வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

அன்பாதவன்



“ஒரு சமூகப் பொறுப்புள்ளக் கவிதை வாழ்வின் அவலத்தை மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அது, கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்க
வேண்டும். இரவல் அனுபவங்களும் இரவல் கோஷங்களும் ஒரு நாளும் கவிதயாக முடியாது” என வலியுறுத்துவார் விமர்சகர் பேராசிரியர் க.பூரணசந்திரன். (புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும். பக் 9-10)

இன்றையக் காலக்கட்டத்தில் பெண்ணியம் சார்ந்து அல்லது சாராது எழுதும் பெண் கவிஞர் பலரும் மேற்கண்ட மேற்கோளைத் தன்னளவில் உள்வாங்கி எழுதும் படைப்புகள் பலவும் வெளிவந்து வெற்றி கண்டுள்ளன, விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றன.

ஊடறு வெளியீடாக வந்திருக்கும் “மை” கவிதைத் தொகுதியின் கவிதைகள் பலவும் பெண்மை, மென்மை, வன்மை, கொடுமை, வழமை, வலிமை, திண்மை, மடமை என பல “மை” களின் நீட்சியாக எழுதப்பட்டுள்ளன. இங்கு வெறும் வார்த்தை
விளையாட்டுக்காக இத்தனை “மை” களும் அடுக்கப்படவில்லை.

பெண்ணினத்தின் மீதான கொடுமைகள், அவற்றை எதிர்க்கும் வலிமை, உறவு மற்றும் பாலியல் சிக்கல், அதிகார ஆண்மை, எதிர்க்கவியலா மென்மைகளை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு கொள்ளும் கொடுமை. தாய்மண் விட்டு புகலிடம் தேடி ஓடியும் வாழ்வுக்கு ஏங்கும் இருத்தலின் திண்மை என தொகுப்பு முழுவதும் வேறு வேறு வண்ணங்களால் தீட்டப்பட்ட கவியோவியங்கள் “மை’ தொகுதியில் நிறைந்து காணக்கிடைக்கின்றன.

பெண் நிலையில் நின்று சொல்லப்பட வேண்டிய சேதிகளை போர்ச்சூழல் சுமத்தியுள்ள சுமைகளை, வேதனைகளை அவர்தம் உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக்கவிஞைகள் அவர்தம் உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக்கவிதைகள் பேச முனைந்துள்ளனர். இவை வாசகர்களிடம் தொற்றிக்கொள்ளும் போது உயிர்ப்பு பெற முடியும் என்ற நம்பிக்கையோடு பல கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன.

*

குண்டுகள் விழுந்த மண்ணில்
நான் பிறந்தேன்
குண்டுகள் தகர்ந்த மண்ணில்
நான் வளர்ந்தேன்
குண்டுகள் வெடித்த மண்ணில்
நான் இறந்தேன்
குண்டுகள் புதைத்த மண்ணில்
நான் புதைந்தேன்

என ஆத்மாவின் ஓலமாய் தன் கவிதையை எழுதும் பாமதியின் படைப்பை உரத்த குரலென்று
ஒதுக்கிவிட இயலுமா..? அல்லது

குண்டு வானிலிருந்து கொட்டும்
வெடித்துச் சிதறி
இரத்தம் வழியக் குழந்தைகளும்
பெற்றோர், உற்றார், பிணங்களாய் விழ
வழி தெரியாது மிரண்டு திகைத்து இவர்கள்

படுத்தப்பாயில் சுடப்படும்போது
கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்லப்படும்போது
ப்யணிக்கும் வாகனம்
திடீரென அதிர்ந்து சிதற
ஏனேன்று அறியாது குழந்தைகள்
அச்சமும் வேதனையும் அவர்களை
இட்டு நிரப்ப வார்த்தையில்லை”

என்ற தர்மினி தீட்டும் அவலச்சித்திரத்தை அடங்கிய தொனியில், மெல்லிய கிசுகிசுப்பான குரலில் சொல்லுதல் நியாயமாகுமா?
இந்தக் காட்சிகள் ஏதோ ஒரு சிறு தீவொன்றில் மட்டுமே நிகழ்வதல்ல. உலகின் வேறுவேறு மூலைகளில் இதை வாசிக்கும் இந்த நிமிடத்திலும் நிகழ்பவை. இவற்றை எழுதாமல் வேறு எவற்றை எழுதுவது..? எனினும் பெண் படைப்பாளிகளுக்கு எழுத பல கருப்பொருட்கள் கிடைத்த வன்ணம் உள்ளதை மறுக்கவியலாது.

‘வேலையால் வந்து
கோலுக்குள் இருந்து
ரிவி (டி.வி.) பார்த்தபடி
அதிகாரம் செய்யும் கணவனே
சற்றுநேரம்
நீ மிதிக்கும் மனைவியாய் மாறு
புரியும் வேதனை’

என்று வலியுணர்த்தும் நளாயினி

பெண்களின் மீதான விதவிதமான தாக்குதல்களை கரப்பான்களாக உருவகப்படுத்தி
குறியீடாக தன் கவிதையைச் சொல்லும் புதியமாதவி

“பறத்தலையும் மறந்து
பாடலையும் இழந்து
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை”

என தனது தேசம், மண், உறவு – இவற்றிலிருந்து வெட்டி தூக்கி எறியப்பட்டு தனிமைச்சோகத்தில் தவிக்கும் வாழ்வின் சோகவரிகளை தீட்டும் பஹீமாஜகான்

“இயந்திரத் துப்பாக்கியுள் செலுத்தி
அதை அழுத்தி ஒரு குண்டை
உமிழச்செய்யும் விரலின் உணர்வைவிட
மலினப்பட்டுப் போன பிரசவவலி..”

“போர்களை நிறுத்தியபின் கருக்களைப் பற்றிப் பேசுவோமாக ” எனத் திட்டவட்டமாக தெளிந்த முடிவெடுக்கும் புதியசிந்தனை.

புலம்பெயர்ந்தவர்களின் கவிதைமொழி, தேசம் துறந்து (துரத்தப்பட்டு) வேற்றிடத்தில் வேர் பாவாது வாழ்வியல் சிக்கல்களைப் பதிவு செய்கிற்த வேளையில் தாய்த் தமிழக படைப்பாளிகளில் சுகிர்தராணியின் படைப்பு பாலியல் கூறுகளாலான படிமங்களை கவிதையாக்குகிறது. குட்டிரேவதியோ உறவுச்சிக்கல்களை தனது கவிதைகளில் பதிவு செய்துள்ளார். பெண்ணியத்தின் மற்றுமொரு கூறான தலித் பெண்ணியப் பார்வையில் புனையப்பட்ட அரங்கமல்லிகாவின் ‘உழைப்பு’ கவிதை தலித் பெண்களின் உழைப்பு குறித்து
கம்பீரத்தோடு பேசுகிறது.

மாதுமையின், “அப்பா” பேச வேண்டியதொரு கவிதை. அப்பா-மகள்ல்ல்ல்ல் என்ற உறவின் உள்ளிருக்கும் ELECTRA COMPLEX -ம் அப்பா என்கிற அதிகார மய்யத்தையும் தனது வினாக்களால் விமர்சனத்திற்குள்ளாக்குவது புதியபார்வை.

கற்பகம் யசோதரவின் “கவிஞர்களில் குசு’ தொகுப்பின் மிக வித்தியாசமான தொனியோடு கூடியது. “பெண் என்பவள் உளவியல் பகுப்பாய்வைப் பொறுத்தவரை இல்லாதவளாக இருக்கிறாள். woman does not exist என்கிற வாதத்தை நையாண்டியோடு அடித்து
நொறுக்கப்பட்ட வெளிப்பாடும், மொழியும் மற்ற கவிதைகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.

சமூக அவலங்கள் மட்டுமின்றி மென்மை தூவிய காதலின் வருடல்களும் காணக்கிடைக்கின்றன. மலரா-வும், பெண்ணியா-வும் இப்பணியினைச் சிறப்புடன் செய்கிறார்கள்.

“பெண்ணியம் சார்ந்த க்விதை, இன்று தனக்கென விசாலமான ஒரு வெளியை உருவாக்கிக் கொண்டு வருகிறது. குடும்பமும் கூட்டமுமாக வாழ்கிற இந்தச் சமூக வாழ் நிலைகளில் யாருக்கும் எப்போதும் வேண்டுவது – ஒரு பாதுகாப்பான வாழ்க்கை, ஒரு இருப்பு. பெண்ணுக்கோ சமூகத்தின் அடித்தளத்திலுள்ள மக்களுக்கோ நடைமுறையில் இது மறுதலிக்கப்படுகிறது. அடிப்படையான இந்தப் பிரச்சனை பெண்ணிய கவிதை மொழியின் மைய உணர்வாக வெளிப்படுகிறது” எனக் குறிப்பிடும் விமர்சகர் தி.சு.நடராசனின் சொற்களை உள்வாங்கி ஒட்டுமொத்த படைப்பாளிகளின் ஒருமித்த குரலாய் வெளிப்படும் உதயச்செல்வியின் கவிதை.

‘புரிந்து கொண்டு பகிர்ந்து கொண்டால்
ஒன்றாய் ஓடுவதில்
எமக்கொன்றும் ஆட்சேபணையில்லை
உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவம்
உமக்கில்லையெனில்
முந்திக் கொண்டோட வேண்டியிருக்கும்
இது எச்சரிக்கையில்லை
உம்மீது கொண்ட அன்பின் மிகிதியாய்
வெறும் அறிவிப்பு மட்டுமே!

“மை” யின் படைபாளுமைகள் வேண்டுவதெல்லாம்உணர்தல்.. புரிதல்.. பகிர்தல்..! இது இருபாலுக்கும் சாத்தியமுங்கூட..!!


jpashivammumbai@rediffmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.