யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

கே ஆர் மணி



இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நாவ்ல் புனைவுலகமான விஸ்ணுபுரம் போல, முழுக்க முழுக்க புனைவுலகம் தவிர்த்து, நிகழுலுக சாயல் கலந்த கற்பனை உலகத்தை தான் யுவனின் நாவல் எழுத்துக்கள் செதுக்க முயல்கின்றன. வாசகனை அவதியுற செய்யாது, தத்துவம், ஆன்மீகம் மற்றும் சம கால வரலாறு கொண்ட தளத்தை காவியமற்ற தளத்தில் படைக்கமுயன்றிருப்பதே தமிழ் படைப்புலகத்தில் கொஞ்சம் விலகிய பயணப்படாத பாதைதான்.

யுவனின் இரு நாவல்களும் [குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம்] ஏற்கனவே ஓரளவு முதிர்ச்சி கொண்ட இந்திய ஆன்மிக மனதிற்கான நாவல்களாகத்தான் படுகிறது. இதன் அப்பட்டமான ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு சாதாரண மேற்குலக வாசகனால் ஒரு மாயாஜாலக்கதையாகவோ, ஒரு மைத்தாகவோ(myth) தான் வாசிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் இங்கு அதற்கான வெளி(space) எல்லா இந்திய ஆன்மீக, தத்துவ மனதிற்கும் ஓரளவு உள்ளது என்கிறதான வாசக சந்தையிலே யுவனின் எழுத்துக்கள் வலம் வருகின்றன.

சுருங்கக்கூறின், ஒரு லெளகீக வாழ்க்கையிலிருந்து அறுந்துபோக ஆசைப்படும் மனதின் தள்ளாட்டத்திலிருந்து எழுகிற புறவுலகு காணும் ஆசைகளை சூத்திரமாய், பாத்திரங்களாய், களமாய் மாற்றி அதற்குள் தனது மொழி விளையாட்டு பின்னலை சுற்றி கொடுக்கப்படும் யுவனின் நாவல்கள் இரண்டுமே தொடர் கண்ணி கொண்டவை.

தன்னை சுற்றியுள்ள உலகத்தின் கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன, அதிலென்ன சொல்லயிருக்கிறது என்று நினைக்கும் ஆசிரியர் தனக்கான புனைவுலகத்திற்குள் தனது கதைக்கான தளத்தை, அது புரட்சியோ, அரசியலோ, தத்துவமோ, ஆன்மீகமோ எதுவோ ஓன்றை பரப்பி வெயில் காய வைத்துகொள்கிறார்.

ஆக, ஒரு கற்பனை உலகத்தின் மீதான நாவல் ஓன்றும் புதிதல்ல. அந்த கற்பனை எதற்காக, எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக்கொண்டே ஆசிரியரின் புனைவுலக பலமும், காலம் கடந்து அது நிற்பதற்கான உள்வலிமையும் பெறுகிறது. நிகழ்கால குமிழிகளை விட தத்துவமும், ஆன்மிகமும் கலந்த வெளி இந்திய இலக்கிய மனதிற்கு வெகு அருகாமையிலான இடத்தை பிடித்துக்கொள்கிறது.

*
எத்தனையோ களமும், கதையுமிருக்க நிறைய கால, பொருட் செலவு செய்து ஏன் ஒரு நாவலாசிரியன் ஒரு விதையை தேர்ந்தெடுத்து மரமாக்குகிறான் என்பது பிரபஞ்ச ரகசியத்திற்கு இணையான கேள்வி. இதற்கான பதிலை அவனே சொன்னாலும், அவன் சார்ந்த வாசக, விமர்சகர்கள் சொன்னாலும் அது யானைத்தடவும் குருடர்களின் விளக்கம்தான். கதைசொல்லி சொல்வது போல அதுவும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதுதான் போல.

ஆனால் அவரின் நாவல் படைப்புலகத்திற்கு அடிநாதம் ஏற்கனவே ந.பிச்சமூர்த்தி மற்றும் மெளனியால் எழுதப்பட்ட ஒரு படைப்புலகத்தின் நீட்சியாகத்தானிருக்க வேண்டும் என்று நினைக்கிறது எனது சாதரண வாசக மனம். அது பிரம்மையாகவோ, எப்படியோ பழையதோடு இணைத்து பெருமூச்சுவிடும் வழக்கமாக கூடயிருக்கலாம்.

*

குண்டூசி தேட யானையை கூப்பீடாதீர்
(யுவன் சங்கரின் குள்ளன் சித்தன் சரித்திரம்)

”ஏ .. இது என்னடே.. ” கோபு மாமா புத்தகத்தை எடுத்து அதை திருப்பியபடியே கேள்விகள் கேட்டார். அது ஒரு அவசர மேய்தல். கோபு மாமா எனது நண்பர். ஒரு வெகுசன வாசிப்பின் அடையாளத்துளி.

நான் பதில் சொல்லவில்லை.. இது அவர் படிக்கும் புத்தகமில்லை. ச்சை. அப்படி நினைப்பது தவறு.. ஆனாலும் அப்படி நினைத்துவிடுகிறது மனம்.கதை கேட்பார். கதை சுருக்கமின்றி அவர் எந்த கதைக்குள்ளும் போவதில்லை.. ஒருவாறு கதை சொல்ல முயற்சித்தேன்.

*
“ஒரு சித்தருக்கு மடம் எழுப்பறாங்கா.. ஒரு போலிஸ் ஆபிசர் அதை பத்தி தகவல் தேடிப்போறாரு.. அவரால ஆசிர்வதிக்கப்பட்ட சில கதாபாத்திரங்கள் வழியா. அவர் பயணப்படராரு.. இதுல ஒரு ஆங்கிலேய கனவான் வர்றான்.. நோய் வந்து செத்துபோறான்.. வருகிற கதாபாத்திரங்களுக்குள்ளும், கதை நிகழ்வுகளுக்குள்ளும் ஒரு லிங்க் மாதிரி ஒன்னுயிருக்கு.. “

மாமாவுக்கு பொறுமையில்லை.

”இந்திரா செளந்தர்ராசர்னு ஒரு புத்தகம் எழுதுவாரே.. அது மாதிரியாடே..
அந்த டிவில.. வந்ததே..விடாது கறுப்பு அதுமாதிரியா.’

’இல்ல.. இது ஒரு தேடலான கதை.. வாழ்க்கையையே ஒரு கேள்விக்குள்ளாக்கிற கதை.. ’ நான் வேகமாய் மறுதலிக்க முயல்கிறேன்.

’ஹீம்.. என்னயிருந்தாலும் காதுல பூதானே. ..” அவரின் தொனி என்னை தொந்திரவு செய்கிறது. நான் அதுமாதிரி புத்தகங்கள் படிக்கிறவன் இல்லை என்பதே அந்த அவஸ்தைக்கு காரணம். எதாவது பதில் சொல்லவேண்டும்.

”ஆதி தர்க்கத்தை தகர்க்கும் கேள்விகளை கொண்டு முன்னகர்கிறது. மனிதப்பிறவி ஏன், அதற்கு முன்னும் பின்னும் என்ன, காலம் என்ற ஒன்றின் பயன்பாடு என்ன, என்கிற கேள்விகளை சதையும், நகமுமான மனித வாழ்க்கை மூலமாக ஆராய அறிந்து கொள்ள முற்படுவது இதன் எண்ணம”

மாமா ஒரு மாதிரி பார்த்தார்.

“ சரி..நான் கொஞ்சம் டீடெய்லா சொல்றேன் .. கேளுங்க..” கதை சொல்ல ஆரம்பித்தேன்.

*
காலம் கணிப்பவர்களை பற்றி காரெல் சொன்னாராம், ’காலம் என்ற
பரப்பு சாதரண கண்களுக்கு தரை தெரிவதுபோல பருண்மையான
பெளதிகப்பரப்பு ஆகிவிடுகிறது என்றல்லவா ஆகிறது’

அந்த நூலிழையை கொண்டு தனது ஆடையை நெய்தி கொள்கிறது இந்தக்கதை. தனது பிறப்பிற்கு முன், பிறப்பிற்கு இறப்பிற்கும் நடுவில், அப்புறம் இறப்பிற்கு பின் என்று தொடரும் கண்ணிகள் என்னவாகயிருக்கும் என்கிற கேள்விகளை கேட்டுக்கொண்டே அதற்கான விடைகளை எல்லா பக்கத்திலிருந்தும் தேட முயற்சிக்கிறது.

பின்னுரையில் ஆசிரியர் தனது அநுபவம் பற்றியும், தனது வாசக அநுபவமான கார்லோஸ் காஸ்டெடெனாடா மற்றும் டான் ஜீவான் என்பவர்களையும் பற்றியும் குறிப்பிடுகிறார். அந்த விதையை தனது லோக்கல் மண்ணில் விதைத்து தன் மீது எழுந்த மரம்,செடி, கொடி அது படர்தல், அதன் கிளைகள் பரவல் என பாய்கிறது கதை.

*
ஒருவாறு முடித்தேன்.

”ஓஸ்.. கண்ண கட்டுதேப்பா.” வடிவேலு ஸ்டைலில் சொல்லிவிட்டு
கோபு மாமா கொட்டாவி விட்டார்.

“இது இந்திரா செளந்திர் ராசன் புக்கு மாதிரி தாண்டே. அதுல கூட காக்கை வரும்டே.. பாத்தேன்ன..” மாமா ஆரம்பித்தார்.

நான் காதுகளை மட்டும் திறந்து வைத்து மனதில் குள்ளச்சித்தன் சரித்திரத்தை அசை போட துவங்கினேன். இது வெறும் பூர்வ சென்ம கதை மட்டுமல்ல. அதை தர்க்க ரீதியாகவும், மற்றொரு பகுதியுமிருக்கலாம் என்று வாதிடும் ஒரு குரலாகவும் அணுகவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சாரை பாம்பின் பகுத்தறிவில் உயரம் இல்லாததால் உயரம் என்கிறதே இல்லாமல் எப்படி போகிவிடும். இயற்கை பிரம்மாண்டத்தில் நியூட்டனும், ஐன்ஸ்டினும் சொன்னவை வெறும் கடலோரத்தில் நின்று கால் நனைத்தவைதானே. இல்லாத ஓன்றை அணுக, அது இருக்கென்று ஒரு அநுமானம் கொண்டுதானே முன்னகரவேண்டும். ( Let us consider that as X )
மனிதன் அறியப்படாததை அறிந்து கொள்ள அறிவியலும், ஆன்மீகமும் வெவ்வேறு பாதையில் ஓரே நோக்கத்தோடு பயணிக்கிறதா. தெரியவில்லை என்பதால் இல்லையென்றாகிவிடுமா.. பகுத்தறிவுப்பஜனையால் அப்படி இன்னொரு அறிவியலும் இருக்கிறதென்பதை பேசுவதே பிற்போக்குத்தனமாகி விடுகிறதே..

’என்னயிருந்தாலும் அது காதுல பூதானேடே..’ என்று மாமா சொல்லலாம். அது வெகுஜன பகுத்தறிவு தளத்தில் உண்மை தான். எப்படி இந்தக்கதை அதில்லை என்று அவரிடம் சொல்வேன் ? மாமா போன்ற வாசகர்களுக்கு ஏன் யுவனின் கதை எங்கயோ தொங்குகிறது. ஒரு வேளை அமானுஸ்யமான தன்மை சாதாரண கதை மாந்தர்கள் கிட்டயிருந்து வர்றதுனாலே இருக்கலாமோ..

ஒரு அசாதாரண கேள்விகள் சில சாதரண கதை மாந்தர்கள் வாழ்க்கையினோடு எழுப்பப்பட்டு அதற்கான விடைகளை அந்த கதை மாந்தர்கள் மூலம் அடைய முயல்கிறார் கதை சொல்லி. இரண்டு நாவல்களிலும் கிட்டத்தட்ட மையக்கரு இதே தான். தேடல் இதே தான். களமும், பாத்திரங்களும் வேறுபட்டாலும்.

*
ஒரு மூன்று நாள் கழிச்சு, மாமா சொன்னார். அதற்குள் யுவனின் இரு நாவல்களையும் படித்து முடித்திருந்தார்.

” டேய் ரமணி, ” கூப்பிட்டார். அவர் கையில் இன்னம் புத்தகமிருந்தது. படுத்துக்கொண்டே, குடித்துக்கொண்டே ஒரு அமானுஸ்யமான(!) நிலையில் இருந்தார். உண்மையான இலக்கிய விசாரங்கள் செய்கிற நேரமிது.

”ஏய் மக்கா.. நொம்ப கதையளம்பறானேடே.. ”

அப்படியான நிராகரிப்போடுதான் மாமா ஆரம்பிப்பார். அவர் பயணம் நிராகரிப்பிலிருந்து ஆமோதிப்பு நோக்கிய தன்னுள்ளான விமர்சன பயணம். மாமா சொன்னதை பதில் ஏதும் சொல்லாது செவி முடியிருந்தேன். மெல்லிய புன்னகையால் நிராகரித்தேன். மெல்லியதாய் அவர் நாவலால் உலுக்கப்பட்டிருந்தார். அவர் குடைக்குள் மழை பெய்திருக்கிறது. எங்கயோ அது அவரை அசைத்திருக்கிறது. நான் கேட்டுக்கொண்டே கேட்காமலிருந்தேன்.
அதை புரிந்து கொண்டு அடுத்த தளத்திற்கு என்னோடுனான விவாதத்திற்கு வந்தார்.

ஆனால் விமர்சனம் தாண்டி, எனக்குள் குள்ளச்சித்தன் சரித்திரம் நிறைய ஊறிப்போயிருந்தது. அதிலும் சில காட்சிகள் பிரேம்களாய் தங்கியிருந்தன. சில அமானுஸ்யமான தருணங்கள், சில சொற்பிரவாகங்கள், சில தத்துவ குறிப்புகள் என மொழிநடை பொங்கி புனைவுலகம் நனைந்து வெளிப்படும் எழுத்து குறிப்பிட வேண்டிய முயற்சி, மிக அசாதரணமான சாதனை.

பிரமாதமான மொழிநடை.. சரளமாய் மாறும் ., சிறந்த பரிசோதனை முயற்சிகள்.. வெகுசன வாசகனையும் கொஞ்சம் கைபிடித்து தூக்கிவிடுகிறது. இல்லறங்களை துறந்து புதிய உலகத்தை கண்டுபிடிக்க போகும் ரிஸித்தன்மையை இந்திய மனதிற்கு வெகு அருகாமை கொண்டு செல்லும் சவாலோடு களம் புகுகிறது யுவனின் எழுத்துநடை. நிறைய பாராட்டுப்பெற்ற அவரின் கதைக்குள் கதை, மாறும் மொழிநடை – எவ்வளவுதான் பாராட்டினாலும், இன்னும் ஏதோ சொல்லாமா விட்டுட்டோமே என்கிற அளவிலான நடை. தனது பலம், பலவீனம் தெரிந்து அவர் எடுத்துக்கொண்ட களம் – இந்த பிரமாதமான நடைக்கு காரணமாயிருக்கலாம்.

மொத்தத்தில் நல்ல சரக்கு.

அதற்குள் முழ்கி மறுபடியும் அசைபோடுவது அதற்கான வார்த்தைகளை நானே சேர்த்துக்கொள்வதே நல்ல நாவல் நமக்குள் ஏற்படுத்தும் சில ரசாயன மாற்றங்கள். தமிழ் இலக்கியத்தில் மிக சின்னதான பிரமாண்டங்களாய் படைக்கப்பட்டவை தெரிகின்றன.

என்னை கவர்ந்த சில நிகழ்வுகள், அமானுஸ்யமான தருணாங்கள், சொற்பிரவாகங்கள், தத்துவங்கள் கீழே :

சில நிகழ்வுகள்:

1. சாகப்போகுமுன் சாமியாராயிருந்தாலும் சடாரான பெயர் சொல்லியழைக்கும் காட்சி விசுவரூபமெடுத்தது.

2. மிலேச்சனிடம் நீங்கள் அழிந்துபோவீர்கள் என பேசும் விலைமாது, அவனது சுபாஸி அப்பா, ஒரு பாசமான குடும்பம்

3. மிலேச்சன் நோய்வந்து கப்பலிருந்து தள்ளிவிடப்படும் காட்சி

4. காசின்றி எதிர்நிச்சல் ஹோட்டலிருந்து வரும் அப்பா.

சில அமானுஸ்யமான தருணங்கள் :

பழனியப்பன் வீட்டின் தானம் கொடுக்கும் பாத்திரம் கோமியத்தால் கழுவப்படாத போது யாரோ ஒரு இளைஞன் அந்தச் செய்தியை சொல்லிவிட்டு போகிறான்.

சாமி : முதலியார் + மனைவி (அவர்களின் குழந்தை)

மவுல்வி, துபாசி, பாடியே சாகும் பாடகன், மிலேசன், பைராகி, கேட்கும் காசி, அவன் பழைய பிறவி தொடர் ஞாபகங்கள்

சில சொற்பிரவாகங்கள் :

சதை வேகம் கொண்டு விழித்திருந்த இரவுகள்

வேறு எந்த ஜீவராசிக்கும் இனப்பெருக்கம் இத்தனை பெரிய மனச்சுமையாக இருக்குமா.. ?

காசி.. நகரம் என்பதைவிட நம்பிக்கைகளின் தொகுப்பு என்று சொல்லலாம்.

யாகம் மாதிரி ஒரு நாள் முழுதும் மணிக்கணக்காக வார்த்தைகள் துப்பும் சித்தர் ( நிறைய வார்த்தைகள் )

இந்தக்கணத்தில் இருக்கிறேன் என்ற உணர்வுதான் எத்தனை பேரானந்தமாய் இருக்கிறது – மிலேச்சன்

இருள் கனத்து அடர்ந்து நகரும் தெருவின் தான் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதாய் உணர்ந்தார் ஹாலாஸ்யம்.

யாரோ நம்மை கவனிக்கிறார்கள் என்று தெரிந்த மாத்திரத்தில் இயல்பு நிலை பிற்ழ்ந்து விடுகிறது.

காலம் இடம் பற்றிய அவதானங்கள் எத்தனை எத்தனை உண்டான பின்னும் முழுக்க திறக்கப்படாத கர்ப்பகிரஹம் போலவே மர்மம் நிரம்பினதாய் இருக்கிறது அவற்றின் அந்தரங்கம்.

எந்த விதமான தர்க்கத்துக்குள்ளும் அடங்க மறுக்கும் ஒன்று நடந்திருக்கிறது. காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சுழலின் மையத்தில் சிக்கி மூச்சு திணறுவதாக உணர்ந்தார் பழனியப்பன்.

யாரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆனால் யாருமே தெரிந்து கொள்ள ஆசைப்படாத ஒர் திறந்த ரகஸ்யம் இருக்கிறது ஆலாஸ்யம். அதை அறிவதுக்கு முயலப்போகிறேன் – முத்துசுவாமிகள்

விடுபட்ட சரித்திரத்தை அறிவதற்கு உள்ளுணர்வைத்தான் உபயோகப்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது.

உணர்ச்சி உச்சமா முட்டும்போது அதை அறிவாலே சமனப்படுத்துகிறதும் அறிவோட பார்வை எல்லாத்தையும் அபத்தம், அர்த்தமில்லாததுன்னு காட்ட ஆரமிச்சதும் உணர்ச்சியாலே அதை மூடப் பாக்கறதும் எல்லாரும் செய்யறதுதானே – செய்யது..

சில தத்துவங்கள் சிறு சொற்களின் வழியே :

‘சாரைப்பாம்பின் பாசையில் உயரம் என்ற பதமே கிடையாது. ‘

‘Presently it flew off and the branch was swinging up and down from the pressure of flight’
ஜே.கே.

‘உம்முடைய அறையில் நாற்காலி இருக்கிறதல்லவா. இடத்தை அடைத்திருக்கிறது அது என்பது ஒரு பார்வை. நாற்காலி இட்மாகவே இருக்கிறது என்பது மற்றோரு பார்வை. இரண்டு பார்வைகளுமே ஒரு அடிப்படை உண்மையை மறுக்கவில்லை இடம் என்ற ஓன்று உண்டு என்பதை.’

‘இதற்கு மாறான பார்வை ஓன்றேதான் உண்டு. இடம் என்ற ஓன்றே இல்லை என்பது. அவர்களின் நோக்கமும் உயர்வானதுதான். பிசாசை ஓழிக்க வேண்டுமானால், கடவுளை ஒழித்தாக வேண்டும் என்கிறார்கள் அவர்கள். நியாயம்தானே.’

‘ஆனால் பாமர ஜனங்களுக்கு வேண்டியிருக்கிறது. காப்பதற்கு கடவுளும் மிரட்டுவதற்கு பிசாகம் இல்லாது போனால் அவர்களுடைய மனங்கள் சிதறிவிடும் “

தங்கள் பிரக்கைவெளியின் கவனிக்கப்படாத மூலையில் காத்துக்க கொண்டிருக்கும் மரணம் என்ற விசப்பூச்சியை சதா சர்வகாலமும் தர்சிப்பவர்களாகி விடுவார்கள்.

*

இந்தக்கதையை வாசிப்பவர்கள் அதன் பின்னுரையை படித்துவிட்டு படிப்பது நலம் பயக்கும். அது ஆசிரியர் யோசிக்கும் தளத்திற்கு சின்னதான கட்டியமும், கைகாட்டும் (மற்றும் சப்பை கட்டுகிற) வேலையையும் செய்கிறது என்று விமர்சகர்கள் வாதிடலாம்.

மாற்று மெய்யமைய்யின் மெய்மைத்தன்மையை விட அதில் கலந்திருக்கும் பேன்ட்டஸி அம்சம் எனக்கு கவர்ச்சியூட்டுகிறது என்கிற ஆசிரியர், வாசகனுக்கு தனது எழுத்துபரப்பின் சட்டங்களை ஓரளவு கோடிட்டு காட்டிவிடுகிறார்.

இந்தநாவல் வெறும் பேண்ட்டஸி அம்சம் மட்டும்தானா.. நான் என்னவோன்னுல்ல நினைச்சேன் என்று ஒரு வாசகன், விமர்சகன் நினைத்தால் அது அவரது வாசக, விமர்சன ஆழத்தை காட்டும்.

எல்லோரும் ஆன்மீகம் பேசுகிறார்கள். பக்கம் பக்கமாக கதை சொல்லியின் வாயாக அவர்கள் மாறுகிறார்கள். நாடி சோசியம், காந்தி இறந்த கதை, தாயரம்மா சிரிப்பு என்கிற நிகழ்வுகளும், கதையிடங்களும் சாதரண அறிவியல் பார்வை யதார்த்தம் கொண்ட தளத்தை முற்றிலும் நிராகரிக்கின்றன.

சாதரண தளத்தில் கதை போகாமலிருக்க, தத்துவ ஆன்மிக தளத்தில் நிற்கவும், அதோடு வாசிப்பின்பம் அளிக்கவும் நிறைய முயற்சிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் அதுபோகும் இடங்களுக்கெல்லாம் ஒரு மாய்த்தோற்றத்தை கொடுத்துவிடுகிறது என்பதை புனைவுதான் என்றாலும் எழுதுவதற்கே ஒரு துணிவு வேண்டும்தான்.

[”இந்த புத்தகத்தை படித்துவிட்டு 16 நாட்களுக்குள் யாருக்கும் கொடுக்காவிட்டால் உங்களை சர்வ வல்லமை சார்ந்த ஆவி சூழும். கொடுத்துவிட்டால் குள்ளச் சித்தன் ஆசி வழங்கி ,தடை பட்டு போன H1 விசா கிடைக்கும். மற்றும் கீரின் கார்டு கிடைக்கும்னு ஒரு இமெயில் தட்டுடே.. நம்ம மக்கா எல்லாம் வாங்கிருவாண்டே..” கோபு மாமா.. ]

*

இந்த பிரபஞ்ச கேள்வி, காலம் பற்றிய கதைகள் இதெல்லாம் தேவையாயென்ன, இதைப்பற்றி கவலைப்படுவது மானுட நிகழ்கால துரோகமல்லவா.. இப்போதய பிரச்சனைகளை விடுத்து வரலாற்று கடந்த கால, எதிர்கால தொகுப்புகள் வெறும் அறிவு ஜீவி பசிக்குத் தீனிதானேயொழிய அதனால் அளவிடக்கூடிய பலன்கள் எதுவும் கிடைக்கப்போவதில்லையே, என்ற யதார்த்த கேள்வியை நீங்கள் எழுப்பலாம்.

அந்த சமூகத்தை பற்றித்தானே ஒரு இலக்கியவாதி தன் பொருட்களுக்கான கச்சா பொருளை தேர்ந்தேடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சமூகத்தின் வலிகளை, வளர்ச்சியை, முரண்களை பற்றித்தானே அவன் பதிவும், பதிலும், கேள்வியும் செய்ய வேண்டும். இல்லாத ஓன்றிற்காக அவன் மெனக்கெடுவது, காற்றில் பந்தல் போடுவது ஆன்மீக மடாதிபதிகளின் வேலையாயிற்றே என்கிறதான கேள்விகளை தாண்டி இப்போதய அறிவு உலகம் ’எல்லாவற்றிகும் இடமுண்டு’ என்று ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறது.

உலகம் இப்போதய தேவைக்கு மட்டும் தேவையான உடலை, மட்டும் ஆதாரமாய் கொண்டு வளர்ந்து விடவில்லை. மனம், தொடமுடியாத சூட்சுமம், எண்ணம், ஏதோதோ பெயர்கொடுத்து அதை அறிய முயல்கிறது. அதை அறிய அறிவியல் குடுவைகளும், தொலைநோக்கிகளும் மட்டும் போதாது. மனம் என்பதன் வளர்ச்சியே மானுட வளர்ச்சி. அதை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான ஓன்றே. அதில் நிகழ்காலத்திற்கான இடம் சொற்பமே, மற்றும் அது இதுவரை பயணப்படாத பாதையை நோக்கி பயணப்படவேண்டியிருப்பதால் அதன் நோக்கில் சிறிய விடயங்களை புறம்தள்ளி முன்னகரவேண்டியிருக்கும். இது சமூகத்திற்கான உடனடி தேவையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையல்ல. அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பரிசோதனை நிலையம். தங்களையே சோதனை கருவிகளாக்கி கொண்டு முன்செல்லும் ஆன்மீக, தத்துவ அறிவியல். இது படரக்கூடிய தளம் (canvas) மிக பிரமாண்டமானது.

சாதரண மனிதர்களுக்குத்தானே நேற்று, இன்று, நாளை, மணி, நொடி, தேச எல்லைகள் எல்லாமே.. அதையெல்லாம் தாண்டி பாய்கிறது மனது. மனதிற்கு இவையெல்லாம் சுமையாகிறது. சிலுவையாகிறது. தொலைந்த குண்டூசியாகிறது.

அதை தேட யாராவது யானையை கூப்பிடுவார்களா ? அப்படித்தான் யுவன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எண்ணுகின்றன. அப்படித்தான் சொல்கிறார் முத்துசுவாமிகள். எவ்வளவு பெரிய கேள்வி ? விடை கிடைக்குமா என்று தெரியாத கேள்வி. அதுதான் அவர் சமூகம் மீது ஏற்றும் கேள்வி ?

அளவிடமுடியாத, தெரியாத, தொட முடியாத, இல்லாத சில விடயங்களை பேச ஆரம்பிப்பதே கடினமான முயற்சி.அது சரியான தளத்தில், தரத்தில் இல்லாவிட்டால் சரியான கதாபாத்திரம் மூலம் கதை சொல்லி பேசாவிட்டால் அது அர்ஜீனன் கண்களுக்கு, குறி தாண்டி எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது.

அப்படியாக நேர்ந்துவிடுகிற அதிகபட்ச வாய்ப்புகளோடன் தான் இந்தக்கதை பயணிக்கிறது. தத்துவங்களையும், தர்க்கங்களையும் எடுத்துக்கொள்கிற எல்லா கலை வடிவங்களுக்கும் நேர்ந்துவிடுகிற விபத்து தான் இது.

*

யானையை யாராவது குண்டூசி தேட கூப்பிடுவார்களா. ?? இந்தக்கதை காட்டும் யானை நாம் கடைவீதியில் கலர் சட்டை போட்டு சலாம் போட்டு, துட்டு வாங்கி தலைவனிடம் கொடுத்து, கால் கட்டவிழத்து விட்ட பின்னும், சங்கிலிச்சுமையை மனதில் எண்ணி மெல்ல மெல்ல அதன் தூரத்திலே காலசைக்கும் துரும்படி யானையல்ல.. குண்டூசி தேட யானைகள் அழைக்கப்படும்போது அவை வெறும் இயந்திர குரல்களாகவும், நிறுவனங்களாகவும், கேட்டால் கொடுக்க கடமைப்பட்ட தெய்வங்களாகவும் மனித வழிபாட்டு அடிமைகளாகவும் கருத்துருவாக்கம் பெறுகின்றன. அப்படிப்பட்ட யானைகள் தான் கோபு மாமா சொல்லும் இந்திர செளந்தர் ராசன் கதைகள். யுவனின் கதை யானை அதன் நிஜ உருவத்திலே அதன் பிறப்பகமான கானகத்தையே தேட முயற்சிக்கிறது.

துரும்படியிலும் யானை படுத்திருக்கிறது. கானகத்திலும் நிமிர்ந்து கனத்து நடக்கிறது. எதை எழுத்தாளன் எடுத்துக்கொள்கிறான் என்பது அவனது சாய்ஸ், விருப்பம், மிகவும் அந்தரங்கமான, சில சமயம் ஏன் என்று பதில் சொல்லமுடியாத விருப்பமும் கூட.

இதில் ஏன் யானையை எடுத்துக்கொண்டீர்கள், பூனையை எடுத்துக்கொள்ளவில்லை என்று ஒரு விமர்சகன் எப்படி கேட்க முடியும்.

ஆதி தர்க்கத்தை தகர்க்கும் கேள்விகளை தாங்கிய யானை மாற்று மெய்மைத்தன்மையோடு நாவலில் குண்டூசி விடுத்து எதையோ தேடுகிறது. நாமும் யானையை, அது விட்டுச்சென்ற தடத்தை தடவி தடவி புரிந்து கொள்கிறோம்.

)அடுத்த பக்கத்தில்(

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி

யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

கே ஆர் மணி


ஒரு சாதாரண நாவல் போல எழுதிவிடக்கூடாது என்பதில் நிறைய மெனக்கெடல் இருப்பதாக தோன்றுகிறது. ஆயினும் ஒரு சாதரண வாசகன் கதை அடர்த்தியில் தொலைந்து போய்விடக்கூடாதென்ற பயமும் தென்படுகிறது.

ஒரு சாதரண தளத்தில் நிற்கக்கூடாது அதே நேரம் முழுக்க அசாதரணமாகிவிடக்கூடாதென்றும் என்கிற ஒரு பயநினைப்பில்
பெண்டுலமாய் ஆடுகிறது அதன் கதையோட்டம், உத்தி மற்றும் கதைத்தளம். அது ஒரு வேளை சாதரண உலகில் அசாதாரணத்தன்மையை காட்ட முயற்சித்திருப்பதால் கூடயிருக்கலாம்.

வடிவ, மொழி பரிசோதனைகள் மிக கவனமாய் வெகுசன இலக்கிய வடிவத்தை தவிர்த்து தங்களுக்குள் ஒரு புத்திசாலி ஓளி வட்டத்தை பேணிக்கொள்கின்றன. தயவுசெய்து சீரான வடிவத்தில் எழுதிவிடக்கூடாது. என்ற மெனக்கெடலில் எழும்பும் நிறைய கட்டிங்கள், ஜம்ப் கட்டிங்கள், தாவல்கள், இடைவெளிகள் (வாசகர்களே குழி செய்து நிரப்ப வேண்டியவை) என்கிறதாய் போகிற பாதை ஆசிரியர் எதிர்பார்க்கிற அறிவு ஜீவித்தனமான வரிசை பட்டியலில் சேர்க்க உதவுகிறதோ இல்லையோ, கண்டிப்பாய் பொதுப்புத்தி கொண்டு “ என்னடே.. என்னதா சொன்னாலும்.. காது குத்த்ற கதை தாம்டே “ என்று தள்ளிவிட முடியாத பலத்தை அளிக்க முயற்சிக்கிறது.
அதுதான் ஓன்னும் புரியலையே என்று ஓதுக்கி தள்ளிவிடமுடியாது. அதே நேரம் அதன் சிடுக்குகளை புரிந்து கொள்ள கொஞ்ச முயற்சியும் வேண்டியிருக்கிறது.

கோபு மாமா அதானால்தான் அதை ஓரிரு முறை படிக்க முயற்சித்தார்.
*

நிகழ் சமூகத்திற்கு எதாவது இதில் இருக்கிறாதா என்ன ?

மிக முக்கியமான செய்தியாய் ஹாலஸ்யம் உணர்வதும் எனக்கு பிடித்ததுமான ஒரு கண்டுபிடிப்பு ஒன்று இந்த நாவலில் வருகிறது. அது ஓன்றிற்காகவே நாவல் தெளித்திருக்கிற மற்ற அபத்தங்களை மறந்துவிடலாம்.

யானையை, குண்டூசி தேட கூப்பிடக்கூடாது மற்றும் மாயமெய்மை என்கிற வார்த்தை பிரயோகங்களால் இந்த படைப்பிலிருந்து நிகழ்வுலகத்திற்கு என்ன என்கிற விமர்சக கேள்வியிலிருந்து இந்த நாவல் தப்பித்துக்கொள்கிறது. அல்லது தரம் பிரித்துக்கொள்கிறது.

இந்து மத நம்பிக்கைகளின் நிறுவனமாக்கல் (தவிர்க்கமுடியாததெனினும்) எப்போதும் கேள்விக்குள்ளாக வேண்டிய ஓன்று. எந்த குறிப்பிட்ட இடத்திலும் பாஸிசம் படியாது தொடர்ந்து தனித்த தேடல் மூலம் மட்டுமே பிரிந்து யோசிப்பதன் மூலமே முன்னகர்ந்து வந்திருக்கிறது. பிரிதல் பின்னர் தொகுப்பு என்று பின்னர் பிரிதல் என்று வளர்ச்சி சூத்திரம் கொண்டு பெரும்பாலும் நிறுவனமயமாக்கலை தவிர்த்து வந்திருக்கிறது.

படையெடுப்பும், அது கொடுக்கும் அடிப்படை கலாச்சார அழிவுமற்ற சூழலில் ஆன்மிக அறிவியல் உயர் தளங்களை உள்ளுணர்வின் மூலமும் தொடர்ந்த பரிசோதனைகள் மூலமும் அடைய இந்திய ஆன்மிகத்துறை முயன்று கொண்டேயிருக்கிறது. அது நேரிடையாக மானுடத்தின் அன்றாட அலுவல்களை பற்றி கவலைப்படாதிருந்திருக்கலாம். அது கடைகளில் கையேந்தும் யானையல்ல. குண்டூசி தேடுவது அதன் கடமையல்ல. ஆனால் அது கொடுக்கும் விளைவுகளை நுகர்வது இந்த மனிதன் உள்ளிட்ட பிரபஞ்ச முழுமைக்குமே.

அதற்கு எதிரான சூழலை நிறுவனம் உருவாக்கிவிடுகிறது.

ஆகவே நிறுவனம் கூடாது என்று எண்ணுகிறார் ஹாலஸ்யம், சித்தர் ஸீ. முத்துசாமிக்கு செய்ய வேண்டிய முதன்மையான கைங்கர்யம் அவரை வைத்து ஒரு ஸ்தாபனம் நிறுவனக்கூடாது என்று ஆழமாய் எண்ணுகிறார்.

தானாய் பூக்கும் புஸ்பம் போன்ற மகானை அரும்பின மாத்திரத்தில் பறித்துப் பூச்சாடியில் செருகிவைப்பது நல்லதல்ல என்று நினைக்கிறார்.

நானும் வெகு ஆழமாய் அப்படித்தான் யோசிக்கிறேன், ஹாலஸ்யம். இது நீங்கள் பார்த்த முத்துசாமிக்கு மட்டுமில்ல, எல்லா இந்து மத நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. உங்களின் குள்ளச் சித்தன் சரித்தரித்தின் முக்கியமான யோசனையாய், எவ்வளவு சாத்தியம் என்பதையும் தாண்டி நிறுவனமற்ற, ஓவ்வொரு தலைமுறைக்குமான சுயதேடலாகவே கிழக்கத்திய ஆன்மிகம் வளர்ந்திருக்கிறது.

யுவன் ஆன்மா, மாற்றுமெய்மைத்தன்மை, வேறுலகம் என்பது போன்ற சிறுவிசயங்களின் கதை சொல்லி !

*

குண்டூசி தேடாத யானை உலகமயமாகிறது
[யுவனின் பகடையாட்டம்]
*

நடக்கிறதெல்லாம் தர்க்கம் மீறித்தான் நடக்கிறது. அதை அறிய குண்டூசி தேடாத யானைகளாக சில கதாபாத்திரங்கள், அதை மெய்ப்பிக்க, உயிர்ப்பிக்க அந்த தேடலின் வழியே மானுட வளர்ச்சி முழுவதும் அப்படித்தான் நடந்திருக்கிறது என்பதை சொல்ல, கதை சொல்லிக்கு உதவியாய் சில தளங்கள். வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் பகடையாட்டம் குறித்த வினாவை எழுப்பிவிட்டு போகிற யுவனின் பகடையாட்டம்.

பகடையாட்டம் – முந்தைய நாவலான குள்ளச்சித்தன் சரித்தரத்தின் இந்திய எல்லையை விட்டு அகன்று உலகமயமாகி அதே கேள்விகளோடு, தர்க்கங்களோடு எல்லை கோடுகளற்ற, தேசமற்ற மானுட எல்லைகளின் சிந்தனையால்.விரிகிறது யுவனின் எழுத்தின் வானம்.

பெரும்பாலவனர்களின் வாழ்க்கை இத்தனை சுவாரசியமாக இல்லை, அதில் பெரும்பாலும் கொந்தளிப்புகள் இல்லை, தர்க்கங்கள் இல்லை, அதீத தவிப்புகள் இல்லை எல்லாமே ஒரளவு கணிப்புக்குள்பட்ட வாழ்க்கைதானெ, என்றாலும் நாவலின் கதை சொல்லித்தனம், புனைவின் நயம் அத்தகைய கேள்விகளை அநாயசாமாய் ஓதுக்கி தள்ளிவிடுகிறது.

*
மேற்கத்திய வாசம்

அகதிவாழ்க்கை கொண்ட வெய்ஸ் முல்லர். வன்மமும், தந்திரமும் கொண்ட ஜெர்மனிய மேஜர். –, ருஸ்யாவிலிருந்து தப்பிய ஓடி மறைக்கவேண்டிய கடந்த காலத்தோடு திரிகிற நபர். உலகைச் சுற்றியவன். இந்த நூற்றாண்டில் அதிதேவதை துப்பாக்கி குண்டுதானென்று என்று நம்பியவன்.

லூம்பா ஆப்பரிக்க கறுப்பன், வெகுளி, வாஞ்சை, திறந்த புத்தகமாய், இயற்கையை படிக்கிற, பறவைகளை காதலிக்கிற ஒரு நாடோடி. மேலே சொன்ன கதாபாத்திரத்தின் நேர் எதிர்.

வாழ்க்கையின் பகடையாட்டம் இருவரையும் அகதிகளாய் இணைக்கிறது. ஸோமிட்சியா என்கிற ஒரு மன்னராட்சி (கற்பனை) நிலத்திற்குள் செல்கிறார்கள். ஸோமிட்சியா ஒரு மானுட வளர்ச்சியின் குறுக்குவெட்டு தோற்றம். இப்படித்தான் மன்னராட்சியிலிருந்து, மானுடச் சந்தை வளர்ந்திருக்கலாம் என்று எளிதாய் எண்ண வைக்கும் எளிமையான சூத்திரங்கள்.

*
ஸோமாட்சு : (கிழக்கத்திய கிரந்த பூமி)

நாலுவயது புதுமன்னரை தேடும் படலம், எந்த மடத்திற்கும் புதிய அதிபரை தேடும் படலத்திற்கு ஓப்பான பாண்டஸீ தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது.

அதை செய்யும் ஈனோஸ்- மதகுரு. மண்ணாசை, பெண்ணாசை கொண்ட ஒரு மதகுரு. நிழலாட்சி தொடர விரும்பும் சநாதினி, அவருக்கு விருப்பமான, மாற்றத்திற்கு தலையசைக்கும், தலையிழக்கும் – ஓற்றர்கள் – இல்சுங், வாங்சுங்கி.

மேற்கத்திய படிப்பால், சிந்தனையால் மக்களாட்சி அல்லது அதன் பெயரில் பிரபுக்களாட்சி கொண்டு வர முயலும் சில அறிவு ஜீவிகள், அவர்களின் பகடையாட்ட முரண்கள், களமாய் ஸோமிட்சு, இப்படியாய் ஒரு மாற்றத்தின் நுனியின் தவிக்கும் நிலத்தையும், மாந்தர்களாயும் தொடரும் கதை.

அங்கே வெமுவும். லூவும் ஏதோ பதவியெடுத்துக்கொள்கிறார்கள்.
லூ இறந்தபோகிறான். எல்லோரும் சீன கம்யூனசித்திற்கு பயந்து இந்திய எல்லை தாண்டுகிறார்கள்.

கிழட்டு குரு, திபெத்திய துறவி சிறுவன், ராணுவ அதிகாரி – அகதி தன்மை. வாழ்க்கையில் எல்லோருக்கும் எங்கோ ஒரு அகதித்தன்மை அமையத்தான் செய்கிறது. எதிலிருந்தாவது தப்பித்து ஓடிவிடவேண்டுமென்று.

போர், மன்னராட்சியிலிருந்து மக்களாட்சியில் நடக்கும் மாறுதல்கள், அதன் துளியாய் வரும் தனி மனித அநுபவங்கள் கொண்ட வரலாற்று கதை போல தோற்றமளிக்கலாம்.

ஆசையை அறவே அழிக்க சொன்ன புத்தரின் வழித்தோன்றலாக தன்னை வரித்துக்கொண்ட துறவியை அரசியல் தலைமை தொடர்பான காரணங்கள் தேசம் விட்டு துரத்துவதில் இருந்த ஆழ்ந்த முரண் கதையின் ஒரு முக்கிய சரடு. ஒரு நிகழ்கால நிகழ்வை படைப்புலக்கியம் மூலமாக தர்க்கப்படுத்து பார்க்கும் முயற்சி.

தத்துவமும், சொல்முறையும் கொஞ்சம் மாறினாலும் கிட்டத்தட்ட சாண்டில்யன் வாடையடிக்க கூடிய அபாயத்தோடு, கதை சொல்லியின் பகீரதப் பிரயத்தனத்தாலும், கிரந்த ஆசிர்வாதத்தாலும், தத்துவ ஈரத்தாலும் தலை தப்பி உண்மைகள் போலவே கதைகள், கதைகளை போலவே உண்மைகள் என்கிற மிக அருமையான தளத்தில் பயணிக்கிறது. சாதரணமாய் நேர்கோட்டில் சொல்லப்பட்டிருக்கவேண்டிய கதை புனைவின்பாற்பாட்ட காதலால் அருவிபோல எழுந்து, அமிழ்ந்து காட்டும் மாயாஜாலத்திற்கு சிற்றிதழ் சர்க்கிளில் ஏதாவது பெயரிருக்கலாம்.

ஆனாலும் ஒரு வாசகனை அது அதிகமாய் துன்புறுத்தவதில்லை என்பதே உண்மை.

*

இந்திய எல்லைக்குள்

மேஜர் கிருஸ்ணன் – இந்திய ராணுவ அதிகாரி, ஓடிவரும் அகதிகளோடு உறவாடிகிறார். அவரின் பார்வையிலும் தத்துவங்கள் சொல்லப்படுகின்றன.

மேஜர் நானாவதியிடம் அவர் நண்பன் நானாவதி சொல்வது :

உன்னுடைய சகோதரிகளெல்லாம் தெற்கில் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள் கிருஸ். அதிர்ஸ்டக்காரர்கள் நீங்களெல்லாம். கிரேக்கர்கள், பாரசீகர்கள், மொகலாயர்கள் என்று யார் படையெடுத்து வந்தபோதும் முதல் களப்பலியானது வடக்கில் உள்ளவர்கள்தான் உச்சமாக , சகோதர சண்டைக்குப் பலியானதும் நாங்கள் தாம்.

நாவல் மீது எழுப்படும் கேள்விகள்:

ரத்தமும், சதையுமான சமூக கதைகளுக்கு மட்டுமே இலக்கிய உலகத்தில் இடம் இருக்கவேண்டும், அறிவியிலற்ற பிரபஞ்ச விதிகளை ஒரு அநுமானத்தில் கூட அணுகமுடியாது, நாஸாவிலிருந்து விடைகள் தெரிந்தபிந்தான் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற அதீத பகுத்தறிவில் மூழ்கியிருந்தால் யுவனின் படைப்புலகத்தை நீங்கள் படிக்காமலே தவிர்க்க நேரலாம்.

ஏராளமான வினாக்களுக்கு நாவலாசிரியரே, சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளையும் கொடுத்திருக்கிறார். அது அதற்கு அந்தண்ட, இந்தண்ட கேள்விகளை எழுப்புவதை தடுப்பதுமில்லாமல், இதற்குமேல் எதுவும் கேட்காதே என்று சொல்லும் தொனியையும் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
(திறமையான வாசக வன்முறை)

கதை, ?

”இனிமேல் சொல்ல எந்த கதையிருக்கிறது, எல்லாம்தான் சொல்லியாகிவிட்டதே “ என்கிற வார்த்தை கவனமாக மிகப்பெரிய கதைகளை என்னிடம் எதிர்பார்க்காதே, இதில் கதை எங்கே என்று விமர்சன ஓலமிடாதே என்று சொல்லாமல் சொல்லும் கதை குப்பியின் மீது ஓட்டப்பட்ட அடிக்குறிப்பு சீட்டு.

நுண்ணிய அளவில் தனிமனிதர்களுக்கிடையேயிலும், மகத்தான அளவில் அமைப்புக்கும் தனிமனிதனுக்கும் இடையிலும் நிலவும் உறவு நிலைகளின் பின்புலமாக செயல்படும் உள அரசியல் – என்ற புள்ளிகளை இணைத்து வரையப்படும் கதைப்புலம். இவ்வாறாய் கதை நுண்ணியதாய், பூரணமாய் பொதிந்திருக்கிறது.

கதை மீதின்றி அது சொல்லப்படும் விதத்திற்குதான் அதீத முக்கியவத்துவம் நாவலில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ’ புனைகதையின் உயிர் அதன் சாரத்திலில்லை. உருவத்தில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை. சொல்லும் முறையில் அதன் உயிர் இருக்கிறது ‘ என்ற பதில். இனிமேல் சொல்ல எந்த கதையிருக்கிறது, எல்லாம்தான் சொல்லியாகிவிட்டதே.. என்கிற தோனி.
(அப்படியா..) போன்றவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

படிக்க கிடைத்த ஆங்கில புத்தகத்திலிருந்து தடுக்கி விழுந்து, மண் ஓற்றி எழுகின்றனவா இவரது கதைகள் என்கிற தோற்றத்தை ஆரம்பநிலை வாசகருக்கு அளிக்கலாம். அதில் தவறொன்றுமில்லை.

தத்துவம், ஆன்மீகம், நாஜிக்கள் மீதான எழுத்தாளர்களின் அளவு கடந்த காதல் சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

ஏன் கற்பனையான நாட்டை எடுத்தீர்கள் ?

ஒரு இலங்கையோ, சங்கரமடமோ கொண்டு எழுத ஏன் முன்வருவதில்லை வாசகருக்கு பக்கதிலிருக்கும் கதை களமாக அமைந்திருக்குமே, இப்போதய மாற்றங்களை நோக்கிய படைப்பாளியின் சமூக கேள்வியாக அவை அமைந்திருக்குமே என்ற் கேள்விக்கு இடமில்லை. அதற்கு பின்னுரையில் கவனமாய் சமூகவியல் கேள்விகளை கொண்டு என்னை அகதியாக்காதீர்கள் என்கிற பதில், தப்பித்தல் மட்டுமல்ல என்று ஆழப்படிப்பின் புரியும்.

சமூகவியல் கேள்விகள் எழுத்தாளனின் சிலுவையா ?

புகழ்பெற்ற எழுத்தாளர். ஒரு மடமும் அது சொன்ன விழுமியங்களும் பிரச்சனையிலிருந்த போது எல்லா எழுத்தாளர்களும் தங்களது கருத்தை தெரிவித்தேயாக வேண்டும் என்பது மாதிரியான கருத்தை வெளியிட்டார். அப்படி வெளிப்படையாக தங்களது கருத்தை சொல்லாத பொதுஜன எழுத்தாளர்களின் மீதான சமூக அழுத்தத்தை அவர் அதிகரித்தார். சகமானுட கேள்விகளை எழுப்பிக்கொண்டே எழுந்துவரும் இலக்கியம் பற்றியதான சர்ச்சையாக அது மாறாமல் வேறு விதமாய் போனது துரதிருஸ்டம்.

இப்போதய ஈழப்பிரச்சனையிலும் எழுத்தாளரின் மீதான அதே கேள்விகள் தொடர்கிறது. அவன் என்ன 24*7 செய்தி சேனலா, அந்த நிகழ்வுகளை செரித்து உடனே துப்பும் பெருங்கூடலாக மாற அவனை எது நிர்பந்திக்கிறது.

எழுத்தாளன் சம உலகத்தின் நிகழ்வுகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தேயாக வேண்டும். எல்லா சக கலைஞர்கள் போலவும் ஏன் கொஞ்சம் அதிகமாகவும் ஒரு எழுத்தாளனுக்கு சமூகவியல் அழுத்தங்கள் அதிகம். ஏன் இந்தப்பிரச்சனையை எழுதவில்லை, ஏன் இப்படி எழுதினாய். அவன் ஒரு அரசியல் அமைப்பின் அப்போதய நிறுவனங்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ நிற்கக்கூடிய அகதியாகிறான்.

அவன் எழுத்துலகில் அதற்கு இடமில்லையென்றாலும், ஒரு அரசியல்வாதிபோல அவனிடம் அறிக்கையை எதிர்பார்க்கிறது சமூகம். இல்லையெனில் சமூக அக்கறையற்ற எழுத்தாளன், மக்களுக்கான கலைஞன் இல்லை என அவன் மீது கல்வீசப்படும். கண்ணாடி எழுத்தாளார்கள் நிறைய நொறுங்கிவிடுகிறார்கள். சிலர் மெளனம் காத்து தப்பித்துவிடுகிறார்கள். சிலர் வாய்ச்சேவை செய்து இழவுக்கணத்தை தாண்டிவிடுகிறார்கள்.

தற்போதய சமூகத்திற்கு தேவைப்படாத எதுவுமே தேவையற்றது, சமூகத்தின் பிரதிபலன்களை உறிஞ்சி வாழ்ந்து எந்த பயன்பாடும் திருப்பிக்கொடாது போகும் எல்லாமே தேவையற்றவை, அளவிடமுடியாத பயன்களை உற்பத்தி செய்யும் எந்த தத்துவமும், செயலும் அழிக்கப்பட தகுதியுள்ளவையே, என்கிற
மிகப்பெரிய அறிவுஜீவி கருத்து வன்முறை இலக்கியத்தின், எழுத்தாளனின், கலைஞனின் மீது தொடுக்கிற ஒருபக்க போர்தான் அது.

அதன் விளைவாய், எழுத்தாளர்களே தங்களுக்கு தாங்களே சுகமாய் சுமக்கும் சிலுவைகளா அல்லது தத்துவ அரசியல் அவர்களுக்கு போட்டுவிட்ட முள்கீரிடமா ? ஒரு எழுத்தாளனே அவனது சூழலால் சமூகவியல் பற்றி பேசமுற்படுவதில் எந்த தப்புமில்லை. ஆனால் அவன் நிர்பந்திக்கபடும்போது
பயணப்படாத பாதைகளை கண்டறிய வேண்டியவன், தெருமுனை கழைக்கூத்தாடியாகிறான். நிர்பந்தக்களற்ற, கட்டளைகற்ற புதிதாய் தேட விளையும் வெளி, அவனை ஓரளவு பாதுகாக்கும் சமூக அமைப்பு கலைஞன் விளைவதற்கான நல்ல நிலம். அப்படியில்லா சூழல் கண்ணுக்கு தெரியாத நிறைய சிலுவைகளை எழுத்தாளன் மீது சுமக்கச்செய்கிறது. இல்லையெனின் அவனுக்கு தெரியாமல் அவனே சுமக்கிறான்.

அப்படிப்பட்ட சிலுவைகளுற்று ஆயினும் பாதுகாப்பாய் புனைவுலகின் தற்காப்பு பேழைகளோடு கருத்துக்களத்தில் யுவனின் யுத்தத்தை நுட்பமான வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும். யுவனின் இரு நாவல்களிலும் குண்டூசி தேடாத தேட தேவையற்ற புறவுலகம் தாண்டிய உலகத்தை அக உலகத்திலிருந்து தேடவிளைகிற யானையா எழுத்து எழுந்து நடக்கிறது. சிறு விசயங்களில் கால்பதித்து பெருவிசயங்களுக்கு எழுகிற கதை சொல்லி.

புனைவுலகின் உச்சமாய் கேள்விகள், காலமும் பிரபஞ்சம் :

புனைவுலகின் உச்சமாய் அமைகிறது ஸோமிட்ஸிய பூர்வ கிரந்தங்கள். கிட்டதட்ட வேதமொழிகள். காலத்தை, பிரபஞ்சத்தை, மானுடத்தை, தத்துவத்தை, தர்க்கத்தை, தற்கால தேவையை எழுத, சுருங்கிய கவிதையாய், மலர்ந்த மொட்டாய் மொழி மலர்கிறது. தத்துவ வாசனையோடு.

[’டேய், கேஆர்விஜயா சிவாஜி படத்தல அழுகை மாதிரி தத்துவ கொட்டுதேடே. சொட்ட வேண்டாமா. இந்தபாரு தத்துவ துளி ஏன் பேண்டு மேலேல்லாம் ‘ என்று கோபு மாமி கேலி செய்தாலும் எனக்கு தத்துவங்கள், அநுமானங்கள், அதன் மீதான தர்க்கங்கள் பிடிக்கும். அதனாலே கிரந்தங்களை மிகவும் ரசித்தேன். அதெல்லாம் பிடிக்காத கோபுமாமா, அந்த அத்தியாங்களை தாண்டி கொஞ்ச நாள் கழித்து சீரியல் பார்த்தாலும் புரியும் என்பதான மனநோக்கு கொண்டு பக்கங்களை தள்ளினார்.]

காலம் :

காலச்சக்கரம் பற்றிய படிம தாந்தீரிகங்கள் திபெத்திய பெளத்த மரபின் முக்கியமான ஒன்று. மண் மீது வரையப்படும் காலச்சக்கரம் விஞ்ஞானம் சொல்லும் பிளாக் ஹோல் தியரி போன்றதல்ல. மனதிற்கு எளிமைப் படுத்தப்பட்ட ஓன்பது அடுக்குகள் கொண்ட ஒரு பெருவெளி. இந்திய யோக, தியான மரபும் சக்தி களம் என்று பொருள்பட அதை குறிப்பிடுகிறது.

பெளத்த துறவிகள் காலச்சக்கரத்தை விழிப்புணர்வு கொடுத்தவுடன் அதை கலைத்து அதன் மணலை உலக நதிகளில் கரைப்பார்கள். வாழ்க்கை அநித்தியமான ஒன்று என்ற படிமமாக இதை பார்க்கலாம். ஜென், புத்த பிக்குகளின் மடவாழ்க்கை, யதார்த்த வாழ்க்கையோடு மோதும் தத்துவ விசாரணைகள் மற்றும் காமத்துடனான அவர்களின் போராட்டங்கள் என இதுவரை பேசப்படாத துறவு நிலையை தெற்காசிய படங்கள் காட்டுகின்றன.
இந்து மதத்தின் அறிவு முரணியக்கதால் விளைந்த பெளத்தம் ஏன் கலை இலக்கிய உலகில் பிரதானப்படுத்தவில்லை என்பது ஒரு நுட்பமான கேள்விதான்.

மிகப்பெரிய ஆன்மீகத்தின் விதைகள் இந்தியாவிலிருக்கிறது மற்றும் அதன் விளைநிலம் இமய மலை சார்ந்த திபெத்திய பூமி என்கிற பழைய பெருங்காய டப்பா பெருமையை மட்டுமே சொல்லிக்கொண்ட நமது கலைப்பரப்பில் தத்துவம் சார்ந்த படைப்புகளுக்கு பெரும் வறட்சியே நிலவி வந்திருக்கிறது – ஓரிரு படைப்புகள் தவிர்த்து. அத்தகைய விசயங்களை இலக்கிய பரப்பில் கையாளுதல் படைப்பாளிக்கு மிக சவலான ஒன்றுதான்.

காலத்தை பற்றி தத்துவாதிகள், அறிவியல் அறிஞர்கள் இரண்டு பேர் பேசினாலுமே புரியாது. ஆனால் புரிவது போன்ற பாவனைகளை ஏற்படுத்தும் கீழ்கண்ட சில வரிகள் புனைவுலகின் உச்சம்.

இருப்பது மாத்திரமே. நகர்வது அல்ல.

இடவலமாக கால்சுற்று சுற்று. நீளமும் அகலமும் இரு வேறு அலகுகள் அல்ல என்று உணர்வாய். நீளமும், அகலமே. அகலமும் நீளமே. கிளையில் பூத்த மலர். முள்ளம்பன்றியின் பார்வைக்கு உயரத்திலிருக்கிறது. ஆகாய வீதியில் பறக்கும் கழுகின் பார்வைக்கு ஆழத்தில் இருக்கிறது. நத்தையின் பார்வையின் உயரமும் நீளமே.

இனிமேல் எனும் மூன்று கருக்களையும் தன்னுள் கொண்ட தற்சமயம் என்னும் விநோத முட்டைக்குள் பிரபஞ்ச உயிர்த்தாது ஜீவிக்கிறது.

துங் லோவின் நீர்ப்பரப்புக்கு வெகு உயரத்தில் பறக்கும் மீன்கொத்தியின் பார்வைக்கு. வெளிச்சத்தில் பளபள்க்கும் மீன் தற்போதில் இருக்கிறது. கொத்தித் தூக்கிச் செல்வதற்கு பல நூறு கஜத் தொலைவில் இனிமேலில் இருக்கிறது.

பிரபஞ்சம் :

வார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்கு சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.

எப்படி பிரபஞ்சம் வந்தது என்பதை அறிவியலுக்கு இணையாக மதங்களும் அறிய முனைகின்றன அநுமானங்கள், உள்ளூணர்வின் மூலம். திபெத்திய பெளத்த பிண்ணனி கொண்ட வாழ்க்கையின் தளங்கள் பற்றி விவரிக்கும் கீழ்கண்ட பகுதி உண்மையில் பிடித்து படிப்பவருக்கு மெய் சிலிர்க்கவைக்கும். ஏற்கனவே எல்லா தரிசனங்களிலிருக்கு ஒன்பது நிலையின் ஒரு நீட்சியாக இது இருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. பெளத்தம் பற்றிய லாமாவின் எழுத்துக்களின் சரியான சுருக்கமான கதையுடன் ஓன்றிய புனைவுலகுப்பதிவு.

’பூவுலகம் என்பதும் அதைச்சார்ந்த உயிர் வாழ்க்கையும் ஒன்றன் மேல் ஓன்றாக படிந்த ஓன்பது தளங்களை கொண்டது என்றும் ஏழாவது தளத்துக்கு அப்பால், இரவு பகல் என்னும் இரட்டைத் தன்மையற்ற நிரந்தர காலவெளி ஒன்று இருப்பதையும் கண்டு சொன்னவர் இரண்டாவது குருவே “

’இவற்றில் முதல் ஐந்து தளங்கள், எல்லாச் சாமான்ய உயிர்களுக்கும் உள்ளது. அபூத வெளி வாழ்வு, குழந்தைமை, வாலிபம், மூப்பு, மீண்டும் அபூதவெளி எனச் சக்கரமாக சுழல்பவை இவவந்து தளங்களும் முதலாவது ஐந்தாவது ஓன்று போலவே தோன்றினாலும் அவையிரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம் மகத்தானது. ’

’ஆறாவது தளத்தில், பார்வை ஊடுருவும் சக்தி கொண்டதாகிறது. காலத்தையும், இடத்தையும் முன்னும் பின்னும் நகர்த்திப் பார்வை கொள்ள இயலும் இந்தத் தளத்தை எட்டுபவர்களால், யாருமே இந்த தளத்தை அடைய முடியும். ‘

’ஏழாவது தளம், உடல் ஆயுளை சராசரி விளிம்புகளுக்கு அப்பால் உந்தி தள்ளுவது. ( இதற்காக உயிர்பலி தேவை) எட்டாவது தளம் ( அண்ட பேரண்டத்தை ஒரு நொடிப்பொழுதாக சுருக்கி தர வல்லது ) ஒன்பதாவது தளம் தேவ ரகசியம். ‘

இத்தகைய தளம் ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சவால். முழுக்க கற்பனை தோய்ந்த அதே நேரம் லாஜிக்கலாய் வளர வேண்டிய சிந்தனை அடுக்குகள், மிக நன்றாகவே வந்திருப்பதாக பட்டது. என்னால் ரசிக்க முடிந்தது. ஓவ்வொரு குருவினாலும் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்ட மத எழுத்துக்கள் ஒரு பொதுத்தன்மை கொண்ட சித்திரத்தை எழுப்புகிறது. எல்லா மதங்களின் உயரமும், வீழ்ச்சியும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். உண்மைபோல் பொய்கள் சொல்லும் கிரந்த எழுத்து.

அடிக்கோடிட்டு நான் ரசித்த பகுதிகள்

பறிக்கப்படும்போதுதான், சுகந்திரம் என்பது வெறும் சொல் அல்ல, முழுமையான ஒரு அந்தரங்க உணர்வு என்பது தெரியவருகிறது.

துறவியின் உடல் தானக திறந்து கொள்ளும் மனப்பிம்பம். அன்னை பிம்பம் தாண்டி இன்னொரு பிம்பம்.

சரீரம் பருவுலகத்துடன் கொள்ளும் இன்னொரு உடன்பாடுதான் மரணம் என்கிற அளவுக்கு சுருங்கிவிடுகிறது. தனிமையின் கைக்குழிகளில் சிந்தனை நிரம்புகிறது.

தியான மெளனத்தில் சலனமுறும் சுவாசமே உயிர்ப்புலம் என்றறிக.

விசை கொண்டு விரைந்த காலம், சற்றே ஓய்ந்ததுபோல தோன்றிய தருணம் அது.

கதாபாத்திர முரண்கள் ( வெக்ஸ் முல்லரும், ஜீலியஸ் லூம்பாவும்)

போர்க்கான கேள்விகளை தொலைத்த எந்த சமுதாயத்திடமும் கேட்டுக்கொண்டிருக்கலாம். ஈரானோ, இலங்கையோ.. கேள்விகள் அதே தான், பெயர்கள் மட்டும்தான் வேறுபடும். தோட்டாக்களுக்கும், போர்களுக்கும் பெயர் ஒரு பொருட்டல்ல. இந்த முரணை இரு கதாபாத்திரங்கள் மூலம் கதை சொல்லி முன் வைக்கும்போது – இந்த விவாதங்கள் ஓவ்வொரு தலைமுறையும் திருப்பி கேட்டுக்கொள்ள வேண்டியவையாகத்தான் தெரிகிறது. நான் ரசித்த சில வரிகள், இடங்கள் வெக்ஸ் முல்லரையும், ஜீலியஸ் லூம்பாவையும் தெளிவாய் காட்டுகின்றன். நாவலின் சில நிகழ்வுகள், முடிச்சுகள், திருப்பங்கள், கேள்விகள், வார்த்தைகள், அதன் உண்மைகள் – காவியத்தெளிவு கொண்டு புத்தகம் தாண்டியும் நீண்டு கொண்டே செல்லும்.

பாதர் கர்த்தர் ஏன் கறுப்பராக பிறக்கவில்லை ( ஜுலியஸ் லூம்பா)

சக மனிதர்களின், அதுவும் நுன் உணர்வு கொண்டவன் தன் சக மனிதன் என்றால் போதும் புரதம் மிகுந்த சாப்பாடு அது. மற்ற தாவரம், ஜீவராசிகளுக்கு அது இல்லை. ( வெய்ஸ் முல்லர்)

அடேயப்பா, தப்பியோடி இவ்வளவு தூரம் வந்துமா பயம் தணியவில்லை. (லூ)

சுடாமல் நிதானித்து லூ யோசிக்கிறான்.’ தூக்கத்தில் ஒருவன் ஐரோப்பியனாகவோ, ஆப்பரிக்கணாகவோ இருப்பானா என்ன? ‘

ருஸ்யாவில் இருக்கும்போது பலதடவை எனக்குத் தோன்றும் அந்த தேசத்தின் அரசியல் பாதைய் தீர்மானித்த சிந்தாந்தை கருத்தரித்தவர் என் தந்தை நாட்டை சேர்ந்தவர். ஆனால் எங்கள் நாட்டின் அரசியலுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. எத்தனை அழகான் முரண் ? (வெமு)

நிச்சயமின்மையும், தர்க்கமுறிவும்தான் வாழ்வின் செய்திகள் என்று தெரியவருகிறது. (வெமு)

*
யுவனின் புத்தகத்தையும் எனது விமர்சனத்தையும் கேட்ட கோபு மாமா, இப்போது மெளனியின் புத்தகங்களை கேலி செய்தபடியே படித்துக்கொண்டிருக்கிறார்.

*

mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி