இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


வானகம் முட்டும் இமயமால் வரையும்,

ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்,

காத்திடும் நாடு! கங்கையும், சிந்துவும்

தூத்திரை யமுனையும், சுனைகளும், புனல்களும்

இன்னரும் பொழில்களும், இணையிலா வளங்களும்

உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!

பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க

மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு! …(சத்ரபதி சிவாஜி)

மகாகவி பாரதியார்

‘நீங்கள் இன்னல்பட வேண்டிய நிர்பந்தம் வந்தால், அந்த இன்னலை தேச நலனுக்காக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ‘

பண்டிட் ஜவஹர்லால் நேரு. (ஹிராகுட் அணை அமைப்பை முன்னிட்டு இடப்பெயர்ச்சி செய்யப்படும் கிராம மக்களுக்கு ஆற்றிய உரை, ஒரிஸா 1948)

‘நதிக்கு மேல் நதி, வனத்துக்குப் பிறகு வனம், மலைக்குப் பின் மலை, ஏவுகணைக்கு அடுத்து ஓர் ஏவுகணை, அணுகுண்டு சோதித்து மற்றுமோர் அணுகுண்டு சோதனை -இவ்விதம் நாமறிவிக்கப் படாமலே, நமது ஆட்சியாளரால் ஒவ்வொரு நாளும் நாம் அடிக்கப்படுகிறோம்!

அணுகுண்டுகள் இராணுவத்துக்கு எவ்விதம் ஆயுதக் கிடங்குபோல் உதவியாக உள்ளனவோ, அதுபோல் பேரணைகள் தேசீய வளர்ச்சிக்கு உதவுபவை! அவை இரண்டுமே ஏராளமான மக்களுக்குப் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் (Weapons of Mass Destruction)! அவை இரண்டுமே ஆட்சியாளர் தமது குடிமக்களை ஆட்டி அடக்கப் பயன்படும் ஆயுதங்கள்! மக்களினம் வாழப் பிழைத்துக் கொள்ளும் சுய உணர்ச்சியை உரித்தகற்றும், மாந்தரின் சூட்சம அறிவுத்திறத்தைச் சுட்டிக் காட்டும் வரலாற்று மைல் கல்லாக வார்க்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் சின்னங்கள், அவை இரண்டும்! தம்மீதே புகுத்திக் கொண்ட மனிதரின் சீர்கெட்ட நாகரீகக் காட்சிகள் அவை இரண்டும்! அங்குல அங்குலமாக முன்னேறி, ஒவ்வோர் அணுகுண்டாக, ஒவ்வோர் அணையாக தகுதிக்கு ஏற்ப குறித்த முறைகளைப் பின்பற்றி நிறுத்தப் போரிடுவோம்! நர்மதா பள்ளத்தாக்கில், நமது முதல் போர் துவங்கட்டும்! ‘

அருந்ததி ராய் (ஏப்ரல் 1999)

‘இந்திய மக்களுக்கு நீர்வளமும், நீர்ப்பாசான வசதிகளையும் 3600 பேரணைகளின் நீர்த்தேக்கங்கள் அல்லும் பகலும் அளித்து வருகின்றன. அவற்றில் 3300 அணைகள் பாரதம் விடுதலை அடைந்த பிறகு அமைக்கப் பட்டவை. 1999 ஆண்டு தகவல்படி இன்னும் 1000 அணைகள் கட்டப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. அணைகள் நலனளித்த காலங்கள் போய்விட்டன! பலன் தருவதை விடப் பெரும் பாதகம் கொடுப்பவை அணைகள்! அணைகள் உலக வழக்கற்றுப் போனவை [Obsolete]! அணைகள் குடியரசுக்கு எதிரானவை! அரசாங்க அதிகார வர்க்கத்தின் ஆதிக்கச் சாதனங்கள் அவை! விவசாயிகளின் அறிவை அவரிடமிருந்து பறிக்கும், உத்திரவாதச் சுரண்டல் கருவிகள் அவை! ஏழை எளியவரின் நிலபுலம், நீர்வளம், இல்லங்கள், நீர்ப்பாசான வசதிகள் யாவற்றையும் பறித்து, பணக்கார வர்க்கத்துக்குத் தாரை வார்க்கும் தானங்கள் அவை! அணைகளின் நீர்த்தேக்கங்கள் ஏராளமான மக்களின் இல்லங்களை இழக்கச் செய்து, அவர்களை ஏழையாக்கி, இடப்பெயர்ச்சிக் குழியில் தள்ளுகின்றன! நீர்வள, நிலவள உயிர் இனங்களுக்கு நாய்க்குடிலாக ஆக்கிவிட்டன அணைகள்! பேரணைகள் பூகோளத்தைச் சீர்கேடாக்குபவை! பெரும் வெள்ளம், நீர்க்கிடை முடக்கம் (Water-logging), நிலம் நோக்கி உப்புறுஞ்சல் கேடு (Salinity), நோய் பெருக்கம் ஆகியவை உண்டாகக் காரணமாகின்றன! பேரணைகளுக்கும், நிலநடுக்கங்களுக்கும் நேரடித் தொடர்புகள் உள்ளன வென்று அழுத்தமான சான்றுகள் மேலோங்கி வருகின்றன! ‘

அருந்ததி ராய் (ஏப்ரல் 1999)

பேரணைகள் அணு ஆயுதங்களைப் போன்று பேரழிவு தருபவை என்று ஆத்திரமாக அருந்ததி ராய் அம்மையார் அறிவித்து வருவது, பொருத்தமற்ற, அர்த்தமற்ற ஓர் உதாரணம்! பல்லாண்டு காலம் பாதகம் விளைவிக்கும் கதிரியக்கம் போன்ற அழிவுப் பொழிவுகள் பேரணை விபத்துகளில் விளையா! அணைகள் நீக்கப்பட்டால், அணைகள் நிறுவப்படா விட்டால், நீர்த்தேக்கங்கள் இல்லை! குடிநீர் பற்றாக்குறையும், நீர்ப்பாசான வசதி இன்மையும் நாட்டில் தாண்டவம் ஆடும்! ‘அணைகள் நவீன இந்தியாவின் கோயில்கள் ‘ என்று தொழுதவர், நம்மைத் தொழ வைத்தவர், பண்டிட் நேரு! மக்கள் எண்ணிக்கை பேரளவில் பெருகிவரும் பாரத தேசத்தில், சென்னை நகரம் போன்று பல பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை, அல்லது நீர்ப்பஞ்சம் நேர்ந்து மாந்தர் அவதிப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை! நாட்டின் நதியிணைப்புகளுக்கும், கால்வாய் அமைப்புகளுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளப் பெருக்குக் கட்டுப்பாடுகளுக்கும் அணைகள், நீர்த் தேக்கங்கள் மிக மிக அவசியமானவை. ஒரு பில்லியன் ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் 200 மில்லியன் நபர்களுக்குப் போதிய சுத்தமான குடிநீர் இன்மையும், 600 மில்லியன் நபருக்கு அடிப்படைச் சுகாதார வசதி [Basic Sanitation] இல்லாமையும் பெரும் நோய் நொடிகளைக் கொடுத்து வருகின்றன.

இந்த யந்திர யுகத்தில் மாந்தருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும், மனிதர் படைக்கின்ற ஆகாய விமானங்களோ, இரயில் வண்டிகளோ, மோட்டார் வாகனங்களோ, விண்வெளி அல்லது கடல்வழிக் கப்பல்களோ, அணுமின்சக்தி நிலையங்களோ, பேரணைகளோ, நீர்த்தேக்கங்களோ உலக நாடுகளில் எங்கேயும் கிடையா! யந்திர யுகச் சாதனங்கள், பொறிநுணுக்கச் சாதனைகள் அனைத்திலும் ஓரளவு அபாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன! பேரளவுச் சாதனைகளை, யந்திரச் சாதனங்களை ஓரளவு அபாயங்களுக்காக அஞ்சி, அருந்ததி ராய் அம்மையார் போல் முழுமூச்சாக எதிர்ப்பதோ, முற்றிலும் புறக்கணிப்பதோ அல்லது முழுவதும் மூடுவதோ நாகரீக யுகத்தில் அறிவுள்ள புரட்சியாகாது! விஞ்ஞான யுகத்தில் கட்டமைப்புச் சீர்கேடுகள், பொறிச் சாதனைகளின் கோளாறுகள், மனிதத் தவறுகள் ஆகியவற்றை நீக்கவோ அல்லது குறைக்கவோ சீரான நெறிமுறைக் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பு முறைகளும் நிறைய நம்மிடம் இருக்கின்றன! அவற்றை மீறினால் தண்டனைகள் அளிக்க நீதி நெறிகளும், சட்டங்களும், நீதி மன்றங்களும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் இருக்கின்றன!

கட்டுரை ஆசிரியர்

டெஹ்ரி அணைத்திட்டக் கட்டமைப்பில் பிரச்சனைகள் (மே 2003)

பாகீரதி நதியில் 260 மீடர் (860 அடி) உயரத்தில் கட்டப்பட்ட டெஹ்ரி அணை, ஆசியாவிலே உயர்ச்சி மிக்க அணையாகக் கருதப்படுகிறது! அணை முடிந்ததும், அதன் நீர்வெள்ளம் முக்கியமாக உத்திரப் பிரதேசத்தின் நீர்ப்பாசானத்துக்கும், 2400 மெகாவாட் மின்சக்தி உற்பத்திக்கும் பயன்படும். 1998 ஆண்டு வரை டெஹ்ரி திட்டம் 1,650 கோடி ரூபாயை விழுங்கியுள்ளது! முதற்கட்ட அணையுடன் 1000 மெகாவாட் நீர்மின்சாரத் திட்டத்திற்கு மதிப்பீடு ரூ. 4,700 கோடி [+திட்ட முடிவு வரை வட்டி ரூ. 750 கோடி]. இரண்டாம் கட்ட அணை 30 கி.மீ. (20 மைல்) நதிக் கீழோட்டத்தில் கோடாஸ்வர் என்னும் இடத்தில் ரூ. 1,200 கோடி [+வட்டி] மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தது. முதற்கட்டச் செலவை மத்திய அரசும், உத்திரப் பிரதேச மாநிலமும், முறையே 60%-40% பங்கீட்டில் பகிர்ந்து கொண்டன. மேலும் ரஷ்ய நாடு இந்தியாவுக்கு ரூ. 540 கோடி கடன் கொடுத்தது. ஆண்டு தோறும் மதிப்பீடு நாணயச் செறிவு (Cost Escalation) ஏறும் வீதம்: 10%. நாட்கள் வீணடிக்கப் படாமல் திட்டம் 2002 ஆண்டு இறுதியில் முடிவு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டது.

1978 இல் அடித்தளம் இடப்பட்ட திட்டம், நிறுவன காலங்களில் தாமதமாகி அரசாங்கம் பெரும் நிதி விரையத்தில் பாதிக்கப் பட்டது! ரூ 195 கோடி (1978) மதிப்பீடில் துவங்கிய திட்டம், இறுதியில் ரூ 6,000 கோடியாக (2003) விசுவரூபம் எடுத்தது! 2001 ஏப்ரலில் திட்ட எதிர்ப்பாளிகள் 50 பேர் (கிராம மக்கள்) கலகம் விளைவித்து மூன்று வாரங்கள் வேலை நிறுத்தமானது! தனியார் துறைக் கட்டமைப்பு நிறுவகங்கள் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழந்ததாக அறியப்படுகிறது! அரசாங்கம் மட்டும் மூன்று வாரப்பணி முடக்கத்துக்கு ரூ 100 கோடி இழந்ததாக அறியப்படுகிறது! நிதியிழப்புடன் திட்ட முடிவும் காலம் கடந்து, 2004 ஆண்டுக்குப் பிறகே மின்சக்தி பரிமாறப்படும் என்ற தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது!

நிலநடுக்க வரையறைப் பாதுகாப்பு நெறிகளில் முரண்பாடுகள்

டெஹ்ரி அணைத் திட்டத்தின் தள அமைப்பு, மத்திய இமாலய நிலநடுக்க இடைத்தளத்தில் [Central Himalayan Seismic Gap] 1961 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப் பட்டது! 1991 இல் இமாலயப் பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்ப நடுக்க மையத்துக்கு 45 கி.மீ. (27 மைல்) தூரத்தில் டெஹ்ரி அணையின் அமைப்புத் தளம் சிக்கிக் கொண்டது! 1972 இல் ஒப்புக் கொள்ளப்பட்ட டெஹ்ரி திட்ட அணை, 0.25(g) உச்சத் தள அசைவைத் [Peak Ground Acceleration (PGA)] தாங்கிக் கொள்ள டிசைன் செய்யப்பட்டது!

தற்போதைய கணிப்புப்படிப் பூகம்பம் 8 ரிக்டர் அளவில் ஆடினால், நிலநடுக்கத் தள அசைவு (PGA) 1.0(g) ஆகலாம் என்றும், அதனால் அணை விரிசல் அடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது! அவ்விதம் பூகம்பத்தால் பிளவு ஏற்பட்டால், அணை தேக்கியிருக்கும் 700 பில்லியன் காலன் நீர்வெள்ளம், அணை உடைப்பில் பாய்ந்தோடி, ஒரு மணி நேரத்தில் புனித இடங்களான ரிஷிகேஷ், ஹரிதுவார் இரண்டையும் மூழ்க்கிவிடலாம்!

டெஹ்ரி அணையின் நிலநடுக்க மாடல் ‘ஈரச்சு அசைவுக் ‘ [Two-dimensional Model (X,Y)] கணக்கீட்டில் பூகம்ப ஆய்வுக் கூடங்களில் சோதிக்கப்பட்டது! ஆனால் விஞ்ஞான நிபுணர்கள் ‘மூவச்சு புறங்கோட்டு அசைவு ‘ ஆய்வு முறையில் [Three-dimensional Non-linear Analysis] அணை மாடல் ஆராயப்பட்டு, அணைப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு உறுதியாக மீளாய்வு செய்யப்பட வேண்டுமென, திட்ட அதிகாரிகளை வற்புறுத்தினர். ஆனால் அணையை டிசைன் செய்த வல்லுநர்கள் கணக்கிடும் போது, ஈரச்சு அசைவு ஆய்வுமுறை அணைக்கு ஏற்படும் உச்சப் பாதிப்புகளை எடுத்துக் கொள்வதால், மூவச்சு அசைவு முறை ஆய்வு அளிக்கும் விளைவுகளை விடச் செம்மையான விடை தரும் என்று அறியப்பட்டது. ஆதலால் சிக்கலான மூவச்சு ஆய்வு முறை முதலில் கைவிடப் பட்டது!

டெஹ்ரி மாந்தர் இடப்பெயர்ச்சி நிதியளிப்பு விதிகளில் குறைபாடுகள்

இமாலயப் பிரதேசத்தில் பல எதிர்ப்புகளைக் கடந்து, கட்டி முடிந்த டெஹ்ரி அணையில் இடப்பெயர்ச்சி நிதி அளிப்புத் தகராறுகள் எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குப் பல இடையூறுகளைத் தந்தன. 200 ஆண்டுகளாக மலர்ந்து வந்த பண்டைய டெஹ்ரி கிராமம் இன்னும் சில ஆண்டுகளுக்குள் நீர்த்தேக்க வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கி வரலாற்றுக் கதை ஆகிவிடும்! சுமார் 10,000 கிராமக் குடிமக்கள் தாம் வாழ்ந்த வீடுகளை இழக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது! அணையை முன்னிட்டோ அல்லது நிலத்தை முன்னிட்டோ சுமார் 100,000 பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்று அறியப்பட்டது! மக்கள் பட்ட பெரு வேதனை என்ன வென்றால், இடப்பெயர்ச்சி நிதிக்கொடை அளிப்பு, அதைப் பெற்றுக் கொள்ளும் விதி முறைகள் அறிவிப்பு எதுவுமின்றி, அணைகட்டும் அதிகார வர்க்கம் பாகீரதி ஆற்றின் நீரோட்டத்தை நிறுத்தி அவர்களைப் பயமுறுத்தியது!

டெஹ்ரி அணையால் பாகீரதி நதிப் பள்ளத்தாக்கில் உள்ள திகோலி கிராமத் தளத்தில் 12% பாதிக்கப் பட்டது! கிராமத்தின் 40% தளம் மனேரி பாலி இரண்டாம் கட்டத் திட்டத்தால் பாதிப்பானது! பொதுப் பணித்துறை (PWD) வீதிகள் போட்டதில் 12% தளம் ஆக்கிரமிக்கப் பட்டது! கிராமத்தின் 64% தளப்பகுதியை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டதுடன், 20 இல்லங்களின் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப் பட்டன! அஸேனா கிராமத்தில் இடப்பெயர்ச்சி அட்டவணையில் இருந்த நபர்கள் அரசாங்க வர்க்கத்தால் பயமுறுத்தப் பட்டனர்! அரசாங்கம் திட்ட மிட்டபடி இடப்பெயர்ச்சி நெறிகள் கையாளப்பட வில்லை! பலர் கவர்ச்சி மொழிவலையில் சிக்கி தூண்டியில் மாட்டிக் கொண்டனர்! எதிர்ப்பு அணிவகுப்பு மாந்தர்களின் கோரிக்கை நிரலில் பின்வரும் கேள்விகள் எழுதப்பட்டிருந்தன.

11. இடப்பெயர்ச்சில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று புதிய இல்லம் கட்டிக் கொள்ள உதவிக்கடன் 100,000 ரூபாய் அளிக்க மத்திய அரசாங்கம் அனுமதி தந்தாலும், மாநில அரசு 60,000 ரூபாயே அளித்தது! மாநிலம் ஏன் 40,000 ரூபாயைக் குறைத்தது என்னும் கேள்வி மக்களிடையே எழுந்தது!

2. இல்லம் கட்டுதவி நிதிவரும் முன்பே, வீடுகளைத் தகர்க்கும் விதிகளை அறிவித்ததின் முக்கியத்துவம் என்ன ? நகர மாந்தர்களுக்கு அளிக்கப்பட்ட இடப்பெயர்ச்சி நெறிகளைக் கடைப்பிடிக்காது, கிராம மக்களுக்கு ஆடு மாடுகள் வசிக்க தகரக் கொட்டங்கள் கூடத் தரப்பட வில்லை!

3. மலைக் காலங்களில் நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ள, நீர்த்தேக்கத்தின் விளிம்பில் இருக்கும் கோலா, ஜல்வால்கெளன், கங்சாலி ஆகிய மூன்று கிராமங்களின் தலைவிதியை அரசாங்கம் இன்னும் தீர்மானம் செய்யவில்லை! அணையின் விளிம்புத் தளங்களில் உள்ள வீடுகளின் நிச்சயமற்ற நிலை எத்தனை ஆண்டு காலம் நீடிக்கும் ? 2002 ஜூலையில் நீர்த்தேக்க விளிம்புப் பகுதியில் பூதள அளவீடுகள் [Geological Survey] எடுக்கப்பட்டாலும், இதுவரை ஏனோ மக்களுக்கு வெளியிடப்பட வில்லை.

4. அணை கட்டுவதால் பிரிந்துபோன பகுதிகளை இணைப்பதற்குத் திட்டமிடப்பட்ட சியான்சு பாலம் ஒத்திவைக்கப் பட்டதன் காரணங்கள் இதுவரை [டிசம்பர் 2003] மக்களுக்கு அறிவிக்கப் படவில்லை!

5. நீர்மின்சார நிலையம் உற்பத்தி செய்யும் ஆற்றலை [2400 மெகாவாட்] உத்திராஞ்சல், உத்தரப் பிரதேச மாநிலங்கள் இரண்டும் பகிர்ந்து கொள்வதாக ஒப்பந்தம் ஆகியிருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட டெஹ்ரி மாவட்ட மக்களுக்கு இனாமாக அளிக்கும் மின்சார ஆற்றல் எவ்வளவு என்று கணிக்கப் படாமலே இருந்தது!

6. புது இடப்பெயர்ச்சி மக்கள் அருந்துவதற்குக் குடிநீரும், வேளாண்மைக்கு நீர்ப்பாசான வெள்ளமும் எவ்வளவு என்று அறிவிக்கப் படவில்லை! அதற்குரிய திட்டமும் இருப்பதாக மக்கள் காட்டப் படவில்லை!

7. உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும், டெல்லி நகருக்கும் எங்கே, எப்போது, எவ்விதம் குடிநீரும், நீர்ப்பாசான வெள்ளமும் பரிமாறப்படப் போகிறது ? அவற்றுக்காக நிறுவகமாகும் கால்வாய்களும், பைப்புகளும், எவ்விடங்களைத் தோண்டி அமைக்கப்பட விருக்கின்றன ? அணை அடிவார இல்லங்களில் வாழுகின்ற மக்களைப் பாதித்து, இடப்பெயர்ச்சி முறைகள் வில்லங்கங்களை விளைவிக்கப் போகின்றனவா ?

இவ்வினாக்கள் யாவும் 2003 ஏப்ரல் 12 ஆம் தேதி டெஹ்ரி மாந்தர் எழுப்பியவை. இவற்றில் எத்தனை வினாக்களுக்குப் பதில் கிடைத்தது அல்லது பலாபலன் ஏற்பட்டது என்று தெரியவில்லை.

டெஹ்ரி பகுதியில் 109 கிராமங்கள், கோடாஸ்வர் பகுதியில் 16 கிராமங்கள் அணையால் நேரிடையாவோ அன்றி மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டன. டெஹ்ரியில் 35 கிராமங்கள், கோடாஸ்வரில் 2 கிராமங்கள் அணைநீர் தேக்கத்தில் முற்றிலும் மூழ்கிப் போகும்! முதற்கட்ட இடப்பெயர்ச்சிச் சீரமைப்புகள் [Reloaction, Rehabilitation] ஏற்படுத்தப்பட்டு, 98% குடும்பத்தினர் ஈடுநிதி பெற்று, புது கிராமத்தில் குடியேறியதாக அறியப் படுகிறது! இரண்டாம் கட்ட இடப்பெயர்ச்சிச் சீரமைப்பில் 2845 இல் 435 குடும்பங்கள் இடம் பெற்றனர். மீதிக் குடும்பங்களுக்கு டேஹ்ரா டூன், ஹரிதுவார் நகர்களில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன. 2001 ஆண்டுக்குப் பிறகும் தீர்க்கப்படாத மனிதப் பிரச்சனைகள் நிழல்கள் போல் அடுத்தும் தொடர்ந்தன!

நர்மதா நதியில் எதிர்ப்புக்கு உட்பட்ட சர்தார் ஸரோவர் அணை

இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மட்டுமே பெருநதிகளில் பிரித்துக் கட்டிய பல கால்வாய்கள் மூலமாக நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டு, குடிநீராகவோ அல்லது நீர்ப்பாசான நிலவளத்துக்கோ பயன்பட்டு வருகிறது. அருந்ததி ராய் அம்மையார் அமைக்கக் கூடாதென்று எதிர்த்துப் போரிட்ட முதல் அணை, சர்தார் ஸரோவர் நீர்தேக்கம் நர்மதா நதி மீதுதான் கட்டப் பட்டுள்ளது. 1961 இல் பண்டிட் நேரு அடிக்காலிட்ட சர்தார் ஸரோவர் அணை 49.8 மீடர் [166 அடி] உயரமுள்ளது! அதைவிட ஐந்து மடங்கு உயரம் [860 அடி] உள்ளது இமாலயத்தின் பாகீரதி நதியில் கட்டப்பட்ட டெஹ்ரி அணை! பல இடங்களில் 41 கிளை நதிகள் இணையும் நர்மதா பெருநதியில் 30 பெரிய அணைகளும், 135 இடைத்தர அணைகளும், மற்ற சிற்றணைகளும், அவை நீரனுப்பும் அநேக நீர்த்தேக்கங்களும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன.

நர்மதா நதிவளம் ஊட்டும் வேளாண்மைப் பரப்பு மிகவும் பெரியது! நர்மதா நதியோட்டம் சுமார் 25 மில்லியன் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது! 1985 இல் 450 மில்லியன் டாலர் நிதிக்கடன் சர்தார் ஸரோவர் அணைத் திட்டத்துக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் சூழ்மண்டலக் காப்பு அமைச்சகத்தின் அனுமதி, 1987 இல் கிடைத்தது. குஜராத் மாநிலத்தின் ஜனத்தொகை 50 மில்லியன்! அதில் 56.7% பழங்குடி வாசிகள் சர்தார் ஸரோவர் அணை அமைப்பால் இடப்பெயர்ச்சி ஆயினர்! பின்தங்கிய வகுப்பினர் 60% வேறு இடங்களுக்குத் தள்ளப்பட்டனர்! அணையிலிருந்து குடிநீர் அளிக்கப்படும் மக்கள் தொகை 1992 இல் 40 மில்லியன் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் மெய்யாகக் குடிநீர் கிடைத்தது 1993 ஆண்டுத் தகவல்படி 25 மில்லியன் மக்களுக்கு மட்டுமே! குடிநீர் அனுப்பப்படும் கிராமங்கள் 8215 என்று 1991 இல் அறிவிக்கப் பட்டாலும், அவ்வாண்டுத் தகவல்படி 236 கிராமங்கள் மட்டுமே பயன் பெற்றன! 1979 இல் இடப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் கிராமக் குடும்பங்கள் 6000 மேல் என்று மதிப்பிடப் பட்டாலும், அந்த எண்ணிக்கை 1987 இல் 12,000 ஆகி, அடுத்து 1991 இல் 27,000 ஆகி, இறுதியில் 1992 இல் 40,000 என்று அரசாங்க அறிவித்தது! 12 வருட ஜனத்தொகைப் பெருக்கம் 6000 எண்ணிக்கையிலிருந்து, 40,000 எண்ணிகை பெருகியதாக எடுத்துக் கொள்ளலாம். 1999 ஆண்டு அறிக்கைப்படி அன்றைய எண்ணிக்கை: 41,500! ஆனால் மெய்யான இடப்பெயர்ச்சி எண்ணிக்கை 85,000 என்று ஓர் உளவு அறிக்கை (NBA) கூறுகிறது!

சர்தார் ஸரோவர் அணைத் திட்டத்தின் நிதிமதிப்பீடு ரூ. 6000 கோடியிலிருந்து, தற்போது ரூ. 20,000 கோடியாக ஏறிவிட்டது என்று அதிகாரப் பூர்வமாகத் தெரிந்தாலும், உளவு அறிக்கை (NBA) ரூ. 40,000 கோடி வரை போகலாம் என்று அனுமானிக்கிறது! சுமார் 70,000 மக்கள் 101 கிராமங்களிலிருந்து இடப்பெயர்ச்சி அடைவார் என்று அறிவிக்கப் பட்டது! 162 கிராமங்கள் இருக்குமிடம் தெரியாமல் அணைத் தேக்கத்தின் அடிவயிற்றில் மூழ்கிப் போகும்! மெய்யாக இடப்பெயர்ச்சி ஆனவர்: 114,000 பேர்! சீரான இடப்பெயர்ச்சி முறைபாடுகள் கையாளப்பட வில்லை என்று அருந்ததி ராய் கூறுகிறார்! போதிய ஈடுநிதி மக்களுக்கு அளிக்கப்பட வில்லை என்றும் குறைபாடு கூறுகிறார்!

கால்வாய்த் திட்டங்கள் கையாளப்படும் பிற்போக்கு முறைகள்

விடுதலை இந்தியா இமயமலை அடிவாரத்தில் திட்டமிடப் பட்ட ஸட்லெஜ்-யமுனா கால்வாய், டெஹ்ரி அணைத்தேக்கம், குஜராத்தின் நர்மதா நதியில் உருவான சர்தார் ஸரோவர் நீர்த்தேக்கம், தென்னாட்டில் ஒரிஸாவின் ஹீராகுட் அணை, ஆந்திரா-சென்னைக்கு இடைப்பட்ட தெலுங்கு-கங்கா கால்வாய் ஆகியவற்றைக் கையாண்ட முறைகள் அனைத்தையும் மீளாய்வு செய்தால், அவை யாவும் ஓர் ஒழுங்கற்ற கலாச்சார வழக்கப் பிற்போக்குப் பண்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன! அதிகார வர்க்க நபர்களான மத்திய அரசாங்க மாந்தரும், மாநில அரசுகளின் மாந்தர்களும் ஒரே அச்சு யந்திரத்தில் உதித்தவ ரானதால் அவர்களுடைய பண்பாட்டு வழக்க நடைகளில் ஒரே மாதிரி ஒற்றுமைப்பாடுகள், வேற்றுமைப்பாடுகள் காணப்படுவதில் வியப்பில்லை!

ஒற்றுமைப்பாடுகள்:

1. திட்ட அமைப்புச் செலவு நிதித்தொகை மதிப்பீடுக்கு மீறி இரு மடங்கு முதல் நான்கு மடங்குக்கும் மேலாக ஏறிக்கொண்டு போவது விதி விலக்கன்று! எல்லாத் திட்டங்களிலும் வழக்க நிகழும் நடப்பான அதிர்ச்சி!

2. ஐந்தாண்டுகளில் முடிய வேண்டிய திட்டம், பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளில் முடிக்கப்படுவது விதி விலக்கன்று! அதுவும் வழக்கமான நிகழ்ச்சியே! திட்டங்கள் ஆண்டாண்டு தோறும், நிதிவளம் பற்றாமல் போய் தேய்பிறை நிலவாக ஒளிமங்கிப் போவது, எதிர்பார்க்க வேண்டிய நிகழ்ச்சி!

3. திட்டப் பொறி நிபுணர்கள் சூழ்மண்டலக் காப்பு, பூதளப் பொலிவிழப்பு, நீர்வள-நிலவள உயிரினப்-பயிரின அழிப்பு [Ecological Damage], நிலநடுக்க வரையறுப்பு போன்ற சிக்கலான அடிப்படைக் கணிப்புகளில் ஆழ்ந்து ஆய்வுகள் செய்யாது, மேலோட்டமாக கணக்கிட்டுத் தவறுகள் நேருவது வழக்கமாக நிகழ்வது! முக்கிய பிரச்சனையான பூகம்ப வரையறைக் கணிப்புகள் குறைந்தது, முப்பெரும் தனி ஆய்வுக் கூடங்களால் உளவு செய்யப்பட வேண்டும்.

4. இடப்பெயர்ச்சியில் பாதிக்கப்படும் மக்கள் தகுதியான ஈடுநிதி பெறாமல் திண்டாடுவது, ஏமாற்றப்படுவது, புறக்கணிக்கப் படுவது போன்றவை தவறாமல் ஏற்படும் பிரச்சனைகளாகும்.

5. அணையின் டிசைன் கணிக்கீடுகள் மீளாய்வு செய்யப்பட்டு, நீருயர்ச்சியால் பிளவு படாமல் உறுதியாக நிலைக்க ‘அணை ஒருமைப்பாடு ‘ [Dam Integrity] ஆழ்ந்து சோதிக்கப்பட வேண்டும்.

அண்டை நாடுகள் உலகில் கைகோர்க்கும் போது பாரத மாநிலங்களுக்குள் பிளவுகளா ?

வட அமெரிக்கக் கண்டத்தில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய முப்பெரும் குடியரசுகள் ஒன்று சேர்ந்து ‘நாஃப்தா ‘ [North American Free trade Association (NAFTA)] என்னும் வர்த்தகக் கூட்டமைப்பை தமக்குள் வைத்துள்ளன. ஐரோப்பாவில் அநேக நாடுகள் இணைந்து வர்த்தக வசதிக்காக ஈரோ [Euro] வென்னும் பொது நாணயத்தை ஏற்படுத்தித் தமக்குள் வணிக விருத்தி செய்து வருகின்றன! ஊமைப்போர் [Cold War] மறைந்து கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் ஒன்றாய்ச் சேர்ந்து, பலமிக்க பண்டைய ஏகபூமி ஜெர்மனியாய் ஆகிவிட்டது! பிரிட்டன் ஆதிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து ஒன்றாகப் போராடி விடுதலை பெற்ற பன்மொழிப் பாரத நாடு, இன்று இரயில் பாதைகளால் இணைக்கப் பட்டிருந்தாலும், நதிப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதில் மாநிலங்களுக்குள் பெரும் எதிர்ப்பிருப்பது வியப்பாக இருக்கிறது!

பேரணைகள் கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள் பெரும்பான்மையாக மனிதர் உண்டாக்குபவை! இடப்பெயர்ச்சி நிதியளிப்புச் சிக்கல்களை உண்டாக்குபவர் அரசாங்க அதிகார வர்க்க அதிகாரிகள்! நதியிணைப்புத் தகராறுகளை, ஐயப்பாடுகளை உற்பத்தி செய்பவரில் பலர் மாநில ஆட்சிக் கலகவாதிகள்! கங்கா நதியையும், பிரமபுத்திராவையும் இணைத்து, தென்னக நதிகளுடன் பிணைப்பது சிக்கலான, சிரமமான, பிரச்சனைகள் மிகுந்த ஓர் இமாலயப் பணி! அப்பெரும் பணியைப் பாரத மாநிலங்கள் ஒன்று கூடி ஒருமைப்பாடு கொண்டு கூட்டாய்வு செய்து, அனைத்தும் தோள் கொடுத்துப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், முன்னேறும் பாரத நாடு பின்தங்கிப் பிற்போக்கு நாடுகளில் ஒன்றாக மூழ்கிப் போகும்!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).

29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]

30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [October 28, 2004] (Part VI)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


ஆற்றினிலே சுனை ஊற்றினிலே, தென்றல்

காற்றினிலே மலைப் பேற்றினிலே,

ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி

இனத்தினிலே உயர்நாடு!

வண்மையிலே உளத் திண்மையிலே

தண்மையிலே மதி நுண்மையிலே

உண்மையிலே தவறாத புலவர்

உணர்வினிலே உயர்நாடு! …. [பாரத நாடு]

மகாகவி பாரதியார்

கங்கை இந்தியாவின் நதி, இந்தியரின் பிரேமை நதி! இந்தியாவின் கனவுகள், நினைவுகள், அச்சங்கள், சாதனை முழக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் யாவும் சுற்றிப் பின்னி யிருக்கும் நதி! பலயுகக் காலங்கள் கடந்த இந்தியக் கலாச்சார, நாகரீகத்தின் சின்னம், கங்கை நதி. எப்போதும் ஓடினாலும், எப்படி மாறினாலும், தப்பாத முறையில் அன்றுபோல் என்றும் இயங்கும் கங்கை நதி!

பண்டிட் ஜவஹர்லால் நேரு.

இந்தியாவின் செழித்த ஜீவநதிகளும், மெலிந்த ஏழை நதிகளும், அவ்விரண்டை இணைக்கும் கால்வாய்களும், அவற்றின் நீர்வளத்தை அனுபவிக்கும் ஆயிரக் கணக்கான மக்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை! அவை தடமிட்டோடும் மாநிலங்களின் அரசாங்க அதிகார வர்க்கத்தாலும் கச்சாக் கழிவுகள் நேராகக் கலக்காதவாறு அல்லும் பகலும் கண்காணிக்கப்பட வேண்டியவை! நீர்வளத்தைச் செம்மையாகப் பராமரிப்பு செய்ய மாநில அரசாங்கக் கட்டுப்பாடுகளும், மக்களின் சமூக ஒத்துழைப்பும் நாகரிகச் சுக வாழ்வுக்கு மிக மிகத் தேவை! மக்களின் சுகாதார வசதிகளுக்குப் பொதுக் கழிப்பறைகளும், கச்சாக் கழிவுகளை வடிகட்ட நீர்ப்பக்குவச் சாலைகளும் [Waste Treatment Plants] மாநிலங்களில் அமைக்கப்பட்டு, அனுதினமும் அவை பராமரிக்கப்பட வேண்டும். நீர்வளத்தைக் காக்கப் பொதுமக்கள், தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகளையும், மீறினால் பெறும் தண்டனைகளையும் செய்தித்தாள், டெலிவிஷன், சினிமா, வெளியறிக்கை ஆகியவற்றின் மூலமாக அரசாங்கம் பறைசாற்ற வேண்டும். பொன்னான காலத்தையும், கோடிக் கணக்கான நாணயத்தையும் செலவழித்துக் கட்டிய கால்வாய்களின் நீர் வெள்ளத்தால் காலராவும், புற்று நோயும், மஞ்சள் காமாலையும், மயக்கமும், வாந்தியும், வயிற்றுப் போக்கும், வயிற்று வலியும், டைபாய்டும், ஹெபடைட்டிசும் மக்களுக்கு வர வேண்டுமா ?

கங்கா நதி குடிநீராக, குளியல் நீராக, நீர்ப்பாசான வளத்துக்காக பல கோடி மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. காசியில் மரணமடைவது புண்ணிய மென்று கருதி இந்தியாவின் மாநிலங்களிலிருந்து இந்து வயோதிகர் பலர், தமது இறுதிக் காலத்தைக் காசி மாநகரில் கடத்திக் காலனை எதிர்நோக்கி யுள்ளார்கள்! காலம் முடிந்து இந்து மானிடர் இறந்த பிறகு, கங்கா கரை ஓரத்தில் அனுதினம் நூற்றுக் கணக்காக உடல்கள் எரிவதும், சரிவர எரியாத அரை வேக்காட்டுச் சடலங்களை நதியில் தூக்கி எறிவதும், செத்த விலங்குகளை ஆற்றில் போட்டு விடுவதும் கடவுளுக்கே பொறுக்காத காட்சிகளாகும்!

கட்டுரை ஆசிரியர்.

புனிதம் அழிந்துவரும் புண்ணிய நதி கங்கை!

கங்கை நதி புனிதமானது, தெய்வீகத் தன்மை யுள்ளது, மூழ்கி எழுந்தால் மோட்சம் அளிப்பது என்னும் மூட நம்பிக்கை இந்துக்களிடம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழிவழியாய்த் தொடர்ந்து வருகிறது! பிரம்மாண்டமான பிரமபுத்திரா நதியும், ஐந்துகிளை சேரும் சிந்து நதியும், இமயத்தில் பிறந்தாலும் கங்கை நதியின் புனிதத்துவம் அவற்றுக்கு ஏனோ கிடைக்க வில்லை! கங்கா நீர் புனிதம் கெடுவதில்லை என்று நம்பிக்கை கொண்டு, சுத்தமாகாத நதி நீரைத் தினமும் குடித்துவரும் பித்தர் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இல்லத்தில் புனித கங்கா நீரைக் கலங்களில் இட்டு, இந்துக்கள் இறை வழிபாட்டில் பயன் படுத்துகிறார்கள். உயிர்போன உடற்கட்டையைக் கங்கா நதி தீரத்தில் எரித்துச் சாம்பலை நீரில் கரைத்து விடுகிறார். சரியாக எரியாமல் அரைகுறையாய்க் கரிந்தபோன மனித உடற் பாகங்களை, நதியில் தூக்கி எறிந்து விடுகிறார்! ஆத்மா பிரிவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு, குற்றுயிர் மாந்தருக்குக் கங்கா நீரை வாயில் ஊற்றி விடுகிறார்.

காசி என்னும் வாரணாசில் மட்டும் கங்கை நதியின் நான்கு மைல் தூர நீட்சியில் அனுதினமும் சுமார் 60,000 பேர் முங்கி எழுவதாக அறியப்படுகிறது! 2001 ஜனவரி 19 தேதியில் நடந்த புனிதக் கும்ப விழாவான, மாகா கும்பமேளாவில் 70 மில்லியன் [7 கோடி] இந்துக்கள் கங்கா நீரில் முங்கிக் குளித்திருக்கிறார்கள்! அவ்விதம் கங்காவில் ஒருமுறை முங்கி எழுந்தால், ஆத்மா சுத்தமாவதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஜனவரி 14 இல் துவங்கி, பிப்ரவரி 21 இல் முடியும் முங்குவிழா என்னும் கும்பமேளா அலகாபாத் அருகில் ஓடும் கங்கா நதியில் 42 நாட்கள் நீடிக்கும். ஆனால் இந்திய மற்றும் அகில தேசச் சூழ்மண்டலக் காப்பாளிகள், ஒரு யுகத்தில் தூயதாக இருந்த புண்ணிய கங்கா, இன்று தீவிரத் துர்மாசுக்கள் சேர்ந்து புனிதம் கெட்டுப் போயுள்ளது என்று இந்துக்களுக்குப் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

உலக ஜனத்தொகையில் சுமார் பத்தில் ஒரு பங்கு (350-500 மில்லியன்) வாழ்ந்து வரும் கங்கா நதி தீரத்தில், காசி மற்றும் பல நகரங்கள் கச்சா மலக்கழிவு நீரை [Raw Sewage] நேரடியாகக் கலந்து வருகின்றன! கங்கா நதி அமெரிக்காவின் சார்ல்ஸ் நதியைப் போல் 1000 மடங்கு துர்மாசுக்கள் படிந்துள்ளது என்று நதிச் சுத்தீகரிப்புக்கு வந்திருந்த மாஸ்ஸெசூசெட்ஸ் முன்னாள் மாநில ஆளுநர் வில்லியம் வெல்டு [Former Governor William Weld] கூறினார். அன்னை கங்கையின் நீர்த்துளி ஒன்று, மனிதனின் பல தலைமுறைப் பாவங்களைக் கழுவும் என்று வில்லியம் வெல்டுவிடம் யாரோ அறிவித்ததாகத் தெரிகிறது! பெனாரஸ் இந்து பலகலைக் கழகத்தின் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியரும், மஹாந்த்ஜி என்னும் வேதீய குருவுமான, டாக்டர் வீர பகத்திர மிஸ்ரா தவறாது தினமும் மூக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டு, வாயை இறுக்கி மூடிக்கொண்டு கங்கா நதியில் முங்கி எழுபவர்! டாக்டர் மிஸ்ரா அமைத்த சங்கத் மோட்ச அறச்சாலை [Sankat Mochan Foundation] உறுப்பினர், கங்கா நதி மாதிரி நீரில் உள்ள மலக்கிருமி அளவுகளைக் காசியில் சோதிக்கும் [Tests for Fecal Coliform Levels] பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த உளவு அளவு நிலை, கங்கா நீர் குளிக்கத் தகுதியானதா அல்லது குடிக்கத் தகுதி யுள்ளதா என்பதை நிர்ணயம் செய்யும். உத்தர் பிரதேச நகர் அபிவிருத்தி அமைச்சர், நான்கு மைல் நீட்சி அலகாபாத் நதிப் பகுதிகள், கும்பமேளா தினங்களில் குளிப்பதற்குத் தகுதி யுள்ளவை என்று உறுதியாகக் கூறினார்.

கங்கா நதியில் கலக்கும் கச்சாக் கழிவுகளை வடிகட்டும் திட்டங்கள்

இமாலய மலைத்தொடர் மையத்தில் பிறக்கும் கங்கை நதி, 25,000 அடி உயரச் சிகரத்தின் கங்கோத்திரி பனிக்களஞ்சியம் [Gangothri Glacier] உருகி பாகீரதி, அலெக்நந்தா ஆறுகளின் இணைப்பாகப் பெருகிப் பால்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல், குன்றாமல் சுமார் 1560 மைல் தூரம் ஓடி வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகிறது. பாகீரதி நதி சுமார் 13,000 அடி உயரத்திலும், அலக்நந்தா 25,646 அடி உயரச் சிகரமான நந்தி தேவிக்குக் கீழாகவும் உற்பத்தியாகின்றன. கங்கா நதி தீரம் 400,000 சதுர மைல் நீர்ப்பாசானம் பரிமாறி உலகத்திலே மிகப்பெரும் செழிப்பான, மக்கள் தொகை அடர்த்தியான பிரதேசமாகக் கருதப் படுகிறது! ஆக்டபஸ் [Octopus] எட்டுவால் கடல்மீன் போன்று கங்கா நதிக்கு யமுனா, கோமதி, ராப்தி, காந்தக், கோசி ஆகிய கிளை நதிகள் வடக்கிலிருந்தும், சாம்பல், சிந்த், பெட்வா, கென், சோன் ஆகிய கிளை நதிகள் தெற்கிலிருந்தும் கங்கை நதியுடன் கலக்கின்றன. இந்தியாவின் மாபெரும் நதிவளப் பெருக்கான கங்கை, தேசத்தின் 25% பகுதிகளுக்கு நீர்ப்பாசான வசதிகளை ஊட்டி 500 மில்லியன் மக்களுக்கு நீரளித்து, வாழ்வளித்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக கங்கா நதி தீரத்தில் தோல்பதனிடுச் சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், நெசவாலைகள், புலால் இறைச்சி அறுக்கும் கசாப்புக் கூடங்கள், வடிகாய்ச்சிச் சாலைகள் [Distilleries] போன்று ஆயிரக் கணக்கான தொழிற்துறைகள் தோன்றி, வடிகட்டப் படாத கச்சாக் கழிவு எச்சங்களை டன் கணக்கில் நதிகளிலும், நதிக் கால்வாய்களிலும் நேரடியாக அனுப்பி வருகின்றன. உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களின் 40 நகரங்கள் கங்கையில் வெளிக்கொட்டும் கச்சாக்கழிவுகள், நதியில் கலப்பதற்கு முன்பு சுத்தீகரிக்கப் படவேண்டும்! 1980 இல் ஆரம்பித்து 1985 இல் முடிந்த, நிதிச்செலவு மிக்க [300 மில்லியன் டாலர் நிதியளிப்பு] ‘கங்கா கழுவியக்கத் திட்டம் ‘ [Ganga Action Plan (GAP)] திறம்பட பின்பற்றப் பட்டாலும், கழிவு வடிகட்டுச் சாலைகள் நகரங்களில் மின்சக்தி வெட்டுகளால் தடைப்பட்டு ஓரளவுதான் இயங்கிப் பலனளித்து வருகின்றன! ஏராளமான மின்சார உடலெரிப்புக் கூடங்கள் [Electric Cremation Rooms] அமைக்கப்பட்டு, கங்கா நதியின் கரையில் உள்ளவைச் சீர்ப்படுத்தப் பட்டன. மின்சார எரிப்பகங்கள் மின்சக்தி முறிவால், சில சமயங்களில் முடங்கிக் கிடக்கும்! இந்தியாவின் வழக்கியல் நிபுணர்கள் பலர், சூழ்மண்டக் காப்பு வழக்கறிஞர் [Environmental Attorney] எம்.சி. மேத்தாவின் தலைமைக் கீழ், கழிவுகள் மிகுந்திடும் கங்கை நதியின் தலைவிதியை மாற்றி, நதிச் செம்மை நிலையை மீட்கச் சவால் விடுத்து சபதம் எடுத்துக் கொண்டனர்! பாரத நாட்டின் உச்சநீதி மன்றம் கச்சாக் கழிவுகளை கங்கா நதியில் கொட்டும் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகளுக்கு அறிக்கை விட்டுக் கழிவுகளைச் சுத்தப்படுத்து அல்லது தொழிற்சாலை இழுத்து மூடு என்று ஆணை யிட்டது!

மத்தியச் சூழ்மண்டலக் காப்புத்துறை அறிக்கை ஒன்று, துர்மாசுக்களின் நிலையைக் குறிக்கும், உயிரின உயிர்வாயுத் தேவை [Biological Oxygen Demand (BOD)] அளவு 50 mg/L (milligram per litre) என்று அறியப்பட்டு யமுனா நதியின் நீர் வெள்ளம், காப்பு அளவுக்கு 17 மடங்கு பெருகியதாகப் பறைசாற்றியது! கங்கா நதி கடக்கும் 1560 மைல் தீரத்தில் வாழும் 400 மில்லியன் [40 கோடி] மக்களில் பலர், புனித நீரில் உள்ள துர்மாசுக்களால் காலரா, புற்றுநோய், வயிற்றுக் கெடுப்பு, டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் ஆகிய நோய்கள் உண்டாகி அல்லல் படுகிறார். கங்கா கழுவியக்கத் திட்டம் (GAP), அடுத்து ஆஸ்வால்டு திட்டம் (Oswald Plan) ஆகிய இரண்டின் மூலம் 15 ஆண்டுகள் கச்சாக் கழிவுகளைக் கங்கா நதி ஓட்டத்தில் குறைப்பதற்குத் தீவிரமாகப் பணியாளிகள் ஈடுபட்டனர். 300 மில்லியன் டாலர் (1500 கோடி ரூபாய்) திட்டப் பணியில் பல வழிகளில் கசிந்த லஞ்சக் கைப்பணம் கணக்கிற்கு வரமால் காணாமல் போனதை, அரசாங்கத் தணிக்கை அறிக்கை [Govt Audit Report] ஒன்று சான்று அளித்துள்ளது!

கங்கா கழுவியக்கத் திட்டத்தில் அமைக்கப்பட்ட 39% மலக்கழிவு வடிப்புச் சாலைகள் சீராக இயங்கி சுத்தீகரித்தன. கங்கா நதியின் 1560 மைல் நெடிய தீரத்தில் இயங்கி வந்த தொழிற்சாலைகளில் பாதிக்கும் கீழானவை வெளிக்கழிவு பக்குவச் சாலைகளைக் [Effluent Treatment Plants] கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் 18% செம்மையாக வேலை செய்யவில்லை! அலஹாபாத் பல்கலைக் கழகத்தின் சூழ்மண்டலக் காப்பு விஞ்ஞானியான அனில் குமார் திவாரி, ‘அலஹாபாத் நகர் அனுதினமும் 250 மில்லியன் லிடர் மலக்கழிவு திரவத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் நகரத்தின் வடிகட்டும் பக்குவச் சாதனங்களின் தகுதி 100 மில்லியன் லிடர் அளவே ‘, என்று கூறுகிறார். துர்மாசுக்களைக் கொண்டுவரும் கங்கா நதி, தலைநகர் டெல்லி, அடுத்து தாஜ் மஹால் காட்சி நகர் ஆக்ரா ஆகியவற்றின் பேரளவு மாசுக் கழிவுகளைத் தூக்கிவரும் யமுனா ஆகிய பெரு நதிகள் இரண்டும் அலஹாபாத்தில்தான் சங்கமம் ஆகின்றன. அலஹாபாத் நகரின் நதி மேலோட்டத்தில் [Upstream River] கான்பூர் நகரின் தோல்பதனிடுச் சாலைகள் புற்றுநோய் உண்டாக்கும் குரோமியத் திரட்சியைப் [Chromium Content] பெருமளவில் கலக்கின்றன!

காசியின் கங்கா நதியில் கலந்துள்ள துர்மாசுக்களின் அளவு, பாதுகாப்பு அளவை விட 3000 மடங்கு பெருகி யிருப்பதாக அறியப்படுகிறது! ஆதலால் மரணத்திற்குப் பிறகு மோட்ச உலகத்தை அடையப் போகும் ஆத்மா, உயிருடன் உள்ளபோது நோயால் தாக்கப்பட்டு துடித்துச் சாக வழி உண்டாகிறது! 1.3 மில்லியன் ஜனத்தொகை யுள்ள காசி நகரும், கங்கா நதியின் 77 வைதீகக் குளியல் கரைகளும், கோடிக் கணக்கான இந்துக்களைத் தேனீக்கள் போல் ஈர்த்து, நகரமும் நதியும் நரக மாக்கப் படுகின்றன! காசியில் மரண மடைவது புண்ணிய மென்று கருதி இந்தியாவின் மாநிலங்களிலிருந்து வயோதிகர் பலர், தமது இறுதிக் காலத்தைக் காசி மாநகரில் கடத்திக் காலனை எதிர்நோக்கி யுள்ளார்கள்! காலம் முடிந்த இந்து மானிடர் இறந்த பிறகு, கங்கா கரை ஓரத்தில் அனுதினம் நூற்றுக் கணக்காக உடல்கள் எரிவதும், சரிவர எரியாத அரை வேக்காட்டுச் சடலங்களை நதியில் தூக்கி எறிவதும், செத்த விலங்குகளை ஆற்றில் போட்டு விடுவதும் கடவுளுக்கே பொறுக்காத காட்சிகளாகும்!

பதினான்கு ஆண்டுகள் சுத்தீகரிப்புப் பணிபுரிந்து, இதுவரை 600 மில்லியன் டாலர் முழுத்தொகை நிதிகரைந்தாலும், கலக்கப்படும் துர்மாசுக்கள் நதியில் ஓரளவு குறைந்தாலும், இந்திய அரசின் முயற்சிகளில் போதாமையும், கழிவு வடிகட்டுப் பொறித்துறையில் குறைபாடுகளும் உள்ளன. தொடர்ந்து மின்சாரப் பரிமாற்றம் இல்லாமல் தடைப்படுவதால், மலக்கழிவு வடிகட்டுச் சாதனங்கள் இடையிடையே முடங்கி ஓய்வெடுத்துக் கொள்கின்றன! திட்ட நிபுணர்கள் கழிவு வெளியேற்றத்தை நதியில் கட்டுப்படுத்தி விட்டோம் என்று வீண் பெருமை அடித்துக் கொண்டாலும், மின்சக்தி தடைப்பட்ட சமயங்களில் வடிகட்டப் படாத கச்சா மலக்கழிவுகள் புனித கங்காவில் ஓடிக் கலந்து மனிதரைப் போல் புண்ணியம் பெற்றுக் கொண்டன!

கங்கா நதியில் நீரோட்டத்தில் கட்டப் போகும் பேரணைகள்

இந்திய அரசாங்கம் கங்கா நதியின் நீர் வெள்ளத்தையும், வேகத்தையும் பல பகுதிகளில் கட்டுப்படுத்த 50 பேரணைகளையும், சிற்றணைகளையும் கட்டுமானம் செய்து, நீரோட்ட அளவைச் சீர்ப்படுத்தவும், நீர் மின்சாரம் எடுக்கவும் திட்ட மிட்டுள்ளது. இவற்றில் மிகப் பெரியது, டெஹ்ரிப் பேரணை! இமாலய மலைப் பிரதேசத்தின் உத்திராஞ்சல் மாநிலத்தில் ஹரித்துவாருக்கு வடக்கே, டேராதூனுக்குக் கிழக்கே பாகீரதி நதியில் டெஹ்ரி அணை கட்டப்பட்டுள்ளது. டெல்லிக்கு வடக்கே 200 மைல் தூரத்தில் உருவாகி வந்துள்ளது டெஹ்ரி அணைத் திட்டம். 2003 செப்டம்பர் முதல் தேதி உச்சநீதி மன்றம் டெஹ்ரி அணைத் திட்டம் சூழ்மண்டல உளவுகளைச் சீராக ஆய்வு செய்யாது தீர்மானமான அமைப்புகளுக்குச் சவால் விட்டது! 2004 ஆகஸ்டு 1-2 தேதியில் 2400 MWe மின்சார நிலையத்துக்காகத் தோண்டப்படும் மூன்றாவது நீர்க்குகையின் 630 அடி உயர செங்குத்துக் குழி [Tunnel Shaft] பெருமழையில் சரிந்து 29 ஊழியர் மாண்டனர்!

1972 ஆம் ஆண்டில் அனுமதிக்கப் பட்டு, 1978 இல் திட்டம் அடித்தளமிடப் பட்டு, 1996 இல் உறுதி அணை [Coffer Dam] கட்டுமானம் ஆனது. அணைத் திட்டம் 2003 ஆகஸ்டில் முடிவு பெற வேண்டியது. 1986 இல் இந்தோ-ரஷ்ய உடன்பாட்டில், ரஷ்யா நிபுணத்துவத்தையும், 416 மில்லியன் டாலர் நிதிக்கடன் அளிக்கவும் முன்வந்தது. 1994 இல் நிதிச்செலவு 612 மில்லியன் டாலர் தொகையிலிருந்து, 1999 இல் 1.2 பில்லியன் டாலராக இருமடங்கு பெருகியுள்ளது! டெஹ்ரி அணைத் திட்ட நிர்வாகத்தில் ஊழல்கள் ஏற்பட்டு மைய உளவு ஆய்வகம் [Central Bureau of Investigation (CBI)], ஆறு பெரிய அதிகாரிகள் மீது லஞ்சக் குற்றச் சாட்டுகளைத் தாக்கியுள்ளது! அதாவது டெஹ்ரி அணை அமைப்புச் செலவு, பயனீயும் ஊகிக்கப்புப் பலன் தொகையை விட, இரண்டு மடங்கு ஆகியுள்ளது! அதனால் அதன் உற்பத்தி மின்சாரம் யூனிட் இரண்டு மடங்கு விலைக்கு, பஞ்சாப், இமாசல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய அண்டை மாநிலங்களுக்குப் பரிமாறப்படும் என்று அஞ்சப்படுகிறது!

1978 ஆண்டு முதலே டெஹ்ரி அணைத் திட்டத்துக்கு எதிர்ப்புக்களும், முட்டுக்கட்டையும் அலை அலையாய் எழுந்தன! அரசாங்கம் ஏற்படுத்திய உள்ளாய்வுக் குழுவும் முரணாக அறிவிக்கவே, 1980 மையக் காலத்தில் திட்டம் சில ஆண்டுகள் முடங்கியது. 1987 இல் மத்திய அரசின் சூழ்மண்டலக் காப்பு அமைச்சகமும் எதிர்ப்புகள் அறிவித்தாலும், அரசாங்கம் அதை மீறி திட்ட வேலைகளைத் துவங்க ஆணையிட்டது! இந்திய நாட்டின் சூழ்மண்டலக் காப்பாளிகள் 1992 இல் உச்சநீதி மன்றத்துக்குப் புகார்மனு அனுப்பி, நிலநடுக்கப் பாதுகாப்பு, சூழ்மண்டலச் சிதைப்பு, இடப்பெயர்ச்சி ஈடுநிதி போன்ற பிரச்சனைகளில் தவறுகளைக் காட்டி யிருந்தனர்! 1996 இல் காந்தீயவாதி சுந்தர்லால் பஹுகுணா, அணைத் திட்டத்தை எதிர்த்து 74 நாட்கள் நீடித்த உண்ணா விரதம் வெற்றியாகி, அரசாங்கம் மீண்டும் பாதுகாப்பு, சூழ்மண்டலப் பாதிப்பு, நிலநடுக்க உளவு, இடப்பெயர்ச்சிப் பிரச்சனைகளை மீளாய்வு செய்ய ஓர் ஆய்வுக் குழுவை அமைக்கும்படி கட்டாயம் ஆனது! அதன்படி 1997 இல் அரசாங்கத்திற்கு ‘ஹனுமந்த ராவ் ஆய்வுக்குழு ‘ தனது உளவு அறிக்கையைச் சமர்ப்பித்தது. குழுவின் இடப்பெயர்ச்சி முறைகள் உட்பட, பெரும்பான்மையான நிபந்தனைகளை அரசாங்கம் பின்பற்ற வில்லை!

டெஹ்ரி அணைத்திட்டம் அமைப்பதில் எழுந்த பிரச்சனைகள்

ஐந்து பெரும் காரணங்கள் டெஹ்ரி அணைத் திட்ட எழுச்சி, திட்ட வளர்ச்சி, திட்ட முதிர்ச்சி ஆகிய மூன்றுக்கும் முட்டுக்கட்டை யிட்டுத் தடை செய்து வந்தன.

1. புதுத்தளக் குடியேற்றத் திட்டமின்மை: அணை அமைப்பால் மாதர், விதவைகள் உள்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்ச்சி செய்ய வேண்டியதாயிற்று! ஆனால் அவர்கள் அத்தனை பேரும் புதுத் தளத்தில் குடியேறுவதிலும், நட்டஈடு நிதி அளிப்பதிலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்!

2. தனியார் துறைக்கு அணையின் பலாபலன்: இடப்பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ஊர்மக்கள் அடைய வேண்டிய அணையின் பலாபலன்கள், சூயஸ் என்னும் தனியார் நிறுவகத்துக்குப் போகும்! நீர்ப்பக்குவச் சாலைகள் [Water Treament Plants] அமைக்கும், உலகிலே மிகப் பெரிய நிறுவகம் சூயஸ் கம்பெனி! அணையின் 635 மில்லியன் லிடர் கங்கா நீரை டெல்லிக்கு விற்க, சுத்தீகரித்துப் பதம்படுத்தும் ஸோனியா விஹார்ச் சாலையைச் [Sonia Vihar Plant] சூயஸ் கம்பெனி கட்டுமானம் செய்து வருகிறது.

3. மழை மறைவு அல்லது வேனிற் காலங்களில் கங்கையில் ஓடும் நீரோட்டத்தை, டெஹ்ரி அணைதேக்கம் குன்றச் செய்கிறது. அதனால் வாரணாசிப் (காசி) பகுதியில் ஓடும் கங்காவில் ஆழம் குறைந்து, வெய்யில் காலத்தில் கால்நடையாகவே மாந்தர் ஆற்றைக் கடந்து செல்ல முடியும்!

நீரோட்டம் குன்றிய கங்கா நதியில் சீர்கேடுகளும், துர்மாசுக்களும் நிரம்ப வாய்ப்புகள் உண்டாகும்! ஆழமற்ற அசுத்த நதியில் நீராடும் வமிசாவளி இந்துக்களின் வைதீகக் கலாச்சார வழக்கம் பாதக மடைகிறது.

4. இமாலயத் தொடர்மலை அடுக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சேமிப்பு நிலநடுக்கச் சக்தி [Stored Seismic Energy] திடாரென விடுவிக்கப்பட்டு, அணையைப் பிளந்து விடலாம்! பிளவுகளில் பெரும் நீர்க்கசிவு உண்டாகி, நீர்ப்பெருக்கம் படைபோல் எதிர்ப்படும் எதையும் அடித்துச் செல்லாம். அணை வெள்ளம் உண்டாகும் நிலநடுக்கமும் [Dam-induced Seismicity] இத்துடன் ஆராயப்பட வேண்டும். 1991 இல் ஏற்பட்ட இமாலயப் பூகம்பம், டெஹ்ரி அணைக்கு முன்னோட்டப் பகுதியில் [Upstream of Tehri] பாகீரதி ஆற்றில் உள்ள மனேரி அணைக்கு அருகில் நடுக்கமையம் [Epicenter] கொண்டிருந்தது, ஓர் எச்சரிக்கை நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்!

5. நிலநடுக்கம் இல்லாமலே, டெஹ்ரி அணை வெள்ளப் பாதிப்பால் அபாயங்களை விளைவிக்க வாய்ப்புக்கள் ஏற்படலாம்! 1961 இல் ஒரிஸா மாநிலத்தில் ஹிராகுட் அணையில் வெள்ளம் நிரம்பி, வழிந்தோடி 350,000 கிராமங்கள் மூழ்கியதை நினைவில் வைக்க வேண்டும்.

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [October 21, 2004] (Part V)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


கொஞ்சமோ பிரிவினைகள், ஒரு

கோடி என்றாலும் அது பெரிதாமோ ? ….

கண்ணிலாக் குழந்தைகள் போல், பிறர்

காட்டிய வழிசென்று மாட்டிக் கொள்வார்! ….

பஞ்சமோ பஞ்சமென்றே, நிதம்

பரிதவித்தே உயிர் துடிதுடித்து

துஞ்சி மடிகின்றாரே, இவர்

துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே! …(நெஞ்சு பொறுக்குதில்லையே)

மகாகவி பாரதியார்

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்க மந்திரி, நீர்வளத்துறை எஞ்சினியர் டாக்டர் கே.எல். ராவ் உருவாக்கிய கங்கா-காவேரி இணைப்புத் திட்டத்தைக் கட்ட முடியாதது, நிதி விழுங்குவது என்று பலர் நிராகரித்தனர்! மறுபடியும் அதே மாதிரி நீரிணைப்புத் திட்டங்கள், தற்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் தலைதூக்கி உள்ளன! முப்பதுக்கும் மேற்பட்ட அத்திட்டங்கள் சிரமமானவை, சிக்கலானவை, செய்ய முடியாதவை, செலவு மிக்கவை என்று மாநிலங்களில் பல்வேறு எதிர்ப்பாளிகள் முட்டுக்கட்டை யிட்டு நிறுத்தத் தயாராக நிற்கிறார்கள்! மக்கள் தொகை பெருத்துவரும் இந்தியாவில், நீர்ப்பற்றாக்குறை இன்னும் பேரளவில் பெருகி நதியிணைப்புத் திட்டங்கள் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்றுத் தலை நீட்டப் போகின்றன! அன்றும், இன்றும் ஆரம்பிக்கப்படாத கங்கா-காவேரி நதியிணைப்புத் திட்டம் இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அடித்தளம் இடப்பட்டால், எத்தனை மடங்கு நிதிச் செலவை அது இழுத்துவிடப் போகிறது என்று இந்தியர் சிந்திக்க வேண்டும்!

தென்னாட்டில் 2004 அக்டோபரில் சென்னைக்கு தண்ணீர் அனுப்பிய தெலுங்கு கங்கா கால்வாய் திட்டம், ஐந்தாண்டுகளில் முடிவதற்குப் பதிலாக, நான்கு மடங்கு செலவாகி இருபதாண்டுகள் எடுத்ததுக் கொண்டது! வடநாட்டில் ஸட்லெஜ் யமுனா இணைப்புக் கால்வாய் இருபதாண்டுகள் கடந்தும், 55% நீளம் மட்டும் முடிந்து முடங்கிப்போய், அரசியல் கலகவாதிகளின் கால்பந்தாக இங்குமங்கும் எற்றப்பட்டு வருகிறது! இவ்விரு நதியிணைப்புகளும் முன்னேறும் இந்திய மண்ணில் பின்னேறிய மாதிரித் திட்டங்கள்! இவற்றின் பிரச்சனைகள் முளைத்துக் கிளைவிட ஆணிவேரான காரணிகள் மாநிலங்களின் அதிகார வர்க்க அரசியல் வாதிகள்! நதியிணைப்புத் திட்டங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் குறை கூறும்படி எந்தவிதத் தவறுகளும் இல்லை! ஒப்பந்தமான திட்டங்கள் இரண்டும் நீர்ப்பாசான, நீர்வளப் பலனளிப்பில் மெய்யாக உன்னதமானவையே!

கட்டுரை ஆசிரியர்

பஞ்சாப் ஹரியானா கால்வாய்த் திட்டத்தில் ஏற்பட்ட தகராறுகள்

சென்னை நகரின் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்பும் தெலுங்கு-கங்கா திட்டம் 1983 இல் துவங்கி, நான்கு மடங்கு நிதிப்பணத்தை விழுங்கி, இருபது ஆண்டுகள் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் கடைசியில் நீர் வெள்ளம் கால்வாய் வழியோடி, சிறிது நீரைப் பூண்டியின் வாயில் ஊற்றித் தாகம் தீர்த்துள்ளது! ஆனால் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு இடையே 1981 ஆண்டில் ஒப்பந்தமான ஸட்லெஜ்-யமுனா இணைப்புக் [Sutlej Yamuna Link Canal] கால்வாய்த் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஐந்தாண்டுகளில் 55% கட்டுமானப் பணிகள் முடிந்து, 1986 ஆண்டு முதல் பஞ்சாப் மாநிலம் தொடராமல், பல்லாண்டுகளாக மாநிலங்களுக்குள் சட்டப்போர் நடந்து கொண்டு மத்திய அரசின் குறுக்கீடும், நீதி மன்றங்களின் தலையீடும் ஏற்பட்டுப் பெரும் அரசியல் குழப்பத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது! பஞ்சாப் மாநிலச் சட்டசபை 1981 ஆம் ஆண்டு கால்வாய் ஒப்பந்தத்தை, 2004 ஜூலை 12 ஆம் தேதி நடைமுறையிலிருந்து விலக்கியதும், ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஜூலை 22 இல் இந்திய உச்சநீதி மன்றத்திற்குப் புகார் செய்திருக்கிறார்! இப்போது ஐந்து நீதிபதிகள் அமர்ந்திருக்கும் உச்சநீதி மன்றம் ஜனாதிபதியின் புகாரை எடுத்துக் கொண்டு ஆகஸ்டு 2 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மீது வழக்காட அறிக்கை அனுப்பியுள்ளதாக அறியப் படுகிறது!

மிகவும் விளம்பரப் படுத்தப்பட்டுப் பெயர் போன ஸட்லெஜ் யமுனா இணைப்புக் கால்வாய்த் திட்டம் 2004 ஆண்டு வரை 850 கோடி ரூபாயை விழுங்கி யிருக்கிறது! 180 மைல் நீளத்தில் (125 மைல் பஞ்சாப் +55 மைல் ஹரியானா) டிசைன் செய்யப்பட்ட கால்வாயில் பஞ்சாப் 55% முடித்து, 1986 ஆண்டுக்குப் பிறகு தொடரப்படாமல் 25 ஆண்டுகளாய் முடங்கிக் கிடப்பது இந்திய வரலாற்றில் மன்னிக்க முடியாத, மறக்க முடியாத, பயனற்ற, பண்பற்ற ஓர் அரசியல் குழப்பமாகக் கருதப்படுகிறது! கால்வாய் வேலைகளுக்கு 1700 நபர்களைப் பணிபுரிய வைத்த பஞ்சாப் மாநிலம், தனது கடைசி 53 மைல் தூரக் கால்வாயை முடிக்க விரும்பாது, கடந்த இருபது ஆண்டுகளாக நிறுத்தி வைத்து, முரட்டுப் பிடிவாதமுடன் ஹரியானாவோடு சண்டையிட்டு வருகிறது! சண்டித்தனமாய்ப் பஞ்சாப் அரசாங்கம் ஹரியானாவுக்கு உபரி நீர்வெள்ளம் அனுப்பத் தேவையில்லை என்று கண்டனம் செய்தும் வருகிறது! 1990 ஜூலை மாதம் பஞ்சாப் மூர்க்கவாதிகள் இரண்டு முக்கிய எஞ்சினியர்களைச் சுட்டுக் கொன்று, கால்வாய் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் நிற்கும்படி செய்தனர்! இவ்வாறு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் நீர்ப்பாசான வசதி, குடிநீர் அளிக்கப் போகும் ஓர் உன்னத நதியிணைப்புத் திட்டம், பஞ்சாப் அதிகார வர்க்கத்தின் கையில் சிக்கிக்கொண்டு அரசியல் திருவிளையாடலாக மாறிப் பெரும் உள்நாட்டு மாநிலப் போரை உண்டாக்கி உள்ளது! அப்போரின் இடையே இடர்ப்படுவோர் மூன்று மாநிலங்களில் வாழும் பொதுமக்கள், வேளாண்மைக்காரர்கள், தொழில் அதிபதிகள் ஆகியோர்!

விடுதலை இந்தியாவில் மொழிவாரியாகப் பிரிபட்ட பஞ்சாப் மாநிலம் 1966 இல் துண்டுபட்டுப் பஞ்சாப், ஹரியானா என்னும் இரண்டு மாநிலங்களாகப் பிளவு பட்டது! 1966 இல் ‘மாநிலச் செம்மை மீளமைப்புச் சட்டம் ‘ [States Re-organization Acts] எழுதப்பட்டு பியாஸ் நதியில் உள்ள பக்ரா, நங்கல் அணைகளின் கால்வாய் நீர் வெள்ளத்தைப் பயன்படுத்திக் கொள்ள இரு மாநிலங்களுக்கும் பங்கீட்டு உரிமைகள் அளிக்கப்பட்டன. அந்த நீர்ப் பங்கீட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டு, மாநிலங்கள் தமக்குள் தீர்க்க முடியாமல் போகவே, ஹரியானா 1969 இல் மத்திய அரசாங்கத்தின் உதவியை நாடியது. மத்திய அரசு 1976 மார்ச் 24 இல் ரவி-பியாஸ் நதிகளின் 3.5 (maf) மில்லியன் ஏக்கர் அடி உபரி வெள்ளத்தை ‘ஸட்லெஜ் யமுனா இணைப்பு ‘ [Sutlej Yamuna Link] என்னும் புதுக்கால்வாய் ஒன்றை அமைத்து ஹரியானாவுக்கு அனுப்புவதாய் வாக்களித்தது! அந்த கால்வாய் அமைப்பு பஞ்சாப் வழியாக ஹரியானாவுக்கு வருவதால், மத்திய அரசு அப்பகுதியைத் அதன் மாநிலத்தில் கட்டும்படி வேண்டியது.

ஹரியானா அரசு உடனே வேலையை ஆரம்பித்து 55 மைல் நீளத்துக்குக் கால்வாயைத் தன் பகுதியில் 1980 ஆம் ஆண்டிலேயே முடித்து விட்டது! ஆனால் பஞ்சாப் மாநிலம், மத்திய அரசின் 1976 ஆண்டு தீர்மானத்தை மீளாய்வு [Review of 1976 Allocation] செய்யத் தூண்டியது! மத்திய அரசு 1981 டிசம்பர் 31 ஆம் தேதி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து, முப்புற ஒப்பந்தம் ஒன்றில் உடன்பட வைத்தது. அவ்விதிப்படி ரவி, பியாஸ் நதிகளின் உபரி வெள்ளத்தை ஸட்லெஜ் யமுனா இணைப்புக் கால்வாய் மூலம், பஞ்சாப்பிற்கு 3 maf அளவிலிருந்து மிகையாக்கி 4.22 maf, ஹரியானாவுக்கு முன்பு குறிப்பிட்ட அளவு (3.5 maf), ராஜஸ்தானுக்கு 8.6 maf அளவு அனுப்புவதாகத் தீர்மானம் ஆனது. ஒப்பந்தப்படி 1986 ஜனவரியில் கால்வாய்த் திட்டம் முடிவு பெற வேண்டும்.

1982 ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் 1700 பேரை வேலைக்கு வைத்துக் கட்டுமானப் பணிகளைத் துவங்கி 72 மைல் தூரக் கால்வாயைக் கட்டி முடித்தது. பஞ்சாப் பகுதிக் கால்வாயில் கடைசி 53 மைல் தூரம் அரசியல் சம்மதம் பெறாமல் இருந்தது. 1986 ஆம் ஆண்டு முழுவதும் முடிய வேண்டிய திட்டம், அப்போது மொத்தத்தில் ஏறக்குறைய பாதி அளவே [55%] முடிந்திருந்தது! பஞ்சாப் காரணமின்றி வேலையை நிறுத்தி 1986 ஆண்டுக்குப் பிறகு எதுவும் செய்யாமல் இருந்ததால், ஹரியானா வழக்கு மனுப் போட்டு சட்ட மன்றங்களை அணுகியது! பஞ்சாப் மாநிலம் ஹரியானாவுக்கு 0.9 maf அளவுக்கு மேற்பட்ட 3.5 maf அளவு தர இயலாதென்றும், தந்தால் பஞ்சாப் நீர்ப்பாசானம் பாதிக்கப்படும் என்றும் வாதாடியது! மத்திய அரசு அமைத்த நீதிபதிகள் பங்கேற்ற ‘ரவி-பியாஸ் நீர்ப்புகார் ஆய்வுக் குழுவும் ‘ [Ravi-Beas Waters Tribunal] பஞ்சாப் ஹரியானா நீர்த் தகராறுகளை தீர்க்க முடியவில்லை. இதுவரை [2003] ஆன 850 கோடி ரூபாய் கால்வாய்ச் செலவில், பஞ்சாப் மட்டும் 520 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாக அறியப்படுகிறது! மீதம் 330 கோடி ரூபாய் ஹரியானா செலவு செய்துள்ளது! 1983, 1986, 1987, 1988, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றம் அனுப்பிய தூண்டு அறிவிப்புகள் பஞ்சாப் மாநில அரசால் புறக்கணிக்கப்பட்டு, ஏழாவது முறை 2003 ஜனவரி 15 ஆம் தேதி அனுப்பிய முடிப்பு எச்சரிக்கையும் [Seventh Deadline Warning] வீணானது!

இந்தியாவில் மழைகால வெள்ளத்தால் நேரும் விளைவுகள்

மழைக்காலச் சமயங்களில் அஸ்ஸாம், பீஹார் அல்லது பஞ்சாப் பிரதேசங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் நீர்வெள்ளம் அடைபட்டு கிராம, நகர வீதிகள், வீடுகள் மூழ்கி மக்கள் இன்னலுக்குள் மாய்வது தவறாத காட்சிகளாக மீண்டும், மீண்டும் காணப்படுபவை! மத்தளத்துக்கு இருபறமும் அடி என்பது போல், அஸ்ஸாம் பெருமழையில் பிரமபுத்திரா கரைபுரண்டு ஒருபுறத்திலும், கங்கா கூட்டு நதிகளால் வெள்ள ஓட்டம் மிஞ்சி மறுபுறத்திலும் தாக்கிப் பங்களா தேசத்தை நீர்மயமாக, நீர்க்காடாக ஆக்குகின்றன! 1955 ஆகஸ்டு, அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ள அடிப்புகளில் பிரமபுத்திராவின் நீர்பெருக்கு அஸ்ஸாமிலும், மகாநதி பீஹாரிலும், ரவி பஞ்சாப்பிலும், யமுனா டெல்லியிலும், ராப்தி உத்தரப் பிரதேசத்திலும் வெள்ளச் சிதைவுகளையும், சேதாரங்களையும் ஏற்படுத்தி மக்களுக்கு பேரிடரை விளைவித்தன. ஊர்ப் புறங்களில் நீர்க்கழிவு ஓடைகள் நிலமட்டச் சாய்வு பெறாமல் அல்லது குப்பை கூளங்கள் நிரம்பிச் சரிவர வடிக்கப்படாமல் இருப்பதாலே அடைத்துக் கொள்கின்றன. நீர்வெள்ள அடைப்புகளுக்குச் செம்மையான நீரோடைகள் இன்மையும், அவற்றை அமைக்க நிதியிருப்பு இல்லாமையும் ஒரு காரணம். நிதிவளம் இருந்தாலும், சீரான நீரோடை அமைத்து நீரை வெளியேற்றத் திட்டம் இல்லாமையும் அடுத்த காரணம். வெள்ளம் வந்தபின் சமாளிக்க முடியாமல் சபித்துக் கொண்டும், தலைவிதியே என்று சகித்துக் கொண்டும் காலம் தள்ளும் மக்களின் மனோபான்மை மற்றுமொரு காரணம். மழை வெள்ளக் கட்டுப்பாடு இல்லாத கிராமங்கள், நகரங்கள் பல மாநிலங்களில் இருந்து வருவதை, அந்த மாநில அரசாங்க அதிகாரிகள் புறக்கணிப்பதும், அதே அரசாங்கங்கள் தமது மாநில எஞ்சிய நதிநீர்ப் பெருக்கை அண்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொள்ள மறுப்பதும், பாரத நாட்டில் தவறாது நிகழ்ந்து வரும் தண்ணீர்ப் போராட்டங்களாகும்!

1955 ஆண்டு வெள்ளப் பெருக்குச் சேதராங்களில் பஞ்சாப் மாநிலம் பேரளவு பாதிக்கப்பட்டது. 7000 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின! 75,000 இல்லங்கள் சிதைந்தன! 1500 நபர் உயிரிழந்ததாக அறியப்படுகிறது! பெப்சுவில் 6000 இல் 5000 கிராமங்கள் பாதகம் அடைந்து 200 பேர் உயிரிழந்தனர். பிரமபுத்திராவின் நீர்மட்டம் பேரளவில் பெருகி, அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்கள் மூழ்கிச் சிதைவு பெற்றன. பீஹாரில் நெல் வயல்கள், சணல் நிலங்கள் யாவும் மூழ்கி, 5 லட்சம் மக்கள் இல்லங்களை இழந்தனர்! 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு கங்கா, ஸோன் நதிகளின் வெள்ளப் பெருக்கில், பீஹாரின் தலை நகரம் பாட்னா நரகமானது! ஆகஸ்டு 24 ஆம் தேதி பாட்னாவின் இருண்ட நாளாகக் கருதப்படுகிறது! விமான தளம் நீர் மண்டலமாகி ஊர்திகள் ஏறவோ, இறங்கவோ முடியாமல் முடக்கப் பட்டது. 140 மைல் தூர இரயில்பாதை சேதமுற்றதால், பரெளனியில் பயணிகள் அடைபட்டனர். மாநில ஆளுநர் முதல் தெரு நபர் வரை பாதிக்கப் பட்டனர். அரசாங்க மனைகள், முதல் மந்திரி அலுவலகம், மந்திரிகளின் மாளிகைகள், மாநில அரசிய மன்றம், உயர்நீதி மன்றம், வானொலி நிலையம் யாவும் நீரடைப்பால் பாதகம் அடைந்தன.

யமுனா நதியோட்டத்தில் துர்மாசுக் கூளங்கள், விஷக் கிருமிகள்

2004 ஜனவரி 17 ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு நீர் கொண்டுவரும் மேற்கு யமுனா கால்வாயில் [Western Yumuna Canal] ஏற்படவிருந்த ஒரு பெரும் குடிநீர்ச் சீர்கேடு தவிர்க்கப்பட்டது. ஹரியானா வழியாக வரும் அந்தக் கால்வாயின் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் டெல்லியின் தெற்கு, மேற்குப் பகுதியில் வாழும் 3 கோடி மாந்தருக்கு அனுப்பப்படுகிறது. அன்றைய தினம் திடாரென்று கால்வாயில் வந்த கச்சா நீரின் [Raw Water] அமோனியா அளவு அதிகரித்து ஹைதர்பூர், நங்கலாய் பதம்படுத்தும் சாதனச் சாலைகள் [Water Treatment Plants in Haiderpur, Nangloi] நிறுத்தம் ஆயின! ஹைதர்பூர் சாலை நாளொன்றுக்கு 200 மில்லியன் காலன், நங்கலாய் 40 மில்லியன் காலன் கச்சா நீர்ப் பதம்படுத்தும் திறம் கொண்டவை. ‘மேற்கு யமுனா கால்வாயின் நீரில் தொழிற்துறைகள் வெளியேற்றும் தீவிர துர்மாசுக்கள், சுத்தீகரிக்கும் சாதனங்களின் திறமைக்கு அப்பாற்பட்ட நிலையில் நிரம்பி யுள்ளன ‘, என்று டெல்லி நகர நீர்த்தர ஆய்வு அதிகாரி ஒருவர் கூறினார். ஹரியானா நீர்வள அதிகாரிகளுக்கும், நீர்த்தரம் கண்காணிக்கும் துர்மாசு மையக் கட்டுப்பாடு குழுவுக்கும் [Central Pollution Control Board] புகார் செய்து, கச்சா நீரில் அம்மோனியா அளவு மட்டம் குறைந்த பின்பு, டெல்லி நகர இல்லங்களுக்கு நீர்ப் பரிமாற்றம் தொடர்ந்தது.

யமுனாக் கால்வாயின் நீர்ச் சீர்கேடுகள் யாவும் ஹரியானா மாநிலத்தின் தஜேவாலா என்னும் இடத்தில் உற்பத்தியாகி, அங்கே இரண்டாகப் பிரியும் கிழக்கு யமுனா கால்வாயிலும், மேற்கு யமுனா கால்வாயிலும் [Eastern & Western Yamuna Canals] சேர்கின்றன! மேற்கு யமுனா கால்வாய் யமுனா நகர், கர்நல், பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து, டெல்லியின் ஹைதர்பூர் நீர்ப்பதம்பாடு சாலைக்கு வருகிறது. யமுனா நகர் இல்லங்களின் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுத் திரவங்கள், பானிபட் சர்க்கரை ஆலைக் கழிவுகள் யாவும் மேற்குக் கால்வாயில் விழுகின்றன! ஹரியானாவின் பரந்த வேளாண்மை வயல்கள் கால்வாயில் வெளித்தள்ளும் களைக்கொல்லி, மற்றும் இரசாயன உரங்களின் துர்மாசு நச்சுக்கள் அநேகம்! அடுத்து யமுனா நீரை மாசு படுத்துவது டெல்லி மாநகரம்! அது தினம் வெளியாக்கும் மலநீர்க்கழிவு [Sewage] மட்டும் 1900 மில்லியன் லிடர்! அது பக்குவ சாதனங்களால் வடிகட்டப் பட்டாலும், 630 மில்லியன் லிடர் கச்சாநீர்க் கழிவு யமுனா நதியில் தினமும் கலந்துவிடப் படுகிறது!

ஏரிகளும், நீர்த்தேக்கங்களும் சீர்கேடாவதற்கு மூல காரணங்கள்: நதிகளும், கால்வாய்களும் தூக்கிச் செல்லும் தொழிற்துறைகள் வெளியேற்றும் துர்மாசுக் கழிவுகள், வேளாண்மை வடிகால் இரசாயனத் திரவங்கள், இல்லக் கழிவுநீர் ஓடைத் திரட்டுகள், சோப்புநீர் வெளுப்புத் திரவங்கள், உணவு எச்சங்கள் போன்றவை. நுண்ணுயிர்ச் ஜீவிகள் அவற்றைத் தின்று, வளர்ந்து தம் வமிசாவளியைப் பெருக்குகின்றன! ஓடிவரும் போது ஆறு தன்னுடன் சகதியையும் திரட்டிக் கொண்டுவந்து கால்வாய் மடியிலும், ஏரியின் அடித்தளத்திலும் தள்ளுகிறது. குடிநீர்த் தேக்கங்களை உளவு ஆய்வு செய்யும்படி, பல நபர்கள் நீதி மன்றங்களுக்கு அநேக மனுக்களைத் தாக்கி யுள்ளதாக அறியப்படுகிறது. அத்தகைய விண்ணப்பங்கள் தாக்கப்பட்ட ஏரிகளின் பெயர்கள் பின்வருமாறு: 1. தால் ஏரி, காஷ்மீர் 2. சந்தோலா ஏரி, அகமதாபாத் 3. ரவீந்திர சரோவர், கல்கத்தா 4 சரூர் நகர் ஏரி, ஆந்திரா 5. பிம்டால் ஏரி, நைனிடால் 6. டெல்லி நீர்த்தேக்கங்கள் 7. உதயப்பூர் ஏரிகள் 8. பெங்களூர் ஏரிகள் 9. சென்னை நீர்த்தேக்கங்கள்.

இந்தியா சுமார் 182.5 மில்லியன் ஹெக்டா ஏக்கர் வயல்களுக்காக, ஆண்டுக்கு 86,311 டன் பூச்சிகொல்லி இரசாயனத்தைப் பயன்படுத்தி வருகிறது. பெரும்பான்மையான இந்திய ஆறுகள் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும் வேளாண்மை நிலங்களின் வழியாகத்தான் ஓடுகின்றன. அவ்வித வேளாண்மை வயல்களின் உட்கசிவில் [Leaching] வெளியேறும் விஷத் துணுக்குகள் நதியில் கலந்து, நீர்வள உயிரினங்களுக்கும், மனித இனத்துக்கும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை பெற்றவை. 1995 ஆண்டு உளவு ஆய்வில் யமுனா நதி உள்பட இந்திய ஆறுகளில் ஏக மூலக்கூறுகளின் இம்மிகள் [Traces of Isomers: a Carcinogenic Organochlorine] இருந்ததாக அறியப்படுகிறது!

கொலராடோ நதிக் கிளைக் கால்வாய்களில் கட்டுப்பாடு

1859 ஆண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மக்கள் எண்ணிக்கை பெருகி, அமெரிக்காவின் நீர்ப்பாசான தானிய விளைச்சல்கள் மிகுந்து, கொலராடோ நதி தீரத்தில் சிற்றூர்கள் நகரங்கள் ஆயின. கொலராடோ நதியின் நீர்வெள்ளம் ராக்கி மலைத் தொடர்களின் கிழக்கிலும் (டென்வர், கொலராடோ ஸ்பிரிங்ஸ், பியூபலோ), மேற்கிலும் (அரிசோனா, காலிஃபோர்னியா மாநிலங்கள்) மலைகளைக் கடந்து கால்வாய்கள் அல்லது குகைகளின் வழியாகத் தூக்கிச் செல்லப்பட்டது. கொலராடோ நதி வெள்ள வினியோக அளிப்பைச் சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தும் உரிமையை நிலைநாட்ட அமெரிக்க மாநிலங்களுக்குப் பல்லாண்டுகள் பிடித்தன. வெள்ளக் கட்டுப்பாடு, நீர்த்தரக் கண்காணிப்பு, நீர்ப்பாசான அமைப்பு, குடிநீர் அளிப்பு, நிலவள நிலைப்பு [Soil Conservation], வனத்துறை நீடிப்பு, நீர்மின்சார எடுப்பு ஆகியவை அனைத்தும் மத்திய அரசுச் சட்டங்களாலும், மாநில அரசாங்க விதிகளாலும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நூறு ஆண்டுகளாக கொலராடோவின் நதி வெள்ளம் எடுத்துக் கொள்ளப்பட்டு, பயன்படுத்திக் கொள்ளக் கட்டுப்பாடானது. ஆனால் 1973 இல் கொலராடோ சட்டசபை, கொலராடோ நதியில் குறைந்த அளவு நீரோட்டம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், கூடுமானவரை இயற்கைச் சூழ்மண்டலம் நிலைபெற வேண்டும் என்றும் கொலராடோ நீர்வளக் கண்காணிப்புக் குழுவுக்கு [Colorado Water Conservation Board] ஆணையிட்டது. அக்குழு கொலரடோ நதியின் 8400 மைல் நீண்ட கால்வாய்கள், சிற்றாறுகள், 486 ஏரிகள், நீர்த் தேக்கங்கள் ஆகியவற்றை மேற்பார்வை செய்து வருகின்றது. கொலராடோ நதியின் நீர் வெள்ளம் யாவும் பல முறைகளில் கிளைக் கால்வாய்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அது கடல் மடியில் விழும்போது சிறுத்துக் கண்ணீர்த் துளிகளாய் கரைகிறது!

நதியின் அருகில் வாழும் 17 மில்லியன் நபர்கள் தவிப்புடன் விரும்பும், கொலராடோ நதியின் உரிமையை 400 வேளாண்மைவாதிகள் கைப்பற்றிக் கொண்டு கையாண்டு வருகிறார்கள்! ஒப்பந்தம் ஒன்று முடிவு பெறாமல் இந்த நிலை நீடித்தால், ஆண்டு முடிவில் பல நகரங்களுக்கு நீரளிப்பு நின்று போகலாம்! இப்போது காலிஃபோர்னியா வேளாண்மைக்காரர்கள் ஓர் ஏக்கர்-அடி நீருக்கு 58 டாலர் தரும் போது, நகரவாசிகள் தமது வீட்டுப் புழக்கத்துக்கு ஓர் ஏக்கர்-அடி நீருக்கு 950 டாலர் கொடுத்து வாங்கிறார்கள்!

சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய், செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி

உலகக் கப்பல்களின் கடல் கணவாய்த் திட்டங்களான எகிப்தின் சூயஸ் கால்வாய், வட அமெரிக்காவின் பனாமா கால்வாய் ஆகியவை முறையே பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட மாபெரும் நீரிணைப்புத் திட்டங்கள். வட அமெரிக்காவின் நடுவில் கனடா, அமெரிக்காவுக்குப் பொதுவான ஐம்பெரும் ஏரிகள் இணைந்து, செயின்ட் லாரென்ஸ் நதியில் கலந்து, ஆற்றோட்டம் 2350 மைல் தூரம் கடந்து அட்லாண்டிக் கடலை அடைகிறது! வரைதளப் படத்தில் மட்டமாகத் தெரியும் சுப்பீரியர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ என்று அழைக்கப்படும் ஏரிகள் ஒவ்வொன்றின் வெவ்வேறான நீர் மட்டம் கடல் மட்டத்திலிருந்து உயரமானது! மேலும் வேறானது! அவற்றைச் சேர்க்கும் ஆறுகள் சில இடங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போல் விழுந்து மட்டத்தைக் குறைத்துக் கடலை நோக்கி ஓடிச் சங்கமம் ஆகின்றன. ஐம்பெரும் குடிநீர் ஏரிகள் இயற்கையாகவே நதிகளால் இணைக்கப் பட்டு அமெரிக்கா, கனடாவில் உள்ள எட்டு மாநிலங்களின் துறைமுக நகரங்களைத் தொட்டு ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடன் வர்த்தகப் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள கப்பல் போக்குவரத்துக்கு வசதியாய் அமைந்துள்ளன.

அமெரிக்கக் கனேடிய கூட்டுப் பணியாக 470 மில்லியன் டாலர் [1959 நாணய மதிப்பு] செலவில் திட்டமான செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway] 1954 இல் கட்ட ஆரம்பிக்கப் பட்டு 1959 இல் முடிந்து கப்பல்கள் செல்லக் கால்வாய் திறக்கப் பட்டது. அத்துடன் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதிப் போக்குவரத்து 40,000 நபருக்குப் பிழைப்பு வேலைகள் அளித்தும், ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் வருவாயைப் பெருக்கியும் வட அமெரிக்கா, கனடா இரண்டு நாடுகளின் நிதிவளத்தை வளர்த்து வந்திருக்கிறது.

எகிப்தில் நீல நைல் நதிக்கருகே அமைத்த சூயஸ் கால்வாய், வட அமெரிக்காவில் கட்டிய மாபெரும் பனாமா கால்வாய் ஆகிய இரண்டும் கப்பல் போக்குவரத்து வசதிக்காகக் கடல்களை இணைத்தாலும், அவை இடையில் இருக்கும் ஆறுகளையும், இயற்கையான அல்லது செயற்கையாய் உண்டாக்கப்பட்ட ஏரிகள், நீர்த் தேக்கங்களையும் சேர்த்துக் கொண்டுதான் கால்வாய்கள் பிணைக்கப் பட்டுள்ளன. 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது! பனாமா கால்வாய் 50 மைல் நீளமானது! மத்தியதரைக் கடலை விட 30 அடி உயர்ந்த செங்கடலை இணைக்க, கடல்மட்ட நேரடித் தொடர்புக் கால்வாயாக சூயஸ் வெற்றிகரமாய் வெட்டப் பட்டது. 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடிக்கப்பட்டுச் சூயஸ் கால்வாய் கப்பல் பயணங்களுக்குத் திறந்து விடப்பட்டது.

வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய புதுக் கண்டங்களின் இடையில் குறுகிய தளமான [Isthmus] பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்க 400 ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறைக் கைவிடப் பட்டன! வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கட்டி முடித்து ‘சூயஸ் கால்வாய் தீரர் ‘ [The Hero of Suez] எனப் பெயர் பெற்ற பிரான்சின் ஃபெர்டினட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps], 74 ஆம் வயதில் பனாமா கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகள் ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் பனாமா திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் [Goethals] 1914 இல் பனாமா கால்வாயைப் பூர்த்தி செய்தார்.

பூர்த்தி செய்த பனாமா கால்வாய் 50 மைல் நீளம் கொண்டது. பனாமா நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக் கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! மலை மீது செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர் மட்டத்துக்கு முதலில் கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக் கீழிறங்கிக் கடல் மட்டத்துக்கு வர வேண்டும்! பனாமா கால்வாயைக் கட்ட பிரென்ச், அமெரிக்க மேற்பார்வைகளில் பணி செய்த 80,000 நபர்களில் 30,000 பேர் மலேரியா நோயிலும், விபத்திலும் மாண்டனர்! பயங்கர பனாமா மலைக் காடுகளில் 44 ஆண்டுகள் (1870-1914) சிக்கலான அந்த இமாலயப் பணியை முடிக்க எஞ்சினியர்களும், பணியாளிகளும் எவ்விதம் திறமையாகப் போராடினார்கள் என்னும் அனுபவம், இந்தியாவின் பூத நதிகளை இணைக்க முன்வரும் அதிகாரிகளுக்கும், நிபுணர்களுக்கும் வழிகாட்டும் முயற்சியாக, பயிற்சியாக இருக்கும். நீர்ப்பாசான பயிர்விருத்தி, குடிநீர் வசதிக்காக நதியிணைப்புக் கால்வாய்கள் கட்டினாலும் அல்லது கப்பல், நீர்ப் போக்குவரத்துப் பயணங்களுக்காக கடல்-நதிக் கண்வாய்கள் வெட்டினாலும், அவற்றின் சர்வே வரை யமைப்புகள், டிசைன் கணிப்புகள், நீரோட்டத் திட்ட முறைகள், பொறி நுணுக்கங்கள், கட்டுமான யந்திரங்கள், கருவிகள், அவற்றைக் கையாளும் விதங்கள் யாவும் ஒரே மாதிரி நிறுவக விதிகளைப் பின்பற்றுபவையே!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [October 14, 2004] (Part IV)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


முப்பது கோடி முகமுடையாள், உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள், இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில்

சிந்தை ஒன்றுடையாள்! …. (எங்கள் தாய்)

இனியநீர் பெருக்கினை! இன்கனி வளத்தினை! ….

முப்பது கோடிவாய் இன்னிசை முழங்கவும்

அறுபது கோடித் தோளுயர்ந்து உனக்கு ஆற்றவும்

‘திறனிலாள் ‘ என்றுனை யாவனே செப்புவன் ?

அருந்திறல் உடையாய்! … தாயே போற்றி! …. (வந்தே மாதர கீதம்)

மகாகவி பாரதியார்

மகாபாரதம், பகவத் கீதைப் பாராயணமும், இராமாயணம், இராம நாமப் பக்தியும் வெள்ளமாய்க் கரைபுரண்டோடும் பாரத மண்ணில், பண்பட்ட முறையில் இதுவரை பொதுப்பணித் திட்டங்கள் எவையும் கால எல்லைக்குள் சீராகச் செம்மையாக, நிதிச் சுருக்கத்தில் முடிந்திருப்பதாக இந்தியச் சரித்திரத்தில் உள்ளனவா ? இல்லை! இல்லை!! இல்லை!!! இந்தியாவின் சீர்கேடான, பண்பற்ற, ஊழல் நிரம்பிய இந்த இழிவான நிலைகளுக்குக் காரணக் கர்த்தாக்கள் யார் யார் ? பகவத் கீதைப் பக்கங்களைப் படித்து கரைத்துக் குடித்த அறிவாளிகள்! இராமாயணக் காவியத்தை அடிவேரோடு பிடுங்கித் தலையில் வைத்துக் கரகமாடும் அரசியல் கலகவாதிகள்! சுதந்திர இந்தியாவில் தில்லு முல்லுகள் புரிந்து பொதுப்பணித் திட்டங்களில் காலம் கடத்தி நிதிசுருட்டும் அத்தனை பேரும் பாரத மாதாவின் வயிற்றில் பிறந்த அருந்தவப் புதல்வர்களே!

சென்னையின் சில பகுதிகளுக்கு நீரனுப்புத் தடைப்பட்டாலும் தினமும் 13,000 வாகன நடைகள் நீர்ப்பரிமாற்றம் செய்து வருவது பிரமிக்கத் தக்க சாதனையாகத் தோன்றுகிறது! நீர்ப்பஞ்சத்தில் சென்னை நகரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருவதுபோல், பாரதத்தின் பெரிய நகரங்கள் பல இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் நீர்ப் பற்றாக்குறையில் மூழ்கித் தத்தளிக்கப் போவதை நதியிணைப்பு எதிர்ப்புவாதிகள் காணப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! தமிழ்நாட்டின் மாண்புமிகு ஸ்ரீ சங்கராசாரியார் வாளாவிருக்க, ஆந்திராவின் ஸ்ரீ சத்திய சாய்பாபா தெலுங்கு-கங்கா கால்வாயை முடிக்க 150-200 கோடி ரூபாய் நிதி உதவ முன்வந்தது பாராட்ட வேண்டிய மக்கள் பணியே!

கட்டுரை ஆசிரியர்

‘இந்திய அரசு பெருநதிப் படுகைகளின் மிஞ்சிய நீரைப் பகிர்ந்து, பிற நதிகளுக்குத் திருப்பும் நதியிணைப்புத் திட்டங்களைப் பறைசாற்றியது எங்கள் கவனத்தைப் பற்றியுள்ளது! உள்நாட்டு மாநிலங்களின் உடன்பாடைப் பெறாமலும், வெளிநாடுகளுடன் உரையாடி ஒப்பந்தம் கிடைக்காமலும் அந்தப் பூதத் திட்டங்களில் முற்படுவது நான்கு தேசங்களின் (நேபாளம், பூதான், பங்களா தேசம், பாரதம்) சூழ்மண்டலத்தைப் பாதிப்பதுடன், பல மில்லியன் மாந்தரின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது ‘

முஸ்தபா கமால் மஜும்தார். (Water & Energy Users Federation of Nepal)

‘நதியிணைப்புத் திட்டங்களால் பங்களா தேச, மேற்கு வங்காள, அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் கோடிக் கணக்கான மாந்தர் இன்னலுற வாய்ப்புகள் ஏற்படுவதுடன், மென்மையான நீர்வளச் சூழ்தள உயிரினங்களும் [Ecology] அந்தப் பிரதேசங்களின் நிதிநிலையும் பாதகம் அடையப் போகின்றன! கங்கா, பிரமபுத்திரா நதிகளின் படுகை வெள்ளத்தைத் திருப்பிப் பிற நதிகளில் பங்கீடு செய்தால், நீர் வறட்சிக் காலங்களில் அந்தப் பகுதிகளில் வேளாண்மை நிச்சயம் பாதிக்கப்படும்! மேலும் நதிப்படுகை நீரளவு குன்றுவதால், கடலின் உப்புத்தன்மை [Salinity] கரைநிலப் பகுதிகளில் ஊர்ந்து நுழைய வாய்ப்புள்ளது! அதனால் தென்பகுதிப் பங்களா தேசத்தின் வேளாண்மைச் சீர்கேடாகும்! ‘

‘முக்தோ-மோனா ‘ (Mukto-Mona) மனிதநேய வங்காளிச் சிந்தனையாளர்கள்.

21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சென்னையில் நீர்ப்பஞ்சம்!

21 ஆம் நூற்றாண்டில் சென்னை மாநகரில் எண்ணற்ற மக்கள் குடிக்கத் தண்ணீரின்றித் தவிக்கும் போது, இந்திய அரசாங்கத்தின் தற்போதைய தலையாய கடமை என்ன ? மக்களின் தண்ணீர்ப் பஞ்ச நிரந்தரத் தவிர்ப்பா ? அல்லது வங்காளத்தின் 120 மைல் நீளத் தென்பகுதி நதிப்படுகை ஓர நிலத்தில் மெதுவாக உப்புத்தன்மை ஊர்ந்து பல்லாண்டு களுக்குப் பிறகு பயிர்வளர்ச்சி பாதிக்கப் போவதைத் தவிர்ப்பதா ? சென்னையின் கடந்த கால 54 வருட வரலாற்றிலே முதன்முதலாக இப்போதுதான் [டிசம்பர் 2003] மூன்று நீர்த்தேக்கங்களும் வற்றி வறண்டு போயிருக்கின்றன! அந்த ஆண்டுதான் பைப்குழாய் மூலம் நீரனுப்பும் ஏற்பாடு சென்னையில் நிறுத்தம் ஆனது! 180 மைல் தூரம் சென்று மோட்டர்ப்பளு வாகனங்களில் நீர்வெள்ளம் சுமக்கப்பட்டுச் சென்னைக்குக் கொண்டுவரப் படுகிறது! சென்னையில் பெய்யும் வழக்கமான 580 மில்லிமீடர் மழையளவு 54% குன்றி 280 மில்லிமீடர் அளவுதான் பெய்து நகரத்தின் செம்மலை, பூண்டி, சோளாவரம் மூன்று நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் மிகவும் தணிந்து விட்டது! சென்னை நகரில் 2002, 2003 ஆண்டுகளில் காலமழைப் பொழிவுகள் தவறியதால் அரைக்கோடி மக்கள் நீர்ப் பஞ்சத்தால் தவித்தது எதிர்ப்பாராத பாதிப்பா அல்லது எதிர்பார்த்த பாதிப்பா என்னும் வினாவுக்கு இரு பதில்களும் பொருந்தும்!

