உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
எஸ் அரவிந்தன் நீலகண்டன்
கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு. மனித இனம் பரிணமித்தது முதல் அதன் ஒரு முக்கிய செயல்பாடாக கதைகள் திகழ்கின்றன. அக்கதைகளில் மிகவும் ஜீவனுடன் காலங்கள் கடந்து வாழ்ந்து நிற்பவை புராணங்கள். ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகள் ஆகட்டும், நவஜோ அமெரிக்க பூர்விகக் குடிகள் ஆகட்டும், பாரதம் ஆகட்டும் பண்டைய மெசபடோமியா ஆகட்டும் அல்லது ஏக இறை கோட்பாட்டினை வலியுறுத்துவதாக கூறும் ஆபிரகாமிய மதங்கள் ஆகட்டும் புராணக் கதைகள் அவை அனைத்திலும் இருக்கின்றன. புராணங்கள் வெறும் கற்பனையா? வரலாற்று நிகழ்ச்சிகளின் அதீத கற்பனையின் விளைவா? அல்லது இரவு வானிலும் சுற்றி நிற்கும் இயற்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகள் மனித மனதில் ஏற்படுத்திய பிம்பங்களா? ஆழ்மன வெளிப்பாடுகளா? சமூக பொருளாதார காரணிகளால் மாற்றங்களால் ஏற்பட்டவையா? இவை அனைத்துமேவா? இன்றைக்கும் இப்புராண கதைகள் வாழ்வதற்கு ஏதேனும் நியாயம் இருக்கிறதா? இவை அனைத்தையும் ஆராயப்போகும் தொடர் இது.
1. ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் புனிதமான கனவு காலம் (Dream Time)
“ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்களின் இருப்பினை நம்புகின்றனர். இரு இணையாக ஓடும் இயக்கம். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். மற்றதோ கனவுக்காலம். முடிவற்ற ஆன்ம சுழற்சியான இக்காலம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது. இக்கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த பழங்குடி (பூசாரிகள்) இப்புனித கனவுக்காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.”
மேற்காணப்படும் மேற்கோள் இயற்பியலாளர் ப்ரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe’ எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் ஆன்மிக வெளிப்பாடுகள் செழுமையும் ஆழமும் கொண்டதோர் ஆன்மிக மரபினைக் காட்டுகின்றன. கனவுகாலம் என்பது கூட வெள்ளையரின் பதம் தானாம், வூல்ப் கூறுகிறார். ஆதிவாசிகளை பொறுத்தவரையில் கனவு என்பது நனவுலகுடன் இணைந்தியங்கும் ஒரு இருப்பு என்கிறார். (அருந்தா அல்லது அரண்தா எனும் ஆதிவாசி இனத்தாரின் ‘அல்கெரிங்கா’ எனும் பதத்தை ஸ்டானர் என்பவர் கனவுகாலம் என மொழிபெயர்த்தார்.)
ஆதிவாசிகளின் புராண நாயகர்கள் வீர புருஷர்கள் தம் சாகஸங்களை இந்த அல்கெரிங்காவிலேதான் செய்கின்றனர். ஆதிவாசி புராணங்களை ஆய்வு செய்த காரெட் பர்டெனின் வார்த்தைகளில் ‘அனைத்து புராணங்களும் உண்மையானவை ஏனெனில் அவை புனிதமானவை’. ஆனால், வூல்ப் வினவுகிறார், “எந்த அளவுக்கு கனவுகாலம் என்பது போன்ற ஒரு புராண ரீதியிலான கற்பனை உண்மையாக இருக்க முடியும்? இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரிசோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை”(பக் 149). வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது.
புராணம் என்பது பாரத மரபின் பதம். அதிசயிக்கத்தக்க வகையில் இப்பதத்திற்கு கொடுக்கப்படும் வியாக்கியானம் மேற்கண்ட ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் ஆன்மிக தரிசனத்திற்கு இணைத்தன்மை கொண்டுள்ளது. புராணம் = புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்).
aravindan.neelakandan@gmail.com
- இரவில் கனவில் வானவில் – 8
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சிந்தனையில் சிலநேரம்
- இலை போட்டாச்சு !
- மடியில் நெருப்பு – 9
- National folklore support center
- நேற்று ! இன்று ! நாளை !
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- அவலம்
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- பெண்கள் சந்திப்பு 2006
- கடிதம்
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- காசும் கரியும் !
- வாணர்களும் விந்தியமலையும்
- கடித இலக்கியம் – 28
- மௌனத்தின் அலறல்