கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

கே. ஆர். மணி


3. படைப்பாளி – யுரேகா – துண்டு எங்கே ?

பாவண்ணண் – கதை சொல்லியல்ல. எழுத்தாளர். தன் வலியை, புரிதலை, பார்த்ததை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிப்போகிற
கதை எழுத்தாளர். ஒரு திணை சார்ந்த பெருமை கொண்ட நாக்கோ, குழுப்பாடகனின் தத்துவப்பாடலோ இடம்பெறுவதில்லை.
அகம் சார்ந்த தத்துவவிசாரணையற்று, புறத்தே நிகழும் நிகழ்வுப்புள்ளிகளிலிருந்து கோலம் சமைக்கிற எழுத்தாளர்.

80-களின் நவீனத்துவ அலை ஓடிக்கொண்டிருந்த காலத்தில் சாய்ந்த இவரது பேனா – அதீதமாய் எந்த இசத்தினூடும் ஓட்டிஉறவாடாது அமைதியாய் ஓல்லியாய் ஒரு குட்டையாய் ஓடிக்கொண்டிருந்தது எனலாம். அந்தக்காலம் பொதுவுடமை தனது சாயங்களை மெல்லதொலைத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் அதன் காலிப்பெருங்காய டப்பா வாசனை இருக்கத்தான் செய்தது. திராவிட இலக்கியம் கிட்டதட்ட காணாமல் இருந்தது. நவீனத்துவம் இலக்கிய குழுக்களால் பேசப்பட்டு அதற்கான உச்சத்தை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தது.லாசாராவுக்கும், கிராவுக்கும் தனித்தனி பீடங்களிருந்தன. இவர் எழுத்துக்களில் அந்தக்கால ஹாங்க் ஓவர் அதிகமாய் இல்லாது போனது அதிர்ஸ்டம்தான்.

கதைத்தள சோதனையோ, புதியன படைக்கவேண்டுமென்று களி கிண்டும் முயற்சியோ, பிடித்த முயலுக்கு காலேயில்லை
என்றும் போராடும் இலக்கிய அரசியல்வாதியில்லை இவர். போடப்பட்ட மண்ரோட்டில் செய்வன திருந்த செய்பவர்.
அப்படியெல்லாம் செய்யாவிட்டால் இலக்கிய உலகத்தில் எப்படி பொன்னால் பொறிப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாது
தனக்கான, தான் பார்த்த புள்ளிகளை இணைத்து தனக்கு பழக்கமான தரையில் கோலம் போடுகிறவர். அதே தரை, அதே மாவு,
மாறுபடும் கோலங்கள். கொஞ்சம் சாணிமேல் வைத்த பூ, சிவப்பாய் பார்டர். இவ்வளவுதான் என்கிற தெளிவு.
ப்ளாஸ்டிக் பேப்பர் வாங்கி வைக்கிற கோலமில்லை. நிலம் தாண்டி புதிதாய் ஹைவேயில் போடுகிற கோலமில்லை.
சுருக்கமான விவரணை, அரிதாய் தென்படும் அங்கதம், தேவையான இடத்தில் மட்டும் முகம் காட்டிவிட்டு போகும்
படிமங்கள், சோகங்கள், துன்பவியல்கள் என பூத்துக்குலுங்குகிறது இவரது எழுத்தெல்லாம். கோலம், நவீனத்துவ வடிவ அழகோடு,
ஆர்ப்பாட்டமில்லாமல், அதீத சோதனையின்றி, பெரும்பாலும் புற நிகழ்வுகளை கொண்டு கட்டப்பட்ட சமன்பாடுகளின் படி முன்னேறுகிறது இவரது எழுதுதளம்.

மண்ரோட்டில் போடப்பட்ட வீட்டுக்கோலம். எந்த அடைப்புக்குறிக்குள்ளும் அவ்வளவு இலேசில் அடைபட்டுக்கொள்ளாமல்
இருந்தது இலக்கிய அரசியல் உலகில் ஆச்சரியம்தான்.

பாவண்ணண் என்கிற படைப்பாளியின் எழுத்து தூண்டுதல் எதுவாயிருக்கும் ? – என்ன சுண்டைக்காய் கேள்வியுது ?
ஆனாலும் கேட்டு வைப்போம். தன் மூலமும், தான் அறிந்தவர் மூலமும் கிடைத்த அநுபவத்தை வாழ்க்கை பகிர்தலை, தேடலை எழுதிக்கொள்ளும் முயற்சி, கலை மனிதருக்காக அதுவும் அடித்தட்டு மனிதருக்காக என்கிற பிரஞ்ஞை, துன்பவியலையும் படைக்கவேண்டுமென்கிற அவாவினால் சிற்றிதழ் சந்தையில், குறுகிய இலக்கிய வட்டத்தில் மட்டும் எழுத நினைக்கிற தேர்வு, புலம்பெயர்ந்து வேரிலிருந்து தள்ளப்பட்டு வேரையே நினைக்கும் விழுதுகளின் நித்திய பிரசவ வலி, அந்த மண்ணின் எழுத்துக்களின் சாரத்தை உறிஞ்சி ஏன் என் தமிழுக்கு கொண்டு செல்லமுடியாது என்கிற ஆதங்கம், அதனூடான சின்ன முயற்சிகள் – இப்படி பலவகையான பதில்கள். மேலே சொன்ன எல்லாவாகத்தானிருக்கும் என்று சொல்லிவிட்டுத்தான் இந்தக்கேள்வியை நாம் தாண்டிபோகமுடியும். அவரும் அப்படித்தான் உணர்கிறார்.

பாத்திரமறிந்து பிச்சை போடும் எழுத்தாளனை பாத்திரம் மூலமாக தேடிப்போகமுடியுமா. உடைந்த பாத்திரங்களில் எழுத்தாளனின் உருவம் எங்காவது ஓட்டியிருக்குமா ? குறைந்த பட்சம் எந்த தளம், எவ்வளவு ஆழம் என்றாவது கணக்கிடமுடியுமா ? நாவலில் அவர் எவ்வளவு தூரம் தள்ளியும், உள்ளேயும் இருக்கிறார் ? ஒரு படைப்பாளியின் மையச்சரடு எது என்று ஒரு வரியில் சொல்லச்செய்வது வாசகன் விரும்பாத ஒன்று. வியர்வை வழிய சமைத்த சமையலை, புத்தகம் படித்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, ‘பரவாயில்லை, நன்னாயிருக்கு ‘ என்று ஒற்றைவரியில் விமர்சித்துவிட்டு குனிந்துகொள்ளும் கயமைத்தனமானது. ஆனாலும் அப்படி பாத்திரத்திற்குள் படைப்பாளியை தேடிப்பார்ப்பது, அவர் எழுத்தோடு அவரது ஆளுமையும், பின்புலத்தையும் இணைத்துவிடுவது வாசகமனதில் தானகவே நடந்து, இருப்பின் வசதியின்மையை போக்குகிறது.

