பாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)!

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

நாக இளங்கோவன்


இந்தியாவின் பங்குச் சந்தைப் புள்ளி 12000த்தைக் கடந்து விட்டது.
பேராயக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட நடுவண் அரசு பதவி
ஏற்ற இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்புள்ளி 6000-7000 அளவில்
இருந்தது.

அசித் பிரேம்சிக்கு கடந்த 2005-6 ஆம் ஆண்டு நிகர இலாபம் மட்டும்
2205 கோடி உரூவாய். முகேசு அம்பானியின் ரிலையன்சு பெட்ரோலியத்தின்
பங்குச் சந்தை மதிப்பு நேற்று 143,000 கோடி உரூவாய்! அவர் தம்பி
அணில் அம்பானியின் சந்தை மதிப்பு 75,000 கோடிகளுக்கும் மேல்.

அமெரிக்க அதிபர் சியார்ச் புஃச், இந்தியர் சீனர் போல படியுங்கள்.
இல்லாவிடில் உங்கள் வேலையெல்லாம் அவர்களுக்குப் போய் விடும்
என்று பெருவிரலால் தனது மூக்கைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி
அமெரிக்க இளையர்களுக்கு பயங்காட்டியிருக்கிறார். இந்தியர்கள்
படிக்கும் சேவைப் படிப்பை தமது இளையரும் படிக்க வேண்டும்,
மேதாவிகளைப் போல புறந்தள்ளக் கூடாது என்பதே அதன் சாரம்
என்பது எனது கருத்து. ஆயினும் இந்தியப் படிப்பாளிகள், இதோ பார்
நாங்கள்தான் படிப்பாளிகள்; அமெரிக்காவே எங்களைப் போல படியுங்கள்
என்று சொல்கிறது என்று மார்தட்டி நமது பெருமையை மின்னஞ்சல்கள்
வாயிலாக பரப்பிக் கொண்டிருக்கக்கூடும்.

மிகவும் மகிழ்ச்சியான சேதிகள்தான்! மறுப்பதிற்கில்லை.

இவை இப்படியிருக்க, தமிழகத் தேர்தலில், அரசியல் கட்சிகள்
பல தம்மையும் அறியாமல் உண்மை பேசிக் கொண்டிருக்கின்றன.

ஒரு கட்சி உருவாய்க்கு அரைக்கிலோ அரிசி போடுவோம் என்கிறது.
இன்னொரு கட்சி 10 கிலோ பரியாய்த் தாரோம் என்கிறது.
இன்னொரு முளைக் கட்சி 15 கிலோ பரியாய்த் தருவன் என்கிறது.

இந்த அறிவிப்புகள் நாட்டில் பொருளாதாரத்தைக் கெடுக்கும் முட்டாள்தனம்
என்பது சிலரின் கருத்து.

இல்லை இல்லை, ஏழையின் வயிற்றிலும் புளி ஏப்பம் வரும் பார்!
இதுவன்றோ சீரும் சிறப்பும் என்று சமத்துவம் பேசுவோர் உண்டு.

ஆகா! ஏழையின் சிரிப்பில்தானே இறையைக் காணமுடியும்!
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரன்றோ? என்றுருகும்
ஆன்மீகர்கள் உண்டு!

ஆனால் உற்று நோக்கினால், இதில் கிடக்கும் ஞாய அஞ்ஞாயங்கள்
பல தளங்களிலும் பரந்து கிடக்கின்றன.

6.25 கோடி தமிழக மக்கள் தொகையில் ஏறத்தாழ 1.5 கோடி குடும்பங்கள்
உள்ளன. ஒரு குடும்பத்திற்கு 4 பேர் சராசரி என்று வைத்துக் கொண்டால்
6 கோடி மக்களும் குடும்ப அட்டைகளுள் உண்டு; கணக்கு ஏறத்தாழ
சரியாகவே வருகிறது.

கணக்குப் படி ஒவ்வொரு குடிக்கும் (குடிமகன்/குடிமகள்) 5 கிலோ அரிசி.
இதை 10 உரூவாய்க்குக் கொடுக்க ஒரு கட்சி, எட்டே முக்கால்
உரூவாய்க்கு கொடுக்க ஒரு கட்சி, 4.40க்கு கொடுக்க ஒரு கட்சி
இன்று முன் வந்திருக்கின்றன.

இப்படிக் கொடுக்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லாருமே
கோடீசுவரர்கள்!

இதில் எது சிறந்தது என்று தீர்மானித்து வாக்களிக்க வேண்டியது
திருவாளர் வாக்காளார் என்று சொல்லப் படுகிற திருவாளர் குடிமகனின்
வேலை.

பொங்கலுக்குப் பொங்கல் மாட்டுப் பொங்கலும் வரும்.
மாட்டுப் பொங்கலன்று மாடுகள்தான் நாயகர்கள். அந்த மாடுகள்
குளிப்பதென்ன? கொம்புகளை சீவிக் கொள்வதென்ன? அதில்
வண்ணமும் சுண்ணமும் பூசிக் கொள்வதென்ன? முதலாளியையும்
சற்றே சீறிப் பார்ப்பதென்ன?!

அதைப்போலவே, அப்படியேதான், அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை
(இப்பொழுது அடிக்கடி வரும்) வரும் தேர்தல்களில் திருவாளர்
குடிமகன்தான் நாயகர். அவருக்கு அரசமரியாதை.

எல்லாப் பணக்காரர்களும் இக்குடிமகனின் பொற்பாதங்களை
வணங்கி வணங்கி அல்லது வணங்குவதாகச் சொல்லி சொல்லி
வாக்குக் கேட்பார்கள்.

பொற்பாதங்களை வணங்கி வாக்குக் கேட்க
நாவும் கூசாது! தன்மானமும் தடைசொல்லாது!
பெரியார் சீடர்களும் இதில் அடங்குவர் என்பது வெட்கக் கேடு!

ஞாயம் செய்பவர்கள் ஏன் வாக்காளர்களின் பொற்பாதங்களை
வணங்க வேண்டுமென்று எனக்குப் புரியவே மாட்டேன்கிறது!

நாளைக்கு 10 உரூபாய் சம்பளம் வாங்கும் உணவக மேசைத்
துடைப்பவன் கூட அவன் முதலாளியின் பொற்பாதங்களை
வணங்குவதில்லை.

அரசியலில் வருமானம் அதிகமாக அதிகமாக வறுமையிலும்,
புழுதியிலும் வாழும் மனிதன் இந்தப் ஆசைக்காரப் பிசாசுகளுக்கு
எசமானனாகி பொற்பாதங்களை நீட்டுகிறான் போலும்! விந்தை!

இந்தக் குடிமகன் தான் பாரதிதாசனின் குடியானவன்!
பாரதிதாசனின் “குடியானவன்” இன்றைக்கு
அரசர், செல்வர், எதிரி என்ற யாவரும் வணங்கும் மாவரசன்!

எல்லோருமே அவனின் ஒற்றை வாக்குக்காக அவன் காலடியில்!

இவனின் எட்டி உதைப்பில் மேற்சொன்னவர்கள் இவனைப்போல
தரித்திராண்டியாகப் போய்விடக் கூடும்!

சொல்ல மறந்துவிட்டேன் குடியானவனுக்கு மற்றொரு பெயர்
தரித்திராண்டி!

இந்தக் குடியானவனுக்கு இலக்கணமென்ன?

அவனின் உடலில் பரவிக் கிடக்கும் வியர்வையும், குருதியும், பூழ்தியும்
(புழுதியும்) இலக்கியமாகிக் கொண்டிருக்கும் பலரால்!

அவனின் இலக்கணம் என்று வரையறுத்தவர் புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் மட்டுமே என்றால் அது மிகையல்ல!

// “ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை”,
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
“கிடப்பவன்” பகலெல்லாம் கடுக்க “உழைப்பவன்”
“குடியானவன்” எனக்கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடியிலாச் செல்வரும்.

– பாரதிதாசன் கவிதைகள் – குடியானவன்
//

ஏலாது படுப்பார் எல்லோரும் இரவில்! எல்லோருக்கும் உடல்
எட்டு சாண் உயரம்தான்.

ஆனால், குடியானவனின் படுப்பிடத்தின் அகலம் நாலே சாண்!
நிழல்தருவதுவோ ஓலைக் குடிசை! வில்லென உடலை வளைத்து,
முழங்கால் மூட்டு முகத்தில் முத்தமிடச் சுருட்டிப் படுத்துக்
கொண்டிருப்பவன் குடியானவன்! இவன் பகலெல்லாம் கடுமையாக
உழைப்பான். அல்லது உழைக்க வைக்கப் படுவான்.

இந்த உழைப்புக் கூட்டத்தில் சின்ன சின்ன மாற்றங்கள்
இருக்கக் கூடும். ஓலைக் குடிசைக்குப் பதில், ஓட்டையும்
விரிசலும் ஆன, ஓடு அல்லது சிமிட்டித் தளம் போட்ட
வீடாக இருக்கலாம். நகரமாக இருக்கலாம் கிராமமாக இருக்கலாம்.
ஏன் வெளிநாடாகக் கூட இருக்கலாம். ஆனால், அவனுக்கு,
வீட்டிற்குள், எல்லோருக்குமாய் இடத்தைப் பிரித்துக்
கொடுத்து, கொசுவுக்கும் கொஞ்சம் இடம் போனதற்குப் பின் கிடைக்கக்
கூடிய இடத்தில் முழங்காலைச் சுருட்டிக் கொண்டுதான்
படுக்க முடிவதாய் இருக்கும்.

அந்தக் குடியானவனை நோக்கி அரிசிப் பைகள் நீட்டப் படுகின்றன.
இவனுக்கு மாட மாளிகைகள் கிடைக்கப் போவதில்லை. மாடு கூட
மற்றவரைச் சுமக்கும்போழ்துதான் அதனை ஓட்டும் இவனைச் சுமக்கிறது.

இன்றைக்கு இந்த அரிசிப் பைகள் வாக்குகளை வாங்கிக் குவிக்கும்
என்று சமர்த்தாக அரசியல் கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன என்றால்,
இது சிறப்பா? அல்லது சீரழிவா?

இந்த வழங்கலினால் வாக்குகள் ஏதோ ஒரு கட்சிக்குக் குவியும்
என்றால் அது அந்த நாட்டின் செல்வ நிலையைக் காட்டுமா
அல்லது வறுமை நிலையைக் காட்டுமா?

அந்த நாட்டில் செல்வ நிலை என்றால்,
யாருக்கு அரிசி ஓசியில் வேண்டும்? தேவையிருக்காதே!

இன்றைக்கும் வயிற்றுச் சோற்றுக்கு அரிசிக்கு ஆளாய்ப் பறக்க வேண்டிய
நிலையில் இருக்கும் குடியானவர்கள், வயல்வேலைகள்
மட்டும் செய்பவர்கள் அல்லர். பெட்டிக் கடை, சாலையோரக் கடை,
கறிகாய் விற்றல், புலால் விற்றல், சிறு வணிகர், சாலைப்பணியாளர்கள்,
வாசற்காவலர்கள், வாகன் ஓட்டிகள், சமையற்காரர்கள் என்று
எத்தனையோ வகை உண்டு.

எத்தனையோ கோடீசுவரர்கள் உருவாகும் நாட்டில்,
அரசோச்சுவர்களும், செல்வந்தர்களும் அண்டிப் பிழைப்பது
இந்தக் குடியானவர்களைத்தான் என்பதையே இத்தேர்தலும்
காட்டுகிறது!

இந்தக் குடியானவர்களை வைத்துத்தான் அரசராக முடியும்!
செல்வந்தர்களாக முடியும்! ஏன் போராட்டம் நடத்தினால்,
போர்கள் வருமானால் அங்கேயும் இம்மறக் குடிகள்தான்
போர்முனையில் நிற்க வேண்டி இருக்கும்! மெத்தப் படித்தவரும்,
பணக்காரரும் தங்கள் ஆதரவுகளை வலைப்பதிவுகளிலோ,
ஏடுகளிலோ எழுதிவிட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்! இயன்றால்,
சிறு நிதியளித்து விடுவர்; அல்லது இறைவனிடம் வேண்டிக் கொள்வர்
நாட்டைக் காப்பாற்ற!

பாரதிதாசன் குடியானவனின் உழைப்பைக் கண்முன் நிறுத்துவார் –
அது கண்ணை விட்டு அகலாது!

“விடியுமுன் எருதின் வால் அடி பற்றிப் பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடியானவன்……”

இப்படி வரும் குடியானவனிடம் போர் பற்றிச் சேதிவரும்! போருக்கு
அழைக்கப் படுவான்! போர் என்பது எதிரி நாட்டை எதிர்த்தோ
அல்லது உள்நாட்டு அரசியல் எதிரிகளைப் பொருதவோ இருக்கக்கூடும்.
உரிமைப் போராட்டமாகக் கூட இருக்கும்! அல்லது அரசியல் கட்சி
ஊர்வலமாகவோ, பொதுக் கூட்டமாகவோக் கூட இருக்கும்!
காசு கொடுத்தோ அல்லது ஓசியாகவோ போக வேண்டி இருக்கும்!

பாரதிதாசன் இருவரிகளில் இதைச் சொல்லும் போது பளீரென்று
அறைந்தால் போல இருக்கும்!

“எழும் அரசர், செல்வர், எதிரி இம்மூன்றுக்கு
உழைக்க வேண்டும் அவ் வோலைக் குடிசை..”

அப்படி உழைக்கும் குடிசையின் குடி, நாடு காக்க அல்லது செல்வந்தர்
காக்க, அல்லது உரிமை காக்க எழுகிறான்! எப்படியென்றால்,

“உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல் போல்,

அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,

அக்குடியானவனின் அழகிய தோளிலும்
விழியிலும் எழுந்து மின்ன …. எழுந்தான்! ”

அப்படி எழுபவன் சற்றே தடுமாறி நிற்கிறான்! ஏன்? அதையும்
பாரதிதாசன் விளக்குகிறார்.

“……….அவனுக்கு, இதற்கு முன் வைத்த
இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை
இவை, அவன் காலை இழுத்தன கடித்து!”

இன்றுவரை உணவுக்கே அல்லல் பட்டு வாழ்ந்தவனின்
நிலை இழிந்து வறுமையில் வாடுகையில், நெஞ்சில்
புதைந்து கிடக்கும் மறக் கனல் வரும்போது
அந்த வறுமையில் விளைந்த இழிபயன் காலைக் கட்டி இழுக்கிறது!

நாளை சோற்றுக்கு என்ன செய்வார்கள் வீட்டில் என்ற நினைவு
வந்து விடக் கூடும் அல்லவா? கவிதையை நிறைவு செய்யும் போது
பாரதிதாசனார், அந்த வறுமையையும் இழிநிலையையும் கடந்து
மறத்தினைக் காட்ட போரிலே கலந்தான் என்று முடிப்பார்.

அது இன்றைக்கும் பொருந்துமன்றோ?

அரசோச்சியவர்களை ஆதரித்தோ, எதிர்த்தோ நடத்தும் போர்கள்,
அரசைப் பிடிக்க அரசியலார் செய்யும் தந்திரங்கள், வாக்குறுதிகள்
இவைகளை மட்டுமே நம்பி இவர்களுக்குப் பல்லக்குத் தூக்கி,
இவர்களைக் கோடீசுவரர்களாக்குவதே குடியானாவனின் பணியாக
காலகாலமாய் இருந்து வருகிறது.

சத்துச் சோறு, இலவச அரிசி, குறைந்த விலை உணவு என்பனவே
இந்நாட்டை ஆட்சி செய்கின்றன. ஏனெனில் இங்கே குடியானவர்கள்
மிக அதிகம். இந்தக் குடிகள் அரசர்கள், செல்வர்கள், அவர்களின்
எதிரிகள் என்ற மூவருக்காகவும் உழைக்கிறார்கள்.

அவர்களின் நிலையே நாட்டின் நிலை. அது தரித்திர நிலை.
12000 புள்ளிகளை அடைந்த சென்செக்சுக்கும் இவர்களின்
வயிற்றின் நிறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இருக்கப் போவதுமில்லை.

பொருளாதாரம், விஞ்ஞானம் போட்டி போட்டு வளர்ந்தென்ன?
இன்றைக்கும் கவர்ச்சிப் பொருளாக, இருப்பது “வயிற்றுச் சோறுதான்”.
அதையே தேர்தல் களம் காட்டுகிறது. இது வறுமையின் தொடர் நிலை.

இதற்காக நான் அரிசி வழங்கல் பற்றிச் சொல்லும் எந்தக் கட்சியையும்
குறை சொல்லவில்லை. அது சரியா தவறா என்பது வேறுதளங்களில்
இருந்து பார்க்கப் பட வேண்டிய விதயம். ஆனால், கட்டாயம்
ஒரு உண்மை நம் கண் முன் கிடந்து தவிக்கிறது.

அது வறுமை. வயிற்றுச் சோற்றுக்குத்தான் இன்னும் இந்த நாட்டில்
பெரும்பான்மையினர் வாக்களிக்க வேண்டிய நிலை. உடல்நலம்,
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைக் கடந்த தேவைகளுக்கெல்லாம்
இன்னும் சிந்திக்க வாய்ப்பே வரவில்லை.

சம்பளக்கட்டுகள் அடுக்கிக் கொண்டே போனாலும், வயிற்றுக்கு
யார் சோறுபோடுவார்கள் என்ற நிலையில் நாட்டில் பெரும்பாலோனோர்!

நாடெங்கிலும் தனியாரும், அரசாங்கமும் அன்ன தானம் செய்து
புண்ணியம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை
அன்னதானத்திற்கு ஆள்கள் இல்லாவிடில் இந்தப் புண்ணியங்கள்
இவர்களுக்கு கிடைக்காதென்றே வறுமைகள் வளர்க்கப் படுகின்றனவா?

“வறுமையை ஒழிப்போம்!” என்று சொன்ன எத்தனையோ அரசர்களை
இந்நாடும் உலகமும் பார்த்திருக்கும்! நாம் பேசுவது அவர்களில்
வெகுசிலரை!

வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! “ஏனெனில் அதுவே
நாட்டை ஆள்கிறது – சில அரசர்களுக்கு பல்லாயிரங்கோடிகளைக்
கொட்டிச் சம்பளமாகக் கொடுத்து!”

வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! ” ஏனெனில் அதுவே
பலரைச் செல்வந்தர்களாக்குகிறது – பலரை ஏழையாக்கித்தான்
சிலர் செல்வந்தராக முடியும்!”

வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! ” ஏனெனில் படித்தவனும், பணக்காரனும்
கவிதை எழுதுவான் – வறுமையை ஒழித்து விட்டால் அரசனுக்கும்
செல்வந்தனுக்கும் எதிரியுடன் போரிட ஆள் கிடைக்க மாட்டார்கள்”

மாறாக, “எம்மை வள்ளலாக்கும் வறுமையாளர்கள் வாழ்க!” என்பர்.

மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு ஊட்டப்படும் பொங்கற்சோறு
போன்றது குறைந்தவிலை அல்லது பரியாய்த் தரப்படும் அரிசி.
அந்த மாடுகளுக்குப் பூசப்படும் வண்ணக் குழம்புகள் அல்லது பொட்டுகள்
போன்றது வண்ணத் தொலைக்காட்சி வழங்கல்கள் போன்ற அறிவிப்புகள்.
மீண்டும் அடுத்த தேர்தலில் அரிசி விலை புதிதாக நிர்ணயம் செய்யப்படும்.
வேறு ஒரு இலவசமும் திட்டமிடப்படும்.

அதற்குள் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் அரசியலாளர்களின்
சொத்துக்கள் பல நூறு அல்லது ஆயிரம் கோடிகளை எட்டி விடும்.

ஒரு நடிகனின் விலை பல நூறு கோடிகளாகிவிடும்!

வயிற்றுச் சோற்றுக்காக குடியானவன் மட்டும் மீண்டும்
இவர்கள் தரும் அரிசிப் பைகளில் வரையப்பட்டிருக்கும்
இவர்களின் படங்களைக் கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடும்!

அன்னதானம், இலவச அரிசி, காட்சிப் பெட்டி, செருப்பு, பல்பொடி,
சத்துசோறு, பாடப்புத்தகங்கள் போன்ற வழங்கல்களை எதிர்த்தோ
அல்லது எமக்கு இவையெல்லாம் சரவல் இல்லை என்ற அகத்தால்
ஏற்படும் அறிவாலோ அல்லது பொருளாதாரப் புலி என்ற நிலையிலோ
இதனை நான் எழுதவில்லை.

இவைகள் இன்றைக்கும், என்றைக்கும் பெருவாரியான மக்களுக்கும்
தேவை, தேவை என்ற நிலையே இருக்கிறதே, அதுவும் அரசாள்பவரின்
கடைக்கண்ணருளாலேயே இவை கிடைக்கும் நிலை இருக்கிறதே,
இன்னமும் இந்த அடிப்படைத் தேவை நிரந்தரமாகவில்லையே என்ற
நடைமுறையைச் சுட்டிக் காட்டுகிறேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு நாளில் அம்மாபெரும்
தமிழ்க்கவிஞனை வணங்குகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-2006

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்