இரா முருகன்
பற்றி எரியும் வீடு. குருத்தோலையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி போகும் குழந்தைகள். முகத்தில் மோதிய வெளவால் சிறகின் பொசுங்கிப் போன தோல் வாடை.
சுப்பம்மாளைச் சுற்றி இதெல்லாம் சுழல ஆரம்பித்து இன்றோடு பத்து நாளாகப் போகிறது.
இது உனக்கான இம்சை. நீயே அனுபவித்துக் கொள். நாங்கள் வேணுமானால் எங்கள் பங்குக்குத் தொந்தரவு தராமல் சமர்த்தாகக் கூட வருகிறோம். வாய் வலிக்கப் பாடச் சொல்லிக் கூட வற்புறுத்த மாட்டோம். சோத்துக் கடையில் குந்தி உட்கார்ந்து இலையில் சாதத்தைக் குவித்துத் தரையெல்லாம் சிந்த அள்ளிப் போட்டுக் கொள்ள மாட்டோம். மார்த்தடத்தை நிமிர்த்தி நடக்கச் சொல்ல மாட்டோம். எங்களால் முடிந்த உபகாரம் இது. ஆனாலும் கூடவே வருவோம். நீ எதற்காகவும் சஞ்சலப் படவேணாம்.
அவள் கூட வந்த மூத்த குடிப் பெண்டுகள் பிரியத்தோடு சொன்னார்கள். அவ்வளவு மட்டும்தான்.
என்னமோ நடக்கப் போகிறது. எப்போது என்று சுப்பம்மாளுக்குத் தெரியவில்லை. அந்தப் பெண்டுகளுக்குத் தெரியும். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அவர்கள் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.
நாணாவய்யங்கார் ஸ்தாபித்துக் கொடுத்த யந்திரத்தின் எல்லா மூலைகளிலும் மத்தியிலும் இருக்கப்பட்ட தேவதைகளும் சுப்பம்மாளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
ஐயங்காரிடம் இதைப் பட்டும் படாமல் பிரஸ்தாபித்து, என்ன செய்யலாம் என்று விசாரித்தபோது அவர் தேவதைகள் துர்சொப்பனாவஸ்தைகளைத் தீர்க்க எல்லாம் வந்து நிற்க மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்.
முன்னாலேயே சொல்லி இருந்தா, அதுக்கும் சேர்த்து சில பரிவார தேவதைகளை ஆவாஹனம் பண்ணியிருப்பேனே. இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. ஊருக்குப் போனதும் உபயந்திரம் வேணாப் பண்ணித் தரேன்.
சுப்பம்மாளின் கொஞ்ச நஞ்ச ஆஸ்தியும் இப்படி யந்திரப் பிரதிஷ்டையிலேயே கரைந்து போக அவளுக்கு மனம் இல்லை. அப்புறம் சோத்துக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டி வரும். மூத்தகுடிப் பெண்டுகள் வாயில் இருந்து வார்த்தை சொல்வார்களே தவிர வயிற்றுப் பசியை எல்லாம் தீர்க்க மாட்டார்கள். அவர்களையும் பசியோடு அலைய விட்டதாகப் பிராது கொடுப்பார்கள்.
நாங்க அப்படிப்பட்டவா இல்லே சுப்பம்மா என்றாள் ஒருத்தி அதில். நீ ஆயுசோட இருக்கற வரைக்கும் உன் வயிறு வாடாது. அதுக்கு நாங்க உத்திரவாதம்.
சுப்பம்மா சுய புத்தியோடு அவர்களை நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தது வடம்போக்கித் தெருவில் பிராமணன் சித்திரான்னக் கடைக்கு நேர் எதிரே.
அவன் சோற்று வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். அவளுக்குப் பின்னால் இடுப்பில் காசு முடிந்த சஞ்சியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்த சுந்தர கனபாடிகளை விரோதமாகப் பார்த்தான்.
நாம வேளை தவறாம ஆகாரம் பண்றது போல, தேவதைகளுக்கும் தினசரி ஒரு வேளையாவது போஜனம் தரணும் மாமி.
