‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள் 4 -லா.ச.ராமாமிர்தம்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

வே.சபாநாயகம்


எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 4
—————————–

1. எழுத எழுத எழுத்துக்கே ஒரு சீற்றம் உண்டு. இரை தேடி அலைகிறது.

2. மனசாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தாட்சண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடைபோன்ற சொல்செட்டு, அதே சமயத்தில் சரளம், நையாண்டி – இப்படியும் கட்டுரைகள் உண்டு. தி.ஜ.ர வின் பேனாவிலிருந்துபுறப்பட்டவையே இந்த இலக்கணங்களுக்குச் சாட்சி.

3. எந்த உத்தியை எழுத்தாளன் கையாண்டாலும் சரி, அதோடு இணைந்து, அதே சமயம் அதைத் தன்னோடு பிணைக்கும் கட்டுப்பாடு, பொறுப்பு, உழைப்பு, discipline அவன் பாஷைக்கு அத்யாவசியம்.

4. கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து, தட்டித்தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண் திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்.

5. சில சமயங்களில் மனதில் ஒரு எண்ணம் எழுந்ததும் சமயமும் சந்தர்ப்பமும் அற்று அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி தாமே தம்மைத் தனித்தனித் தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன.

6. கதையம்சம் என்று தனியாக எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.எந்தக் காட்சியில், எந்த ஓசையில், ஒரு அற்புத அம்சத்தில் கண், செவி, மனம் இதயம் என்று காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது.

7. நெருப்புண்ணா வாய் சுடணும். அப்படி வார்த்தையைச் சுண்டக்காய்ச்சி எழுதணும்.

8. நிறையப் படிக்கணும். தமிழ் மட்டுமல்ல, தெரிஞ்ச மொழி எல்லாத்துலேயும் நிறைய புக்ஸ் படிச்ச பிறகு எழுத ஆரம்பிக்கணும். இப்போ வாசகர் கடிதம் எழுதறவன் கூட எழுத்தாளன்னு சொல்லிக்கிறான். அவனுக்குக்கூட கடிதத்துக்கு இவ்வளவுனு பரிசு எல்லாம் தர்றா. அதனால எழுத்தாளன் ஆகிறது இப்போ ரொம்ப சுலபம்…..

9. யாருமே எழுத்தாளனாய்த்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வழியில் அழகைப் பேணுபவர்தான். ஆனால் அழகை எங்கேயும் கண்டு கொள்ள மனம் பழக வேண்டும். மாலையின் செவ்வானம் அவள் ஜ்வாலா முகத்தை நினைவூட்ட வேண்டும். வாழைமரத்தில் ஆடும் வாழை இலைப் பச்சையில் அவளுடைய தட்டாமாலையில் சுற்றும் பச்சைப் பாவாடை மனதில் தோன்ற வேண்டும். அப்பொதுதான் தரிசனம் நிகழும். எழுத்தாளனுக்கு, அவன் எழுத்து காட்டும் முகங்கள் தான் தரிசனங்கள். To cmprehend in the known factor, the unknown – that is mytsic experience.

10.எல்லாவற்றுக்கும் கடைசியாக; முதலும் அதுதான். சிறுகதையோ, நெடுங்கதையோ எழுத ஆரம்பித்து விடு. விஷயம் பிறகு தன் வெளியீட்டுக்குத் தன் வழியை எப்படியேனும் பார்த்துக் கொள்ளும். தண்ணீரில் முதலில் விழுந்தால்தான், குளிப்பதோ, மூழ்கிப் போவதோ, நீச்சல் அடிப்பதோ. எழுதப் போகிறேன், அதற்கு ஹோட்டல் ஓஷியானிக்கில் அறை வாடகைக்கு எடுக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரியாதே. இதோ, திண்ணையில் உட்கார்ந்து, அட்டையைத் துடைமீது வைத்துக் கொண்டு ஆரம்பி. ஆரம்பித்துவிடு.


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

வே.சபாநாயகம்


1. எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும்.தமிழ் நன்றாகத் தெரியவேண்டும்.தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும்.எழுத்து என்பது ‘Memory shaped by art’ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? – இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.

2. பால்சாக் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் எழுதினார். அத்தனை எழுத வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒருபக்கம் எழுதினாலே வாழ்க்கையில் நூறு புத்தகம் எழுதி விடலாம்.

3. The image that fiction producesis purged of the distractions, confusions, and accidents of ordinarylife என்றதுபோல தின வாழ்க்கையி லிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். தெரிந்த மனிதர்கள்,தெரிந்த சம்பவங்கள் பற்றி முதலில் எழுதுவது நல்லது. சொந்தக் கதை எழுதுவதை விட, மனதில் வந்த கதையைச் சொந்தப் படுத்திக் கொண்டு எழுதுவது சிறப்பு.

4. எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதை பார்க்க இயலும். கொஞ்சம் கூடக கருணயே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். ‘நான் எழுதியதெல்லாம் மநிதிர போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம்.உனக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலுக் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.

5. எழுத்தாற்றல் வந்துவிட்டது உங்களுக்கே புரியும். ஒரு ஜுரம் போல உணர்வீர்கள்.நீங்கள் சிருஷ்டித்த பாத்திரங்கள் உங்கலளை ஆக்கிரமிப்பார்கள். எழுதுவதில் உள்ள வேதனைகள் கழன்று போய் உங்களை எழுத ஆரம்பிக்கும். இந்த நிலை வருவதற்குச் சில தியாகங்கள் தேவை.

6. உருவம், உள்ளடக்கம் என்று பலர் ஜல்லியடிப்பதைக் கேட்டிருக்கிறேன். டெண்டர் நோட்டீக்சுகுக்கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின்சிறுகதை என்பது தான் என்ன? கூர்ந்து கவனியுங்கள். சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.

7. எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எலோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப்பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருஷங்கள் ஆயின. கவனித்த அத்தனையையும் எழுதவேண்டுமென்பதில்லை.எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் – முக்கியமாக மானுடம் வேண்டும்.

8. எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா? நல்ல அப்சர்வேஷன் பவர்
வேண்டும்.ரெனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவ்னமாகத் திறந்து
வைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது.எதைப் பற்றித் தெலிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுத வேண்டும்.


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

வே.சபாநாயகம்


1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

2. எழுதுவதற்கு அடிப்படையானது ஒரு உத்வேகந்தான். எழுதுபவன், படைக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டியதுதான் அடிப்படைத் வேவை. மரபு வழிப்படி இலக்கியங்களைப் படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. “இண்டென்ஸ் பீலிங்” எனும்படியான சிரத்தை தேவை. குறையற்ற ஆழமான உணர்ச்சித் திளைப்பில் தான் படைப்பிலக்கியத்தின் கரு உதிக்கிறது எனலாம்.

3. பலசமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும்போது நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலை கொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப் பந்தயமல்ல. நூறு கஜ ஓட்டப் பந்தயத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர வேடிக்கை
பார்த்துக் கொண்டு செல்லவோ, வேகத்தை மாற்றிக் கொள்ளவொ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக அவசியம். வளவளப்பு என்றால் அதிகச் சுமை. ஓடுவது கஷ்டம்.

4. சிறுகதை எழுத உக்திகளைச் சொல்லித் தரலாம். உணர்வில் தொய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும், முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. செக்காவின் உக்திக்கு ஒரு அச்சு தயார் செய்து கொண்டு, அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும் தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஒரு உருவம் கிடைக்கும்.

5. தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்தி பெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும்.

6. எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடியவேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையை கடந்தால் ஒருமைக் கோப்புக்கும் ஊறு விளையத்தான் செய்யும்.

7. செக்காவ், மாப்பசான், போ, மாம், தாகூர், கு.ப.ரா, புதுமைப் பித்தன், லா.ச..ரா, ஸீன்ஓகாளி, ஜாய்ஸ், ஸ்டீ·பன்கிரேன், ஹென்ரிஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறுசிறுகதை ஆசிரியர்களைப் படித்தால் சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்யக்கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்யம் என்பதும் தெரியும். உருவம் என்று
சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் என்பதும் இந்தக் கதைக¨ளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத் தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற்போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம்: பூசினாற்போலவும் விழலாம். அது விளகின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத்தைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில் உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத் தன்மை பெறும்பொது உருவமும் தானாக ஒருமைப் பாட்டுடன் அமைந்து விடுகிறது.

8. உணர்ச்சியின் தீவிரத்தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதற்கில்லை. அது ஒவ்வோர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும் தன்மை. எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்கிறார்கள். எழுத்து தொழிலாகி பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழகிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

(இன்னும் வரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்