2004 மார்ச் முதல் தேதிக் கணக்குப்படி அம்மூன்று நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு இருப்பு 2% ஆக முடக்குத் தேக்க மட்டத்தில் [Dead Storage Level] மிகத் தணிந்து போனது. அதாவது 160.5 mcft (மில்லியன் கியூபிக் அடி)! ஆனால் அவை மூன்றின் கொள்ளளவு முழுத் தகுதி: 7412 mcft. நாளொன்றுக்குத் தற்போதைய நீர்ப் பரிமாற்றம் சென்னைக்கு: 103 மில்லியன் லிட்டர்! பக்கத்துக் கிராம நகரக் கிணறுகளிலிருந்து நீர் வாங்கப்படுகிறது. தனிப்பட்டோரின் 110 வேளாண்மை வயல்களிலிருந்து, நாளொன்றுக்கு 32 மில்லியன் லிட்டர் நீர் மோட்டர்ப்பளு வாகனங்கள் மூலம் சென்னைக்குச் சுமக்கப் படுகிறது! அத்துடன் 28.5 கோடி ரூபாய்ச் செலவில் 1000 ஆழக்குழல் கிணறுகள் சென்னை நகரங்களின் பல பகுதிகளில் தோண்டப் படுவதாக அறியப் படுகிறது! சென்னை நகரில் ஏற்கனவே 6530 ஆழக்குழல் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலும் பூண்டியைச் சுற்றியுள்ள 125 வயற் கிணறுகளின் நீரை ஒப்பந்த வாடிக்கையில் வாங்கி, பம்புகள் மூலமாகச் செம்மலை நீர்ப்பக்குவப் படுத்தும் சாலைக்குத் [Red Hills Water Treatment Plant] தினமும் 30 மில்லியன் லிட்டர் அனுப்பத் திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்காகப் பூண்டியிலிருந்து செம்மலைக்குப் பூதளம் தோண்டப்பட்டு நீர்ப்பைப்புகள் பதிக்கப்படும். அடுத்துச் செப்டம்பர் வடகிழக்குக் காலமழை வரும்வரை, மோட்டர் வாகனங்களில் நீர் சுமந்து செல்லப்படும். அந்த நீர்ப்பரிமாற்றப் பணிக்களுக்குச் சென்னையில் ஆகும் செலவு: 306 கோடி ரூபாய்!

2003 ஆண்டில் சென்னை மாண்புமிகு முதல் மந்திரி ஜெயலலிதா முன்னாள் பிரதமர் வாஜ்பையிக்குச் சென்னை நீர்ப் பிரச்சனையைப் போராட, தேசீயப் பேரின்னல் பரிகார நிதியில் [National Calamity Contingency Fund] 700 கோடி ரூபாய் அனுப்பும்படிக் கெஞ்சியதாகத் தெரிகிறது! உடனே சென்னைக்கு மத்திய அரசு முன்னோடியாக உதவு நிதி 50 கோடி ரூபாய் அளித்ததாகத் தெரிகிறது! 2004 ஆகஸ்டில் 720 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்ட [நெய்வேலி] கடலூர் மாவட்ட ‘வீராணம் திட்டத்தினால் ‘ [Chennai Water Supply Augumentation Project-I] தினமும் 75 மில்லியன் லிட்டர் நீர்வெள்ளம் அதிகமாகச் சென்னைக்குக் கிடைத்தாகத் தெரிகிறது. சென்னையின் சில பகுதிகளுக்கு நீரனுப்புத் தடைப்பட்டாலும் தினமும் அண்ணா நகருக்கு 440 நடைகள், கே.கே. நகருக்கு 330 நடைகள், பெஸண்ட் நகருக்கு 155 நடைகள் வாகனக் போக்குகள் நிகழ்ந்து மொத்தம் 13,000 நடைகள் நீர்ப்பரிமாற்றம் செய்துள்ளது பிரமிக்கத் தக்க சாதனையாகத் தோன்றுகிறது! நீர்ப்பஞ்சத்தில் சென்னை நகரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருவதுபோல், பாரதத்தின் பெரிய நகரங்கள் பல இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் நீர்ப்பற்றாக்குறையில் மூழ்கித் தத்தளிக்கப் போவதை நதியிணைப்பு எதிர்ப்புவாதிகள் காணப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தெலுங்கு-கங்கா நீர்ப் பரிமாற்றம்

கர்நாடகா மாநிலம் தமிழகத்தின் காவேரி நதிக்கு நீர்வெள்ளம் அனுப்பாது கைவிரிக்கும் போது, அண்டையில் உள்ள அனுதாப ஆந்திரா முதன் முதலாக 2004 அக்டோபர் 2 ஆம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, 5 tmc (Thousand Million cuft) நீர்வெள்ளம், 10,000 Cusecs (cuft/sec) வீதத்தில் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அனுப்பியுள்ள பெருந்தன்மை பாராட்டுக்குரியது! ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் சுமார் 10,000 கியூசெக்ஸ் நீரோட்டம் அனுமதிக்கப் பட்டால், அந்த நீர்வெள்ளம் 240 மைல் தூரம் கால்வாய்களில் ஓடும் போது வேகம் குன்றி, சென்னையை அண்டும் போது 1000 கியூசெக்ஸ் வீதத்தில்தான் பூண்டியை நிரப்புகிறது! இப்போது பெண்ணாறில் உள்ள ஸோமசிலா

நீர்த் தேக்கத்தில் நீருயரம் மிகுந்து, காந்தலேரு நீர்த்தேக்கத்தில் நீரளவு 14 tmc கொள்ளளவிலிருந்து 24 tmc கொள்ளளவாக ஏற்றம் அடைந்ததால் அதிலிருந்து சென்னை பூண்டி நீர்தேக்கத்திற்கு நீரோட்டம் நிகழ்கிறது என்று ஆந்திர முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி கூறினார். பெண்ணாறு, கிருஷ்ணா பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் மழை பெய்யுமானால், சென்னைக்கு அனுப்பப்படும் நீரோட்டம் மிகையாகி, பூண்டி நீர்த்தேக்கம் விரைவாக நிரம்ப வாய்ப்புள்ளது!

1983 ஆம் ஆண்டு முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் முன்பாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களும் முறையே 5 tmc நீர்வெள்ளத்தைக் தெலுங்கு-கங்கா கால்வாய் மூலம் அனுமதித்து மொத்தம் 15 tmc பூண்டி நீர்த் தேக்கத்திற்கு அனுப்புவதாக ஒப்பந்தம் செய்திருந்தன. அந்த உடன்பாட்டின்படி ஆந்திர நாடு முதலில் தனது பங்கை அக்டோபர் 2 ஆம் தேதி அனுப்பி வைத்தது. மேலும் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் நெல்லூர் மாவட்டத்தின் காந்தலேரு நீர்த்தேக்கத்தில் 1.5 tmc நீர்வெள்ளத்தை மோட்டர் பம்பு செட்டுகள் மூலமாகவும் எடுத்துக் கால்வாயில் அனுப்பிக் கொள்ளலாம் என்றும் தமிழ் நாட்டிற்கு அனுமதி அளித்தது.

இருபது ஆண்டுகள் மெதுவாக வளர்ந்த தெலுங்கு-கங்கா திட்டம்!

இந்திரா காந்தி 1976 இல் சென்னை நகரத்தில் ஆற்றிய வரலாற்றுச் சொற்பொழிவில் முரசடித்த மகத்தான திட்டமிது! இரண்டாம் முறை சென்னைக்கு வருகை தந்தபோது, இந்திரா காந்தி 1983 இல் 637 கோடி ரூபாய் நாணய மதிப்பில் ஆரம்பித்து வைத்த ஆந்திரா-சென்னைக் கால்வாய்த் திட்டமிது! கிருஷ்ணா பெண்ணாறு நதிகளின் மழை வெள்ள உபரிநீரை 240 மைல் நீண்ட கால்வாய் மூலம் கர்நூல், கடப்பை, நெல்லூர், சித்தூர் வறட்சிப் பகுதிகளின் 5.75 லட்ச ஏக்கர் வயல்களுக்கு உயிரளிக்கவும், அத்துடன் 15 tmc [Thousand million cuft] நீர்க் கொள்ளளவைச் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்தில் நிரப்பவும் திட்டம் தயாரிக்கப் பட்டது. பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு 1996 இல் கால்வாய் பாதி முடிந்து, முதன்முதல் கர்நூல் மாவட்டத்தின் 25,000 ஏக்கர் வயல்களுக்கு நீர்ப்பாசான வசதி அளிக்கப்பட்டது! அரசியல் குழப்பவாதிகளின் இடையூறுகளால் கால்வாய் கால தாமதம் செய்யப்பட்டு, ஐந்தாண்டுகளில் முடிய வேண்டிய திட்டம் இருபதாண்டுகள் ஊர்ந்து சென்று, 1997 ஆண்டு புதுப்பித்து நிரப்பிய நிதிமதிப்பு நான்கு மடங்கு ஏறிப் (2470 கோடி ரூபாய்) அசுர ரூபம் எடுத்தது! அந்தத் தொகையில் சென்னையின் பங்கு மட்டும்: 639 கோடி ரூபாய்! அதாவது 1983 இல் தெலுங்கு-கங்கா திட்டம் முழுவதற்கும் போட்ட நிதிமதிப்பீடைத் தமிழ்நாடு மட்டும் 1997 இல் தனது பங்கிற்குத் தந்துள்ளது!

ஆனால் தெலுங்கு-கங்கா திட்டம் நீர்ப்பாசானத்துக்கும், குடிநீர் வசதிக்கும் மக்களுக்கு நீடித்த காலம் பயனளிக்கும் வழிகளில் சிறந்த குறிக்கோளுடன் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட ஓர் நதியிணைப்பு என்பது எடுத்துக் காட்டப்பட வேண்டியது! அந்த திட்டத்தில் பாதிக்கப்படும் மாநிலம் ஒன்று, பயனடையும் மாநிலம் வேறொன்று என்னும் பாகுபாடு எதுவும் இன்றி, இரு மாநிலங்களும் பலாபலன்களைப் பெறும்படித் திறம்படத் தயாரிக்கப் பட்டுள்ளது! 5.75 லட்ச ஏக்கர் ஆந்திர வயல்களுக்கு நீர்ப்பாசான வசதிகள்! கால்வாய் மூலம் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 15 tmc குடிநீர் வெள்ளம்! மூன்று மாநிலங்கள் [ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா] முறையே 5 tmc நீர்வெள்ளம் அனுமதித்து 15 tmc மொத்த அளவு சென்னைக்கு அனுப்ப வேண்டும். ஆந்திராவில் நான்கு நீர்த்தேக்கங்கள் (வேலுகோடு, எஸ்.பி.வி, சோமஸிலா, காந்தலேரு) கட்டப்பட்டு கால்வாய்கள் மூலம் அவை இணைக்கப்படும். காந்தலேரு ஏரியிலிருந்து, சென்னை பூண்டிக்கு 110 மைல் நீளக் கால்வாய் நீர் கொண்டுவரும். ஆந்திரா வேலுகோடுவில் 9 மெகா வாட் நீர்மின்சார நிலையம், சென்னமுக்கப்பள்ளியில் 15 மெகா வாட் நீர்மின்சார நிலையம், காந்தலேருவில் 9 மெகா வாட் நீர்மின்சார நிலையம் ஆகியவை நிறுவகமாகி, மொத்தம் 33 மெகா வாட் மின்சக்தி பரிமாற்றம்! ஐயமின்றி 1983 நாணய மதிப்பில் 637 கோடி ரூபாயிக்கு இரு மாநிலங்களில் இத்தனை நீர்வள, நீர்ப்பாசான வசதிகளா என்று வியப்புறாத மாந்தர் யாரும் இருக்க முடியாது!

தெலுங்கு-கங்கா திட்டத்தில் ஏற்பட்ட தில்லு முள்ளுகள்!

மகாபாரதம், பகவத் கீதைப் பாராயணமும், இராமாயணம், இராம நாமப் பக்தியும் வெள்ளமாய்க் கரைபுரண்டோடும் பாரத மண்ணில், பண்பட்ட முறையில் இதுவரை பொதுப்பணித் திட்டங்கள் எவையும் கால எல்லைக்குள் சீராகச் செம்மையாக, நிதிச் சுருக்கத்தில் முடிந்திருப்பதாக இந்தியச் சரித்திரத்தில் உள்ளனவா ? இல்லை! இல்லை!! இல்லை!!! இந்தியாவின் சீர்கேடான, பண்பற்ற, ஊழல் நிரம்பிய இந்த இழிவான நிலைகளுக்குக் காரணக் கர்த்தாக்கள் யார் யார் ? பகவத் கீதைப் பக்கங்களைப் படித்து கரைத்துக் குடித்த அறிவாளிகள்! இராமாயணக் காவியத்தை அடிவேரோடு பிடுங்கித் தலையில் வைத்துக் கரகமாடும் அரசியல் கலகவாதிகள்! சுதந்திர இந்தியாவில் தில்லு முல்லுகள் புரிந்து பொதுப்பணித் திட்டங்களில் காலம் கடத்தி நிதிசுருட்டும் அத்தனை பேரும் பாரத மாதாவின் வயிற்றில் பிறந்த அருந்தவப் புதல்வர்களே!

முதலில் அளிக்கப்பட்ட நிதிவளம் கரைந்து போனதும் தெலுங்கு-கங்கா கால்வாய் பாதியில் நின்று முடங்கிப் போனது. கால்வாயின் முற்றுப் பெறாத வெளிப்பரப்புகள் செமெண்டில் மேல்பூச்சு வேலைகள் நடைபெறாமல், நீரனுப்பத் தகுதி வாய்ந்த பகுதிகளுக்கும் நீர் பரிமாற முடியவில்லை! 2002 ஆம் ஆண்டு ஜூலையில் ஆந்திர பிரதேசத்தின் புட்டப்பர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா சென்னைமீது அருள்மிகுந்து, ஆந்திரா-சென்னையின் 95 மைல் நீண்ட கால்வாயிக்கு மேல்பூச்சுப் பணிக்குரிய நிதித்தொகை முழுவதையும் அளிக்க முன்வந்தது, பாராட்டப்பட வேண்டியது! அதற்கு ஆகும் செலவு 2002 ஆண்டு நாணயத்தில் நிதிமதிப்பீடு: 150-200 கோடி ரூபாய்! 2003 ஜூன் 25 ஆம் தேதி வந்த இந்து தினவிதழ் வெளியீட்டுத் தகவல்படித் தெலுங்கு-கங்கா கால்வாய்த் திட்டத்தில் 80% முடிய ஸ்ரீ சத்திய சாய்பாபா அருட்கொடை நிதி உதவி செய்ததாக அறியப் படுகிறது! முந்தி முடிந்த கால்வாயிலும் மேல்பூச்சின்றி நீரனுப்பப் பட்டதால், பூமிக்கசிவில் நீரிழப்பு நேர்ந்ததாக விவசாயிகள் புகாரிட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் நிதி உதவியால் மேல்பூச்சு வேலைகள் முழுவதும் முடிந்து, கால்வாயின் நீர்க்கசிவு நின்று அதிக தூரத்திற்கு நீர்வெள்ளம் விரைவாக ஓட வசதி பிறந்தது! ஆந்திர அரசு கால்வாய்க் கட்டுமானத்தில் கால தாமதப் படுத்தியதால், கால்வாய் நெடுவே வரிசையாக விவசாயிகள் டாசல் பம்புகளை அமைத்து நீரெடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று! தமிழ்நாட்டின் மாண்புமிகு ஸ்ரீ சங்கராசாரியார் வாளாவிருக்க, ஆந்திராவின் ஸ்ரீ சத்திய சாய்பாபா தெலுங்கு-கங்கா கால்வாயை முடிக்க 150-200 கோடி ரூபாய் நிதி உதவ முன்வந்தது பாராட்டப்பட வேண்டிய மனிதப்பணியே!

சென்னை நகருக்கு நீரனுப்பும் குறிப்பணியில் நிதிவழங்கப்பட்ட தெலுங்கு-கங்கா கால்வாய்த் திட்டத்தில் ஏற்பட்ட தில்லுமுள்ளுகளில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாய் இருக்கின்றன!

1. பொதுப்பணி நீர்ப்பாசான நதியிணைப்புத் திட்டங்கள் சிக்கலானவை! அவையாவும் அரசியல் வாதிகளின் கட்டுப்பாடில் இயங்குபவை! அவர்களது கைக்கடிகார வேகத்தில் ஆமைபோல் நகர்ந்து செல்பவை!

2. தெலுங்கு-கங்கா திட்டத்தின் டிசைன், கட்டுமானப் பணிகளில் பங்குகொள்ளும் மாநிலங்கள் செய்யும், உடன்பாட்டு ஒப்பந்தங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்துக் கூட்டியக்கங்களைத் துவங்க நீண்ட காலம் ஆகிறது.

3. மாநில நதியிணைப்பு திட்டங்களில் அரசியல், பொறியியல், நிதி ஆதாரப் பிரச்சனைகளே முக்கியமாக தலைதூக்கிக் கட்டுப்பாடு, முட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

4. ஆந்திர அரசு முடிவு பெறாதப் பல்வேறு நீர்ப்பாசானத் திட்டங்களுக்காக ஓரளவு நலிந்த நிதிக்கொடையைத்தான் அளித்து வருகிறது. தெலுங்கு-கங்கா திட்டத்துக்கு ஓராண்டு தந்த 80 கோடி ரூபாயில், 50 கோடி ரூபாய் (60%) நடைமுறை நிர்வாகச் செலவுகளுக்கே தீர்ந்து போனது!

5. 20 ஆண்டுகள் திட்ட நிறுவகம் நீண்டதால் கால தாமதம் நிதிச் செலவைப் பல மடங்கு மிகையாக்கி, நீர்ப்பாசான வளர்ச்சிகளைக் குன்றச் செய்தது.

6. கட்டுமானம் செய்யப்பட்ட நான்கு நீர்த்தேக்கங்களும் பொறிநுணுக்கம், நிதிபோதாமை, மனிதர் குறுக்கீடு போன்ற பிரச்சனைகளால் முழுவதும் முடிவு பெறாமல், முழுமட்ட நீரளவை ஏற்றுக்கொள்ள இயலாத தகுதியில் இருந்தன.

7. தெலுங்கு-கங்கா கால்வாய் திட்ட அமைப்பில் பல்வேறு படைப்பு வழிகள் இருப்பினும் அரசியல் அதிகார வர்க்கம் தகுதியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் பங்கு வகித்தது! அரசியல்வாதிகள் கைகாட்டும் திட்டங்கள் அவரது எதிர்கால அதிகாரப் பீடத்துக்குக் கட்டாயமாகவும், ஏணிப் படிகளாகவும் அமைகின்றன!

8. அதிகார வர்க்கத்தை ஆதரித்து ஏணிப்படி அமைக்கும் ‘அரசியல் முகத்துதி வாதிகளின் ‘ [Political Lobbyists] தூண்டுதல்கள் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், கையாளப்படுவதிலும் அல்லது முடக்கப் படுவதிலும் குறுக்கிடுகின்றன! திட்டங்கள் இவரது கைப்பிடிகளில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணர, நிரம்ப அரசியல், சமூக வாய்ப்புகள் கிடைக்கின்றன!

9. சென்னை நகர மாந்தர் குடிநீர்ப் பஞ்சத்தைக் குறைக்க, தெலுங்கு-கங்கா நதியிணைப்புத் திட்டம் நிதிக்கொடை பெற்று உயிர்ப்பிக்கப் பட்டது! இறுதியில் கிருஷ்ணா நதியின் நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் மெதுவாக நிரம்பி, ஆந்திர விவசாயிகளின் கட்டுப்பாடில் நீர்ப்பாசானம் நடந்து கொண்டு, சென்னை மாந்தரின் குடிநீர் அனுப்பு வேண்டுகோள் பல்லாண்டுகள் புறக்கணிக்கப் பட்டது!

10 தேசீயக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் இடையே நிகழும் கூட்டிணைப்பு அல்லது பகைமைப்பாடு நதியிணைப்புத் திட்டங்களை ஏற்று நடத்தவோ, தொடரவோ அல்லது புறக்கணிக்கவோ செய்யக் கூடியது! 2004 மே 14 ஆம் தேதி ஆந்திராவில் தெலுகுதேசக் கட்சி விழுந்து, காங்கிரஸ் கட்சி பதவியைக் கைப்பற்றியது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆதரித்த டியெம்கே கட்சி டெல்லிக்குச் சென்றது. முடிவு! சென்னை பூண்டி நீர்தேக்கத்திற்கு தெலுங்கு-கங்கா முதல்முறையாக நீரைத் திறந்து விட்டது! இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆந்திரா மழை வெள்ள உபரிநீரைச் சென்னைக்கு அளிக்கும். அரசியல் கட்சிகள் மாறும் போது சென்னையின் வரலாறு மாறுவதுபோல், பூண்டியின் நீர்மட்டமும் ஏறி இறங்கும்!

இமயமலை நீர்வளத்தைப் பங்கிடும் முதல் கால்வாய்த் திட்டம்

இந்தியா விடுதலை அடைந்ததும், இமயத்தின் எல்லையற்ற நீர்வளத்தை அணைத் தேக்கங்கள் கட்டி, கால்வாய் வெட்டிப் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் பகிர்ந்து கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அணைக் கால்வாய்த் திட்டங்கள் வெற்றிகரமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1948 இல் ஸட்லெஜ் நதியில் கட்டத் துவங்கி, 1960 இல் முடிந்த உலகிலே பெரிய 740 அடி உயரத்தில் அமைந்த பாக்ரா அணை, 63 சதுர மைல் நீர்த்தேக்கம் சுமார் 6 மில்லியன் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசான வசதி அளித்து வருகிறது. அத்துடன் நிறுவப்பட்ட இரண்டு நீழுத்த மின்சார நிலையங்கள் 1275 மெகாவாட் மின்சக்தி ஆற்றல் பரிமாறி வருகின்றன. பிறகு பாக்ரா வடிகாலில் [Downstream Flow] 8 மைல் கீழே இரண்டாவது அணை நங்கல் 95 அடி உயரத்தில் கட்டப்பட்டு, நங்கல் கால்வாய் நீர்ப்பாசானத்துக்குப் பிரிக்கப்படுகிறது. மேலும் நங்கல் நீர்த்தேக்கத்தில் மின்சார நிலையம் நிறுவப்பட்டு 80 மெகாவாட் ஆற்றல் உற்பத்தியாகிறது.

அடுத்து பியாஸ் நதியில் பாந்தோ 250 அடி உயரத்தில் திருப்பு அணை [Diversion Dam] கட்டப்பட்டு, 351,000 கியூசெக்ஸ் நீரோட்டம் திருப்பப்பட்டு பாந்தோ நீர்த்தேக்கத்தில் சேர்கிறது. அதில் 9500 கியூசெக்ஸ் நீரோட்டம் 25 அடி விட்டம், 8 மைல் நீளத்தில் குடையப்பட்ட மலைக் குகை வழியாக அனுப்பப் பட்டு ஸட்லெஜ் நதியுடன் இணைக்கப் படுகிறது. பாரதப் பொறியியல் வல்லுநர்கள் அணைகள் கட்டி ஜீவநதிகளைத் திருப்பி நீர்த் தேக்கங்களில் அடைத்துத் தேவையான பிரதேசங்களுக்குக் கால்வாய்கள் மூலம் நீரனுப்புதில் கைதேர்ந்த நிபுணராகப் பல்லாண்டு அனுபவம் பெற்றவர்கள்.

1960 ஆம் ஆண்டு சிந்துநதி நீர்வள ஒப்பந்தம் [Indus Water Treaty] இந்தியாவுக்கு ரவி, பீயாஸ், ஸட்லெஜ் நதிகளின் நீர் வெள்ளத்தைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை அளித்தது. அதற்கு முன்பே, ரவி, பியாஸ் நதிகளின் வெள்ளத்தைப் பஞ்சாப், பெப்சு, ராஜஸ்தான் மாநிலங்கள் 1955 இல் உடன்பட்ட ஓர் ஒப்பந்த மூலம் கால்வாய் வெட்டிப் பகிர்ந்து கொண்டன. 1959 ஆம் ஆண்டு பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் உடன்பட்டுச் செய்த பக்ரா நங்கல் ஒப்பந்தம் [Bhakra Nangal Agreement] மூலம், ஸட்லெஜ் நதியின் நீர்வெள்ளம் கால்வாய் பஞ்சாப் வழியாக பஞ்சாப்புக்கும் [85%] ராஜஸ்தானுக்கும் [15%] தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

பாரதம் விடுதலை பெற்றதும் 1948 இல் ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் அமைப்பு உளவு ஆய்வுகள் செய்யப்பட்டு 1956 இல் ஒப்புக் கொள்ளப்பட்டு மத்திய அரசாங்கம் 1200 மைல் தூரம் ஓடும் ராஜஸ்தான் கால்வாயை [புதுப் பெயர்: இந்திரா காந்தி கால்வாய்] முதன்முதலில் அமைத்து ஸட்லெஜ், பீயா நதிகளின் இமாலய நீர்வளத்தைப் பஞ்சாப் ஹையர்க் நீர்த்தேக்கத்தில் [Hairke Barrage] பங்கிட்டுத் தெற்கு ராஜஸ்தானில் ஜெய்சல்மர் வரை செல்கிறது. அதில் முதல் 110 மைல் ஓடும் கால்வாய்ப் பகுதி பஞ்சாப் மாநிலத்தில் இருந்ததால், அம்மாநிலமே அப்பகுதியைக் கட்டியது.

மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி ராஜஸ்தான் வழியாகச் செல்லும் சாம்பல் நதி யமுனா நதியுடன் இணைவதற்கு முன்பு நான்கு இடங்களில் அணைகளால் தடுக்கப் பட்டு, நீர்த்தேக்கங்களில் நீர் சேர்க்கப்பட்டு மின்சார நிலையங்களை இயக்கியும், 1400 மைல் தூரம் நீர்ப்பாசான வசதிகளை அளித்தும் வருகிறது. சாம்பல் நதி சிகரத்தில் 1960 இல் காந்தி ஸாகர் அணை, 1970 இல் ரானா பிரதாப் ஸாகர் அணை, 1972 இல் ஜவாஹர் ஸாகர் அணை, இறுதியாக 1960 இல் கோட்டா நீர்த்தடுப்பும் [Kota Barrage] அமைக்கப்பட்டன. காந்தி ஸாகர் அணையில் 119 மெகாவாட், ரானா பிரதாப் ஸாகரில் 172 மெகாவாட் நீரழுத்த மின்சாரமும், 740 மெகாவாட் அணுமின்சாரமும் தயாராக்கப்பட்டு அணு உலைகளுக்குத் தேவையான கனநீரை [Heavy Water] உற்பத்தி செய்யும் தொழிற் சாலையும் உள்ளது. ஜவாஹர் ஸாகர் அணையில் 99 மெகாவாட் மின்சார ஆற்றல் நிலையம் இயங்கி வருகிறது. கோட்டா நீர்த்தடுப்பு 27,000 கி.மீடர் சதுர அளவைக் கொண்டது.

அமெரிக்க மாநிலங்களுக்கு நீர்ப்பங்கீடு செய்யும் கொலராடோ பூதநதி!

தென்மேற்கு பகுதியில் வல்லமை படைத்தோடும் ஜீவநதியான கொலராடோ நதி அமெரிக்காவின் ‘தாய்நதி ‘ என்று போற்றப்படுகிறது! ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகும் அந்த நதி மலைச் சிகரப்பனி உருக்காலும், என்றாவது பெய்யும் மழைநீராலும் வெள்ளம் பெருகி, அரிசோனா, காலிஃபோர்னியா மாநிலங்கள் வழியாக ஓடி, காலிஃபோர்னியா வளைகுடாவில் சங்கமம் ஆகிறது. அதன் நீர்வெள்ளம் 80% பனி உருக்காலும், மீதம் நலிந்த மழை நீராலும் பெருகி ஓடுகிறது. அதன் நீரோட்டம் ஏறி இறங்கி 1956 இல் 960 cfs (cuft/sec) ஆகவும், 1984 இல் 69,800 cfs ஆகவும் கருவிகள் மூலம் அறியப்பட்டது. ஆதலால் நதிப் போக்கில் பல நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு அதன் நீர் வெள்ள அடிப்புக் காலங்களில் சேர்த்து வைக்கப்பட்டது!

சுமார் 80 மில்லியன் ஏக்கர்-அடி நீர்வெள்ளப் பொழிவு ஆண்டுக்குக் கொலராடோ நதியில் நிகழ்கிறது. ஆனால் அந்த நீரை விரையம் செய்யும் முதல் பகையாளி, பூமண்டலச் சூழ்வெளியின் இயற்கைச் சூடு! சுமார் 85% நீர்ப்பொழிவு வெப்பத்தால் ஆவியாகி மறைகிறது! கொலராடோ நதியின் நீர்வெள்ளம் ஒன்பது இடங்களில் நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு நீர்ப்பாசன வசதிகளுக்கும், மின்சக்தி உற்பத்திக்கும், குடிநீருக்கும் பல மாநிலங்களில் பயன்பட்டு வருகிறது.

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [September 30, 2004] (Part III)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே!

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே!

இன்னுயிர் ஈந்தெமை ஈன்று வளர்த்தருள்

ஈந்ததும் இந்நாடே! …. (நாட்டு வணக்கம்)

மகாகவி பாரதியார்

குறுகிய காலத் தவிப்பு! நீண்ட காலக் களிப்பு!

இதை ஆங்கிலத்தில் ‘Short Term Pain! Long Term Gain! ‘ என்று சொல்வார்கள். இதன் எதிர்மறை குறுகிய கால உவப்பு! நீண்ட காலத் தவிப்பு! சிறிது காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கிக் கொள்ள விரும்பாதவர், நீண்ட காலத்துக்கு அனுபவிக்கும் பலாபலன்களை அடையத் திட்டமிடாதவர்கள்! அதே சமயம், குறுகிய கால தவிப்பைத் தவிர்ப்பவர்கள், நீண்ட காலத் தவிப்புக்கு விதை நடுபவர்கள்! நாற்பத்தியிரண்டு நதியிணைப்புத் திட்டங்களில் பெரும்பான்மையானவை மெய்யாகப் பலன்தரக் கூடியவை என்று நம்ப இடமிருக்கிறது. ஜனத்தொகையைப் பேரளவில் பெருக்கிக் கொண்டே போகும் இந்தியாவின் பூத வயிற்றுக்கு, நதியிணைப்பு நீர்ப்பாசானங்கள் ஆயிரங் காலப் பயிர்களாய் நீண்ட காலம் உணவளிக்கப் போகின்றன என்பதில் சற்றேனும் ஐயமில்லை! குறுகிய காலத்தில் நிதி திரட்டல், குன்றிய சமயத்தில் மாநில அரசுகள், மாநில மக்கள் உடன்பாட்டைப் பெறுதல், குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பெரும் இடப்பெயர்ச்சிகளைத் திட்டமிட்டுச் செய்முறையில் காட்டுதல் ஆகியவை யாவும் மக்கள் படப்போகும் குறுகிய காலத் தவிப்புகளே! ஐந்து அல்லது பத்தாண்டுகள் மக்கள் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் பெறப் போகும் நீர்வள, நிலவளப் பயன்பாடுகள் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிச்சயம் நீடிக்கத்தான் போகின்றன!

ஐக்கிய தேசீயப் பேரவைக் கண்காணிப்பில் நதியிணைப்புத் திட்டங்கள்

பூதளப் பூகோளக் காலநிலைச் சூழ்மண்டல ஆதரவு பெற்ற நதியிணைப்புத் திட்டங்கள் கால தாமதம் அடைவதற்கும், நிதி விரையம், நிதியிழப்பு ஆவதற்கும், நிறைவேறாமல் போவதற்கும் காரணமாகும் கர்த்தாக்களில் அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர், எஞ்சினியர்கள் ஆகியோர் போன்று பலர் அடங்கியுள்ளார்கள்! ஏராளமாக நிதிப்பணம் புரளும் தேசீய நதியிணைப்புத் திட்டங்களை அரசியல், சமூகக் கலகவாதிகள் தமது திருவிளையாடல் அரங்கின் கைப்பொம்மைகளாக ஆட்டிப் படைக்கப் பல வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன! உலக வங்கியின் உறுப்பினர்கள், உள்நாட்டு வங்கிகளின் வல்லுநர்கள் பதவி பெற்ற தனித்துறை நிதிக்குழுக் கட்டுப்பாடாலும், நீதிபதிகள், கல்லூரிப் பேராசிரியர் ஆகியோரைக் கொண்ட தனித்துவ நிபுணக்குழு கண்காணிப்பாலும் திட்டங்களின் முன்னேற்றத்தில் காலக் கடப்பு, நிதி சுருட்டல் போன்ற தவறுகள் நேராமல் தடுக்க முடியும்! நதியிணைப்புத் திட்டங்கள் ஒவ்வொன்றும், ஐக்கிய தேசீயப் பேரவைப் [United Nations Organization (UNO)] பிரதிநிதிகளின் நேரடி மேற்பார்வையில் நிறுவகமாக வேண்டும்!

உலக நாடுகளில் பயனளிக்கும் நீர்ப்பாசானத் திட்டங்கள்

நதியிணைப்புத் திட்டங்கள், கால்வாய் நீர்வசதித் திட்டங்கள் உலக நாடுகளில் பல்லாண்டுகள் பின்பற்றப்பட்டு வெற்றிகரமாகப் பயனளித்துக் கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் காலிஃபோர்னியா ஒரு மாநிலம்தான் 420 மைல் [720 கி.மீ] தூரம் கால்வாய் மூலம் வடபுற மலைத்தொடரின் உபரி வெள்ளத்தைச் செழிப்பான தென்பகுதி நிலங்களுக்கு வெற்றிகரமாகப் பாய்ச்சி வருகிறது. அடுத்த மகத்தான திட்டம், துருக்கி நாட்டிலிருந்து 1800 மைல் [2000 கி.மீ] தூரம் பைப்புகள் மூலம் அரேபியாவுக்கு நீரனுப்பும் ‘சமாதானப் பைப்தொடர்பு ‘ [Peace Pipeline]. அமெரிக்காவில் கொலராடோ நதி டெக்ஸஸ் மாநிலம் வழியாகக் கடலில் சங்கமமாகிறது. டெக்ஸஸில் கொலராடோ நதிநீரைப் பயன்படுத்த மேல்நிலை, இடைநிலை, கடைநிலை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. டெக்ஸஸ் மாநிலத்துக்கும், மெக்ஸிகோ நாட்டுக்கும் கொலராடோ, கிராண்டி நதிகளின் நீரைப் பங்கீடு செய்ய உலகமய ஒப்பந்தம் [International Treaty] செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் சட்லெஜ் நதியின் இமாலய நீர்வளத்தைப் பஞ்சாப்-ராஜஸ்தான் மாநிலங்களுக்குப் பகிர்ந்தனுப்பும் ராஜஸ்தான் கால்வாய் [இந்திரா காந்தி கால்வாய்] நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் குடிநீர், நீர்ப்பாசானப் பலன்களைக் கொடுத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கங்கா காவேரி கால்வாய் இணைப்புத் திட்டம்

வடக்கே ஓடும் ஜீவநதிகளைத் தென்புறம் ஓய்ந்துபோன நதிகளுடன் இணைத்து நீரைப் பங்கீடு செய்யும் திட்டங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பலமுறை நீர்வளத்துறை நிபுணர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. நீர்வளப் பொறியியல் வல்லுநரும், முந்தைய மத்திய மந்திரியுமான டாக்டர். கே.எல், ராவ் 1500 மைல் நீளத் திட்டமான கங்கா காவேரி கால்வாய் இணைப்பைப் பற்றி 1972 இல் ஆலோசனை கூறி யிருந்தார். அதன்படி பாட்னாவுக்கு அருகே கங்கை நதியில் 60,000 கியூசெக்ஸ் (cusecs) நீர் வெள்ளத்தை ஆண்டுக்கு 150 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அந்த வெள்ளத்தில் 50,000 கியூசெக்ஸ் அளவு அடுத்து அரை மைல் தூரம் குழாய்கள் மூலமாகத் தென்னகப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்றும் விளக்கி யிருந்தார். மிஞ்சிய 10,000 கியூசெக்ஸ் கங்கை நதி அரங்குகளுக்கும் அளிக்கப்படும்.

அத்துடன் 3000 கியூபிக் மீடர் வெள்ளத்தை 15 மீடர் உயரத்தில் கொண்டு செல்லும் கங்கா பிரமபுத்திரா கால்வாய்த் திட்டத்தையும், 300 கியூபிக் மீடர் நீரைத் தென்னகத்துக்கு அனுப்பும் மகாநதித் திட்டத்தையும், கிளை நதிகள் நீரை 275 மீடர் உயர்த்தி குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பும் நர்மதா நதிக் கால்வாய்த் திட்டத்தையும் டாக்டர் ராவே அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார். பணத்தை விழுங்கும் அந்தக் கால்வாய்த் திட்டங்கள் பல காரணங்களால் அங்கீகாரம் அடையவில்லை. நீர் வெள்ளத்தை மின்சக்தி மூலம் உயரத்தில் அனுப்புவதும் மேற்கொண்ட செலவாகக் கருதப்பட்டது. அத்துடன் கால்வாய் குறுக்கிட்டுச் சூழ்மண்டலத் தோற்றத்தை கோரமாக்கிவிடும் என்ற அச்சமும் உண்டானது! நதிகள் சங்கமமாகும் கடலரங்கு நீரோட்டங்களைக் கட்டுப்படுத்திப் பங்கீடு புரிவது தேசீய, உலக விதிகளில் விவாதிக்கப்பட்டது. பிரிட்டன் ஆண்ட காலங்களிலும் நதிகளுக்குள் நீரை திருப்பிப் பரிமாறிக் கொள்வது கடுமையாகத் தர்க்கத்தில் எதிர்க்கப்பட்டது. வட இந்தியாவில் பாக்ரா நங்கல் போன்ற பெரிய அணைகள் கட்டிய காலங்களிலும், காப்டன் தஸ்தூரின் மாலைக் கால்வாய்த் திட்டம் புறக்கணிக்கப்பட்டது.

நதியிணைப்பு அமைப்புகளைத் திட்டமிடுவது பகற்கனவா ?

நதிகளில் மிஞ்சிக் கடலில் வீணாகும் வெள்ளத்தைச் சேமித்துக் கால்வாய் மூலமாகக் காய்ந்துபோன நதிகளில் இணைக்கும் ஆக்க வினைகளைக் கனவென்றும், தவறென்றும், நிதி விரையம் என்றும் இந்தியாவின் பல திசைகளிலிருந்தும் எதிரொலிகள் கிளம்பியுள்ளன! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப்பாசானத் தளர்ச்சி பெரும் பிரச்சனைகளாக இந்தியாவில் விரியப் போகிறதென்று பல தீர்க்க தெரிசிகள், அரசியல், சமூக ஞானிகள் எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள். நீர்ப்பஞ்சம் உண்டாகி மக்களின் தொண்டைகள் காய்வதற்கு முன்பாக அரசாங்கம் ஆக்க வழிகளில் முற்படவில்லை யானால், பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு முற்றிவிடும்! உலகில் ஓடும் பல ஜீவநதிகள் இந்தியாவின் புனித கங்கை, யமுனா நதிகளைப் போன்றே துர்மாசுக்கள் கலப்பாகிக் குடிநீருக்குரிய தகுதி பெறாதவை. ஆறுகளின் நீர்வளம் சுத்தீகரிக்கப்பட்டுக் குளோரினும் கலக்கப்பட்டுக் கிருமிகள் கொல்லப்பட்டால்தான், அவற்றின் நீரைக் குடிநீராக உட்கொள்ள அனுமதி கிடைக்கும். மேலும் மிஞ்சிய மழைக்கால நீர் வெள்ளத்தை வெட்டிய கால்வாய்கள் மூலமாக தூர இடங்களுக்கு அனுப்பி, நீர்த் தேக்கங்களில் சேமித்து வைத்துக் கொண்டால், வேளாண்மைக்கும், தொழிற் துறைகளுக்கும், புழக்க வசதிகளுக்கும் தேவையான காலத்தில் பேரளவில் பயன்படும்.

1980 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 850 கோடி ரூபாய்ச் செலவாகி அமைக்கப்பட்டு வரும் 180 மைல் [306 கி.மீ] தூர ஸட்லெஜ்-யமுனா நதியிணைப்புக் கால்வாய் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடந்தும் முடிவு பெறாமல் முடங்கிக் கொண்டு வருவதன் காரணங்கள் தெரியவில்லை! அதிக விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட ஸட்லெஜ்-யமுனா இணைப்புத் திட்டம் ஏராளமான நிதியை விழுங்கிக் கொண்டும், காலத்தைக் கடத்திக் கொண்டும் பலன்தராத நீர்ப்பாதையாகப் பாழ்பட்டு வருகிறது! அதற்கு முக்கியக் காரணம்

நீர்வள முடைய பஞ்சாப் மாநிலம், நீர் தேவைப்படும் ஹரியானா மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறையை நம்பவில்லை! அதனால் பூர்த்தி செய்ய வேண்டிய கால்வாய் அமைப்பைத் தொடராது நிறுத்தி வைத்துள்ளது! வட நாட்டில் நொண்டிக் கொண்டிருக்கும் ஸட்லெஜ்-யமுனா கால்வாய் போன்று, தென்னாட்டில் சென்னையின் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்புவதாக அமைக்கப்படும் ‘தெலுங்கு-கங்கா திட்டம் ‘ 2001 மேமாதம் 6.7 tmc [thousand million cuft] நீர்வெள்ளத்தைக் குடிநீருக்கு அளித்தாலும், இன்னும் முற்றுப் பெறாமல் நிதி முடக்கத்தில் மூழ்கி 2005 ஆண்டில் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

இந்தியாவில் இயங்கிவரும் வெற்றிகரமான நதியிணைப்புகள்

1. தமிழ்நாட்டின் பெரியாறுத் திட்டம்: கேரளம், தமிழ்நாட்டு மாநில எல்லை மலைகளில் உற்பத்தியாகி மேற்கே அரபிக் கடலில் சங்கமமாகும் பெரியாறு நதியின் நீரை அணைக்கட்டித் திருப்பி, வைகை நதியில் கலக்க 1895 இல் பிரிட்டன் திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்தது. மலை உச்சியில் 160 அடி நீளத்தில் [48 மீடர்] அணைகட்டி, நீரைத் தேக்கித் திசைதிருப்பி சுமார் ஒருமைல் [1740 மீடர்] நீளக்குகை ஒன்றை மலையில் குடைந்து, அதன்மூலம் வினாடிக்கு 40.75 கியூபிக் மீடர் [cubicmeter/sec] நீர் வெள்ளம் அனுப்பப்படுகிறது. அந்த வெள்ளம் கம்பம் வழியாக வைகை நதியுடன் இணைக்கப்பட்டு, 150 மைல் கிழக்கே ஓடி 57900 ஹெக்டா ஏக்கர் வயல் பரப்புகளுக்கு நீர்ப்பாசான வசதி அளித்து வருகிறது. அதற்குப் பிறகு தற்போது இணைப்பு நீட்சி செய்யப்பட்டு 81,000 ஹெக்டா ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசானம் செய்யப் படுகிறது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு அதன் நீரழுத்தம் பயன்படுத்தப் பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியில் 140 மெகா வாட் நீர்மின்சார நிலையமும் நிறுவகமாகி இயங்கி வருகிறது.

2. பரம்பிக்குளம் அலியாறுத் திட்டம்: தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையில் புகுந்து செல்லும், பன்முக நதிப் படுகைகளில் பரவிய சிக்கலான ஏழு சிற்றாறுகள் இணைந்து பல்திறம் கொண்ட திட்டமிது. தற்போது 162,000 ஹெக்டா ஏக்கர் வயல்களுக்கு நீர்ப்பாசானம் அளித்துக் கொண்டு, அதே சமயத்தில் 185 மெகா வாட் நீர்மின்சாரமும் பரிமாறி வருகிறது. தமிழகத்தில் கோயமுத்தூர் மாவட்ட வயல்களுக்கும், கேரளத்தில் சித்தூர் பகுதிகளுக்கும் நீர்ப்பாசான வசதி கொடுக்கிறது.

3. கர்நூல்-கடப்பா கால்வாய்: 1863 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் தனியார் கட்டுமானக் கம்பெனி ஒன்று அமைத்த கால்வாய் இது. ஆந்திராவில் துங்கபத்ரா நதியில், கர்நூல் நகரின் மேலோட்ட முகப்பில் [Upstream Side] 30 அடி உயரத்தில் அணைகட்டி, 180 மைல் நீளக் கால்வாய் அமைக்கப் பட்டிருக்கிறது.

கால்வாயின் நீரோட்டத் திறம் வினாடிக்கு 85 கியூபிக் மீடர் [85 cumecs]. அதன் ஓட்டம் கிருஷ்ணா பெண்ணாறு படுகை வரை நீட்சியாகி, நீர்ப்பாசானம் செய்யும் நிலப்பகுதி 52,700 ஹெக்டா ஏக்கர் என்று அறியப்படுகிறது. இந்திய அரசு 1882 இல் தனியார் கைவசம் இருந்த கர்நூல்-கடப்பா கால்வாயைத் தனது நேரடிக் கண்காணிப்புக்கு ஏற்றுக் கொண்டது.

4. தெலுங்கு-கங்கா கால்வாய்த் திட்டம்: 1983 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2005 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்பட்டு 21 வருடங்கள் நீட்டப்பட்டுச் சமீபத்தில் [2004] முடிந்ததாகக் கூறப்படும் திட்டமிது! சென்னை நகரின் நீர்நெருக்கடித் தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமிது! மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் மொத்தம் 15 tmc [Thousand Million cuft] நீர் வெள்ளம் கொடுக்க முன்வந்தது! ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து, கிருஷ்ணா நதியின் நீரைத் திறந்த கால்வாய் மூலம் முதலில் பெண்ணாறு பள்ளத்தாக்கில் உள்ள சோமசீலா ஏரிக்குக் கொண்டு வந்து விடப்பட்டது. அதற்கு இடைப்பட்ட 120 அடி உயர மலை ஒன்று உடைக்கப்பட்டு பிளக்கப் பட்டது! பிறகு அந்த ஏரியிலிருந்து 27 மைல் தூரக் கால்வாய் வழியாக நீர்வெள்ளம் கந்தலேறு நீர்த்தேக்கத்துடன் இணைப்பானது. அதன் பின் அடுத்து 120 மைல் தூரம் கால்வாய் வெட்டப்பட்டு, சென்னை பூண்டி நீர்த் தேக்கத்துடன் சேர்க்கப்படும்.

இருமாநிலங்களின் ஒப்பந்தப்படி சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர்க் கொள்ளளவு 12 tmc அனுப்பப்பட வேண்டும். அதே சமயத்தில் தெலுங்கு-கங்கா கால்வாய் வரும் வழியில் ஆந்திராவில் 2.33 லட்சம் ஹெக்டா ஏக்கர் வயல்களுக்கு நீரளிக்கும். 1983 ஆண்டுத் துவக்க நிதி மதிப்பீடு: ரூ 637 கோடி! 1997 ஆண்டு மதிப்பீடு ரூ 2470 கோடியாக நான்கு மடங்கு அதிகமானது! அதில் தமிழ் நாட்டின் பங்கு: ரூ 639 கோடி! முப்பெரும் மாநிலங்கள் முன்வந்து முழு மனதுடன் சென்னைக்கு நீர் அளிக்கும் தெலுங்கு-கங்கா நதியிணைப்புக் கால்வாய், கால தாமதமாகிப் தமிழரின் பொறுமையைச் சோதித்தாலும், ஏராளமான நிதியை மீண்டும், மீண்டும் கரைத்தாலும், இந்திய ஒழுங்கீனச் சூழ்நிலையில் ஓரளவு பாராட்டப்பட வேண்டிய திட்டமே! தெலுங்கு-கங்கா கால்வாய் திட்டத்தில், புதிய திட்டங்களை அமைக்க இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருக்கின்றன!

நதியிணைப்புத் திட்டங்களில் மக்கள் படும்பாடு!

11. இமாலய நதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்க வெட்டப்படும் 24,000 மைல் தூரத்தில் பல உள்நாட்டுக் கால்வாய்கள், அணைகள், நீர்த்தேக்கங்கள் உருவாகப் போவதால் பேரளவு மாந்தருக்குப் பெருங்கொண்ட இடப்பெயர்ச்சிகள் ஏற்படும். புதிதாகக் கட்டப்படும் அணைகளும், நீர்த்தேக்கங்களும், கால்வாய்களும் நதிகள் எப்போதும் புகும் கடற்படுகைப் பகுதிகளை மாற்றி அமைத்துப் புதுவித நீரோட்ட மடைகளை உண்டாக்கி, எப்போதாவது வெள்ளநீர் அடைப்புகள் சிக்கிக் கொண்டு மில்லியன் கணக்கான ஹெக்டேக்கர் பரப்பு வேளாண்மை வயல்களையும், கானங்களையும் மூழ்க்கிவிடலாம்!

2. குறுக்கிலும், நெடுக்கிலும் செல்லும் புதிய அணைக் கால்வாய்களால் பழைய வேளாண்மை வயல்கள் அழிக்கப்பட்டு, சூழ்மண்டல எழிற்கோலம் சிதைக்கப்படலாம்.

3. நதி யிணைப்புகள் பூதள மாறுதல் செய்து, அரங்கின் பூகோள அமைப்பையே கோரமாக்கி விடலாம்.

4. தேசீய ஒருமைப்பாடு உண்டாக்க செய்யப்படும் மாநில நதியிணைப்புகளில் உடன்பாடுகள் ஏற்படுவதற்குப் பதிலாக தீவிர வெறுப்பும், தீராத வில்லங்கமும் விளையலாம்.

5. நிதிக்கொடைகள் வற்றி நிரப்ப முடியாது, நடுமையத்தில் கால்வாய் நகர முடியாமல் நின்று போகலாம்.

6. நீர்வளக் கணக்கீடுகளில் பிழைகள் உண்டாகி, முழுக்கால்வாய் முடிவு பெற்றதும், நீரோட்டம் கணித்த அளவில் ஓடாமல் சுருங்கிவிடலாம்.

7. நதியிணைப்புக் கால்வாய்கள் முடிந்து வெற்றிகரமாக ஓடிவரும் நீர்வெள்ளத்தைப் புதிய மாநில அரசாங்கம் நிறுத்தி விடலாம்.

8. இடப்பெயர்ச்சியில் நட்டயீடு அளிக்கப்படும் மக்கள் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப் படலாம்.

9. திட்ட மிட்டபடி நதியிணைப்பைத் தொடர முடியாது, திசைமாற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டு, நிதிச் செலவும், காலக் கடப்பும் நேர்ந்திடலாம்.

10 மாநில அரசுக் கட்சிகள் மாறி, நதியிணைப்புத் திட்டங்கள் தொடரப்படாது நிறுத்தப்பட்டு விடலாம்!

11 அணைக்கட்டு, நீர்த்தேக்கம், கால்வாய் கட்டமைப்புகளில் பழுதுகள், விரிசல்கள் ஏற்பட்டோ, உடைந்தோ வெள்ளம் ஊரை மூழ்க்கிவிடலாம்.

நதிகள் இணைப்புத் திட்டத்தில் எழும் பிரச்சனைகள்

இமாலத் திட்டமான நதிகள் இணைப்புப் பணிகளில் ஏற்படும் பெரும்பான்மையான சிக்கல்கள், சிரமங்கள், பிரச்சனைகள் கீழ்வரும் 20 தலைப்புகளில் அடங்குகின்றன. இந்தச் சிறிய பிரச்சனை நிரலில் அடங்காமல் வேறு சில வில்லங்களும், சிரமங்களும் எதிர்பாராமல் உண்டாகலாம்!

1. மத்திய அரசு, மாநில அரசுகளின் நில ஆதிக்கச் சட்ட வரையரைகளில் முரண்பாடுகள்.

