வலி

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

சாமிசுரேஸ்


ஓர் புதர் மூடிய நடுநிசியில்
எல்லாம் முடிந்துபோயிற்று

நிணம் தின்னிப்பேய்கள்
வாய்முழுதும் குருதிமணம்
பற்களின் ஈறுகட்குள் மனிதச்சதைத் துண்டுகள்
முகம் முழுதும் சிரிப்பைப் பூத்தபடி
அரக்கர் குழுவொன்று எரிதணல் மூட்டியது
எம் கூடு நாசமாய்ப்போனது

வாய்க்கால் நிரம்பி குருதி வழிந்தோடியது
வயல் வரம்பெல்லாம் நரவாடை நீவியது
குழந்தைகள் குஞ்சுகள் பிஞ்சுகள் எல்லாம்
குத்திக் குதறி பிச்செறிந்தாயிற்று

வாழவழியின்றி வரலாற்று இனமொன்று
வரலாறின்றி அழியுது

——–

இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை
யாரிடம் கேட்பது
வாழ்வின் சுவடுகளில்லை
ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த
பிரளயம் அரங்கேறி முடிந்து
மௌனமும் கதறலுமே எதிரொலியானது
உயிர் மட்டும் துடித்து எரிகிறது

மயான தேசத்தின் துர்நாற்றம் தீர
இன்னும் எத்தனை ஆண்டுகள் கரையும்.
கேள்விகளைக் கைப்பிடித்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்
நுகங்களால் நிலம் தோண்டிச் சுவாசித்தேன்
ஏமாற்றங்களும் சந்தேகங்களும் கதறிக்கொண்டிருந்தன
எம்மை நாமே புண்ணாக்குவதைத் தவிர யாதறியோம்

——–

காகிதத்தில் இறுகிப்போன பதிவுகளை உள்வாங்கியபடி
காலம் விரைந்துகொண்டிருக்கிறது

இரவும் பகலும் பூமியின் மீது கொட்டிக்கிடக்கிறது
அதன் மேடு பள்ளங்கள் பனியால் நிரம்பி சமதரையானது
இப்பனியின் கீழ் புதையுண்ட ஆன்மாவை எடுத்து முகர்ந்தேன்
கண்களின் ஓரங்களில் இன்னும் ஓர் கனவு மிச்சமிருந்தது
உங்கள் கடைசிப் புன்னகையைத் தாருங்கள்
நாம் அழுகையைத் தொலைக்கவேண்டும்

Series Navigation

author

சாமிசுரேஸ்

சாமிசுரேஸ்

Similar Posts