“பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

அருணகிரி


மார்வின் ஹாரிஸ் எழுதிய இந்தப்புத்தகம் குறித்து திண்ணையில் வந்த
கட்டுரைகளைப் படித்தபின் இதனைப்படிக்க வேண்டும் என்று முடிவு செய்து,
ஆங்கில மூலத்திலேயே சில வாரங்களுக்கு முன் படித்து முடித்தேன். அருமையான
நூல். தலையணை அளவில் பண்டித பயமுறுத்தல்கள் இல்லாமல் எளிமையாக
எழுதப்பட்ட நூல். இப்படியும் இருக்கலாம் என்று யோசித்துப்பாருங்கள் என்று
சொல்கிறார் மார்வின் ஹாரிஸ். பல சமூகங்களின் கலாசார வழக்கங்களுக்கு
ஒரு பொருளாதார அல்லது உபயோக (லோகாயத) அடிப்படை இருக்கிறது என்று
பல எடுத்துக்காட்டுகள் மூலம் வாதிடுகிறார். பிற கலாசாரங்களில் காணப்பட்ட
சில வழக்கங்களை ஒரேயடியாக ‘அர்த்தமற்ற முட்டாள்தனங்கள்’ என ஒதுக்கிய
ஐரோப்பிய மைய மார்க்ஸிஸம் தோய்ந்த பல்கலைக்கழக வறட்டுப் பண்டிதர்களுக்கும்,
பிற கலாசாரங்களை நற்செய்தி பரப்பி “நாகரீகப்படுத்த” வேண்டிய
காட்டுமிராண்டித்தனங்களாகக் கண்ட மதவாத அடிப்படைவாதிகளுக்கும் இந்த புத்தகம்
ஏன் எரிச்சல் தந்தது எனப்புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் இந்தப்புத்தகம் தொடாமல் விட்டு விட்ட முக்கியப்புள்ளிகளும் உண்டு.

பல நேரங்களில் ‘ஏன் ஒரு விஷயம் இவ்வாறு இருக்கிறது’ என்பதற்கு இணையான
முக்கியக்கேள்வி ‘ஏன் இவ்விஷயம் இவ்வாறு இல்லை’ என்பதும் கூட. அதனை இந்த
நூலில் மார்வின் ஹாரிஸ் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு
ஆராய்ந்திருந்தால், கலாசார பொருள்முதல்வாதம் என்பதைத் தாண்டி, வெவ்வேறு
சமூகங்களிலும் நாகரீகங்களிலும் நிலவும் அறநெறி குறித்த நிலைப்பாடுகள்
மற்றும் சமூகத்தில் வேரூன்றிய தொன்மக்கூறுகள் ஆகியவை, ஒரே விதமான
பிரச்சனையை வேறுபட்ட சமூகங்கள் எவ்வாறு வெவ்வேறு விதமாக அணுக உதவின
என்பதை வெளிச்சம் போட்டிருக்கலாம்.

ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் எல்லாக்காலத்திலும் ஒரு சமுதாயம் முன்பு
இருக்கத்தான் செய்கின்றன. எந்தத் தீர்வை ஒரு சமுதாயம் தெரிவு செய்கிறது
என்பதனை அந்தச்சமுதாயத்தின் பொது உளவியலும் அந்த உளவியலை உருவாக்கிய சமூக
அறநெறித் தத்துவங்களுமே தீர்மானம் செய்கின்றன.

இந்திய சமூகம் பசுக்களைப்புனிதமாகக் கருதியதையும் அரேபிய சமூகம் பன்றிகளை
கடவுளால் விலக்கப்பட்டதாகக் கண்டதற்கும் உணவு வளம் (food resource) என்ற
லோகாயதப் பிரச்சனையின் அடிப்படையில் ஹாரிஸ் விடை காண்கிறார். அதாவது,
உணவுப்பிரச்சனை என்ற, அடிப்படையில் ஒரே விதமான பிரச்சனையைத் தீர்க்க இரு சமூகங்கள் இரு
வேறு விதங்களாக அப்பிரச்சனையை அணுகியிருக்கின்றன. ஒரு சமூகம் (இந்திய
சமூகம்) ஒரு விலங்கைப் புனிதமாக்கி பிரச்சனையைத் தீர்க்க முயல, மற்றொரு
சமூகம் (அரேபிய சமூகம்) ஒரு விலங்கை வெறுக்கத்தக்கதாக ஆக்கி பிரச்சனையைத்
தீர்க்க முயல்கிறது. சமூகங்கள் ஒவ்வொன்றும் பிரச்சனைகளைத் தீர்க்க
வெவ்வேறு விதமான சமூகவியல் தீர்வை உபயோகப்படுத்துகின்றன. ஒரு
சமூகத்தீர்வு இன்னொரு சமூகத்தில் வலுவிழந்து போகலாம். ஏனெனில், வெவ்வேறு
சமூகங்கள் ஒரே வித பிரச்சனைக்கு வெவ்வேறு விதமான தீர்வைக்
கண்டுபிடிப்பதில் அந்தந்த சமூகங்களின் உளவியலும் அந்த உளவியலை
வியாபிக்கும் தத்துவக்கூறுகளும் முக்கியக் காரணிகள் ஆகின்றன.

விவசாய இந்தியாவில் பசுக்கள் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு
புனிதப்படுத்தப்பட்டதன் மூலம் பாதுகாக்கப்பட்டன. அதன் மூலம் பொருளாதாரப்
பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. வேறு எந்த விவசாய சமூகமும் இது போன்ற
தீர்வைக் கண்டறியவில்லை. சொல்லப்போனால் இந்தப்புத்தகத்தில் உள்ள அனைத்து
கலாசார புதிர்களிலும் இந்திய கலாசாரத்தின் பசுப்புதிர் மட்டும் ஒரு
விதத்தில் தனித்தே தெரிகிறது. இந்தியப் பசு உதாரணத்தில் மட்டுமே
விலங்குகூட அதன் நிலையிலிருந்து உயர்த்தப்பட்டு தெய்வீகமாக
நிலைநிறுத்தப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வாக அமைவது
சாத்தியப்பட்டிருக்கிறது.

இந்திய தத்துவ சிந்தனையில் இயற்கை முழுவதும் எல்லா விலங்குகள், பறவைகளுமே புனிதமாகத் தான் கருதப் படுகின்றன. சேவலும், மயிலும், காளையும், புலியும், சிங்கமும், யானையும், மூஞ்சூறும், நாயும், வராகமும் இப்படி விலங்குகள் மட்டுமல்ல, கடலும், மலையும், மரமும் என்றவாறு அசைகின்ற மற்றும் அசையாத உயிரினங்கள் என்று இப்படி அனைத்தும் தெய்வங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வழிபடும் நிலையில் வைக்கப்படும் ஒரு தத்துவ சிந்தனையைத் தன்னகத்தே கொண்ட ஒரு சமூகமானது, பொருளாதாரப்பிரச்சனை என்று வருகையில் தன் வாழ்வியலுடன் இணைந்த ஒரு விலங்கைப் புனிதப்படுத்தி அப்பிரச்சனைக்குத் தீர்வு காண முற்பட்டதில் ஒரு வியப்பும் இல்லை.

இதே போன்ற பொருளாதாரம் மற்றும் உபயோகக் காரணங்கள் இருந்தும், பிற
சமூகங்களும் பசுக்களைப் புனிதமாக்குவதன் மூலம் தீர்வு காண
முயன்றிருக்கலாம், ஆனால் ஒரு நாடும் அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில்
அவ்வாறு செய்ய அந்தந்த சமூகங்களின் உளவியலை வியாபித்த தொன்மங்களிலும்,
தத்துவங்களிலும் அற உணர்வுகளிலும் இடம் இருக்கவில்லை.

மற்ற எந்த கலாசாரப்புதிரிலிருந்தும் தனித்துத் தெரியும் இந்த உதாரணம்
எதனால் இந்திய சமூகத்தில் மட்டும் சாத்தியப்பட்டது என்று மார்வின்
ஹாரிஸ் கேட்டிருந்தால் இந்த சமூகவியல் ஆய்வின் வேறு சில பரிமாணங்களும்
புலப்பட்டிருக்கலாம்.

மேலும் ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம். மார்வின் ஹாரிஸ் சொல்கிறார்:
‘சர்ச் மற்றும் அரசின் மீதான வெகுஜன அதிருப்தியைத் திசை திருப்ப
“சூனியக்காரிகள்” ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்”. மேலும்
“பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து போர்கள், நோய்கள் ஆகியவை அதிகரித்தபோது
சூனியக்காரிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அதிகரித்தது” என்கிறார். இந்த
ஆய்வில் அவர் கேட்காமல் விட்ட கேள்வி “ஏன் சூனியக்காரிகள் கண்டுபிடிப்பு
ஐரோப்பிய சமூகத்தில் மட்டும் நடக்க வேண்டும்?” என்பது. அதிகாரங்களின்
மீதான அதிருப்தி என்பது உலக சமுதாயங்கள் அனைத்திலும் எல்லாக்
காலங்களிலும் ஏதோ ஒரு வகையில் இருந்து வருவதுதான். போரும், வறுமையும்
மற்ற சமூகங்களுக்குப் புதிதும் அல்ல. ஆயின், ஐரோப்பிய சமூகத்தில் மட்டும்
ஒரு குறிப்பிட்ட கூட்டம் பலிகடாவாக ஆக்கப்படுவது ஏன் சாத்தியப்பட்டது?
எந்தத் தத்துவ உளவியல் இந்தக் குறிப்பிட்ட வழியை அக்கால ஐரோப்பாவிற்கு
அடையாளம் காட்டி உகந்ததாக்கியது? இந்தக் கேள்விக்கான விடையில் கடந்த
நூற்றாண்டில் யூதர்கள் பலிகடாவாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டதற்கான
விடையும் உள்ளது.

ஒரு பிரச்சனைக்கு, சமூகங்களின் முன்னிலையில் ஆக்கபூர்வ தீர்வும் உள்ளது
அழிவியல் தீர்வும் உள்ளது. அழிவியல் தீர்வைத் தெரிவு செய்கின்ற ஒரு
சமூகத்தைக் கட்டமைக்கும் தத்துவங்களுக்கு தொடர்ந்து பலி கடாக்கள்
தேவைப்படுகின்றன. மார்வின் ஹாரிஸ் விளக்கும் சூனியக்காரிகளுடன்
பலிகடாக்கள் நின்று விடவில்லை. சிலை வழிபாட்டாளர்கள், இணை வைப்பவர்கள்,
நம்பிக்கையற்றவர்கள் என்று இத்தகைய சமூகங்களில் பலிகடாக்கள் இன்றும்
தொடர்கின்றன.

சட்டம் அனுமதித்தால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை வைத்து (உயிர் வாழ்வதும் இந்த விலையில் அடங்கும்) அதன் மூலம் எந்தப் பிரச்சனையையும் தீர்த்து விடலாம் என்கிறார் ஃப்ரீக்கானமிக்ஸ் ஆசிரியர் ஸ்டீவன் லெவிட். நவீன சட்டங்கள் இல்லாத பழம் சமூக அமைப்பிலோ ஒரு சமூகக் கட்டமைப்பையும் ஒழுங்கையும் கொண்டு வந்தவை அந்தந்த சமூகங்களின் சிந்தனைத்தளங்களும்,
தொன்மங்களும், அவை உருவாக்கிய சமூக அற உணர்வு நிலைகளும்தான். ஒரேவகை கலாசாரப்புதிருக்கு சில சமூகங்கள் வெறுத்து அழிக்கும் பன்றித்தீர்வையும் சில சமூகங்கள் உன்னதமாக்கிப் பாதுகாக்கும் பசுத்தீர்வையும் கண்டதற்கு அந்தந்த சமூகங்களின் சமூக அற உணர்வு நிலைகளே காரணமாக அமைந்தன.

கலாசாரப்புதிர்களுக்கான விடையை லோகாயதத்தில் தேடுவதில் தவறில்லை. ஆனால் அந்த விடைகள் மட்டுமே கலாசாரங்கள் குறித்த முழுமையான சித்திரத்தைத் தந்து விடுவதில்லை. பல நேரங்களில் லோகாயத விடைகளை விட அப்புதிர்களின்
பின்னுள்ள விழுமியங்களே அந்தந்த சமூகங்கள் மற்றும் கலாசாரங்களைப்பற்றிய பல ஆதார உண்மைகளை வெளிச்சம் போடுகின்றன.


arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி

பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

ப்ரவாஹன்


எடுத்தேன் படித்தேன்
ப்ரவாஹன்
(எழுத்தாளர் – சமூகவியல் ஆய்வாளர்)

பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் – 2
மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)
பக். 176 ரூ. 110
எனி இந்தியன் பதிப்பகம் (www.anyindian.com)
#102, எண் 57 பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, சென்னை-600017

அமெரிக்க மானுடவியலாளர் மார்வின் ஹாரிஸின் “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்” – பாகம் 2, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மாய சரக்குப் பெட்டிகள், மெஸையாக்கள் மற்றும் சூனியக்காரர்கள் பற்றிப் பேசுகிறது. பசிபிக் தீவுகளின் பின்தங்கிய மக்களை ஐரோப்பியர்கள் பொருட்கள் கொடுத்து அடிமைப்படுத்தி, மதமாற்றி, சரக்குப் பெட்டியின் வரவுக்காக அவர்களை ஏங்கச் செய்ததை முதலாளித்துவ தொழில்மய உலகில் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் அதனடியாக உற்பத்தியாகின்ற செல்வம் வினியோகிக்கப்படும் விதத்தையும் ஒப்பிட்டு மார்வின் ஹாரிஸ் விளக்கிச் செல்லுவது அசாதாரணமானது.

1933இல் மடாங் பகுதி மக்கள் கிறித்துவ போதகர் ரோலண்ட் ஹாவ்ஸல்மனிடம் கொடுத்த மனுவில், “எங்களுக்கு ஏன் சரக்குப் பெட்டி இரகசியம் இன்னமும் கற்றுக்கொடுக்கப்படவில்லை? கறுப்பு மக்களாகிய எங்களுக்கு கிறித்தவ மதம் நடைமுறை வாழ்க்கையில் எதற்கும் உதவவில்லை. வெள்ளைக்காரர்கள் சரக்குப் பெட்டி இரகசியத்தை மறைத்து வைக்கிறீர்கள்” எனக் குற்றஞ்சாட்டும் வகையில் கிறித்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் இருந்துள்ளன.

கிறித்து சகாப்தத்தின் தொடக்கத்தில் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்த கொந்தளிப்பான சமூக நிலைமை, ரோமானிய காலனி ஆதிக்கத்திற்கெதிராக நிகழ்ந்த போர்கள் மற்றும் அதன் அடிப்படையில் இராணுவ மெஸையாவாகத் தோன்றிய ஏசு கிறித்துவின் நடவடிக்கைகள் பின்னர் ரோமானிய சாம்ராஜ்யம் வெற்றி பெற்ற நிலையில் அமைதி மெஸையாவின் செயல்களாக மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பழைய ஏற்பாட்டில் பதிவாகியுள்ள அவரது இராணுவச் செயல்பாடுகளையும் அதற்கான தேவையையும் அக்கால சமூகத்தின் பொருளாயத அடிப்படையிலிருந்து ஆழமாக விளக்கியுள்ளார்.

சிலை வழிபாடு நீக்கமற நிறைந்திருந்த ஜெருசலேமில் வாள் முனையில் அத்தகைய பழக்கம் ஒழிக்கப்பட்டது இந்நூலிலிருந்து தெளிவாகிறது. பகுத்தறிவு என்பது கடவுளை மறுத்து கடவுளர் சிலைகளை உடைப்பது என்பதான நிலவரம் உள்ள தமிழ்ச் சூழலில், கடவுளர்கள் தோன்றியதற்கான பொருளாயத நிலைமைகளையும், அத்தகைய நிலைமைகள் நீடிக்கின்றவரை சிலைகளை உடைப்பதன் மூலம் கடவுள் நம்பிக்கையைப் போக்கிவிட முடியாது என்பதையும் மார்வின் ஹாரிஸின் நூலிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

15-16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 5 இலட்சம் மக்கள் சூனியக்காரப் பட்டம் சூட்டப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சூனியக்காரர்கள் சாத்தான்களோடு தொடர்புடையவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். மறுவுலகின் பிரதிநிதியாக ஆக்கப்பட்ட கிறிஸ்துவை விட இவ்வுலகின் பிரதிநிதியாக வல்லமை வாய்ந்த சாத்தான் உருவாக்கப்பட்டு, சர்ச்சுக்கு எதிரான சிந்தனைகளை ஒட்ட நறுக்குவதற்காக மதவிசாரணை என்கிற பெயரில் சூனியக்காரர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்த பொருளாதாரக் காரணிகளை முன்வைத்து கிறித்தவப் பின்புலத்திலிருந்து வந்த மார்வின் விளக்கியுள்ளார்.

பழமைவாத சர்ச்சுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுமுறைகளின் தொடர்ந்த மாற்றங்களும் கீழ்வர்க்கம் புரட்சி செய்யும் என்ற பயமுறுத்தலும்தான் கொஞ்சம் கொஞ்சமாக புரோட்டஸ்டண்ட் சீர்திருத்தத்தை நோக்கி ஐரோப்பாவைத் தள்ளியது என ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மொத்தத்தில் தமிழில் முதன் முதலில் வெளிவந்துள்ள பண்பாட்டு மானுடவியல் குறித்த ஆழமான இந்நூலை பொருள்முதல்வாத அடிப்படையில் சமூக வரலாற்றை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதற்கான ஒரு பாடநூலாகவும் கொள்ளலாம். இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள துகாராம் கோபால்ராவின் பணி பாராட்டுக்குரியது.


Series Navigation

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

பசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

பி.கே.சிவகுமார்


மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் – பாகம் I எனிஇந்தியன் வெளியீடாக சென்ற ஆண்டு வெளிவந்தது. துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்தார். அவரின் மொழிபெயர்ப்பிலேயே பாகம் – II எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகம் – I வாசகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு பாகம் – IIஐ சாத்தியமாக்கியிருக்கிறது.

“மார்க்ஸியத்தின் இயந்திரத்தனமான புரிதலைத் தாண்டி, வரலாற்றின் கலாசாரப் பதிவுகளை நோக்குவதற்கு மார்வின் ஹாரிஸ் அடித்தளம் அமைத்துத் தருகிறார். ஒரு குழு இன்னொரு குழுவின் மீது ஏற்படுத்தும் அதிகாரத்திற்கான அடிப்படைக்குக் குறிப்பிட்ட பண்புகள் கொண்ட கடவுள் கொள்கை ஒரு காரணம். இன்னொரு காரணம், உயர்நிலை கொண்ட நாம் – தாழ்நிலை கொண்ட மற்றவர் என்ற இருமை. இந்தக் காரணிகளைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் வரலாறு சொல்லித்தரும் வெறுப்புகளைத் தாண்டி மனிதகுலம் ஒருமித்து எளிய மக்களை முன்னேற்ற முயற்சிகள் செய்ய முடியும். துரதிர்ஷ்டவசமாக வரலாற்றுத் தழும்புகள் நம் நிகழ்காலத்தின்மீது கரிய நிழலைப் படரவிட்டுக் கொண்டே இருக்கிறது. கடந்த காலத்துக்கு நிவாரணம் என்ற பெயரில் நிகழ்காலக் கொடுமைகளை நியாயப்படுத்தியும் நிரந்தரப்படுத்தியும் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

இந்த நூலை மொழிபெயர்க்க துகாராம் அவர்கள், கிறிஸ்துவ மதத்தின் ஆதிகால வரலாற்றையும், பூர்வகுடிகளின் வரலாற்றையும் ஆழ்ந்து கற்க வேண்டி இருந்தது. அப்படிக் கற்றதனால் மொழிபெயர்ப்பு தெளிவான முறையில் விளக்கமாய் அமைந்துள்ளது. மார்வின் ஹாரிஸ் கிறிஸ்துவ வரலாற்றின் வழிவந்த சமூகத்தில் இருந்து வந்ததால், அந்த வரலாறே அவருடைய ஆய்வுகளுக்கு அடிப்படை ஆகிறது. ஆனால் இந்திய வரலாற்றையும் கீழ்த்தேசங்களின் வரலாற்றையும் இதன் ஊடாகப் பொருத்திப் பார்ப்பது சாத்தியமே.” என்று பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.

மொழிபெயர்ப்பைச் சரிபார்த்து இரண்டாம் பாகத்திற்கும் முன்னுரை எழுதியிருக்கிறார் ‘பிரக்ஞை’ ரவிஷங்கர். பல்கலைக்கழக அறிவுஜீவிகள் பொதுஅரங்குக்கு வருவதை நாடாதவர்கள் என்று முன்னுரையில் ஆரம்பிக்கிற ரவிஷங்கர் அதற்கான காரணங்களைப் பின்வருமாறு சொல்கிறார்.

“மார்வின் ஹாரிஸ் தம் காலத்திலேயே நிறையக் கவனம் ஈர்த்தவர். பொதுவாகப் பல்கலைக் கழக அறிவுஜீவிகளுக்குப் பொதுஅரங்கில் அங்கீகாரம் கிட்டுவது மிகக் குறைவு. அவர்கள் பொதுஅரங்குக்கு வருவதை நாடாதவர்கள். ஏனெனில் பொதுஅரங்கு என்பது சகலவிதமான மக்களும் பங்கெடுக்கும் இடம். அதில் கூர்மையாக, எடுத்த பொருளை மட்டும் கவனித்த விவாதங்களை நடத்துவது எளிதல்ல. அங்கு நாடகத்தன்மை, ஜிகினா வேலைகளுக்கு அதிகம் மதிப்பு இருக்கும். நன்மை புன்மையின் முன் தோற்றுப் போகும் என்பது பல்கலை அறிவுஜீவிகளின் கருத்து. அது பெருமளவு உண்மையும்கூட.

சமகால ஆதிக்க மதிப்பீடுகளுக்கு எதிராக அறிவாய்ந்த கருத்துகளை முன்வைப்பவர்கள், எளிதாகவே பொதுஅரங்கிலிருந்து விரட்டப்படுவார்கள். அப்படி ஒரு சம்பவத்தை, தலைகுனிவை எதற்காகத் தேடிப் போக வேண்டும். அதைவிடப் பின்னறைகளில் இருந்து அரசு மேலும் சமூகப் பொருளாதார நிறுவனங்களுக்கு ஆலோசனை சொல்வது ஆடம்பரமும் தேவையற்ற கவனமும் இல்லாத, ஆனால் மிகவும் தாக்கும் சக்தி உள்ள ஒரு நிலை. அந்தப் பின்னறை மதியாலோசனையைத்தான் பெருவாரி அறிவிஜீவிகள் விரும்புகிறார்கள். மார்வின் அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர். அவர் ஆடம்பரம், பரபரப்பு, அரசியல் லாபம் இவற்றுக்க்காகப் பொதுஅரங்கில் ஏறவில்லை. ஆனால், பொதுமக்களின் சமூகப் பிரக்ஞை மேம்படுத்தப்பட வேண்டும், அறிவியல் பார்வை சாதாரண வாழ்வில் பரவ வேண்டும் என்று சில எளிய அவசியமான நோக்கங்களுக்காகப் பொதுமக்களுக்கு என்று நூல்கள் எழுதியதோடு நிறையப் பொதுஅரங்குகளில் பேசவும் செய்தார்” என்று முன்னுரையைத் தொடங்குகிறார் ‘பிரக்ஞை’ ரவிஷங்கர். அதன்பின்னர் அறிவியல் பார்வை, மார்வினிடம் காணக் கிடைக்கும் ஆறு கருத்துகள் என்று முன்னுரை ஆழமான தளங்களில் விரிந்து புத்தகத்திற்கு அழகு சேர்க்கிறது.

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை புத்தக மொழிபெயர்ப்பின்போது வரலாற்றின் கசப்புகளை அறிந்தபோது, அவர் பெற்ற அனுபவங்களை விவரிக்கிறது.

மாயச்சரக்குப் பெட்டிகள், யூத மீட்பாளர்கள் (மெஸையாக்கள்), சமாதான பிரபுவின் ரகசியம், சூனியக்காரர்களின் துடைப்பங்களும் சூனியக்காரர்களின் கூட்டு வழிபாடுகளும், சூனியக்காரர்களைப் பற்றிய பெரும்பீதி, மீண்டும் சூனியக்காரர்கள், முடிவுரை ஆகிய பகுதிகள் புத்தகத்தில் உள்ளன.

பின்னிணைப்பாக பாகம் – I-க்கு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன மானிடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி எழுதிய விமர்சனமும், கல்வெட்டியல், தொல்லியல், வரலாற்றியல் ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய விமர்சனமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

புத்தகத்தின் அட்டைப்படம்: The Spanish Inquisition by Pedro Berrugete. Sanit Dominic Presiding over an Auto-da-fe-created 1475. Oil on wood. Prad Museum, Madrid.

ஏறக்குறைய 175 பக்கங்கள் உடைய இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 110.


pksivakumar@yahoo.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்