ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

சுகந்தி பன்னீர்செல்வம்



அக்டோபர் 19, 2008 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் (www.ilakkyavattam.com) நடத்திய கூட்டம், நாடி வந்த இலக்கிய அன்பர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. திரு.வி.க, வ.வு.சி, தேவநேயப் பாவாணர், சி.சு.செல்லப்பா, வை.மு. கோதைநாயகி அம்மாள் மற்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகிய ஆறு தமிழறிஞர்களைப் பற்றி ஆறு உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஹாங்காங்கில் துவங்கப்பட்ட இலக்கிய வட்டத்தின் கூட்டங்களில் தமிழ் இலக்கியத்துடன் பிறமொழி இலக்கியம், திரைப்படம், நாடகம், இசை, இணையம், ஓவியம், நாட்டியம், புலம் பெயர் வாழ்க்கை என்று பலவும் பேசப்பட்டு வருகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளாக வட்டம் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. அக்டோபர் மாதம் நடந்தது வட்டத்தின் 27ஆவது கூட்டம்.

வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இராமனாதன் முதலில் அறிவித்திருந்த தலைப்பு “அதிகம் அறியப்படாத தமிழறிஞர்கள்” என்பதாகும். கூடவே ‘அதிகம் அறியப்படாத’ தமிழறிஞர்களின் பட்டியல் ஒன்றையும் இணைத்திருந்தார். வட்டத்தின் மூத்த உறுப்பினர் திரு.ப.குருநாதன், “இந்த அறிஞர்களைத் தமிழ் அறிவுலகம் ஓரளவேனும் அறியும், ஆனால் அவர்களது எழுத்தும், தொண்டும் பெரிதும் பேசப்பட்டதில்லை” என்று சுட்டிக் காட்டியவுடன் தலைப்பு, “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்” என மாற்றப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு நினைத்துப் பார்க்கையில் “அறியப்பட்ட தமிழறிஞர்களின் அறியப்படாத மொழித்தொண்டு” என்பது இன்னும் பொருத்தமான தலைப்பாக இருந்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.

திரு.அ.செந்தில்குமார் பேசப்பட்ட அறிஞர்களைப் பற்றிய சிறப்பான தகவல்களோடு கூட்டத்தை ஒருங்கிணைத்தார். மேடைப் பேச்சு வித்தகர்களையும், கன்னி முயற்சியாக மேடை ஏறியவர்களையும் ஒரு மனதாக ஊக்குவித்தார்.

முதலில் தமிழ் தென்றல் திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலக் கல்யாணசுந்தரம்) பற்றி திரு.ப.குருநாதன் ஒரு சீரிய உரையாற்றினார். திரு.வி.க-வின் வாழ்க்கை வரலாறு, கொள்கை, கோட்பாடுகள், படைப்புகள் என தனி கவனத்துடன் ஆற்றப்பட்ட உரை. திரு.வி.க ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர்; இயற்கை உபாசகர்; சமரச சன்மார்க்கத்தில் நாட்டம் கொண்டவர்; தொழிற்சங்கவாதி; சுதேசி இயக்கத்தால் கவரப்பட்டவர்; பெண்ணுரிமை ஆதரவாளர்; அவரின் தனித்தன்மை தமிழ் உரைநடையை எளிமைப்படுத்தியதாகும். அதுவரை எழுதப்பட்டு வந்த கடினமான, நீண்ட வாக்கியங்களைக் கொண்ட தமிழ் உரை நடையை, சிறு சிறு சொற்றடர்களால் அமைக்கப்பட்ட எளிய உரைநடையாக்கினார். தொழிற்சங்கத் தலைவராக இருந்து விழிப்புணர்ச்சி, எழுச்சி, தொண்டு மனப்பான்மை, தோழமை என்ற பண்புகளை தொழிலாளர்களுக்கு எடுத்து இயம்பியவர். இவரது குறிக்கோள் மனிதநேயம், பொது மக்களின் சுகவாழ்வே அவரது அரசியல் நோக்கம். “அரசியலில் புயல், தமிழில் தென்றல்” என அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர். இவருடைய படைப்புகள் மொத்தம் 56. இதில் “பெண்ணின் பெருமை” இன்றும் திருமணங்களில் பரிசளிக்கப்படும் நூலாக அமைந்துள்ளது. சிறப்பாகச் சொல்லப்படும் பிற நூல்கள் முருகன் (அ) அழகு மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (தலைமைப் பொழிவு) போன்றவை.