நாணாவய்யங்கார் சொல்லியிருந்தபடி தினசரி ஸ்நானம் செய்தான பிறகு அந்த இயந்திரத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி, ஆழாக்கு பாலால் அபிஷேகம் செய்ய சுப்பம்மாள் மறக்கவில்லை. அதைச் செய்யும்போது கூட ஒன்று இரண்டு பெண்டுகள் இருந்தால் சிலாக்கியம் என்றும் ஆண்பிள்ளை வாடையே வரக்கூடாது என்றும் ஐயங்கார் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.
தேவதைகள் குளித்துவிட்டு வஸ்திரம் மாற்றிக் கொள்ளும்போது ஆம்பிளைக் கண்கள் பார்த்தால் லஜ்ஜை அடைவார்கள் என்று மூத்த குடிப் பெண்டுகள் அதை வியாக்கியானம் செய்து விளக்கினார்கள் சுப்பம்மாவுக்கு.
ஆனாலும், தினசரி பூஜைக்கு ஒத்தாசை செய்ய ஆண்கள் வேண்டியிருந்தது.
மதுரையில் இருந்த நான்கு நாளும், சுந்தர கனபாடிகளே மாட்டுக் காரனோடும் பாலோடும் வந்து விட்டார். அவர் வீட்டு கொலு பொம்மையில் பாம்புப் பிடாரன் போல் இருப்பதால் தனி அபிமானம் ஏற்பட்டதாக அவர் காட்டிய மாட்டுக்காரன் ஒவ்வொரு தடவை அவர் அப்படிச் சொல்லும்போதும் நெக்குருகி நின்றான். மரத்தால் ஆன அந்தக் கொலுப் பெட்டியின் நீள அகலங்கள் பற்றியும் உள்ளே இருக்கும் மற்ற பொம்மைகளின் வர்ணங்கள் பற்றியும் விசாரித்தபடியே ஆழாக்கு பால் சுப்பம்மாளுக்குக் கொடுத்தான். அதுக்கு துரைத்தனத் துட்டு ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டு மாட்டோடு நடந்து போன போது பாம்புப் பிடாரன் தலையில் பச்சை நிறத்தில் முண்டாசு கட்டியிருந்ததாக அறிவித்தார். அடுத்த நாள் மாட்டுக்காரன் பாலோடும் பச்சை முண்டாசோடும் வந்து சேர்ந்தான்.
வெதுவெதுப்பான நீரையும் அப்புறம் பாலையும் நாணாவய்யங்கார் ஸ்தாபித்த யந்திரத்தில் சுப்பம்மாள் ஊற்றியபோது அங்கங்கே தீப்பொறியும் புகையுமாக தேவதைகள் ஆகாரம் உட்கொண்டன. பக்கத்தில் இருந்து பார்த்த சுந்தர கனபாடிகளின் பெண்டாட்டி நாகலட்சுமியம்மாள் இந்தப் பூஜை தானே ஏற்படுத்திக் கொள்ளும் தீபமும் தூபமுமாக பார்க்க சுவாரசியமாக இருப்பதாகவும், ரத்தினச் சுருக்கமாகமானது என்றும் சுப்பம்மாளிடம் சொன்னாள்.
மாட்டை மேச்சோமோ கோலைப் போட்டோமோன்னு வென்னீரை ஊத்தி அலம்பினோமா, பசும்பாலைப் படைச்சோமா, டப்பு டுப்புன்னு ரெண்டு பொறி கொஞ்சம் புகை. கன்னத்துலே போட்டுண்டு பட்டுத் துணியாலே தொடச்சு நார்ப் பெட்டியிலே வச்சுட்டு நாம சாப்பிட உக்காந்துடலாம்.
அவளுக்கு இந்தப் பூஜையைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது.
என்ன ஏது என்று அவளிடம் கேட்காவிட்டாலும் மதியம் சாப்பாடான பிறகு புதுமண்டபத்தில் குமுட்டி அடுப்பும், தோசை திருப்பியும் மற்றவர்கள் வாங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் மரத்தடியில் உட்கார்ந்தபடி சுப்பம்மாள் மூத்த குடிப் பெண்டுகளைக் கேட்டாள். பேச யாராவது துணை கிடைத்தால் சிலாக்கியமாக இருக்கும் என்று தோன்றும்போதெல்லாம் இதோ வந்துட்டோம் என்று ஷணத்தில் இறங்கி வருகிறது அவர்கள் தான்.
திவசச் சாப்பாட்டுக்காகப் பிராமணார்த்தம் போகாத தினங்களில் சுந்தர கனபாடிகள் விடிகாலை தொடங்கி, ஒவ்வொரு ஓலையாகப் பொறுமையாகப் படித்து வீட்டில் மஞ்சளில் பிடித்து வைத்த விக்ரகங்களுக்கு வெகு விரிவாக ஆராதனை நடத்துவது வழக்கம் என்று மூத்த குடிப் பெண்கள் சொன்னார்கள்.
இந்த மனுஷன் முந்தின நாள் முழுங்கி ஏப்பம் விட்ட விஷ்ணு இலைச் சோத்தை ஒட்டகம் மாதிரிக் கொஞ்சம் கொஞ்சமா ஜீரணம் பண்ணிண்டு அடுத்த நாள் மத்தியானம் வரைக்கும் கொட்டக் கொட்டக் கிடந்தாறது. ஆத்துக்காரி இவன் பூஜை புனஸ்காரத்தை முடிச்சுண்டு நேவித்தியத்துக்கு அன்னம் கொண்டாடின்னு இரைச்சல் போடற வரைக்கும் நிலைவாசல் படியிலே பசியோடு கொட்டக் கொட்ட உக்காந்துண்டிருக்கணும். நாள் முழுக்க அப்படி என்னதான் பூஜையோன்னு கேக்காதே சுப்பம்மா. இவனுக்குத் தான் மத்த மந்திரம் எல்லாம் மறந்து போச்சே. படிக்கறான். படிக்கறான். வாசிக்க வாசிக்க ஒண்ணொண்ணும் புதுசாத் தெரியறது. மூத்தரம் முட்டிண்டு வந்தாக்கூட அடக்கிண்டு மணிக்கணக்கா பூஜை பண்ணும்போது மஞ்சள் விக்ரகம் எல்லாம் ஓன்னு அழறது பாவம். கடன்காரா, வேஷ்டியை நனைச்சுக்கப் போறே. கொல்லைக்குப் போய்ட்டு கால் சுத்தி பண்ணிண்டு, எங்களுக்கு அன்னம் படை. அந்தப் பொம்மனாட்டியையும் சாப்பிடச் சொல்லு. அப்புறம் சாவகாசமா மந்திரம் நெட்டுருப் போடு. நாங்க விச்சிராந்தியாத் தூங்கறோம்னு அதுவெல்லாம் உலர்ந்து உதிர்ற வரைக்கும் இந்த கனபாடி நிறுத்த மாட்டான்.
சுப்பம்மாள் போக சந்தர்ப்பமே ஏற்படாத சுடுகாடுகள் பற்றி, இடுகாடு பற்றி, ஈமக் கிரியைக்கான விதிமுறைகள் பற்றி எல்லாம் மூத்த குடிப் பெண்டுகள் சொன்னபோது அவள் நூதனமான இந்த விஷயத்தை எல்லாம் வெகு சுவாரசியமாகக் கிரஹித்துக் கொண்டாள்.
கன்னியாகுமரியில் சமுத்திர ஸ்நானத்தின் போது கடல் அலை இழுத்துப் போக இருந்த சுப்பம்மாவை அவர்கள் தான் பிடித்து நிறுத்திக் காப்பாற்றினார்கள்.
சதா கூடவே அவர்களும், யந்திரத்தில் தேவதைகளும் சுப்பம்மாளோடு வந்தாலும், சாமிநாதன் போகம் செய்தவள் அவளுக்குப் பிரத்தியட்சமானது அதற்கு அடுத்த நாளில்.
சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் கைமுக்கு உருளியைக் காட்டி வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார் நாணாவய்யங்கார். அவர் கால தேச வர்த்தமானம், பூகோள சாஸ்திரம், சரித்திரம், புராணம் எல்லாம் தெரிந்தவராக இருந்தார். கனபாடிகள் கூடத் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருக்க அவர் அங்கங்கே ஸ்தல விசேஷங்களை சாங்கோபாங்கமாக எடுத்துச் சொல்லுவார்.
அந்நிய ஸ்திரியை போகம் பண்ணின நம்பூத்திரி பிராமணனுக்கு இங்கே தான் ஸ்மார்த்த விசாரணை நடக்கும். இரிஞ்சாலக்குடை தாந்த்ரியாக்கும் அதை நடத்தறது. குத்தம் ஸ்தாபிதமாச்சுன்னு தாந்திரி சொன்னா, நம்பூத்திரி அதை ஒத்துண்டு ஜாதிப் பிரஷ்டத்தோட ஊரை விட்டு அன்னிய தேசம் போயிடணும். இல்லையா, கைமுக்க நான் தயார்ம்பான். மகாராஜாவுக்கு ஓலை போய் அவர் உத்தரவு வந்ததும், இங்கே இந்த உருளியிலே நெய்யைக் கொதிக்க வச்சுடுவா. கோவில் மூத்தவர் அதுலே ஒரு தங்க விக்ரகம் சின்னதாப் பசு மாதிரி ஒண்ணு அதைப் போடுவார். எடுப்பா அதைம்பார். இவன் கை விட்டு எடுத்து கை கருகாம இருந்தா நிரபராதி. இல்லாட்ட.
அந்தக் கருத்த உருளியை சுப்பம்மா சிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த போது பின்னங்கழுத்தில் மூச்சுக் காற்று பட்டது. மனுஷ மூச்சுக்கு எப்படி வெளவால் வாடை என்று யோசித்தபடியே அவள் பின்னால் பார்க்க அதி சுந்தரியான குருக்கள் பெண்ணைப் பார்த்தாள்.
நான் தான் சுப்பம்மா. சாமா ஆத்துக்காரி. நீ தான் காப்பாத்தணும்.
மூத்த குடிப் பெண்டுகள் பயந்து அலறியபடி காகங்களாகக் கரைந்து கொண்டு வெகு மேலே பறந்து போய் சுப்பம்மாள் தலையில் நிழலிடச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆகாரம் ஆன தேவதைகள் நார்ப்பெட்டியில் சத்திரத்தில் சவுகரியமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.
ஆனால் சுப்பம்மாளுக்கு என்னமோ பயமாகவே இல்லை.
என்னை என்ன பண்ணச் சொல்றே. நீ என்னை விட நூறு எறநூறு வயசு மூத்தவ. சாமா என் குழந்தை மாதிரி. இடுப்புலே தூக்கி வச்சு வளர்த்தவன். பாச்சியிலே பால் சுரந்திருந்தா கொடுத்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லே. நீ அவன் கூப்பிட்டான்னு இறங்கி வந்து அவனோட ரமிச்சுடறதா ? உன் கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் வயசில்லையா அவனுக்கு ? ஒரு நியாயம், நியதி பார்க்க வேணாம் ? என்னையும் எத்தனை படுத்தி வச்சிருக்கே சொல்லு. சோழியனுக்கு தட்சணை கொடுத்து இப்படி யந்திரத்தைக் கட்டித் தூக்கிண்டு வரணும்னு எனக்கு என்ன தலைவிதியா ? உன்னாலே தானே எல்லா இம்சையும்.
சுப்பம்மாள் ஓரமாக ஒதுங்கி நின்று குருக்கள் பெண்ணோடு மொணமொணவென்று சச்சரவு செய்தாள்.
தப்புத்தான் சுப்பம்மா. உன்னைப் படுத்தியிருக்கக் கூடாது நான்.
குருக்கள் பெண் ஈன ஸ்வரத்தில் சொன்னாள். நம்பாதே இவளை என்றார்கள் மூத்த குடிப் பெண்டுகள்.
அநசூயா மும்மூர்த்திகளைக் குழந்தையா மாத்தி தன் உடம்புலே பொட்டுத் துணி கூட இல்லாம நக்னமா சிச்ருஷை செய்த க்ஷேத்ரம் இது.
நாணாவய்யங்கார் சொல்லியபடியே சந்நிதிக்குள் மற்றவர்களோடு நுழைய, சுப்பம்மாள் கைமுக்கு மண்டப நிழலில் உட்கார்ந்தபடி வந்தவளோடு வழக்காடிக் கொண்டிருந்தாள்.