அப்படியானால் பாவண்ணணின் நாவல் பாத்திரங்கள் எப்படியிருக்கின்றன ? அவைகள் எது வேண்டுமோ அதுவாகவே ஆகிவிடுகிறது.
தன் வலி தன்னை சார்ந்தவர்களின் வலியை மையம் கொண்டவையானவையாக அமைகின்றன. பெரும்பாலும் வாழ்வின் துன்பவயிலுக்கு தங்களை எதிர்பார்த்து தயார் செய்துகொள்கிற பாத்திரங்களாகவும், அதற்குப்பிறகான வாழ்க்கை ‘எல்லாம் அப்படித்தான்.. நல்லபடியாய்நடக்கும் என்கிற நம்பிக்கை, கால வீழ்ச்சி, வீழும் விழுமியங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, எழுந்து நகரும் பண்பை மிக அடிமின்னூட்டமாய் கொண்டு ஓடுகிற தலைமை பாத்திரங்களின் அழுத்தமான, அமைதியான அவரின் சுபாவம்தான் எழுத்துக்களில் எல்லாம் விரவிக்கிடக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கியவட்டம்.

அவரின் தலைமைபாத்திரங்கள் வறண்ட நதியாய் வாழ்கிறார்கள். இவர்கள் ஓயாது மானிட குலத்தின் நம்பிக்கைகளை மீட்டெடுக்கிறார்கள்.
ஒரு கான்கிரிட்(கணிப்பொறி) காடான இந்தத்தலைமுறை முன் அது பதிவு செய்யப்படுகிறது. அதுதான் ஒரு இலக்கியவாதியின்
முடிந்த வேலையாகவுமிருக்கலாம்.

4. படைப்பிலிருந்து சில துளிகள்
மற்ற எந்த வடிவத்தைவிட நாவல்களில் ஒரு படைப்பாளியின் உச்சகட்ட ஆக்கம், ஆற்றல், உழைப்பு
வெளிப்படுவதாக நம்புகிறது இலக்கிய உலகம். எவ்வளவு உண்மையோ தெரியாது, ஆனால் ஒரு
படைப்பாளியின் ஆளுமை அதிகமாக தென்படுகிற ஒரு வடிவம் நாவல் என்பதில் அதிக கருத்து
வேறுபாடு இருக்கமுடியாது. எனவே, பாவண்ணனின் ஒரு சில நாவல் படைப்புகளைப்பற்றிய சிறுகுறிப்பும்,
அதிலிருந்து எழும் கேள்விச்சிதறல்களும் ஆராய்தல் ஆளுமை அறிதலின் அடுத்த கட்டத்திற்கு
கொண்டு செல்லலாம்.

4.1 வறண்ட மணல்நதி : வாழ்க்கை விசாரணை

வாழ்க்கை என்பதுதான் என்ன என்கிற தத்துவ விசாரணையை மேட்டுக்குடி மட்டுக்குமான கேள்வியில்லை.
வாழ்கிற எல்லா உயிர்களும் அதற்கான இருத்தியல் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சவால்களும், போராட்டங்களும்
சொல்லப்போகிற தத்துவங்களும், பாடங்களும் ஒன்றாகத்தானிருக்கமுடியும். அப்படியான கதைச்சரடிலிருந்து
எழுகிற நாவலாக இதுபடுகிறது. ஒரு அடித்தட்டு மனிதனான காளியப்பன் கண்ணோட்டத்திலிருந்து ஊர்கிறது நாவல்.
போலிஸ் ஸ்டேசனில் தொடங்கி அங்கயே முடிகிற நாவல். தான் செய்யாத குற்றத்திற்காக அவன் இருமுறையுமே
அவமானப்படுத்தப்படுகிறான். ஓரளவு அவர்கள் வாழ்க்கையை அப்படியே எழுத்தில் பிடித்ததில் மற்றும் இதனால்
தெரியப்படும் நீதியாதெனில் என்றோ, வாசகர் கண்களை கலக்குமளவுக்கு துன்பவியியல் கிளசரின் அப்பாமல்
விட்டதே இந்த நாவலின் மிதமான வெற்றியெனலாம்.

சேரியும், சேரி சார்ந்த நாவல் என்று வகைப்படுத்தலாம். குடிகார காளியப்பன். சேரி வாழ்க்கை வாழும் சாதரணன்.
மாடுகளுக்கு லாடம் கட்டிப் பிழைப்பு நடத்தி வாழும் பொருளாதார நிலையற்ற வாழ்க்கையிலும், வறுமையிலும் செம்மையானவன்.
சூழல்களினால் நியாயமற்ற விசாரணைகளுக்கு இலக்காக நேர்கிறது. நல்ல நாவலில் இருக்கவேண்டிய அம்சங்கள் தானாக
வந்து விழாவிட்டாலும் படைப்பாளியில் திட்டமிட்ட உந்துதலால் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருப்பது பெரிய தவறொன்றுமில்லை.
சந்தேகப்படும் கணவன், மன நெகழ்வான விபச்சாரி, காதலித்துவிட்டு ஓடிப்போகும் ஒரு காதலன், ஆதிக்க சக்தியாக முதலாளி,
அடித்து துவைக்கும் போலிஸ் – அடித்தட்டு மக்களுக்கான கதையில் இடம்பெற வேண்டிய அத்தனை பாத்திரங்கள் இதிலும் உண்டு.

வித்தியசாகமாகவும், அழககாவும் கையாளப்பட்ட சில கதாபாத்திரங்கள் நம்மை வியப்புள்ளாக்கவும் செய்கின்றன.
வாட்ச் திருடி மறுபடியும் சைக்கிள் திருடி விற்று மும்பாய் போய் பிழைத்து பணம் அனுப்பும் தம்பி, மிகப்பெரிய வீழ்ச்சியின் பிம்பமாய்
குடித்தே கெட்ட தஷ்ணாமூர்த்தி, நம்பிக்கை தூணாக அனைவரின் பூர்வோத்தரங்களை அறிந்த வடிவேலுத்தாத்தா, இடையில் வந்து சேர்ந்து
ஓடிப்போகும் பைத்தியக்காரன். இவற்றையெல்லாம்விட நாயகனை சதா அலைக்கழிக்கும் தொழில் சிக்கல்கள் அதனால் எழும் நிலையற்ற
பொருளாதார வாழ்வியல் என்பவையே இந்த நாவிலின் அரிதான பதிவாகப்படுகிறது.

இதுதான் அவர்களது வாழ்க்கை என்று சொல்லிவிட்டு மட்டும் போய்விடுகிற பாணி , இதனால் தெரியப்படும் நீதியாதெனில் என்கிற
உரத்த குரலற்ற நடை, மாறி மாறி வருகிற துன்ப இன்பங்களின் கோர்வை, சோகமான நவினத்துவ பாணியின் தாக்கம்,
தேர்ந்தெடுத்த களத்தைவிட்டு துறுத்தி நிற்காத நடை, இறுக்கம் என்று சொல்லாவிட்டாலும் அதிக தொய்வில்லாத
கதையொழுக்கு, சில கதாபாத்திரங்களை கொண்டே கிட்டத்தட்ட அந்த சேரியின் முழு குறுக்குவெட்டுத்தோற்றத்தை ஏற்படுத்தியதில்
கொஞ்சம் வெற்றி, சின்னதாய் கதை திருகல் மூலம் கதாபாத்திரத்தின் ஆழத்தை சொல்லாமல் சொல்லிச் செல்லும் லாவகம்
என்று கலவையாய் நிற்கிறது நாவல் ‘வாழ்க்கை விசாரணை’

“சேரியிலும் செம்மையான வாழ்க்கை ” ( என்ன ஆணவமான மேட்டுக்குடி எழுத்து. ஏன் சேரியில் செம்மையிருக்காதா ? )
எல்லாயிடத்திலும் வாழ்க்கை செம்மைதான். நமது பொதுப்புத்தியில் அவ்வாறு பதிக்கப்படாததுதான் செம்மையற்றது.
வாழ்க்கையின் கவலை, சந்தோசம், உணர்வுகள் போன்றவற்றில் அளவுகோல்கள் என்பதேயில்லை. நாவலின் முதலில்
நாயகன் சாராயம் குடிக்க செல்லும் காட்சி கிட்டத்தட்ட சங்கீதபாகவதர் பாட்டுக்கச்சேரிக்கு ரசனையோடு போகிற தொனியில்
எழுதப்பட்டிருப்பது நுட்பமான விவரணை. இரண்டுமே மாயை விலக்கி அத்வைதத்திற்கு அழைத்து செல்லும் பாதைகள்.

கிழட்டு நதியாய் கிழவர் வடிவேலுத்தாத்தா, வற்றாத நம்பிக்கையும், விழுமியமும் சுமந்து கொண்டு வறண்ட மணலாய் காளியப்பன்,
எல்லா கிராமத்து சிலுவைகளையும் தொலைத்துவிட்டு நகர கான்கீரிட் காடுகளில் தொலைத்து பாண்டிச்சேரிக்கும், மும்பைக்கும்
ஓட எத்தனிக்கும் அடுத்த தலைமுறை.

கிழட்டு நதி, வறண்ட மணல்நதி அதன் பழைய காலத்தின் ஈரநினைவுகளோடு – அந்த சேரியை துறந்து ஓடும் கான்கீரிட் காடுகள்.

***********************************

4.2 சிதறும் கான்கீரிட் காடுகள் (சிதறல்கள்)

சிதறல்கள் – பாண்டிச்சேரியில் 1982-84 கால அளவில் இரண்டாடுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மூன்று ஆலைகளை
சேர்ந்த ஆறாயிரம் குடும்பங்களில், ஒரு சில குடும்பங்களின் சீரழிவை சித்தரிக்கிறது இந்த நாவல். தொழிற்சங்கள், பெரிய ஆலைகள்
அது சார்ந்த வாழ்க்கை 70,80 மற்றும் பெரிய மாற்றங்களை கண்ட 90களின் ஆரம்பகால நிலைமையை ஓரளவுக்கு
கண்முன்னே காட்டியிருக்கிறது. மாறிய வர்த்தக சமன்பாடுகள், உலகமயமாக்கம், பெரிய மீன்கள் மட்டுமே நீந்தும் உள்நாட்டுச்சந்தைகள்,
தனது வேலையை சிறு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு, சந்தைப்படுத்தலை மட்டுமே நோக்கும் பெரிய மீன்கள், தேவையற்ற தொழிற்சங்கங்கள்,
வளர்ந்த மத்திய தட்டு வர்க்கம், விஸ்வரூபமெடுத்த நுகர்வோர் கலாச்சாரத்தில் மாறிப்போன, பெருகிப்போன தேவைகள்,
அடிமட்ட தொழிலாளர் தட்டுப்பாடு – என்பவையெல்லாம் இந்தக்கதையை 2008க்கு தேவையற்ற, இறந்தகால பதிவாக மாற்றிவிடும்
என்று எண்ணுவது முட்டாள்தனம். வேலை இழத்தல், பொருளாதார சரிவு, குடும்பத்தோடு தற்கொலை செய்தல், தன் தகுதிக்கு மீறிய
செலவுகள், நிலைகுலைதலை எதிர்பாரமை இவையெல்லாமே – இந்த தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திலும், எல்லா நாடுகளிலும்
நடப்பது இதெல்லாம் தொடர்கதைதான் என்கிற அநுபவஅறிவை ஞானத்தை கொடுக்கின்றன. காலம் காலமாய்
நாம்தான் இதையெல்லாம் கவனிப்பதில்லை.

வேலை தொலைத்த துன்பமும் அதை மட்டுமே முதுகெலும்பாக எண்ணியிருக்கும் (முருகேசன் மற்றும் அவன் தொடர்பு கொண்ட குடும்பத்தின் சீரழிவும்,
அதனால் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஏதோ ஒரு வேலை, வேறிடம் குடிபுகுதல், பிடிக்காத முடியாத
வேலை செய்தல், தினமும் நசியும் நம்பிக்கை, ஆனாலும் மாறாத விழுமியங்கள், எங்கோ ஊறும் பாறையடித்தண்ணீர்போல நம்பிக்கை
கசிவு, தன்னையும் மற்றவரையும் தேற்றும் மனித மாண்பு எல்லாம் கலந்துகட்டிய தலைமுறையின் பதிவு. மனிதம் மீது இடைவிடாது
இத்தகைய தாக்குதல்கள் இயற்கையாலோ மற்ற மனிதர்களாலோ தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. உணர்ச்சி கொந்தளிப்பு,
பிரச்சார நெடி, வர்ணணை மயக்கமற்ற நடை. தத்துவ மூக்கு நுழைப்பில்லாததும், முதலாளித்துவதின் மீது சேறுவாரி தூற்றாததும்,
மடியாத உட்கசியும் நம்பிக்கையை (pursuit of happiness) எடுத்தாண்டவிதமும் சிதறல்களை நல்ல நாவலாக
காட்டியிருக்கலாம் என்றாலும், அதன் வீச்சை அதீத சோகம் காட்டும் பாத்திரங்கள் அதனை ஒரு சராசரி நாவலாக்குகிறது.

நுட்பமான நிறைய இடங்களும் உண்டு. ஒரு சில தலைமுறைகளில் மாறும் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள் , உணவு, உடை, இருப்பிடத்திற்காக
மட்டுமே போராடிக்கொண்டிருந்த தந்தையர் தலைமுறை, அவர்களிடமிருந்த பிரஞ்சு விசுவாசம், தன்காலத்தில் அவையெல்லாம் விடுத்து
தேசவிடுதலைக்காக போராடி பின் வாழ்வாதராத்திற்காக போராடுதலாகப்போன நிலைமை, குடும்பத்திற்குள் புறவாழ்க்கையின் பாதிப்புகள்,
தனது பெண் வேலைக்கு போகும் மாறும் விழுமியங்கள் என ஒரு நூற்றாண்டு மாறுதல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அப்பா கிழட்டு நதி, முருகேசன் வறண்ட மணல் – இந்த நாவல் இங்கேயே முடிந்துவிடுகிறது. அவனது அடுத்த தலைமுறை
கான்கீரிட் காடுகளை நோக்கி, வேலை நோக்கி துரத்தியடிக்கப்பட்டு தொலைந்துப்போகிறார்கள்.

தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை மிக நன்றாக பதிவுசெய்த எனக்கு பிடித்தநாவல், மெர்க்குரிப்பூக்கள்.
பிரமாதமாக எல்லா கோணத்திலிருந்தும் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல். தொடர்கதையாய் எழுதப்பட்டதால் கொஞ்சம் விறுவிறுப்பு
சேர்க்கப்பட்டது, அளவுக்கதிகமாய் தனிமனிதர்களும் உறவுச்சிக்கலும் ஆராயப்பட்டது, அளவுக்கதிகமான அழகியல் ,
மானுட சோகத்தை தேவையான அளவிற்கு பிழியவில்லை என்கிற இலக்கிய குட்டை ஜாம்பவான்களின் விமர்சன சகதியில்
ஒரளவு உண்மையாயிருந்தாலும் தொழிற்சங்க போரட்டத்தை அதைச்சுற்றிய வாழ்வியலை, இதைவிட பிரமாதமாய் இதுவரை எந்த எழுத்தும்
சொல்லியதில்லை என்பது என் கருத்துமட்டுமல்ல, எனக்கு தெரிந்து அந்த வாழ்க்கை வாழ்ந்து கடந்தவர்களின் கூற்றாகவுமிருந்திருக்கிறது.
பெருவாசகத்தளத்தில் அது வெற்றி பெற்றதாலே, அதுவே சாபமாக ஏதோ இலக்கியத்தெருவிற்குள் நுழையமுடியாது நிற்கிறது.
எல்லாரும் ஏற்றுக்கொண்டதை நல்லநாவல் என்று சொல்லிவிட்டால் அப்புறம் சிறுவாசக மற்றும் இலக்கிய விமர்சக ஜாம்பாவன்களுக்கு மதிப்பேது.. ?

இந்த நாவலிருந்து இப்போது சிந்தனை மற்றும் கேள்விகள் எழுப்ப வேண்டுமானால், கீழ்கண்ட கேள்விகளை எழுப்பலாம். ஒருவேளை
அது கடந்த இருபதாண்டில் தலைமுறையில் நடைமுறையில் ஏற்பட்ட கருத்துமாற்றமாகயிருக்கலாம்.

அ)இந்தியாவின் பலவீனமாக கருதப்பட்ட மக்கள்தொகையே பலமாக கருதப்படுகிறது.
ஆ) மாறிவிட்ட முதலாளியம் – குறைந்த நபர்கள், அதிக வேலை, அதிக சம்பளம். நிரந்திரமின்மை எப்போதுமுண்டு.
இ) திறந்த சந்தை, அதிக வாய்ப்புகள், பலமுள்ளதே பிழைத்துகொள்ளும், பலமற்றது செத்துப்போகும்.
ஈ) உலகமயமாக்கலுக்குப்பிறகு தரமான பணியாளர்கள் எல்லாத்துறையிலும் தட்டுப்பாடோடிருக்க வேலைக்கு பிரச்சனையில்லை.

கேள்விகள்:

– 90களுக்கு பிறகான தொழிற்சங்கங்களின் வேலையும் தேவையும் என்ன ? போனஸீக்காக போராடும் தரகுவேலை போய்விட்ட
பிறகு தொழிற்சங்கங்கள் எங்கே, இப்போது ?
– கடல் போன்று நிறைய சிறுதொழில்களால் ஆன சந்தை, ஒரு சில பெரிய மீன்களால் நிரப்பப்படும் மீன் தொட்டியாகிவிட்டதா ?
– இயந்திரமாக்கல், தொழில் நுட்ப அபிவிருத்தி போன்றவற்றை பற்றிய தொழிற்சங்கங்களின் பார்வை மாறிவிட்டதா ? மாற்றங்கள்
தவிர்க்கமுடியாதவை என்பதை உணர்ந்து கொண்டுவிட்டனவா ?
– முன்னேற்றத்தை அதுவும் தங்கள் காலத்திலே துய்ப்பதுமட்டுமே மக்களின் விருப்பமா ?
– உலகத்தொழிலாளார்களே, பாட்டாளி மக்களே, புரட்சி மலரும், விதை வெடிக்கும் – எல்லாம் இனி வீண்கோசம் தானா ?
– உண்மையிலே பிரச்சனை – பொருளாதாரா வீக்கமும், உள்ளோருக்கும் இல்லாதோருக்குமான இடைவெளி அதிகமாதலா ?

இந்த பிரச்சனைகள் இப்போதும் இருக்கத்தானே செய்கின்றன மாறுபட்ட ரூபத்தில். ( உலகப்பொருளாதார சரிவு, குடும்பத்தோடு தற்கொலை,
அமெரிக்கா பொருளாதாரத்தில் மின்னலடித்தால் நம் நாட்டு சந்தைக்களுக்கு ஸாக்கடிக்கிறது, மனிதர்களை லாபம் உற்பத்தி செய்யும்
இயந்திரமாக நோக்குவதும், வயதானோரை வீட்டுக்கனுப்புதல், குறைந்துவரும் ஓய்வூதிய வசதிகள், உயரும் மருத்துவ செலவுகள், உடையும்
குடும்ப பாதுகாப்புகள், தேயும் Social Capital value, அழியும் கிராமங்கள், விவசாய்த்திற்கும், நெசவுக்கும் ஆட்கள் தட்டுப்பாடு..)

கான்கீரிட் காடுகளில் கிழட்டு நதியின் ஈரமில்லை. வறண்ட மணலின் வருத்தமுமில்லை. அது அதனது துக்கத்தை கூட இயந்திரமாகவும்,
பிரம்மாண்டமாகவும்தான் வெளிப்படுத்தவேண்டியிருக்கிறது.

“Think Big. Big. Get Screwed Big..”

****************

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி

கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

கே. ஆர். மணி



1.

அந்தத்தாத்தா எங்களுக்கு தூரத்து சொந்தம். சங்கீத விற்பன்னர். பாட்டி கூனல்
விழுந்த முதுகு, வாழாவெட்டி பெண், விளங்காத பேரன், ஒழுகும் வீடு, சம்சாரி
கொண்டு கொடுக்கும் நெல்தான் வயிற்றுக்கும் மற்றவற்றிகும். ஏழ்மை தவிர
வேறென்றுமில்லையென்றபோதிலும் அவர் வாயில் எப்போதும் சங்கீதமழை, வயசு
காரணமாய் இலேசாய் தெரிக்கும் எச்சிலோடு – சங்கீத மழை பொழி, பொழியும். என்
அப்பா அவரை சித்தப்பா என்று பெருமதிப்பு கொடுப்பார். எனக்கென்னவோ அந்த
சின்னவயசில் அந்ததாத்தா மீது மதிப்பெதுவுமில்லை.

“ச, ரி க..ம…. சொல்லுடா..” தாத்தா இம்சிப்பார்.
“ச்ச்ச..ர்ரிரி..க்ககா” மிகப்பெரிய மல்லுக்கட்டு.
“தா.. வயிலு தர்ப்பைபுல்ல வச்சித்தான் தேய்க்கணும்போல .. சித்தப்பா..” அப்பா சத்தமிடுவார்.
“அப்படி சொல்லாதடே.. குழந்தைடா..பெரியவன் நன்னா பாடறானே”
என் தலை தடவுவார்.

அப்பாவிற்கு ஆறுதலாயிருக்கும். எனக்கு கோபம் கோபமாய் வரும். ஆறு வயசில் சங்கீதம்
வரவில்லையென யாரு அழுதார்கள். அவர் தலை தடவியபிறகு அந்த கோபம் எப்போதும்
எங்கு போகுமென தெரியாது. பாட்டிகள் மற்றும் தாத்தாக்கள் கைகளில் ஏதோ மயக்கப்
பசையிருக்கவேண்டும், மயிர்க்கால்கள் தாண்டி மூளை கடந்து அவர்களால் இதயம் தொட
முடிகிறது.

அப்பாவிடம் மணிக்கணக்காய் பேசுவார். அப்பாவின் பவ்யமும், மரியாதையும் ஆச்சரியப்படுத்தும்.
அப்படியென்ன இந்த “மேலாத்து தாத்தாவிடமிருக்கும் ?” சுரண்டும் கேள்விகளுக்கு விடை
கிடைப்பதேயில்லை.

” என்ன சித்தப்பா.. எப்படியிருக்கு.. நெல்லெல்லாம் ஒழுங்கா வருதா..”
“எங்கடா வரது.. பொன் வைக்கிறயிடத்துல பூ மாதிரி ஏதோ வச்சிண்டிருக்கான்..
ஏதோ படியளந்திண்டிருக்கான்.. இப்பல்லாம் அவன் தான் இந்தாத்துக்கு பகவான்..”

மெளனம்..ஓழிந்துபோன நிலவுடமைச்சட்டத்தின் கடைசிதலைமுறையின் மெளனம்.
தாத்தாவிற்கு தன்வீடு போலவே தலைமுறையும் ஓழுகி தேய்ந்துகொண்டேயிருக்கிறதே
என்பதை நினைக்க நினைக்க நீண்ட மெளனம். அதைத்தான் சரளி வரிசைகொண்டு
நிரப்பிக்கொண்டிருப்பாரோ. பிரவாகமெடுத்து ஓடிய நதி, வறண்டு போய் மெளனமாய்
காலத்தை கடத்திக்கொண்டிருந்ததோ..

“தா.. இந்தப்பய சாகாமயிருந்தா.. ” தாத்தாவிற்கு கண்ணீர் மல்கும். அவரது பையனுக்கு
அப்பா வயதுதான். சாகாமலிருந்திருந்தால் நன்றாகத்தானிருக்கும். தோளுக்கு மேலே வளர்ந்த
பையனை தீக்கு வாரியிறைக்கும் புத்திரசோகம் போல கொடுமையானது எதுவுமில்லை என்கிறது
வேதம்.

அப்பாவிற்கு இலேசாய் கண்கலங்கும். அப்பா கொஞ்ச நேரத்திற்கு பிறகு கேட்பார்.
“சித்தப்பா. அந்த ஸீரி சக்ர ராஜ பாட்டுபாடேன்..”
ஒழுகும் வாயை துடைத்துக்கொண்டு மேலாத்துதாத்தா பாட ஆரம்பித்தார். அது தாத்தாவை
திசை திருப்பத்தானிருக்கவேண்டும்.
“..ஸ்ரீ லலிதாம்பிகையே.. அம்மா..” பாட்டு நெய்விட்டு, பருப்புபோட்ட ரச சாதம்போல குழையும்.

பாட்டு முடிந்து வெளிப்படையாய் அழுதிருப்பார் தாத்தா. யாருக்கும் தெரியாமல் அழுதிருப்பார்
அப்பா. புத்திரசோகத்தை ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் கொஞ்சநேரமாவது அந்தயிடத்தை
சித்தாப்பாவிற்கு நிரப்ப முயற்சிக்கிற செயலாக அது அமைந்திருக்கலாம். இருவர்களின் கணமும்
குறைந்து நிகழ்காலத்திற்கு வருவார்கள்.

கண் தெரியாத கூனல் முதுகோடு தவழந்துவருகிற பாட்டி தலை தடவி என்னை அணைப்பாள்.
.( ச்சீ. ஒரே நாத்தம்.ஓவ்வே..) அப்பா முகத்திலும், முதுகிலும் எதையோ தொலைத்ததை தேடுவதைப்போல தேடுவாள்.
தனது தொலைந்த பையனின் முகவரி தேடுகிறாளா.. அந்தவயதில் ஒழுகும் தாத்தாவையும், நாத்தப்பாட்டியையும்
எனக்கு பிடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எனது இமேஜைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டு புரியவில்லை
அதனால் பிடிக்கவில்லை என்று வேணாலும் திருத்திக்கொள்ளலாம்.

ஏதாவது பண்ணவா..” அப்பா.
” ஒன்னும் வேணாண்டா. கோந்த.. சந்தோசமா வந்து என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு
போனா போதும்..”

ராமயணக்கதைகள் முடிந்து வாழ்க்கையை நாமே ஆரம்பிக்கும்போதுதான் நமது
குடும்பக்கதைகள் கண்ணிற்கு படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் புகட்டப்பட்ட தாத்தாவின்
ஆளுமைச்சித்திரம் இப்போதுதான் புரிந்துகொள்ளமுடிகிறது.

அந்தக்கால விழுமியங்கள், நிலப்புரப்புத்துவ சமூகத்தின் கடைசிகாலத்தின் பிரஜையான
அந்தத்தாத்தாவின் விழுமியங்கள் மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கும்போது எப்படியிருந்த
குடும்பம், எப்படியிருந்த மனிதர்கள், எப்படியிருந்த சமூகம் – மிகப்பெரிய ஆச்சரியத்தையும்,
பயத்தையும் ஓரு சேர கொடுக்கிறது.

மாறிய சமூகம், கைவிட்டுப்போன விவசாயம், தொடர முடியாத தொழில், மற்றவன்
போடும் விளைநெல்லை நம்பியே வாழ்க்கை ஜூவனம், வாழ்க்கை கொடுக்கிற சில இழப்புகள்,
சிலுவையாய் போன ஜாதி நிர்பந்தங்கள், விந்திலே கலந்த சங்கீத ஆசை, கண்ணெதிரே விழுந்து
போகிற தன் கனவுகள், கொடுத்த சொல் தவறாமை, உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கம், மயிர் நிப்பின் வாழா
கவரிமான் – இதெல்லாம் புரியாத, புரிந்து கொள்ள முயற்சிக்காத அடுத்த தலைமுறை, அந்த தலைமுறையின் புரிதல்
வேறுபாடுகள், அதைவிட முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறைகொண்ட பேரன்
தலைமுறைகள் – இத்தனை நிகழ்வுகளும் ஒரு இரண்டு, மூன்று தலைமுறைக்குள்.

இது ஏதோ ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமான நிகழ்வல்ல. எல்லா குடும்பங்களுக்கும் கிட்டத்தட்ட
இத்தகைய நிகழ்வுகள். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்வது வேணாலும் இனிப்பாயிருக்கலாம்.
உண்மையில் அது அவ்வளவு இலகுவானதில்லையோ.. சிறப்பில்லையோ.. வேறு வழியில்லையோ..

மேலாத்து தாத்தாவும், அப்பாவையும் புத்தகத்தில் பார்த்ததுபோல அட.. ஆனால் என்ன திணை, நிலம், இடம், பொருள்,
தளம், நிறம், கொஞ்சம் வேறுவேறாய்.. ஆனால் அதே நிறத்து கவலை மற்றும் கண்ணீராய் – பாவண்ணனின் தலைமை
கதாபாத்திரங்கள். நாயக்கர் தாத்தா(ஒரு மனிதரும் சில வருசங்களும்), பாய்மரக்கப்பலின் கவுண்டர் தாத்தா,
வாழ்க்கை விசாரணையின் சேரி காளியப்பனும், கோவில்தாத்தாவும், சிதறல்களின் முருகேசனும் அவன் அப்பாவும் மற்றும்

அவர்கள் வறண்ட நதியாய் வாழ்கிறார்கள். இவர்கள் ஓயாது மானிட குலத்தின் நம்பிக்கைகளை மீட்டெடுக்கிறார்கள்.
யார் கண்டது, ஒழுகு வாய் தாத்தாவையும், எங்கப்பாவையும் நான் மறுவாசிப்பு செய்யலாம்,
ஒரு கான்கிரிட்(கணிப்பொறி) காடாய்.

சுருக்கமாக, ஓவ்வொரு தலைமுறையும் தனது பழைய தலைமுறையின் வேர்களை உணர்ந்து கொண்டு அதிலிருந்து
பிரியும் நிர்பந்தத்தை, வளரும் கட்டாயத்தை பதிவு செய்யும் தரிசனத்தை தான் பாவண்ணனின் நாவல் படைப்புலகம் காட்டுகிறது.

**
2.

2.1 பாய்மரக்கப்பல் – அம்புப்படுக்கை
(பிதாமகர், பிரபிதாமகர், பிரபிதாமகர்)

“இந்த இடத்தில மூணு தர்ப்பை, மரிச்சாப்பல ஒண்ணு. எதிதாப்பில ஒண்ணு. நடு செண்டரல ஓன்ணு. வைங்கோ..
வைச்சாச்சா…மமன்னு சொல்லிங்கங்கோ”

அது ஏதோ பாடை கட்டப்பட்ட தோற்றம் கொடுத்தது. மூன்று பிண்டங்கள் ஒரு வரிசை. எதிர்த்த வரிசையில் மூன்று. நடுவில் ஓன்று.
சொல்லுங்கோ. தேவபாசை தொடங்கிற்று. அது இரேழு உலகம் கடந்து மூதாதையர்களை சென்றடைய வேண்டும். அப்பா, தாத்தா,
கொள்ளுத்தாத்தா.. அதுபோல அவர்களின் பத்தினி வகையறாக்கள்.

“தீர்த்தத்தை மரிச்சாப்பால மொத்தமா விட்டிருங்கோ” பிண்டம் நசநசத்து, கலங்கி, உடைந்து , யாரது வெளியே வருவது.
பிதாமகர், பிதிர் பிதாமகர், பிதிர் பிரபிதாமகர். அவர்களுக்கு பின்னாடி பிதாமகி, பிதிர்பிதாமகி, பிதிர்பிரபாதமகி.
நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவ்வளவுதான் எல்லாம் பேஷா பண்ணிட்டேள்..சந்தோசம்..”

பிண்டம் உடைந்து வெளியே வந்த பிதாமகி வகையறாக்கள் எனக்குள்ளே உட்கார்ந்து கொண்டார்கள். நான் கான்கீரிட் சைபர்
காடுகளுக்குள் என் மெர்சீடிஸை அழுத்தினேன். அது ஏற்கனவே உள்ளீடப்பட்ட கூகிள் வரைபட உதவியோடு முன்நகர்ந்தது.
காக்கைக்கூட்டத்தோடு கனமற்று வீடு திரும்பினேன்.

**
2.2

என்னை புதைத்தார்கள்.

உள்ளே போனபோது என்
உருவச்சிலையை
செதுக்கிக்கொண்டிருந்தார் – அப்பா.

மேலும் உள்ளே மூழ்கியபோது
மற்றொரு உருவச்சிலை.
அதுவும் முந்தையதுபோலவே
பாதியில் நின்றுபோனது -அப்பாவினுடையது.
செதுக்கிக்கொண்டிருந்தது நான்
பார்த்திராத தாத்தாவாகத்தானிருக்கும்.

இன்னும் கொஞ்சம் மூழ்கிப்பார்க்க
மற்றொரு உருவச்சிலை. யாருடையது ?
முகம்வரைக்கும் மட்டுமே –
செதுக்கிய கொள்ளுத்தாத்தா
எனக்காக காத்திருந்தார்.
என் முகம் அதிலிருந்தது.
மீதியை முடிக்க என் கையில்
உளி கொடுத்து என்பையனாய் உருமாறிப்போனார்.

எழுதியது : யாரோ ஒரு புதுக்கவிஞன்.

****
2.3

‘மூன்று தலைமுறையில் எல்லாம் மாறும்’ – என்கிறது ஒரு மார்வாடி காகவத் ( பழமொழி). அதை அப்படியே நம்பவும்
செய்கிறார்கள் மார்வாடிகள். செய்யும் தொழில், குடும்ப விழுமியங்கள், சார்புநிலை ஆளுமைகள், இடம், தத்துவம்,
தெய்வ வழிபாடு – இவையெல்லாம் கூட மெல்லிய மாறுதல்களுக்கு உட்படும் என்று நம்புகிறார்கள் மார்வாடிகள்.
அதற்காக தங்களை மனதளவில் தயார் செய்தும் வைத்துக்கொள்கிறார்கள். இது அறிவியல் சம்பந்தப்பட்ட
கண்டுபிடிப்பாயிருக்க முடியாது. யுக யுகமாய் மனிதனின் பட்டறிவால் விழைந்த உணர்வுப்பூர்வமான அறிதலாக
மட்டுமேயிருக்கமுடியும்.

இந்தியாவை பொறுத்தவரையில் ஆங்கிலேயருக்காக அவர்களது படிப்பு முறையிலிருந்து உருவாக்கப்பட்ட நடுத்தர
வர்க்கம் தோன்ற ஆரம்பித்தபிறகுதான், அது நிலவுடமை சமூகத்திலிருந்து தொழில் உடமை சமூகத்திற்கு தங்களை
மாற்றிக்கொள்கிறது. விவசாய வேலையைவிட மற்ற அறிவுசார் தொழில்கள் லாபகரமானதாகவும், உயர்வாகவும்,
சித்தரிக்கப்பட்டு வேறுவித வர்ணக்கலவைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஏராளமான சமூக மாறுதல்களும், விழுமிய
மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இந்திய சமூகம் இந்தப்புள்ளியில்தான் சந்திக்கிறது.

ஒரு 80-90 வருடங்களுக்கு முன்புஅக்கிரகாரத்து நிலங்கள் விவசாய பிடிப்பின்மையால் வளர்ந்துவிட்ட தங்களின்
பையன்களோடு சேர்ந்து வாழும் ஆசையோடும் மற்றவர் சாதிக்காரர்களுக்கு விற்கப்படுதல் ஒரு சாதாரண நிகழ்வாயிருந்தது .
விவசாயம் – இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகிற தொழில் – மூன்று தலைமுறையில் எவ்வாறெல்லாம்
கண்ணோட்டம் பெறுகின்றது என்கிறது சரட்டை கொண்டு நெய்த புடவையாகத்தான் பாய்மரக்கப்பல் என்கிற நாவல்
தோற்றமளிக்கிறது. நாமே நம் தலைமுறை நெய்த புடவைதானே.

தான் உயிரினும் பெரிய விவசாயம் தன் கண்முன்னே தனது தலைமுறையால் தொடரமுடியாத நிலையில் எப்படியாயினும்
அது தொடரப்படவேண்டும் என்கிற வெறியோடு, தனது பிள்ளைதான் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,
சாதி கடந்து அந்த உயிரினும் மேலான விவசாயத்தை யார் செய்தாலும் அவனே தன் மகன், எப்போதுமே தனது
வாழ்க்கை விவசாயத்தோடு தான் என்று எழுந்து நிற்கிற முத்துசாமி கவுண்டர் கிழட்டு நதி.
(ஜெயகாந்தனின் பிரம்மபோதசம் நினைவுக்கு வரலாம்)

முன்னால் இந்த நதி குட்டையாயிருந்து, பெருக்கெடுத்து வலிமை பெற்று நதியாக எத்தனை வலிகளை, கசடுகளை சுமந்து
இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. கடலோடு கலக்கும் முன்னே வற்றிப்போய் தன் கண்ணெதிரே வறண்ட மணலாய் தான்
மாறுவதை பார்ப்பதுதான் எத்தனை கொடூரம். ‘சரி ஏதோ கஸ்டகாலம்.. ஈர மணலிருக்கில்ல.. ஊத்து வந்திரும். நதியில்லைனாலும்
குட்டையாவாவது எழுந்து ஊர்ந்திரலாம்’ என்று நினைத்து பார்த்தால், அந்த மணல்கள் மறைந்து முளைக்கின்றன கான்கீரிட்
காடுகள். திக்கற்று, விக்கித்து நிற்கும் மூத்த தலைமுறை. எல்லா தலைமுறை பிதாமகர்களுக்கும் எப்பவும் அம்புப்படுக்கைகள் தான் போலும்.

பக்கவாதம் வந்து படுக்கும் தன் மகன், விவசாயம் கெட்ட வார்த்தையாய் மாறி, அதை தொட விரும்பாது 80களின் அரசியல்,
சாராய கலாச்சாரத்தில் உடல், பொருள், ஆவி தொலைக்கும் தன் பேரன். கான்கீரிட் காடு. அதில் ஈரமில்லை. நதிக்கும்
அதற்கும் சம்பந்தேமேயில்லை. அது தான் நதியின் தொடர்ச்சி, சுரண்டல் என்றெல்லாம் நினைப்பதுமில்லை.

இவையெல்லாம் வெறும் மூன்று தலைமுறைக்குள்.

*’ம்.. ஆளுக்கொரு கன்ன எடுத்து நடுங்க .. பிச்சாண்டி நீயும் நடுடா.. இனிமே இதான் புள்ள.. பேரன்.. பேத்தி
எல்லாம்..” பிச்சாண்டி – கிழட்டு நதியின் ஒடுங்கிய கால்வாய் நம்பிக்கை. புதுத்தண்ணீரில் நனைந்த இளங்கன்றை பார்த்து
நெஞ்சு குளிர்ந்து, முகம் நெகிழ்ந்த, குழைந்த குழந்தைத்தனமான, நிலம் மீது பற்று கொண்ட கிழட்டு நதி, அதன் வறளாத
நம்பிக்கை ஊற்று. இழப்பதற்காகவே பிறந்த பிறவி அவர் என்றாலும் எந்த இழப்பிலும் கண் கலங்கியதில்லை. தேங்கியதுமில்லை.
பாறைகளோடு மோதி துடிப்போடும் விலகி நீண்டு பாய்கிற நதி அவர்.

அவரை ஒரு கேள்வி உலுக்கிப்போடுகிறது. தனது பேரன் போன்ற ஒரு சிறுவனிடமிருந்து அந்த நதியில் அந்த கேள்விக்கல் விழுகிறது.
‘என்ன தாத்தா, மூணு மாசமோ, ஆறு மாசமோ பயிர் வளர்த்தாதா பலன் பாக்க முடியும். ஒரு காணில பயிர் வச்சி அறுத்தா
எவ்ளோ கெடைக்கும் ? நாப்பது மூட்டை கெடைக்குமா ? மூட்டைக்கு ஐநூறு ரூபா போட்டாலும் என்னா வரும் ? இருபதாயிரம்,
அவ்ளோதான். அதுவும் ஆறுமாசம் கழிச்சி, செலவு போவ பத்தாயிரம் மிஞ்சுமா கைல ? நா பத்து சண்டை போட்டா பத்தாயிரம் கையில..”

நதி விக்கித்துபோகிறது. மாறும் காலத்து நுணுக்கத்தை வாங்கத்தெரியாதவனாகிவிட்டோமா என்று சந்தேக களைகள் பரவ ஆரம்பிக்கின்றன.
அவருக்கே பதில்கள் புரிவதில்லை.

* மண்ண வளச்சி வளச்சி ஊடு கட்டிக்கிட்டே போனா சட்டியிலயா நெல் வளத்து சாப்டுவானுங்க ?
* காலம் ஏன் மாறிவிட்டது, பெண் மீது மண் மீது ஆசையில்லை.. கூரான பாறையாக மனிதர்கள் ஏன் மாறுகிறார்கள்?

அவருக்கும் மார்க்ஸிம், அத்வதைமும், தொழிற் சூத்திரங்களும் எல்லாமும் நிலந்தான். வெள்ளந்தியாய் கேள்வி கேட்கிறார்.
தம் நிலத்துக்காகவே தம்வாழ் நாள்களை ஓப்படைத்துக்கொண்ட விவசாயிகள் தலைமுறை அது. பயிரிடுவதைத்தவிர வேறு எந்த ஞானமும்
இல்லாதவர்கள். தன் செல்வத்தைத்தானே அறியாத அஞ்ஞானிகள். பயிரிடுவதில் இருக்கும் எளிய பிரச்சனைகளில் மட்டுமே உழன்று
உழன்று மீண்டு விடுபவர்கள். அவரது பேரன் தலைமுறை பெரிய சவால்களுக்கு ஆசைப்படும் தலைமுறை. வேறு திசை நோக்கி
வளரும் மரங்கள். அவைகளை நோக்கி கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்கிறார்.

*”பணம் பணம்னு அலஞ்சா சோத்துக்கு என்னா பண்ணுவ ? ”
“அதான் கடையில இருக்குதே ?”
“வெளைக்கிறவன் இல்லன்னா, விக்கிறவன் எங்கேர்ந்துடா கொண்டாருவான் ?”
“அது கவுர்மெண்ட் கவலா தாத்தா.”

அரசாங்கம் கவலைபடவில்லை. நமது நாட்டுக்கு தேவையான கோதுமையைக்கூட அடுத்தநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் துர்பாக்கியம்.

அடுத்த தலைமுறை வேறுவகையான மரங்களாகயிருந்தாலும் பரவாயில்லை. நிலத்தோடியிருக்கிறதே என்று சந்தோசப்பட்டிருப்பார். இவைகள்
கான்கீரிட் காடுகளா அல்லவா வளர்ந்திருக்கின்றன. தனது நதிமூலம், ரிஸிமூலம் அறியாத, அறிந்து கொள்ள, அறிந்தாலும் தொடர விழையாத
புதிய தலைமுறை. இவர்கள் புதிய சவால், புதிய வாழ்க்கை என்று நொண்டிச்சாக்குகள் சொல்லித் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களோ
என்று கவலைப்படுகிறது அந்த கிழட்டு நதி.

முதல் தலைமுறை – கிழட்டு நதி :
நதிகள் இரவு பகல் பார்ப்பதில்லை. வெயில் மழையை பொருட்படுத்துவதில்லை. தன் போக்கில் வந்து கலந்துவிடும் எந்த களங்கத்துக்கும்
அது கலங்குவதுமில்லை. களங்கங்களே தன் ஆகிருதியை மறைத்துப்போலி தோற்றம் காட்டினாலும் அவற்றின் அடியில் அமைதியாய்
ஓடிக்கொண்டிருக்கும் அவை. அவற்றின் எழுச்சியான தோற்றமோ, பொங்குதலோ, எந்த வசீகரத்தையும் புலப்படுத்டுவதற்காக அல்ல. அதன்
போக்கிலேயே நேரும் காட்சிகள் அவை. அதன் பாய்ச்சலும் ஓட்டமும் எதையும் யார்க்கும் நிருபீத்துகாட்டுகிற துடிப்பில் உருவாகுபவை அல்ல.
நதிகளின் சுபாவமே அதுதான்.

இரண்டாம் தலைமுறை – வறண்டமணல் :
பக்கவாதம் வந்து தனது தந்தையின் கனவுகளை முன்னெடுத்து செல்ல இயலாமை கொண்ட இரண்டாம் தலைமுறை. இயற்கையோ,
இயலாமையோ ஏதோவென்று முன் தலைமுறை போலன்றி கனவுகளை இழக்கவும், தொலைக்கவும், வீரியம் அழியவும் காரணமாகிறது.
‘அப்பா ஒரு மகாநதி, நான் ஒரு தேங்கிப்போன குளம் அல்லது குட்டை’

மூன்றாம் தலைமுறை : கான்கீரிட் காடு
சாரயக்கடையில் வெள்ளைச்சட்டை போட்டு உட்கார்ந்து காசு பார்ப்பதைவிட வயலில் இறங்கி எதற்கு வேலை பார்க்கவேண்டும்
பெரியன கேட்போம். ஏதோ வழியில் பெரியதாய் செய்யவேண்டும் என்கிற பழயன ஓதுக்கி எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள்:
மரபிலிருந்து தங்களை பிய்த்துக்கொண்டு ஒடும் இலைகளாகவும், தழைகளாகவும் புதிய தலைமுறைகள்.

பழைய நினைவும், புது நிகழ்வும் மாறி மாறி ஊடாடும் கதையொழுக்கு இது புதிதல்லதென்றாலும், பாந்தமாய் பொருந்தியிருக்கிறது.

திவசத்தின் மூன்று தலைமுறைகள் :(பிதாமகி, பிதிர்பிதாமகி, பிதிர்பிரபாதமகி – பிதாமகி, பிதிர்பிதாமகி, பிதிர்பிரபாதிமாகி)
ஓவ்வொரு தலைமுறையும் தனது பழைய தலைமுறையின் வேர்களை உணர்ந்து கொண்டு அதிலிருந்து பிரியும் நிர்பந்தத்தை,
வளரும் கட்டாயத்தை பதிவு செய்யும் தரிசனத்தை தான் பாவண்ணனின் நாவல் படைப்புலகம் காட்டுகிறது.

கிழட்டு நதி, வறண்ட மணல், எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள்.

**
2.4

வீட்டுக்குள் வந்தேன். என் மொபைலிருந்து குதித்து வெளிவந்தார்கள்,
பிதாமகர்,
பிரபிதாமகர்
பிரபிதாமகர் மற்றும் அவர்களின் சகபத்தினிகள்.

என் சைபர் காட்டிலும் ஈரமாய் நெல்வாடையடிக்க ஆரம்பித்தது.

***

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி