இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

வஹ்ஹாபி


சரக்கில் இல்லாவிட்டாலும் தலைப்பிலாவது இருக்கட்டும் என்ற நோக்கில், “ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி” என்ற கவர்ச்சிகரத் தலைப்போடு வெ.சா திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி – 1].

அதில் அவர் புதிதாக எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகள்:

1. //போதையில் ஒருத்தன் தலாக் சொல்லி, மறு நாள் காலையில் தன் தவறை உணர்ந்தாலும் தலாக் சொன்னது சொன்னது தான் என்று ஷரியத் சட்ட கட்டளை இடும் முல்லா செய்தது காட்டுமிராண்டித்தனம் என்று ஒரு முஸ்லீம் கூட சொல்லவில்லை. எந்த கொடூரத்தையும் நியாயப் படுத்த முல்லா, இஸ்லாம், ஷரியத் குரான் என்று சொன்னால் போதும் இவர்கள் எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் வாய் அடைக்கப்பட்டு விடுகிறார்கள்//

2. //வீட்டில் தனியாக இருக்கும் மருமகளை மாமனார் கெடுத்து வருகிறான். இது ஒரு முல்லாவிடம் தீர்ப்புக்குப் போக, அந்த முல்லா தீர்ப்பு அளிக்கிறான்: மருமகள் தான் தவறு இழைத்தவள். அவள் தன் மாமனாருடன் இணைந்து விட்டதால் இனி அவள் புருஷனோடு வாழக்கூடாது. மாமனாருடன் தான் வாழவேண்டும். இனி அவள் புருஷனுக்கு தாயாகிவிட்டவள். தன் தகப்பனிடமிருந்து விலகி, தன் மனைவியை அழைத்துக்கொண்டு தனியாகப் போக விரும்பிய கணவன் தடுக்கப்பட்டான். அவன் மனைவி, முல்லாவின் தீர்ப்புப் படி, அவனது தாய்க்குச் சமானமானவள். இந்த மூர்க்கனான முல்லா தான் அந்த ஊர் முஸ்லீம்களுக்கு எல்லா வழக்குகளுக்குமான முடிவான தீர்ப்பு தருபவன். இதைப் பற்றியெல்லாம் நம்மூர் வஹாபிகள் வாய் திறக்கமாட்டார்கள்//

3. //ஜைத் என்ற அடிமைப் பெண், முகம்மது நபிக்கு அவருடைய முதல் மனைவி கதீஜா திருமணப் பரிசாகத் தரப்பட்டவள். திருமணப் பரிசாக ஒரு அடிமைப் பெண்!. சரிதானா? ஹரியானாவில், இப்போது எப்படியோ தெரியாது, என் நண்பன் ஒரு நல்ல எருமை மாட்டை ஓட்டி வந்தான், ஹிராகுட்டுக்கு. “என் மாமனார் கொடுத்தது, வரதட்சிணையில் இதுவும் சேர்ந்தது” என்றான்//

4. //விஷ்ணு சகஸ்ரநாமம், ஹனுமான் சாலீஸா, நீங்களோ உங்கள் நண்பரோ படித்திருக்கிறீர்களா? இல்லை. சரி. ஏன். இரண்டு ருபாய்க்கு இதெல்லாம் கடையில் கிடைத்திருக்குமே, ஏன் படிக்கவில்லை?//

-o-

தன் அறிவுக்கு/பார்வைக்கு எட்டாதவற்றை இந்த உலகத்திலேயே இல்லாதவை என்று முடிவுக்கு வருகின்ற அதிமேதாவித்தனத்துக்கு பதில் சொல்வதற்கு முன்னர், ‘வலக்கரம் சொந்தமானவர்கள் – பிறரின் பொறுப்பின்கீழ் உள்ளவர்கள் – அடிமைகள்’ ஆகிய பேசுபொருளை விடுத்து, போதை தலாக், இம்ரானா வழக்கு, விஷ்ணு சகஸ்ரநாமம் என்பதாக வெற்றெனத் தொடுத்து, வெ.சா. மற்றொன்று விரித்திருக்கிறார் என்பதை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

மேலும் மார்க்கத்தை விளங்காமல் செயல்படும் பாமர முஸ்லிம்களோ ஆதார அடைப்படைகள் இல்லாமல் தீர்ப்புகள் கொடுக்கும் முட்டாள் முல்லாக்களோ இஸ்லாத்தின் அத்தாரிட்டிகள் அல்லர் என்பதை அழுத்தமாக இங்குப் பதிவு செய்கிறேன்.

மலேஷிய ரவிச்சந்திரனும் கேரளத்து ஷீலாவும் தங்கள் மதத்தடையை மீறி, முஸ்லிம்கள் ‘ஆகி’ விடுவதற்கு உடந்தையாக இருந்து, அதற்குக் கூலியாக சில நூறு ரூபாய் பெற்றுக் கொண்டு அவர்களை முஸ்லிம்கள் ‘ஆக்கும்’ கையூட்டு முல்லாக்களுக்கு வருமானம் வந்ததுதான் பயனேயன்றி இஸ்லாத்தின் பார்வையில் அவ்விருவரும் முஸ்லிம்கள் அல்லர் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

“எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை, எண்ணங்கள் (என்ற இலட்சியம்) ஆகும். தம் எண்ணப்படியே ஒவ்வொருவரும் இலக்கை அடைகின்றனர். அல்லாஹ்வுக்காகவும் அவனின் தூதருக்காவும் நாடு துறந்து புலம்பெயர எண்ணம் கொண்டவர்தாம் அவ்விருவருக்காகவும் நாட்டைத் துறந்தவராவார். ஒரு பெண்ணுக்காகப் புலம் பெயர்ந்தவர் அப்பெண்ணை மணந்து கொள்வார். உலகாதயத்துக்காகப் புலம் பெயர்ந்தவர் உலகாதாயத்தைப் பெற்றுக் கொள்வார். (இஸ்லாமிய நாடு துறத்தல் எனும் ஹிஜ்ரத்தில் இவர்களுக்குப் பங்கேதுமில்லை)” என்பது நபிமொழி.

(1) போதைத் தலாக்:

“… போதைப் பொருள் அனைத்தும் ஹராம் என்று இஸ்லாம் தடுத்திருத்திக்க போதைக்கு அடிமையாகிய முஹம்மது அக்தரை செருப்பால் அடித்து அதே கையோடு ‘இம்மானுல் ஹக் கான்’ என்ற அடி முட்டாள் மத புரோகிதரையும் நாலு சாத்து சாத்த வேண்டும். இஸ்லாத்தை விளங்காத இந்தப் புரோகிதர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு இழுக்கு” முழுதும் படிக்க [சுட்டி – 2].

“ஃபத்வா என்று சொல்லப் படும் இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்புக்கு தலையாய ஒரு நிபந்தனையுண்டு. ஒரு ஃபத்வா வெளியிடப் படுமானால் அதன் அடிப்படை, இறைமறை குர்ஆன் வசனங்களிலிருந்து/இறைத் தூதரின் வழிமுறையிலிருந்து அமைந்திருக்க வேண்டும். இல்லையேல் அந்த ஃபத்வா செல்லாது.

அப்படிப் பட்ட செல்லாத ஃபத்வாக்கள்தாம் போலி முல்லாக்களால் வாங்க-விற்கப் படுகின்றன.

இப்படி நடக்கக் கூடிய ‘வியாபார’த்திற்கு அவர்கள் கூறும் காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வது, ‘வியாபாரி’களின் ‘திறமை’யைப் புரிந்து கொள்ள ஏதுவாகும்.

மேற்காணும் செல்லாத ஃபத்வாவின் அடிப்படை இறைமறையோ தூதரின் வழிமுறையோயன்று; மாறாக, ஒரு மனிதரின் மனத்தில் உதித்த ஓர் உவமை மட்டுமே!

அதாவது, தலாக் என்பது கொடிய விஷத்துக்கு ஒப்பானதாம். என்வே, “போதையில் குடித்தாலும் தூக்கத்தில் (?) குடித்தாலும் கொடிய விஷம் உயிரைப் போக்கி விடுமன்றோ? அது போலவே, போதையிலோ தூக்கத்திலோ தலாக் கொடுத்தால் செல்லுபடியாகும்” என்பதுதான் வியாபாரிகளின் வாதம்!

சரி, அடிப்படைக்கு வருவோம்.

இறைத்தூதரின் கவித்துவமான தீர்ப்பைப் பாருங்கள்:

“லா தலாக், வலா இதாக் ஃபீ கலாக் (Ghalaq)” தமிழில்: “மணவிலக்கு என்பதோ விடுதலை என்பதோ மனம் மூடிக் கொள்ளும் வேளையிலன்று” [இமாம் அபூ தாவூத் அவர்களின் 1874ஆவது பதிவு].

Ghalaq என்ற அரபுச் சொல்லை அடங்காச் சினம், போதை போன்ற ‘தன் வசமிழத்தல்’ அல்லது ‘தன்னிலை மறத்தல்’ என்று தமிழ்ப் படுத்தலாம்.

“… (பிற்காலத்தில்) மடையர்கள் மக்களுக்குத் தலைவர்களாவர். (மார்க்கத்தின் அடிப்படை) அறிவின்றி தம் மனம்போன போக்கில் தீர்ப்பு வழங்கி, தாமும் வழிகெட்டு மக்களையும் வழி கெடுப்பர்” என்பது அண்ணலாரின் எச்சரிக்கை [இமாம் புகாரீ அவர்களின் 6763ஆவது மற்றும் இமாம் முஸ்லிம் அவர்களின் 4829ஆவது பதிவுகள்].

இது பாஸ்டன் பாலாவின் கட்டுரைக்கு வஹ்ஹாபியின் 29.04.2006 தேதியிட்ட பின்னூட்டமாகும். முழுதும் படிக்க [சுட்டி – 3].

“இனிமேல் இஸ்லாமிய ஆண்கள் சுலபமாக மூன்று முறை தலாக் சொல்லி தன் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது. அனைந்திந்திய முஸ்லிம் மகளிர் சட்ட வாரியம் புதியதாக நிக்காஹ்நாமா (விவாக/விவாகரத்து வாக்குமூலம்) ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி இனி ஆத்திரத்தினாலோ, குடிபோதை அல்லது அரை தூக்கத்திலோ, தொலைபேசி, இணையம் அல்லது SMS மூலமோ யாரும் தன் மனைவியை விவாகரத்து செய்யமுடியாது” முழுதும் படிக்க [சுட்டி – 4].

திண்ணையில் நான் எழுதிய “பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்” என்ற கட்டுரையின் கடைசி வரிகள்: “முல்லாக்களின் சினவயப்பட்ட சுய முடிவுகளை, இஸ்லாமிய ஃபத்வாக்களாக யாரும் கருதிவிட வேண்டாம் என்பதை வாசகர்களுக்கும் பரபரப்புக்காக ஃபத்வா என்ற சொல்லைப் பயன் படுத்த வேண்டாம் என்பதை எழுத்தாளர்களுக்கும் இங்கு வேண்டுகோள்களாக முன் வைத்து முடிக்கிறேன்” முழுதும் படிக்க [சுட்டி – 5].

தன் நினைவோடு, “தலாக், தலாக், தலாக்” என்று சொன்னாலும் விவாக ரத்து ஏற்படாது என்பது இஸ்லாத்தின் சான்றாதரங்களின்படி நிரூபிக்கப் பட்டதாகும்.

“முதல் இரண்டு தடவைகள் கூறும் தலாக் பற்றி 2:228, 229 ஆகிய வசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும். இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது. அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்” முழுதும் படிக்க [சுட்டி – 6].

மேற்கண்ட சுட்டிகளெல்லாம் முஸ்லிம்கள் ‘வாய் திறந்த’வற்றுள் மிகச்சில. இவையெல்லாம் வெ.சாவுக்குத் தெரியாதது பெரிய குற்றமெல்லாமில்லை. ஆனால், “முஸ்லிம்கள் எவரும் வாய் திறப்பதில்லை” என்று அறுதியிட்டு எழுதியதுதான் குற்றம்.

(2) இம்ரானா:

“… ஊடகங்களால் கை, கால் வைத்து ஊதி பெரிதாக்கப்பட்டதால் சினிமா படமாகப்போகும் நிலைக்கு தற்போது வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜாபர்பூர் நகர் அருகில் உள்ள சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த நூர் இலாஹியின் மனைவி இம்ரானா (வயது 28) கடந்த ஜுன் மாதம் (2005) அவரது சொந்த மாமனார் அலி முஹம்மது என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதே வழக்கு.

தனது கணவர் ஊரில் இல்லாத இரவில் மாமனார் தன் கைகளால் வாயை பொத்தியும் இம்ரானாவின் கைகளை கட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக இம்ரானாவின் தரப்பு குற்றச்சாட்டு.

ஆரம்பத்தில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டை மாமனார் முஹம்மது அலியும் அவரின் உறவினர்களும் மறுத்துவிடுகின்றனர். இச்செய்தி அவ்வூரில் பரவுகிறது. நூர் இலாஹியின் உறவினர்களான ஜமீல் மற்றும் ஷா-தீன் ஆகிய இருவரும் அவ்வூரின் மதரசா மவ்லவி முஹம்மது ஷமீம் என்பவரிடம் சாதாரணமாக இவ்விசயத்தை சொல்கிறார்கள். இவர் ஃபத்வா கொடுப்பவரோ அல்லது ஃபத்வா கொடுப்பதற்கு தேவையான விஷய ஞானம் உள்ளவரோ அல்ல. ஷரியத் சட்டம் எதையும் பார்க்காமல் அந்த கணவன் மனைவி பந்தம் ரத்து ஆகிவிடும் என்றும் கற்பழித்தவரே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எந்த ஒரு ஆதாரத்தையும் முன் வைக்காமல் ஒரு முட்டாள்தனமான கருத்தை சொல்கிறார். இதனைத்தான் ஊடகங்கள் ‘லோக்கல் ஷரியத் கோர்ட்’ என்று வெளியிட்டது” முழுதும் படிக்க [சுட்டி – 7].

“… சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவம் இம்ரானா விவகாரம். உத்தர பிரதேசம் முஸாபர் நகரைச் சார்ந்த இம்ரானா என்ற பெண்ணை அவரது மாமனார் கற்பழித்தார். இதற்கு மார்க்கத் தீர்ப்பு என்ன? என்ற கேள்வி எழுந்த போது தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸா திருக்குர்ஆன், நபிவழியை அடிப்படையாகக் கொள்ளாமல் மத்ஹபு நூல்களை அடிப் படையாகக் கொண்டு அளித்த தீர்ப்பால், ஒரு பாவமும் செய்யாத சகோதரி இம்ரானா தனது கணவனை இழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டது. இதற்கு இஸ்லாம் காரணமல்ல” முழுதும் படிக்க [சுட்டி – 7] http://anas.whipie.com/kolkaivilakam.html

“இனி மாமனாருக்கே இம்ரானா மனைவியாக இருப்பார்; கணவனை மகனாக அவர் பாவிக்க வேண்டும்” என்று கிராமப் பஞ்சாயத்தார் அறிவித்ததுதான் பெரிய கொடுமை. மார்க்கத்தின் பெயரால் இப்படியெல்லாம் தீர்ப்புக்கூற யார் இவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை” முழுதும் படிக்க [சுட்டி – 8].

“Property Dispute”

According to IOL correspondent, the issue reportedly started on the morning of June 3—a month ago—when a 28-year-old illiterate Muslim woman, called Imrana, living in the north Indian district of Muzaffarnagar claimed that her father-in-law (Ali Mohammad) had “raped” her at night. Imrana, mother of five, claimed that he fled when she “screamed”.

Enquiries by this correspondent show that no one in the tiny house or her immediate neighbors heard any “scream” at night. This was strange as it is summer time when all people living in the tiny interconnected houses sleep on the terrace or in open courtyards inside their homes.

What adds a new dimension to the case is that this allegation was made in the midst of an on-going dispute in the family about selling the ancestral property. The father-in-law wanted to sell the house while the son, Noor Ilahi, and his wife Imrana—the heroine of the infamous story—opposed the move as they had nowhere to go.

A team of the All India Muslim Personal Law Board, which visited the concerned village and met the alleged victim, her relatives and village people Saturday, July 2, came back with the impression that no rape had taken place and that it was a case of property dispute, says IOL correspondent” முழுதும் படிக்க [சுட்டி – 9].

(3) ஜைத் என்ற அடிமைப் பெண்:

ஜைத் என்பவர் ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமலிருப்பது பெரிய குற்றமெல்லாமில்லை. நான் எழுதியதற்கு பதில் சொல்ல வந்த வெ.சா. நான் எழுதியதை அரைகுறையாகப் படித்து பதில் சொல்ல முன்வந்ததுதான் பரிதாபத்திற்குரியது!

“இவை எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாக, இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது முஹம்மது அவர்கள் நபியாக ஆவதற்கு முன்னர், தமக்குத் தம் துணைவி கதீஜா (ரலி) திருமணப் பரிசாக அளித்த ஜைத் என்ற அடிமையை உடனடியாக விடுதலை செய்து, உலகம் முழுதும் அப்போது வழக்கிலிருந்த அடிமை முறையின் சவப் பெட்டிக்கு முதல் ஆணியை அடித்தார். முஹம்மதின் மகன் என்றே மக்கா வாழ் அரபியர்கள் குறிக்கும் அளவுக்கு ஜைத் நபிகளாரிடம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார் ” என்று திண்ணையில் தெளிவாகத்தானே எழுதியிருந்தேன்? [சுட்டி – 10].

(4) விஷ்ணு சகஸ்ரநாமம்:

பேசவேண்டிய கரு எங்கு இருந்தாலும் அதை அரைகுறையாகவன்றி, முழுதும் படித்து எழுதுவதே எனது வழக்கமாகும். விஷ்ணு சகஸ்ரநாமம் நான் படித்ததில்லை என்பது வெ.சாவுக்கு எப்படி உறுதியாகத் தெரியும்? அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உயிர்விடுகின்ற தருணத்தில் பீஷ்மர் செய்த ஸ்பெஷல் பிரார்த்தனை என்று சொல்லப் படுவது விஷ்ணு சகஸ்ரநாமம் என்பதுவரை தெரியும். பிற சுலோகங்கள் சிலவும் மனப்பாடமாகத் தெரியும். அவை இங்குப் பேசுபொருளல்ல.

உருதுக் கவிதை, ஸூஃபி இசை, ஷேக் சின்ன மவ்லா கச்சேரி என ‘மற்றொன்று விரிப்பது’ நல்ல பழக்கமல்ல என்று முன்னர் குறித்திருந்தேன். அதையும் புரிந்து கொள்ளாமல் கருப்பொருளை விட்டுத் தாவித்தாவி போய்கொண்டிருக்கிறார் – உள்ளடக்கத்துக்கு ஒரு தொடர்புமின்றித் தலைப்பு கொடுத்திருக்கும் – வெ.சா. இந்த எதிர்வினைக்குப் பொருத்தமாக, “முற்றாக வேக வைக்கும் முயற்சியில்” என்றும் நான் தகுதியான தலைப்பு வைக்கலாம். ஆனால் அது, எதிர்வினையாற்ற எனக்கு வாய்ப்பளித்தவரை “அரைவேக்காடு” என்று எள்ளுவதாக அமைந்து விடும். அது வேண்டாம். ஆகவே … “இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்”

வெற்றெனத் தொடுத்து, மற்றொன்று விரிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ள வெ.சாவை ‘இலக்கிய விமரிசகர்’ என்று யாரோ பரிவட்டம் கட்டியதாக நினைவு.

பாவம், பரிவட்டம் கட்டியவர்!
ஃஃஃ

to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com

சுட்டிகள்:
1 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20907023&edition_id=20090702&format=html
2 – http://muslimpage.blogspot.com/2006_12_01_archive.html
3 – http://www.tamiloviam.com/unicode/04200610.asp
4 – http://uraiyurkaran.blogspot.com/2008/03/blog-post.html
5 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html
6 – http://abumuhai.blogspot.com/2005/05/1.html
7 – http://www.nouralislam.org/tamil/islamkalvi/general/imrana_alleged_rape_issue.htm
8 – http://athusari.blogspot.com/2005/07/blog-post_06.html
9 – http://www.islamonline.net/English/News/2005-07/04/article04.shtml
10-http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906114&format=html

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி

இன்னும் கொஞ்சம் … நட்புடன்!

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

வஹ்ஹாபி



வெ.சாவுக்கான வலக்கர விளக்கம் என்ற எனது கட்டுரைக்குப் பின்னர், தாம் குறிப்பிட்ட, “023:006 இறைவசனத்தில் பெண்களை ஏலம் போடுவது இல்லைதான்” என்று வெ.சா ஒப்புக் கொண்டிருக்கிறார் [சுட்டி-1]. அவருக்கு நன்றி!
“குர்ஆன் என்ன எங்கும் கிடைக்காத ஒன்றா? யாருக்கு தைரியமிருக்கு என்று தொடை தட்டுவதற்கு முன் ’23:6′ என்று இண்டெர்நெட்டில் ஒரு தட்டுத் தட்டியிருந்தா கிடைத்திருக்குமே” என்று திண்ணை வாசகனான என் நண்பன் என்னைக் கேட்டான்.
“அப்படிச் சொல்லாதே! பிழைய ஒப்புக் கொள்வதற்குப் பெருந்தன்மை வேண்டும். அது வெ.சாவிடம் இருக்கிறது. அதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்” என்று நண்பனின் வாயை அடைத்து விட்டாலும் அடிமைச் சந்தையை இஸ்லாம் ஆரம்பித்து வைத்ததைப்போல் //ஆனால் இதில் தேர்வு, ஈட்டுத் தொகை என்றெல்லாம் பேசப்படும் இடத்தில், 7-நூற்றாண்டு அரேபியாவில் இன்றைய ஏலத்தின் ஆரம்பங்களைத் தானே பார்க்கிறோம்?// வெ.சா எழுதியிருப்பதைப் படித்ததில் என் நண்பனுக்கு நான் கூறியதில் எனக்கே ஐயம் ஏற்பட்டு விட்டது.
ஏனெனில்,
//முகம்மது நபி, ஸ•பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளைப் பார்த்ததும், தோழர் சரியாகத்தான் சொல்கிறார் என்று தெரிந்து ஸ•பியாவை தனக்கு என வைத்துக் கொள்கிறார். திஹ்யாவின் ஏமாற்றத்தைத் தவிர்க்க, திஹ்யாவைப் பார்த்து கருணை கூர்ந்து “உனக்குப் பிடித்த வேறொரு பெண்ணை எடுத்துக்கொள்” என்று சொல்கிறார். (புடவைக் கடையில் “இந்தக் கலர் எனக்கு இருக்கட்டும், அதை வேணா நீ எடுத்துக்கோ” ங்கற மாதிரி)//
என்று வெ.சா. குறிப்பிடுவதில், யூதமதத் தலைவனின் மகளைத் திருமண உறவில் இணைப்பதை, இரு சாராரிடையே இணக்கம் வளரும் வாய்ப்பாக எம் தலைவர் முஹம்மது (ஸல்) கருதியது மறைக்கப் பட்டிருப்பதோடு வேறு உள்நோக்கமான திசைதிருப்பலும் நடந்திருக்கிறது. கைபர் போர் முடிந்தவுடன், “பெண் கைதிகள் எல்லாரையும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்துங்கள்; எனக்குப் பிடித்த புடவையை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்று வெ.சா. குறிப்பிடுவதைப்போல் ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் அந்த அரசாணைக்கு மறுப்பேதும் இருந்திருக்குமா? அப்படி ஏதும் நடக்கவில்லையே?
கைபர் போரின் போது அண்ணலாரின் வயது 60. அன்னை ஸஃபிய்யா ஏற்கனவே இருமுறை திருமணமானவர். கைபர் போருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் எம் தலைவரின் ஆட்சியின் கீழ் மதீனாவில் வசித்து வந்தவர். நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி அன்னை ஸஃபிய்யா கூறுகிறார்:
She said, (may Allah be pleased with her): “I was my father’s favorite and also a favorite with my uncle Yasir. They could never see me with one of their children without picking me up. When the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) came to Medina, my father and my uncle went to see him. It was very early in the morning and between dawn and sunrise. They did not return until the sun was setting. They came back worn out and depressed, walking with slow, heavy steps. I smiled to them as I always did, but neither of them took any notice of me because they were so miserable. I head Abu Yasir ask my father, ‘Is it him?’ ‘Yes, it is.’ ‘Can you recognize him? Can you verify it?’ ‘Yes, I can recognize him too well.’ ‘What do you feel towards him?’ ‘Enmity, enmity as long as I live.’
The significance of this conversation is evident when we recall that in the Torah of the Jews, it was written that a Prophet would come who would lead those who followed him to victory (இபுனு கஸீர்).
நமது பேசுபொருளான ‘வலக்கரம்’ குறித்து வெ.சா. எழுதியிருப்பதற்கான ‘இன்னும் கொஞ்சம்’ மட்டுமே மேற்காண்பவை. இவை தவிர, குர்ஆனைப் பற்றி அவர் எழுதியிருப்பதிலிருந்து அதுகுறித்து அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதை அவரே பெருந்தன்மை மாறாமல் ஒப்புக் கொள்கிறார்.
மற்றபடி, உருதுக் கவிதை, ஸூஃபி இசை, ஷேக் சின்ன மவ்லா கச்சேரி ஆகியவற்றுக்கும் நமது பேசுபொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று எண்ணுகிறேன்.
***
இந்தவாரக் கொசுறுகள்:
“வலக்கரம் உரிமையுடைய என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை, பொறுப்பிலுள்ள என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம்” என்று எனது கட்டுரையில் குறிப்பிட்டதை மறுப்பதற்காக வேண்டி, “வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?” [சுட்டி-2] எனக் கேட்டு மலர் மன்னன் சென்ற வாரம் திண்ணையில் எழுதி இருக்கிறார்.
என் மனைவியின் உரிமையாளன் நான். அவருக்குத் தேவைப் படும் அத்தனையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இந்த எளிய கருவைப் புரிய முடியாமல் மலர் மன்னன் என்னென்னவோ எழுதி நிரப்பி இருப்பதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது!
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற நம் முன்னோரின் வாக்கு உண்மைதான். அதற்காக முழங்காலைச் சுற்றி மூக்கைத் தொட முயல்வது அறிவுடமையா எனத் தெரியவில்லை.
எனது வலக்கர விளக்கம் சிரிப்பை வரவழைத்தாக நரேன் என்பவர் [சுட்டி-3] குறிப்பிட்டிருக்கிறார்.
சிரிப்பது உடம்புக்கு நல்லதுதானே!
இப்படித்தான், தெளிந்த தமிழ் என்று நம்பிக் கொண்டு ‘குழந்தைப் பிறப்பை’ப் பற்றித் திண்ணையில் முன்னர் நான் எழுதியபோது, புரியாத மொழியில் நான் ஏதோ எழுதியிருந்ததாகவும் அது தன்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்ததாகவும் ஒருவர் எதிர்வினை செய்தார்.
“புரியாமலே எப்படிச் சிரிச்சீங்க?” என்று அடுத்த வாரம் கேட்டு வைத்தேன்.
அதற்குப் பிறகு அவர் சிரித்ததாகத் தெரியவில்லை.
நன்றி!
ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com

சுட்டிகள்:
1 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906182&format=html
2 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80906181&format=html
3 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80906182&format=html

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி