பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அவள், திடம் கொண்டு போராடிய பாப்பா – பெயர் பிரான்சுவாஸ் சகன்(Francoise Sagan). முதுமைக்குரிய பக்குவமும் இணக்கமும், என்னவென்று அறியாமலேயே தனது 69வது வயதில் இறந்துபோன பேதை எழுத்தாளினி. சமகால பிரெஞ்சு எழுத்தாளர்களில் மிகப்பரவலாக உலகநாடுகளால் அறியப்பட்டவர் என்பதால் அவருக்கெதிராக விமர்சனங்களும் அதிகம். எழுத்தாளனென்றால் எழுத்தை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, எல்லாவற்றிலும் தரித்திரமாய் இருக்கவேண்டுமென்கிற படைப்பாளி பிம்பத்தை மாற்றிய பெண்மணி. 1971ம் ஆண்டு, அரசாங்கத்தின் அனுமதியின்றி கருக்கலைப்புச் செய்துகொண்டதாக அறிவித்த 343 பெண்மணிகளுள் இவரும் ஒருவர். பெண்கள், தங்கள் உடல்குறித்தான முடிவுகளை எடுக்க மற்றவர்களின் அனுமதி அவசியமற்றதென வலியுறுத்தியதின் மூலம், படைப்பாளிவேறு சமூகம் வேறு அல்ல என்பதை உணர்த்தியவர். அவரது எழுத்திற்கு பிரெஞ்சு படைப்புலகம் பெரிதாக அங்கீகாரம் எதனையும் வழங்கிடவில்லை என்பது உண்மையென்றாலும், சமகால பிரெஞ்சு எழுத்தாளர்களில் அவரவளவிற்கு வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் எவருமிலர்..

தீவிர பெண்ணெழுத்தாளரெனில் சில தகுதிகள் வேண்டாமோ ?. உண்டு. மொடாக் குடியர், தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைப்பட்டது. நேர்காணலுக்கு முன்பாக தன்னை தயார்படுத்திக்கொள்ள விஸ்கிக் குடித்தாகவேண்டும். போதை மருந்துக்கு அடிமையா ? ஆமாம், விடுதலை பெற விருப்பமில்லாத அடிமை. கார் விபத்தொன்றில் ஆறுமாதத்திற்குமேல் மருத்துவமனையில் நினைவு தப்பியும், நினவோடும் வலிகளுடன் போராடியபோது, போதை மருந்துக்கு அறிமுகம்.. அவரது நிரந்தர முகவரியென்று, சூதாட்ட விடுதிகளையோ, இரவு விடுதிகளையோ குறிப்பிட்டாகவேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால், வேகம்..விபத்து.. கோமாவென..மரணத்தோடு நெருங்கி வாழ்ந்தவர். போதைமருந்தின் உபயோகத்திற்காகவும், வரியேய்ப்பு குற்றங்களுக்காகவும் நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டவர், பிரான்சை உலுக்கிய எல்ஃப் (Elfe) பெட்ரோலிய கம்பெனி ஊழலில், பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானுக்காக (Francois Mitterand) இடைத்தரகராக செயல்பட்டவரெனக் குற்றச்சாட்டு உண்டு. இவரை விமர்சிக்கின்ற அல்லது ஒவ்வாத மனிதர்கள் மீது, தயக்கமின்றி உபயோகிப்பது ‘C ‘est la barbe! (வாயை மூடு!)..என்கின்ற கடுமையான வார்த்தைப் பிரயோகம். இப்படி வரிசையாக அவரது எதிராளிகளை மகிழ்விக்கின்ற வகையிற் பாதகக் குணங்களை அடுக்கலாம். ஆனால் இவ்வெழுத்தாள பெண்மணியின் படைப்புச் சாதனைகளை ஒப்பிடும்போது, அவைகள் நிலவின் மீதான களங்கம்.

1935ம் ஆண்டு ஜூன் மாதம் 21ந்தேதி பிறந்த இவரது இயற் பெயர் பிரான்சுவாஸ் குவாரெஸ் (Francoise Quoirez). ‘சகன்(Sagane) என்கின்ற புனைப்பெயரை இரவல் பெற்றது, எழுத்தாளர் மர்செல் ப்ரூஸ்டிடம் (Marcel Proust). பத்து வயது சிறுமியாக இருந்தபோதே நாடங்களும், கவிதைகளும் எழுத ஆரம்பித்தவர். கல்வியில் பிரகாசிக்கத் தவறியபோதும் சார்த்ரு (Jean-Paul SARTRE), கமூய் (Albert CAMUS) படைப்புகளை, தனது பதின்மூன்றாவது வயதில் ஆர்வமாக வாசித்த வித்தியாசமான சிறுமி. பதினாறாவது வயதில் கிறித்துவ மதஞானத்தில் ஆர்வம்காட்டவில்லையென்று பள்ளி நிருவாகிகளால் வெளியேற்றபட்டவர். சொர்போன் பல்கலை கழகத்தில் படித்த காலத்தும் தேர்வுகளை அலட்சியம் செய்துவிட்டு ஜாஸ் கிளப்புகளில் வலம் வந்திருக்கிறார்.. இப்படித்தான் ஒருநாள் கவிஞர் ரெம்போ(Arthur RIMBAUD)வின் Illuminations என்கின்ற கவிதையில் மனத்தைப் பறிகொடுத்த ஒரு சில கிழமைகளில், ‘வணக்கம் துயரமே! (Bonjour Tristesse – Hallo Sadeness – நாவலின் தலைப்பு கூட ஒரு கவிதை*யிலிருந்து இரவல் பெற்றதே) என்கின்ற சிறிய நூலை எழுதப்போக பிரெஞ்சு படைப்புலகில் சூராவளி வீசத்தொடங்கியது. இந்நாவலில் 17 வயது இளம்பெண்ணொருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்கள், நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை அலட்சியம் செய்து சொல்லப்பட்டிருக்க, கடும் எதிர்ப்பெழுந்தது. ஆனால் ஆராதித்தவர்கள்: நாவலை, ‘அசலான, நிஜப் படைப்பு ‘, ‘இயல்பான எழுத்து ‘, ‘புதினமொத்த கவிதை ‘, எனப் பாராட்டினார்கள். 1954ல் – முதற்பதிப்பாக வெளிவந்த 3000 புத்தகங்களும் ஒரு சில நாட்களில் விற்றுத் தீர்ந்தன. ஓராண்டிற்குப் பிறகு அதன் விற்பனை 850 000த்தை எட்டியது. பணம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டியது. வரவேற்பறையில் சில்லரைகளைக் இவர் கொட்டிவைத்திருக்க, வருவோர் போவேரெல்லாம் வேண்டிய அளவிற்குக் கொண்டு சென்றார்கள். இன்றைய தேதியில், ‘வணக்கம் துயரமே ‘ நூல் மாத்திரம் இரண்டு மில்லியன் விற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நூல் விமர்சகளின் பரிசை வென்றதோடு, இலக்கிய விமர்சகர் மொரியாக் (Mauriac) என்பவரால், நூல் ஆசிரியரான பிரான்சுவாஸ் சகனுக்கு அதாவது இவருக்கு ‘அழகான இளம் ராட்சசி ‘( ‘charmant petit monstre) ‘ என்ற செல்லப்பெயரை ஈட்டித் தந்தது. ‘பதினெட்டு வயதில் 188 பக்கங்களால் நான் அடைந்த புகழ், ஒரு வாணவேடிக்கை ‘( ‘La gloire, je l ‘ai rencontree a 18 ans en 188 pages, c ‘etait comme un coup de grisou ‘) என்பதாகச் ஒரு நேர்காணலில் பிறகு ஸகன் கூறியிருக்கிறார்.

பதினெட்டுவயதுடைய ஒரு பெண் இப்படி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துகொண்டால் ஜாம்பவான்கள் சும்மாயிருப்பார்களா ? ஏதோ தேர்வுத்தாளை திருத்துவதுபோன்று அவரது படைப்புகளில் ஆங்காங்கே அது சொத்தை இது சொத்தை என மேதாவித்தனத்துடன் புலம்பினாலும், இவரது படைப்பாற்றலுக்கு தடைபோட முடியவில்லை. நிறைய எழுதினார். இவரது கணக்கில் இருபது புதினங்கள், பன்னிரண்டு மேடை நாடகங்கள், அதே எண்ணிக்கையில் திரைப்படங்கள், கட்டுரைகள், கவிதைகள் இருக்கின்றன. பிரான்சில் மாத்திரம் முப்பது மில்லியன் புத்தகங்கள் விற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அவரது படைப்புகளில் முக்கியத்துபம் பெற்றவை என சொல்லவேண்டுமென்றால்: A Certain Smile, Those Without Shadows, Aimez-vouz Brahms …, La Chamade, The Heart-Keeper, Sunlight on Cold Water, Scars on the Soul, The Unmade Bed, The Painted Lady, The Still Storm, Painting in Blood, Silken Eyes, Incidental Music ஆகியவற்றைக் குறிப்பிடலாம். உலகில் பதினைந்து மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கபட்டுள்ளன.

திரையுலகை மிகவும் நேசித்தார். இவரது முக்கிய நாவல்கள் அனைத்தும் திரைவடிவில், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. புதினங்களில் வலம் வந்த நாயகிகள் திரையில் நேர்த்தியான பெண் பாத்திரங்களாக உயிர்ப்பெற்றனர்.

வெற்றிகரமான எழுத்தாளராக வலம் வந்தபோதிலும் அவர் திரும்பத் திரும்ப ‘ஸ்திரமற்றகாதல் ‘, ‘மேல்தட்டு மக்களின் இணக்கமற்ற உறவு ‘- என்பது மாதிரியான கதைகளை தன் நாவலில் கையாளுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தவிர, அறுபதுகளில் ஆதிக்கம் செலுத்திய பின் நவீனத்துவம் இவரது படைப்புகளை ஒன்றுமில்லாமற் செய்திடும் என்றும் விமர்சனம் வைக்கபட்டது. இதற்கு அவரது பதில்: ‘கதை சொல்லுவதற்கு முன்பாக, மனிதர்களை முழுவதுமாகப் படிப்பதற்கே எனக்கு நேரம்போதவில்லை என்பதால் புதிய உத்திகளிலோ, புதிய முறைகளிலோ கதை சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஏறக்குறைய, ஒரு மரம் வெட்டுபவனுக்குள்ள பிரச்சினை. கிடைத்த நேரத்தில், மிகப்பெரிய மரத்தை வெட்டவேண்டியிருப்பவன், தனது கோடரி எத்தகையது என்று ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. ‘

அவரது எழுத்து, பாராட்டு பத்திரங்களையோ, இலக்கிய உலகையோ, நினத்து எழுதப்பட்டதல்ல, அவருக்காகவே எழுதப்பட்டது. அதனாற்றான் மாபெரும் எழுத்தாளர் என்கின்ற கீரீடமேதுமில்லாமலே, எண்ணற்ற வாசகர்களின் மனதில் எளிதாக கோலோச்சமுடிந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே, அடுத்தடுத்து எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சைச் செய்துகொண்டு, கட்டிலைவிட்டு எழமுடியாத நிலை. கோடிகோடியாக சம்பாதித்ததை அதே வேகத்திலேயே செலவுசெய்ததின் பலன் கடந்த செப்டம்பர் மாதம் 24ந்தேதி (2004ம் ஆண்டு), இறந்தபோது கையிருப்பென்று ஏதுமில்லை.

‘இவ்வுலகம் எல்லாவற்றையும்போலவே கற்பனையாலானது, சொல்லப்போனால் மற்றவையோடு ஒப்பிடும்போது மாற்று குறைந்தது ‘ என்கின்ற பிரான்சுவாஸின் கருத்துக்கு மாற்று கருத்தில்லையென்கிறார், எழுத்தாளரும், அரசியல் வல்லுனருமான ழாக் அத்தாலி (Jacques Attali)

‘Bonjours tristesse ‘(Hallo Sadness)லிருந்து:

‘அதிகாலையில், பாரீஸ் மோட்டார்வாகனங்களின் சத்ததத்தை மாத்திரம் கேட்டுக்கொண்டு கட்டிலில் நான் விழித்திருக்க, சிலநேரங்களில் நினைவுகள் என்னை சங்கடப்படுத்துகின்றன: கோடையும், மொத்தமாய் அதன் ஞாபகங்களும் திரும்பவும் என்னிடம். ஆன்!(Anne) ஆன்(Anne)! இப்பெயரை, திரும்பத் திரும்ப வெகுநேரமாய் முனுமுனுக்கிறேன். ஏதோவொன்று என்னிடம் மெல்லப் பரவுகிறது. எனது கண்களை மூடிக்கொண்டு, அதன் பெயர் சொல்லி வரவேற்கிறேன்: வணக்கம் துயரமே. ‘

பிரான்சு நாட்டின் ‘L ‘Express ‘ இதழுக்கு பிரான்சுவா சகன் பத்திரிகையாளர் அலென் லூயோ (Alen Louyot)வுக்கு அளித்திருந்த நேர்காணல் (le 21 mars 2003):

2003ம் ஆண்டு – வசந்தகாலத்தில் முதல்நாள், நொர்மாந்தி பிரதேசத்தில் எனது காரை ஓர் ஓரமாய் நிறுத்தியபொழுது வெளியே நல்ல மழை. ‘பத்திரிகையாளனாக இருந்துகொண்டு கிடைத்த சந்தர்ப்பதை கோட்டைவடுவது, தொழிலுக்கு நான் இழைக்கும் அநீதி ‘ என நினைத்துக்கொண்டேன். இருவருமாக இணங்கி ஏற்பாடு செய்திருந்த நேர்காணலை, கடைசி சமயத்தில் ‘ரத்து செய்கிறேன் ‘ என பிரான்சுவா சகன் பயமுறுத்தியிருந்தார். எங்கள் இதழின் பொன்விழா ஆண்டை யொட்டி சிறபப்பிதழொன்று வெளியிடத் தீர்மானித்திருந்தோம். இச்சிறப்பிதழின் பொறுப்பாளரும் நண்பருமான பத்திரிகையாளர் ஈவ் ஸ்டாவ்ரிதே (Yves Stavride) ‘அழகான இளம் ராட்சசி ‘(charmant petit monstre)யான ‘, பிரான்சுவா சகனோடு இதற்கென ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தார். அறுபதுகளில், தனது இளம் வயதில் உச்சத்திலிருந்த இவ்வெழுத்தாளரை கியூபாவில் முதன்முதலில் எங்களிதழுக்குப் பேட்டிகண்டும் ஐம்பது ஆண்டுகள் ஆகியிருந்தன. சொல்லப்போனால், அந்நேர்காணலின் முடிவில் நாங்கள் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்துவிட்டே, விமர்சகர் மொரியாக்(Mauriac) ‘அழகான இளம் ராட்சசி ‘ என்று செல்லப்பெயரிட்டு இவரை அழைத்திருந்தார். எழுத்தாளர் சகனுடன் நேர்காணலுக்காக பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. இறுதியில் தனது வழக்கறிஞர் மூலம் மார்ச் 21, 2003 அன்று, தனது சொந்த ஊரான ஓன்ஃபிளேர் (Honfleur)க்கு வரச்சொல்லியிருந்தார். நானும் அவ்வாறே வந்து தொடர்புகொண்டபோதுதான், மேற்கண்ட சிக்கல். தொலைபேசியில், அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், முடியுமானால் வேறொரு நாளில் நேர்காணலை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டுபோக, எனக்குப் பெருத்த ஏமாற்றம். சந்திக்காமல் போவதில்லையெனத் தீர்மானித்தேன்., ஒரு புத்தகக்கடைகாரர் குறிப்பிட்டதுபோன்று அவரது பண்ணைவீடு போன்-எவேக் (Pont-l ‘Eveque) சாலையில் இருந்தது. வீட்டின் கதவருகே நின்றுகொண்டு, எழுத்தாளர் சகனை அழைத்தேன். ‘சாதாம் உசேனுக்கு எதிராக ஈராக் மீது விரைவில் அமெரிக்கா நடத்தவிருக்கும் போர்ச் செய்தியை சேகரிக்கவேண்டியுள்ளதென்றும், இன்றைக்கு எப்படியாவது உங்களைப்பார்த்தாகவேண்டும், தவறினால் எனக்கு மறுபடியும் சந்தர்ப்பம் வாய்க்குமாவென்று தெரியவில்லை ‘ என்ற துருப்புச் சீட்டினைத் இறக்கினதுந்தான் தாமதம், ‘ஈராக் யுத்தத்தைவிட, நான் உனக்கு முக்கியமாக போய்விட்டேனா ? கொஞ்சம் இரு கதவைத் திறக்கிறேன் ‘, எனக் கேட்டுக்கொண்டே கதவைத்திறக்க, சக்கர நாற்காலியில், அதிக நீளமில்லாத தலை முடியுடன் பொன்னிறத்தில் குள்ளமாய் ஒரு பெண்மணி. அந்தக் குறுகுறுபார்வை சட்டென பல ஆண்டுகளுக்கு முன் பிரான்சை கலவரப்படுத்திய அவரது முதற்புத்தகத்திலிருந்த புகைப்படத்தில் ஏற்கனவே நான் கண்டிக்கிறேன். சகன் என்னைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார். நல்லவேளை அவரைச் சந்திக்கவேண்டுமென்கிற அதிர்ஷ்டம் என்பக்கம் இருந்திருக்கிறது. ‘பப்பராசிகளால், உண்மையான பத்திரிகையாளர்களையும் சந்தேகிக்க வேண்டியிருக்கின்றதென்று ‘ என்னைத் தவிர்த்ததற்கான காரணத்தை விளக்கினார். எங்கள் எக்ஸ்பிரஸ் இதழுக்கு கொடுத்த முதல்நேர்காணலை நினைவுக்குக் கொண்டுவந்தார். ‘எனக்கப்போது இருபத்தைந்து வயது, கியூபாவில் இருந்தேன். அவ்வயதுக்கேயுரிய சிறுபிள்ளைத்தனம் நிறைய. என் நினைப்பெல்லாம் ஆட்டம் பாட்டம், உல்லாசமென்றிருந்த காலம் ‘, என அவர் கூறியபோதிலும், அவ்விளம் வயதில் மேற்கத்திய தீவிலிருந்தபோது, காஸ்ட்ரிஸ்ட்(Fidel Castro – castristes)கள் எவ்வாறு திசைமாறிச் செல்வார்கள், என்றவர் கணித்திருந்ததை நினைத்துப்பார்த்தேன். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதிகம் அலட்டிக்கொள்ளாமல், சந்தோஷமும் வேடிக்கையுமாக அவரளித்த நேர்காணலிலிருந்து சிலபகுதிகள்:

பிரான்சுவாஸ் சகன் சொல்லுங்க, வெற்றிபெற்ற வாழ்க்கையைக் குறித்து உங்கள் அபிப்ராயமென்ன ?

என்னைப்பொறுத்தவரையில் வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன் (நீண்ட மெளனம்). ஆனால் எனக்கு மகிழ்ச்சியளிப்பதைச் செய்வதில் நான் வெற்றிபெற்றிருக்கிறேன் ? அதாவது எழுதிக்கொண்டு வாழ்வதில். ‘இழந்த நேரத்தைத் தேடி. ‘* தரத்திற்கு நாவலெழுதுவதில் நான் வெற்றிபெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் எனது புனைபெயரை அவரிடமிருந்து (Marcel Proust) திருடுவதில் ஜெயித்திருக்கிறேன் (சிரிக்கிறார்).

இருந்தபோதிலும், ப்ரூஸ்டைப்(Proust)போல அல்லாமல், வாழும் காலத்திலேயே ஒருவித இலக்கியபுகழை அடைந்தவரல்லவா நீங்கள் ?

உண்மை, அவர்காலத்தில் இல்லாத தொலைக்காட்சியின் தயவால், சமகால எழுத்தாளர்களில் நான் அதிகமாக அறியபட்டிருக்கிறேன். அவருக்கு அது வாய்க்கவில்லை. பிறகு புகழ் என்று குறிப்பிட்டார்கள்,எனக்கது முக்கியமல்ல. மற்றவர்களின் நம்பகத் தன்மைக்குறிய படைப்பாளியாக இருந்திருக்கிறேன் என்பதே எனக்கு முக்கியம். ஆக தொலைகாட்சி இலக்கிய நிகழ்ச்சிகளில் எப்போதும்போல என்மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்ல, அதிர்ஷ்டவசமாக ஆனால் மிகவும் அரிதாகவே அதனை நிகழ்ச்சியில் அனுமதிக்கிறார்கள். மக்களும் அதனை நம்புகின்றார்கள். அந்தநேரத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

தொலைக்காட்சி ஊடகத்தை தவிர்க்க விரும்புகிறீர்களா ?

நம்மை பலவீனப்படுத்தும் ஒன்றாக இன்றைக்கு தொலைக்காட்சி ஊடகம் மாறிவிட்டது. ஆரம்பகாலத்தில் தொலக்காட்சியில் பங்கெடுக்கின்றபோது, நிகழ்ச்சி எப்போதுமுடியும் என்பது மாதிரியான எரிச்சலுண்டு. இப்போது, அதன் தந்திரங்களை அறிவேன் அவர்களின் விளையாட்டைப்புரிந்துகொண்டு, நானும் விளையாடுகிறேன். தெலைகாட்சி ஊடகங்கள் மாத்திரம் இப்படித்தான் இருக்கவேண்டுமென எழுத்தாளர்களுக்கான வழிமுறைகளையும், பிம்பத்தையும் தீர்மானிக்கவில்லையென்றால், எனக்குத் தெரிந்து ஏராளமான எழுத்தாளர்கள், மிகச்சிறந்த எழுத்தாளர்களாகப் பரிமளித்திருப்பார்கள்.

இருபதுவயதில், திடாரென்று புகழின் உச்சிக்குச் செல்வது இடைஞ்சல் இல்லையா ?

அதிர்ஷ்டவசமாக எதனையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்ற நியதியிருந்த குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். அதனால் தற்பெருமைகளுக்கு வாய்ப்பில்லை, என்னைச்சுற்றி துதிபாடிகளும் வீட்டில் இல்லை. தவிர, புகழினை இளம்வயதிலேயே அடைவது நல்லதென்று நான் நினைக்கிறேன்.. நீங்கள் கவனித்திருப்பீர்களா என்றெனக்குத் தெரியவில்லை. காலம் கடந்து புகழை அடைந்தவர்கள், உதாரணமாக மர்கெரித் துயூரா (Marguerite Duras) போன்றவர்களுக்கு, கடைசியில் தலையைப் பிய்த்துக்கொளவேண்டிய நிலமை.. அவரை மூன்றாவது நபராகச் சித்தரித்து அவரைப் பற்றி அவரே பேசவேண்டியிருந்தது. அப்படிப்பேசி, மற்றவர்களிடம் கொண்டுசெல்ல அவரது அதிகபட்ச திறன்களும் தேவைப்பட்டன.. எனக்கெப்போதும், இயல்பான எளிமையான மனிதர்களையே பிடிக்கும் என்பதனை நீங்கள் அறிவீர்கள் அல்லவா ?

ஆக, உங்கள் நாவலில் வருவதுபோன்ற போலி மனிதர்களையும், அறிவு ஜீவிகளைப்போல நாடகமாடுபவர்களையும் பிடிக்காதென்று சொல்லுங்கள் ?

இல்லை. விளைவுகளைப் பொருட்படுத்தாத, விளைவுகளால் பாதிக்கபடாத மனிதர்களை நேசிக்கிறேன் என்கிற பொருளில் சொல்லவந்தேன். நீங்கள் நினப்பது போன்று போலிகளையும், உதவாக்கரைகளையும் குறித்து நான்பேசவில்லை.

அதிர்ஷ்டம் என்பதென்ன எளிதில் வாய்க்கக்கூடியதா ?

எல்லாமே சரியாக அமைந்தால்தான் வாழ்க்கையில் சந்தோஷமென்று நீங்கள் நினைக்காதாவரென்றால், ஆமாம். என்னைபொறுத்தவரையில், நோயற்றவாழ்வு நமக்கு அமையுமானால் அதிர்ஷ்டமென்பேன். நான்சொல்வது, ஏதோ முட்டாள்தனமாகத் தோன்றும் ஆனால் அதுதான் உண்மை. பிறகு, வாழ்வுடன், அதாவது அவரவருக்கு அமைந்த வாழ்வுடன் ஒத்துபோவதும் எனக்கு முக்கியம்.

எதையும் செய்யாமல் புலம்புவதை(regrets)விட எதையாவது செய்துவிட்டு வருந்துவது (remords) மேலானதெனச் சொல்லப்படுகிறது. உங்கள் அபிப்ராயமென்ன ?

எனக்குப் புலம்பல்களும் இல்லை. அவ்வாறே வருத்தங்களும் இல்லை(சிரிக்கிறார்). எனக்கு வாழ்க்கையில் பேரதிர்ஷ்டம் வாய்த்திருக்கவேண்டும். என்னிடம் எழுதுவதற்கான ஆசையும், அதற்கான திறனும் இருக்கின்றன. நான் கொஞ்சம் சோம்பேறியாக இருந்தாலும் எழுதுகின்றபோது, தங்கு தடையின்றி எழுதுகிறேன். ஒரு முறை இங்கே லிமூசனி (Limousin)ல் நடப்பதானக் ஒரு காதல்புதினத்தை நேபாள பயணத்தில் போது எழுதினேன். தொலைதூர நேபாளத்திலிருந்துகொண்டு நம்முடைய ஆடுகளை எழுதுவதற்கோ, பசுமைபோர்த்திய மலைகளை எழுதுவதற்கோ எனது பயணம் தடையாக இல்லை. என் மனதில் நான் நினைத்துக்கொண்டிருக்கிற கருப்பொருள் வலம்வர ஆரம்பித்துவிட்டால், தொடர்ந்து பன்னிரண்டுமணிநேரம்கூட என்னால் எழுத முடியும். எழுதாமலிருக்கும்போது, வாட்டத்துடனிருக்கிறேன், யாருமற்ற அநாதையாய் உணர்கிறேன். நல்ல மனோநிலயில், மகிழ்ச்சியாய் இருக்கும்போது மாத்திரமே என்னால் எழுதமுடிகிறது.

Bonjour tristesse அந்தக்காலத்தில் பிகவும் அதிர்ச்சி ஏற்படுத்திய படைப்பு இல்லையா ?

உண்மையில், அப்புதினதிற்கு எதிராக எழுந்த அவதூறுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அக்காலத்தில், பெரும்பாலானவர்களுக்கு ஓர் இளம் பெண், மணம் செய்துகொள்ளாமலும், கர்ப்பமாக்கிக்கொள்ளாமலும் ஓர் ஆணிடம் படுப்பதென்பது ஆபாசம், தப்பு. அப்புதினத்தில் பிரச்சினைக்குறிய விடயமாகக் நான் கருதுவது, அந்தப்பாத்திரம், தன்னைக்குறித்த பிரக்ஞையின்றி, சுயநலத்துடன் ஒருவரை அழைத்துவந்து கொல்லமுடியும் என்பதுதாகும். பெரும்பாலான வாசகர்கள் எனது எண்னத்திலிருந்து மாறுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு, ஒரு பெண் ஆணிடம் படுத்தாலே, கர்ப்பம் தரித்திருக்கவேண்டுமென்கிற அக்காலத்திய விதி எனது நாவலில் மீறப்பட்டிருப்பதைக் குறித்து அதிர்ச்சி. இதை மூடத்தனமென்று சொல்லவேண்டும். நான் பள்ளியில் படித்தகாலத்தில், ஒரு பெண் தான் கர்ப்பமென்று தெரியவந்தபோது தற்கொலை செய்துகொண்டாள். இன்னொருபெண்ணோ தான் கர்ப்பம்தரிக்கக் காரணமாயிருந்த ஓர் அய்யோக்கினை மணந்து வாழ்க்கைமுழுதும் துன்பப் படவேண்டியக் கட்டாயம்.

கருக்கலைப்பு உரிமைக்காக போராடியபொழுது, பெண்ணுரிமை ஆதரவாளர்களின் ‘எங்கள் வயிறு எங்களுக்குச் சொந்தம் ‘ என்கின்ற முழக்கத்திற்கு எதிராக நீங்கள் இயங்கியதன் காரணமென்ன ?

ஏனென்றால் என் வயிறு எனக்குச் சொந்தமில்லையே. அவ்வயிறு நான் நேசிக்கின்ற ஆணுக்குச் சொந்தம், அந்நேசத்திற்கு நான் சொந்தம்.

உங்கள் வாழ்க்கையில் அதிகம் பாதித்த ஒரு மனிதரைச் சொல்லுங்களேன்.

நிறையபேர்கள் உண்டு. உதாரணமாக சார்த்ரைச் (Jean-Paul SARTRE)சொல்லலாம். எழுத்தாளர் என்பதற்காகவே அவரை மிகவும் நேசித்தேன். அவரது ‘Les Mots ‘( சொற்கள்) அதி அற்புதமான படைப்பு. அவ்வாறே அவருமொரு அற்புதமான மனிதர். அபூர்வமானவரும்கூட. அவருக்கு பார்வை போயிருந்த சமயத்தில், காலை உணவிற்கோ டின்னருக்கோ அவரைத் தேடிக்கொண்டு வீட்டிற்குச் னெ¢றுவிடுவேன். சிமோன் தெ பொவார் (Simon de Bauvoir), எந்த நேரமும் அவர் பக்கத்திலேயே இருந்த நேரம். அவரிடமிருந்து சத்தம்போடாமல், நானும் சார்த்த்ரும் நழுவி விடுவோம். சில நேரங்ககளில், ஏதோ இட்ச்ஹாக்கின் சிக்கோசிலிருந்து நேராக எங்களைத் தேடிவருபவரைப்போல சிமோன் தலையை விரித்துக்கொண்டு வந்திருப்பார். என்னை பயமுறுத்துவார். சார்த்த்ருக்கு பார்க்க இயலாதென்றாலும், நான் விளக்கிச் சொல்ல சத்தம்போட்டு சிரிப்பார். உண்மையில் வேடிக்கையான தருணங்கள் அவை.

இவ்வுலகில் உங்கள் விருப்பம்போல இருந்தீர்களென்று சொல்லமுடியுமா ?

(சிரிக்கிறார்), நிச்சயமா சொல்லலாம். ஏராளமா இருந்திருக்கேன். பிறகு என்னை மிகவும் சந்தோஷப்படுத்திய தருணங்கள் உண்டு. குறிப்பாக ஏழு அல்லது எட்டு சந்தர்ப்பங்களில் இவ்வுலகில் ஏன் பிறந்தேன், என்ன செய்தேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதும் உண்மை. ஆனால் சற்றுமுன் குறிப்பிட்டது மாதிரியான தருணங்களில் எனக்கும், இந்த மண்ணிற்கும் பரஸ்பர புரிந்துணர்வு இருந்திருக்கிறது. இவ்வெண்ணம் அதிக நேரம் நீடித்ததில்லை, ஏறக்குறைய கால்மணிநேரம் நீடித்திருக்கலாம். இவ்வற்புதமான தருணங்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன என்பதில் மாற்றமில்லை எப்போது நேர்ந்தது என்பதில் குழப்பமிருக்கிறது. (மெளனம்). இிவ்வனுபவம் என்னுடைய 20 வயது, 40 வயது, மற்றும் 53 வயதில் ஏற்பட்டிருக்கிறது அப்போதெல்லாம் ஒரு மரத்தின்கீழ் நிற்பதைப்போன்ற பிரமை….

….

*La vie immediate, P. Eluard

* A la recherche du temps perdu -Marcel Proust

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கடந்த வருடம் என்னைத் தொடர்ந்து வருத்திக்கொண்டிருக்கும் (இதை எழுதும்போது கூட) முதுகு வலிக்காக குடும்ப மருத்துவரிடம் சென்றபோது, வழக்கம்போல ஊர்க்கதைகள் பேசிவிட்டு, எழுத்தாளர் பங்க்ராஸியின் புதிய நாவலான ‘துரிதகதியில் எல்லாம் முடிந்தது ‘ (Tous est passe si vite)பற்றி மிகவும் சிலாகித்தார். இதற்கு முன்னால் அந்த எழுத்தாளரை அறிந்ததில்லை என்பதால் மருத்துவரின் பேச்சை வலதுகாதுவழியே வரவேற்று இடதுகாது வழியே அனுப்பிக் கதவைத் சாத்திவிட்டு வீட்டிற்குத் திரும்பிய சிலநாட்களுக்குள், செய்தித்தாள்களில் பங்க்ராஸியின் புகழைப் பக்கம்பக்கமாக இலக்கிய விமர்சகர்கள் எழுத ஆரம்பித்திருந்தார்கள்.

காரணத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் ஏதுமில்லை. பிரெஞ்சு மொழி பீடம் 2003 -2004க்கான சுமார் 7400 யூரோவுக்கான(சுமார் நான்கு லட்சம் இந்திய ரூபாய்) இலக்கியப் பரிசுக்கு மேற்கண்ட நாவலை பதின்மூன்று வாக்குகளுடன் தேர்வு செய்திருந்தது. ஒன்பது வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்திருந்த நாவல் ‘ஆகஸ்ட்டு மாதம் 31ந் தேதி ‘( ‘Le 31 du mois d ‘aout ‘) எழுதியவர் லொரான்ஸ் கொஸ்ஸே (Laurence Cosse).

பிறப்புமுதல் ஒவ்வொரு கணமும் இறப்பை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். இறப்பென்பது எப்போதுவேண்டுமானாலும் நம்மீது பிரயோகிக்கப்படலாம். அந்த ‘எப்போது ‘ நமக்கு அறிவிக்கப்படாதவரை – அதாவது இறப்பு வருகின்ற நேரத்தின் ‘நிச்சயமற்றத் தன்மை ‘ காக்கப்படும்வரை- இடையூறின்றி வாழ்க்கையைத் தொடருகிறோம்.

ஆனால் மரணத்தைச் சற்றேவிலகியிரும் பிள்ளாய் என அறிவிக்கும் துணிவுள்ள மருத்துவம், தோல்வியுற்று மரணத்தின் தேதியை தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும்போது உயிர்படும்பாட்டை, இறுதி நாட்களின் கோரமுகத்தை, படைப்பாளர் பங்க்ராஸி தன்னிதயத்தின் குருதியுடனான எழுத்தில் அறிமுகபடுத்துகிறார்.இறப்பின் பலிபீடத்தில் நிறுத்தபட்டு, புற்றுநோய் கொலைவாளுக்குக் கொஞ்சகொஞ்சமாய் அறுபடும் உயிரின் வதையை உணர்ச்சி பொங்க எழுத்தில் வடித்திருக்கிறார்.

மரணவாயிலில் இருக்கும் ஒரு பெண்படைப்பாளியின் இறுதி நாட்கள் குறித்த கதை. நெகிழ்ச்சியோடு, ஓர் உறவின் இழப்பாய் மனதிற் பதியம் செய்யபடுகிறது. முற்றிய புற்றுநோயுடன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும், எழுத்தாளர் பெண்மணியாக அவதாரமெடுத்தும், அவரருகே நெருங்கி நின்றும் அப்பெண்மணியின் வேதனைகளும், வெறுப்புகளும், உணர்வுகளும், விருப்புகளும் சுற்றியுள்ள சுயநலங்களால், பேராசைகளால் எவ்வாறு அலட்சியப்படுத்தப்படுகின்றன, என்பதனை இரக்க மனதோடு இந்நாவலில் சொல்லப்டுகிறது.

‘துரிதகதியில் எல்லாம் முடிந்தது ‘ என்பதாக தமிழில் இந்நாவலின் தலைப்பினை மொழிபெயர்ப்பது பொருத்தமென்றாலும், ‘ஆடு புலி ஆட்டம் ‘ என்பதுப் பொருத்தமாகத் தோன்றியது.

ஏதோ ஒருவகையில் புகழின் உச்சியில் இருப்பவர் ஒருவர்- நமது தமிழ்நாட்டுச் சூழலில் அவர் ஓர் அரசியல்வாதியாகவும் இருக்கலாம் அல்லது நடிகனாகவும் இருக்கலாம் – இன்றைக்கோ நாளைக்கோவென்று அவரது உயிர் ஊசலாடும் சூழலில், ஊரும் உறவும் பிழைக்கவேண்டுமென பிரார்த்தனை செய்கிறது. சிலர் உணர்ச்சி வேகத்தில் தங்கள் தலைவனுக்காக தங்களையே எரித்துக்கொள்கின்றனர். இதுபோன்ற செயல்கள் அனைத்துமே நாடகக் காட்சிகள் என்பதை நாம் அறிவோம். இந்நாடக காட்சிகளுக்கிடையே, செய்யும் தொழிலால் தங்கள் அசலான முகத்தைக் காட்டவேண்டிய கட்டாயம் ஒரு கூட்டத்திற்கு உள்ளது. புகைப்படக் கருவியும், கையேடுமாகக் சம்பந்தப்பட்ட நபர், எப்போது இறப்பாரென தொழில் தருமம் கருதி காத்திருக்கும் ஊடகக்காரர்களை அலட்சியம் செய்ய முடியுமா என்ன ? இவர்களுக்கு ஊசலாடும் உயிர் மீதுள்ள அக்கறையானது, சமுதாய கண்ணோட்டம் சார்ந்ததல்ல. அச்செய்தியானது, அடுத்தச் சிலநாட்களுக்கு எடுக்கின்ற அவதாரத்தினால், கிடைக்கின்ற விளம்பரமும் வியாபாரமும் சார்ந்தது.

இந்நாவலிலும், இன்னொரு அசலான உறவு -பதிப்பாளரும் படைப்பாளிக்குமான உறவு – அடையாளப்படுத்தப்படுகிறது.

பொருளீட்டும் பிரேமையில் உள்ள இவ்வுலகத்தின் செயல்பாடுகள் அனைத்துமே பொருள்சார்ந்தது என்பது வெளிப்படை. ‘என்ன செய்யுதுசார் ? எதிர்த்தாப்புல எமனிருப்பதாகப் பிரமையா ? கோழை தள்ளுதா ? எழுதிக்கொடுங்க புத்தகமா போட்டுடுவோம். ‘ என்பதாக எந்தத் தமிழ்படைப்பாளிகளும் அரக்கத்தனமாக கட்டிலில் கிடக்கும் எழுத்தாளர்களிடம் நடந்துகொள்ளமாட்டார்களென நம்புவோம். உண்மையில், கடைசிமூச்சினை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் புகழ்பெற்ற எழுத்தாளரின் அனுபவங்களைக் காசாக்க எந்த பதிப்பாளருக்குத்தான் ஆசைவராது. இந்நாவலில் வரும் பதிப்பாளர் பெண்மணி விவியான் ஆசையும் அத்தகையதுதான். அதிலும் தன் பதிப்பகத்துக்கு வேண்டப்பட்ட எழுத்தாளர் எலிஸபத் புற்று நோய்க்கு எப்போது வேண்டுமானால் இறக்ககலாம் என்கின்ற நிலையில், அவர் விடும் மூச்சுக்குக்கூட வாசகர்கள் உண்டு என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, உடனுக்குடன் எழுத்தாக்கப்படவேண்டும் என்கின்ற யோசனையை எழுத்தாளரிடம் சொல்கிறார். விவியான் என்கிற புதிய தலைமுறை பெண் பதிப்பாளர்மூலம், பரபரப்பு தகவல்களுக்கு முக்கியத்துவம் காட்டும் இன்றைய பதிப்புலக போலிகளைத் தோலுரிக்கிறார்

இறப்பின் விளிம்பிலிருக்கின்ற மக்களின் உணர்வுகளை எடுத்துரைப்பதும், அவர்களுக்காகக் குரல்கொடுப்பதும் எழுத்தாளர் பங்ராஸியின் குணம். ஏற்கனவே அவரது தந்தை மற்றும் தாயின் அந்திம நாட்கைளை மிக மென்மையாகத் தனது படைப்பினூடே தெரிவித்துள்ளவர் என்று சொல்லப்படுகிறது. வாசகனை, கதையின் நாயகியான எலிஸபெத்தின் இறுதி நாட்கள்வரை இட்டுச் செல்லும், இந்நாவலின் கதைசொல்லியை பங்க்ராஸியாகவேக் கருதலாம். இக்கதை சொல்லியும் எலிஸபெத் போலவே ஓர் எழுத்தாளன், இருவரது படைப்புகளுக்குமே பதிப்பகமும் ஒன்று. தவிர, இவர்களது எழுத்தாளர்கள் மீதான அபிப்ராயங்களும் ஒன்று, மொழிகள் ஒன்று, வெளிப்பாடு ஒன்று, துக்கங்கள் ஒன்று, துவேஷங்கள் ஒன்று.

கதையின் நாயகியாகவும், கதைசொல்லியாகவும் இரு வேறு அவதாரங்களிள் ஒன்றியும், தள்ளிநின்றும் சாட்சிமொழிகளாக மனச்சங்கடத்துடன் கொண்டு போகிறார். எலிஸபெத் மலைமலையாய் பாராட்டுதல்களும், பரிசுகளும் குவிந்தக்காலத்தும் மயங்காவொரு எழுத்தாளர். தன் தகுதிக்குப் பொருந்தா கிரீடம் தலையில் சூட்டப்படுவதாக நம்பியவள். குறைநாட்களை கடந்தகால சந்தோஷ நினைவுகளோடு கடக்கவிழைபவளுக்கு, சுயநலங்கள் வேப்பிலை அடிக்கின்றபோது நம் மனது பதறுகிறது. கனவில்கூட இச்சுயநலமிகளை எதிர்த்துக் குரல்கொடுக்கின்ற நிலையில் அவளில்லை. உடல் மட்டுமல்ல உள்ளம் கூட உலுத்துப் போய்விட்ட பெண்மணி..

ஒருவர் மற்றவர்க்காக கைத்தட்டுவதென்பது வரவேற்கப்படவேண்டியதே. எதற்காக கைத்தட்டுகிறோமென எண்ணிப் பார்ப்பதுண்டா ? வீடு தேடிச் சென்று நாம் உதவுவதென்பது பல நேரங்களில் உபத்திரவங்களன்றி வேறில்லை என்கிறார் நாவலாசிரியர். குறிப்பாக நலிந்தவர்கள், நோயாளிகள், அப்பாவிகளுக்கெனச் நாம் செய்யப்போகும் உதவிகள் பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவை, அவர்களுக்கு உபத்திரவம் சேர்ப்பவை என்பது எழுத்தாளர் பங்க்ராஸியின் கருத்து.

ஒருபக்கம் வாழ்வில் நெறிமுறை, கட்டமைப்பு, இவற்றிற்குத் தன்னைப் பழக்கி உயர்வான எண்ணங்களுடன் வாழப்பழகியவர்கள், மற்றொருபக்கம் வலையில் சிக்கவிருக்கும் பூச்சிகளுக்காக காத்திருக்கும் சிலந்தி மனிதர்கள். நாவலில் வருகின்ற மனிதர்கள் சமூகத்தில் நாம்காண்கின்ற இருவேறு எச்சங்களின் பிம்பங்கள். ஒவ்வொரு தீபமாய் அைணைத்துக்கொண்டு இருட்டைநோக்கிப் பயணிக்கும் அப்பெண்மணிக்குத் தோள்கொடுத்து அழைத்துச் செல்லும், கதைசொல்லி பங்க்ராஸி அவளது கடைசி மூச்சுவரைது உடனிருக்கிறார்.

எழுத்தாளர் பெண்மணியின் இறுதிக்கால உள்மனத்தின் போராட்டங்கள் ஆசிரியரால் தெளிவாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இறுதி நாட்களில், எல்லா நிலைகளிலும் எதிரெதிர் பயணம். விதி அப்பெண்மணியை இருவெறு உலகத்திற்கானவள் எனக் கிழித்துப் போட்டிருக்கிறது. வாழவேண்டுமென்ற ஆசை ஒருபக்கம். இறப்பு காத்திருப்பதுகுறித்தான கவலை மறுபக்கம். நோயால் நேர்ந்த தனது துயர்படிந்த தற்போதைய வாழ்வின் வக்கிரம் ஒருபக்கம், வானத்து நிலவாய் பிரகாசித்த கடந்தகால வாழ்க்கை மறுபக்கம். உண்மையாய் புகழ்ச்சிகளை பெற்றகாலம் ஒருபக்கம், பொய்யாய் தன் சுய நலத்துக்காக அக்கறைகாட்டுகின்றவர்கள் மறுபக்கம். இருப்பதால் சந்தோஷம், இல்லாமல் கரையவிருப்பதால் துக்கம் ஆக அனைத்துமே துரித கதியில் அவளது முடிவுக்குக் காத்திருக்கின்றன;.

அப்பெண்மணிக்காக நாம் அழுகிறோம்.

எழுத்தாளர் எலிசபெத்தின் ஊடாக இக்கால படைபாளர்களின் உள்முகங்களை அறிவதற்கு நமக்கொரு வாய்ப்பு. இன்றைய படைப்பாளிகள், பதிப்புலக நிர்வாகத்தின் கம்புகளுக்கு எப்படித் தலையாட்டவேண்டியிருக்கின்றது என்பதனை தேவைக்கு அதிகமாகவே சொல்லியிருக்கிறார்.

1949ம் ஆண்டு பிறந்த ழான்-நோயெல் பங்க்ராஸி சுமார் பன்னிரண்டு படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் Rene Camps ‘, ‘Corse ‘, ‘Long sejour ‘, ‘Madame Arnoul ‘ முக்கியமானவை.

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Tarkos ‘ texts engage with the evanescent essence of reality through the perfidious nature of language. An encounter, that leaves behind it, fragile traces, volatile evidences of a constant effort to escape the closure of a world. A world where everything is for sale, where we are bombarded by colourful images, bodies are heavy, thoughts enslaved, and souls tormented. This recurrent and evanescent perspective on the world haunts the numb love between language and being. What could otherwise be named poetry ‘ – Christian Prigent, Le Monde

கே: வசனத்தில் கவிதை வருமா ?

ப: ஓ! வசனத்தில் கவிதை வரும்: கவிதையில் வசனம் வரும். இரண்டிலும் வசன கவிதை வரும். ரெண்டுங்கெட்டான் தமிழர்களுக்கு எதுதான் வராது. ( சரஸ்வதி -1959) ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழழனுக்கெதிராக தமிழன் குரைப்பது இன்றைக்கும் தொடருகிறது. நல்லவேளை கி.தர்க்கோஸ் பிரான்சில் பிறந்திருக்கிறார்.

ஆறுவருடத்திற்கு முன்னால் ஒருநாள்மாலை, உள்ளூரிலுள்ள பிரசித்திபெற்ற புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன். பிரெஞ்சு இலக்கியங்களின் முகவரி தெரியாத நாட்களவை. இன்னும் சொல்லப்போனால், தமிழ் உட்படச் சமகாலப் படைப்புக்களின் கற்பூரவாசனையை நானறியாத காலம். அப்புத்தகக் கடையில் ஒரு வசதியுண்டு. ஒவ்வொருமாதமும் அதற்கு முந்தையமாதத்தில் வெளியிடப்பட்ட நூல்களின் பெயர்கள், ஆசிரியர்பற்றிய குறிப்புகள், நூல்களைப் பற்றிய சுருக்கமான விமர்சனக் குறிப்புகள், விற்பனை வரிசை, தரவரிசையென தகவல்களை உள்ளடக்கிய கையேடுகள், இலவசசேவையிற் கிடைக்கும். அக்கையேட்டைப் புரட்டிக்கொண்டிருந்தபோது தற்செயலாகக் கவிஞர் கி. தர்கோஸ் என்பவரின் அறிமுகம். அவர் எழுதுவதற்கான காரணமாகக் கொடுத்திருந்தக் குறிப்புச் சற்று வித்தியாசமாகயிருந்தது: ‘ என்மீதும் பிரியமில்லை. எனது படைப்புகள்மீதும் பிரியமில்லை. எனவேதான் புதிதுபுதிதாய் எழுதவேண்டியிருக்கிறது. ‘ ( ‘Je ne m ‘aime pas, je n ‘aime pas mes textes, c ‘est pouquoi j ‘en fait des autres). தனது படைப்புகள் மீதான சுயவிமர்சனத்தை முற்றிலும் புதிய தளத்தில் வாசகனின் பார்வைக்கு வைத்திருந்த அவரது வரிகள் வெகுசுலபமாய் என்னை ஈர்த்தன என்றே சொல்லவேண்டும். கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த அவருடைய ‘பேழைகள் ‘ (Caisses) என்கின்ற கவிதைத்தொகுப்பு அன்றைய தேதியில் ஓரிரு பக்கங்களுக்கு மேலாக எனது வாசிப்பு ஆர்வத்தைக் கூட்டவில்லை என்பது உண்மை. குறை அவரது படைப்பிலில்லை உன்னிடமென்றது காலம்..

அவரது படைப்புகள்: கவிதைகளா அல்லது உரைநடையா ? படித்தமேதையின் கருத்துக்களா, பித்தனின் உளறல்களா ? வேதாந்தமா ? சித்தாந்தமா ? உளவியற் தேடல்களா ? உறுதியற்ற வார்த்தைச் சந்தங்களா ? எப்படிச் சொல்வது எங்கேவைப்பது ? என்பதானக் குழப்பம் இன்றைக்கும் நீடிக்கிறது. உருப்பெற்று உயிர்பெற்று, எழுந்து தன் இருப்பினைத் தெளிவாக்கிய நிறைவுடன், அடுத்துவருகின்ற எழுத்துப்பிறவிகளுக்கு இடமளித்து தன் முடிவினைத் தேடும் உயிரியல்விதி இவரது சொற்களுக்கு எதிர்வினைகளுக்கு இடமில்லாமல் மிகச் சுலபமாய்ப் பொருந்துகின்றது. மிக அற்பமான காலஅளவில் மேடையேறும் வார்த்தைகளும் அவற்றின் ஓரங்க நாடகங்களும் பார்வையாளர்களின் செவிக்கு உணவு. மெய்யினைப் பொய்யிலிருந்து பிரித்தெடுக்கும் பகுபதச் சொற்கள். முடிவற்ற வார்த்தைகள். வரிசைவரிசையாய் சொல்மணிகள் நூலினிற் கோர்த்ததுபோல அவரது கவிதைகளில் அடங்கிப் பயணிக்கின்றன. தவளைக்குஞ்சு நீரில், ஒரு நேர்க்கோட்டில் நீந்திச் செல்லுக்கின்ற அமைதியும், அடுத்த உலகத்தைப் பற்றிய அக்கறையின்மையும். இரவு நேர, ஒற்றைக்குரல் ஒப்பாரியாக ஓங்கியும், உடைந்தும் பின்னர் சன்னமாகத் தேய்ந்தும் அடங்குகின்ற குரல். ஆனால் அச்சொற்களுக்குள் – அக்குரலுக்குள் இருப்பதென்னவோ மோகினிப் பிசாசின் வசீகரம். இழுத்துச் சென்று புணரும் குணம். பொதுவாகப் படைப்பின் வெளித்தோற்றத்தில் வெள்ளந்தியானச் சொற்குவியல், உண்மையில் மிக உன்னத நவீன படைப்பு. சொற்களைக் கலைத்துப்போட்டு, அவற்றின் இருப்பிற்கும், ஓசைக்கும் புதிய வகையிற் பொருள்சொல்கிறார். கூறியதையே கூறலுக்கு ஓர் புதிய இலக்கணம். அடுக்கடுக்காய்ச் சொற்கள், மீண்டும் மீண்டும் தனது ஊற்றுக்கண்ணிலிருந்து புதிதுபுதிதாய் சுரந்துவருகின்றது. ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபடுகிறது. ஓரிடத்தில் திடமாய் நிற்பது மற்றோரிடத்தில் திரவமாய் வழிகிறது. ஓரிடத்தில் நகலாய் நிற்கின்ற சொல் மற்றோரிடத்தில் அசலாய் உருமாற்றம் கொள்கிறது. உண்மையில் இவரது கவிதைகளில் கரு இல்லை, அலங்காரமில்லை, நோக்கமில்லை ஆனால் கற்பனையில்லாத பொருட்கள் பற்றி விவாதிக்கின்றது. நிதர்சனமான உண்மைகள்மீது அக்கறை கொள்கின்றது. சொற்களை வரிசைப்படுத்திவிட்டுப் இருப்பிற்கும் ஓசைக்குமிடையே வாதப் பிரதிவாதங்களை நம்முன் நடத்துகிறார். ஒருசொல்லிலிருந்து மற்றொன்றிற்கு ஒற்றையடிப்பாதையில், ஓசைநயத்தோடும் தோற்றவனப்போடும் நடத்திச் செல்லும் செவ்விய உரைநடை. கட்டுப்பாடற்ற அவர் சொற்கள் நீர்நிலைகளின் மேற்பரப்பில் வெடிக்கும் குமிழ்களாய், உள்மன விசாரணைகளாக, ஒன்றையொதுக்கிவிட்டு மற்றொன்று தொடர்ச்சியாய் நாம் ஓயும்வரை வந்துபோகின்றன. துண்டுப் பிரசுரமென்று ஒதுக்கமுடியாத புனிதவாசகங்கள். உரைநடையிலானப் படிவங்கள் (Prosaic blocks), தோற்றத்திலொரு வார்த்தைச் சதுரங்கம். அவ்விளையாட்டில் நமக்குள்ள இடம் எக்கணத்திலும் மாறலாம். ஏதாவதொரு செய்தியை (Message)ச் சொல்லிடவேண்டும் என்கின்ற கட்டாயமேதும் இக்கவிதைகளுக்கில்லை. உள்ளடக்கத்தைவிட அச்சொற்கள் சுமந்து நிற்கும் ஒசைநயம் இருவேறு நிலைகளில் இயங்குகின்றன. ஓரிடத்தில் அசைவற்று, இறுக்கமாய், திடமாய், அடைத்துக்கொண்டு நிற்கின்ற சொற்கள், மற்றோரிடத்தில் தவழ்ந்து, தளர்ந்து, மென்மையாய், திறந்து வழிவிடுகின்றன. சதுரத்தில் சொற்களை அடைத்து உட்காரவைப்பது, பட்டியில் அடைக்கப்படும் ஆடுகைளை ஞாபகப்படுத்துகின்றன. படுத்திருக்கும் ஆடுகள் ஒவ்வோன்றும் அசைபோட்டபடி அசைவின்றி, இடையன் திறப்பில் கவனம் வைத்திருப்பதைப்போல. சொற்களைப் பிசைந்து பிசைந்து அவர் பிடித்தவற்றில் பொய்யான பிள்ளையாரும் உண்டு, மெய்யான குரங்கும் உண்டு. சிறுபிள்ளைகள் மணல்வீடுகளைக் கட்டியும் இடித்தும், மீண்டும் எழுப்பியும் அழகுபார்ப்பதுபோல கி. தர்க்கோஸ் சொற்களோடு விளையாடுகின்றார். கட்டுச்சாதத்துடன் வைளையவருகின்ற ஏகாந்தியாக நாம் கவிதை முழுக்கப் பயணிக்கின்றோம். ‘ உண்மையில் சிந்தனையில் நான் நெகிழ்ச்சிகொண்டவன் ‘ (Je suis tout a fait elastique par la pensee) என்பதனை அவரது படைப்பின்மூலம் நிரூபணம் செய்கின்றார்.

1964ம் ஆண்டு பிறந்த கி. தர்க்கோஸ் பிரான்சின் மர்செய் (Marseille) கடற்கரைப் பட்டினத்தைச் சேர்ந்தவர். கடந்த பத்து வருடங்களில் மூன்றுமுறை மனவியல் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றவர்.

கீழ்க்கண்ட அவரது வாக்குமூலங்கள் அவரின் மறுபக்கத்தை நமக்கு முன்வைக்கின்றன

‘நான் மிகவும் மந்தம், சோம்பேறி. நான் எழுத்தாளனல்ல. அதற்கு அதிக நேரம் பிடிக்கும். ‘

‘என்னை நம்பாதீர்கள். நான் என்னை நம்புவதில்லை, நான் நீங்களாகவிருந்தாலும் நம்பிக்கைவந்திருக்காது ‘.

‘எனது சகோதரி ஓரினச்சேர்க்கயை விரும்புகின்றாள். எனது நெருக்கமான நண்பன் ழெரார், ஓர் அலி. ‘

‘எனக்கு மனைவியோ பிள்ளகளோ இல்லை. ஏனெனில் நான் பாலுறவில் முரண்பாடுடையவன் ‘

‘புனித ஆன் மருத்துவமனை காப்பிப்பாரில் என்னை மற்றவர்கள் சந்திப்பதையே விரும்புகிறேன் ‘

‘எனது இருப்பு ஒரு பொய். நான் கவிதைகளைக் கற்பிதம் செய்கிறேன் படைப்பதில்லை ‘

கி. தர்க்கோஸின் முக்கிய படைப்புகள்:

Anachronisme, POL,2201

Pan, PoL 2000

Le Signe=, POL,2000

Caisses, POL 1998

La Valeur sublime, Le grand Os, 1998

Ma Langue est Poetique, Electre 1997

L ‘Oiseau Vole, L ‘evidence 1995

Le baton , Al Dante 1998

Le damier, Aiou 1996

Le train, SUEL 1996

அவரது பேழைகள் அல்லது பணப்பெட்டிகள்(Caisses) தொகுப்பிலிருந்து:

‘அதிஷ்டவசமாக அவனிறந்திருக்கிறான். மகிழ்ச்சி. அவன் மறைந்துவிட்டான். எப்போதும் நடப்பதுதான். ஓருயிர் பிரிந்திருக்கிறது, இன்றைக்கு, புண்ணியம் செய்தவன் இறந்துவிட்டான். அவன்மறைந்துவிட்டான். ஒன்று குறைகிறது, மகிழ்ச்சி, யார் செய்த புண்ணியமோ இறந்துவிட்டான் இல்லையெனில் நமக்கெதுவும் புரியாது. இறப்புக்கு நன்றி. இவைகளெல்லாம் இடைக்கிடை நடந்தாகவேண்டும், அன்றேல் அவைகளின் இருப்புகள் அவசியமில்லாமற்போகும். யாரது பக்கத்தில் வீழ்ந்தது, அது அவனுடைய குற்றமல்ல, இப்போது எண்ணிக்கையில் ஒன்று குறைவு, அதற்கான காரணம் தெரியாதுபோனாலும், அதனை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது, இப்படித் தொடருவது மிகவும் நல்லது, எண்ணிக்கையில் ஒன்றினை குறைத்துக் கொள்வோம், இப்போது அதனைத் தெளிவாய்ப் பார்க்கிறோம். யார் செய்தபுண்ணியமோ ஓரிறப்பு ஏற்பட்டிருக்கிறது, காரணங்களேதுமில்லை, இருந்திருந்தால் முற்றிலும் அபத்தமாகத் தோன்றும். அதிஷ்டவசமாக, நம்மிடமிருந்து தொலைந்துபோகும் ஒருவனை நாம் மீண்டும் காணப்போவதில்லை. சிலர் தொலைந்துபோகின்றார்கள். அதிர்ஷ்டவசமாக அவன் இறந்துபோனதும் ஒருவகையில் நல்லதே, அவன் செய்த குற்றமென்ன, அங்கேயொரு படுகுழி திறந்திருக்கத் தள்ளப்படுகிறான், அதற்காகவே குழிகள் பறிக்கப்பட்டதுபோல. நல்லதாய்ப் போயிற்று, ஏதோ படுகுழிகளாவதிருக்கின்றதே. இறப்பு, இறப்பாயிருப்பதற்கு நன்றி. படுகுழிகள் உண்மையிலிருக்கின்றன. அவனிறப்பது நியாயமல்ல. அதிஷ்டவசமாக அவள் இறந்திருக்கிறாள். அவ்விறப்பு எண்ணிகையில் ஒன்றை குறைத்திருக்கிறது. வழக்கத்திற்கும் மேலானது மகிழ்ச்சி. அவள் குற்றமேதுமிழைக்கவில்லை, மறுபடியும் அவளைச் சந்திக்க ஒருவரும் காத்திருக்காததுபோல குதித்துவிடுகிறாள், இறப்பிற்கு நன்றி, மறைந்துபோனாளென்றால் அவளுடைய தவறால் அல்ல, அவள் மறைந்துபோய்விட்டாள், இப்படித் தொடர்வது நல்லது, படுகுழிகளின் பொருள் மிகத் தெளிவாய்ப் புரிகின்றது, பேதமையுடனும், மகிழ்ச்சியோடும் இறந்திருக்கிறாள், மிகவும் இயல்பானது, இல்லையெனில் இவையனைத்தும் பொருளற்றதாகிவிடும். ‘ – பேழைகள் (Caisses – Page 16)

இறுதியாககொரு வார்த்தை:

புதுக்கவிதைகள் என்றவுடன் நம்மவர்களை மறந்துவிட்டு எலியட், விட்மன் பொதலேர், ரெம்போ என்று சொல்வதில் நமக்குக் கூடுதல் மகிழ்ச்சி. கி. தர்க்கோஸ் படைப்புகளில் பாரதியின் ‘சக்தி ‘ வசனகவிதைகள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் கவிதைகளைப்போலவே கி. தர்க்கோஸ் கவிதைகளிலும் எளிமையும் தெளிவும் இருக்கின்றன. இல்லாதது நமது பாரதியின் வேகம்.

—-

Na.Krishna@wanadoo.fr

ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி நாகரத்தினம் கிருஷ்ணா

  • குளோது சிமோன்
  • ஒனொரே தெ பல்ஸாக்
  • மொரிஸ் ப்லான்ஷோ
  • மிலன் குந்தேரா
  • மிஷல் ஹுல்பெக்
    Series Navigation

  • நாகரத்தினம் கிருஷ்ணா

    நாகரத்தினம் கிருஷ்ணா

    பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)

    This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

    நாகரத்தினம் கிருஷ்ணா


    ‘One never describes something that happened before the labour of writing, but really what is being produced… during this labour, in its very ‘present, ‘ and results not from the conflicts between the very vague initial project and the language, but on the contrary from a result infinitely richer than the intent… Thus, no longer prove but reveal, no longer reproduce but produce, no longer express but discover. ‘ (from Claude Simon ‘s Nobel lecture)

    இன்றைய பிரெஞ்சிலக்கியவாதிகளில் மொழியை மிகச்சரியாகக் கையாளும் திறன்கொண்ட குளோது சிமோன் 1985ம் ஆண்டுக்கான நோபெல் பரிசைப்பெற்ற பிரெஞ்சிலக்கியவாதி. ‘இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு குளோது சிமோனின் தேர்வென்பது துணிச்சலானது ‘ என்று ஒரு சிலராலும், ‘குளோது சிமோனைத் தேர்ந்தெடுத்தன்மூலம், நோபெல் பரிசு களங்கம் தேடிக்கொண்டதென ‘ மற்றவர்களாலும் விமர்சனம் செய்யப்பட்டவர். ‘பின் நவீனத்துவ படைப்பாளிகளுள் உறுதியானவர், மனப்பூர்வமாகத் தன் எழுத்துப்பணியில் ஈடுபாடுகொண்டிருந்தவர் ‘, என்பது வெர்ஜீனியப் பல்கலைக்கழக பிரெஞ்சுமொழிப் பேராசிரியர் ரோஜர் ஷட்டக் தெரிவித்த கருத்து.

    ‘படைப்பின் நோக்கம், படைப்பாளியின் மனதை, உணர்வினை, அனுபவங்களை மற்றும் அபிப்ராயங்களை முடிந்தமட்டும் வாசகனிடம் சேர்ப்பித்துவிடுவதல்ல, அதற்கும் மேலாக ‘. என்பது குளோது சிமோனின் எண்ணமாக இருந்தது. படைப்பினுடைய மொழியும் கட்டமைப்பும், ஒலியும் வண்ணமும் வாசகனைத் தட்டி எழுப்பவேண்டும் என்கின்ற வகையிலேயே அவரது படைப்புக்களிருந்தன.

    வாசிப்பில் மூன்று நிலைகள் உள்ளன: வாசித்த மாத்திரத்தில் நேரடியாக புரிந்துகொள்ளக்கூடிய முதல் நிலை. வாசித்ததைத் தன்னறிவோடு பொருத்திப் பொருள்கொள்ளும் இரண்டாவது நிலை. அவ்வாறு புரிந்துகொண்டபின் வாசிப்புப் பொருளின்மீது நமக்கேற்படுகின்ற உறவையோ பகையையோ தீர்மானிக்கின்ற மூன்றாவது நிலை. இம்மூன்று நிலைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை, பிரிக்க முடிக்காதவை. குளோது சிமோன் படைப்புக்களைப் பொறுத்தளவில், அவரது படைப்புகள் முதல்வாசிப்பிலேயே இராண்டாவது நிலையையும், மூன்றாவது நிலையையும் நமக்குள் (உதாரணமாக ‘பர்சால் யுத்தம் ‘) ஏற்படுத்திவிடுகின்றன. கிரேக்க நாட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற படைப்பாளியின் நினைவுகளின் தாக்கத்திலிருந்து படிக்கின்றபோதும் படித்துமுடித்தபோதும் நம்மால் விடுபடமுடிவதில்லை. சாதாரண மொழிகள் ஏற்படுத்துகின்ற புரிதலைவிட, வடிவங்களும், ஓசைகளும் வாசகனிடம் ஏற்படுத்துகின்ற ‘புரிதலுக்கு ‘ பாரியவீச்சு அதிகமென்பது இங்கே நிரூபணமாகிறது. அம்மாதிரியான மொழிநடைகள் அரங்கேற்றம் செய்யும் ‘கூத்து ‘கள்; உடல்சார்ந்த உளம்சார்ந்த விளைவுகளை வாசகனிடம் மிகச் சுலபமாய் ஏற்படுத்திவிடுகின்றன என்பதனை, இவர் படைப்புகளை அறிந்தவர்கள் மறுப்பதில்லை.

    பொதுவாக நல்ல படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கிறோம். இவ்வாழ்ந்த வாசிப்பு மட்டுமே ஒரு வாசகனை, படைப்பாளியின் பக்கத்திற் செல்லவும், அவனது அட்ஷயபாத்திர விநியோகத்தை கைநீட்டிப்பெறவும் வகைசெய்கின்றது. ஆனால் ஆழ்ந்த வாசிப்பென்பது அமைதியான வாசிப்பின் கூட்டாளி. அவ்வாறான அதாவது, ஒரு அமைதியான ஆழ்ந்தவாசிப்பில் குளோது சிமோன் கட்சிக்காரர்கள் மேடையேற்ற விழையும் வடிவங்களும், ஓசைகளும் உயிர்பெறும் சாத்தியமுண்டா ? என்ற கேள்வியும் நம்முள் எழாமலில்லை. மெளன வாசிப்பில் ஓசைகளேதுமில்லை, ஓசைகளில்லையேல் வடிவங்கள் இல்லை. வடிவங்கள் இல்லையேல் இயக்கமில்லை. இயக்கமில்லையேல் அங்கு படைப்பில்லை, என்கின்ற தட்டையான அபிப்ராயம் இலக்கியங்களைப் பொறுத்த அளவிற் பொய்யாகின்றது.

    வாசிப்புத்தன்மையில் ஒரு கருத்தில் அறிவுலகம் தீர்மானமாகவுள்ளது. ஒன்றை வாசிக்கும்போது உடனடியாக வாசகன் உள்வாங்கிக் கொள்வது அவ்வவாசிப்பின் நேரடி பொருளேயன்றி அதன் உள்ளடக்கமோ, உருவகமோவல்ல. இந்தவகையில் இங்கே ‘ஸ்ற்றூப் ‘ (Stroop) என்பவரின் கூற்றினைக் கணக்கிற் கொள்ளவேண்டும். அவரது கருத்துப்படி ‘நீலம் ‘ என்ற சொல்லை சிவப்பு மையினால் எழுதினாற் கூட, வாசிப்பில் உடனடியாகக் கிடைக்கக்கூடிய முதல் புரிதல், அச்சொல்லின் பொருளான நீலமேயன்றி, அவ்வார்த்தையின் வண்ணமான சிவப்போ அல்லது அதன் வடிவமோ அல்ல. அதாவது வாசிப்புப்பொருளின் உண்மைநிலை முதலாகவும், அப்பொருளின் மீதான கற்பனைகள், வாசிப்பவனின் அறிவைப்பொறுத்து அடுத்தும் ஏற்படுகின்றன. ஆனால் இலக்கியங்களின் பொதுவான நோக்கம், தளைகளில் கட்டுண்டு கிடப்பதல்ல, முதல்புரிதலோடு முற்றுபெறுவதல்ல என்பது மிக்காயெல் ரிஃபாத்தெர் (Michael Riffaterre) கருத்து.

    ‘ இதோ விரிந்து வளரும் மரம்

    பட்டப் பகலில் இரவைக் காட்டும் அதன் நிழல்.

    மரத்தடியில் ஒரு கழுகு –

    ரத்தம் செத்த சோனிக் கழுகு.

    ஒளியின் அழைப்பு – ந. பிச்சமூர்த்தி கவிதைகள்

    இக்கவிதையை ஒருமுறை மெளனமாக வாசித்துப் பாருங்கள். இங்கே கவிஞன் முதற் புரிதலிலேயே தன் எண்ணத்தை வாசகனிடம் கொண்டு செல்வதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறான். எனினும் அவன் வாசகனிடம் வேறொன்றை எதிர்பார்க்கிறான். எதனையோ தேடிச்செல்ல உத்தரவிடுகிறான். இக்கவிதையில் முதல் மூன்றுவரிகளிலேற்பட்ட காட்சிப் புரிதல், நான்காவது வரியில் ‘இனியில்லை ‘யென முடிந்துபோகிறது. ‘ரத்தம் செத்துப்போன சோனிக் கழுகிடம் ‘ எஞ்சியிருப்பது முடிந்துபோன வாழ்க்கை. இந்தநிலையி

    ல் அதன் எதிர்காலம்பற்றிய கேள்விகளேதும் நம்மிடமில்லை. மாறாக அதன் இறந்தகாலத்தைப் பற்றிய கேள்வி நமக்குள் வருகின்றது. ‘ சோனியாகிப் போனதன் காரணமென்ன ? ‘ என்ற கேள்வி நம்மிடம் எழாமலில்லை. அதற்கான பதிலைத்தேடி வாசகன் மனம் அலைய ஆரம்பித்துவிடுகிறது. இது வாசகனுக்கு இலக்கியங்களிற் கிடைக்கின்ற புலன் கிரகித்தல் (Perception ‘Sensorielle ‘). கண்ணுக்குத் தெரிகின்ற உண்மைக்குமேலாக, உணர்ந்துமட்டுமே அறியக்கூடிய சத்தியமது. எந்தவொரு வாசகமும் சொல்லப்படும் பொருளில் அல்ல, சொல்லப்படும் உத்தியில் பெருமை பெறுகிறது. எதைச் சொல்வதென்பதைவிட எப்படிச் சொல்வதென்பது முக்கியத்துவம் பெறுகிறது. குளோது சிமோன் சொல்லப்படும் உத்தியில் மாறுபட்டிருக்கிறார். அவர் கதைசொல்லும் உத்தியில் ஒரு பன்முக வெளிப்பாடுண்டு. வாசகனின் அறிவுபூர்மான புரிதலுக்கு: எழுத்து, சொல், குறியீடுகளை எடுத்தாளும் நம்பிக்கைக்கொண்டவர். பெரும்பாலான இடங்களில், வாக்கியங்கள் பிரவாகமாக குறியீடுகளில்லாமல் பயணிக்கின்றன. ஒரு சில வாக்கியங்களில் ஆயிரம் சொற்கள்வரை உபயோகித்திருக்கிறார்; எனினும் அவற்றைப் புரிந்துகொள்வதில் குழப்பங்களேதுமில்லை. எந்தவிதத் திட்டமிடலின்றி இயல்பாய்ச் சொல்லப்படுகின்ற அவரது எழுத்துக்களுக்கு கீழ்க்கண்ட பகுதி உதாரணம்.

    ‘மரம் (L ‘arbre): திறந்திருந்த சன்னலெதிரில் உட்கார்ந்து பின்னிரவுவரை எழுதிக்கொண்டிருக்கும்போது, அவைகளிலொன்று கிட்டத்தட்ட வீட்டை தொட்டுக்கொண்டிருப்பதை அல்லது குறைந்தபட்சம் விளக்கின் வெளிச்சத்தில் பிரகாசிக்கும் கடைசிக் கொம்பினை, அப்போதைகப்போது குஞ்சம்போன்று மெல்லவசைந்து, கரும்பச்சைவண்ணத்தில் பொய்யாய் நனைத்தெடுத்த முட்டைவடிவ இலைகுழைகள், இருட்டின் பின்னணியில் இறகுகளாய்த் எழுந்தமர்வதையும் பின்னர் அவை ஓர் ஒழுங்கான இயக்கமாகி ( அவற்றின் பின்புல-இருட்டில், இலைகளடர்ந்த கிளைகள் அரிதானதும் மென்மையானதுமான பரமரகசியத்தை ஒன்றுக்கொன்று தமக்கடுத்துள்ள மற்றொன்றிடம் குசுகுசுக்கும்) ஏதோ மரமுழுவதும் விழிப்பதும், உதறுவதும், உதறிக்கொள்வதுமாக காரியமாற்றிவிட்டு, பின்னரடங்கி மீண்டும் அசைதலற்று, நேரடியாக மின்சாரபல்பின் ஒளியின் வீச்சுக்குள்ளாகி, முன்வரிசையில் விலகிநிற்கின்ற தோற்றத்துடனும், பின்னேச் செல்ல செல்ல ஒளியிடமிருந்து சிறிதுசிறிதாக விலகி, இடைவெளிகைளைக் குறைத்துக்கொண்டு, அடுக்கடுக்காயிணைந்து அவ்விலைகள் இறுதியில் தோற்றமிழக்க, இருட்டில் திடுக்கிட்டும், நடுங்கியும், விம்மியும் எழுப்பும் பறவைகளின் தூக்கக்குரல் வரிசைவரிசையாய்தொடரும். ‘1967ல் வெளிவந்த ‘வரலாறு ‘ படைப்பில் உள்ள இப்பகுதி மொழியை ஓவியமாக கையாளும் அவரது திறனுக்குச் சான்று.

    ‘டிராம்வண்டி ‘ (Le Tramway) ஒரு ஞாபக (Souvenir) நூல். சிறுவனாக இருந்தகாலத்து நினவுகளுக்குச் சென்று திரும்பும் ஒரு முதியன்மனம். அந்திமக்காலம் ஆரம்பத்தைத் தேடிச்சென்று விசாரித்துவிட்டுத் திரும்பவும் கட்டிலில் விழுகிறது. நாவலின் ஆரம்பப்பக்கங்களிலெயே, ஆசிரியர் தனது இளம்வயதில் வாழ்ந்த பெர்ப்பிஞ்ஞான் (PERPIGNAN) நகருக்கு வந்துவிடுகிறார். அக்காலத்தின் அவர்பயன்படுத்திய டிராம்வண்டி இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்குமாக மீண்டும் மீண்டும் சென்று திரும்பும் ரயில்வண்டியாக உருவகப்படுத்தப்படுகிறது. இவ்விறந்தகாலத்தை நோக்கிய பயணம் அறைவாசத்திற்கும் கடந்தகாலத் தோற்றங்களுக்குமிடையிற் பயணித்து, படுக்கையிற் கிடக்கும் கிழவனை (குளோது சிமோனை ?) இரு புள்ளிகளுக்குமிடையிற் தள்ளாடவைக்கிறது.

    குளோது சிமோன் சிறுவயதிலேயேப் பெற்றோர்களையிழந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மானியர்களால் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் தப்பி, பிரெஞ்சு மக்களின் ‘ஜெர்மன் எதிர்ப்பு ‘ இயக்கத்திற் சேர்ந்து பங்காற்றிய போர்வீரர். கட்டுரையின் தொடக்கத்திற் கூறியதைப்போன்று இலக்கியத்திற்கான நோபெல் பரிசைவென்ற பிரெஞ்சிலக்கிய உலகின் பின் நவீனத்துவவாதி. படைப்புகள் அனைத்துமே சொந்தவாழ்க்கையின் நகல்கள். நினைவுகளை எழுதுவதென்பது மறக்கப்பட்டவைகளை திரும்ப அழைப்பதாகும். சுயவாழ்க்கையை இலக்கியமாகச் சொல்வதில் எத்தனைபேர்கள் வெற்றிபெற்றிருப்பார்களோ ? இவர் வெற்றிபெற்றிருக்கிறார். நானறியேன். தன் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து, பதித்தத் தடங்களை மண்ணோடு பறித்து, காற்கோளிட்டு, காட்சிகளாய் விவரித்துப் படைத்திருக்கிறார்.

    1957 ல் வெளிவந்த ‘காற்று ‘ (Le Vent)அவரது படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது: சமகால வரலாற்றின் திடார்மாற்றங்களுக்குத் தாக்குப்பிடித்து ஜீவிக்கும் மானுடத்தையும் அதன் நோக்கங்களையும் கண்டுணர்வதும், காலத்தின் கூறுகளை எதிர்கொள்வதுமென அதில் வரையறுக்கின்றார். ஸ்பெயின் உள்நாட்டுச் சண்டைகளை ‘முறுக்கிய கயிறு ‘( LA CORDE RAIDE -1947)வில் பயன்படுத்திக்கொண்டார். அவ்வாறே ஜெர்மாணியர்களிடம் பிரான்சு வீழ்ந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு படைக்கப்பட்டது ‘ஏமாற்றுப் பேர்வழி ‘ (Le Tricheur -1940). ‘புல் ‘ (L ‘HERBE -1958), ‘ஃபிளாந்தருக்கான வழி ‘ ( LA ROUTES DES FLANDRES -1960), ‘மாளிகை ‘ (LA PALACE – 1962), ‘வரலாறு ‘ (HISTOIRE – 1967) இவரது படைப்புக்களில் முக்கியமானவை. இப்பட்டியலில் ‘பர்சால் யுத்தம் ‘ (LA BATAILLE DE PHARSALE -1969), மூன்று படிவம் (TRIPTYQUE -1973) ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

    ‘குளோது சிமோன், சந்தேகத்திற்கிடமின்றி இன்றைய இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மிகப்பெரிய ஓவியர் ‘

    ( ‘ IL EST SANS DOUTE LE PLUS GRAND PEINTRE VIVANT DE LA LITTERATURE D ‘AUJOUR ‘HUI ‘ – FABRICE GABRIEL) என்று புகழப்படும் வசனத்தில் உண்மைமட்டுமல்ல சத்தியமும் இருக்கின்றது.

    ****

    Series Navigation

    நாகரத்தினம் கிருஷ்ணா

    நாகரத்தினம் கிருஷ்ணா

    பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)

    This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

    நாகரத்தினம் கிருஷ்ணா


    ‘Four men would have an immense life: Napoleon, Cuvier, O ‘ Connell, and I want to be the fourth. The first had lived the life of Europe; he inoculated armies; the second married the sphere; the third incarnated people; and I would carry the entire society in my head ‘. -Balzac

    தொண்ணூற்றிரண்டு புதினங்கள், அவற்றுள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்களென பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி, ‘பல்ஸாக் ‘

    மனிதத்தையும் அவன் சார்ந்த உலகினையும் மிக நுணுக்கமாக அவதானித்த, இவரொத்த வேறொரு படைப்பாளியை உலகிற் காண்பதரிது. மேற்கத்திய உலகில், ‘பல்சாசியன் நடை ‘ என்பது விமர்சகர்களால் பெரிதும் போற்றப்படும் தகுதியாக இன்றைக்கு இலக்கியங்களில் முன்வைக்கப்படுகிறது. ‘எழுத்தென்பது தவம் ‘ எனப்புரிந்து செயல்பட்டவர். நல்ல படைப்புக்களுக்காக கடுந்தவம் புரிந்திருக்கிறார். ஆவிமணக்கும் காப்பியைச் சுவைத்தபடி இரவு முழுக்க எழுதுவதென்பது அவரது அன்றாடப்பணி. நாளொன்றுக்கு சராசரியாக பதினெட்டுமணிநேரங்கள் எழுத்துக்குச் செலவிட்டிருக்கிறார் என்பதை நம்புவது கடினம், ஆனால் அதுதான் உண்மை.

    அனைத்துக்கும் மேலானதாக, அவரது அவதாணிக்கும் குணம். பார்வை- எண்ணம்- படைப்பு, மூன்றுக்குமிடையில் எளிதான சவ்வூடுபரவல் அவரிடம் நிகழ்ந்திருக்கிறது.. காட்சிகளைக் கண்களால் காண்பவரல்லர், கொய்பவர்; அறுவடைசெய்பவர். அறுவடை செய்வதைக் குதிருக்குள் கொட்டிவைப்பவர் அல்லர், கற்பனைகளைச் சேர்த்து மணக்கமணக்கச் சமைப்பவர். சமைத்ததை விருந்திடுவதில் கூட்டத்திற்கு உணவிடும் பரிசாரகனல்ல, பிள்ளைக்கு ஊட்டும் அன்னை..

    பாரீஸ் மாநகர வீதிகளாகட்டும் அல்லது ஒதுங்கிய நாட்டுப்புற நிலங்களாகட்டும், ஆடைகளாகட்டும் அல்லது வீட்டுத் தளவாடங்களாகட்டும், அனைத்துமே, அவரெழுத்தால் துல்லியமாக அறிமுகம் பெறமுடியும். எதையெழுதினாலும் அதிலொரு ஆழ்ந்த அக்கறை, மிகத் தெளிவானதொரு சித்தரிப்பு. அவரது சிந்தனைகள் குறிப்புகளாகவும், வருணனைகளாவும் – மேகத்தில் புகுந்தெழும் முழுநிலவாய் முகம்காட்டும்போது வாசகனுக்குக் கிடைப்பது குளிர்ச்சியும் வெப்பமும்.

    ‘ஏதோவொருவகையில் நான் வகித்தப் பல்வேறுபணிகள் இப்படியானதொரு அவதானிப்புக் குணத்தினை எனக்குக் கொடுத்தன ‘

    ( J ‘AI ETE POURVU D ‘UNE GRANDE PUISSANCE D ‘OBSERVATION,….PARCE QUE J ‘AI ETE JETE A TRAVERS TOUTES SORTES DE PROFESSIONS,…INVOLONTAIREMENT…) என்பது, நாம் வியக்கும் அவதானிப்பு குணம்பற்றிய அவரது சொந்த வாக்குமூலம்.. பதிப்பகத் தொழிலில் இவருக்கேற்பட்டத் தோல்விகளும் நிதி நெருக்கடிகளும், அவருக்கான படைப்புக் களங்களை அடையாளம் காணவும், படைப்பு மாந்தர்களை இயற்கை தன்மைகளுக்கு சற்று மேலான தளத்தில் உலவச் செய்யவும் உதவின. சில நேரங்களில் கதைமாந்தர்களுக்கும் அவர்தம் வாழ்வியல் உடமைகளுக்கும் இவர்செய்யும் நகாசு வேலைகள், படைப்புக்களை பெருமைபடுத்துகின்றன.. உலகின் பெரும்பாலான தேர்ந்த இலக்கியவாதிகளைப்போலவே, அனுபவங்களென்கிற ரசவாதக் குப்பியில், மேலான சிந்தனைமுலாம் என்கின்ற குழம்பில் தனது படைப்புமாந்தர்களை முங்கியெடுக்கிறார்.

    இவரதுப் பெற்றோர்கள் முதலாம் நெப்போலியன் காலத்தில் உயர்பதவியிலிருந்த பிரபுக்கள் வம்சத்தவர். பிறந்த ஆண்டு 1799. தந்தை, ‘பெர்னார் பிரான்சுவா (BERNARD FRANCOIS) ‘, தாய் ‘ஆன்ன் சலாம்பியெ (ANNE SALLAMBIER) ‘. பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை. பிறந்தவுடனேயே காப்பகத்தில் இடப்பட்டதால், பெற்றோர்களிடம் ஏற்பட்ட வெறுப்பு இறுதிவரைத் தொடர்கிறது. காப்பகத்தில் இவருடனேயே வளர்ந்த சகோதரி ‘லோர் ‘(LAURE) ரிடம் ஏற்பட்ட பாசப்பிணைப்பு பலவருடங்கள் நீடிக்கிறது. தனது தாய்மொழியான பிரெஞ்சுமொழியின்மீது மையல்கொள்ள ஆரம்பித்தது 1815ம் ஆண்டு GANSER பள்ளியில் நடைபெற்ற மேடைப்பேச்சுகள் மூலமாக. 1816ல், அக்காலத்தில் வாழ்ந்த மேல்தட்டுவர்க்க வழக்கப்படி சட்டம் பயின்றபோதும், இவரது கவனமனைத்தும் மொழியிலும் எழுத்திலுமிருந்தது. 1819 – 1820 ஆண்டுகளை பல்ஸாக்கின் இலக்கியப்பிரவேச காலங்களெனலாம். ‘தெகார்த் (DESCARTS), மால்ப்ரான்ஷ் (MALEBRANCHE) ஆகியோரது தத்துவார்த்த எழுத்துக்களை விரும்பி வாசித்தார். மற்றமொழி படைப்புக்களையும் விட்டுவைக்கவில்லை. மொழிபெயர்ப்புகளிலும் அதிக நாட்டம். பைரன்(BYRON) கவிதைகள், க்ராம்வெல்(CROMWELL)அவற்றுள் முக்கியமானவை. புகழ்பெற்ற பிரெஞ்சு மொழியின் நாடகவியலாளர்களான ராசின் (RACINE), கொர்னெய் (CORNEILLE) ஆகியோர் அடியொற்றிப் படைப்புக்களை அளித்தார். ழான்-ழாக் ரூஸ்ஸோ (Jean-Jacques Rousseau)வினைப்போன்று உருக்கமான புதினமும் எழுதப்பட்டது. இலக்கியங்களின் அனைத்துக்கூறுகளையும் அவர் நாடிபிடித்துப் பார்த்தக் காலமது. இக்காலங்களில்தான் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் அறிவதற்காக வெகுசனப் புலங்களில் தன்னை ஒளித்துக்கொண்டார். பேட்டைவாசியாகவும், தொழிலாளியாகவும் அவரெடுத்த அவதாரங்களுள், ‘மனித புத்திகளின் யோக்கியதைகளை அறிவதற்கான தேடல்போதை இருந்திருக்கின்றது ‘ ( ‘PRENANT PLAISIR A L ‘IDENTIFIER. DANS UNE SORTE D ‘ IVRESSE DES FACULTES MORALES )., என்பது ஒரு விமர்சகரின் கருத்து. ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது BUFFON னுடைய HISTOIRES NATURELLE வாசித்துவிட்டு, ‘ ப்யுஃபோனால், விலங்கியலை அடிப்படையாகக்கொண்டு சிறப்பானதொரு நூலை எழுதமுடியுமென்றால், அவ்வாறான நூலொன்றினை ஏன் நமது சமூகத்திற்காகவும் படைக்கக்கூடாது ?(SI BUFFON A FAIT UN MAGNIFIQUE OUVRAGE EN ESSAYANT DE REPRESENTER DANS UN LIVRE L ‘ENSEMBLE DE LA ZOOLOGIE, N ‘Y AVAIT-IL PAS UNE OEUVRE DE CE GENRE A FAIRE POUR LA SOCIETE ? -, ‘ LA COMEDIE HUMAINE ‘ முன்னுரையில்) என்ற எண்ணம் 1842ல் எழுதபபட்ட ‘ LA COMEDIE HUMAINE ‘ க்குக் காரணமாகிறது. மூத்த சகோதரி ‘Laure ‘ ன் திருமணம் முடிந்த சிலநாட்களில் எழுதப்பட்டது ‘FALTHURNE ‘ .சரித்திர நவீனம்

    1822 ல் மதாம் தெ பெர்னி (Madame de BERNY)யிடம் இவருக்கு ஏற்பட்டது பொருந்தாக் காதல். இளைஞன் பல்சாக்கிற்கு வயது இருபத்துமூன்று, சீமாட்டிக்கு வயது நாற்பத்தைந்து. திருமணமானவள், உபரியாக ஒன்பது பிள்ளைகள், இருந்தும் மோகித்தார். அவளுக்கும் இவரது எழுத்திலும், திறனிலும் நம்பிக்கை இருந்தது. ‘CLOTILDE DE LOUSIGNAN அல்லது LE BEAU JUIF ‘ என்கின்ற நாவல் இச்சீமாட்டியின் நினைவாகவே எழுதப்பட்டது. அடுத்து வெளிவந்தது ‘சதசஞ்சீவி ‘ (CENTENAIRE). தனக்குப் பலியானவர்களால் உயிர்வாழ்ந்து யுகங்களிற் பயணிக்கும் கிழட்டு வேதாளத்தைப் பற்றியது. பிறகு ‘அர்தென்ன் ராஜகுரு ‘( VICAIRES ARDENNES). உடன்பிறந்தவளை காதலிக்கும் பாவத்திலிருந்து தப்ப நினைக்கும் இளைஞன், அடுத்து (உண்மை அறியாமல்) மையல்கொள்கின்றபெண் அவனதுச் சொந்தத்தாய். இப்படைப்பு அக்காலத்திய சமூக அமைப்பையும் மத நம்பிக்கையும் கேலி செய்ததற்காகத் தடைசெய்யப்பட்டது.. சூதாட்டக் கணவனால் துன்புற்று வாழ்ந்த தன் இளைய சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட ‘குடிகேடன் ‘(CHOUHAN) படைப்பிற்கு 600 பிரெஞ்சு பிராங்கினை ஒரு பதிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது ‘ எழுதும் தொழில் செய்து அவமானப்படுவதைக் காட்டிலும், விரல்களால் நிலத்தைக் கிண்டி பிழைப்பேன்- J ‘IMERAIS MIEUX ALLER LABOURER LA TERRE AVEC MES ONGLES QUE DE CONSENTIR A UNE PAREILLE INFAMIE ‘ என்று சத்தமிட்டுவிட்டு, படைப்பைப் பிரசுரிக்க விரும்பாமல் மேசையில் வைத்துப் பூட்டிக்கொண்டார். ‘எஞ்சிய தேவதை (LA DERNIERE FEE ou LA NOUVELLE LAMPE) அல்லது புதிய விளக்கு ‘ மற்றொரு வித்தியாசமான புதினம். இந்தமுறை அவரது ‘ராஜகுரு – கட்டுபாடற்ற காதலின் மன்னிப்புக் கோரல்- LE VICAIRE, UNE APOLOGIE DE L ‘AMOUR LIBRE ‘ என்கிற தலைப்பில் பழைய மொந்தையில் புதியகள்ளாக வெளிவருகிறது. உலக ஒழுக்கிலிருந்து விலக்கியச் சூழலில் வளர்க்கப்பட்ட இளைஞனுக்கு, உலகின் பிரதான இயக்கக்காரணிகளான சமூகம், அரசியல், பந்தம்..போன்றவற்றைத் தெரியப்படுத்த, ஒரு சீமாட்டி முன்வருகிறாள்.. பின்னர் ‘அர்தென்ன் ராஜகுரு ‘ வின் தொடர்ச்சியாக ‘அன்னெத்தும் கயவனும் – ANNETTE ET CRIMINEL) ‘ எழுதப்படுகிறது. . 1824ம் ஆண்டுவாக்கில் பல்சாக்கிற்குக் கிடத்த ‘ஹொராஸ் ரேஸ்ஸொன் (HORACE RAISSON) நட்பு, ‘இலக்கியத் தொடர் ‘ -(FEUILLETON LITTERAIRE) இதழியலைத் தொடங்க உதவுகிறது. இவ்விதழ் ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்து, நாளடைவில் இலக்கியம், அரசியம், விஞ்ஞானமென தனது எல்லைகளை சுருக்கித் தகுதியை வளர்த்துக்கொண்டது.

    உடன்பிறந்த சகோதரியின் கணவனால் ஏற்பட்ட கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்காக 1828ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் அச்சகம் மற்றும் பதிப்பகத் தொழிலை மேற்கொள்கிறார். MOLIER ன் அனைத்து படைப்புகளும் முறையாக இவரால் பதிப்பிக்கபடுகின்றன. இவரது எண்னத்திற்கு மாறாக இத்தொழில் மேலும் கடனாளியாக மாற்றியது. மீண்டும் எழுத்துலகிற்குத் திரும்புகிறார். 1829க்குப் பிறகு அவரால் எழுதபட்ட படைப்புகள் அனைத்துமே மகோன்னதனமானவை. முதன்முதலாக அவரது சொந்தப் பெயரில் (HONORE DE BALZAC) படைப்புகள் அச்சுக்கு வந்தன என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

    1829 – ‘எஞ்சியுள்ள குடிகேடன் ‘ -LE DERNIER CHOUHAN., ‘திருமணத்தின் உடற்கூறு (LA PHYSIOLOGIE DU MARRIAGE) ‘, ‘கீர்த்தியும் கேடும் ‘ ( GLOIRE ET MALHEUR),

    1830ல் – கட்டுரைகள், சிறுகதைகள் குறிப்பாக ‘அந்தரங்க வாழ்க்கையின் காட்சிகள் (SCENES DE LA VIE PRIVEE),.

    1831 ‘துயர் குறைக்கும் தோலாடை ‘(LA PEAU DE CHAGRIN) மற்றொரு உன்னதப் படைப்பு. கையிலிருந்த கடைசி நானயத்தையும் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் கதை நாயகன் ஒரு புராதனப்பொருள் அங்காடியில் நுழைய நேரிடுகிறது. இவனது நிலையை அறிந்து இரக்கப்பட்ட அங்காடி உரிமையாளன் ஓர் அதிசயத் தோலாடையைக் காண்பித்து ‘உன் வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய ஆடை, ஆனால் ஒவ்வொரு வேண்டுதலின் போதும், தோலாடைச் சுருங்கத் தொடங்கும் அதற்கு ஈடாக உன்னுடைய ஆயுளும் குறைந்து கொண்டுவரும் ‘ என எச்சரிக்கிறான். ஆடையைப்பெற்றுத் திரும்பும் இளைஞனுக்கு, கேட்டது கிடைக்கின்றது, வளங்கள் பெருகுகின்றன. வேண்டுதல் நிறைவேற்றப்படும்போதெல்லாம் தோலாடைச் சுருங்குவதுடன் கூடவே அவனது ஆயுளும் குறையத் தொடங்குகின்றது. ஒரு கட்டத்தில் தோலாடையை விரும்பித் தொலைத்தபோதும் அவனை அது விடுவதாகயில்லை. இறுதியில் அவனுயிரைக் குடித்து அதுவும் முடிந்து போகிறது.

    எதுவுமற்ற வாழ்க்கை என்கின்றபோது ‘முடிவைத் ‘ தேடி ‘அவன் ‘ சென்றான். எல்லாவற்றயும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது, ‘முடிவு ‘ அவனைத் தேடிவந்தது நெருங்கினாலும், விலகினாலும் ‘இறப்பினை ‘ கடந்தேசெல்லவேண்டும். என்கின்ற விதியினை மனதிற் பதியவைக்கும் அற்புதப் படைப்பு.

    1832 – நாட்டுப்புற வைத்தியன் (Le Medecin de Campagne)

    1834 – லான்ழே சீமாட்டி (La Duchesse de Langeais,) முழுமையின் தேடல் (La recherche de l ‘absolu). இக்காலத்தில் எழுதப்பட்ட ‘பாதிரியார் கொரிஓ ‘ (LE PERE GORIOT)வும் அவசியம் நாம் படித்தாகவேண்டிய நூல். வாழ்க்கையின் மிக உன்னத நிலையிலிருந்த மனிதனொருவன் தனது இரு பெண்களால் எல்லாவற்றையும் இழந்து நாயினும் கேவலாமாக மரணிப்பதை விவரிக்கும் புதினம்.

    1838 COMEDIE HUMAINE: மனிதத்தைப்பற்றி பேசுகின்ற ஒரு நூல். இயற்கை வரலாற்றில் விலங்குகள் வகைபடுத்தப்படுவதைப்போன்று, பல்ஸாக் தன் பங்கிற்கு மனித உயிர்களைப் பட்டியலிடுகிறார். அப்பட்டியலில் அன்றாடங் காய்ச்சிகளிலிருந்து, அறுசுவை உணவினைக் கொள்வோர்வரை எல்லோரும் இடம்பெற்றிருந்தனர். பணிகளென்றால் மருத்துவர், வணிகர், வங்கியாளர்,மதகுருமார், அதிகாரி,, அந்தஸ்தில் உள்ளவர், ஊழியர்கள், நிறுவன அதிபர்களென நீண்டவொரு பட்டியல். புலங்களெனில், பெருநகரமா, நகரமா, கிராமமா ? ஆகச் சமூகத்தின் காரணிகளின் அடிப்படையில் மனிதர்களை வாசித்தார். அவரது தூரிகையில் மனிதர்களைப் பற்றிய முழுமையானச் சித்திரம் கிடைக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று அவரது அவதானிப்பின் முழுவீச்சையும் இங்கே உணருகிறோம். மிக நுணுக்கமாகத் தீட்டப்படும் அவரது எழுத்தோவியத்தில் ஒரு முழுமையான மனிதனைக் காண்கிறோம். நகரமா, வீதியா, இருப்பிடமா, ஆடைகளா, மேசைகளா, நாற்காலிகளா, இன்ன பிற பொருட்களா, அவனுக்கான, அவன் சார்ந்த ஒழுக்கங்களா, உறவுகளா, அசைவுகளா, மொழிகளா அனைத்தையும், பட்டைத்தீட்டிய மனிதவைரமாக நம்மிடம் நீட்டும்போது அதனொளி நம்முள்ளத்தில் செய்யும் விந்தைகளை, விவரிப்பது கடினம். எல்லாவற்றிற்கு மேலாக உண்மைகளின் அடிப்படையில், பொய் வேதாந்தங்களை ஒதுக்கி மனிதத்தினை கண்டறிந்த அறிவிலக்கிய முயற்சி ‘LA COMEDIE HUMAINE ‘.

    பிரெஞ்சு இலக்கியத்திற்கு மட்டுமல்ல மேற்கத்திய இலக்கியஉலகை புரிந்து கொள்ளவும், பல்ஸாக்கின் அறிமுகம் அவசியம்;

    —————————————-

    Na.Krishna@wanadoo.fr

    Series Navigation

    நாகரத்தினம் கிருஷ்ணா

    நாகரத்தினம் கிருஷ்ணா

    பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)

    This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

    நாகரத்தினம் கிருஷ்ணா


    ‘..But we must also admit that the literature, currently at least, constitutes not only an experiment personel, but a fundamental, blaming all, including itself, dialectical (…) the art is infinite dispute. –

    – Maurice Blanchot

    ‘மொரிஸ் ப்லான்ஷொ ‘ படைப்பெனில் முகம் சுளிக்கும் வாசகர்கள் அனேகம். மொழிக் கடினம் என்றில்லாவிட்டாலும் கூட, அவரது ஆக்கங்களிலிருந்த அதிகபட்ச ‘கற்பு ‘ வாசகனின் பிரியத்தை ஏற்காமல் செய்தது. எனினும் சமகால பிரெஞ்சு படைப்பாளிகளில், அவருக்கிருந்த முக்கியத்துவம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

    பொதுமக்களால் குறைவாக அறியபட்டவர். தன் ‘இருப்பை ‘ மேடையேற்ற விரும்பாத படைப்பாளி. எப்படியாவது தாங்கள் பேசப்படவேண்டுமென்பதற்காக ‘அறிக்கைகள், மறுப்புகள் ‘ எனக் கூவிவிற்று தன் ‘இருப்பை ‘ கடைபரப்பும் எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த நூற்றாண்டில் ஓசையின்றி தனது படைப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவர். ‘படைப்பினால் படைப்பாளியேயன்றி, படைப்பாளியால் படைப்பல்ல ‘ என்று உறுதியாக நம்பியதால் ஒளிந்து வாழ்ந்தார். இறக்கும் வரை அவரது புகைப்படங்களை பிரசுரிக்க அனுமதித்ததில்லை. தன்வாழ்நாளில் ஒருமுறைமட்டுமே நேர்காணலுக்கு (1960 – அல்ஜிரிய போர் காலத்தில்) சம்மதித்திருக்கிறார். அந்நேர்காணலைக் கூட சம்பந்தப்பட்ட பிரெஞ்சு வாரஇதழ் அவரது கோட்பாட்டிற்குத் தங்களால் பங்கம் நேர்ந்துவிடக்கூடாதென நினைத்து, பிரசுரம் செய்யாமல் தவிர்த்துவிட்டது. இப்படி ‘மொரிஸ் பிளான்ஷொ ‘ ஓடி ஒளிந்தாலும் பிரெஞ்சு அறிவு ஜீவிகளால் தேடிப் போற்றப்பட்டார். இவரை ஆராதனைச் செய்தவர்களை ழான்-போல் சார்த்ரு(Jean-Paul Sartre), ரெனே ஷர் (Rene Char), மிஷெல் ஃபுக்கோ (Michel Foucault) என வரிசைப்படுத்தலாம்.

    1907ம் ஆண்டு பிறந்த ‘மொரிஸ் பிலான்ஷொ ‘, பள்ளி இறுதிவகுப்பின்போது வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் நேர்ந்த மருத்துவ குளறுபடியால் தன் இறுதிநாட்கள்வரை, உற்ற உடற் கேடுகள் அதிகம். அவ்வருத்தங்களின் வெளிப்பாடே ‘இறப்பின் எழுத்தாணி ‘ (LE FEUTRE DE LA MORT), ‘மரண தண்டனை ‘(L ‘ARRET DE MORT) போன்ற ஆக்கங்களுக்கு காரணமாயின. தவிர காசநோயும் தன்பங்கிற்கு இறக்கும்வரை இம்சித்தது. ஜெர்மானிய இலக்கியமும், தத்துவமும் படித்துத் தேர்ந்தவுடன் 1930-40களில் தீவிர வலதுசாரி அபிமானியாகவிருந்தார். இக்காலகட்டத்தில் வலதுசாரி இதழ்களிலும் பணிபுரிந்ததன் விளைவாக, அவரது படைப்புகளில் இலக்கியமும், அரசியலும் சமபங்கிற்கு இருந்தன. போர் முடிந்தபிறகு உடல் நிலை காரணமாக, தீவிர அரசியல்சார்பினை விடுவித்துக்கொண்ட நிலையிலும், சமூக நிகழ்வுகளிலிருந்து தன்னைவிலக்கிக்கொண்ட பார்வையாளனாக ஒருபோதும் கருதியதில்லை. இளமைக் காலத்தில் கொண்டிருந்த கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டவராய் இடதுசாரிகளின் குணத்துடன் பிரெஞ்சு அரசின் ‘அல்ஜீரியப் போரினை ‘ எதிர்த்த்வர்களின் அணியிலும், பிரசித்திப்பெற்ற ‘மே 1968 ‘ மாணவர்கள் எழுச்சிக்கு, ஆதரவாளர்கள் தரப்பிலும் செயல்பட்டவர்.

    அவரது எழுத்துக்களில் ஒரு தனித்தன்மை இருந்தது. மரபுவழி படைப்புமுறைகளில் விலகியவரெனினும் கட்டுடைத்தல், பிரதி, உள்பிரதி, பின் நவீனத்துவம் போன்ற கூண்டுகளுக்குள் சிக்கியவரல்ல. அவ்வாறே அவரது சிந்தனையில் தத்துவம் (NIETZSCHE, HEGEL, HEIDEGGER, LEVINAS…), இலக்கிய விசாரணை(MALLARME, KAFKA, LAUTREAMONT, SADE…), புராணக் கதைகள் என அனைத்தும் சங்கமித்துள்ளன.. அவரது எழுத்துக்கள் சராசரி வாசிப்புக்கு உட்பட்டதல்ல என விமர்சனம் செய்யபட்டபோதிலும்,. பெரும் வாசிப்புக்கு உட்படுத்த நினைக்கும், இலக்கியவாதிகளின் உபாயங்களை அவர் கையாண்டவரல்லர். பிரபல இலக்கிய விமர்சகர் ‘ரொழெ லாபோர்த் ‘ ( ‘L ‘IMPOSSIBILITE DE PARLER DE LUI ‘ – ROGER LAPORTE)சொல்வதுபோன்று, ‘அவரது படைப்புகளை மட்டுமே முன்நிறுத்தபடுவதால் ‘அவரை ‘ச் சிலாகிக்க விஷயமில்லை ‘ என்பதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.

    கஃப்கா (KAFKA)கொடுத்த உத்வேகத்தில் எழுதிய கற்பனை புதினங்களை விட அவரது கட்டுரைகள் முற்றிலும் வித்தியாசமானவை. சமூகம், நீதி, வெளி, நித்யம், அநித்யம் என கதையளக்காமல், பொய்யான நம்பிக்கைகள் பற்றி பேசாமல், நிதர்சனம் குறித்த தெளிவைநோக்கி அழைத்துச் செல்பவை அவை. இக்கட்டுரைகளில் பிலான்ஷொ முற்றிலும் புதிய கோளில் வாசகனை நிறுத்தி, ‘காத்திருப்பு ‘, ‘இன்மை ‘, தடங்கல், மறதி, அமைதி அனுபவங்கைளை ஏற்படுத்தித் தருகிறார். நம்மை வருத்துவதற்கெனவே சொற்களும், கேள்விகளுமாக தொடருகின்ற அவரது படைப்பு, நம்மை அந்தரத்தில் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

    ‘இலக்கிய வெளி ‘ (L ‘ESPACE LITTERAIRE) அவரது மிகச்சிறந்த படைப்புகளிலொன்று. பதில்களைவிட ‘கேள்விகளே ‘ இங்கே அதிகபட்சமாக எடுத்தாளப்படுகின்றன… அக்கேள்விகளில் வெளிப்படுகின்ற எளிமையின் ஊடாக அடுக்கடுக்கான படிமங்களையும், உருவங்களையும் உய்த்துணருகிறோம். அவரைப் பொறுத்தவரை இலக்கியத்தின் தொடக்கமே, கேள்வியாக வடிவெடுப்பதில் உள்ளதென (LA LITTERATURE COMMENCE AU MOMENT OU LA LITTERATURE DEVIENT QUESTION) நம்புகிறார். ‘ஓர் உயிர் (UN ETRE) ஏன், எப்படி படைப்பாளியாகின்றது ? ‘, ‘ எழுத்தென்பது ஓர் அனுபவம், எவ்வாறு ? ‘, ‘மொழி, படைப்பின் பொருள், சொல், படைப்பு – படைப்பாளி இவற்றுக்கிடையே, உயிருக்குள்ள பந்தமென்ன ? ‘ இக்கேள்விகளின் தோற்ற எளிமையும், அவற்றின் வாசிப்பில் நம்மிடமெழும் முடிவில்லா பதில்களும் ‘மொரிஸ் பிலான்ஷொ ‘ எழுத்துக்களுக்கே உரிய குணங்கள். படைப்புகளில் செயற்கை செளந்தர்யங்களின்றி, உணர்ச்சி அரிதாரங்களைத் தவிர்த்து, ஆழ்மனநிலைகளை மிக நுணுக்கமாக ஆராய்வதை இஅவரது படைப்புகளில் குறிப்பாக ‘படைப்புக்கும் – உயிருக்குமுள்ள பந்தங்களில் காணமுடிகிறது. ‘மறுப்பும் – ஏற்பும் ‘ வாழ்வைப் பற்றிய மதிப்பீடுகளாக நம்முள் வலம் வருகின்றன. வாசகனை எதிரே வைத்துகொண்டு ‘நான் தனியொருவன் ‘ என வாதிடும் அவரது முரண்பாடே ஏனைய படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்த உதவுகிறது.

    அவரது படைப்புகளில் 1941ல் வெளிவந்த ‘தெளிவற்ற தொமா (THOMAS, L ‘OBSCUR ‘- மிகவும் புகழ்பெற்ற புதினம்- வெற்றிடத்தைத் தேடும் ஒர் அன்னியனின் கதை), ‘அமினதாப் ‘(AMINADAB -1942), ‘உச்சி ‘ (LE TRES-HAUT -1948), ‘மரண தண்டனை ‘ (L ‘ARRET DE MORT -1948), ‘இலக்கிய வெளி ‘(L ‘ESPACE LIITRAIRE-1955), ‘பதிப்பில் உள்ள நூல் ‘(LE LIVRE A VENIR-1959), ‘முடிவில்லா உரையாடல் ‘( L ‘ENTRETIEN INFINI -1969) ஆகியவை முக்கியமானவை.

    AGNES PEGORIER சொல்வதுபோன்று ‘பிலான்ஷோவின் உரை அல்லது கட்டுரையை வாசிப்பதென்பது ஒரு கடினமான அனுபவம் மட்டுமல்ல களிப்பான அனுபவம் கூட ‘ ( PLONGER DANS UN RECIT OU UN ESSAI DE BLANCHOT, EST UNE EXPERIENCE ARDUE ET PASSIONNANTE)

    ————–

    Na.Krishna@wanadoo.fr

    Series Navigation

    நாகரத்தினம் கிருஷ்ணா

    நாகரத்தினம் கிருஷ்ணா

    பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)

    This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

    நாகரத்தினம் கிருஷ்ணா


    ‘I have the impression to have turned in round all my life, so that I do not know at all if I am a child or an old man. Or a child who speaks already about his old age, or an old man who still speaks about his childhood ‘

    – Jean Tardieu

    கடந்த நவம்பரில் ‘ழான் தர்தியெ ‘வுக்கு நுற்றாண்டுவிழா எடுத்திருந்தார்கள். இவரை எங்கே நிறுத்துவதென்பது இன்றளவிலும் குழப்பம் உண்டு. நாடக ஆசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், வானொலிக் கர்த்தா, ஓவிய விமர்சகர், கவிஞர் என எந்தக் கிரீடத்திற்கும் இவரது தலை பொருந்தும். கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு முழுக்க (1903 -1995) வாழ்ந்து மறைந்த ‘தர்தியெ ‘ ஒரு காட்டாறு வெள்ளமென சீறிப் பயணித்து, எந்தவெல்லைக்கும் பிடிபடாமல், தன் பயணமெங்கும் கலைப் பிரவாகமாய் வடிந்து முடிந்திருக்கிறார்.

    பிறப்பு நவம்பர் 1, 1903. தந்தை ஓவியர், தாயார் இசைக்கலைஞர். அவரது படைப்புக்கள் ஓவியத்தையும், இசையையும் இணைக்கும் முயற்சி. விளைவு, படைப்புகளில் இசையின் இனிமையும், ஓவியத்தின் அழகும் புணர்ந்த நிலை. இஇவரது பதினேழாவது வயதில் ஒருநாட் காலை நிலைக்கண்ணாடி முன்நின்று முகச்சவரம் செய்ய, ஆடியில் தெரிந்த இஇவரது பிம்பம் கேள்வியெழுப்புகின்றது.. அன்றிலிருந்து அவருக்குள்ளிருந்த ‘நகல் ‘ அவரிறக்கும்வரை பின்தொடர்ந்து வருவதை 1920 வெளிவந்த ‘அந்நிய விசாரம்(INQUIETANTE ETRANGETE-LE FLEUVE CACHE, LA PART DE L ‘OMBRE) படைப்பிலும், 1990ல் வெளிவந்த அவரது இளமைக்கால நினைவு தேடுதலான ‘திருவாளர் ழானைத் தேடிவிட்டு வருகிறோம் ‘( ON VIENT CHERCHER MONSIEUR JEAN) படைப்புகள்வரை காணமுடிகின்றது. நாஜிகள் இரண்டாவது உலக யுத்தத்தின்போது பிரான்சை ஆக்ரமித்த சூழலில், தலை மறைவு வாழ்க்கை மேற்கொண்டு அவர்களுக்கெதிராக இயங்கிய படைப்பாளிகளுள் ஒருவர். பின்னர் பிரெஞ்சு வானொமியிற் பணியாற்றத் தொடங்கி, பிரெஞ்சு தேசிய வானொலியை இசை இலக்கியம் என பேசவைத்த கலை இலக்கிய அபிமானி.

    ஐம்பதுகளில் நவீன நாடகங்களின் பரிசோதனைகள் செய்யப்பட்ட காலம். மேல்தட்டு மக்களின் மரபுவழி நாடக ரசனைகளுக்கு மாறாக, சாமனிய மக்களுக்கென நாடகங்கள் எழுதப்பட்டன. மேடையேற்றபட்டன. ‘மற்றவர்கள் சொல்லாதது, மற்றவிடங்களில் மேடையேறாதது ‘ (ON VEUT FAIRE CHEZ NOUS CE QU ‘ ON PEUT PAS FAIRE AILLEURS)என முன் அறிவிப்போடு மேடையேற்றப்பட்ட ‘புதிய நாடகவியலாலர்கள் ‘ வரிசையில் இவரது நாடகங்கள் அமைந்தன. நல்லதோ கெட்டதோ பார்வையாளர்களுக்கு அவற்றுள் ஆச்சரியங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு முறையும் ‘அட இன்னும் என்ன சொல்லப்போகின்றார்கள் ? (QU ‘ EST-CE QU ‘ ILS ONT ENCORE INVENTE ?) எனக் கேள்விப் பசியோடு வந்தவர்களுக்குச் சுடச் சுடப் பதில்கள்பரிமாறபட்டன. ஐம்பதுகளில் எழுதபட்ட இவரது குறுநாடகங்களில் வெளிப்படுத்தபட்ட வார்த்தை ஜாலங்களின் வெற்றி அப்போதைய நவீன நாடகவியலாளர்கள் வரிசையில் இவருக்கென தனி இடத்தைக் கொடுத்தது. தார்தியே நாடகமென்பது ‘இழுத்துக் கட்டிய வாத்தியக் கருவியின் நரம்பின் ஓசை ‘ ( PRATIQUE A LA MANIERE D ‘UN CLAVECIN BIEN TEMPERE) என வருணிக்கபடுகிறது. அவரது நாடகங்கள் உணர்வு மற்றும் வடிவங்களின் ஆய்வுக்கூடம். அவ்வாய்வுகூடத்தில், மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான மரபுவழி நாடகங்களில் சொல்லப்பட்ட, நகைச்சுவை என அறியபட்ட அபத்தங்களுக்கு முடிவுகட்டபட்டன. ‘தர்தியே ‘ வின் நாடகங்கள் சமூகங்களின் அவலங்களை வார்த்தை அலங்காரங்களில் கிண்டல் செய்தன. இவரது குறுநாடகங்கள் அனைத்துமே (உ.ம் ‘அடுத்தவருக்கான வார்த்தை ‘ (un mot pour un autre), ‘சொல்லி.. முடித்துவிடு. ‘.( Finissez vos phrases), சமூக அக்கறை கொண்டவை.. எளிமைக்காகவும், சொல்லப்பட்ட செய்திகளுக்காகவும் பலமுறை மேடையேற்றபட்டவை.

    இவரது நாடக உலக வெற்றிகள் நன்கு அறியபட்டபோதும், உரைநடை உலகிலும் நாற்பதுகளிலிருந்தே அறியப்பட்டவர். சொற்களின் ஆற்றலை உணர்ந்து, உரிய இடத்தில் கையாளும் திறன் கொண்ட சொலல் வல்லான். ஒரு சொல்லுக்கு ‘அகர முதலிகள் ‘ எழுத்து வடிவில் கொடுக்கும் புரிதலைவிட அவரது எழுத்தோவியங்களான உரைநடைகள், கவிதைகளில் கிடைக்கும் புரிதலில் தெளிவு அதிகம். ஒருவேளை அவை உள்ளடக்கத்தைவிட வடிவில் காட்டியுள்ள அக்கறையா ? (PLUTOT VERS L ‘ASPECT PHYSIQUE QUE L ‘ ASPECT INTELLECTUEL) என்பது தெளிவாக்கிக் கொள்ளவேண்டிய கேள்வி. இச்சிறப்பம்சங்களால் அவரது கவிதைகள் எல்லாதரப்பு மக்களாலும் அறியப்பட்டு தொடர்ந்து பலபதிப்புகள் இன்றளவும் வந்தவண்னமுள்ளன. அவரது எளிமையான பெரும்பாலான கவிதைகளில், முகமற்ற பெயரற்ற எதிரிகளிடம் நமது சித்தர்களுக்குண்டான பயம் வெளிப்படுகிறது. அவரது கவிதைகளில் ‘ஒரு புதுவெள்ள வேகம் ‘. எதிர்ப்படுகின்ற எவற்றையும் வேறோடு பிடுங்கி எறிகின்ற ஆற்றல். பாரதிதாசனின் ‘இயற்கைத் தேவியின் கோபம் ‘ இயல்பாய் பொருந்துகின்றது. கூடுதலாக தனது படைப்புகளில் சொற்களுக்கு மெட்டி அணிவித்து ‘தர்தியெ ‘ எழுத்தினை எல்லா வடிவத்திலும் பிரசவித்து மகிழ்ந்தவர், மகிழவைத்தவர். கட்டுரைகளானாலும் சரி, கவிதைகளானாலும் ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றை புதியதாய் இணைத்து விடுகிறார். அங்கே ‘சொல் புதிது, பொருள் புதிது ‘ என்பதோடு ‘வடிவமும் புதிது ‘ என்பதனை அவரது எழுத்துக்குரிய அடைமொழிகளாக கொள்ளவேண்டும். Vers Libres (Free Verse) வகையைச் சார்ந்த அவரது அனைத்துக் கவிதைகளுமே வித்தியாசமானவை. அவற்றுள் ‘வலது கைகளுக்கான கவிதைகள் ‘ தலைப்பில் வரும் ‘மேசைமேல் இருத்திய கருவிகள் ‘ (OUTILS POSES SUR UNE TABLE) ‘பிக்காசோ ‘ வின் ஓவியத்துடன் ஒப்பிடப்படுகின்றது. இங்கே படைப்புக்கலைஞனின் கருவிகளாக வினைச்சொல், உரிச்சொல் பெயர்ச்சொல்…. ஆகியவை உருவகமாகக் கொள்ளப்படுகின்றன. இவனது பணிக்கூடம் காகிதம். இறுதியில் படைத்து முடித்த படைப்பாளி கால வெள்ளத்தில் கரைந்து போகலாம், ஆனால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அவனது படைப்பு என்றுமழியாமல் சிறக்கும். மரணமிலா பெருவாழ்வு அதற்கு விதியாகிப்போகுமென, படைப்பின் பெருமையை அழுந்தச் சொல்கிறார்.

    நாடகங்கள், கட்டுரைகளைவிட கவிதைகளே ‘தர்தியெ ‘ வின் இலக்கியத் தகுதியை நிர்ணயித்தன. 1972ல் பிரெஞ்சு அகாதெமி தனது மிகப்பெரிய பரிசை(GRAND PRIX DE L ‘ACADEMIE FRANCAISE) 1976ல் பிரெஞ்சு விமர்சகர்களின் பரிசு(PRIX DE LA CRITIQUE). 1993ல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பரிசு(GRAND PRIX NATIONAL DES LETTRES) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை.

    இவரது படைப்புகளில் நன்கு அறியப்பட்டவை: 1951ல் ‘ ஐயா.. ஐயா.. ‘ (MONSIEUR.. MONSIEUR) 1955 ல் ‘அறையின் நாடகம் ‘(THEATRE DE CHAMBRE, 1978ல் பேராசிரியர் ஃப்ர்பெல் (PROFESSEUR FRPPEL) 1991ல் எழுத்தின் மூலம் இன்பம் துய்க்கிறேன்: முன்பொருமுறை, இரண்டு முறை, மூன்றுமுறை (JE M ‘AMUSE EN RIMANT: IL ETAIT UNE FOIS, DEUX FOIS, TROIS FOIS)

    ‘ஏதுமற்ற சிறுபிள்ளை ‘ ( LA MOME NEANT)

    ஏதேனும் ‘அவன் ‘ சொன்னானா ?

    ‘அவன் ‘ ஏதும் சொல்லவில்லை.

    ஏதேனும் ‘அவன் ‘ செய்தானா ?

    ‘அவன் ‘ ஏதும் செய்யவில்லை

    எது பற்றியது ? ‘அவன் ‘ சிந்தனை ?

    அவனுக்கேது சிந்தனை

    ஏன் ‘அவன் ‘ ஏதும் சொல்வதில்லை ?

    ஏன் ‘அவன் ‘ ஏதும் செய்வதில்லை ?

    ஏன் ‘அவன் ‘ எதுபற்றியும் சிந்திப்பதில்லை ?

    ‘அவன் ‘ ஏதுமற்ற சிறுபிள்ளை. -ழான் தர்தியெ (Jean Tardieu)

    ———————————————–

    Na.Krishna@wanadoo.fr

    திண்ணை பக்கங்களில் பிரெஞ்சிலக்கியம் பற்றி நாகரத்தினம் கிருஷ்ணா

  • அல்போன்ஸ் தெ லமர்த்தின்

  • மிலன் குந்தெரா

  • மிஷெல் ஹுல்பெக்

  • பஸ்கால் கிஞ்ஞார்

    Series Navigation

  • நாகரத்தினம் கிருஷ்ணா

    நாகரத்தினம் கிருஷ்ணா