அடுத்ததாக, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட செயல்பாடுகளா லும் , அதற்காக அவருக்குக் கிடைத்த சிறைவாசக் கொடுமைகளாலும் பெரிதும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் தமிழ் முகம் தமிழர்கள் பலரும் அறியாதது. அதைப் பற்றிப் பேசியவர் திருமதி.சுகந்தி பன்னீர்செல்வம். இந்த உரைக்காக நூல்களை சேகரிக்க தான் பட்ட சிரமத்தையும், நண்பர் திரு. மு.இராமனாதனின் முயற்சியால் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதியிடமிருந்து ஆய்வு நூல்கள் கிடைத்ததையும் நன்றியோடு விவரித்து உரையைத் தொடங்கினார். அந்த நூல்கள்: வ.உ.சியும் பாரதியும், வ.உ.சி ஒரு பன்முகப் பார்வை (எஸ்.கண்ணன்), வ.உ.சி வளர்த்த தமிழ் (ம.ரா. அரசு), இந்திய இலக்கியச் சிற்பிகள் – வ.உ. சிதம்பரனார் (ம.ரா. அரசு), வ.உ.சி கண்ட மெய்ப்பொருள் (டாக்டர். அரங்க இராமலிங்கம்).

‘விவேகபாநு’ பத்திரிக்கையில் ஆரம்பித்த வ.உ.சி-யின் இலக்கியப் பணி பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளாக வளர்ந்தது. அதன் பின்னர் அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள்; இலங்கையிலிருந்து பிரசுரமான வார இதழில் எழுதப்பட்ட திலகரின் வாழ்க்கை வரலாறு; அரசியலில் ஈடுபட்ட மக்கள் எழுச்சியைத் தூண்டிய உணர்ச்சிகரமான அரசியல் சொற்பொழிவுகள்; தமிழில் மேடைப் பேச்சு எனும் புது வகை; சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட நீதிநூல்கள்; மெய்யறிவு(நன்னூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல்), மெய்யறம் (திருக்குறள் பாணியில் எழுதப்பட்ட ஒரு அடி கொண்ட பாக்கள்) என்று அவரது மொழித் தொண்டு பரந்தது.

மேலும் அவரை மிகவும் கவர்ந்த ஜேம்ஸ் ஆலனின் சில வாழ்வியல் நூல்களின் மொழிபெயர்ப்புகள்: அகமே புறம் (Out from the Heart), மனம் போல் வாழ்வு(As a man thinketh), வலிமைக்கு மார்க்கம்(From poverty to power), சாந்திக்கு மார்க்கம்(The way to peace). இவற்றைத் தவிர அவர் பதிப்பித்த நூல்கள்: திருக்குறள் மணக்குடவர் உரை, சிவஞான உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை மற்றும் இன்னிலைக்கு விருத்தியுரை. மேலும் கவிதைத் தொகுப்பான அவருடைய பாடல் திரட்டு; தமிழ் மொழியில் கவிதை நடையில் முதலில் எழுதப்பட்ட அவருடைய சுயசரிதை என்ற நூல்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளுடனான உரை. வ.உ.சி-யின் காலத்திற்குப் பிறகு வெளிவந்த நூல்கள்: அவருடைய மேடைப் பொழிவுகளின் தொகுப்பு மற்றும் வ.உ.சி கண்ட பாரதி. ஆக, வ.உ.சி-யின் 16 நூல்களைப் பற்றியும் அமைந்தது அவருடைய பேச்சு. பேச்சாளரின் விண்ணப்பம் வ.உ.சி-யின் படைப்புகளை இணையத்தில் ஏற்றி அவரின் தமிழ் இலக்கியப்பணியைப் பரவலாக உலகம் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக, திரு.ராஜேஷ் ஜெயராமன் வர இயலாத காரணத்தால் அவரது உரையை திருமதி.ஆர்.அலமேலு வாசித்தார். உரை, தமிழ் ஞாயிறாகிய தேவநேயப் பாவாணர் பற்றியதாகும். அறிமுக உரையில் திரு. அ.செந்தில்குமார் தமிழ் ஞாயிறு என்ற பெயருக்கேற்ற முறுக்கி விட்ட மீசை கொண்டவர் தேவநேயப் பாவாணர் என்றார். ஞாயிறுக்கும் முறுக்கி விட்ட மீசைக்குமான தொடர்பு எனக்கு இன்னும்
விளங்கவில்லை.

தேவநேயப் பாவாணர் 23 மொழிகளின் இலக்கிய இலக்கணங்களைக் கற்றறிந்தவர்; 58 மொழிகளில் பேசும் வல்லமை பெற்றறவ்ர்; தமிழை அறிவியல் முறைப்படி வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்தவர். 50 ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல ஆய்வு நூல்களைத் தந்தவர். அவற்றினுள் குறிப்பிடத்தக்கவை: “ஒப்பிலன் மொழி நூல்”, “இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்”, “சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்”, “தமிழ் இலக்கிய வரலாறு, “தமிழர் வரலாறு”, “தமிழர் மதம்”, “திராவிடத்தாய்”, “பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்”, “செந்தமிழ் சொற்பிறப்பியல்”, “பேரகரமுதலி” எனப் பல.

இவரின் ஆராய்ந்தறிந்த அசைக்கமுடியாத ஆணித்தரமான கருத்து: “தமிழ் திராவிடத்திற்குத் தாய்; ஆரியத்திற்கு மூலம்; உலக முதல் மொழி தமிழ்; முதல் மனிதன் தமிழன், தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம்” என்பதாகும். உலகில் ஆறு மொழிகளே தாய்மொழிகள்;அதில் தமிழே மூத்த முதல் மொழி என சான்றுகளுடன் விளக்கியவர். அவர் இவ்வுலகை விட்டுப் பிரியுமுன் கூறிய இறுதி வார்த்தைகள்: “தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களை விட்டுப் பிரிகிறேன், தமிழைக் காப்பாற்றுங்கள்” என்பதாகும். செவி சாய்க்கிறோமா நாம்?

அடுத்ததாக வை.மு. கோதைநாயகி அம்மாள் பற்றிப் பேசினார் திருமதி. தீபா சுவாமிநாதன். அவரது பேச்சின் சாராம்சம்: வை.மு. கோதைநாயகி அம்மாள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதிகம் பேசப்பட்டவர்; சரியாகச் சொல்லப்போனால் வாசிக்கப்பட்டவர். பெண்
எழுத்தாளர்கள் அதிகம் இல்லாத காலகட்டத்தில் கணவரின் ஆதரவால் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட, பத்திரிக்கை நடத்திய சாதனையாளர். 115 நாவல்கள் எழுதிய எழுத்துலகத் தாரகை. எழுதப்படிக்கத் தெரியாதபொழுது அவர் சொல்லச்சொல்ல எழுதியவர் புகழ் பெற்ற டி.கே பட்டம்மாள். அவரிடமிருந்துதான் வை.மு. கோதைநாயகி அம்மாள் எழுதக் கற்றுக் கொண்டார். காந்தீயத்தால் ஈர்க்கப்பட்டவர். மேடைப்பேச்சு, மேடைப்பாட்டு, காந்தீயப் பிரச்சார எழுத்து; புகழ் பெற்ற “ஜகன்மோகினி” என்ற பத்திரிக்கையை நிர்வாகம் செய்தது என்பன இவரின் வெற்றிப்படிகள். முதலில் துப்பறியும் நாவல்களில் ஆரம்பித்த இவரது எழுத்து, பின்னர் பொதுவுடமை, தத்துவம், சமூக நாவல்கள் எனப் பரவி விரிவடைந்தது. சமூக நாவல்களில் இவர் எடுத்துக் கொண்ட கருத்துகள் மதுவிலக்கு, பெண் விடுதலை, இந்து முஸ்லிம் ஒற்றுமை, தேசபற்று போன்றவை. மேலும் சொல்லப்பட்ட தகவல் -இவர் ஒரு முறை எழுதிய எழுத்துக்களை திரும்ப படித்துத் திருத்தியதே இல்லையாம்!

பேச்சாளர் அதிகமாக சிலாகித்தது பார்த்தசாரதியை. வை.மு. கோதைநாயகி அம்மாள் மிகவும் இளம் பிராயத்தில் மணமுடிக்கப்பட்டு, கணவர் வீடு வந்து, கல்வி கற்று, ஆதரிக்கப்பட்டு, வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னிலைப்படுத்தப்பட்டவர். எழுத்தாளரின் வெற்றிக்குப் பின் அவரது கணவரின் ஊக்கமும், ஆதரவும் இருந்தன.

அடுத்ததாக, இலக்கிய வட்டத்தின் நிறுவனர், தற்போது சென்னையில் வசிக்கும் திரு.எஸ். நரசிம்மன் எழுதி அனுப்பியிருந்த உரையை திரு. காழி அலாவுதீன் வாசித்தார். உரை, சி.சு.செல்லப்பா பற்றியது. தற்காலத்திய தமிழ் இலக்கியம் நினைவுகூரப்படும் பொழுது மனதில் நிற்பவர்களில் சிலர் தமிழ் எழுத்தாளர்கள்; சிலர் தமிழ் இலக்கியம் வளர்த்தவர்கள்; மற்றும் சிலர் தமிழ் இலக்கியமாகவே வாழ்ந்தவர்கள். இந்த வகையில் சி.சு செல்லப்பா மூன்றாம் வகையைச் சார்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விமரிசகர், பிரசுரகர்த்தர், சுதந்திரப் போராட்ட வீரர், தன் மானம் மிக்க தனி மனிதர்; இலக்கியம் தான் வாழ்வு என்ற மூர்க்கத்தனத்தோடு 84 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

இவருடைய நூல்கள்: வாடிவாசல், ஜீவனாம்சம், சுதந்திர தாகம் ஆகிய நாவல்கள், முறைப்பெண் என்ற நாடகம், ஊதுபத்திப்புல், மாயத்தச்சன் ஆகிய கவிதைத் தொகுப்புகள், “பி.எஸ் ராமையாவின் சிறுகதைப் பணி” என்ற விமர்சன நூல் எனப் பலவாறாக இருந்தாலும் “எழுத்து” பத்திரிக்கைதான் அவருடைய இலக்கியப்பணிக்கு மணிமகுடம். தமிழில் விமரிசனத்திற்காகவே உருவான சிற்றேடு “எழுத்து”, பிறகு புதுக்கவிதையின் களமாக அமைந்தது. பின்னால் வந்த “நடை”, “கசடதபற”, “யாத்ரா”, “பிரக்ஞை” போன்ற சிற்றேடுகளுக்கு “எழுத்து” தான் முன்னோடி.

“இலக்கியச் சிந்தனை”, “ராஜ ராஜன் விருது”, கோவை ஈ.எஸ். தேவசிகாமணி, அக்னி அட்சரா விருது எனப் பல விருதுகளை மறுத்துவிட்ட அவர் இறுதியில் அமெரிக்கா வாழ் தமிழர் அமைப்பான “விளக்கு” வழங்கிய “புதுமைப்பித்தன்” விருதை மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் பரிசுத் தொகை ரூபாய் 25000-த்தை புத்தகம் போடச் சொல்லி அங்கேயே வழங்கி விட்டார். சாகித்ய அகாதமி விருதும், தமிழக நூலகத் துறையின் ஒரு லட்ச ரூபாயும் தேடி வந்த பொழுது அவர் உயிரோடு இல்லை. தார்மீகக் கோபம் கொண்டால் எதற்கும் பணிய மாட்டார். படிக்கத் தெரியாவிட்டாலும் படைக்கப்பட்டதை நியாயமாக விமரிசிக்கத் தெரிய வேண்டும் என்பது அவர் கருத்து. தனிமனிதனாகவே கடைசிவரை கலங்கரை விளக்கம் போல் அவரது முயற்சிகள் இருந்தன, “எழுத்து” உள்பட. அவரது வாழ்வே ஒரு இலக்கியம் போல்தான்.

இறுதியாக, மேற்கூறிய எழுத்தாளர்களிலிருந்து மாறுபட்ட, சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியைப் பற்றி சுருக்கமாக உரையாற்றினார் திரு. மு.இராமனாதன். இது மாறுபட்ட உரையாக இருந்தது. இதற்கு முன் கூட்டத்தில் பேசப்பட்டவர்கள் வாழ்ந்து மறைந்தவர்கள். பேராசிரியர் வேங்கடாசலபதி வாழ்ந்து கொண்டிருக்கும், நாற்பது வயதேயான ஒரு ஆராய்ச்சியாளர் என ஆரம்பித்தார். திரு. அ.செந்தில்குமார் தனது முகவுரையில் அவர் படித்து மகிழ்ந்த “அந்த காலத்தில் காப்பி இல்லை” என்ற கட்டுரை, சிறுகதை பாணியில் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்ததை விவரித்திருந்தார். அதைப்பற்றியும் பேசிய திரு.மு. இராமனாதன், காப்பி இந்தியாவில் அறிமுகமாகாத காலத்திலிருந்து தொடங்கி, அதைப்பற்றி முழுமையான சமூக- பண்பாட்டு- இலக்கிய ஆராய்ச்சியை ஆசிரியர் மேற்கொண்டுள்ளதை விவரித்தார். ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சுவாரசியம் மிக்கதாக இலக்கிய தரத்தோடு படைக்கும் திறனை மெச்சினார்.

தமிழின் மேன்மை அதன் தொடர்ச்சியில் உள்ள சிறப்பினால், ஒரு வாழும் தமிழறிஞரைப் பற்றி இந்த மேடையில் பேசுவதற்குத் தாம் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகக் கூறினார். வ.உ.சி மேல் கொண்ட பற்றினால் அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதன் வழியாக பாரதியின் மேல் பற்று கொண்டு, அவர் பதிப்பித்த பாரதி குறித்த நூல்களைப் பற்றியும் கூறினார். பேராசிரியர் வேங்கடாசலபதி பதிப்பித்த “பாரதி விஜயா கட்டுரைகள்” எனும் நூலில் பாரதி ஆசிரியராக இருந்து நடத்திய”விஜயா” பத்திரிக்கையின் இதழ்களைப் பாரீசில் கண்டு பிடித்து நூலில் சேர்த்திருப்பதையும், தமிழில் கிடைக்கப்பெறாத அதன் பல கட்டுரைகளை ஆங்கிலேய அரசின் ரகசிய அறிக்கைகளிலிருந்து எடுத்து, அதை மீண்டும் தமிழில்- பாரதி காலத்துத் தமிழில்-மொழி் பெயர்த்திருப்பதையும் விவரித்தார். பாரதி ஹிந்து நாளிதழுக்கு எழுதிய கடிதங்களைக் கண்டெடுத்து சமீபத்தில் “பாரதி கருவூலம்” எனும் தலைப்பில் சிறப்பாகப் பதித்திருப்பதையும் வியந்து பாராட்டினார். பிற்பாடு மீண்டும் ஒரு கூட்டத்தில் இவரைப்பற்றி விரிவாகப் பேசுவதாகக் கூறி முடித்துக்கொண்டார் – நேரமின்மையால்.

ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தின் மூத்த பிரமுகர் திரு.செ.முஹம்மது யூனூஸ் நிறைவுரை ஆற்றினார். இங்கு பேசப்பட்ட பல அறிஞர்களின் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன்; அவர்களது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன் என்றார். திரு.வி.க-வின் தமிழ்த் தொண்டையும், பாரதிக்கும் வ.உ.சிக்கும் இடையே நிலவிய உயர்ந்த நட்பையும், கோதைநாயகி அம்மாளின் ஜகன்மோகினி சஞ்சிகையில் வெளியான கதைகளுக்கு அந்நாட்களில் இருந்த பெண் வாசகர்களின் ஆதரவையும் யூனுஸ் பாய் சுவைபட விவரித்தார். பேச்சாளர்கள் அனைவரையும் பாராட்டினார்.

ஆழமான உரைகள் நிகழ்த்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் சிலருக்கு ஒரு குறை இருந்தது. அது கூட்டம் குறைவாக இருந்ததைப் பற்றி. கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே. கூட்டம் குறைவாக இருந்தாலும் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லை என்ற நிறைவுடன் வந்திருந்தவர் விடைபெற்றனர். முதலாவதாகப் பேசிய திரு.ப.குருநாதன் தனது உரையின் துவக்கத்தில் இப்படிச் சொன்னார்: “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் சிலரைக் குறித்துப் பேசியதன் மூலம், ஹாங்காங் இலக்கிய வட்டம் தன்னைத் தானே பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.”

*************
ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com

*************

suganthi61@yahoo.co.uk

Series Navigation

சுகந்தி பன்னீர் செல்வம்

சுகந்தி பன்னீர் செல்வம்

ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

சுகந்தி பன்னீர் செல்வம்


சுகந்தி பன்னீர் செல்வம்

ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 24ஆவது கூட்டம் ஏப்ரல் 20, 2008 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. “இலக்கிய வடிவங்கள்” என்ற தலைப்பின் கீழ் கவிதை, உரைநடை, திரைப்பாடல்கள் மற்றும் இணையதளம் ஆகிய வடிவங்களைப் பற்றி நான்கு பேச்சாளர்கள் உரை நிகழ்த்தினர்.
டிசம்பர் 2001-இல் இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஹாங்காங்கில் துவங்கப்பட்டது “இலக்கிய வட்டம்”. கூட்டங்கள் நடத்துவதோடு, வட்டம் சுமார் 80 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மடலாடற் குழுவையும் இயக்கி வருகிறது. வட்டத்தின் கூட்டங்களுக்கு இலக்கிய ஆர்வலர்கள் தொடர்ந்து வருகின்றனர்.  
திரு.எஸ். பிரசாத் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அவர் தனது முகவுரையில் கதைப் பாடல்களில் ஆரம்பித்த தமிழ் இலக்கியம், பின் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பதினாறு சொற்களைக் கொண்ட பாடல்களாக, அதற்குப்பின் நான்கு வரித்துண்டங்களாக, பிற்பாடு அச்சு- தாள் என்று வந்த பிறகு உரைநடையாக, கட்டுரைகளாக, சிறுகதைகளாக, புதினங்களாக, விமரிசனங்களாக, இசைப் பாடல்களாக, புதுக்கவிதையாக, மின்னணு உலகில் இணையதளத்தில் உலவி வரும் வரையறுக்கவல்லாத பல வடிவங்களாக உருவெடுத்து வருவதை எடுத்துரைத்தார் 
“கவிதையின் தடங்கள்” என்ற தலைப்பில் திரு.அ. செந்தில் குமார் முதலில் உரையாற்றினார். அவர் கூறியதில் சில இங்கே:
கவிதை என்பது செய்யுளாக ஆரம்பித்து, காலவடிவில் பா என்றும், கவிதை என்றும்  பெயர் பெற்று இன்று புதுக்கவிதை என்றும் உருப்பெற்றிருக்கிறது. முதற் சங்க, இடைச் சங்க இலக்கியப் படைப்புகளைக் கடல்கோள் கொண்டு விட்டதாகவும், இன்று நிலைத்து நிற்பது கடைச் சங்க நூல்கள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. அகத்தியம் தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல் என்று  பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அந்நூல் கிடைக்காத காரணத்தால், தமிழ் மொழியின் முதல் இலக்கணமாககத் தொல்காப்பியம் கருதப்படுகிறது. தொல்காப்பியம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் மொழிக்கு, வரையறுக்க அமைக்கப்பட்ட கரைதான் தொல்காப்பியம்.
பின்னால் வந்த அனைத்து செய்யுட் பாக்களும், காப்பியங்களும் தொல்காப்பியரின் இலக்கண முறையையே பின்பற்றி  வந்ததை மேற்கோள்களுடன் எடுத்துக் கூறினார். பதினென்மேற்கணக்கு என்று தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்து பாட்டு் ஆகட்டும்; பதினென்கீழ் கணக்கு என்று அழைக்கப்படும் திருக்குறள், நாலடியார், திருகடுகம் என்பவை ஆகட்டும், அனைத்துமே ஓசை பொருந்திய, இலக்கணத்தை தழுவிய படைப்புகள். எட்டுத் தொகையில் அகநானூறும், புறநானூறும் அடங்கும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை  போன்ற இறைவழிப்பாடல்களும், சிறுபாணாற்றுப்படை போன்ற தளவழிப்பாடல்களும் அடங்கும். 
பின்வந்த காப்பியங்களான சிலப்பதிகாரம் இல்லறம் மற்றும் ஊழ்வினை பற்றியது ; மணிமேகலை கொடையின் சிறப்பையும் துறவறத்தின் பெருமையையும் பற்றியது ; சீவகசிந்தாமணி போர்முறைகளைப் பற்றியது. வளையாபதி மற்றும் குண்டலகேசி பொருளறம் மற்றும் இல்லறம் பற்றியது.ஆக இவையனைத்தும் அகம்-புறம் ஆகிய இரண்டு கருத்துக்களையும் கொண்ட படைப்புகளாகும். 
20 ஆம் நூற்றாண்டில், மரபின் தோள்மீது ஏறி, புதுமை என்ற பூக்களைப் பறித்தவர் பாரதியார். விடுதலை, சுதந்திரம், மொழிவேட்கை என்ற புது வசந்தத்தினை கருப்பொருளாக கவிதையினுள் நுழைத்தவர். பாரதிதாசன் மதமறுப்பு, கடவுள் மறுப்பு, ஜாதிமறுப்பு என்று மேலும் பல புதுமைக் கருத்துக்களை  மக்களிடம் எடுத்துச் செல்லும் கருவியாக தமது கவிதைகளை ஆக்கியவர். சில புதுக்கவிதை உதாரணங்களைச் சொல்லித் தன் உரையை முடித்தார் செந்தில்குமார்.  
அடுத்துப் பேசிய ராஜேஷ் ஜெயராமன்  “திரைப்பாடல்களில் இலக்கியம்” என்ற தலைப்பில் சாதாரண மனிதனை விரைவாகச் சென்றடையும் வாகனம் திரைப்பாடல்கள் என்றார். இங்கு சில மேற்கோள்கள் அவரது பேச்சிலிருந்து:
‘திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பதைக் கண்ணதாசன் ஒரு பாடலில் “கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்’ என்று பாமரனும் திருவாசகக் கருத்தை உணர்ந்து கொள்ளும் விதமாகச் சொல்கிறார். ஓசை நயத்திற்கு எடுத்துக்காட்டாக அந்தாதி வரிசையில் அமைந்த “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” பாடல். கம்பராமாயணத்தின் ‘பிரிந்தவர் கூடினால்’ என்பதின் எதிரொலியே “பிரிந்தவர் மீண்டும் … பேச மறந்து சிலையாய் நின்றால்” என்றும்; ‘யாயும் யாயும் யாராயினரோ’ என்ற காதல் மொழியே “நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ ” என்றும்; “நதியின் பிழையன்று” என்ற கம்பராமாயணக் கருத்தே ‘தியாகம்’ படப்பாடலான “நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை , விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா” என்றும்; கீதையின் தத்துவமே “ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா…உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா …இதை உணர்ந்து கொண்டால் துயரமெல்லாம் தீரும் கண்ணா” என்றும்; பட்டினத்தாரின் தத்துவப் பாடலின் பிரதிபலிப்பே “வீடு வரை உறவு ,வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” என்றும், மனதில் நீங்காமல் நின்ற சுவையான பல பாடல்களை மேற்கோளாகக் கையாண்டார்.
அடுத்ததாக “வையக வலையில் வீடியோ ; இணையத்தில் ஜனநாயகம்” என்ற தலைப்பில் பேசினார் திரு. அ. சுவாமிநாதன். தொலைத்தொடர்பு சுலபமாகி விட்ட காலத்தில், இணையதளம் அனைவராலும் கையாளப்படும நேரத்தில் கருத்துப் பரிமாற்றம் உலகின் எந்தக் கோடியாக  இருந்தாலும் ஒரு கண நேரமே! இது மனித உறவுகளை விரிவுபடுத்தும்; உரிமைகளை எடுத்துரைக்கும்; முழு கருத்துச் சுதந்திரம் பெற்றிருப்பது இங்கு தான். 45 சதவிகித மக்கள் கண்டுகளித்திடும் “யூ டியூப்” என்பது தற்சமயம் 78 மில்லியன் விடியோ படங்களை தன்னகத்தில் கொண்டுள்ளது.
இந்த “யூ டியூப்” இல் சர்ச்சைக்குரிய எந்த ஒரு காட்சியையும் முழு சுதந்திரத்துடன் தணிக்கை அச்சமின்றி ஒருவரால் பதிவு செய்ய முடியும். அடக்குமுறை அரசாட்சியையும் மீறுகிற சுதந்திரம். பரிபூரண ஜனநாயகம் கிடைப்பது வையகவலையில் மட்டும் தான் என்றார் சுவாமிநாதன். ஜனநாயகம் என்பது ஒரு உணர்வு . அது தீமைகளை , அடக்குமுறையை எதிர்த்துக் குரலெழுப்பும் என்றார். 
பிறிதொன்றையும் விட்டு விடவில்லை அவர். இதன் மறுபக்கமாகிய ஆபாசப் படங்களும், தேவையில்லாத குப்பைகளும் இதே தளங்களில் குவிந்து கிடப்பதை ; நல்முத்துக்களான வீடியோக்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு குப்பைகளைத் தாண்டி ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், அதைப் பார்ப்பவர் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு வகையான ஜனநாயகமே !
இறுதியாக உரைநடை வடிவத்தைக் குறித்து திரு. மு.இராமனாதன் “உண்மையும் புனைவும்-முத்துலிங்கத்தின் வெளி” என்ற தலைப்பில் பேசினார். நவீன உரைநடையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்- புனைவு (fiction) மற்றும் அபுனைவு (nonfiction). இந்தக் கூட்டத்தில் அ.முத்துலிங்கத்தின் “பூமியின் பாதி வயது” என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து அபுனைவின் மீது மேவியிருக்கும் புனைவைச் சுட்டும் விதமாக இரண்டு கட்டுரைகளின் சில பகுதிகளை சுவாரசியமாக வாசித்துக் காண்பித்தார்.
முதலில் “திசைப்பெண்” என்ற கட்டுரை. முத்துலிங்கம் திசை தெரியாமல் தடுமாறுபவர். அதனால் அவருடைய மகள் காரிலே பூட்டக்கூடிய ஒரு திசைக்கருவியைப் பரிசாக அளிக்கிறார். அந்தக் கருவி சாட்டிலைட்டுகளின் உதவியோடு ஒரு இனிமையான பெண் குரலில் வழி சொல்லக்கூடியது. எங்ஙனம் ஆசிரியரின் புனைவு மொழியில், உண்மைக் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இணைந்து ஒரு படைப்பு உருவாகியுள்ளது என்று சொல்ல வந்த இராமனாதன், தனக்கும் திசைக் குழப்பம் உண்டு என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், தனது  துணைவியாரையும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்தவர் என்று கூறி , அதற்குத் தன் சொந்த வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை புனைவும், அபுனைவும் கலந்து சுவாரசியமாக்கினார். மேடையில் இரண்டு படைப்பாளிகளை ஒரே நேரத்தில் ரசிக்க முடிந்தது. எவ்வளவு தான் மனித வாழ்வை சுலபமாக்க கருவிகள் இருந்தாலும், மனிதநேயத்தை அவைகளால் கொடுக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்திய கட்டுரை அது. 
அடுத்ததாக “மொரமொரவென புளித்த மோர்” என்ற சமையல் குறிப்புக் கட்டுரை, பாத்திரங்களாலும் சொல்முறையாலும், ஒரு சுவாரசியமான  கதையான விதத்தை படித்துக் காட்டி ரசிக்க வைத்தார். ‘பாணிப் பினாட்டு’ எனும் யாழ்ப்பாணத்து உணவுவகை நாவில் எச்சில் ஊற வைத்தது. யாழ்ப்பாண சினேகிதம் தேட வைக்கிறது.  
முத்துலிங்கத்தின் படைப்புகள் தமிழில் என்பதால், ‘பியூலிட்சர்’ பரிசு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இராமனாதனுடன்  சேர்ந்து இலக்கிய வட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பட்டாலும்,பரிசைவிட  பார்வையாளர்களின் பாராட்டை மனமாற பெற்றது பெரியது எனத் தோன்றியது. முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் அந்தப் பாராட்டைப் பெற முயற்சி எடுத்துக் கொண்ட இராமனாதனுக்குப் பாராட்டுக்கள். 
கூட்டத்தின் நிறைவாகப் பேசியவர் ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தின் மூதத பிரமுகர் திரு. செ. முஹம்மது யூனுஸ். இலக்கிய வட்டக் கூட்டத்திற்குப் பார்வையாளர்கள் குறைவாக வருவதைக் கருத்தில் கொண்டு குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார்.  வீரம் என்பது வேலைக் கொண்டு ஓடும் முயலை அடிப்பது அல்ல; பெரிய யானையை அடிக்க முயன்று வேல் முறிந்து தோற்றாலும் அதுவே வீரம் என்றார். இலக்கியக் கூட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நல்ல கருத்துகளைத் தரமான முறையில் பகிர்ந்து கொள்ளும் முயற்சியினை பாராட்டும் விதமாக அவரது மேற்கோள் அமைந்தது. தொடர்ந்து இலக்கிய வடடத்தை முன்னெடுத்துச் செல்லும் அன்பர்களின்  முயற்சியை அவர் பாராட்டிப் பேசினார். 
கூட்டம் முடிந்த பின்னரும் அனைவரது மனதிலும் தமிழும், இலக்கிய வடிவங்களும் தொடர்ந்து கோலோச்சியது.


suganthi61@yahoo.co.uk

Series Navigation

சுகந்தி பன்னீர் செல்வம்

சுகந்தி பன்னீர் செல்வம்