நக்னமா இருக்கறது, அதுவும் மனசுக்குப் பிடிச்சவனோடு ரமிச்சுக் கிடக்கறது எத்தனை சுகம் தெரியுமா சுப்பம்மா ? உன்னோட வீட்டுக்காரன் உன்னை முதல்லே ஆலிங்கனம் செஞ்சபோது எப்படி இருந்தது நினைவிருக்கா ?
சுப்பம்மா, அதை எல்லாம் நினைக்காதே. கோவிலுக்குள்ளே வந்து இந்த துராத்மா உன் மனசை அசுத்தம் பண்ணப் பாக்கறா. யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்குமா ?
மூத்த குடிப் பெண்டுகள் பிரலாபிக்க, வந்தவள் மேலே பார்த்து பய பக்தியாக நமஸ்கரித்தாள்.
நீங்களும் சரீர சுகத்தை பூர்ணமா இடுப்பை விரிச்சு அனுபவிச்சுப் போனவா தானே பரதேவதைகளே. நான் பண்ணினது மட்டும் தப்பாயிடுமா ?
அவள் அழுதாள். சுப்பம்மாளுக்குப் பாவமாக இருந்தது.
வீட்டைக் கொளுத்தப் போறா சுப்பம்மா. சாமாவையும் என்னையும் வச்சு வீட்டைப் பொசுக்கிப் போடப் போறா. நீதான் காப்பாத்தணும். உன்னோட வர இந்த மூத்த குடிப் பெண்டுகளும் எனக்காக இல்லாட்டாலும் உனக்காக உன் சாமாவைக் காப்பாத்தணும்.
உச்சிக்கால பூஜை முடித்த தந்த்ரியும் மேல்சாந்தியும் பிரகாரப் பக்கம் வர அவள் காற்றில் கரைந்து போனாள்.
என்ன சுப்பம்மா அத்தை சிரமம் ஜாஸ்தியா இருக்கா ? மண்டபத்துலேயே படுத்துண்டு கண் அசந்துட்டேளே ?
ஜோசியர் நாணாவய்யங்கார் பெண்டாட்டி அவளை உலுக்கி எழுப்பியபோது சுப்பம்மா சாமாவைக் காப்பாத்துங்கோ என்றாள்.
லோக க்ஷேமத்துக்கே அர்ச்சனை செய்தாச்சு. கவலையை விடுங்கோ மாமி. எல்லோரையும் அந்த நாராயணன் பார்த்துப்பான்.
சுந்தர கனபாடிகள் ஆறுதலாகச் சொன்னபடி நைவேத்திய வாழைப் பழத்தை உரித்து வாயில் போட்டுக் கொண்டார்.
சுசீந்திரத்தில் இருந்து கிளம்பி அனந்தைக்கு வந்தபோது ராத்திரி வெகுநேரம் ஆகி இருந்தது. கோவில் ஊட்டுப்புரையில் புருஷர்கள் சாப்பிட்டு தொப்பையைத் தடவிக் கொண்டு இங்கே எதுலே எடுத்தாலும் தேங்காயைப் போட்டாறது என்று குற்றம் சொல்லியபடி வந்தார்கள். பெண்டுகள் கொண்டு வந்த சத்து மாவை உருட்டிச் சாப்பிட்டு விட்டுச் சத்திரத்தில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
காலம்பற சீக்கிரம் தரிசனத்துக்குப் போனா மகாராஜாவையும் சேர்த்துத் தரிசிக்கலாம். மகாராஜாவைப் பாக்கறது மகாவிஷ்ணுவை சேவிக்கறது போல இல்லியோ. அதுவும் இந்தப் பட்டண மகராஜா பெரிய ஞானஸ்தர். சங்கீத விநிகையில் கரை கண்டவர். தஞ்சாவூர்லேருந்து வித்வான்களும் தாசியாட்டக் காரிகளும் இந்த அரண்மனையே கதியாக் கிடக்கா.
ஜோசியர் நாணாவய்யங்கார் சொன்னபோது மூத்தகுடிப் பெண்டுகள் மகாராஜா முன்னால் நாம் பாடலாமே என்றார்கள். சுப்பம்மாள் வாரணாசியில் அனுமன் கட்டத்தில் பிணம் எரிவதைப் பார்த்தபடி இந்துஸ்தானி சங்கீதம் பாடினதை நினைத்துக் கொண்டாள். என்ன பாடினோம் எப்படிப் பாடினோம் என்று நினைவு வராவிட்டாலும், அது போல் இங்கே அதுவும் ஒரு சமஸ்தான மகாராஜாவுக்கு முன்னால் போய் நிற்க வேண்டும் என்று நினைத்தாலே அவளுக்கு தேகமெங்கும் நடுக்கம் ஏற்பட்டது.
எனக்கு நாள் இப்போ. ராஜ கொட்டாரத்துக்கு எல்லாம் பிரஷ்டையாப் போகப்படாது.
ஒரு மூத்தகுடிப் பெண் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் கொஞ்சம் யோசித்து சரி வேணாம் என்றார்கள்.
ஆனாலும், திருச்சூரில் வடக்கநாத க்ஷேத்திரத்தில் தரிசித்துக் கொண்டு அம்பலப்புழைக்குக் காளை வண்டிகளில் போகும்போது அவர்கள் ஏக சந்தோஷத்தில் சுப்பம்மாள் வாயில் வந்து பாட ஆரம்பித்தார்கள்.
தனாரோ தன்னாரோ தன தனாரோ தன்னாரோ
பட்டாம்பி பக்கமோர் பட்டத்திப் பெண்ணினெப்
பட்டன் இல்லாத்தப்பம் பட்டி
வண்டி ஓட்டி வந்தவர்களும், கையில் தீப்பந்தத்தோடு கூடவே நடந்து வந்தவர்களும் ஓவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள்.
என்னமோ விபரீதம் என்று புரிந்து கொண்ட சுந்தர கனபாடிகள் பெண்டாட்டி, அவருடைய அங்கவஸ்திரத்தை உருவி எடுத்து சுப்பம்மாளின் வாயை இறுகக் கட்டினாள்.
பட்டாம்பி பக்கமோர் பட்டத்திப் பெண்ணினெ
சுப்பம்மாள் வார்த்தை வெளியே வராமல், வாய்க்கட்டை எடுக்க உக்ரமாக முயற்சி செய்தபடி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். குலுங்கிச் சிரித்தபடி அவள் வண்டிக்குள் கவிழ்ந்து படுத்துக் கொண்டபோது தனாரோ தன்னாரோ என்று வார்த்தை இல்லாமல் வண்டிக்காரர்கள் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரித்தபடி பாட ஆரம்பித்துச் சூழ்நிலை உறைக்க உடனடியாக நிறுத்தினார்கள்.
அம்பலப்புழை வந்தாச்சு.
முதல் வண்டிக்காரன் உரக்கச் சொன்னான்.
துரைச்சாமி அய்யன் கிரஹம் எங்கேன்னு யாரையாவது கேட்கலாம்.
சுந்தர கனபாடிகள் வண்டியில் இருந்து இறங்கினார்.
(தொடரும்)
- புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.
- கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்
- பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்
- போலச் செய்தல் ?
- தெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*
- புகழ்ப் பறவை பிடித்த கதை
- ஒலி.
- எல்லா சொகமும் இழக்கலாச்சு
- குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ
- ஸ்தல புராணம்
- வைரமுத்துக்களின் வானம்-2
- அரசியல் இருக்கைகள்
- கண்ணே கலைமானே
- தேனீர்க் கோப்பையிலான புயல்
- வெறுக்கிறேன்
- உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்
- நினைவுச்சின்னம்
- புதுக்கவிதைகள்!
- அழியா எழில்
- அளபெடை
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2
- 125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்
- உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்
- அய்யனார் சாமி
- கண்ப்பதி பப்பா.. மோரியா!!
- தாழம்பூ
- விடியும்! நாவல் – (12)
- முல்லையூர் லிங்கம்
- அவன் அவள் காதல்
- நெடுமாறன்
- கடிதங்கள்
- நினைவினிலே நிறைந்தவள்
- சொர்க்கம்
- இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!
- சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்
- குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்
- குமரி உலா -1
- வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு