சிறு வயது சிந்தனைகள் – பகுதி 2

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

பாலா


இந்து உயர்நிலைப் பள்ளியில் (ஆறாவது முதல் +2 வரை) பயின்ற காலத்தில் எனக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை இன்று எண்ணிப் பார்க்கும்போது, ஏன் குருவை தெய்வத்தினும் உயர்ந்த ஸ்தானத்தில் (மாதா, பிதா, குரு, தெய்வம்!) வைத்தார்கள் என்ற புரிதல் ஏற்படுகிறது! இந்நிலைக்கு நான் உயர அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. பள்ளியில் என் ஆசிரியர்கள் மெச்சிய மாணவனாகத் திகழ்ந்தேன் என்றால் அது மிகையாகாது. பள்ளி வாழ்க்கையில் எனக்கு வழங்கப்பட்ட பரிசுப் புத்தகங்கள், இரண்டு பெட்டிகள் நிறைய வீட்டில் இன்னும் இருக்கின்றன. என் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக இருந்த அப்புத்தகங்களை என் மகள்களும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன்!

இந்த அளவிலாவது என்னால் தமிழில் எழுத முடிகிறதென்றால், அதற்கு காரணமாக இருந்தவர்கள், என் தமிழார்வத்திற்கு வித்திட்டு தமிழை சிறப்பாகக் கற்றுத் தந்த ஆசான்களான சீவை என்று அழைக்கப்பட்ட திரு.சீ.வைத்தியநாதன், திரு.பத்மநாபன், திரு.கோபால் சக்ரவர்த்தி, திரு.ஸ்ரீநிவாசன் ஆகியோரே. அதுவும், திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் செய்யுட்களை ராகத்துடன் (சாரீரம் சற்று ஒத்துழைக்காவிட்டாலும் கூட!) பாடி, பொருள் விளக்கம் தந்ததை மறக்கத் தான் முடியுமா ? பள்ளிக்காலங்களில் தமிழ் இலக்கணத்தின் பால் எனக்கு மிகுந்த காதல் இருந்தது எனலாம். SSLC இறுதித்தேர்வில் (1979)தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக ‘கம்பர் கழகம் ‘ பரிசாக வழங்கிய பதக்கத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

1.ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்னதும் (அதனால் சக மாணவர்கள் கடுப்பானதும்!)

2.மற்றொரு முறை, 11-ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியர் TRR என்றழைக்கப்பட்ட T.R.ராஜகோபாலன், என்னுடன் பயின்ற அவரது மகனிடம் கேட்ட ஒரு வினாவுக்கு (Avogadro விதி என்ன ?) விடை கூற அவனுக்கு உதவ முயன்றதற்காக, அவனை Avogadro விதியை 50 தடவையும், என்னை 100 தடவையும் எழுதுமாறு தண்டனை அளித்ததும், (அதை ‘என் விதி ‘ என்று நொந்தபடி, கையொடிய எழுதியதும்!)

3.மற்றொரு முறை, 9-ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் திரு S.K.சேஷனிடம் அரையாண்டுத் தேர்வில் எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அரை மதிப்பெண்ணை(!) போராடிப் பெற்றதும்,

4. +1 வகுப்பு படிக்கையில், உயிரியல் சோதனைக் கூடத்தில், மிகுந்த மன சங்கடத்துடனும், பாவம் செய்கிறேனோ என்ற அச்சத்துடனும் குளோரோஃவாம் மயக்கத்திலிருந்த என் முதல் தவளையை அறுத்ததும்,

5.11-ஆம் வகுப்பு கணித ஆசிரியர் திரு M.சுப்ரமணியன், Calculus பாடத்தை மிக அற்புதமாக பயிற்றுவித்ததும்,

6.8-ஆம் வகுப்பு தமிழய்யா திரு. பத்மநாபன் ‘துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே! ‘ என்ற நம்மாழ்வரின் பாடல் வரிகளை ‘ழ ‘கரம் வராத மாணவர்களை பல முறை உரைக்கச் சொன்னதும்,

என் நெஞ்சில் என்றும் வாழும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே ‘!

சின்னக் காஞ்சிபுரத்தில் தெற்கு மாடவீதியில் அமைந்த எங்கள் பரம்பரை வீட்டில் நாங்கள் செலவிட்ட நாட்களை என்னால் மறக்கவே முடியாது! அந்த வீட்டை விற்றே, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. அதன் பிறகு நானும் காஞ்சிபுரம் சென்றதாக ஞாபகமில்லை! வீட்டை வாங்கியவர், அதை இடித்து விட்டு, பல குடியிருப்புகள் கட்டி, வாடகைக்கு விட்டு விட்டார் என்பது யாரோ சொன்ன செய்தி!

பள்ளிக் காலங்களில், வருட விடுமுறையின் பல நாட்களை, அத்தை தனித்து வாழ்ந்த அவ்வீட்டில், நாங்கள் ஆனந்தமாக ஆடி ஓடி விளையாடிக் கழித்ததும்,

காலை வேளையில் அத்தை தரும் பழையதும் (பழைய சோறு!) தொட்டுக் கொள்ள, சட்டியில் காய்ச்சிய பழங்குழம்பும் அமிர்தமாக இனித்ததும்,

அத்தை சினிமா விரும்பி என்பதால், அவர் கூட்டிச் சென்ற பெரிய காஞ்சிபுரக் கொட்டகைகளில் பல பழைய திரைப்படங்களைக் கண்டு களித்ததும் (ஒரு சமயம், புடைபுடைக்கிற மே மாத வெயிலில் ஜட்கா வண்டியில் சென்று ரஜனியின் ‘தாய்வீடு ‘ படம் பார்த்தது!),

வரதராஜப் பெருமாள் கோயிலில் இருக்கும் தங்க பல்லியை பார்ப்பதற்காகவே, ஒரு நாளில் பல தடவை கோயிலுக்குச் சென்றதும்,

காஞ்சியில் குளத்தினடியில் வாழ்பவரும், 40 ஆண்டுகளுக்கொரு முறை சிறிது காலம் கோயிலுள் எழுந்தருள்ளி பக்தகோடிகளுக்கு அருள் பாலிப்பவருமான அத்தி வரதப்பெருமானை, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன், குடும்பத்தோடு (அத்தையும் தான்!) பல மணி நேரம் வரிசையில் நின்று, தரிசனம் செய்ததும்

‘நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை! ‘ வகை ஞாபகங்களே!!!

இக்கட்டுரையை, என் 9-ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இடம் பெற்ற, நேற்று தான் படித்தது போல் என் ஞாபகத்தில் பளிச்சென்று வீற்றிருக்கும் கம்ப ராமாயணச் செய்யுளுடன், நிறைவு செய்கிறேன்!

சூடையின் மணி என் கண்மணி ஒப்பது, தொன்னாள்

ஆடையின் கண்ணிருந்தது பேரடையாளம்!

நாடி வந்தென தின்னுயிர் நல்கிய நம்பா!

கோடி என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்.

என்றென்றும் அன்புடன்

பாலா

****

Series Navigation

பாலா

பாலா

சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

பாலா


என்னவோ தெரியவில்லை ? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும், படித்த பாடங்களும், கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம் மனதில் ஆழமாக (உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால் கூறுமளவு!) பதிந்து விடுகின்றன. அதே சமயம், வேலைக்கு சென்று நான்கைந்து வருடங்களில், இந்த திறமை குறைந்து, போகப்போக காணாமல் போய் விடுகிறது! இதற்கு, வயது கூடும்போது ஏற்படும் ஞாகபக் குறைவு ஓரளவு காரணமாக இருப்பினும், எனக்கென்னவோ, தற்போது நம்மில் பலர் சந்திக்கும் வேலைச்சூழல் தரும் அழுத்தமும், நாம் வாழும் ஒருவித monotonous வாழ்க்கையும் நம் ரசிப்புத்தன்மையை மங்க வைப்பதால் இந்நிலை உருவாகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது!!

என் நினைவில் இன்னும் வாழும் சில திரைப்பாடல் வரிகள்!

1. காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்! சென்றதை எண்ணி அழுகின்றேன், வருவதை எண்ணி சிரிக்கின்றேன்!

2. காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்!

3. நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே! … நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே, தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே, தெம்மாங்கு பூந்தமிழே, தென்னாடன் குலமகளே!

4. உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் … பொன்னெழில் பூத்தது புது வானில், வெண்பனி தூவும் நிலவே நில்!

5. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா!

அது போலவே, நம்மில் பலருக்கு பழைய நினைவுகளை அசை போடுவதும், அதனால் ஏற்படும் அலாதியான மனமகிழ்ச்சியும் அடிக்கடி நிகழ்பவையாக உள்ளன.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ‘ப்ருந்தாரண்ய ஷேத்ரம் ‘ என்றழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் தான். தந்தையார் என் சிறு வயதிலேயே தவறி விட்டதால், என் அம்மா வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது நான் 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிறித்துவப் பள்ளியின் (Montessori) தலைமையாசிரியரான, மிகுந்த கனிவும் இரக்க குணமும் கொண்ட Johannes அம்மையார் என் அம்மாவை ஆசிரியை பணிக்கு வருமாறு கூறினார்கள்.

என் தாய்வழிப் பாட்டனார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்பதாலோ என்னவோ, எனக்கு படிப்பில் ஈடுபாடு இயற்கையாகவே அமைந்திருந்தது. சிலேட்டில் ‘a b c d ‘ சரியாக எழுத வரவில்லையென பலமுறை அழுதிருப்பதாக, என் முதல் வகுப்பு ஆசிரியை, காலஞ்சென்ற திருமதி ராஜி, பிற்காலத்தில் கூறி சிரித்திருக்கிறார்கள்! நான் கல்வியார்வத்துடனும், அமைதியான குணமுடனும் காணப்பட்டதால், Johannes அவர்களுக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம் இருந்தது. கருணையும் கண்டிப்பும் ஒரு சேர அமைந்த அவரிடம் எனக்குப் பிடித்தவை அவரின் முத்து முத்தான கையெழுத்தும், ஆங்கில இலக்கண அறிவும் தான். என் நினைவில் என்றும் வாழும், என் முதல் ஆசான் அவரே ஆவார்.

நான் (ஆறாம் வகுப்பிலிருந்து) இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலும், அவரை மரியாதை நிமித்தம் அவ்வப்போது பார்க்கச் செல்வேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் என் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அவர் பள்ளிக்கு வரும் பெற்றோர்களிடம் நான் அவர் மாணவன் என்று பெருமிதத்துடன் கூறுவார். தேர்வு சமயங்களில், கிறித்துவ முறைப்படி என்னை மண்டியிட வைத்து ஆசிர்வதித்துத் தான் அனுப்பி வைப்பார்!!! அவரின் அந்த ஆசிர்வாதம் எனக்கு வெகுவாக உதவியது என்று திடமாக நம்பினேன். 1981-இல் அவர் எனக்களித்த நல்லொழுக்கச் சான்றிதழை ஒரு பொக்கிஷம் போல் இன்று வரை பாதுகாத்து வருகிறேன்.

ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. Johannes அவர்கள் இறக்கும் தறுவாயில் என்னை பார்க்க விரும்பினார். நான் செல்வதற்குள், அவர் உயிர் பிரிந்தது என்னுடைய துர்பாக்கியம்.

என் பெண்ணும் நான் பாடம் பயின்ற Montessori பள்ளியில் தான் தன் கல்வியைத் தொடங்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அப்போது தலைமையாசிரியராக இருந்த Johannes அவர்களின் மகளிடம் கூறியபோது, அவர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிறிது காலம் அங்கு படித்த என் மகள், இப்போது வேறு பள்ளியில் கல்வி கற்கிறாள். என் இரண்டாவது பெண்ணுக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லை போலும்!

Johannes அவர்களின் மகளும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனதால், பள்ளி மூடப்பட்டு, அக்கட்டிடமும் இடிக்கப்பட்டு, அங்கே ஒரு காபிப்பொடி கடையும், ஒரு சிறு Super Market-உம் தோன்றி விட்டன! என் பள்ளி இருந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், நெஞ்சு சற்று கனத்துத் தான் போகிறது! நான் படித்த பள்ளி, இலைகளும் மலர்களும் பழங்களும் கூடிய உயிரோட்டமிக்க ஒரு அழகான சிறு மரம் போன்றதென்றால், தற்போதைய கட்டிடம் கிளைகள் தவிர வேறெதுவும் இல்லாத உயிரற்ற ஒரு சூனிய மரமாகவே எனக்கு காட்சியளிக்கிறது. பள்ளி இருந்த காலத்தில், அதன் முகப்பையாவது ஒரு புகைப்படமாக எடுத்து வைத்திருக்கலாம் என்று இப்போது நினைத்து என்ன பயன் ? வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் கூட, சில மாற்றங்களை மனதளவில் நம்மால் ஏற்க முடிவதில்லை!

என்றென்றும் அன்புடன்

பாலா

Series Navigation

பாலா

பாலா