இரா முருகன்
24
சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான்.
வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப் பாட்டி.
புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் சின்னக் குழந்தைக்கு நிலாக்காட்டி ஊட்டுவது போல் சாதுவான ரசமும், நெய்யுமாக அன்னம். புடலங்காய் பருப்பு உசிலி. அதில் இழைபடும் வெளுத்த தலைமுடி.
இந்தச் சாப்பாட்டை அவன் போன ஜன்மத்தில் சாப்பிட்டிருக்கிறான்.
ஓ அக்னியே. எங்கள் பிரார்த்தனையைக் கேள். மித்ரனோடும் ஆர்யமனோடும் உன் சிம்மாசனத்தில் வீற்றிரு. நீ இந்திரன் போல் வலிமையானவன். திவோதச மன்னன் உன்னைத் தொழுதான். இந்த மண்ணில் முதலில் அவதரிக்க நீ கருணை கூர்ந்தாய். பிறகு விண்ணேறினாய்.
சாம வேதத்தின் வரிகள் ஒலிகளாக அவன் காதுகளில் இரைந்து ஒலித்தன. அவன் தான் சொல்கிறான். சிரவுதிகள் அடியெடுத்துக் கொடுக்கிறார். அரணிக் கட்டையில் நெருப்பாகப் பிடித்துப் படர்ந்து பரவும் முழக்கம். கம்பீரமாக ஒளிர்கிற உடம்பு அவனுக்கு. அவனுக்குச் சிறகுகள் முளைக்கின்றன. அவன் வானத்தில் ஏறிக் கொண்டிருக்கிறான். இரண்டு பக்கமும் சிவப்புக் கொடி பிடித்து யாராரோ அணிவகுத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவனோடு பேச வந்தவர்கள். அவன் காலத்துக்கு ஏகமாகப் பின்னால் பிறந்தவர்கள். அவர்கள் காலத்துக்கு அப்புறம் இங்கே எல்லாம் மாறும். மனுஷ்யன் மகத்தானவனாவான். பிசாசுகள் வலுவிழந்து போவார்கள். தெய்வங்களும் தாம்.
அவர்கள் திடமாக நம்பினார்கள். அந்தக் காலம் வந்ததோ என்னமோ தெரியவில்லை சாமிநாதனுக்கு. ஆனாலும் அவர்களைப் பிரியத்துடன் பார்க்கிறான்.
அக்னியே, நீ என் கிரஹத்தின் அதிபதி. என் ஆகுதிக்குக் குருவாக இருந்து வழி காட்டு. எங்கள் குற்றம் குறையனைத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கு. எங்கள் பாவங்களைச் சுட்டெறி. தவறு செய்யாதபடி எங்களைத் தடுத்தாட்கொண்டு வழி காட்டு.
எதுக்கு அதெல்லாம் சாமா ? இப்படியே இருந்துடலாம்.
குருக்கள் பெண் பின்னால் இருந்து சாமிநாதனைத் தழுவிக் கொள்கிறாள்.
வேண்டாம் வசு. சாமவேதம் சொல்றேன் கேளு. இல்லே, அவாள்லாம் ஏன் சிவப்புக் கொடி பிடிச்சுண்டு போறா தெரியுமா ?
எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்டா சாமா. உன்னோட உடம்பு மட்டும் போறும்.
வசு. வேணாம். சொன்னாக் கேளு. அக்னியே. நாசமாப் போச்சு. ஊஞ்சல்லே படுக்கணுமா ?
சாமிநாதன் வாயில் முடி புரள்கிறது.
வசு. வசுமதி. வசு. பசு. சிசு.
அவள் சிரிக்கிறாள். அவன் மேலெ ஏறிப் படர்கிறாள். ஒரு காலால் தரையில் உந்தி உந்தி ஊஞ்சலை அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்குமாக ஆட்டுகிறாள். சாமாவுக்கு மூச்சு முட்டுகிறது. இந்த சந்தோஷத்திலேயே உயிர் போனால் நன்றாக இருக்கும்.
அதுக்கு இன்னும் நேரம் இருக்குடா கட்டேலே போறவனே. ரமிக்கலாம் வா. ஊஞ்சல் நிக்கக் கூடாது. ஆமா, சொல்லிட்டேன்.
குருக்கள் பெண் அதட்டுகிறதும் அவனுக்குப் போதையேற்றுகிறது.
அவள் இரண்டு நாளாகக் கூடவே வளைய வருகிறாள். ராமலச்சுமிப் பாட்டி சாப்பாடு கொண்டு வரும்போது மடிசாரில் கச்சத்தை உருவி விட்டுச் சிரித்தாள். கிழவி தன்னிச்சையாக நடந்ததாக நினைத்துக் கொண்டு, புடவையை வாரிச் சுருட்டியபடி நாணிக் கோணி வெளியே போனாள்.
ஐயணை பகலில் ஒரு தடவையும், ராத்திரி விளக்கு வைத்ததும் இன்னொரு தடவையும் உள்ளே வந்து சாமிநாதனை செளகரியம் விசாரிக்கும்போது அவன் முதுகில் காலால் உதைத்தாள். ஆனாலும் ஐயணை அசரவில்லை.
அய்யர் வீட்டுப் பொண்ணாச்சேன்னு பாக்கறேன். இல்லே எங்க முனியாண்டிக் கருப்பனை விட்டு உன்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவேன்.
அவன் புஜத்தில் தட்டிக் கொண்டு சொல்லும்போது குருக்கள் வீட்டுப் பெண் பயந்து போய் சாமாவின் தோளைக் கட்டிக் கொண்டாள்.
சாமி, இந்தப் பீடையைச் சீக்கிரம் தொலைச்சுத் தலைமுழுகுங்க. நல்லபடியா தம்பி மாதிரிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சுபிட்சமா இருங்க.
அவன் வெளியே போனதற்குப் பிற்பாடு அவள் சாமிநாதன் மடியில் உட்கார்ந்து சிரிக்கச் சிரிக்க என்னென்னமோ காட்சி எல்லாம் தெரியப் படுத்தினாள்.
சுப்பம்மாளின் வாயை வெள்ளைத் துணியால் கட்டி மாட்டு வண்டியில் கூட்டிக் கொண்டு போகிறார்கள். சுந்தர கனபாடிகள் வைகையில் குளித்துவிட்டுக் கெளபீனத்தோடு, வேட்டியை உலர வைத்துக் கொண்டு நிற்கிறார். ஒரு பிராமணன் கூவிக் கூவி அழைத்துச் சித்திரான்னம் விற்கிறான். கொலு பொம்மை வர்ணத்தில் முண்டாசு அணிந்த மாட்டுக்காரன் களிமண் பசுவை ஓட்டிப் போகிறான். அப்புறம் ஒரு கிழவன் அரைக் கண்ணை மூடிக் கொண்டே மிதந்து வந்து நின்றபடியே அற்ப சங்கை தீர்த்துக் கொள்கிறான். பாதம் நனைய நனையச் சிரித்துக் கொண்டு வெய்யில் தாழ்ந்த தெருவில் மரத்திலும், மச்சிலும் இடித்துப் புடைத்துக் கொண்டு மிதந்தபடி போகிறான். சங்கரனுக்கு முன்னால் கால் மடக்கி உட்கார்ந்து ஒரு சின்னப் பெண் கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கிறாள்.
குருக்கள் பெண் தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
சுப்பம்மா அத்தை வாயை என்னத்துக்குக் கட்டி வச்சிருக்கு ?
சாமிநாதன் குருக்கள் பெண்ணின் காலை இழுத்து மாலையாகத் தோளில் போட்டுக் கொண்டு கேட்டான்.
குருக்கள் பெண் சொன்னாள். சாமிநாதன் சிரித்தான். அவன் முழுக்கச் சிரிப்பதற்குள், படுத்துக்கலாம் வா என்றாள் அவள் மறுபடியும்.
அந்தக் கிழவன். அந்தரத்தில் மிதந்து கொண்டு.
சாமிநாதன் விசாரித்தபோது குருக்கள் பெண் தெரியாதென்றாள். எல்லாத்துக்கும் காரணம் சொல்ல முடியுமா என்ன ? நீ கூப்பிட்டு நான் ஏன் வந்தேன் ? நாம ஏன் இப்படி பட்சி மாதிரி, பசு மாதிரி இதுமட்டும் தான் எல்லாம்னு சதா கிடக்கோம் ?
சாமிநாதனுக்கும் புரியவில்லை. புரிந்து என்ன ஆக வேண்டும் ?
குருக்கள் பெண் சமையல்கட்டுக்குள் நுழைந்தாள்.
சாமிநாதன் கூடவே போனான்.
இங்கேயுமா ?
ஏன் ? இந்த இடத்துக்கு என்ன ? மொறிச்சுன்னு பசுஞ்சாணி தெளிச்சு சுத்தம் பண்ணி இருக்கு. ஜில்லுன்னு தரை வா வாங்கிறது பாரு. வா.
அவன் மனசே இல்லாமல் உட்கார்ந்தான். உடம்பு எல்லாம் வலித்தது. அக்னி எப்போதோ கூப்பிட்டதை நினைவு வைத்துக் கொண்டு வந்து அவன் இமைகளில் சட்டமாக உட்கார்ந்து தகித்தது.
ராட்சசி கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டு கண்ணயரலாம். அயர்ந்த அப்புறம் ? வாடா எங்கே ஓடறே படுவா ? இங்கே பாரு, சமையல் கட்டுக்குப் பக்கமா அரிசி மூட்டை மேலே ஆத்துக்காரியைக் கிடத்தி.
எனக்கு ஒண்ணும் பார்க்க வேண்டாம்.
எல்லாம் உன் தம்பி கல்யாணம் செஞ்சுண்டு வர சம்பந்தக்காரா தான். இந்தக் கிழவனைப் பார்த்தியோ ? தம்பதி ஜோடி சேரும்போது இப்படியா உள்ளே வந்து புட்டத்திலே இடிச்சிண்டு போவான் ? சிரிக்கறியாடா ? சிரி. உன் மேலே இடிச்சுண்டு போனா சிரிக்க மாட்டே நீ ?
அவன் எதுக்கு எனக்கு ? நீ ஒரு பிசாசே போறும்டா.
அவள் ஆலிங்கனத்தில் சாமிநாதன் காலுக்குக் கீழே தரை நழுவ இருட்டில் அமிழ்ந்து கொண்டிருக்கிறான்.
சாமி, இந்தப் பொம்பளை சகவாசம் வேணாம். சொன்னாக் கேளுங்க.
ஐயணை வீட்டுக்குள் காவல் தெய்வம் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு சொல்கிறான். அவன்
பீஜத்தில் ஓங்கிப் பட, குருக்கள் பெண் ஊஞ்சலை ஆட்டி விடுகிறாள். ஐயணையின் வசவுக்கு சாமிநாதனுக்கு அர்த்தம் புரிபடவில்லை.
மாடிக்குப் போலாம் வாடா.
அவள் கூப்பிடுகிறாள்.
ஏன், உள்வீடு எல்லாம் அலுத்துப் போச்சா அதுக்குள்ளேயும் ?
இப்பவே போனாத் தான் தயாரா இருக்கலாம்.
எதுக்கு ?
எது நடக்குமோ அதுக்கு. யார் யார் காலையோ பிடிச்சுக் கெஞ்சிப் பார்த்தேன். எந்தத் தேவிடியாளும் கை கொடுக்க மாட்டேங்கிறாடா பிரம்மஹத்தி.
நீ என்ன கேட்டே ? அவா என்ன சொன்னா ?
மாடி ஏறிக் கொண்டிருந்த குருக்கள் பெண்ணை இடுப்பைப் பிடித்து இழுத்துத் தலையைத் திருப்பி முத்தினான் சாமிநாதன். அவள் வாயில் மாமிச வாடை வந்தது.
இதெல்லாம் சாப்பிடுவியாடா நீ ?
விட்டா நான்.
அவள் சுட்டிக்காட்ட அவன் அரையைப் பொத்திக் கொண்டு உரக்கச் சிரித்தான்.
வேஷ்டி எங்கேடா கடன்காரா ?
அவள் கேட்டாள். அது ஊஞ்சலில் பப்பரவென்று கிடந்தது.
நீ மட்டும் ரொம்பப் பதவிசா உடுத்திண்டதா நினைப்போ ?
நான் உனக்கு நூறு இருநூரு வருஷம் முந்தினவடா கழுதே.
அப்ப ஏண்டி கூட வந்து படுத்தே ? உனக்கு கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் இல்லியாடி நான் ?
நீ தாண்டா கூப்பிட்டே என்னை. நான் பாட்டுக்கு எங்கேயாவது தெவசச் சோறு கிடைக்குமான்னு இங்கே நொழஞ்சேன். நம்மாத்துப் பொண்டுன்னு அந்தப் பரதேவதை எல்லாம் சும்மாக் கிடக்க, பொழுது போகாம நான் மாடிக்கு ஏறினா, நீ என்னடா பண்ணினே அயோக்கியா ?
இதுதான்.இதேதான்.
சாமிநாதன் அவளுக்குள் ஒடுங்கிக் கொண்டான். இப்படியே இந்த இருட்டில், பழுக்காத் தட்டுக்களைச் சுழல வைத்துக் கொண்டு எல்லாச் சோகத்தையும் கேட்டு அனுபவித்துக் கொண்டு, வெளவால் வாடையும், புகையிலை வாடையும் காற்றில் கவியக் காலமும் நேரமும் தெரியாமல் கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போய்விட வேண்டும்.
அக்னியே. நீ வரவேண்டாம். நானே தூசியாக எங்கேயும் ஒட்டாமல் உதிர்ந்து விடுகிறேன். உனக்கு என் நமஸ்காரங்கள். அக்னியே உன் வாய்க்கும் ஒரு பெயர் உண்டு. ஜூஹூ. எங்கள் பிரார்த்தனைகளைத் தேவதைகளுக்குக் கொண்டு போ. என்ன பிரார்த்தனை ? வசுவோடு ராத்திரி முழுக்க இணங்கிக் கிடக்கணும். அவ்வளவுதான்.
இருட்டு கனமாக அப்பியபோது சாமிநாதன் தட்டுத்தடுமாறி எழுந்து போய் மரமேஜை மேல் வைத்த யந்திரத்தில் பழுக்காத் தட்டைச் சுழல விட்டான்.
பசிக்கறதாடா ?
குருக்கள் பெண் கேட்டாள்.
பசி இல்லே. தாகம் இல்லே. மனசு நிறைஞ்சு கிடக்கு. இது என்ன தெரியுமா வசு ?
நான் என்னடா உன்னை மாதிரி சகல சாஸ்திரமும் படிச்சவளாடா ? என்னை மாதிரி அலையற ஆத்மா யாரோ இதுக்குள்ளே உக்காந்துண்டு சதா புலம்பிண்டு இருக்கு. அது மட்டும் தெரியறது.
சாமிநாதன் இல்லை என்றான். கையால் சுற்றி இயக்கும் அந்தப் பெட்டி பற்றி, படம் எடுக்கும் கறுப்புப் பெட்டி பற்றி, சீக்கிரமே வர இருக்கும் வெளிச்சக் செம்பு பற்றி, காகிதத்தில் விசைகள் விரையத் துரைத்தனத்தார் பாஷையில் எழுத்து அடிக்கும் யந்திரம் பற்றி, காளான் போல் புகை விரித்து ஒரு தீக்குடுக்கை வானத்திலிருந்து மண்ணில் விழுந்து லட்சக் கணக்கில் ஜனங்களை நிர்மூலமாக்கும் யுத்தம் பற்றி எல்லாம் விவரமாகச் சொன்னான்.
எனக்கு எதுக்குடா அதெல்லாம் சாமா ? நாலு மணி அரிசி நித்தியப்படிக்குக் கிடச்சிருந்தா நான் பாட்டுக்கு சுவாசிச்சு, நின்னு, நடந்து, தூரமாகி ஒதுங்கி, மலஜல விசர்ஜனம் செஞ்சு, குளிச்சு, மார் தொங்கிப் போய் வயசாகி, கண்ணுலே தெரை வந்து மறைச்சு, தவழ்ந்து முடங்கி சுருங்கி உசிரை விட்டுருப்பேன்.
சாமிநாதன் அவள் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தான்.
வா. இங்கே கஷ்டப்பட்டது போறும். அந்தப் பழுக்காத்தட்டுப் போக்கிரிகளை வண்டி கொண்டு வரச் சொல்றேன். ஏறிண்டு ரொம்ப முன்னாடி போயிடலாம். என் சிநேகிதா எல்லாம் நல்லபடியாக் கவனிச்சுப்பா. தாடி வச்சுண்டு, துரைத்தனப் பாஷை பேசிண்டு, துரை மாதிரி உடுத்திண்டு சில பேர். கொடியெல்லாம் பிடிச்சுண்டு இன்னும் கொஞ்சம் பேர். இங்கே அப்பப்ப வருவாளே. பார்த்திருக்கியோ ?
நாம அங்கெல்லாம் போக முடியாதுடா சாமா. இதோட இப்படியே ஒண்ணுமில்லாமப் போக வேண்டியதுதான்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தீப்பந்தம் ஒன்று வந்து மாடிக்குள் விழுந்தது. அடுத்து ஒன்று பற்றி எரிந்து கொண்டே சாமிநாதனின் மேசையில் விழுந்து எங்கும் வெளிச்சத்தைப் பரப்பியது.
மேனகை மாதிரி இருக்கேடி வசு.
சாமிநாதன் அவளை அணுஅணுவாக ரசித்துக்கொண்டே சொன்னான்.
தொடர்ந்து வீடு முழுக்க தீப்பந்தங்கள் விழுந்த வண்ணம் இருந்தன.
இன்னிக்கு என்ன தீபாவளியா ? இல்லே திருக்கார்த்திகையா ? இத்தனை ஜகஜ்ஜோதியா இருக்கு ?
சாமிநாதன் களிப்போடு சுற்றும் முற்றும் பார்த்து ஆனந்தமாக உச்சத்தில் கூவினான். அவனுக்கு ஆடிப் பாடவேண்டும் போல் இருந்தது. எழுந்து குதித்துக் கூத்தாட வேண்டும்.
எழுந்திருடி, குருக்கள் பொண்ணே.
படுடா. இப்படிப் போறதுதான் எனக்குப் பிடிச்சுருக்கு.
அவன் கடைசியாகத் தலையை உயர்த்தியபோது ஜ்வாலை பற்றி எரிந்து கொண்டு பழுக்காத்தட்டு சுழன்று கனமான சோகத்தை நீக்கமற எங்கும் அப்பி, சடாரென்று நின்றது.
நான் அக்னி. புனிதமானவன். என்ன எல்லாம் அறிய வேண்டுமோ அதனைத்தும் அறிந்தவன். என் கண்கள் ஒளிரும். வாய் நிலைத்த தன்மைக்கு வழி நடத்தும். நானே வாழ்க்கையின் சுவாசம். நானே வாயு. நானே சூரியன். எல்லா ஆஹூதிகளும் எனக்கே.
சிரவுதிகள் சொன்ன சாமவேத சம்ஹிதையின் மந்திரங்கள் சாமிநாதனைச் சூழ்ந்தன.
எல்லா ஆஹூதியும் உனக்கே. நானும்.
அவன் குருக்கள் பெண்ணை இறுக அணைத்துக் கொண்டான்.
(தொடரும்)
- வைரமுத்துக்களின் வானம்-3
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- அரசியல் : ஒரு விளக்கம்
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- சிலநேரங்களில்
- மேலும்…
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மனம்
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- குமரி உலா 3
- பல்லாங்குழி
- கற்றதனாலாய பயனென்கொல்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- பாரதீ…
- காதல் கருக்கலைப்பு
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- கடிதங்கள்
- ஹே பக்வான்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- பச்சைக்கிளி
- வேலை
- கங்காணி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கல்பாக்கம்
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- திருவிழா
- வைரமுத்துவே வானம்
- இருவர்
- பாராட்டு
- காலத்தின் கட்டாயம்
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- விடியும்! நாவல் – (14)