இரா முருகன்
கூடம் எல்லாம் நனைந்து வெள்ளம் போல் தெப்பக்குளத் தண்ணீர். மீன் வாடையும், நாணல் வாடையும் பிணவாடையுமாக அது புஸ்தி மீசைக் கிழவனை தலையோடு பாதம் கழுவி பெருக்கெடுத்துப் போனது.
ஒவ்வொரு பெண்ணும் குடத்தைக் கவிழ்க்கும்போது வரவழைத்துக் கொண்ட துக்கத்தோடு ஓவென்று குரலெடுத்து அழுதபோது திருப்தியோடு ஏப்பம் விட்டுக் கொண்டு ராஜா பனியன் சகோதரர்கள் பக்கமாக ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இதை எடுத்துடலாமா ?
பனியன்காரர்கள் ராஜாவை மரியாதை விலகாமல் விசாரித்தார்கள்.
செய்யுங்களேன். தண்ணி ஊத்தற பொண்ணுங்க மாராப்புச் சேலை விலகினது தெரியாமப் படம் வரணும்.
ராஜா கிசுகிசுத்த குரலில் சொன்னார்.
அவர் சட்டமாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பது அதுக்காகவும் கூடித்தான் என்றாலும் நாலு பேர் பார்க்க எடுத்த படத்தில் குடும்பப் பெண்களும், பணி எடுக்கும் பெண்டுகளும் கச்சையைக் காட்டிக் கொண்டு நிற்பது சரியில்லை.
தண்ணியை ஊத்தற மாதிரி யாராவது பொம்பளையை சமூகம் அப்படியே நிக்கச் சொல்லி உத்தரவாகணும். எடுத்துடலாம்.
குட்டை பனியன் சொன்னான்.
சேடிப் பெண் தண்ணீர்க் குடத்தோடு வந்தபோது ராஜா அவளை அப்படியே குடத்தைத் தூக்கிப் பிடித்தபடி நிற்க உத்தரவு பிறப்பித்தார்.
அவள் என்னத்துக்காகவோ அழ ஆரம்பித்திருந்தாள். பூப்படையாமல் கல்யாணம் கழிந்த ஒரே வருடத்தில் இவளைத் துறந்து கொல்லன் மகளோடு ஓடிப்போன புருஷனை நினைத்தா, அப்புறம் அவளே ராஜா அவளுக்குக் கால்பிடித்து விட்டபோது சொன்ன தொடுப்பு எல்லாம் விழலுக்கு இரைத்த நீராக ஒரு காசும் பிரயோஜனப்படாமல் போனது குறித்தா அல்லது புஸ்தி மீசைக் கிழவன் கேட்ட உபசாரம் குறித்த விசனத்தாலா அதுவும் அல்லது குற்றேவல் புரிந்த வகையில் இரண்டு மாதப் பணம் வந்து சேராமல் இருப்பதாலா இல்லை ராஜா கால் பிடித்து விட்டு வெகுநாள் ஆனதால் முழங்கால் நோவதாலா அந்த அழுகை என்று ராஜாவுக்கு விளங்கவில்லை.
அழுகை இருக்கட்டும். நிறுத்திப் போட்டு, அந்தக் குடத்தை முழுக்கக் கவிழ்க்காமல் அப்படியே நில்லடி.
நின்றாள்.
குரலும் பாதி அழுகையில் உடைந்து வாயின் கோணலில் உறைந்து போனது.
குட்டை பனியன் அதிர்வேட்டுப் போல் எதையோ நீட்டிப் பிடித்துக் கொளுத்த படார் என்று வெடிச்சத்தம். அப்புறம் கண் கூசும் வெளிச்சம்.
புஸ்தி மீசைக் கிழவன் விரைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். யார் யாரோ அப்பூ நீரு செத்துட்டாரு என்று சொல்லி அவனைத் தரையோடு மல்லாத்திக் கிடத்தினார்கள்.
முடிந்தது என்று தலையை அசைத்தபடி நெட்டை பனியன் கறுப்புத் துணிக்குள் இருந்து தலையை வெளியே எடுத்தான். கூடம் முழுக்கப் படிந்த ஈரம் காலில் நனைத்ததைச் சுண்ணாம்பு பூசிய சுவரில் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டிருந்த அவனை ராணி பார்த்த பார்வையில் விரோதம் இருந்தது.
இது என்ன கங்கா தீர்த்தமா அவன் தலையில் தெளித்துக் கொண்டு அனுபூதியோடு குதித்துக் கூத்தாட ? பிணம் கழுவிய தண்ணீருக்கு மீன் கழுவிய தண்ணீரை விட அதிக மரியாதை கொடுக்க முடியுமா என்ன என்று ராஜா யோசித்தார்.
அந்தப் படம் வந்து சேர்ந்ததும் பார்க்க வேண்டும். புஸ்தி மீசைக் கிழவனின் ஈரத்தில் கிடக்கும் உடம்புக்காக இல்லை. உருண்டையான தோள்களோடு கையை உயர்த்தி நின்றவளின் அங்க லாவண்யத்துக்காக.
பொம்பளைப் புள்ளைங்க எல்லாரும் விலகிப் போங்க. தாத்தனைத் தொடச்சுக் கோடி உடுத்தப் போறோம். கன்னி கழியாத குமரு இருந்தா காணக் கூடாத எதையாவது ஏடாகூடமாப் பாத்துட்டுப் பயந்துடப் போவுதுங்க.
வாலிபப் பையன்கள் நாலைந்து பேர் சுறுசுறுப்பாக முன்னே வர இடுப்பில் வெறும் குடத்தோடு பெண்கள் சிரித்தார்கள்.
ஆமா அப்பு. என்னத்துக்கு வம்பு. வாய்ச்சதைப் பத்தி வக்கணயாத் தெரியும். இப்பப் பார்த்ததோடு வச்சு அளந்தா, சுண்டு விரல் தண்டி சமாச்சாரம் எல்லாம் அதுல்லே சேத்தியா, அடச் சேன்னு வெறுத்துப் போயிடும் இல்ல.
காது வளர்த்த கிழவி இளக்காரமாகச் சொல்ல, அடுத்து இன்னும் பலமான சிரிப்பு.
அப்பத்தா, நீ பாத்ததை மட்டும் வச்சுப் பேசு. பாக்காததைப் பத்தி வாயைத் திறக்காதே.
முந்தாநாள் வரைக்கும் டொண்டொண்டானு மணி அடிச்சுக்கிட்டுத் திரிஞ்ச பயலுக. சொட்டச் சொட்ட நான் தூக்கி வளத்தவனுங்க தானேடா நீங்க எல்லோரும்.
கிழவி விடாமல் பிடிக்க, பெண்கள் அந்தப் பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு சிரித்தார்கள்.
ராணி பக்கம் நகர்ந்து அவள் காதில் யார் அது என்று ராஜா விசாரித்தார்.
சிறுக்கி முண்ட. அம்மா இருக்கும்போதே அப்பாரு ஊருக்கு ஒரு வப்பாட்டி வச்சிருந்தாரு. அவ போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் எங்கே பதுக்கி வச்சிருந்தாரோ. இப்பதக்கு இங்கே என்னத்தைச் சுருட்டிட்டுப் போகலாம்னு முந்தியை விரிச்சுட்டு அலையறா கிழட்டுத் தேவிடியா.
ராணி பல்லைக் கடித்தாள்.
நம்ம கல்யாணத்திலே பாத்ததா நினப்பு இல்லையே ?
முப்பது வருடம் முந்திய சமாச்சாரத்தை அசை போட்டபடி சொன்னார் ராஜா.
பாத்துட்டு என்ன பண்ணியிருப்பீங்க ? கூப்பிட்டு வச்சு.
அவள் தாழ்ந்த குரலில் முடிக்கும் முன் அகன்று போய் பனியன் சகோதரர்கள் பக்கமாய் நின்றார் ராஜா.
பெண்கள் எல்லோரும் கூடத்துக்கு வெளியே போக பேரப்பிள்ளைகள் புஸ்தி மீசைக் கிழவனை நக்னமாக்கி உடம்பு துடைக்க ஆரம்பித்தார்கள்.
ஏ மருது. தாத்தனை இடுப்புக்குக் கீழே அழுத்தித் தொடைக்காதே. பொங்கிப் பூரிச்சு எளுந்துடுவாரு. அப்புறம் குழிக்குள்ளே உடம்பு போகாது.
திரும்ப சிரிப்பு அலையாக எழ ராஜா கால் அங்குலம் ஒரு புன்னகையைச் சிந்தினார்.
புஸ்தி மீசைக் கிழவனுக்குக் கோடி உடுத்தி, நெற்றியில் திருநீற்றைக் குழைத்துப் பூசி, குங்குமமும் சந்தனமும் இட்ட பிறகு யாரோ சொன்னதால் மீசைக்கு நெய் தடவி நீவி விட்டார்கள்.
பெருத்த அழுகையோடு காது வளர்த்த கிழவி உள்ளே இருந்து வந்து கிழவனை மடியில் போட்டுக் கொண்டு லட்சணமாக ஒப்புச் சொல்ல ஆரம்பித்தாள். பழுக்காத் தட்டு சங்கீதம் போல் வெகு நளினமாக இருந்தது அது ராஜா காதுக்கு.
அப்பத்தா. போதும். எந்திரு. தாத்தன் மறுபடி எழுந்தா நீ மாங்கா கடிக்க வேண்டிப் போகும்.
இந்தத் தடவை கிழவிக்கே கூச்சம் வரும்படி சிரிப்பு கூரையைப் பொத்துக் கொண்டு போனது.
இதாண்டா கல்யாணச் சாவு. சிரிச்சுக்கிட்டே இருக்கோம் பாரு.
ராஜா முதல் தடவையாக வாயைத் திறந்தபோது ஆமா என்று அங்கீகரித்து எல்லோரும் தலையை ஆட்டினார்கள்.
நெட்டை பனியன் ராஜா பக்கத்தில் வந்து குனிந்து புத்தி என்றான்.
என்ன என்றார் ராஜா கெத்தாக.
பெரிய தொரையை நாக்காலியிலே உக்கார வச்சு குடும்பத்தோடு இன்னொரு படம் பிடிச்சுக்க சமூகம் உத்தரவு தரணும்.
ராஜா யோசித்தார். ஏற்கனவே விரைத்துக் கொண்டு வருகிற இவனை எப்படி நாற்காலியில் உட்கார வைப்பது ?
மைத்துனர்களின் மகன்கள், அது என்ன சிரமம் நாங்க பாத்துக்கறோம் என்றார்கள்.
நாற்காலியில் பிடித்து இழுத்து உட்கார்த்தி இடுப்போடு கயிறு கட்டி, அது தெரியாமல் தொடையில் சரிகைச் சல்லாத் துணி போட்டு மூடினார்கள். வெற்றிலையை கூழாக அரைத்து எடுத்து வந்து கிழவன் உதட்டில் பூசிவிட்டார்கள்.
நல்லா சாப்பிட்டு ஆண்டு அனுபவிச்சுப் போன களை படத்துலே வரணும் அப்பு.
அவர்கள் பனியன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்ல, செஞ்சுடலாம் என்றார்கள் இருவரும்.
பெண்டு பிள்ளைகளை தாத்தன் காலடியிலே உக்காரச் சொல்லுங்க.
ராஜா கட்டளையிட்டார்.
குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லி விட்டாள் ராணி. அவளுக்குப் பிறக்காததால் அவற்றின் மேல் வெறுப்பு என்று இல்லை. பயந்து விடும் என்றே அது வேண்டாம் என்று தடுத்தாள் அவள் என்று ராஜாவுக்குப் பிரிந்தது.
ராணி, அவளுடைய நாத்திமார், உறவுக்காரப் பெண்கள், அப்புறம் மைத்துனர்கள், அவர்கள் பிள்ளைகள் என்று எல்லோரும் புஸ்தி மீசைக் கிழவன் காலடியில் உட்கார்ந்தார்கள். காது வளர்த்த கிழவி அவன் காலை மடியில் போட்டுக் கொண்டு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.
வலது கோடியிலே வெத்து இடமா இருக்கே. படத்துலே அப்படியே வந்தா நல்லா இருக்காதே.
குட்டை பனியன் சொல்ல, ராஜா உள்ளே பார்த்து சேடிப் பெண்ணைக் கை காட்டி அழைத்தார்.
அவள் உட்கார்ந்த பிறகு, பனியன் சகோதரர்கள் திரும்ப வெடி வெடித்தார்கள். மின்னல் தாக்கிய வெளிச்சத்தில் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டபோது தடால் என்று சத்தம்.
புஸ்தி மீசைக் கிழவன் நாற்காலியிலிருந்து சரிந்து ஓரமாகச் சேடிப் பெண் மடியில் விழுந்து கிடந்தான்.
வங்காப்பய கிளவா. புத்தியக் காட்டிட்ட பாரு.
ராஜா மனதுக்குள் அவனை வைது தீர்த்தார்.
இன்னொரு தடவை எடுக்கணுமா ?
யாரோ கேட்டார்கள்.
வேணாம். நான் எடுத்து முடிச்சுட்டேன்.
நெட்டை பனியன் தீர்மானமாக அறிவித்தான்.
அப்ப பல்லக்கை சித்தம் பண்ணுங்க. கொட்டுக் காரங்க எங்கப்பா. தூங்கிட்டாங்களா ? அதிர்வேட்டு என்ன ஆச்சு ?
பேரப்பிள்ளைகளும் பிள்ளைகளும் உறவுக்காரர்களும் உள்ளேயும் வெளியேயும் ஓட, கிழவனை வெளியே எடுத்துப் போய்ப் பல்லக்கில் படுக்க வைத்தார்கள்.
ராத்திரி நிலவு வெளிச்சத்தில் குளிர்ச்சியான காற்று வாங்கிக் கொண்டு குளித்து வெகு சுத்தமாகப் படுத்திருந்தான் அவன்.
அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்.
பனியன் சகோதரர்கள் கருப்புப் பெட்டியை மூடி, முக்காலியைச் சுமந்து கொண்டு கிளம்பினார்கள்.
அடுத்த வாரம் படத்தோட வாரோம்.
அவர்கள் பல்லக்கைத் தொடர்ந்து வாசலுக்குப் போய் வண்டிக் கதவைத் திறந்தார்கள்.
ஏப்பு, நாலுகோட்டை தாயாதிங்க வரல்லியே. பரவாயில்லேயா. எடுத்திடலாமா ?
காது வளர்த்த கிழவி பேரப் பிள்ளை யாரையோ அக்கறையாக விசாரித்தாள்.
நீ சும்மா இரு அப்பத்தா. அவனுக வல்லடி வமபடியா தகராறு பண்றானுங்க. இன்னிக்கு கேதம் விசாரிக்க வரக் கூடாதுன்னு சோசியன் சொல்லிப் போட்டானாம். சும்மாப் பம்மாத்து. நாளைக்கு லேஞ்சி கட்ட வருவானுங்க இல்லே. முகத்திலே அடிச்ச மாதிரி அதை எடுத்து கோமணமாக் கட்டிட்டுப் போங்கடா நாய்ப்பயகளான்னு சொல்லப் போறேன் பாரு.
அவன் படபடக்க, ராணி முன்னால் வந்து அடக்கினாள்.
போதும்டா இதை எல்லாம் பொதுவிலே தான் வச்சுக்கணுமா ? நானும் மாப்பிளத் துரையும் மல்லியப்பூ மாலை போட்டு மரியாதை செஞ்சதும் எடுத்துட்டுப் போக வேண்டியதுதான். யார் வந்தாலும் வராட்டாலும் இனிமே ஒரு நொடி கூடக் காத்திருக்கக் கூடாது.
அவள் குரலின் கண்டிப்பு ராஜா முதல் கொண்டு எல்லோரையும் கட்டிப் போட்டது.
மாலை மரியாதை ஆன பிறகு பத்து அதிர்வேட்டும் வாணவேடிக்கையாக மேலே சீறிப் பாய்ந்து பூச்சிதறிய அவுட்டுக்களுமாக கிழவனைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு போனபோது நடு ராத்திரி கடந்து போயிருந்தது.
பனியன் சகோதரர்கள் கார் பக்கம் பல்லக்கு வந்தபோது கிழவன் நகர மறுத்து விட்டான். பல்லக்குத் தூக்கிகள் கால் மாறி நின்று திணறிக் கொண்டிருக்க, காது வளர்த்த கிழவி என்ன என்று பக்கத்தில் போய்ப் பார்த்தாள்.
அவள் பேரப்பிள்ளைகள் காதில் ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்துக் கொண்டே பல்லக்கைத் தாழ்வாக இறக்கிப் பிடிக்கும்படி பல்லக்குத் தூக்கிகளைக் கேட்டுக் கொண்டார்கள்.
புஸ்தி மீசைக் கிழவனின் கை பல்லக்குக்கு வெளியே நீண்டது. பனியன் சகோதரர்களின் ஆஸ்டின் காரில் பெரிதாக நீட்டிக் கொண்டிருந்த உருண்டு திரண்ட ரப்பர் ஹாரனை ஆசையோடு பற்றி வருடி மெல்ல அழுத்த பாம் பாம் என்று சத்தம்.
கொண்டுக்கிட்டுப் போங்க.
ராஜா சொன்னார். இவன் மேலே போய்க் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமே என்று அவருக்குக் கவலையாக இருந்தது.
(தொடரும்)
eramurug@yahoo.com
- உன்னால் முடியும் தம்பி
- சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
- கலைச்சொற்களைப்பற்றி
- சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ – நாவல். ஒரு வாசகனின் குறிப்புகள்.
- காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]
- அறிவியல் மேதைகள் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi)
- நெஞ்சுக்குத் தெரியும்
- அழுக்கு
- கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- மகுடம் சரிந்தது
- பாதியில் ஒரு கவிதை
- மான மிருந்தால், மங்கையரே!
- சிற்பிகளின் கற்பனைக்கு!
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ்
- உயிர்மை பதிப்பகம்
- தகவல் பெறும் உரிமை- அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டம்
- பசிக்கட்டும்
- கூந்தலை முன்புறம் போடாதே!..
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)
- பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.
- நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினெட்டு
- அம்மா இங்கே வா வா…
- ஆண் விபசாரிகள்
- விடியும்! நாவல் – (8)
- ஃபீனிக்ஸ்
- கடிதங்கள்
- உரையாடும் கலை
- கடவுளே காதலா…
- புதிய பரிணாமம்
- ஊக்கமருந்து
- சுதந்திர தினம்.
- பசு
- கோவாவில் பொது சிவில் சட்டம்
- வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2
- வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)
- பணமில்லா அழகு பாழ்