்கற பேச்சுத் துணைக்கு குறைவே இருக்காது.”
“ இது எதுக்கு ? நானென்ன என்னோட வேலைய செய்ய முடியாமயா இருக்கேன். இந்த மூட்டு வலியத் தவிர எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லயே. நான் பாட்டுக்கு இருக்கேன். நா ஏன் இங்க வந்து தங்கணும்.”
“ கோவப்படாதீங்கம்மா. உங்களுக்குத் தனியா இருக்க கஷ்டமா இருக்கில்ல, அதான்.”
“ ப்ரியா, எனக்குப் பிடிக்கல்ல”, வண்டியில சத்தமாகக்கூட என்னால் பேச முடியவில்லை. இந்தத் திருப்பம் எனக்குப் பிடிக்கவில்லை.
“ப்ரியா நீ ஏன் என் கிட்ட சொல்லல்ல ? வா, திரும்ப வீட்டுக்கே போயிடலாம்.”
“ஏம்மா ?ப்ளீஸ்.”
“ வீட்டுக்குப் போயி சொல்றேன்”
“ சரி, சும்மா போயிப் பார்ப்போமே,ப்ளீஸ்.பிடிக்கல்லன்னா தங்கவே வேணாம். ஈஷுனுக்குள்ளயே வந்தாச்சி. அங்க பாருங்க நாராயண மிஷன் தெரியுது.”
0 0
வண்டிச்சத்தத்தைக் கொடுத்து விட்டு ப்ரியா வருவதற்குள், நான் சுற்றும் முற்றும் ஒருமுறை நின்ற இடத்திலிருந்தே பார்க்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கூட்டாளி ஒருவரின் சொந்தக்காரைக் காண நான் வந்திருந்தும் ஏனோ அங்கு முதல் முறை வருவது போல உணர்ந்தேன். ஒரு புறம் ப்ரியாவிடம் எனக்குக் கோபம் இருந்தது. ஆனால் அதையும் மீறி ஏதோ ஒரு புதிய உணர்வு! சற்று நேரத்தில் ப்ரியா என்னோடு மெளனமாய் நடந்தாள். உள்ளே சென்றதுமே, வரவேற்பறையில், ‘நீங்கள் தான் ப்ரியா ரகுராமனா ? ‘ என்று கேட்டதுமே, முன் தினமே தொலைபேசியில் இவர்களுடன் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறாள் என்று புரிந்தது. அங்கு ப்ரியா பேசிக்கொண்டிருக்கும் போதே, என்னை மட்டும் தாதி ஒருத்தி புன்னகையுடன் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாகச் சுற்றிக் காட்டினாள்.
காலை உணவு நேரமாதலால், சாப்பாட்டுக் கூடத்தில் கூடியிருந்தனர் முதியோர் அனைவரும். இருந்தவர்களில் பெரும்பாலும் என்னை விட மூத்தவர்கள் தான் அதிகமாயிருந்தனர். சுருக்கங்கள் விழுந்த அந்த முகங்கள் ஒவ்வொன்றிலும் இருந்த கதைகளை என்னால் படிக்க முடிந்தது. அன்பு, பாசம் , நேசம் மற்றும் நட்பை என்னைப்போல அவர்கள் எல்லோருமே எதிர் பார்க்கிறார்கள் என்பது எனக்கு அந்தச்சூழலில் உணர முடிந்தது. ஆங்காங்கே சில இளைஞர்கள் முதியோருக்கு உதவிக்கொண்டிருந்தனர். சிலருக்கு கைகளும் விரல்களும் ஒத்துழைக்காததால், கஞ்சியை கரண்டியால் சிறிது சிறிதாக ஊட்டி விட வேண்டியிருந்தது. சிலருக்கு நடக்க உதவி தேவையாகயிருந்தது என்பதால் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்றனர்.இவர்களுக்கெல்லாம் என்னைப்போன்றே ஒரு வகைத் தேடல் இருந்திருக்கும்; விடை எத்தனை பேருக்குக் கிடைத்திருக்குமோ ?! வருடக்கணக்காக வெளிச்சத்தைத் தேடியலைந்த எனக்கு வெளிச்சம் தெரிந்தது. வெளிச்சத்தைத் தேடுவதை விடுத்து ஏன் நானே வெளிச்சமாக ஆகக்கூடாது என்று தோன்றியது.
“அம்மா, என்னம்மா இடம் பிடிச்சிருக்கா ? என்ன நினைக்கிறீங்க ?,ப்ரியா என் தோளைத்தொட்டுக் கேட்டதும் தான் நான் அவளுடன் வந்திருந்ததே நினைவிற்கு வந்தது.
“ம்,.. என்ன கேட்ட ?”
“ இல்ல,.. இந்த இடம் நல்லா இருக்கான்னு கேட்டேம்மா.”
“ நல்லா ரொம்ப இருக்கே. ரொம்ப நல்லா, அமைதியா இருக்கு.”
“அப்ப இங்கயே இருக்கீங்களாம்மா ?”
“இங்கயேவா ?”
“பின்ன ?”
“இங்கயே இருக்கமுடியாதும்மா.”
“அப்பிடின்னா ?
“எல்லா முதியோர் இல்லத்துக்கும் போகணுமே, அப்பத்தானே எனக்கு நிறைய பேரைப் பார்க்கமுடியும்.ப்ரியா இன்னும் வேற எங்கேயெல்லாம் சிங்கப்பூருல இது போல முதியோர் இல்லம் இருக்குன்னு சொல்லு.”
“ என்னம்மா சொல்றீங்க ?”
“ நான் நல்லா தானே இருக்கேன். நானே ஏன் தொண்டூழியம் செஞ்சி, நான் தேடின நேசம், நட்பு மற்றும் அன்ப இவங்களுக்கெல்லாமும் கொடுக்கக்கூடாதுன்னு
நினைச்சேன். சரி இனிமே இது தான் நல்லதுன்னு உடனே தீர்மானமான முடிவும் பண்ணிட்டேன்.”
“ அப்ப அந்த விளம்பரம் ?”
“ எது ? ஓ ,அதச்சொல்றயா ? அது சரியான தீர்வுன்னு நினைச்சேன். ஆனா அதுனால எனக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய நட்பை இன்னும் பல பேருக்கு நான் கொடுக்கமுடிம்னா, அது தானே நல்லது. எனக்கும் நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. தவிர குடும்பத்துல யாருக்குமே பிடிக்காததையும் நா ஏன் செய்யணும் ?”
“அம்மா, வாலண்டரி சர்விஸ் செய்யவும் உடம்புல தெம்பு வேணும்மா. ஈஸியொண்யில்ல. சொல்றது ஈஸி. செய்ய வேணாமா,..”
“ப்ரியா, இவங்களோட பேசி, இவங்க பேசறதக்கேட்டு, அவங்களுக்கு என்னால முடிஞ்சத உதவி செஞ்சா எனக்கு வயசு கொறஞ்சிடும், நீ வேணாப் பாரேன், நான் இன்னும் சுறுசுறுப்பா ஆயிடுவேன். இப்போ தான் எனக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை அமைஞ்சதா மன நிறைவா இருக்கு. உனக்கு தான் நன்றி சொல்லணும் ப்ரியா.”
“ என்னம்மா சொல்றீங்க ?”
“ ஆமாம் ப்ரியா, எனக்கு இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாளிதழுக்கு போன் அடிச்சி, நானே பேசிடறேன். யாரும் தகவல் கேட்டா கொடுக்க வேண்டாம்னு சொல்லிடணும். எனக்கு இது முன்னாடியே தோணாம போச்சேன்னு நினைக்கிறப்போ தான்,..”
“நீங்க கோபப்படுவீங்கன்னு தான் நான் எதிர் பார்த்தேன்.முதியோர் இல்லத்துல பெற்றோரை விடறதுன்றது கேவலமா தானே பொதுவா எல்லாரும் நினைக்கிறாங்க. அதனால நானும் ரொம்ப பயந்துகிட்டே தான் உங்களக் கூட்டிட்டு வந்தேன்.”
இருவரும் அங்கிருந்து கிளம்பினோம். இனிமேல் ரமேஷை இரவில் தொலைபேசியில் அழைத்துப்பேசச் சொல்லவேண்டும். பகலில் நான் வீட்டில் இருக்கமாட்டேன் என்றும் மறக்காமல் விவரங்களைச் சொல்லி விடவேண்டும். நூலகத்திலிருந்தும் வாரம் நான்கு புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம்.
பெட்டியில் பத்திரமாய் இருக்கும் என் கதைப் புத்தகங்களை தூசு தட்டி எடுத்து வைக்க வேண்டும். இனிமேல் அவை நிறைய உதவியாக இருக்கும்; படித்துக் காண்பிக்கலாம் இந்த புதிய நண்பர்களுக்கு.
———–தமிழ் முரசு 20-4-02 / 27-4-02 —————————-
- எழுதாதக் கவிதை
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- மாயக்கவிதை
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- Recipe: Fried Rice With Peas and Chicken
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- புனிதமாகிப்போனது!
- வெளிநடப்பு!
- மனித வெடி
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- வைரமுத்துக்களின் வானம்- 7
- ஊர்க்குருவி
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- கவிதைகளே ஆசான்கள்
- கொடி — மரம்
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- வேண்டாமா இந்தியா ?
- திறவி.
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா
- தண்டனை போதும்!
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- தழும்புகள்
- கலர்க் கண்ணாடி
- மொரீஷியஸ் கண்ணகி
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- வெளிச்சம்
- விடியும்! (நாவல்) – (20)
- மொழிவன சில
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- சூரியக்கனல்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது