ஜெயமோகன்
எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர நிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் சமையல் செய்துகொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளிப் பாறை மீது அமர்ந்தவனாக பீமன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
‘மகாபலரே உப்புப் பாருங்கள் ‘ என்று ஒருவன் வந்து மர அகப்பையில் சித்ரான்னத்தை நீட்டினான்.
பீமன் நாசியை விடைத்து அந்த ஆவியை முகர்ந்தான். ‘சரிதான் நீர்வள்ளிக்கிழங்கு சற்றுத் துவர்ப்பு கண்டிருக்கிறது ‘
‘என்ன செய்வது ‘
‘ஓரிரு துண்டுப் பழங்கள் போடு. அடேய் மச்சா, விறகை இழுத்துப் போடு அன்னம் புகைந்து விடப்போகிறது ‘
சூதன் ஒருவன் தாழைப்பாயை விரித்துப் பழங்களை கழுவ ஆரம்பித்தான்.
பீமன் பெருமூச்சுடன் மீண்டும் நதியைப் பார்த்தான். இனம் புரியாத தவிப்புடன் மனம் தாவித் தாவிச் சென்றது. கோபத்துடன் கைகளை உரசிக் கொண்டு எழுந்தான். அடுப்புப் புகைக்கு அப்பால் பர்ணசாலைகள் நடுங்கின. அங்கிருந்து தருமனின் நெளியும் பிம்பம் வந்தது. பீமன் கோபத்தை திசை மாற்றுபவன் போல மண்ணை உதைத்தான்.
‘மந்தா, எதுவரை ஆயிற்று சமையல் ? ‘
‘எட்டுவகை சித்ரான்னம். முடிந்து விட்டது. ருசி பார்க்கிறீர்களா ? ‘
‘எனக்குப் பசியில்லை ‘ என்றபடி தருமன் பாறை மீது அமர்ந்தான். மருத மரத்தில் சாய்ந்து கைகட்டியபடி பீமன் தழலை உற்றுப்பார்த்தான்.
‘மந்தா பெரிய தந்தையார் உடல்நிலை கவலையூட்டுவதாக இருக்கிறது ‘ என்றான் தருமன். ‘எனக்கு ஒரு கணம் கூட நிம்மதியில்லை ‘
‘சூதன் என்ன சொன்னான் ? ‘
‘என்ன சொல்வான். தூக்கமில்லாததுதான் காரணம் என்கிறான். எப்படித் தூங்க முடியும் ? புத்திர சோகத்தின் தழல்மீது அல்லவா அவர் படுத்திருக்கிறார்; ‘
‘எல்லோருக்கும்தான் துக்கம் ‘ என்றான் பீமன். ‘அவர் சற்று மிகைப்படுத்துகிறார். நமது குற்ற உணர்வைத் தொடர்ந்து தூண்டிவிடுவதில்தான் அவருடைய அதிகாரம் இருக்கிறது இப்போது ‘
‘அநீதியாகப் பேசாதே மந்தா. பர்ணசாலைகளில் இரவும் பகலும் துக்கம் மூடிக்கிடப்பதை நீ பார்க்கவில்லையா ? குந்தியோ திரெளபதியோ காந்தாரியோ அனைத்து மாதர் முகங்களும் ஒன்று போல இருக்கின்றன ‘
பீமன் கோபம் எழுவதை உணர்ந்தான். அடக்க முயன்று முடியாமல் பெருமூச்சுடன் ‘நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும் ? ‘ என்றான். ‘நமது நாடும் மக்களும் அங்கே காத்திருக்கிறார்கள். வனப்பிரஸ்தம் வந்தவர்கள் அதை அனுபவிக்கட்டுமே. அடேய் மூடா பழங்களை வெந்நீரில் போட்டு தோல் களைந்தாயா ? தோலை உன் தந்தையா தின்பான் ? அண்ணா, இதையெல்லாமே மூடத்தனம் என்று படுகிறது எனக்கு ‘
‘நம்மை விட யுயுத்சுவும் தெளமியரும் நன்கு ஆட்சி செய்திருக்கிறார்கள் ‘
‘அப்படியென்றால் நாட்டை அவர்களுக்குத் தந்து விடலாமே ‘
தருமன் பெருமூச்சு விட்டான். ‘மந்தா நீ உணவிலும் பார்த்தன் பெண்களிலும் தம்பியர் சோதிடத்திலும் அஸ்வ சாஸ்திரத்திலும் நான் தர்ம நூல்களிலும் தேடுவது என்ன ? ‘
‘நான் எதையும் தேடவில்லை ‘
‘நாம் நம்மைத் தேடுகிறோம். களங்கமில்லாத மனமும் சுதந்திரமான எண்ணங்களும் கொண்ட பழைய பாண்டவர்களை ‘
‘எனக்கு அலங்காரச் சொற்கள் புரிவதில்லை. அதனால் என்னை எவரும் மன்னனாக எண்ணவில்லை ‘
‘மந்தா உண்மையைச் சொல். காட்டில் பதினான்கு வருடம் கையில் கிடைத்ததைத் தின்று நீ வாழ்ந்தபோது இருந்த பசியும் ருசியும் இப்போது உள்ளதா ? ‘
பீமன் முகம் சிவந்தது. சட்டென்று எழுந்து ‘மூடா: தீயை இழு என்றேனே; கேட்டாயா ? கருகல் வாடை வருகிறது பார் ‘ என்று சீறியபடி கை ஓங்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
சூதன் நடுங்கி அமர்ந்து விட்டான். ‘அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு… ‘
பீமன் கைகளை உரசிக் கொண்டான். மத யானையின் தசைகள் போல அவன் தோள்கள் இறுகி விரிந்தன. கூண்டு மிருகம் போலச் சுற்றி வந்தான்.
‘மந்தா உன்னைச் சீண்டும் நோக்கம் எனக்கில்லை. சத்யூபரின் சீடர் வந்து தகவல் சொன்னார். பிதாமகர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் வருகிறாராம் ‘
‘எதற்கு ? ‘
‘நம்மைப் பார்க்க. வேறு எதற்கு ? ‘
‘எஞ்சியவர்களை கணக்கிடவா ? வேறு வேலை இல்லை கிழவருக்கு ‘
‘பித்ரு நிந்தை பாபம் மந்தா ‘
பீமன் ‘இது சுயநிந்தை ‘ என்று உருமினான்.
தருமன் எழுந்தான். ‘நான் நீராடச் செல்கிறேன். உடல் எரிகிறது. வருகிறாயா ? ‘
‘வருகிறேன் ‘ தண்ணீர் குளிர்விக்கும் என்று பட்டது பீமனுக்கு. இருவரும் நடந்தனர். பீமன் போகும் வழியில் இருந்த மருத மரத்தை ஓங்கி அடித்தான். அது அதிர்ந்து மலர்களும் சருகுகளும் கொட்டின.
‘நாம் இங்கு வந்தது ஒரு வகையில் நல்லது. அங்கு அஸ்தினாபுரியில் அதிகாரமும் போகமும் நம்மைச் சூழ்ந்துள்ளன. நம் ஆன்மாவை அவை மூடிவிடக்கூடும். இங்குத் துயரம் அணிகளின்றி உடைகளின்றி நம்முள் நிற்கிறது. நமது வெற்றியின் விலை என்னவென்று ஒவ்வொரு கணமும் கூறுகிறது ‘
‘அண்ணா நாம் வேறு எதையாவது பேசுவோமே ? ‘
‘எதைப்பற்றிப் பேசினாலும் இந்த இடத்தில் மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணுவதில்லை. மந்தா. பேசாதபோது துக்கம் உள்ளிருந்து மார்பை அடைக்கிறது ‘
கங்கை சிதையென எரிந்து கொண்டிருந்தது. நீர் மீது சரிந்து வளர்ந்த பெரிய சாலமரத்தின் வேர்களில் தருமன் அமர்ந்தான். பீமன் நீரில் இறங்கியதும் மக்கிய மரக்கட்டை போல நீரில் அசைவன்றி மிதந்து கிடந்த முதலையொன்று உயிர் பெற்று முன்னகர்ந்தது. அதன் வாலையும் வாயையும் பற்றி பீமன் சுழற்றி எடுத்தான். இம்சையின் எழுச்சியில் உடல் அதிர்ந்தது. அதைச் சுழட்டி வேர் மீது ஓங்கி அறைந்து வளைத்து ஒடித்தான். அவனது பருத்த கரங்களில் முதலை துடித்து நெளிந்து அடங்கியது. அதன் அசைவுகளில் லயத்தில் அவன் மனமும் அடங்கியது. அதை நீரில் வீசினான். நீர் ஒளியுடன் விரிந்து வாய்பெற்று முதலையை விழுங்கியது. அந்திரீயத்தைக் கழட்டி கரைமீது போட்டுவிட்டு நீரில் தாவியிறங்கி மூழ்கினான்.
‘இன்னும் ஒரேயொரு நீர்ப்பலி மந்தா. இன்று மாலை அதுவும் முடிந்து விடும். நாளை மதியம் கிளம்பி விடலாம் ‘
‘நான் அப்படியே தெற்குத் திசை நோக்கிப் பயணம் செய்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன் ‘
‘அர்ச்சுனன் நாகலோகம் போகப்போவதாகச் சொன்னான். நகுலன் காந்தாரத்துப் புரவி விழா ஒன்றுக்குப் போகிறான் ‘ தருமன் கசப்புடன் சிரித்தான். ‘நான் தான் எங்கும் போக முடியாது. பாரத வர்ஷத்தின் சக்கரவர்த்தியாயிற்றே ‘
பீமன் நீரில் மூழ்கினான். மீன்களின் பளபளப்பில் நீருக்குள் ஆயிரம் விழிகள் உருக்கொண்டன. பார்வைகள் அவனை மொய்க்க ஒரு கணத்தில் மூச்சு மார்பை இறுக்கியது. உதைத்து மேலே வந்தான். கரை நோக்கி வந்தான். நதி அச்சமூட்டியது.
‘எதற்கு வருகிறார் வியாசர் ? ‘ என்றான் தருமன் உடைகளை மெல்லக்களைந்து விட்டு நீரில் இறங்கியபடி.
‘ஏதாவது தர்மவிசாரம் இருக்கும் உங்களுக்கும் பொழுது போகும். முதியவருக்கு சித்ரான்னம் பிடிக்குமா இல்லை குரங்கு உணவுதானா ? ‘
‘மந்தா உன் கசப்பு அதர்மத்தை நோக்கிப் போகிறது ‘
‘எனக்கும் சேர்த்து நீங்கள்தான் தர்மவிசாரம் செய்கிறீர்களே ‘
தருமன் பிறகு பேசவில்லை. நீராடி முடித்ததும் ‘வருகிறாயா ‘ என்றான்.
‘எதற்கு ? ‘ என்றான் பீமன் ‘பெண்களின் கண்ணீர் முகங்களைப் பார்க்கவா ? அதைவிட இங்கேயே ஏதாவது முதலை முகங்களைப் பார்க்கலாம். நான் உணவை அனுப்புகிறேன் ‘.
தருமன் குனிந்த தலையுடன் ஒற்றையடிப்பாதையில் செல்வதைப் பார்க்க ஒரு கணம் பரிதாபமும் மறுகணம் துவேஷமும் எழுந்தது.
சித்ரான்னங்கள் உலையிலிருந்து இறங்கிவிட்டிருந்தன. பீமன் தன் வயிற்றுக்குள் இச்சை ஓலமிட்டு எழுவதை உணர்ந்தான். சற்று நேரத்தில் அவன் உடலே அவ்விச்சையாக மாறியது. அவன் உடலின் மறுபகுதியே அந்த அன்னம் என்பது போல. அந்த அன்னத்துடன் தன் அன்னமய உடல் இணையும்போதே அது பூரணமடைய முடியும் என்பது போல். நியதியின் பெரும் தருணம் ஒன்றிற்கு முந்தைய தவிப்பு போல.
பர்ணசாலைகளின் நடுவே செம்மண்ணாலான பெரிய முற்றம் இருந்தது. அதில் பழுத்த இலைகள் பரப்பப்பட்டிருந்தன. நடுவில் வியாசர் அமர்ந்திருந்தார். நீண்ட வெண்ணிறத்தாடி காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. கண்கள் அரைவாசி மூடியிருந்தன. எதிரே பாஞ்சாலி அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சதயூபர் மடிமீது பெரியதொரு சுவடிக்கட்டை விரித்து வைத்து கண்களை இடுக்கியபடிக் கூர்ந்து படித்துக்கொண்டிருந்தார். முற்றத்தில் பரவலாக அனைவரும் அமர்ந்திருப்பது போலிருந்தது. தருமன் கவனமின்றி இலையொன்றை கிழித்தபடி அமர்ந்திருந்தான். திருதராஷ்டிர மன்னர் பார்வையிழந்தவர்களுக்கேயுரிய முறையில் மோவாயை விசித்திரமாகத் திருப்பி ஒலிகளைக் கூர்ந்து கேட்டபடி அமர்ந்திருந்தார். சற்றுத்தள்ளி மடியில் காண்டிபத்துடன் அர்ச்சுனன். பெண்கள் கூட்டத்தின் நடுவே இறுக்கமான முகத்துடன் குந்தி. பதுமைபோல காந்தாரி. வெளிறி மெலிந்த உத்தரை. முற்றதிற்கு வெளியே கூட்டம் கூட்டமாக அந்தப்புரத்தின் பிற பெண்கள்.
பீமனின் வருகை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அது அவன் உடலசைவுகளில் சங்கடத்தைக் கலந்தது. அவன் வியாசரை ‘வணங்குகிறேன் பிதாமகரே ‘ என்று தெண்டனிட்டான். ‘முழு ஆயுளுடன் இரு. புகழுடன் இரு. நிறை வாழ்வு உனக்கு அமையட்டும் ‘ என்று வாழ்த்தினார். சதயூபரை வணங்கிவிட்டுப் பின்வரிசையில் போய் அமர்ந்து கொண்டான்.
பாஞ்சாலி கண்ணீரைத் துடைத்துவிட்டு சிவந்த விழிகளுடன் விலகித் தலைகுனிந்து அமர்ந்தாள். அவள் தோள்கள் விம்மல் கொண்டு அசைந்தன.
தருமன் திரும்பிப்பார்த்து ‘தம்பி, தாத்தா பெருங்காவியம் ஒன்று எழுதியிருக்கிறார் ‘
‘ஓகோ ‘ என்றான் பீமன்.
‘குருஷேத்ர மகாயுத்தத்தை மையமாகக் கொண்டு குருவம்சத்தின் வரலாற்றையும் விருஷ்ணிகுலத்தின் வரலாற்றையும் விரிவாகச் சொல்கிற காவியம் இது ‘ என்றான் தருமன்.
சங்கடமான அமைதி நிலவியது. காட்டுக்குள் காற்று ஒன்று ஊடுருவும் ஒலி கேட்டது.
‘தந்தையே ‘ என்று கரடி தட்டிய குரலில் அழைத்தபடி முன்னால் சரிந்தான் திருதராஷ்டிரன். ‘எனக்குப் புரியவில்லை தந்தையே. என் மூடத்தனத்தை தாங்கள் மன்னிக்க வேண்டும். நான் கல்லாதவன். அகமும் இருண்டவன். இந்தப் பேரழிவின் கதையைத் தாங்கள் ஏன் எழுதவேண்டும் ? உங்கள் உதிரத்தில் பிறந்த குழந்தைகள் காமக்குரோதமோகங்களினால் சண்டையிட்டு அழிந்ததை எழுதுவதில் உங்களுக்கு என்ன பெருமை ? ‘
அத்தனைபேர் மனதிலும் எழுந்த வினா அது என்பதை முகங்களில் தெரிந்த தீவிரம் மூலம் பீமன் அறிந்தான்.
வியாசர் பெருமூச்சு விட்டார். ‘இந்தக் கேள்வியைத்தான் நான் என்னிடம் கடந்த பத்துவருஷங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. எங்கும் நிலைத்திருக்க முடியவில்லை. பாரத வர்ஷமெங்கும் அலைந்தேன். எங்கும் மக்கள் இந்தப் போரைப் பற்றியே பேசுவதைக் கண்டேன். சூதர்கள் பாடல் முழுக்க இப்போர் பரவி வளர்வதை அறிந்தேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் போர் மானுட குலத்தின் ஞாபகத்தில் என்றென்றும் இருக்கத்தான் போகிறது. ஏன் ? இந்தப் போர் ஒவ்வொரு மானுடர் மனத்திலும் நிகழும் போர் அல்லவா ?.. ‘ வியாசர் பெருமூச்சுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
பிறகு தொடர்ந்தார் ‘வட தண்டகாருண்யத்தில் நான் ஆதிகவி வான்மீகியைச் சந்தித்து பாதம் பணிந்தேன். ஒரு மண்டலம் அவருடன் இருந்தேன். முதிர்ந்து பழுத்து உதிரும் தருவாயில் இருந்தார் அவர். என் இம்சைகளைக் கூறாமலேயே அறிந்து கொண்டார் போலும். ஒரு சைத்ர பெளர்ணமி நாளில் முன்னிரவில் என்னைப் பின் தொடரும்படி ஆணையிட்டு நடந்தார். நிலவின் ஒளியில் தியானத்தில் விரிந்த ரிஷிமனம் போல வழிந்த கங்கையின் கரையை அடைந்தோம். பாறையொன்றில் அமர்ந்து என்னை அமரச்சொன்னார். ஒரு பெரும் தராசு பற்றிக் கூறினார். நீதியும் அநீதியும் கருணையும் கொடூரமும் அழகும் கோரமும் ஆக்கமும் அழிவும் என அதற்கு இரு தட்டுகள். தராசுமுள் எப்போதும் சஞ்சலம் கொண்டது. கங்கையை சுட்டிக்காட்டியபடி ஆதிகவி கூறினார் ‘மகாகாவியம் என்பது கங்கை போல. கங்கோத்ரியில் சிறு குடம் போன்ற ஊற்றிலிருந்து அது உற்பத்தியாகிறது. பல நூறு நதிகளும் ஓடைகளும் கலந்து பெரும் பிரவாகமாக மாறிக் கடலில் கலக்கிறது. முள் சமநிலை குலையும் ஒரு சலனத்தில் பிறக்கும் நதி அது. கடலைச் சேர்கையில்மீண்டும் முள் சமநிலை கொள்கிறது. ‘ என் மனம் ஒளிமயமாயிற்று. எழுந்து அவர் பாதங்களை வருடினேன். ‘உன் சொற்கள் ஒரு நாளும் அழியாமலிருக்கட்டும் ‘ என்று என்னை வாழ்த்தினார். தன் எழுத்தாணியை எனக்குத் தந்தார். கண்ணீருடன் அதைப் பெற்றுக்கொண்டேன். மறுநாள் அங்கிருந்து கிளம்பி உத்தரவனத்தை அடைந்து பர்ணசாலையொன்று எழுப்பினேன். இந்த பெருங்காவியத்தை இயற்ற ஆரம்பித்தேன். ஆறு வருடங்களில் இதை எழுதி முடித்தேன். என் வாழ்வின் நோக்கமே இது என்று தெளிவு அடைந்தேன். இது தர்மாதர்மப் போரின் முடிவில்லாத கதை ‘
வியாசர் சதயூபரைப் பார்த்தார். அவர் சுவடிகளைத் திரும்பக் கட்டுவதில் ஈடுபட்டிருந்தார். பறவைக்குரல்கள் உரக்க ஒலித்தன் என்று தோன்றியது.
வியாசர் தனக்குள் உலவத்தொடங்கி விட்டிருந்தார் போலும். குரல் மங்கியது. ‘நான் கங்கோத்ரியின் முதல் ஊற்று. பெயரில்லாத பல்லாயிரம் சூதர்கள் மழையின் துளிகள். இந்தக்காவியம் தன் பாதையை தானே கண்டடைந்தபடி முன்னகர்கிறது. அதை ஒரு சமயம் வியப்புடனும் மறுசமயம் எக்களிப்புடனும் மறுசமயம் செயலற்ற வெறுமையுடனும் நான் பார்த்து நின்றேன். கங்கை மீது காற்று பரவும் போது தோன்றும் ஒரு மகத்தான கரம் சுவடிமீது எழுதிச்செல்வதாக. புரியாத மொழியாலான எழுத்துக்களின் அலைவரிசைகள். மறுகணம் தோன்றும் காவியம் கங்கைபோல என்றும் மாறாத அர்த்தத்துடன் ஆழத்துடன் அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மீது காலத்தின் விரல்கள் புதுப்புதுக் கற்பனைகளைக் கணம்தோறும் எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆம் நீர்மேல் எழுத்து ‘ வியாசர் சகஜமடைந்தார். ‘ஆனால் நீர் அறியும் தன் மீது எழுதப்பட்ட அனைத்தையும் நீரின் பெருவெளி அறியும் சொற்களின் பெருவெளியை. கடல்… ஆம் என்ன விபரீதமான மனப்பயணம். பலசமயம் சொற்கள் தொலைந்து போகின்றன. சொற்களில்லாத கணத்தை நான் அஞ்சுகிறேன். நான் கவிஞன்… ‘
வியாசன் மீண்டும் தன் மெளனத்திற்குத் திரும்பினான். எங்கும் அவனது மன உத்வேகம் பரவியதுபோல அம்மெளனமும் பரவியது.
தருமன் அந்த மெளனத்தால் பாதிக்கப்படாதவன் போலத் தோன்றினான். ‘பிதாமகரே தங்கள் காவியத்தில் தர்ம அதர்மப் பாகுபாட்டுக்கு என்ன ஆதாரத்தைக் கொண்டுள்ளீர்கள் ? ‘ என்றான்.
வியாசர் சற்று எரிச்சல் அடைந்தவர்போல ‘மானுட அனுபவத்தைத்தான் ‘ என்றார்.
‘என்ன தர்மமும் அதர்மமும் ‘ என்று திடாரென்று திருதராஷ்டிரர் சீறினார். ‘வெல்பவன் தர்மவான். தோற்பவன் அதர்மி. இதுதான் உலகநீதி. இதுமட்டும்தான். வேண்டாம். பசப்பாதீர்கள் தந்தையே. தாங்கள் இந்தக்காவியத்தை ஏன் எழுதினீர்கள் என்று அறியாத மூடனல்ல நான் ‘
‘ஏன் ? ‘ என்றார் சதயூபர் கோபத்துடன்.
‘வேறு எதற்கு ? உங்கள் பேரர்கள் மீது வந்த பெரும்பழியைத் துடைக்க. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் தந்தையே இது பாண்டவர் புகழ்பாடும் பரணி அல்லவா ? அவர்கள் செயல்களையெல்லாம் தர்மத்தை நிலைநாட்டும் முயற்சிகளாகத்தானே நீங்கள் சித்தரித்துள்ளீர்கள் ? வெற்றியின் பொருட்டு அவர்கள் செய்த அதர்மங்களைப் போர்தந்திரங்களாக சித்தரித்திருக்கிறீர்கள் தானெ ? ‘
‘குழந்தை ‘
‘போதும். தருக்கங்களைக் கேட்டு என் காது புளித்துவிட்டது. தர்மங்களும் நியாயங்கலும். என் குழந்தை தொடை உடைபட்டு ரத்தம் வடிய தரைமீது கிடந்தான். அவன் தலைமீது எட்டி உதைத்து… மணிமுடி சூடிய அவன் தலைமீது… ‘
— முடிவு அடுத்த வாரம்
- நதிக்கரையில்
- கணினிக்கட்டுரைகள் 13 – இணையத்தில் இயங்குபக்கங்களை(Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Progra
- Rest in Peace
- நிழல்களில் வாழுகின்றோம்
- நான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல
- இந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடாத கரம்:
- மார்க்ஸீயம், முதலாளித்துவம் இந்தியாவின் எதிர்காலம் (1941)
- பிரம்மாண்டம்
- தமிழும் மென்கலனும் – ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது-8