இரா முருகன்
கொல்லைக்குப் போய்ட்டு வந்தாச்சு. பச்சை மிளகாயும் புளி இஞ்சியுமாத் தொட்டுண்டு நீத்து பாகமும் சாப்பிட்டாச்சு. குளிக்கக் கிளம்பலியா இன்னும். அதுக்கு மின்னாடி வேலாயுதனைப் பார்த்து தாடி மீசையை நறுக்கிக் குடுமியையும் நேராக்கிண்டு வாங்கோ.
விசாலாட்சி தலையாற்றிக் கொண்டே சொன்னாள் குப்புசாமி அய்யனிடம்.
ராத்திரி முழுக்க ரெண்டு பேரும் எந்த உபத்திரவும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்த சந்தோஷமும் சந்திருப்தியும் முகத்தில் தெரிந்தது. அதுவே அவளுடைய லட்சணமான முகத்துக்குத் தீபம் கொளுத்தினது போலே மேலதிகம் பிரகாசத்தையும் கொடுத்தது.
குப்புசாமி அய்யன் தஞ்சாவூரிலிருந்து தாசியாட்டத்துக்கு வந்த பெண்டுகளை மறந்தான். கையில் அரிய எடுத்த கருணைக்கிழங்கைப் பந்தாக உருட்டிக் கொண்டு ரதி சுக தாரே பாடும் சமையல்காரர்களை, சிருங்கார சுலோகம் சொல்லும் நம்பூத்ரிகளை, நல்ல நாள் கேட்ட மீன்காரியை எல்லாம் மறந்து விசாலாட்சியில் அமிழ்ந்து உருகிப் போனான்.
அது நேற்று ராத்திரி.
தாடை எல்லாம் ரோமம் காடாக வளர்ந்திருக்கே. சிரைத்துக் கொள்ளக் கூடாதா ?
அவள் வெட்கத்தோடு கேட்டு மாரில் அணைத்துக் கொண்டபோது குதிரை ஏறிப் போன பாதிரி என்னத்துக்கோ நினைவில் வந்தான்.
போகம் முந்தவிடாமல் தடுக்க மனதை வேறே இடத்தில் நிலைக்க வைக்கிறதும் நல்லது தான். இது இன்னும் சில வருடத்தில் கனிந்து யோகமாகும். மனம் தன்பாட்டுக்கு எதிலோ நிலைத்துப் போய்ச் சலனமில்லாது கிடக்க, உடம்பு இயங்கிக் கொண்டு, எல்லாவற்றையும் மூணாம் மனுஷனாகப் பார்த்துக் கொண்டு.
கொதுகு கடிக்கறது போதாம நீங்க வேறே.
அவள் செல்லமாகக் கோபித்தபடி மார்த்தடத்திலிருந்து அவன் முகத்தை அகற்றி தாடி ரோமங்களைத் தீர்க்கமாக வருடினாள். அவை சிலிர்த்தது அந்த இருட்டிலும் தெரிந்தது போல் ஓசைப்படாமல் சிரித்தாள்.
ஏலமும் கிராம்புமாக அவளுடைய வாயிலிருந்து வந்த சுகந்தமான வாடை குப்புசாமி அய்யனை இன்னொரு உலகத்துக்குக் கொண்டு போனது.
இப்போது குளித்து வந்து நிற்கிறபோது எல்லாத் திசையிலும் தெறிக்கும் பரிசுத்தமான வாசனை.
யோகம் அனுபவிக்கப் போகும்போது வாடை எல்லாம் உதவாது. மூக்கும் நாக்கும் செத்திருக்க வேண்டும்.
அதைப் பற்றி இப்போ என்ன என்று அவளோடு சம்பூரணமான பொழுதை அசைபோட்டபடி விசாலாட்சியைப் பார்த்தான் குப்புசாமி அய்யன்.
காவிலே யட்சி போல இருக்கேடி.
அவள் தலைமுடியை முகம் எல்லாம் இரைய விட்டுக் கொண்டு சொன்னான்.
அப்போ நானும் சிநேகாம்பா தோப்பனார் போலப் பறக்கட்டுமா ?
விசாலாட்சி திரும்பச் சிரித்தாள்.
அந்த வயசன், குப்புசாமி அய்யன் ஊருக்குப் போய்த் திரும்பி வந்த இந்த நாலு வாரத்தில் ஒரு தொந்தரவாக மாறியிருக்கிறான். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தது.
நேற்றைக்கு மதியம் வீட்டில் நுழைந்தபோதே குப்புசாமி அய்யன் பார்த்தது தான் அது. என்ன கிரகசாரமோ என்று யோசித்தபடி செம்பில் தண்ணீர் சேந்தி உடம்பு கழுவிக் கொண்டிருந்தபோது, வயசன் தோட்டக் கோடியில் மிதந்தபடி சுற்றி மூத்திரம் ஒழித்துக் கொண்டிருந்தான். அவன் கண் இரண்டும் அரைத் தூக்கத்தில் இருப்பதுபோல் பட்டது குப்புசாமி அய்யனுக்கு.
பிரதட்சணமாகவும் அப்பிரதட்சணமாகவும் வேலிப்பக்க மலை வேம்பை இரண்டு முறை சுற்றி வருவதற்குள் காரியம் முடிந்து அந்தப் படிக்கே மிதந்து திரும்ப வீட்டு மாடிக்குப் போனான் வயசன்.
ஆலப்பாட்டு மடத்தில் ஏதாவது துர்தேவதை நுழைந்திருக்கும். இல்லை, அங்கே நிலையாக இருக்கப்பட்ட அம்மாதிரி எதற்கோ வேண்டிய உபச்சாரம் கிடைக்காமல் போயிருக்கும். வயசன் இங்கே வந்து கிட்டத்தட்ட ஸ்திர தாமசமாக ரெண்டு மாதம் ஆகப் போகிறது என்பது குப்புசாமி அய்யனுக்கு நினைவு வந்தது. இரண்டு மாதமாகப் பசியோடு இருக்கிற எந்த நீலியோ அவனை இப்போது கொட்டையைப் பிடித்துக் கசக்கி ஆட்டி வைக்கிறாள் போலிருக்கிறது.
இதெல்லாம் யோசித்தபடி கொல்லையில் இருந்து வீட்டுக்குள் வந்தபோது உயரம் போதாத பின் நிலைவாசல் தலையில் இடித்து விண்ணென்று தலைக்குள் வலி வேறு.
வீட்டில் எல்லோரும் வந்திருந்தார்கள் அப்போது. குழந்தையும் குட்டியும் பெரியவர்களுமாக எப்போதும் போல் இருந்த வீடு. தம்பி துரைசாமி அய்யன் கூட அங்கே இருந்தான்.
என்னவாக்கும் எல்லோரும் ஆத்தை மட்ட மல்லாக்கத் திறந்து போட்டுட்டு எங்கே போய்ட்டேள் ? ஏண்டா தொரை, நீ ஆதிச்ச நல்லூர்லே கைமள் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒத்துண்டு போகலியோ ? புனலூர்லே ராமேந்திரன் அத்திம்பேரோட தம்பியைப் பார்த்தபோது சொன்னானே ?
அண்ணா அது கிட்டன் போயிருக்கான். நான் மைநாகப்பள்ளி குரூப்பு வீட்டுலே அவனோட அப்பன் அடியந்திரத்துக்குச் சொல்லி விட்டான்னு போயிருந்தேனா. போன இடத்துலே குருப்போட தள்ளைக் கிழவியும் நாலு நாள் முன்னாடி போய்ச் சேர்ந்து. இன்னும் ஏழு நாள் கழிச்சு ரெண்டையும் ஒண்ணா நடத்திக்கலாம்னுட்டான் குரூப்பு. மகா பிசுக்கனாக்கும் அவன். பேசினதுலே கால்வாசிப் பணம் கொடுடா இப்போ சிரத்தைக்குன்னு கேட்டு வாங்கிண்டு வந்தேன்.
மைநாகப்பள்ளியில் இருந்து கருநாகப்பள்ளி போய்க் கிட்டனுக்குக் கூடமாட இருக்கக் கூடாதோ ? காமாட்சி நினைப்பில் ஓடி வந்திருக்கிறான் கழுவேறி. தனியாகப் படுத்துக்கலாம்னு நப்பாசை.
நீங்க எனக்காக வரலியா அது மாதிரித்தான்.
விசாலாட்சி அவனுக்கு மட்டும் புரிகிற மாதிரி சிரித்தாள். அவள் தலையில் மீன்கூடையும் வாய் நிறைய தாம்பூல எச்சிலுமாகச் நிற்கிறது போல் தோன்றியது குப்புசாமி அய்யனுக்கு.
அதொக்கே சரிதான். இப்போ எல்லோரும் எங்கேயாக்கும் ஒருமிச்சுப் போய்ட்டு வரேள் ?
குப்புசாமி அய்யன் பொதுவாகப் பார்த்தபடி சொன்னான். அவனுக்குப் பசி அகோரமாக இருந்தது. விசாலாட்சி படுத்துக் கொள்ள வருவது கிடக்கட்டும். இப்போ சாப்பிட ஏதாவது ஆக்கி வைத்திருக்கிறாளா ?
ராம சாஸ்திரியாத்துலே சீராம நவமி அண்ணா. பூஜை, அப்புறம் சமாராதனை.
வா வான்னு சாஸ்திரிகளோட ஆத்துக்காரி தெலுங்கும் தமிழுமா வந்து வாய் நிறையக் கூப்பிட்டுப் போனாள். கதவைச் சாத்திண்டு தான் போயானது. காத்துலே திறந்திருக்கும்.
கடைசித் தங்கை பகவதி சொன்னாள்.
ராம சாஸ்திரி தெலுங்கு பிரதேசத்தில் இருந்து குடி ஏறினவன். வீணையும் வாய்ப்பாட்டும் சொல்லிக் கொடுத்து ஏகத்துக்கு சம்பாதிக்கிறான். சுற்று வட்டம் இருபது கல் வட்டாரத்தில் கானடா, காப்பி, ரீதிகெளளை என்று பேர்பண்ணிக் கொண்டு பெண்டுகள் மூக்கால் பாடுவதும், பெருச்சாளி பிராண்டுகிறதுபோல் சதா வீணையை மீட்டுவதுமாக அவன் இங்கே வந்த நாலே வருஷத்தில் மாறிப்போனது. அவனும் குடக்கூலிக்குப் புகுந்த வீட்டை சொந்தமாகவே வாங்கி விட்டான்.
நம்பூத்திரி அந்தர்ஜனப் பெண்களுக்கு அவரவர்களின் மனையிலும், மற்றவர்களுக்குத் தன் கிரஹத்தில் வரச் சொல்லியும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் அந்தத் தெலுங்கனின் பெண்டாட்டியும் விதூஷியானதால் பணம் கொட்டு கொட்டென்று கொட்டுகிறது. பகவதி கூட இரண்டு மாதமாக ராம சாஸ்திரி வீட்டில் தான் கீர்த்தனம் நெட்டுரு பண்ணிப் பாடக் கற்றுக் கொண்டு வருகிறாள்.
சரிதான். ஆத்துலே இன்னிக்கு உலை வைக்கலியா ?
பசி பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான் குப்புசாமி அய்யன்.
கிட்டாவய்யனின் குழந்தைகள் பந்தி போஜன வீட்டில் இலையில் போட்டதை எடுத்து வைத்து சிற்றாடையில் சுருக்குப் பைக்குள் முடிந்து வைத்துக் கொண்டு வந்த வடையையும் சுவியனையும் சாப்பிட்டபடி வீட்டைச் சுற்றி ஏக களேபரமாக ஓடத் துவங்கின. ஆகச் சின்னது ஊ ஊ என்று இடுப்பில் வெள்ளி ஆலிலை அசையத் தரையில் உருள ஆரம்பித்தது.
இதோ நொடியிலே சாதம் வடிச்சு ஒரு ரசம் பண்ணிடறேன் அண்ணா. மன்னியைக் கஷ்டப் படுத்தாதீங்கோ. எடி லண்டி மிண்டைகளா. வடையைக் கடிச்சு எச்சல் பண்ணாதீங்கோ. கையால விண்டு சாப்பிடுங்கோ. காமாட்சி, இந்தப் பிசாசுகளைக் கொஞ்சம் பார்த்துக்கோடியம்மா. அந்தச் சின்னக் கோட்டானையும் தான்.
கிட்டாவய்யன் பெண்டாட்டி அவசர அவசரமாகச் சொன்னபடி சமையல்கட்டுக்குள் புகுந்தாள். துரைசாமியய்யன் பெண்டாட்டி குழந்தைகளை சின்னவளை இடுப்பில் இடுக்கியபடி மற்ற ரெண்டையும் ரேழியில் கூட்டி வைத்துக் கொண்டு கதை சொல்லப் போனாள்.
அண்ணா நான் கொல்லன் பட்டறைக்குப் போய் ஈயச் சொம்புக்கு எல்லாம் புதுசாப் பூசிண்டு, இருப்பச் சட்டிப் பிடியையும் பத்த வச்சுண்டு வந்துடறேன். லொடலொடன்னு ஆடிண்டே இருக்கு. திளைக்க வச்ச எண்ணெயோட விழுந்து வச்சா வேறே வினையே வேணாம்.
நினைவு வந்ததுபோல் துரைசாமி அய்யனும் கிளம்பிப் போனான்.
லட்சுமியும் பகவதியும் சிநேகாம்பா மன்னிக்கு ஒத்தாசையாக சமையல்கட்டுக்குள் நுழைந்தார்கள்.
குப்புசாமி அய்யன் விசாலாட்சியோடு பேசிக் கொண்டிருக்கட்டும் என்ற வாத்சல்யம் எல்லோரிடமும் தெரிந்தது.
நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு கொல்லைப் பக்கம் விசாலாட்சியோடு வார்த்தை சொல்லிக் கொண்டு நின்றபோது, வயசன் பற்றி அவள்தான் முழு விவரமும் சொன்னாள்.
பாவம், சிநேகாம்பா தோப்பனாருக்கு என்னமோ ஆயிடுத்து. ஒரு வாரம் பத்து நாளாக் கால் தரையிலே பாவ மாட்டேங்கறது. நாள் முச்சூடும் தூங்கியாறது. எழுந்தா தரைக்கு அரை அடி ஒரு அடி உசரத்துலே மிதக்க ஆரம்பிச்சுடறார். பட்சி பறக்கற மாதிரி இல்லே இது. கரப்பான் பூச்சியும், கோழியும் மாதிரி ஒரு மிதப்பு.
துர்தேவதை உபாதையோ ?
குப்புசாமி அய்யன் கேட்டான். எந்த துர்த்தேவதையாவது இந்த வீட்டில் நுழைந்து விட்டிருக்கும் என்ற நினைப்பே சங்கடமாக இருந்தது. அதுகள் வீட்டில் வளைய வரும் பட்சத்தில் ராத்திரி விசாலாட்சியோடு தனியாக இருக்க முடியாது.
தெரியலை. உடம்பு பெலகீனம் என்கிறாள் சிநேகாம்பா. பலகீனப் பட்டவா எல்லாம் பறக்க ஆரம்பிச்சுடறாளா என்ன ? ஏதோ கர்ம வினை பாவம்.
எல்லோரும் முதலில் பயந்திருக்கிறார்கள். ஆண்பிள்ளை யாரும் இல்லாத மனையில் வைத்தியனை ஏற்றலாமா என்று யோசித்திருக்கிறார்கள். துரைசாமி அய்யன் வந்தபோது எல்லோருக்கும் பயம் விலகி இது பழகிப்போய் விட்டிருந்தது.
கிட்டன் வந்துடட்டும். அவனோட மாமனார். அவனண்டையும் ஒரு வார்த்தை கேட்டுண்டு முடிவு பண்ணலாம். அவர் பாட்டுக்கு தேமேன்னு மாடியிலே தானே தூங்கிண்டு இருக்கார். இருக்கட்டுமே. பறந்து வெளியிலே எங்கேயும் போகலியோல்லியோ. மாடிக்கும் தோட்டத்துக்கும் தானே இறங்கி ஏறியாறது.
துரைசாமி அய்யன் சொன்னபோது வயசன் விவகாரம் இன்னும் சாதாரணமாகப் போனது.
இருந்தாலும் பகல் நேரத்தில் மாடியிலிருந்து மிதந்தபடிக்கு இறங்கி வந்த தாத்தனைப் பேத்திப் பெண்டுகள் உஷ் உஷ் என்று கையைக் கொட்டித் துணி உலர்த்தும் கொம்பால் முதுகில் தட்டி மாடிக்குத் திருப்பி இருக்கிறார்கள் என்று அறியக் குப்புசாமி அய்யனுக்கு மனக் கஷ்டமாக இருந்தது.
சிநேகாம்பா என்ன பண்ணினா ?
அவ தான் நீர்க்கக் கரைச்சு எடுத்துண்டு போய் அப்பாவுக்கு மதியமும் ராத்திரியும் ஊட்டி விட்டுண்டு இருக்கா. பெத்தவன் ஆச்சே.
அந்தப் பேச்சு அப்போது அத்தோடு முடிந்து போனது. ராத்திரி வயசனை நினைக்க எல்லாம் நேரம் இல்லை இரண்டு பேருக்கும்.
அது நேற்று நடந்தது.
குப்புசாமி அய்யன் இடுப்பு வஸ்திரத்தை இறுகக் கட்டிக் கொண்டே எழுந்து நின்றான். விசாலாட்சியின் தலைமுடியைத் திரும்ப ஆசையோடு முகர்ந்தான்.
தலையை விடுங்கோ. பாஷாண்டி மாதிரி குளிக்காம என்னை ஒண்ணும் தொட வேண்டாம். கேட்டேளா ? நான் அம்பலத்துக்குப் போகணும்.
விசாலாட்சி தலைமுடி சிக்காகாமல் குப்புசாமி அய்யன் கையில் இருந்து விடுவித்துக் கொண்டாள்.
யட்சி மாதிரி இருக்கே.
திரும்பவும் சொன்னான் குப்புசாமி அய்யன்.
கேட்டேனே. அப்போ நானும் சிநேகாம்பா தோப்பனார் போல் பறக்கட்டுமா ? அதே படிக்கு நாள் முழுக்கப் படுத்துண்டு திறந்து போட்டு உறங்கிண்டு. உங்களுக்கும் செளகரியம்.
வெளியே ஓடுவது போல் போக்குக் காட்டியபடி சொன்னாள்.
எங்கே ஓடினாலும் இங்கே தாண்டி வரப்போறே. சாயரட்சைக்கு அப்புறம் வச்சுக்கறேன். ஆமா காலையிலேருந்து ஒரே பகளமா இருக்கே ? என்ன ஆச்சு ?
நேற்று மொட்டை மாடியில் படுத்துக் கொள்ளாமல் உக்கிராணத்துக்குப் பக்கத்து உள்ளிலேயே அசந்து தூங்கி விட்டான் குப்புசாமி அய்யன்.
வெளியே கிளம்பிப் போய்க் கூடத்தில் படுத்து விடிகாலை எழுந்து வந்து முதல் வேலையாக விசாலாட்சி எழுப்பினாலும் அவன் எழுந்திருக்கவில்லை.
அய்யோ மானம் போறது. இங்கே இன்னும் தூங்கிண்டு இருந்தா எல்லோருக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். எந்திருங்கோ.
தெரியட்டும் போ. அவாவா பண்றதுதானே. கதவைச் சாத்திட்டுப் போடி.
அவன் திரும்பக் குப்புறப் படுத்துக் கொண்டு நித்திரை போனபோது சமையல் அறையில் காமாட்சிக்கும் சிநேகாம்பாளுக்கும் சண்டை வெடித்தது விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
அதன் ரிஷிமூலம் சொல்ல வந்திருக்கிறாள் விசாலாட்சி.
எல்லாம் அந்த வயசன் விவகாரம்தான்.
விசாலாட்சி குப்புசாமி அய்யன் காதோடு சொன்னாள்.
காமாட்சி விசர்ஜனத்துக்காகக் கையில் செம்போடு தோட்டத்தில் கழிப்பறைக்குப் போயிருக்கிறாள் இன்றைக்கு விடிகாலையில்.
போன இடவ மாசத்தில் வானமே பொத்துக் கொண்டு கொட்டிய மழையில் மேலே கூரை அங்கங்கே ஓட்டை விழுந்து விரிசல் கண்டிருந்தது. மச்சு மாடியே இல்லாமல் அக்கம் பக்கம் சின்னச் சின்னதாக வீடுகள் இருந்ததால் கூரையைத் திரும்ப நல்லபடிக்கு வேய இன்னும் யாரும் முன்கை எடுக்கவில்லை. கரண்டியைத் தூக்கிக் கொண்டு அலையவே நேரம் சரியாக இருக்கிறது ஆண்பிள்ளைகள் எல்லோருக்கும்.
காமாட்சி அந்தக் கூரைக்குக் கீழே குந்தியிருந்திருக்கிறாள். வயசன் கீழே வந்து விட்டுத் திரும்ப மேலே எழும்பிப் போனபோது அவளைப் பார்த்ததாகப் பராதி.
பாவம் அவர் கண்தான் சதா மூடி இருக்கே. என்னத்தைப் பார்த்திருக்கப் போறார். அதுவும் விசர்ஜனம் செய்யும் யாரையும், எத்தனை அப்சரஸாக இருந்தாலும் பார்ப்பது அருவருப்பான காரியம் இல்லையா ? நேத்திரம் நல்லபடிக்கு இருந்தாலும் இதையெல்லாம் யாராவது மான்யன் பார்ப்பானோ ?
குப்புசாமி அய்யன் கேட்டான்.
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. காமாட்சிக்கு வயசனை எப்படியாவது உடனெ ஆதிச்சநல்லூருக்குத் துரத்திவிட வேண்டும் என்று பிடிவாதம். சிநேகாம்பாளானால் உங்க தம்பி வரட்டும் அவர் தான் கொண்டு போய் விடவேண்டும் வேறே ஆள்கார் யாரும் இல்லே என்கிறாள்.
துரைசாமி போகலாமே ?
அவருக்குத் தான் பிருஷ்டம் வணங்காதே இந்த மாதிரிக் காரியத்துக்கு எல்லாம். பத்து நாள் வேலை பார்த்துட்டு வந்தால் பத்து நாள் தூக்கம். காமாட்சியோடவோ தனியாவோ.
கொடுத்து வச்சவன்.
குப்புசாமி அய்யன் விசாலாட்சியை விழுங்குவது போல் பார்த்தான். மனதில் நேரம் காலம் இல்லாமல் மிருக குணம் முட்டி மோதிக்கொண்டு வந்தது.
ரொம்பவே கொடுத்து வச்சவர் தான் உங்க தம்பி. ஆத்துக்காரியோட ரமிச்சு இருக்கும்போது உள்ளே நுழைஞ்சு முதுகிலே மோதி இடிச்சுண்டு யாராவது போறது எவ்வளவு சந்தோஷமான விஷயம் ? அதுவும் தரைக்கு அரை அடி மேலே கண்ணை மூடிண்டு மிதந்தபடிக்கு.
அவள் போன பிறகும் அவளுடைய சிரிப்பு குப்புசாமி அய்யன் காதில் கேட்டபடி இருந்தது.
(தொடரும்)
eramurug@yahoo.com
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- சொல் தேடி பயணம்…
- நேற்றான நீ
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- விடியும்! நாவல – (4)
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- பணமே உன் விலை என்ன ?
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்