2. நதியோட்ட முறைகளிலும், கடலில் நதிப் படுகை விரிவு முறைகளிலும் நீரோட்டக் கணிப்புத் தவறுகள் நேருதல். நதியிணைப்புகளில் நீர்வள இருப்பு, எடுப்புக் கணிப்பீடுகளில் குறைபாடுகள், பழுதுகள், பிழைகள் ஏற்படுதல்.

3. நதியிணைப்புத் திட்ட ஆணை, மேற்பார்வைக் குறைபாடுகள்

4. பூகம்பம், சைக்குளோன், சூறாவளி போன்ற பூதளப் பூகோளத் தடைகள் [Geological Seismic Restrictions].

5. தள உளவு, தள வரைவுக் குழுவினர் தயாரிக்கும் சர்வேப் பதிவுகளில் பிழைகள் ஏற்படுதல். நீரோட்டம், நிலத்துறைப் பொறியியல் பிரச்சனைகள். குன்றுப் பகுதிகளில் கால்வாய் வெட்டுவதா அல்லது குகைகள் குடைவதா என்பதில் தீர்மானக் குழப்பங்கள் உண்டாகுதல்.

6. நிதிச்சேமிப்பு, நிதிஒதுக்கு, நிதிச்செலவு, நிதிக் கட்டுப்பாட்டுச் சிக்கல்கள்

7. சமூகக் கலாச்சார எதிர்ப்புகள், குறுக்கீடுகள், சிதைவுகள்.

8. சூழ்மண்டல தோற்றம், காடு வனப்பு, வயல், வனத்துறை அழிப்புச் சீர்கேடுகள்

9. மாநில அரசியல், இனக்கட்சிகள், கிராம மக்கள் உடன்படாத் தடைகள்

10. பேரளவு இடமாற்றம், இடநகர்ச்சிகளில் [Large Scale Displacements & Relocations] ஏற்படும் பிரச்சனைகள்

11 இல்லங்கள், கடைகள், தெருக்கள் நீக்கப்பட்டு இடநகர்ச்சி நட்ட ஈடு அளிப்பில் [Relocation Compensation] முரண்பாடுகள், தகராறுகள்.

12. அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள பழைய நீர்நிலச் சண்டைகள்

13. கட்டமைப்பு நிறுவக ஒப்பந்த அளிப்புத் [Contract Agreements] தகராறுகள்

14. நகரக் கிராமப் பொதுமக்கள் புறம்போக உடன்படாமை [Relocation Disagreements]

15. நில ஆக்கிரமிப்புத் தகராறுகள், இடையூறுகள்.

16. லஞ்சக் கண்டுபிடிப்பு, தண்டனை, உடன்பாட்டு முறிவுப் பிரச்சனைகள்.

17. நிதிக்கொடை சுருங்கியோ, பிரச்சனைகள் மிகுந்தோ கால்வாய்த் திட்டங்கள் கால தாமதம், முடக்கம். 18. ஊழியர் அதிருப்தி, ஊதியச் சண்டை, வேலை நிறுத்தம்

19. தேர்தலில் கட்சியும், ஆட்சியும் மாறித் திட்டங்கள் புறக்கணிப்பு

20. அண்டை நாடுகள் நேபாளம், பூதான், பங்களா தேசம், பாகிஸ்தான் நதிநீர்ப் பங்கீடு உடன்பாடுகளில் மறுப்பு, மாறுபாடு, பிரச்சனைகள்.

நதியிணைப்புத் திட்டங்கள் வெற்றி பெற சில ஆலோசனைகள்

திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில், அனுமதித்த நிதிச் செலவில் வெற்றிகரமாக முடிவு பெற வேண்டும். கால தாமதமாகும் போது, நிதிக்கொடை காலியாகி மக்கள் பொறுமையும் கரைகிறது! பிறகு நிதி திரட்டக் காலதாமதம் ஆகிறது! நிதி கிடைக்காமல் போய் பாதி முடிந்த திட்டமும் நித்திரையில் மூழ்கிக் குறட்டை விடுகிறது! அல்லது குன்றிய நிதி திரட்டப்பட்டுத் திட்டம் இன்னும் சிறிது தூரம்போய் மூச்சுத் தடுமாறி இளைப்பாறிக் கொள்ளும், இன்றேல் மறுபடியும் படுத்துக் கொள்ளும்! இவ்விதம் ஆமை நகர்ச்சி வேகத்தில் நதியிணைப்புத் திட்டங்கள் தற்போது இயங்கிக் கொண்டு வருன்றன! உதாரணம் 1. சென்னைப் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்பக் கட்டப்படும் ‘தெலுங்கு-கங்கா கால்வாய் நீர்த்திட்டம் ‘ 2. ஒருமைப்பாடு இல்லாத பஞ்சாப் ஹரியான மாநிலங்களுக்கு இடையே பகைப்பாடு மிஞ்சி, உச்ச நீதி மன்றத்தில் ஊஞ்சல் ஆடும் ‘ஸட்லெஜ்-யமுனாக் கால்வாய் நீர்த்திட்டம் ‘. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவி செய்யலாம்:

1. திட்டங்கள் குறிப்பிட்ட கால வரையறையில் முடிவு பெற, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தனி நிபுணக் குழுவினர் மாதம் தோறும் கூடிச் சீராய்வு செய்து, தடையிடும் பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.

2. நிதி ஓட்டம், நிதி முடக்கம், நிதி விரையம், நிதிச் செலவு, நிதி இருப்பு, நிதிக் கொடை ஆகியவற்றை மாதம் தோறும் இருதர நிதிக்கட்டுப்பாடுக் குழுவினர் சீராய்வு செய்து, கண்காணித்து வர வேண்டும். நிதிக்கட்டுப்பாடுக் குழுவினரில் உலக வங்கி, மாநில வங்கிகளின் நிபுணர்கள் உறுப்பினாராக அமைக்கப்பட வேண்டும்.

3. திட்டங்களுக்குப் ‘பச்சைக் கொடி ‘ காட்டுவதற்கு முன்பே, மக்கள் இடப்பெயர்ச்சி, நில ஆக்கிரமிப்பு, நட்ட ஈடளிப்பு, திட்ட வழக்குப் பிரச்சனைகள், திட்ட மாறுபாடுகள், மறு பாதைகள் போன்றவை தீர்க்கப்பட்டு சட்ட ரீதியான மாநில ஒப்பந்த உடன்பாடுகள் கைவசம் இருக்க வேண்டும். முதலாவதாகத் தீர்க்கப்படாத இம்மாதிரிப் பிரச்சனைகள், இடையிலே எழுந்தால் திட்டம் காலதாமதம் ஆக்குவதோடு, நிதியையும் விழுங்கி முடங்கிப் போய்விடும்!

4. திட்டங்களில் நிதிக் கையாடல், நிதித் திருட்டு, கைப்பணம், லஞ்சம், சாதனக் கடத்தல் போன்ற தவறுகள் செய்வோர் கண்டுபிடிக்கப் பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தவறுகளைச் சீராய்வு செய்ய மாநிலங்களைச் சேராத நடுத்தர நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

5. ஒவ்வொரு கால்வாய்-அணை-நீர்த்தேக்கத் திட்டமும் ஐக்கிய தேசீயப் பேரவைப் பிரதிநிதி ஒருவரால் நேரடிக் கண்காணிப்பில் நிறுவகமாக வேண்டும்.

இமாலய நதியிணைப்புத் திட்டங்களில் இந்தியா முற்பட வேண்டுமா ?

5.6 பில்லியன் ரூபாய் நிதியைப் பத்தாண்டுகள் புகுத்தி பாரத மாநில மக்கள் யாவும் ஒருங்கிணைந்து நீர்ப் பற்றாக்குறை பிரச்சனைகளை தவிர்க்கத் தேவையில்லை என்று முட்டுக்கட்டை போடுபவர் யார் ? பூத நதிகளில் ஆண்டு தோறும் பொங்கி வழிந்து கடலில் வீணாகும் நீர் வெள்ளத்தை அணைகட்டித் தடுத்துக் கால்வாய் மூலம், தென்னகத்தின் காய்ந்து போன நதிகளில் சேர்க்க முற்படும் ஆக்க நிபுணர்களைத் தாக்கி நிறுத்துபவர் யார் ? பாரதத்தின் மாபெரும் நதிகளில் 21 கிளைக் கால்வாய்களை வெட்டி, ஓய்ந்து போன நதிகளுடன் இணைத்து வட நாட்டிலும் தென்னாட்டிலும் 35 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலத்தில் நீர்ப்பாசான வேளாண்மையை விருத்தி செய்து தானிய உற்பத்தியைத் தடுக்க முயல்வது யார் ? நீர்வளக் கால்வாய்கள் வெட்டுதல், பேரணைகள் கட்டுதல், நீர்த்தேக்கம் கண்மாய்கள் தோண்டுதல், நீர்மின்சார நிலையங்கள் அமைத்தல் போன்ற தொழிற்துறைகள் பெருகி, 34,000 மெகாவாட் மின்சார ஆற்றல் உண்டாக்கிப் போக்குவரத்து வசதிகளும் பெருகப் போவதைக் கனவென்று ஒதுக்கிப் புறக்கணிப்பது யார் ? இந்த எதிர்ப்பாளிகள் யாவரும் இந்தியர் நலம் பேணும் இந்தியரா அல்லது இந்தியர் முன்னேற்றை முறிக்க முயலும் இந்தியாவில் வாழும் அன்னியரா ? இந்த வினாவுக்கு இந்தியரே பதில் கூறட்டும்.

ஆங்கிலேய ஆட்சியின் போது, அடிமை இந்தியாவை ஒன்றுபடுத்தி, நகரெங்கும் குறுக்கிட்டுச் செல்லும் பல்லாயிரம் மைல்கள் இரயில் பாதைகளை அமைத்து அன்னியர், அனைத்து மாநிலங்களையும் ஒரு தேசமாக இணைத்தனர்! ஆங்கில ஆட்சி வெற்றிகரமாக முடித்த இரயில்பாதைகளை, இப்போது விடுதலை அரசாங்கம் இந்தியாவில் செய்து முடிக்க மாநில அரசுகள் முட்டுக்கட்டை போடாமல் அனுமதிக்குமா என்பது ஐயப்பாட்டில் உள்ளது! பாரதம் பூரண விடுதலை பெற்றாலும், மாநிலங்கள் பல இன்னும் பழைய அரச பரம்பரைகள் தனியாக ஆட்சி செய்த முறையில்தான் நடந்து கொள்கின்றன. சர்தார் வல்லபாய் படேல் தனித்தியங்கிய இந்திய அரசர்களின் ஆட்சியைக் கலைத்துப், பாரத நாட்டுக் குடியரசில் யாவற்றையும் ஒன்றாய் இணைத்தார்! இப்போதுள்ள மத்திய அரசு நதியிணைப்புப் பிரச்சனைகளைத் தீர்த்துப் பல்வேறு மாநிலங்களை உடன்பட வைத்து, ஆக்கவினைகள் புரிய ஒரு திசைப்போக்கில் கொண்டுவர முடியுமா என்பது தெரியவில்லை! மொழிவாரியாகப் பிரிவுபட்ட மாநிலங்கள், நீர்ப்பங்கீட்டுப் போரில் பாகப் பிரிவினைப் போராட்டம் நடக்கும் உள்வீட்டுச் சகோதர்போல் நடந்து கொள்கிறார்கள்! இந்தியாவின் ஜீவ உறுப்புகள் போன்ற அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இயங்கி, நதியிணைப்புத் திட்டங்களை முழு முயற்சியில் முடிக்காவிட்டால், நீர்ப்பஞ்சமும், நீர்ப்பாசானச் சீர்கேடுகளும் விளைந்து சில உறுப்புகள் பழுதாகி, அவை முழு இந்திய மேனியையும் பாதிக்கும்படி வைத்துவிடும்!

இமாலயப் பிரதேசங்களில் பூகம்பம் நேர்ந்து, நதியிணைப்பு அணைக்கட்டு, கால்வாய், நீர்த்தேக்கம் ஆகியவை உடைந்து உயிர்ச்சேதமும், நிலச்சேதமும் நிகழ்ந்துவிடும் என்று அஞ்சுவோர், ஐம்பது ஆண்டுகளாக இமயமலை அடிவாரத்தில் ஓடும் பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாயையும், 800 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள பாக்ரா நங்கல் அணைகளையும், நீர்த்தேக்கங்களையும், டெல்லிக்கருகே நிறுவப்பட்டுள்ள நரோரா இரட்டை அணுமின் நிலையத்தையும் பார்த்து வரவேண்டும். இந்திய அரசாங்க நீர்த்துறைப், பூதள நிபுணர்கள் கணக்கீடும், மதிப்பீடும் செய்த 42 நதியிணைப்புத் திட்டங்களில் பல காரணங்களால் 25% புறக்கணிப்பாகி நான்கில் மூன்றைச் சாதித்தாலும், முப்பது நீரிணைப்புத் திட்டங்களால் நீர்வளமும், நீர்ப்பாசானமும் இந்தியா வெங்கும் பேரளவு பெருகத்தான் போகின்றன. இமாலய நதியிணைப்புத் திட்டங்களால் இந்தியப் பூதளத்தின் எழில்கோலம் அழிந்து போகும் என்று கூக்குரல் இடும் எதிர்ப்புவாதிகள் நீர்ப்பஞ்ச பிரச்சனைகளுக்கு வேறு சில நிரந்தர, நீண்டகால ஆலோசனைகளைக் கூறலாம்! உங்கள் வீட்டுக் குழாயில் ஒருதுளி நீரில்லாத போது, வீட்டுக் கிணற்றில் நீர்ச்சுனை வற்றிய போது, ஊர் ஆற்றில் நீரோட்டமின்றிப் பயிர்கள் வாடும் போது, காலையில் பல்தேய்த்து வாய் கொப்பளிக்க ஒரு வாளி தண்ணீருக்கு 100 ரூபாய் கொடுக்கும் போது குமுறி எழும் கோடான கோடி மக்களின் கோபத்தையும், கண்ணீரையும் துடைப்பது எப்படி என்று எதிர்ப்புவாதிகள் பேரளவு நீர்வளத்தை, நீண்ட காலம் அளிக்கும் ஆக்கவழிகளை எடுத்துக் காட்டலாம்!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. SAravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [September 30, 2004] (Part II)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


மன்னும் இமயமலை எங்கள் மலையே!

மாநில மீதது போல்பிறி தில்லையே!

இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே!

இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே ? ….[எங்கள் நாடு]

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்! ….[பாரத தேசம்]

எல்லாரும் ஓர்குலம்! எல்லாரும் ஓரினம்!

எல்லாரும் இந்திய மக்கள்!

எல்லாரும் இந்திய மக்கள்! …[பாரத சமுதாயம்]

மகாகவி பாரதியார்

தேசீய நதியிணைப்புத் திட்டங்கள் பூர்த்தியானால், இந்தியர் ஒருமைப்பாடு வளரப் போவதாய் அரசாங்கம் அறிவித்து வருகிறது! அது தவறான அறிவிப்பு! பகைமைப்பாடு குறைந்து மாநிலங்களுக்குள் ஒருமைப்பாடு மிகுந்தால்தான், நதியிணைப்புத் திட்டம் எதுவுமே நிறைவேறப் போகிறது!

கட்டுரை ஆசிரியர்

முன்னுரை: இந்திய அரசாங்கம் முதலாய்வு செய்து தேர்ந்தெடுத்த நதியிணைப்புத் திட்டங்கள் பாதகத்தை விட கூடுமானப் பலன்களை அளிக்குமாயின், மாநிலங்கள் அவற்றை நிறைவேற்ற முடியும் என்னும் உறுதிப்பாடு கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது. அரசாங்கம் மறு சீராய்வுகள் செய்து, உடன்பாடுகளுடன் உறுதி பெறாத இந்தத் திட்டங்கள் மக்களுக்குப் பலன்தருமா, பாதகம் தருமா, பகை உண்டாக்குமா, நிதி விரையமாகுமா அல்லது நிறுத்தப்படுமா என்னும் தகவலின்றித் திட்டங்களின் தலைவிதியைத் தீர்மானம் செய்வது கடினம். நீர்ப்பங்கீட்டுக்கு ஒருமைப்பாடும், இடப்பெயர்ச்சிக்கு பொறுமைப்பாடும் இல்லாமல் பகைமூளும் மாநிலங்களில் இத்திட்டங்களுக்கு விதையிட்டால் பயிர்கள் வளர்வதற்குப் பதிலாகக் களைகளே விளையப் போகின்றன! ஆதவே மாநில அரசுகளின் பூரண ஒப்பந்தம், பாதிக்கப்படும் மக்களின் உடன்பாடு பெறாத இத்திட்டங்களைத் போற்றிக் கொள்ளுவதோ அல்லது புறக்கணித்துத் தள்ளுவதோ சரியில்லை என்பது என் கருத்து. புதிய முயற்சிகளை ஒப்புக் கொண்டு நிறைவேற்றும் போது எதிர்பார்க்கும் பாதிப்புகளும், எதிர்பாராத பாதிப்புகளும் இடையிடையே எழத்தான் போகின்றன! பாதிப்புகள் எவையேனும் இல்லாமல் எந்தப் பலாபலனும் உண்டாவதில்லை!

நான் ஒரு நீர்ப்பாசான, நீர்வளத்துறை எஞ்சினியர் அல்லன். நதியிணைப்புத் திட்ட பணிக்குழுவில் [Task Force] உறுப்பினரான பாரத ஏவுகணைத் திட்ட அதிபர், டாக்டர் கஸ்தூரிரங்கன் நீர்வளத்துறை எஞ்சினியர் அல்லர்! மக்களைப் பாதித்துப் பலனளிக்கும் சிக்கலான பொறித்துறைத் திட்டங்களில் பங்கெடுத்து வெற்றிகரமாகச் சாதித்த எவரும் நதியிணைப்புத் திட்டங்களைச் சீராய்வு செய்யத் தகுதி உடையவர்களே! இந்தியா, கானடா இரண்டு நாடுகளின் கனநீர் அணுமின்சக்தி நிலையங்களில் கட்டமைப்பு, இயக்கம், பராமரிப்புப் பணிகளில் நாற்பது ஆண்டுகளும், பெரியாறு நீர்மின்சார நிலைய நிறுவகத்தில் சில காலமும் அனுபவம் பெற்ற எனது சீராய்வு முழுமையான தன்று! அது பன்முகப் பார்வையில் இல்லாமல் இருக்கலாம். விடுதலை அடைந்த இந்தியா, இமாலய நீர்வளத்தை திருப்பிப் பாக்ரா, நங்கல் அணைகைளைக் கட்டி, பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாய் மூலம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நீர்ப்பாசான வசதிகளை விருத்தி செய்து வருகிறது. விடுதலை இந்தியாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு மின்சார நிலையங்கள் உருவாகிக் கன யந்திரத் தொழிற்சாலைகள் தோன்றி இந்தியர்களின் நிபுணத்துவமும், எதனையும் நிறுவகம் செய்ய உதவும் பிரம்மாண்டமான யந்திரச் சாதனங்களும், நுணுக்கக் கருவிகளும் கைவசம் உள்ள போது, நதியிணைப்புகள் போன்ற பூதத் திட்டங்களில் முற்படுவதில் எவ்விதத் தவறும் இல்லை!

பல மொழிகள் பேசி வேற்று மாநிலங்களில் வாழும் இந்தியர் ஒருங்கிணைந்து அணு ஆராய்ச்சித் துறைகள், அணுமின்சார நிலையங்கள் ஆகியவற்றைப் பாரதமெங்கும் நிறுவகம் செய்து கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் பராமரித்து வருகிறார்கள்! இந்திய அணுமின்சார வளர்ச்சியும், விருத்தியும் புதிய நீர்ப்பாசான நதியிணைப்புத் திட்ட அமைப்புகளுக்கு முன்மாதிரியாக, வழிகாட்டியாகக் கண்முன்னே நிற்கின்றது. கன யந்திரத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் இந்தியர், நதியிணைப்புத் திட்டங்களைச் சாதிப்பதில் ஏன் பின்வாங்க வேண்டும் என்பதே எனது கேள்வி! பெரும் நதியிணைப்புத் திட்டங்களுக்கு இந்தியாவில் வித்திட்டு, அடித்தள மிட்டுக் கட்ட ஆரம்பித்த ஸர் ஆர்தர் காட்டன், விஸ்வேஷ்ரையா, கே.எல். ராவ், காப்டன் தஸ்தூர் ஆகிய அத்தனை பேரும் நீர்வளத்துறை, நீர்பாசானப் நிபுணத்தில் பொறியியல் மேதைகள் என்பதை முதலில் இங்கே குறிப்பிட விழைகிறேன். நதியிணைப்புத் திட்டங்களை நிறைவேற்றப் பொறித்துறை நுணுக்கங்கள், கட்டுமானச் சாதனங்கள், மனித வல்லமைகள், மனிதர் எண்ணிக்கை எல்லாம் இருந்தும், முதல் வினை ஊக்கியான [Catalyst] ஒருமைப்பாடு மட்டுமே இந்தியா வெங்கும் மக்களிடையே பெரும்பான்மையாகக் காணப்படாத பண்பாகத் தோன்றுகிறது!

நதியோரம், கடலோரங்களைத் தேடும் உலக நாகரீகங்கள்

தொன்மை காலம் தொட்டே உலகக் குடியினங்கள் யாவும் முதன் முதலில் கடலோரங்களையும், நதிக்கரை ஓரங்களையும் அண்டிக் குடியேறித்தான் தமது பரம்பரைகளை விருத்தி செய்து வந்துள்ளன. பாரதத்திலே குறிப்பிட்ட காலங்களில் வெள்ளம் கரை புரண்டோடும் கங்கா, யமுனா, பிரமபுத்ரா ஆகிய முப்பெரும் நதிக் கரைகளில் ஜனப்பெருக்கம் மிகுந்துள்ள காரணம் அவற்றில் ஆண்டு முழுவதும் பொங்கி ஓடும் நீர்வளச் செழிப்பே. வெள்ளிப் பனிமலை இமயத்தின் முடியில் பிறக்கும் இப்பெரும் நதிகள் ஆண்டு முழுவதும் வற்றாத நீர்வள முடையவை. பாரதத்தில் ஒருபுறம் பார்த்தால், சில பகுதிகளில் மழை அளவுக்கு மிஞ்சிப் பெய்து, ஆற்று வெள்ளம் மக்களுக்குப் பெருஞ் சேதத்தை விளைவிக்கிறது! மறுபுறம் பார்த்தால், சில பகுதிகளில் மழையே சிறிதும் இல்லாமல் நதிகள் வறண்டு, குடிநீர்ப் பஞ்சமும், வேளாண்மைப் பயிரிழப்பும் மக்களுக்குப் பெருந் தொல்லை விளைவிக்கிறது! மழையை எதிர்பார்த்து வாடும் பல நதிகளும், அதை நம்பி ஏமாறும் பல வேளாண்மை மக்களும் பாரதத்தின் வட மேற்கிலும், தென்னகத்திலும் மிகையாகப் பல்லாண்டுகள் இருப்பது மெய்யான வரலாறு!

சரித்திர பூர்வமாக ஜீவநதிகளை ஓயும் நதிகளுடன் இணைத்துத் தமிழ்நாட்டில் நீர்ப்பஞ்சத்தை நீக்கியவர், இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னகத்தில் பணியாற்றிய ஆங்கில இராணுவ அதிகாரி, ஜெனரல் ஸர் ஆர்தர் காட்டன் [General Sir Arthur Cotton (1803-1899)]! நீர்ப்பாசான எஞ்சினியரான [Irrigation Engineer] ஆர்தர் காட்டன் மெட்ராஸ் மாகாணப் பொறியியல் குழுவினராய் 1828 இல் தென்னகத்தில் [இந்திய விடுதலைக்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மலையாளம் ஆகிய நான்கு பகுதிகளும் ஒன்றாய்ச் சேர்ந்திருந்தன] நீர்ப்பாசான வசதிகளை விருத்தி செய்து, பயிரின வளர்ச்சியைப் பெருக்குவது ஒன்றையே தனது விருப்பக் குறிப்பணியாய்ச் செய்து வந்தார். அத்துடன் சென்னையில் இந்திய நீரழுத்தப் பொறியியற் துறைப்பள்ளி [Indian School of Hydraulic Engineering] ஒன்றையும் ஏற்படுத்தினார். அவரது நீர்ப்பாசான விருத்திப் பணித் தென்னாட்டில் கோடிக் கணக்கான மக்களின் உயிரைப் பஞ்சத்தின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்றியது என்று வரலாறுகளில் அறியப்படுகிறது. அவரது உருவச்சிலை, நினைவுக் காட்சியகம் ஆந்திரா ராஜமுந்திரியில் இன்றும் பாதுகாப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டில் பாரதம் ஜீவநதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளது, அவரது 200 பிறப்பாண்டு விழாவைக் கொண்டாடுவதாக நாம் எண்ணிக் கொள்ளலாம்!

இந்திய நீர்ப்பாசானத்தில் நிச்சயமற்ற நீர்வள அவலநிலை!

இந்திய மழைப் பொழிவுகள் பொதுவாக வங்காள விரிகுடாக் கடல் அல்லது அரேபிக் கடலில் வேனிற் காலத்துத் தணிவழுத்தங்களில் உண்டாகி மலைக் குன்றுகளில் மோதிப் பெய்யும் மலைநீட்சி மழைப் பொழிவுகளே [Orographic Rainfall]! வேனிற்கால மழைகளே 85% நீர்ப்பொழிவுக்குக் காரண மாகின்றன. நிச்சயமற்றுத் தவறிவிடும் அம்மழைப் பொழிவுகளே பல இடங்களில் நீண்டகால வறட்சியை உண்டுபண்ணுகிறது. காலநிலைப் பெய்வு, ஆண்டுப் பெய்வு ஆகியவைத் தள்ளாடி ஆடும் நிலைமை நீடிக்கும் போது, மாநிலங்களுக்கு நீர்ப்பிரச்சனை ஏற்படுகிறது. ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியில் மழைப் பொழிவுகள் குன்றிப் போவதுடன், நீர்ப்பற்றாக்குறை, குடிநீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கும் நிலையும், நீர்ப்பாசான பயிர்களின் அழிகளால் உணவுப் பற்றாமையும் ஏற்படுகிறது. மாநிலத்தின் சில பகுதிகளில் நீர்ப்பொழிவு மிகவும் தணிந்து எந்தப் பயிரும் பூமியில் எழாமலே போய் விடுகிறது. அதே சமயத்தில் மற்ற பகுதிகளில் பேய்மழை கொட்டிப் பெருவெள்ளம் ஏற்பட்டு, வளர்ந்து முதிரும் பயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.

இந்தியாவின் 1000 மில்லியன் ஜனத்தொகை இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் இரட்டிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது! அப்போது மக்களுக்குத் தேவைப்படும் உணவு தானியத்தின் அளவு: 450 மில்லியன் டன்! ஆற்றுநீரைப் பயன்படுத்தி 1950 ஆண்டில் நீர்ப்பாசானம் செய்த 50 மில்லியன் டன் தானிய உற்பத்தியிலிருந்து, 2000 இல் 200 மில்லியன் டன்னாகப் பெருக்கிச் சுயதேவைப் பூர்த்தி அடைந்துள்ளது இந்தியா. நீர்ப்பாசானத் தகுதி பெற்ற நிலங்கள் 22 மில்லியன் ஹெக்டா ஏக்கரிலிருந்து 95 மில்லியன் ஹெக்டா ஏக்கராக அதே காலத்தில் பெருகியுள்ளன. 2040 ஆம் ஆண்டில் 2000 மில்லியன் மக்களுக்கு தானியம் அறுவடை செய்ய 160 ஹெக்டா ஏக்கர் நீர்ப்பாசான நிலங்கள் எதிர்ப்பார்க்கப்படும்! ஆனால் இந்தியாவின் பொதுப்படையான நதி, நீர்வளத் தேக்கங்கள் மூலமாக நீர்ப்பாசானம் செய்யத் தகுதி யுடையவை: 140 மில்லியன் ஹெக்டா ஏக்கரே! அதாவது, 2040 இல் தேவையானது: 160 மில்லியன் ஹெக்டா ஏக்கர்! ஆனால் கிடைப்பது: 140 மில்லியன் ஹெக்டா ஏக்கர் மட்டுமே!

எதிர்பார்க்கப்படும் 160 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நீர்ப்பாசானப் பெருக்கத்திற்கு புதுவித நீர்த்துறை அமைப்புகள் உருவாக வேண்டும். கங்கை, பிரமபுத்திரா நதிகளில் வெள்ளப் பெருக்குகள் தவறாது நிகழும் விபத்துகளாகி, தேசத்தின் 60% நீரோட்டம் அவற்றில்தான் ஓடுகின்றன! 1950 இல் வெள்ளத்தில் நேர்ந்த சிதைவு இழப்பு 52 கோடி ரூபாயாக இருந்தது, 1998 இல் 5846 கோடி ரூபாயாகப் பூத பெற்றது! பீஹார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நேர்ந்த வெள்ளங்களின் அடிப்பால், மக்கள் பட்ட வேதனையுடன் நிதி இழப்பு சராசரி ஆண்டுக்கு 1343 கோடி ரூபாய் ஏற்படுகிறது! அதே சமயத்தில் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆண்டு தோறும் தவறாது மழை சுண்டி வறட்சி ஏற்படுகிறது. ஏறக்குறைய 85% மழையற்ற வறட்சி இப்பகுதிகளைத்தான் தாக்குகிறது!

எதிர்கால உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; பெருக்கெடுத்தோடி பயிரழிக்கும் ஆற்று வெள்ளங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; மழைநீர் சுருங்கி வறட்சி பெருகி ஏற்படும் பயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும்;

மாநில அரங்குகளின் நீர்வளக் குறைவு நிறைவு வேறுபாடுகளைச் சமப்படுத்த வேண்டும்; இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் நிரந்தரத் தீர்வு காண்பது எப்படி ? இதுவரைச் சிறிய அளவில் இமாலயச் சரிவுகளில் செய்து வெற்றிகண்ட பழைய நதியிணைப்புத் திட்டங்களைப் பின்பற்றுவது ஒருவித முற்பாடு! அதுதான் இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்ட புது முயற்சி! மித மிஞ்சிய நீர்வெள்ளம் கொண்ட நதியின் நீரைக் கால்வாய் மூலம் வறண்ட நதியுடன் இணைத்துப் பங்கிட்டுக் கொள்வது! இமயத்தில் உற்பத்தியாகும் கங்கா, பிரமபுத்திரா நதிகள் வட நாட்டிலும், மேற்குத் தொடர் மலைகளில் பிறக்கும் மகாநதி, கோதாவரி ஆகியவைத் தென்னகத்திலும் உபரி நீர்வெள்ளம் கொண்டவை. அந்த ஜீவநதிகளின் அருகில் சில பகுதியில் புதிதாக நீர்த்தேக்கங்களைக் கட்டி மிஞ்சிய உபரி வெள்ளத்தைப் பாய்ச்சி நிரப்பிக் கொண்டால், கால்வாய்கள் வெட்டி நீரற்ற அல்லது நீர் குன்றிய நதிகளுடன் இணைத்துக் கொள்ளலாம். அவ்விதம் உபரிநீர் நீர்ப்பாசான வசதிகளுக்குப் பயன்படுத்துவதுடன், நீர்மின்சாரமும் தயாரிக்கலாம். நீர்ப்பாதையும் அமைத்துக் கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு அந்நீரைப் பயன்படுத்தலாம். வேண்டுமானால் புழக்க நீராகவும், சுத்தீகரித்துக் குடிநீராகவும் உட்கொள்ளலாம்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எழுந்த இமாலயத் திட்டம்

பழைய மத்திய மந்திரியும் நீர்ப்பாசான எஞ்சினியருமான டாக்டர் கே.எல். ராவ் 1972 இல் சமர்ப்பித்த கங்கா காவேரி இணைப்புத் திட்டம் நிதி விழுங்கும் என்று அங்கீகாரம் ஆகவில்லை! பாரதப் பெருநதிகளைச் சிறுநதிகளுடன் இணைக்கும் பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட அப்பழைய திட்டம், திடாரெனப் புத்துயிர் பெற்று 2003 ஆண்டில் ஆலமரமாய் விரிந்து விழுதுகள் விட்டுப் பரவியது! பாரத நாட்டின் குடிநீர்ப் பற்றாக்குறை, நீர்ப்பாசானப் பிரச்சனைகளைத் தீர்க்கும் மாபெரும் அந்த நீரிணைப்புத் திட்டம் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றது! ஆனால் இந்தியச் சமூகக், கலாச்சார, அரசியல், பூகோளச் சூழ்மண்டலக் கோலத்தைச் சீர்குலைக்கப் போகும் அந்த இமாலயத் திட்டங்கள் எவ்விதம் நிறைவேறப் போகின்றன என்னும் ஐயம் பலரது இதயத்தில் பேரதிர்ச்சியையும் பெருந் துடிப்புகளையும் உண்டாக்கி விட்டிருக்கிறது! கங்கா, பிரமபுத்திரா பூத நதிகளை இணைக்க முடியுமா, இணைத்தாலும் அவற்றிலிருந்து ஏராளமான நீர்வெள்ளம் அடித்துக் கொண்டு வருமா, அப்படி வந்தாலும் வெள்ளம் கால்வாய் மூலமாக ஆயிரம் மைல்கள் ஓடிக் கொள்ளிடம் காவிரி நதியில் கலக்குமா என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுந்துள்ளன! இந்திய அரசாங்க நீர்த்துறைப் பூதள நிபுணர்கள் கணக்கீடும், மதிப்பீடும் செய்த 42 நதியிணைப்புத் திட்டங்களில் பல காரணங்களால் 25% புறக்கணிப்பாகி நான்கில் மூன்றைச் சாதித்தாலும், முப்பது நீரிணைப்புத் திட்டங்களால் நீர்வளமும், நீர்ப்பாசானமும் இந்தியா வெங்கும் பேரளவு பெருகத்தான் போகின்றன.

வீட்டுச் சாக்கடைகள், ஊர்க்கழிவு ஓடைகள், தொழிற்சாலைக் கழிவு வெளிவீச்சுகள் அனுதினமும் சங்கமமாகும் கங்கா, யமுனா புனித நதிகளின் இணைப்பு நீரோட்டம், பல கோடி ரூபாய்ச் செலவில் தென்னக நதிகளில் சேர்க்கப்பட வேண்டுமா என்ற பெரிய கேள்வியும் மாந்தர் மனதில் எழாமல் இல்லை! ஆறுகளில் நீரற்ற மாநிலங்களில் நீர்ப்பாசான வசதிகளுக்கு அழுக்குநீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கங்கா, யமுனா புனித நீரைக் குடிநீராக்க மாபெரும் இரசாயன நீர்ச் சுத்தீகரிப்புச் சாதனங்களும், குளோரின் வாயுவைப் புகுத்தும் நீர்க்கலன்களும் [Water Treatment Equipment & Chlorination Injectors] ஊர்களில் நிறுவகமாக வேண்டும். நீர்ப்பற்றாக்குறை மாநிலங்கள் கடற்கரையிலோ அல்லது கடலுக்கு அண்டையிலோ இருந்தால், கடல்நீரில் உப்பைநீக்கிக் குடிநீராகவோ அன்றி புழக்க நீராகவோ மாற்றிப் பரிமாறலாம். ஆனால் மில்லியன் டன் கணக்கில் ஆண்டு தோறும் தேவைப்படும் நீர்ப்பாசான ஆற்று வெள்ளத்தை, ஓடாத நதிகளில் உண்டாக்குவது எப்படி ? நீர்வளம் செழித்த பூத நதிகள் கடலில் கொட்டி வீணாக்கும் பேரளவு நீர்வெள்ளத்தைத் திருப்பி, மெலிந்துபோன ஆறுகளில் கலப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

முந்தைய பிஜேபி அரசாங்கம் ஒரே சிந்தனையில் உறுதியாக முன்வந்து முப்பெரும் வட இந்திய நதிகளின் வெள்ளத்தையும், நீர்வளம் செழித்த நதிகளின் வெள்ளத்தையும் கால்வாய்கள் மூலம் தேவையான வடதிசை மாநிலங்களுக்கும், வறண்டு போன தென்னக மாநிலங்களுக்கும் நீரைப் பகிர்ந்து கொள்ளத் திட்டங்கள் வகுத்தது பாராட்ட வேண்டிய மகத்தான தீர்மானமாகும். அத்திட்டங்களை இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் முழுமனதாய் ஆதரித்துப் பறைசாற்றியதும் பாராட்டுக்குரிய உரையே. அத்துடன் உச்ச நீதி மன்ற நீதிபதி கிர்பால் அவர்களை உடன்பட வைத்து சட்டத்தின் பாதுகாப்புடன் திட்டங்களை நிறைவேற்ற முற்பட்டதும் பாராட்ட வேண்டிய தீரச் செயலே. ஆயினும் கங்கா பிரமபுத்திரா நதியிணைப்பு, நீர்ப்பங்கீடுகளில் இந்தியா நேபாளம், பூதான், பங்களா தேசங்களுடன் பலமுறைக் கூட்டுரையாடி உலகநீர் ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பையி 2003 இல் அறிவித்தபடி 21 பகுதிகளில் இமாலய நதிகளில் கிளைத் தொடுப்பு இணைப்புகளைத் தோண்டி 22 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலங்களில் நீர்ப்பாசான விளைச்சலை எதிர்பார்க்கலாம். அத்துடன் அந்த நீரோட்டங்களில் அணைகள் கட்டி 30,000 மெகாவாட் ஆற்றல் மின்சாரமும் உண்டாக்கலாம். அடுத்து அமைக்கும் 21 தென்னக நதிகளின் கால்வாய் இணைப்புகள் 13 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலங்களில் நீர்ப்பாசான விளைச்சல்களையும், 4000 மெகாவாட் ஆற்றல் மின்சார உற்பத்தியையும் எதிர்பார்க்க முடியும். இப்பெரும் நதிவள இணைப்புகளால் உணவு தானிய விருத்தி 220 மில்லியன் டன்னிலிருந்து, 450 மில்லியன் டன்னாக இரட்டிக்கும். 560,000 கோடி ரூபாய் [112 பில்லியன் அமெரிக்க டாலர்] நிதி மதிப்பீட்டில் உருவாகப் போகும் அத்திட்டங்களால் அநேக மாநிலங்கள் நீர்ப்பாசானப் பயன்கள் அடைவதுடன், கட்டுமானத் தொழிற்துறைகளும் பெருகி இந்தியாவில் 10 மில்லியன் மக்களுக்கு நேரடி ஊழியங்களும், தொடுப்புப் பணிவினைகளும் [Spin off Jobs] மிகுந்திடப் போகின்றன.

பாரத தேசத்தின் உயர்நீதி மன்றம் மக்கள் விண்ணப்பம் ஒன்றிற்கு 2002 இல் பதிலளிக்கும் போது, இந்திய அரசு நதியிணைப்புத் திட்ட முற்பாடுகளை விரைவாக முடுக்கிவிட்டு 2016 ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டுமென ஆணையிட்டது. திட்டங்கள் யாவற்றையும் முடிக்க 40 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று அனுமானம் செய்யப்ட்டுள்ளது. உடனே அந்நாள் பிரதமர் வாஜ்பையி நதியிணைப்புத் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஆணைப் பணிக்குழுவை [Task Force] நியமித்து சுரேஷ் பிரபுவை அதிபதி ஆக்கினார். தேசிய நதியிணைப்புத் திட்டங்களை ஊக்குவித்த ஆக்கவாதிகள் முந்தையப் பிரதமர் வாஜ்பையி, இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் மந்திரி சுரேஷ் பிரபு, அமெரிக்க இந்தியப் பொறியியல் நிபுணர் சொக்கலிங்க கண்ணப்பன் ஆகியோர்.

தமிழ்நாட்டு நாட்டரசன் கோட்டை நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் கண்ணன் 1968 இல் அமெரிக்காவுக்குப் புலப்பெயர்ச்சியாகி டெக்ஸஸ் மாநிலத்தில் புரஃபெஸ்ஸனல் எஞ்சினியர் பதிவு பெற்று 25 ஆண்டுகள் பெட்ரோ கெமிகல் தொழிற்சாலை, அணுமின் நிலைய அனுபவங்களை அடைந்தவர். டென்னஸ்ஸிப் பள்ளத்தாக்கு ஆணையகத்தின் [Tennessee Valley Athority] திறன்மிக்க இயக்கத்திற்குப் பரிசு பெற்றவர். நாசா கோடார்டு அண்டவெளிப் பயண மையத்தின் [NASA Goddard Space Flight Centre] பரிசையும், ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் பரிசையும் அடைந்தவர். கண்ணப்பன் தன்வசம் உலக ஒப்பந்த மாதிரிப் பட்டயங்கள், அகில நாட்டு ரீதியில் நீர்வளம் எவ்விதம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்னும் தகவல்களும் இருப்பதாகக் கூறுகிறார். அவர் இந்திய நதியிணைப்புத் திட்டங்களில் டெக்ஸஸ் மாநில நிபுணத்துவங்களைப் புகுத்த முயற்சி செய்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு வருகிறார்.

நதியிணைப்புத் திட்டங்களை மேற்பார்க்கும் ஆணைக்குழு

அந்நாள் பிரதமர் வாஜ்பையி நதியிணைப்புத் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஆணைப் பணிக்குழுவை [Task Force] நியமித்து சுரேஷ் பிரபுவை அதிபதி ஆக்கினார். மற்றவர்கள்: சி.சி. படேல் துணை அதிபதி, டாக்டர் சி.டி. தாட்டே உறுப்பினர்-செயலாளர். பகுதிக் கால உறுப்பினர்கள்: நீர்வளப் பற்றாக்குறை மாநில அதிகாரி, நீர்வளம் செழித்த மாநில அதிகாரி, நிதித்துறை நிபுணர் ஒருவர், சமூகவாதி ஒருவர், சட்ட நிபுணர் ஒருவர், கானக விலங்கின நிபுணர் ஒருவர். இவர்களின் ஆணைப் பணிகள் பின்வருமாறு:

1. நதியிணைப்பு திட்டமொன்றுக்கு நிதிச்சிக்கன ஆய்வு, சமூக நிதிவளப் பாதகம், சூழ்தளச் சீர்கேடு, இடப்பெயர்ச்சித் தயாரிப்பு ஏற்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பீடு விபரம் அளித்தல்.

2. பாதிக்கப்படும் மாநிலங்களுக்கும், பயன்பெறும் மாநிலங்களுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை விரைவில் தீர்க்க வழிமுறைகளை வகுத்தல்.

3. நதியிணைப்பு திட்டம் ஒன்றின் பல்வேறு அங்கப் பணிகளைத் திரட்டி, முக்கியமானவற்றை வரிசையில் கொணர்ந்து, நிறைவேற வழிமுறைகள் தயாரித்தல்.

4. நதியிணைப்புத் திட்டம் ஒன்றை நிறைவேற்றப் பணிவினை இயக்கக்குழு அணியமைப்புக்கு [Organizational Structure] ஆலோசனை அளித்தல்.

5. நதியிணைப்புத் திட்டங்களுக்கு நிதிதிரட்ட பல்வேறு உபாய முறைகளைக் கையாளுதல்.

6. நதியிணைப்பு திட்டப் பணிகளில் எதிர்ப்படும் சில குறிப்பிட்ட அங்கப் பணிகளுக்கு அன்னிய நாட்டு நிபுணத்துவத்தின் உதவியை நாடுதல்.

ஆணைப் பணிக்குழு டெல்லியைத் தலைமையகமாக வைத்துக் கொள்ளும்.

இமாலயத் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது ?

30 முக்கிய நதியிணைப்புத் திட்டங்களில் 14 இணைப்புக் கால்வாய்கள் இமாலயப் பிரதேசப் பகுதிகளில் கட்டப்பட விருக்கின்றன. இமாலய மலைத்தொடர்ப் பரப்புகள் பூகம்ப அதிர்ச்சி அரங்கில் உள்ளதால், அமைக்கப்படும் அணைக்கட்டுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் யாவும் பூகம்ப ஆட்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தகுதியில் கட்டப்பட வேண்டும். இமாலயச் சரிவிலும், அடிவாரத்திலும் பாக்ரா, நங்கல் போன்ற பல அணைக்கட்டுகள், நீர்தேக்கங்கள், பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாய்கள் 50 ஆண்டுகளாக பூகம்பப் பகுதிகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன! இந்தியாவில் டெல்லிக்கருகில் கட்டப்பட்டிருக்கும் நரோரா அணுமின் நிலையம் இத்தகைய பூகம்ப ஆட்டங்களில் தப்பிக் கொள்ளும் தகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. பூகம்ப பூமியான ஜப்பான் தேசத்தில் 54 அணுமின் நிலையங்களும், கடல்மேல் நிற்கும் பல தொங்கு பாலங்களும், 33 மைல் நீளத்தில் 800 அடி ஆழத்தில் குடைந்து கட்டப்பட்ட உலகிலே பெரிய கடல் குகையும் பூகம்ப ஆட்டங்களைத் தாங்கி நிற்கின்றன! இந்தியாவில் பூகம்ப நடுக்கத் தகுதி பெற்ற அணைகளைக் கட்டும் பொறிநுணுக்கம் கைவசம் உள்ளது. மேலும் அப்படி நிகழும் பூகம்பத்தில் அணையில் விரிசல்கள் ஏற்பட்டுப் பெரும் நீருடைப்பு நேர்ந்தாலும், அந்த வெள்ளம் கடலை நோக்கி திரும்பும்படி கால்வாய் டிசைன் செய்யலாம்.

திட்டங்களின் முழு விபரங்களைத் திரட்டிப் பாதிக்கப்பட்டுப் பலனடையும் மாநிலங்களின் அரசுகள், நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றுடன் ஆணைக்குழுவினர் முதலில் உரையாடி, வாதாடி இருபுறக் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும். பலமுறை இவ்விதம் கூடிக் கலந்து திட்டம் நிறைவேற சம்பந்தப்பட்ட அரசுகள், குழுக்கள், கிராம ஆட்சிகள் உடன்பட்டுக் கையொப்பம் இடவேண்டும். திட்டங்களை முடிக்க 2016 ஆண்டு வரையரை செய்யப்பட்டாலும், சில திட்டங்கள் கால எல்லைகளைக் கடந்தும் நீடிக்கப்படலாம். 21 இமாலய இணைப்புத் திட்டங்கள், 21 தென்னகத் திட்டங்கள் ஆக 42 நதியிணைப்புகளில் முக்கியமானவை, எளிதானவை, நீண்டவை, சிறியவை, காலம் கடத்துபவை, சிரமப் படுத்துபவை, சிக்கலாவை, செய்ய முடியாதவை என்று பிரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் உடன்பாடு, குறைபாடு அல்லது எதிர்ப்பாடு தெரிவித்த பிறகே 42 திட்டங்களின் தகுதி நிலைகள் தரம் பிரிக்கப்பட வேண்டும். முதலில் உடன்பாடு பெற்ற சிறிய திட்டங்கள், எளிய திட்டங்கள், முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சிரமமான திட்டங்களில் எங்கே பிரச்சனைகள் எழுந்துள்ளன என்று அறியப்பட்டு சிக்கல்கள் தீர்க்க வழிகளை அணுக வேண்டும். பூதளப் பழுதுகள் உள்ளதாலோ, பூகோளப் பிசகுகள் தடுப்பதாலோ அல்லது அரசியல், சமூகப் பொருளாதாரத் தொல்லைகளாலோ தீராத இடையூறுகள் முட்டுக்கட்டை யிட்டால், அவ்விதத் திட்டங்களை நிறுத்தி வைப்பது நல்லது.

தேசீய ஒருங்கிணைப்புப் பண்புகளை ஊட்டுவிப்பது எப்படி ?

இந்தியா ஓர் ஐக்கியக் குடியரசு. ஐக்கியம் என்னும் பதத்தில் செழித்த மாநிலம் ஏழமை மாநிலத்துக்கு உதவும் பண்பும் பொருளும் அடங்கியுள்ளது. ஒருதாய் மக்கள்போல் சொத்துகளைப் பங்கீடு செய்து கொள்ளும் பண்பு ஒட்டியுள்ளது. மாநிலங்களின் ஐக்கியத்தை இறுக்கிப் பிணைப்பது மக்களின் ஒருமைப்பாடு. நிலைப்பாடு இல்லாத ஒருமைப்பாடை மாநிலங்கள் தமக்குள் உண்டாக முன்னடி வைத்துச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்! தேய்ந்து போகும் ஒருமைப்பாடை, மாநிலப் புதிய அரசுகள் அடிக்கடித் தமக்குள் புதுப்பித்துக் கொள்வது அவசியம். அண்டையில் இருக்கும் இல்லங்கள் நட்புடன் பழகிக் கொள்வதுபோல், மாநிலங்கள் தமக்குள்ளும் மத்திய அரசுக்கு இடையேயும் ஒப்புடன் நடந்து கொள்வது, நதியிணைப்புத் திட்டங்களைத் தீர்மானிக்கவும் நிறைவேற்றவும் ஆணிவேராக நிலைத்து நிற்கும். இந்தியர் பேசும் மொழிகள், பிறந்த மாநிலங்கள், பிழைக்கும் முறைகள், வெளித்தோல் நிறங்கள், தோன்றிய இனங்கள் வெவ்வேறு ஆயினும், யாவரும் ஒரே இந்தியப் பாதுகாப்புக் குடையின் கீழ் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலத்தில் வசித்துக் கொண்டு எல்லைக் கோடுகளைப் போட்டு, இல்லாத வேலிக்குள் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

மாநில முதலமைச்சர்கள், மாண்புமிகு மந்திரிமார்கள், கல்லூரி, பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், வெள்ளித்திரை நடிகர்கள், இயல், இசை, நாடகக் கலைஞர்கள் ஆகியோர், மாநில மக்கள் ஒருமைபாடுக்குப் பல முறைகளில் இருபோக்கு ஆக்கப் பாதைகளை அமைக்கலாம். வேற்று மொழிகளையும், அவற்றைப் பேசுவோரையும் எள்ளி நகையாடிக் கொண்டு பகைமைப் பயிர்களை வளர்க்கும் அண்டை மாநிலங்களில் நதியிணைப்புத் திட்டம் எதுவும் நடக்கப் போவது கடினம்! அண்டை மாநில அறிஞர், அரசாங்க அமைச்சர், கலைஞர் ஆகியோரைத் தங்கள் விழாக்களில் அழைத்துக் கலந்து கொள்ளச் செய்து கெளரவிக்கலாம். உதாரணமாகத் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் பிற மாநிலங்களின் நட்பைச் சம்பாதிக்க தெலுங்கு, கன்னடம், மலையாள, மராட்டி, பஞ்சாபி, வங்காள போன்ற பிறமொழி மாணவர்களுக்குச் சலுகைகள் அளிக்கலாம். தமிழ்நாட்டில் அண்டை மாநிலக் கண்காட்சிகளை அமைத்து அவரது மகத்தான சாதனைகளைப் பொது நபர்களுக்குக் காட்டலாம். இதுபோல் பல ஆக்க வழிகளில் ஒருமைப்பாடை உண்டாக்க அண்டையில் உள்ள இரு மாநிலங்கள் தமக்குள் பல பாலங்களைக் கட்டிக் கொள்ளலாம். மாநிலங்களுக்குள் ஏற்படும் ஒருமைப்பாடு ஒன்றுதான் நதியிணைப்புத் திட்ட ஆரம்பத்துக்கும் வெற்றிகரமான முடிவுக்கும் உதவப் போகிறது. திட்டங்களின் இடையிடையே ஏற்படும் தடைகளையும், தாமதத்தையும் தவிர்க்க ஒருமைப்பாடுதான் துணையாகக் கைகொடுக்கப் போகிறது.

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. SAravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [September 21, 2004]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா