நீங்கதான் சாவி..:-

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

தேனம்மை லஷ்மணன்


******************************

சுரேகாவை ஒரு வலைப்பதிவராக அறிவேன்.. அவர் எழுதிய சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இது.. வெளியீ்டு நாகரத்னா பதிப்பகம்.. விலை ரூ 50.

அட்டைப் படத்திலேயே மனிதனைச் சாவியாக., பிரச்சனைகளின் திறவுகோலாக சித்தரித்திருப்பது அருமை..

அறிவுரை சொல்பவர் அப்படியே இருப்பார்.. கேட்பவர்கள் வளர்ந்து விடுவார்கள்.. அப்படி இல்லாமல் அந்த அறிவுரைப்படி நாமும் இருக்க வேண்டும் என நினைத்ததனால் ஜேசிஐ ( JUNIOR CHAMBER INTERNATIONAL) மூலம் கற்றுக் கொடுத்து தன்னையும் சரி செய்து கொள்ள முடிந்ததாக தன்னுரையில் சொல்லி இருக்கிறார் சுரேகா.

இவர் ஒரு தன்னம்பிக்கை பயிற்சியாளர்..

சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பெற்றோருக்கும்., தன் குறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்ட மனைவி குழந்தைகளுக்கும் நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்..

இனி விமர்சனம்..

மொத்தம் 18 தலைப்புக்கள் ..

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் அதை ஒட்டிய சினிமா சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் இணைப்பா கொடுத்திருக்கிறார்..

மொக்கச்சாமி என்ற காரெக்டர் மூலமா நாம பண்ற தவறுகளையும் சுட்டிக் காண்பிக்கிறார்..

”பென்சில் வாழ்க்கை”யில் நாம நம்மை கூர் தீட்டிக்கொண்டே இருந்தால்தான் ஜொலிக்க முடியும். பென்சில் மாதிரி நம் தப்பை அழித்து எழுதவும் தயாரா இருக்கணும்னு சரியான காரணங்களோட சொல்றார்..

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சொல்வராம் .. சிறிய ”லட்சியம்” ஒரு குற்றம்னு.. அதுனால பெரிய லட்சியங்களை கைக்கொள்ளுங்கள்.. தேடிச் சோறு நிதம் தின்று வீணாக்காமல் என்கிறார்..

” கால நிர்வாகம்” இதில் நேரத்தை நிர்வகிக்கும் கலையைத் தெரிஞ்சுக்கணும்., நேரத்தை வீணடிப்பது தெரிந்தே ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குப்பைத்தொட்டியிலிடுவதற்குச் சமம்..

”பொருள் ஒழுங்கு” இதில் ஜப்பானிய தொழில் நேர்த்தியை குறிப்பிடுகிறார்.. 5S என்பது அதன் பெயர்.. செய்ரி., செய்ட்டன்., செய்சோ., செய்கெட்ஸு., மற்றும் சிட்சுகெ..எல்லாவற்றையும் புரியும்படி அடுக்கி வைத்து பழைய குப்பைகளை அகற்றுதல்தான் அது..

ஒற்றை நொடி வாழ்க்கையில் செய்யும் வேலைகளை அனுபவித்து அந்த நொடியில் வாழுங்கள்.. தொலையாமல் பேசுவோம் என்ற தலைப்பில் நாம் பேசும்போது போனை நோண்டிக் கொண்டிருக்கும் நபர்களையும் போனிலேயே வாழ்பவர்களையும் பற்றியும் நல்ல சாடல்..

எந்த வேலையையும் தள்ளிப் போடவே கூடாது.. சரியான திட்டமிடல் முக்கியம்..

வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் ஒரு சென்சார் போர்டு வச்சு வெளியிடுங்க..வார்த்தைகளை கவனமா கையாண்டா நாமதான் தகவல் தொடர்பு குரு..யாரையும் புறம் கூ்றாதீங்க..

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியை அண்டவே விடக்கூடாது.. ஏனெனில் அதனால் நம்மை வெறியூட்ட நினைப்பவர்களுக்கு நாமே வழி செய்ததாகிவிடும்.
இதைப் படிக்கும்போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்னது ஞாபகம் வந்தது.. .,” நீ எந்த விஷயம் நடக்கக் கூடாது என்று கோபப்படுகிறயோ அந்த விஷயம் நீ கோபப்பட்ட ஒரே காரணத்துக்காக நிகழ்ந்து விடும் “ என்று.. எனவே பாலகுமாரன் சொல்வது போலும் கோபத்தை பொறுமையில் ஊறப் போடுங்கள்.. ” பிழை பொறுங்கள்..

எது நம் திறமை.. என்று கண்டுபிடித்து அதில் செயலூக்கம் காட்ட வேண்டும்..எந்திரன் மாதிரி நம்ம கிட்ட திறமைகள் கொட்டிக் கிடக்கும். அதை அடையாளம் கண்டு சொல்லக் கூடிய நல்ல நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக்கணும்..

சேர்ந்து வாழ்தல் பற்றியும் .. (ஆணோ., பெண்ணோ., யாரும் யாருக்கும் உடைமை இல்லைன்னு நினைச்சுட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்திரும்.. )ஆண்டாண்டு காலமா சொல்லப்பட்டு வரும் கற்பு என்பதன் அர்த்தத்தையும் காமத்தை துரோகமா பார்க்கப்படுறது குறித்தும் சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கார்..

எதுவும் அளவோட இருக்கணும் அது சுய மதிப்பீடுன்னு சொல்லப்படுற ஈகோவா இருந்தாலும்.. இல்லாட்டி அதிகம் ஊதப்பட்ட பலூனாய் வெடிச்சிரும்..

ஒப்பீடும் எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்வு அருமையா இருக்கும். நம்ம தனித்துவத்தோட நாம வாழணும்..

நம்மோட சூழல் பற்றி அறிந்து வாழணும்.. வீடு., நிறுவனம்., அலுவலகம்., கல்லூரி இது பற்றி எல்லாம் விவரங்கள் தெரிஞ்சு வைச்சுக்கணும்..

எதிரிகள் யார் போட்டியாளர்கள் யார்னு தெளிவு இருக்கணும்.. அற்ப விஷயங்களுக்காகவெல்லாம் எல்லாரையும் எதிரியா கருதக் கூடாது.. அதை விட்டுட்டு நம்ம முயற்சிக்காக சக்தி முழுவதையும் செலவளித்து ஜெயித்து வாழ்ந்து காட்டணும்..

அநீதி நடந்தால் தட்டிக் கேளுங்கள்..தவறுகளுக்கு எதிராக குரல் கொடுங்கள்..தவறுகளைத் தட்டிக் கேக்கும் போது தன்னம்பிக்கை வளர்கிறது..

எந்த ஒரு பிரச்சனைன்னாலும் தீர்வைப் பாருங்க.. அநேக பிரச்சனைக்கு காரணம் நாமளாவே இருப்போம்.. உலகமே மோசம்னு நினைக்காம.. நாம அதை எப்பிடி நமக்கு சாதகமா திருப்பிக்கலாம்னு முயற்சி பண்ணனும்.. அந்த மந்திரச் சாவி நம் கையில் இருந்தால் உலகமே நம்வசம்தான்..ஏன்னா நம்ம வாழ்க்கைப் பூட்டுக்கு சாவி நாமதான்..

இந்த புத்தகம் முழுவதும் நான் மிகவும் ரசித்தது தன்னம்பிக்கை., தன்னம்பிக்கை., தன்னம்பிக்கை மட்டு்மே.. தமிழில் எண்ணம் போல் வாழ்வு என்று சொல்வார்கள்.. அது போல் தன்னை முன்னேற்றிக் கொள்ள தானாய்த்தான் முனைய வேண்டும்..

நம் வாழ்வெனும் பூட்டுக்கான அணுகுமுறை என்ற சாவி நம் கையில்.. எல்லாருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் இந்த செய்தியை அழுத்தமாகப் பதிந்திருக்கும் சுரேகாவுக்கு வாழ்த்துக்கள்..

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்