இரா முருகன்
17
உள்ளொடுங்கிய அறை. உயரம் குறைவான ஒரு மேசை. பக்கத்தில் கால் ஆடிக் கொண்டு ஒரு நாற்காலி. அதன் தோள் புறத்தில் சிங்கம் மாதிரி உருட்டி வைத்திருக்கிறான் தச்சன். வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் சிங்கங்களுக்கு நடுவே உட்கார்ந்து ராஜா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
வடையும் சுவியனும் நெய்யப்பமுமாக வந்த மணியமாக இருக்கிறது. கூடவே இஞ்சித் துவையலும், காரமாகக் கொத்துமல்லி அரைத்து விட்ட புளிக்குழம்புமாக யார் யாரே பெண்கள் மரியாதையோடு உள்ளே வந்து வந்து இலையப் பார்த்துப் பரிமாறி விட்டுக் குனிந்த தலை நிமிராமல் திரும்பிப் போகிறார்கள். எல்லோரும் உறவுக்காரர்கள். ராணியைப் பெண் எடுத்த வகையில் வீட்டுக்கு வந்திருக்கும் மாப்பிள்ளைக்குத் தரும் மரியாதை அது.
ஆறு அடி தள்ளி, ராஜா கண்ணில் படும்படியாக, கருங்காலிக் கட்டை போல் நடுக் கூடத்தில் புஸ்தி மீசைக் கிழவன் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கிறான். மூக்கிலும் வாயிலும் பஞ்சைத் திணித்தது பிதுங்கி வழிகிறது ராஜா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்திலிருந்தே தெரிகிறது. தலை மாட்டில் குமட்டுகிற வாடையோடு தூபக்காலில் ஏதோ புகைந்து கொண்டிருக்கிறது. ஒன்றும் இரண்டுமாகக் கட்டெறும்புகள் மோப்பம் பிடித்துக் கொண்டு ஊற ஆரம்பித்திருக்கின்றன.
காரியமாக நாவிதர் கிழவனின் முகத்தை மழித்துக் கொண்டிருக்கிறது கண்ணில் படுகிறது. போகிற இடத்தில் இந்த வசதி எல்லாம் இருக்காது என்பதால் கிழவனும் முகத்தைத் திருப்புகிற பக்கம் எல்லாம் சலிக்காமல் காட்டியபடி படுத்துக் கிடக்கிறான்.
தூரத்தில் கேட்கும் வேட்டுச் சத்தமும், விட்டு விட்டுக் கேட்கும் கொட்டுச் சத்தமும் நீர்மாலைக்குப் போன பெண்கள் இன்னும் தெப்பக் குளத்தை அடையவில்லை என்று சொல்கின்றன ‘ அவர்கள் குளித்துக் கரையேறிக் குடங்களில் தண்ணீரோடு இங்கே வருவார்கள். அப்புறம் கூடத்திலேயே கிழவன் குளிக்கப் போகிறான். அதற்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
வீட்டுக்குப் பின்புறம் புதிதாகக் கொட்டகை வேய்ந்த இடத்தில் ஏகக் களேபரமாக இன்னொரு பந்தி நடந்து கொண்டிருக்கிறதும் அதில் சாப்பிடுகிறவர்கள், பரிமாறுகிறவர்கள் தலையும் ராஜா இருந்த இடத்தில் இருந்தே தெரிகிறது. சாமானிய ஜனங்கள் அதெல்லாம். ஆனாலும் அவர்களுக்கும் நெய்யப்பமும், சுவியனும், வடையும் எதேஷ்டமாகக் கிடைக்கும்.
சுறுசுறுப்பான சமையல்காரர்கள் கொஞ்சம் தள்ளி வெளித் தோட்டப் பக்கம் அடுப்பு வைத்து எல்லாம் சமைத்து எடுத்து வியர்வையை வழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோசைக் கல்லிலும் வடை பொறியும் கடலை எண்ணெயிலும் அதெல்லாம் கலந்திருக்கலாம். அரண்மனைச் சமையல்காரனா என்ன ? பார்த்துப் பார்த்துச் சமைக்க ? அதுவும் ஒரு பெருங்கூட்டத்துக்கு ஆக்கிப் போடும்போது இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
மாப்பிள்ளைத் தொரே. கூச்சம் இல்லாம சாப்பிடுங்க. இதென்ன தொக்கு தொசுக்குன்னு கிள்ளித் தின்னுக்கிட்டு ?
காது வளர்த்த கிழவி ஒருத்தி உரிமையோடு ராஜா இலையில் இன்னும் நாலு தவலவடைகளைப் போடுகிறாள். எண்ணெய் மினுக்கிக் கொண்டு கர்ப்பிணிப் பெண்ணின் மார் போல் பருத்து இதமாக இருந்த அவற்றைத் தின்னத் தின்ன இன்னும் இன்னும் என்கிறது நாக்கு. செத்தேன் என்று வயிறு ஓலமிடுகிறது.
கூடவே கருவாட்டுக் குழம்பு இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அசைவம் எல்லாம் கருமாதிக்குத் தான்.
இருபது குடம் கள்ளுத் தண்ணி வாங்கிக்குங்க. கிராமணி கிட்டே சொல்லி விட்டிருக்கேன் மீதித் துட்டை துஷ்டி முடிஞ்சு கொடுத்திடறேன்னு. இப்பதிக்கு இதைக் கொடுங்க போதும். மாட்டு வண்டியை எல்லாம் ஓட்டிட்டு வரப் போறது யாரு ? நீ ஒண்ணு அப்புறம் நம்ம மருதையன், ஒச்சன், நாச்சியப்பன். நாச்சியப்பன் வேணாம். மாலைக்கண்ணு அவனுக்கு. ஒண்டிப்பிலி ஓட்டிட்டு வரட்டும். குடத்தை எல்லாம் கீழே விழாமப் பையப் பதனமா எடுத்துட்டு வாங்கப்பூ.
ராஜாவின் மைத்துனர்கள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இழுத்துப் பறித்துக் கொண்டு இடுப்புத் துணியில் மூத்திரம் போய்க் கொண்டு கிழவன் கிடந்து உயிரை வாங்காமல் போங்கடா பேய்ப்பயகளா என்று விருட்டென்று கிளம்பிப் போனதில் எல்லோருக்கும் சந்தோஷம் என்று முகத்தில் தெரிகிறது.
மாப்பிள்ளைத் தொரை, வென்னித் தண்ணி சாப்பிடுறீங்களா ? வயத்துக்கு இதமா இருக்கும். ராத்திரிக்கு எல்லாம் முடியற நேரத்துலே கள்ளுத் தண்ணியும் வந்து சேர்ந்திடும்.
மைத்துனர்கள் மாப்பிள்ளை ராஜாவை உபசரித்துக் கொண்டே ஓடுகிறார்கள். இழவு வீட்டிலும் மாப்பிள்ளைக்குப் போக மிச்சம் மீதி மரியாதை தான் கட்டையைச் சாய்த்தவனுக்கு என்று புரிந்த ராஜா புஸ்தி மீசைக் கிழவனைப் பார்த்துத் தலையை ஆட்டுகிறார் என்னடா புரிஞ்சுதா என்பது போல்.
ராஜா கை கழுவ எழுந்திருக்கச் சற்று சிரமமாக இருக்கிறது. சேடிப் பெண் போல் யாராவது கைலாகு கொடுத்தால் சுகமாக இருக்கும்.
வத்தலும் தொத்தலுமாக இரண்டு கிழவர்கள் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்து மலையைக் கெல்லுகிறது போல் பிரயத்தனத்தோடு எழுப்பி விடுகிறார்கள்.
ராஜா பின்கட்டில் நாலைந்து பேர் காலையும் கையையும் கழுவத் தண்ணீர் விடச் சுத்தி செய்து கொண்டு தோட்டத்து ஓரமாகப் பார்த்தார். கையில் செம்பில் நீரோடு இன்னொருத்தன் முன்னால் ஓடினான். விட்டால் கோவணத்தைக் கூட அவிழ்த்து ஒத்தாசை செய்வார்கள்.
ராஜா திரும்பி உள்ளே வந்தபோது யாரோ உறவுக்காரப் பெண் குனிந்து புஸ்தி மீசைக் கிழவனின் கண்ணோரம் பஞ்சால் துடைக்கிறது கண்ணில் பட்டது. வாய்ப் பக்கம் பஞ்சை எடுக்கிறாள். கிழவன் ஒரு வினாடி எழுந்து உட்கார முயற்சி செய்தது போல் ராஜாவுக்குத் தெரிந்தது.
பெண்ணே, பக்கத்தில் அதிகமாகக் குனியாதே. வாய் உபச்சாரம் செய்யச் சொல்லிக் கையைப் பிடித்து இழுத்து விடுவான். கெட்ட பயலாக்கும் இவன்.
அவள் புரிந்து கொண்டது போல் இன்னும் நிறையப் பஞ்சைக் கொத்தாக அடைத்து விட்டு ராஜாவைப் பார்த்துப் புன்னகைத்தபடி வெளியே போனாள். வீட்டுக்குள் வேறு யாரையும் காணோம்.
கிழவனைப் பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று ராஜாவுக்குத் தோன்றியது. இனிமேல் எந்த உபத்திரவமும் செய்ய மாட்டான். ராஜாவின் பீஜபலத்தைப் பற்றி எள்ளலும் எகத்தாளமுமாக வார்த்தை விடமாட்டான். இன்னும் கொஞ்ச நேரம். குளித்து விட்டுக் கிளம்பினால் நேரே குழிக்குள் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டியது தான்.
கூடத்தில் ராஜா நுழைந்தபோது இரண்டு பக்கத்திலும் முன்னோர்கள் உட்கார்ந்து மொணமொணவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொட்டு இழுக்க மாட்டேண்டா வக்காளி என்று கிழவன் தன் உடம்போடு அட்டைப் பூச்சி போல் ஒட்டிக் கொண்டிருந்தான்.
உமக்கு என்னத்துக்குக் கவலை ? எல்லாம் உம்ம மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணிடுவாரு. கூட வந்து சேரும். ஆக வேண்டிய காரியம் ஏகத்துக்குக் கிடக்கு. அங்கே வந்து பாரும். என்னமா இருக்கு ஒவ்வொண்ணும்னு.
முன்னோர்களில் ஒருத்தர் நைச்சியமாகச் சொன்னார்.
இந்த ஆளு கேக்கிற எல்லாத்தையும் செய்ய எங்கிட்டே எங்கே பணம் இருக்கு ? நீங்களும் விட்டுட்டுப் போகலே. துரைத்தனத்தாரும் ஒரு காசு ரெண்டு காசாப் பார்த்துத் தான் கொடுக்கறாங்க.
ராஜா அவசரமாக முறையிட்டார். இவர்கள் ஏற்கனவே சீமைச் சாராயம் கேட்கிறார்கள். இந்தக் கிழவன் அதோடு கூட மற்ற உபச்சாரம் எல்லாம் எதிர்பார்க்கிறவன். அய்யரைக் கொண்டு நடத்த வைக்கிற விஷயமில்லை அதெல்லாம்.
சும்மா இருப்பா நீ வேறே. எப்படியாவது தாடையைப் பிடிச்சுக் கெஞ்சி அவனைக் கூட்டிட்டுப் போகப் பாக்கிறேம். இப்ப என்னத்துக்கு எல்லா எழவையும் அவனுக்கு நினைவு படுத்தறே ?
முன்னோர்களில் ஒருத்தர் காலில் கட்டெறும்பாகக் கடித்தார். ராஜா காலை விலக்கி உதறிக் கொண்டு நின்றார்.
கள்ளு வருதாமில்லே. முதல் குடத்தை இங்கே கொண்ணாந்து வை. நாங்க எல்லோரும் வாசனையாவது பாக்கிறோம். அமாவாசைக்கு அந்த தரித்திரம் பிடிச்ச பார்ப்பானைப் பிடிச்சு சீமைச் சாராயத்தை ஊத்தி விடு. பக்கத்து புகையிலைக்கார வீட்டுப் பாப்பாத்தியம்மா வேறே எனக்கு எனக்குன்னு வரா.
ஒண்ணும் புரியலே.
ராஜா தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினார்.
உனக்கு என்ன புரியும் ? வல்லாரை லேகியம் உருட்டி முழுங்கி வயத்தைப் பிடிச்சுட்டுக் குத்த வைப்பே. மூக்குப் பிடிக்கத் திம்பே. அந்நிய ஸ்திரிக்குக் கால் பிடிச்சு விடுவே. அவளை உதைக்க விட்டு அரையை நனச்சுப்பே. நான் கேட்டா வாயைத் திறக்க மாட்டேனுட்ட்டா அந்தக் கழுதை.
புஸ்தி மீசைக் கிழவன் படபடவென்று பேசினான். செத்துப் போனால் எல்லோரையும் திட்டலாம் போல் இருக்கிறது. மாப்பிள்ளை மரியாதை எல்லாம் இருப்பவர்கள் செய்ய மட்டும் விதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
சரி சரி இப்ப என்ன அதுக்கு ? கள்ளு வந்தாப் போதும்.
முன்னோர்கள் கூட்டமாகக் கிழவனைக் கையைப் பிடித்து இழுத்தார்கள்.
பாப்பாத்தியம்மா எப்படி இருப்பா பார்க்க ?
கிழவன் ஆசை ஆசையாகக் கேட்டபடி அவர்கள் கூடப் போனான்.
ராஜாவுக்கும் ஆசையாக இருந்தது அவளைப் பார்க்க. அவள் தான் பழுக்காத் தட்டை எல்லாம் ராப்பகலாகச் சுழல விட்டுச் சங்கீதம் கேட்கிறாளோ ?
பின்னால் யாரோ குதிரை போல் கனைக்கும் சத்தம்.
திரும்பிப் பார்த்தார் ராஜா. பனியன் சகோதரர்கள்.
சாப்பிட்டாங்களா ரெண்டு பேரும் ?
ராஜா பிரியமாக விசாரித்தார்.
ஆச்சு என்றார்கள்.
இந்த வினோத வாகனத்தைப் பாதை நெடுக ஓட்டிக் கொண்டு வந்ததில் சிரமம் ஏதாவது இருந்ததா ?
இல்லையாம்.
குழந்தைகள் பயந்து போய்ப் பின் வாங்கிக் குலை தெரிக்க ஓடினார்கள். மற்றப் பேருக்கு ஜீவனோபாயம் பற்றின கவலை. வெள்ளைக்கார மகாராணி வந்தால் கூட லட்சியம் பண்ண மாட்டார்கள்.
எதையாவது சொல்லி எங்கேயாவது பேச்சை இழுத்து, இன்னும் காசுக்கு அடி போடுவார்கள்.
சரி அது கிடக்கட்டும். கருப்புப் பெட்டியைச் சித்தம் செய்து வைத்துக் கொள்ளூங்கள். இந்தக் கிழவரின் படத்தை ஆன மட்டும் நேர்த்தியாக எழுதிப் போட வேணும்.
ராஜா அவசரமாக உத்தரவிட்டபடி வாசலுக்குப் போனார்.
பனியன் சகோதரர்கள் அவரைத் தொடர்ந்து நடந்து வண்டியில் வைத்திருந்த கருப்புப் பெட்டியையும், முக்காலியையும் எடுத்துக் கொண்டு உ ள்ளே வந்தார்கள்.
வாசலுக்குப் பக்கம் தாரை தப்பட்டையோடு நீர்மாலை ஊர்வலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
புது வேட்டியை நனைத்து உயர்த்தி நாலு முனையிலும் உலரப் பிடித்துக் கொண்டு ஆண்கள். குளத்தில் முங்கி எழுந்த படிக்குக் குடம் நிறையத் தண்ணீருமாய்த் தொடரும் பெண்கள் அப்புறம். மேளக்காரன் ஆனந்தமாக வாசித்துக் கொண்டிருந்தான்.
இந்தக் கோலாகலத்தைப் படமாக்கச் சொல்லலாமே என்று ராஜா நினைத்தார். அவர் உள்ளே திரும்பிப் பார்க்க, பனியன் சகோதரர்கள் கூடத்து ஓரமாக மர முக்காலியை நிறுத்தி அதன் மேல் எதையோ வைத்துக் கருப்புத் துணி போட்டு மூடி இருந்தார்கள்.
நெட்டை பனியன் முட்டாக்கு போல் துணியைத் தலையைச் சுற்றி இழுத்து விட்டபடி ஏதோ குழல் மூலமாகக் கீழே விறைப்பாகக் கிட்ந்த புஸ்தி மீசைக் கிழவனைப் பார்ப்பது தெரிந்தது. பார்த்தது எப்படி யந்திரத்தில் படமாகப் போய் உட்காரும் என்று தெரிந்து கொள்ள ராஜாவுக்கு ஆசை. இவன்கள் கைகட்டி வேலை பார்க்கிற சிப்பந்திகள். கேட்டால் கவுரவக் குறைச்சல்.
அந்த இழவெடுப்பான்கள் நடுக் கூடத்தில் யாருமில்லாத நேரத்தில் என்ன பண்ணுகிறான்கள் ? அசந்தால், அப்பார் காதில் கடுக்கனைக் கழட்டிக் கொண்டு போய் விடுவான்கள்.
ராணி பக்கத்தில் வந்து சொன்னாள்.
அவர்கள் துஷ்டர்களோ துன்மார்க்கர்களோ இல்லை. என்னை நம்பு. என் மாமனாரை சகல கெம்பீரத்தோடும் படம் எடுத்து நாம் என்னென்னைக்கும் கும்பிட்டு நிற்கத் தக்க வகையில் கொடுப்பார்கள். அதற்கான முஸ்தீபுகளைத் தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆமா கிழித்தான்கள். பக்கத்து வீட்டைப் பொசுக்கிப் போட முடியாத பயல்கள். நீங்களும் உத்தரவு போடுவது இல்லை.
கள்ளும் கறியும் கேட்கும் பக்கத்து வீட்டுப் பாப்பாத்தியம்மாள் விவகாரத்தை இவளிடம் பிரஸ்தாபிக்கலாமா என்று ராஜாவுக்குத் தோன்றியது.
வேண்டாம். உசிதமான நேரம் இது இல்லை. புஸ்தி மீசைக் கிழவனைக் குளிப்பாட்டப் பெண்கள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்ம மரியாதையும் வந்தாச்சு.
ராணி தூரத்தில் கையைக் காட்டினாள். மாட்டு வண்டி நிறையப் பூவும் மாலையுமாக வந்து கொண்டிருந்தது.
சருகணியிலே சொல்லி புது மல்லியப்பூ மாலை கட்டி வரச் சொல்லி இருந்தேன். இங்கே வரைக்கும் வாசனை தூக்குது பாருங்க.
நாற்றம் பிடித்த கிழவன் கழுத்தில் கிடந்து வாடப் போகிறது அது என்று ராஜா நினைத்தார்.
வாசல் பக்கம் ஒதுங்கி நின்ற யாரோ ராஜாவைக் குனிந்து வணங்கினார்கள்.
கொலைச் சிந்து பாட வந்திருக்கோம் தொரே.
என்ன பாட்டு ? ராஜா ஆவலாகக் கேட்டார்.
நீர்மாலை வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
ஊரோட பஞ்சம் வந்து ஊருணிக் கிணத்துலே உசிர விட்ட குருக்களய்யா மக்களோட தற்கொலைச் சிந்து.
அவர்கள் சொன்னது பாதி மட்டும் கேட்டபடி ராஜா உள்ளே கெத்தாக நடந்தார்.
(தொடரும்)
eramurug@yahoo.com
- கூடு விட்டு கூடு…
- கலையும் படைப்பு மனமும்
- விமரிசன விபரீதங்கள்
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- தமிழாக்கம் 1
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- வாழ்க்கையும் கனவுகளும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- கம்பனும் கட்டுத்தறியும்
- ஹைக்கூ
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- மொய்
- உழவன்
- ஒரு தலைப்பு இரு கவிதை
- நெஞ்சினிலே….
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- விசுவரூப தரிசனம்.
- ஒற்றுப்பிழை
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- கடிதங்கள்
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கோயில் விளையாட்டு
- விடியும்! நாவல் – (7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- சந்தோஷமான முட்டாளாய்…
- முற்றுமென்றொரு ஆசை
- மனமா ? மத்தளமா ?
- வாழ்க்கை
- ஊனம்
- அன்னை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- நேற்று இல்லாத மாற்றம்….