மெழுகுவர்த்தி

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

நடராஜன் கந்தக்குமார்



நீள்செவ்வகமரபெட்டி-நடுக்கூடத்தில் நாலுபேர் இறக்கிவைத்து விட்டு சென்றனர்.வீட்டில் ஒரே நிசப்தம்.மேகலைக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை.உடனே பெட்டியை திறக்க வேண்டும்.அப்பா ஒருவேளை பெரிய பார்ஃபி பொம்மை வாங்கி அனுப்பி இருக்கலாம்.பலவாறு கற்பனை மேகலைக்கு.அம்மாவிடம் கேட்கலாமென்றால்,கேட்குமளவு பொறுமையில்லை அவளுக்கு.சொல்லும் மனநிலையில் அவளம்மாவும் இல்லை.பெட்டி அருகில் நெருங்கினாள் மேகலை.

“என்ன கதிரேசா,பகல்லே கனவா? வீட்டு ஞாபகமா?” கூட வேலை பார்க்கும் கண்ணனுக்கு கதிரேசன் வாயைக்கிளருவதில் ஒரு சந்தோஷம்.
அவன் ஏக்க பெருமூச்ச்ில் இவனுக்கு ஒர் அல்ப நிம்மதி.

கட்டுமான வேலையிடம்.பாதிவளர்ந்த நிலையில் இருபது மாடிகட்டிடம்.மதிய இடைவேளை.

புல்தரை லேசாக நனைந்திருந்தது சற்றுமுன் தூறியமழையில்.

ஒருக்களித்தநிலையில் படுத்திருந்த கதிரேசன் தலையமட்டும் அசைத்துவிட்டு கண்கள் சொருகிப்போனான்.மனம் அவனை அவன் உலகத்திற்குள் இழுத்துச்சென்றது.

‘முதல்ல முத்தண்ணனுக்கு பெரிய கும்பிடுபோடணும்.நிறைய நன்றிகடன் பட்டிருக்கிறேன்.

முதலாளி சம்பளம் தாமதமாகதந்தாலும் முத்தண்ணனனிடம் கொடுத்து ‘உண்டி’யில் சேர்த்துட்டா டாண்ணு வீடுபோய் சேர்ந்திடும் அடுத்தநாளே!.இந்தபணத்தைவைச்சு சிங்கப்பூர் வர்றதுக்கு வாங்கிய எஜண்டு கடன்,வீட்டுக்கடன்,வட்டிக்கடன்,மகள்படிப்பிற்கு கொஞ்சம்,கடைசிகாலம் தள்ள,கைச்செலவுக்குன்னு பிரிக்கிறதுக்குள்ள பொட்டு முடியில்லாம உதிர்ந்திடும்போல.

தொலைபேசி அழைப்புஅட்டை-இங்குதான் நேரம் அட்டைக்குள் அடங்கிகிடக்கிறது.அம்மா,அப்பா,என்பொண்ணுன்னு பேசிவிட்டு என்மனைவிடம் பேசும்போது,ஒரு ‘ஹ்லோ’ சொல்லமட்டும் நேரம் சொச்சம் இருக்கும்.

ஒவ்வோருமுறையும் ஒரு ‘ஹ்லோ’வில் குடும்பம் நடத்துகிறோம்.அதில்கூட ஒருசுகம்தான்.அவள்சொல்லும் ஒருவார்த்தையில் ஆயிரமாயிரம் அர்த்தம் பொதிந்துகிடக்கும்.ஏக்கம் கொட்டிகிடக்கும்.விடியவிடிய பேசிதீர்க்க ஆசைதான்.நேரம் இருக்கிறது.இருந்தும் பேசிக்கொள்கிறோம்,தனித்தனியே.அவள் அங்கே.தலையணையில் முகம் புதைந்தபடி நான் இங்கே.

‘சினிமா டிக்கெட் பத்துவெள்ளி(250 ரூபாய்)! நான் ஒருத்தன் இங்கே பார்க்கிறநேரத்தில்,ஊர்ல குடும்பமே ஒருமாசம் சேர்த்துவைச்சு டூரிங் டாக்கீஸ்ல படம்பார்த்துவிடுவாங்கள்ல!’. நான் என் புலம்பலைச் சொல்லி அடங்குவதற்குள்,என்நண்பர்கள் பாதிபடம் தாண்டிப் பார்த்திருப்பார்கள்.என் கஷ்டம் எனக்கு.அவர்களைச் சொல்லி நியாயமில்லை.
பெருமாள்கோயில் சுண்டலும்,சர்க்கரைப்பொங்கலும் தராத திருப்தி,தேக்காதெருக்களில்,ஊர்ஞாபகத்தில்,சிக்னல்பார்க்காமல்,ரோடு சலதாண்டுவதில், நம்மஊர் ஜனங்களோட முண்டியடித்து,முகம்குலுக்கி,தோளொடுதோள் உரசி,கூட்டத்தோடு கூட்டமாக கரைவதில்,நாங்கள் உயிர்வாழ்கிறோம் ஓவ்வோரு ஞாயிற்றுக்கிழமைகளில்.

முத்தண்ணன் இவ்வளவு நேரத்திற்கு,ஊர்போய் சேர்ந்திருக்கணும்.நம்மவீட்டுல பார்சலைக் கொடுத்திருக்கணும்.இதுபற்றி முத்தண்ணன்கிட்ட பேசியது நினைவில் பளிச்சுன்னு வந்துபோனது.

“என்ன கதிரேசா! பார்சலெல்லாம் கனமா இருக்கு.பெண்டாட்டி ஞாபகமோ? ஊர்ஞாபகம் ஒட்டிக்கிச்சோ “.குசும்புடன் கேட்டான் முத்தண்ணன்.
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லண்ணே.நான் ஊர் போறதுக்கு இன்னும் ரெண்டு வருஷமோ இல்ல மூணு வருஷமோ தெரியலை. இந்த பார்சல் என் பெண்டாட்டிக்கில்லை.என் புள்ள ஆசைப்பட்டதால…….”நெளிந்தேன் நான்.

மனதுக்குள் ‘ உங்களமாதிரி மாதம் ஆனா ‘தாள'(பண) எண்ணுகிறவனில்லைணே நான்!.போன மாதம் பூரா ஒரு மணி நேரம் ஓவர்டயம் பார்த்ததில்,’சல்லிசல்லி ‘யாய்,ஒடியாடி பார்த்து பார்த்து சேர்த்த ‘காசில்’ வாங்கினது.என் உழைப்பு,ஆசை,ஆசையோட சேர்ந்த பெருமூச்சு,பாசம் எல்லாம் சேர்ந்தா கனமாகதானே இருக்கும்!.’பொருமினேன் நான்.

கண்ணன்விட்ட குறட்டை கதிரேசனை அவன் நினைவுகளிலிருந்து வெளியே இழுத்து போட்டது.என்ன ஆச்சர்யம்.சற்றுமுன்பு விமானம் பிடிச்சு ஊருக்கு போயிருந்த பார்சலும்,அதை கையில்பிடித்தபடி முத்தண்ணனும் கதிரேசன் கண்ணெதிரே நின்றுகொண்டிருந்ததை அவனால் நம்பமுடியவில்லை.கண்களை கசக்கிவிட்டான்.
குறட்டைவிட்ட கண்ணன்கூட எழுந்து விட்டான்.

“கதிரேசா! அவசரவேலை.முதலாளி கடைசி நிமிஷத்துல லீவு தரலை.இந்தா! உன் பார்சல்! வேறு யாரவது ஊருக்கு போனாங்கன்னா சொல்லியனுப்புறேன்.”சொல்லிவிட்டு மறைந்துபோனான் முத்தண்ணன்.

கதிரேசன் கண்கள் கலங்கின.ஒவர்டைம் பார்த்தபோது,வலிக்காத உடலும்,மனமும் இப்போது பெரும்வேதனையும் வலியும் கொடுத்தது.

முத்தண்ணன் திருப்பிகொடுத்த அழகாக பேக்கிங் செய்யப்பட்ட ஜிகினாத்தாளை பிரித்தான்.

உள்ளே பார்ஃபிபொம்மை சிரித்தது.அவன்விட்ட பெருமூச்சில்,பார்ஃபி தங்கநிறகேசம் ஒருமுறை ஆடியது.

‘இன்னும் எவ்வளவுநாள் என்பொண்ணு மேகலை காத்திருக்கவேண்டுமோ.அவளுக்கு பிடித்த பார்ஃபியை பார்ப்பதற்கு.’மனம் விம்மினான்.

“அண்ணே! மழை வர்றதுக்குள்ள,பத்தாவது மாடியில் சன்னல் கண்ணாடிச்சட்டம் பொருத்தணும்.”அவசரப்படுத்தினான் கண்ணன்.

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட மின் துாக்கி,பத்தாவது மாடிநோக்கி விரைகிறது,கண்ணாடிசட்டத்தையும்,இருவரையும் ஏற்றிக்கொண்டு.கதிரேசன் மனம்மட்டும் தரையில் முத்தண்ணன் பேசிய நினைவுகளில் எஞ்சியிருந்தது.

இருண்டமேகங்கள்.மழை மெதுவாக தூறல்கொண்டு வேகம்பிடித்தது.சுப்பர்வைசர் அவசரப்படுத்தினான்.கதிரேசனும்,கண்ணனும் முடிந்தவரை முயன்றார்கள்.சட்டம் மூன்றுமூலைகளில் சரியாகப்பொருந்தியது.இவர்களில் அவசரம் புரிந்துகொண்டதுபோல.
ஒருமூலைமட்டும் சரியாகப்பொருந்தாமல் விளையாட்டு காட்டியது.

ஓரே ஒரு எக்கு எக்கி, கால் நூனி பேலன்ஸில் கதிரேசன் சட்டத்தை சரியாக பொருந்தியகணத்தில் நினைவுகளில் அமிழ்ந்தான் கதிரேசன் ….மேகலை..!பார்ஃபி பொம்மை..! கால் தவறினான்.சரிந்தான்.

கதிரேசன் கைகள் சட்டைப்பையில் இருந்த பார்ஃபியை இறுகப்பற்றின.பொம்மையை தன் நெஞ்சுக்கு அருகில் கட்டிக்கொண்டான்,பொம்மைக்கு அடிபடக்கூடாது என்ற அவசரத்தில்.

‘கதிரேசா…!…கதிரேசா…!கண்ணனின் கத்தல் கொஞ்சம்கொஞ்சமாக சுருதி குறைந்து விழுகின்றது கதிரேசன் காதில்.அவன் மனம் பரந்தபரவெளியில் பறந்துகொண்டிருந்தது.உடல் தரையைத் தொட்டது.

நீள்செவ்வகமரபெட்டி-நடுக்கூடத்தில் நாலுபேர் இறக்கிவைத்து விட்டு சென்றனர்.வீட்டில் ஒரே நிசப்தம்……….மேகலைக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை…………..பெட்டி அருகில் நெருங்கினாள் மேகலை.

அம்மா மூலையில் முடங்கி கிடந்தாள் விசும்பியபடியே.

பெட்டி திறந்தது.
உடலெங்கும் பரபரப்பு ஒட்டிகொண்டது மேகலைக்கு.
அப்பா என்னை இந்தமுறையும் ஏமாற்றவில்லை.
‘அடக்க’மான பெட்டி.அமைதியாக உள்ளே அப்பா.
அவளுக்கு புரியவில்லை.’அடக்க’மான அப்பா.அமைதியாக பெட்டி.!என்று??
அவர் கையில் இறுக பற்றியபடி,பார்ஃபி பொம்மை.

அடக்கமுடியாமல் அம்மா அழுகிறாள்.
மேகலையும் அழுகிறாள்,அம்மா அழுவதை பார்த்து.
அவள் கண்கள்மட்டும் பொம்மைமீது.

இருந்ததை இழந்ததால்,இழப்பதால் அவள் அம்மா அழுகிறாள்.எதிர்காலம் அம்மா கவலை.

அப்பாவை நினைத்து பெருமை மேகலைக்கு.சொன்னபடி செய்ததால்.மனம் முழுவதும் சந்தோஷம்.ஆனால்,எதோ ஒரு சூன்யம் கவ்வி கிடக்கிறது அந்த அறை முழுவதும் அவள் சந்தோஷத்தை குலைப்பதைபோல.

சூழ்நிலையின் அடர்த்தியின் ஆழநீளங்கள் ஒவ்வோருவருக்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பொருள்படுகின்றன,அவரவர் தேவைகளையும் பார்வைகளையும் பொருத்து.

சாலையோர வாகனவிபத்து.இறந்துபோனவர் நமக்கு தெரியாதவரென்றால்,ஒரே உச்சுக்கொட்டலில் முடித்துகொள்கிறோம்.
தெரிந்தவரென்றால் அவர் நினைவு வரும்போதெல்லாம் வருத்தப்படுகிறோம்.

உயிர் ஒன்றுதான்.நம் பார்வையும் பரிதாபமும் மட்டும் வேறுவேறு கனங்களில்.

அப்பா எழுந்த உடன் பொம்மை வாங்கி,அவள் நண்பர்களுக்கு காண்பிக்க வேண்டும்.அப்பாவின் விழிப்பிற்காக காத்திருக்கிறாள் மேகலை.


knatarajan@sg.pepperl-fuchs.com

Series Navigation

நடராஜன் கந்தக்குமார்

நடராஜன் கந்தக்குமார்

மெழுகுவர்த்தி

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

அப்துல் கையூம்



தியாகத்தின் சின்னமாய் சித்தரிக்கப்படுவதுதான் மெழுகுவர்த்தி. நிலவுக்கு அடுத்தபடியாக கவிஞனுக்கு உகந்த பாடுபொருள் இதுதான் என்றால் மிகையாகாது. மெழுகுவர்த்தியை படிமங்களாக்கி பாடாத கவிஞனே உலகில் இல்லை என்று சத்தியம் செய்து கூற முடியும். மெழுகுவர்த்தியின் தலையில் மனிதனே கொள்ளிவைத்துவிட்டு “ஆஹா! தியாகத்தின் சுடரே நீதான்” என மெழுகுவர்த்தியை போற்றிப் புகழ்வது என்ன நியாயம்?

பிறருக்காக உருகுவதிலோ, கருணை காட்டுவதிலோ தப்பில்லை. பிறருக்காக உருகுவது மட்டுமே வாழ்க்கை என்றானால் அவன் தனக்குத்தானே வாழ்க்கை அமைத்துக் கொள்வது எப்போது? ஒருவன் தன்னை வருத்திக்கொண்டுதான் பிறருக்கு உதவவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. தனக்கு மிஞ்சித்தானே தான தர்மம்?

‘தன்னலம் மிக்கவன்’ ‘சுயநலவாதி’ என்ற பதம் இங்கு பொருந்தாது. ஒருவன், தான் திடாகாத்திரமாக இருந்தால்தான் பிறருக்கு உதவ இயலும். விமானம் பறக்கையில் கோளாறு நேருகையில் பிராணவாயு சுவாசக் குழாயை முதலில் நாம் பொருத்திக் கொள்ள வேண்டும். பிறகுதான் நம் குழந்தைகளுக்கு பொருத்த வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?

உயிர்த் தியாகம் சரியென்று வாதாடினால் உடன்கட்டையும், நரபலியும், தற்கொலையும் முறையானதுதான் என்று ஆகிவிடும்.

இறைவன் கொடுத்த உயிரை மனிதன் பறித்துக் கொள்வதற்கு இறைவனும் அனுமதி வழங்கவில்லை. அதற்கு நம் நடைமுறை சட்டமும் அனுமதிக்கவில்லை.

வெடிமருந்தை ஏந்திக்கொண்டு தன்னைத்தானே உயிர்போக்கிக் கொள்பவனுக்கு நாம் வைத்திருக்கும் பெயர் “மனித வெடிகுண்டு”. தப்பித் தவறி அவன் அதிலிருந்து பிழைத்துக் கொண்டால் சட்டம் தற்கொலை முயற்சி அல்லது கொலை முயற்சி என்று அவனை ‘உள்ளே’ தள்ளி விடும்.

உயிரினங்களுக்கு பொருந்தும் இந்த விதியை ஜடங்களுக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் எனக்குள்ளே எழுந்தது. தியாகத்தின் உருவமாய் பாடப்படும் மெழுகுவர்த்தி தனது புலம்பலை பாடினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான கவிதை இது.




மெழுகுவர்த்தி

நரகத்து வேதனைக்கு
நானென்ன ஒத்திகையோ?
உருகுகின்ற மாதிரிக்கு
உரைகல்லாய் போனேனோ?

அமிலக் குளியலாய்
அனல் பறக்கும் தேகம்
குமைகின்ற வெப்பத்தில்
குறையும் உடற்பாகம்

புரையோடிய ரணங்களாய்
பொரிந்து போகும் மேனி
பொறிபறக்கும் ஜ்வாலைக்கு
இரையாகும் தீனி

சாலையில் பெருக்கெடுக்கும்
சாக்கடை நீராய்
மூளை இளகி கசிந்தோடும்
முனகலுக்கேது நேரம்?

வடுக்களின் கொடூர வார்ப்பு
வழிந்தோடும் சீழின் கோர்ப்பு
சுடும் தீக்காயத் தொடை
சுருங்கித் தேயும் தேகவிடை

அழுகும் ஆனைக்கால் நோயோ?
பழுத்த காய்ச்சிய தீயின் சூடோ?
விழுப்புண் பட்டாலும் உவந்திருப்பேனோ?
முழிபிதுங்கும் வதை எனக்கு தேவைதானோ?

தலைச்சுமை என்றாலும் தாங்கிக் கொள்வேனே
தகதகக்க சிரமுருக தகனமாகிப் போனேனே
சிலையாக்கி தீயிடுதல் முறையோ? இது தகுமோ?
சிதைமூட்ட நானென்ன உயிர்பிரிந்த உடலோ?

உடன்கட்டை ஏற்றத்தில் உடன்பா டில்லை
உயிர்மாய்க்க நானொன்றும் கோழையுமில்லை
கடன்பட்டார் நெஞ்சம்போல் பதைக்குது என்னுள்ளே
கனலாகி கரைகின்றேன் பனிபோல மெல்ல

பண்பாடிய பாரதியின் அக்னிக்குஞ்சோ நான்?
பத்தினியாம் கண்ணகியின் கடுஞ்சாபச் சுடரோ?
வெண்குட்டத் துயர்நீக்க வருவாரோ தெரஸா?
விடியும்வரை ஒளிதந்தேன் அதற்கிந்த பரிசா?

தியாகச் சுடரென்ற உவமைகள் போதும்
தீக்காயம் உமக்கென்றால் உண்மைகள் புரியும்
கவிநடைக்கு உவமைகளாய் ஆக்கியது போதும்
கனலோடு உறவாடி நான் கண்டது சேதம்.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்

மெழுகுவர்த்தி

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

கண்டனூர் சசிகுமார்


செத்திடுவோம்
என தெரிந்தும்
உன்னை
தொட்டு விடத் துடிக்கும்
விட்டில்கள்
எத்தனை எத்தனை!!

பார்க்கப்
பனிக்கட்டியாய்
தெரிந்தாலும்
பகலவனின்
பனிமலரே
எச்சத்தின் மிச்சமே..

முன்பு
இரவெல்லாம்
கண்விழித்தது நான்.
கலங்கியதோ நீ…

நீ மட்டும்
இல்லையென்றால்
என் வாழ்வு
இருளாவே இருந்திருக்கும்
விலாசமின்றி போயிருக்கும்

கவிதை; கண்டனூர் சசிகுமார்

Series Navigation

கண்டனூர் சசிகுமார்

கண்டனூர் சசிகுமார்

மெழுகுவர்த்தி

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஏ ப்ளஸ் பி – என்று அண்ணன் படிப்பான். குடுவையில் எதாவது வாயு சேகரிக்கும் முறை பற்றிப் படிப்பான். அக்பரின் சாதனைகள் படிப்பான். சர்க்கரை அதிகம் கிடைக்கும் எதோ நாடு பற்றிப் படிப்பான்… அடுத்த வீட்டுக்காரன் பற்றித் தெரியாது. அட்டையே பார்த்திராத புத்தகமும் அதன் ஆசிரியரும் பற்றித் தெரிந்து கொள்வான்… அறிவை விருத்தி செய்கிறான். வகுப்பில் முதல் ஐந்துக்குள் இடம். அண்ணன் பற்றி ஐயாவுக்குப் பெருமை உண்டு.
இவன் கிரிக்கெட்டில் டென்டுல்கர் எத்தனை ரன் எடுத்தான் என்பதில் கவலை காட்டுவான். ”அதெல்லாம் பரிச்சைல கேக்க மாட்டாங்கடா” என்பான் அண்ணா.
கேட்கத்தான் இல்லை. பரிட்சை முடிவு செய்தித்தாளில் வந்தபோது இவன் எண் இல்லை. ”என்னா சிவநேசா, முன் நம்பர் இருக்கு. அடுத்த நம்பர் இருக்கு. உன் நம்பரை அச்சுப்போட மறந்துட்டானா?” என்கிறார் அப்பா. சிரிக்கிறாப்போலப் பேசினாலும் முகம் சிவந்து கிடந்தது.
சர்வீஸ் கமிஷனோ எதோ எழுதி அண்ணனுக்கு தமிழ்நாடு அரசு வேலை. மின்சார வாரியத்தில். வீட்டில் எல்லாரும் சந்தோஷமாய் இருந்தார்கள். இவனுக்கும் சந்தோஷம்தான். அந்தப் பரிட்சையிலும் ஏ பிளஸ் பி சூத்திரங்களும் சத்ரபதி சிவாஜி தாயார் பெயரும் கேட்டிருக்கலாம்… சிவநேசனுக்கு நடிகர் திலகம்தான் தெரியும்.
”உனக்கு செய்யாத வேலைக்குச் சம்பளம் தர்றாப்ல ஆயிப் போச்சே அண்ணே.”
”என்னடா சொல்றே?” என்றான் அண்ணன். நகைச்சுவை வாசனை அற்றவன் அவன்.
”மின்சார வாரியத்துல ரிப்பேர் கிப்பேர்னு வேலை இல்லாம இருந்தாதான் ஊருக்கு நல்லது. அதுக்கு உங்களுக்கு, நீங்க வேலை செய்யாம இருக்கிறதுக்கு சம்பளம்…”
”ஏல இந்த அறிவு பாடம் படிக்கறதுல உனக்கு இல்லாமப் போச்சே” என்றார் அப்பா குடையை மடக்கி உள்ளே வந்தபடியே.
சிறு சிறு கைவேலைகள் வந்தன. டி.வி. மெக்கானிக் ஒருவனோடு கூடப் போனான் சிவநேசன். அவனிடம் இல்லாத கெட்ட பழக்கம் இல்லை. சதா கெட்ட வார்த்தை பேசினான். சிலாள் வெத்திலை போடுவதைப்போல அவன் கெட்டவார்த்தையை உள்ளே அதக்கியபடி இருந்தாப் போலிருந்தது. வெத்திலைச் சாறைத் துப்புகிறாப்போல அவன் வார்த்தைகளைத் துப்பினான். அவனையே பிடிக்காமல் போனது. தனி வேலை என்று நாமாக எதாவது செய்ய வேண்டும் என்றிருந்தது. அதிகாலை பால் பாக்கெட் போடுவது முயற்சி பண்ணிப் பார்த்தான். வருமானம் பத்தாத வேலை. சில நாள் ஒழுகும் பாக்கெட் என்று திருப்பிக் கொடுத்தார்களானால் அன்றைய சம்பளத்துக்கு வேட்டு. அதிகாலை அவன் மணியடித்தபோது வந்து வாங்க எரிச்சல் பட்டார்கள். காலையில் கடைவரை வரத்தான் முடியவில்லை. மாடியில் இருந்து கிழேயிறங்கி வரக்கூட முடியாவிட்டால் எப்படி?
து¡ங்கி எழுந்த ஜோரில் திட்டு வாங்குவதா என்றிருந்தது.
திடீரென்றுதான் கிரி ஞாபகம் வந்தது. கிரி வீட்டில் மெழுகுவர்த்திகள் செய்வார்கள். அவன், அவங்க அக்கா எல்லாருமே வீட்டிலேயே அச்சு வைத்து மெழுகை ஊற்றி நடுவில் திரி பதித்து வண்ண வண்ண மெழுகுவர்த்திகள் வித வித நீள அகலங்களில் செய்வார்கள்.
மெழுகுவர்த்தியே பார்க்க அழகுதான். சின்ன மெழுகுவர்த்திகள் குச்சி மிட்டாய் போல பார்க்கவே கடிக்கத் தோணும். மரக்காலில் நெல் கும்பாச்சியாய் அளந்தாற்போல, உச்சியில் மயிர் கோர்த்த குழந்தை போன்ற மெழுகுவர்த்திகள். சில சற்றே உள்குழிந்து பளபளவெனத் மினுங்கும். வெடித் திரி போன்ற உயர நீட்சியில் லென்ஸ் போன்ற தீபம். சில சடசடவென சப்தம் எடுக்கும். சாக்பீஸ், வாழைத் தண்டு என பல பல வடிவங்களில் சின்னதும் பெரிசுமான மெழுகுவர்த்திகள். சர்ச்சுக்கும் கடைகளில் கரண்ட்கட் சமயங்களில் பயன்படுத்தவும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்யவும் வீட்டில் இருட்டில் ஏற்றி வைக்க எனவும் தேவைப்படி சின்னதும் பெரிதுமான வர்த்திகள். ஆகச் சிறியவற்றை பிறந்தநாள் கேக்குகளின் மேல் ஏற்றி வைத்து உடனே அணைத்து விடுகிறார்கள்.
இவன் கவிதை என அவ்வப்போது மனசில் எதாவது கிறுக்குவது உண்டு.

பிறந்த நாளில்
அழுகின்றன
மெழுகுவர்த்திகள்

பிறந்த நாளிலும் இறந்த நாளிலும் மெழுகுவர்த்திகளை ஏற்றும் பழக்கம் எப்படி வந்தது?
செய்யட்டும் செய்யட்டும், நல்ல பழக்கம். எனக்கு வியாபாரம் ஆக வேண்டுமே… என நினைத்துக் கொண்டான் சிவநேசன்.
இன்னொரு கவிதை எழுதிருவம்.

குருடனின்
கல்லறையில்
மெழுகுவர்த்திகள்

தீபாவளி வர வர டெய்லருக்குக் கொண்டாட்டம். ராப்பகலாய் மிஷின் சடசடக்கும். திடீரென மழை வந்தாற் போல விட்டுவிட்டு மிஷின் சத்தம். மழைக்காலம் குடைக்கு டிமாண்ட்.

அமோக வியாபாரம்
குடை வியாபாரி வீடு திரும்பினான்
நனைந்தபடி

கிறிஸ்துமஸ் சந்தர்ப்பங்களில் கிரிக்கு வேலை இருந்தது. டீக்கடையில் கூட்டம் பார்த்துப் பார்த்து போன்டா, பஜ்ஜி, சமோசா என்று போடுகிறதைப் போல சீசனுக்குத் தக்கபடி தேவைப்படி அவனது மெழுகுவர்த்தி அளவுகளும் மாறின. சர்ச் ஆர்டர் உலக்கை உலக்கையாய்ச் செய்ய வேண்டியிருந்தது. விதவித வண்ணங்களில் ஸ்கெட்ச் பேனா பொதிந்தாற்போல பேக் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகளை கடைகளில் விற்கலாம். போலிஸ்லத்தி ரூல்தடி அளவிலானவை விலை அதிகம் என்று மெதுவாகவே தள்ள வேண்டியிருந்தது. அதேவிலையில் சிறியவை ஒரு பாக்கெட் வாங்கி வெவ்வேறு இருட்டறைகளில் வீட்டில் பொருத்திக் கொள்ளலாம் என ஜனங்களின் கணக்கு.
வண்ண வண்ணங்களில் மெழுகுவர்த்திகள் வந்தாலும் சிலர் நீள அங்கிப் பாதிரிமார் போல வெள்ளை வர்த்திகளையே ஏனோ விரும்புகிறார்கள்.
சைக்கிள் இருந்தது வீட்டில். திறந்த அட்டைப் பெட்டி கட்டிக் கொண்டான். விதவிதமான பொட்டலங்களில் மெழுகுவர்த்திகள் வரிசையாய் அடுக்கிக் கொண்டான். பார்க்கவே அழகாய் இருந்தது. ராக்கெட் வெடிகள் போல.
தெருத் தெருவாய் அலைந்து கதவு கதவாய்த் தட்டி விற்பது புது அனுபவம். அதிர்ஷ்டம் சார்ந்த அனுபவம் அது. திடுதிப்பென்று ஒருநாள் ஏகப்பட்ட விற்பனை என்றிருக்கும். ஒருநாள் வியாபாரம் படியவே படியாது. செத்த ஆத்மாக்கள் வீடு மாட்டினால் லாட்டா விற்கலாம். அட ஒரு கவிதை எழுதுவம்.

தீக்குளித்துச் செத்தவள்
தலைமாட்டில்
தீபம்

கதவு திறக்கும் முதல் முகம் ஆணோ பெண்ணோ, வாலிபமோ வங்கெழடோ, சிரிக்குமோ எரிந்து விழுமோ… மனிதர்கள் அத்தனை வகையும் சந்திக்கலாம் போலிருந்தது.
அம்மா?- எனக் கூப்பிட்ட ஒரு வீட்டில் ஜன்னல் வழியே நாய் ஒன்று எட்டிப் பார்த்தது. பெண் நாயோ? சிறு பெண் குழந்தை ஜன்னல் கம்பியோடு ஒட்டியபடி எட்டிப் பார்த்தது பிறகு.
”-ம்மா டாட்டா”
உன்னைக் கூட்டிட்டுப் போவலியா? – என்று கேட்டான் சிவநேசன். அதற்கு அழுகை வருகிறதா என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தான். ”வா, டாட்டா. நா து¡” (என்னைத் து¡க்கிக்கொள்) என்று இவனைக் கூப்பிட்டது குழந்தை.

திருடன் து¡க்கிக் கொள்ள
அடம் பிடிக்கும்
குழந்தை

மெழூகு வர்த்தீ… என விநோத இழுப்புடன் குரல் கொடுத்தான் சிவநேசன். விசித்திரமான குரல் எடுப்பு காதுகளை ஈர்க்கும் என்பது ஐதிகம். தீ – என்ற வார்த்தையே பார்க்க பற்ற வைத்த மெழுகுவர்த்தி போல உச்சியில் கொண்டை போட்டதாய் இருக்கிறது, என யோசனை வந்தது.
கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல நம்மாளுகள் தீயை வழிபட கார்த்திகை கொண்டாடுகிறார்கள். தீயை துண்டு துண்டாய் நறுக்கினாற் போல அடுக்கிப் பார்ப்பது, என ஒருவன் யோசித்திருக்கிறான்!
கோபி வைத்த மாதிரி – சாந்துப் பொட்டு வைத்தாற்போல தீ சூடும் வர்த்திகள்.

வெள்ளை நு¡லுக்கு
உயிர் வந்தது
தீயின் நடனம்

மெழுகு வர்த்தீஈஈ …
ஒரு பெரியவர் அவனை நிறுத்தினார். மொதல் போணி முகம் சுளிக்கக் கூடாது, என நினைத்துக் கொண்டான். சைக்கிளில் இருந்து இறங்கினான்.
”என்னா அது?”
சொன்னான் அடக்கமாய் . ”காதுல விழுகல. அதான் கேட்டேன்” என அவர் தாண்டிப்போனார்.
எங்க போறீங்கய்யா?
”தெருக்கோடி பெட்டிக்கடை… பொடிமட்டை வாங்கணும்…”
”கடை பூட்டிக் கெடக்கு” என்று பொய்யை அவிழ்த்து விட்டபடியே சைக்கிளில் ஏறினான்.
மெழுகுவர்த்தி நிரந்தரமாய்த் தேவைப்படுகிற வஸ்து அல்ல. முன்ஜாக்கிரதைக்காரர்கள் மாத்திரம் வாங்கிப் பத்திரப் படுததி வைத்து தேவைக்கு, திருவிளையாடல் சிவாஜி போல ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே…’ என்று பின்னணிப் பாடலுடன் தேடோ தேடென்று தேடுவார்கள்.

தேர்வு முடிவு
தேடினான் எண்ணை
நண்பனும் தோல்வி

எதிரில் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்த பெண் – ஓ.கே. – அழகாய் இருந்தாள். மெழுகு வர்த்தீ… என்று கத்தினான் ஒரு நம்பிக்கையுடன். அவள் தலையைத் து¡க்கிப் பார்த்தாள். (உனக்குக் கல்யாணம் ஆயிட்டதா) வர்த்தி வேணுமா?- என்று கேட்டான்.
”இருக்கு” என்றாள் அவள். கிணற்றில் தண்ணிதான் இல்லை போல… என நினைத்துக் கொண்டான்.
நல்ல வெயில். காய்கறியும் மீன் இறால் நண்டு எனவும் தெருவில் எதிர்பார்க்கிறவர்கள் மெழுகுவர்த்தியை எதிரகொண்டார்கள் இல்லை போல. அவன் குரலை யாருமே சட்டை செய்யவில்லை. பத்து தெருக்கள் சுற்றி வந்து விட்டான். தெரு வாசலில் கும்பலாய் கதை பேசி முடி சிக்கெடுத்துக் கொண்டிருந்த பெண்கள் கூட பழைய பேப்பர்க்காரனையோ, ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழத்தையோ எதிர்பார்த்திருந்தார்கள். அம்மா மெழுகுவர்த்தீ… என்று நின்றால்கூட, ”வேணாம்” என்று முகம் திருப்பிக்கொண்டு, வடிவேலு பார்த்திபன் சேர்ந்தாலே ஒரே சிரிப்பு… என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.
நாலு பொம்பளையாட்கள் சேர்ந்தாலே சிரிப்புதான்.
வெயிலுக்கும் அதுக்கும் முகமே எரிந்தது. தொண்டையில் சத்தஎடுப்பு வேகமடங்கினாப் போல இருந்தது. தண்ணீர்ப் பாக்கெட் வாங்கி முகத்தைக் கழுவி தொண்டையை நனைத்துக் கொண்டான். வர்த்-/தீ/ என்று சத்தமாய்க் கத்த தொண்டைக்குள் /தண்ணீர/¢ வேண்டியிருந்தது.
எதிரே வரும் ஐஸ்வண்டி, பலு¡ன்காரன் எல்லார் மீதும் எரிச்சலாய் வந்தது. ஒருவேளை மெழுகுவர்த்தி விற்க வந்தது தப்போ, என்றிருந்தது. காய்கறி என்றும் பழம் என்றும் வண்டிகள் கடந்து விற்பனையாகிக் கொண்டே போயின. பக்கத்துத் தெருவில் அந்த வண்டியில் சரக்கு அளவு கணிசமாய்க் குறைந்திருந்தது.
ஒரு வீட்டில் குட்டி மெழுகுவர்த்தி கேட்டு, அதுவும் ரெண்டே ரெண்டு, பாக்கெட் உடைத்துக் கொடு, என்றார்கள்.
பாக்கெட்டா வாங்கி வெச்சிக்கிடப்டாதா? உபயோகமாகுமில்லே?
”யாருக்கு? பக்கத்து¡ட்டுக்கு!” என்றாள் அந்தப் பெண்மணி. ”ஓசி கேட்டு வந்துருவாளுக… எந்த ஜாமானையும் வாசல்ல நின்னு வாங்கினாவே ஓசிக்கு நல்லா ஞாபகமா கேட்டு வந்துர்றாளுக” என்றாள்.
”கோகிலாக்கா…” இருவருமாய்த் திரும்பிப் பார்த்தார்கள்.
”ஒரே தலைவலிக்கா. அமிர்தாஞ்சன் கெடைக்குமா?” என்றாள் வந்தவள்.
சரி, மொதல் போணி என்றாவது ஆகட்டும் என்றிருந்தது. இந்தாங்க, என்று பாக்கெட்டை உடைத்து, இரண்டு சிறிய மெழுகுவர்த்திகளை நீட்டினான்.
”ஒண்ணு போதும்” என்றாள் கோகிலாக்கா.
லேசாய் இருட்டத் துவங்கிய மாலை வரை அலைச்சலாய் அலைந்தும் பெரிதாய் ஒன்றும் விற்க முடியவில்லை. பத்திருவது ரூபாய், சில்லரை வியாபாரம்தான். அதிலும் பசிக்கு என ஒரு டீக்காசு எடுத்திருந்தான். கால்கள் வலித்தன. வெயிலை விரயமாக்காமல் சுற்றித் திரிந்தாகி விட்டது.
அட, இந்தப் பக்கம்தானே அண்ணன் அலுவலகம் என்று தோன்றியது. அவன் நண்பர்கள் யாரும் இரக்க அடிப்படையில் வாங்கக் கூடும். சைக்கிளை ஓட்டிப் போனான் அலுவலகப் பக்கம். அண்ணன் விரும்புவானா?
”என்னடா?” என்றான் அண்ணன் ஆச்சரியத்துடன்.
வேலை முடிச்சிக் கிளம்பிட்டியோன்னு யோசனையா வந்தேன், என்றான் சிவநேசன் புன்னகையுடன். சட்டென்று வியாபார அறிமுகம் செய்துவைக்கக் கேட்கத் தயக்கமாய் இருந்தது. லேசாய் மழை இருட்டுக் கொடுத்த வேளை. இருந்த வெயிலுக்கு மழை வரும் போலத்தான் தெரிந்தது… ஆகா, என்று யோசனை வந்தது.
அண்ணே எனக்கு ஒரு உபகாரம் செய்யணுமே. உன்னால முடியுமா, என்று கேட்டான்.
மனசில் ஒரு வைராக்கியம் வந்தது. முதல் நாள் வியாபாரத்தில் அவநம்பிக்கைப் படவே கூடாது, என்றிருந்தது. உற்சாகப் படுத்திக் கொள்ள கவிதை எழுதினான் உள்ளே.

வெள்ளையடித்து சாமிபடம்
வரைந்துவிட்டுக் கிளம்பினான்
ஒண்ணுக்கடித்து விட்டு

மெழுகுவர்த்…தீய்…
இருட்டு மெழுகுபிடித்தாற் போல மேலிருந்து ஒழுக ஆரம்பித்திருந்தது. தெரு விளக்குகள் மெல்ல ஔ¢ர ஆரம்பித்தன. அதே தெருக்களில் பரிச்சயப் பட்ட முகங்களைத் தேடியபடி மெல்ல வண்டியைச் செலுத்தினான்.
மெழுகுவர்த்தீ…ய்
சட்டென விளக்கு அணைந்து கும்மென உள்க் கலவரத்தை ஏற்படுத்தியது. தெருவே வீடுகளே சட்டென்று அழிந்து போனாப் போல இருந்தது. என்ன நாள் இது. அமாவாசை தாண்டியா முந்தியா தெரியவில்லை. எங்கோ சிறுவர்கள் ஊய்யென ஊளையிட்டார்கள்.
சட்டென விளக்கணைவது ஊருக்கு தீய சகுனம். எனக்கு நல்ல சகுனமா என்று தெரியவில்லை. ஆ முதல் குரல். கேட்ட குரலாட்டம் இருந்தது. அந்த கோகிலா அக்காவிடம் அமிர்தாஞ்சனம் கேட்டவள்.
மெழுகுவர்த்தி… என்றான் நம்பிக்கையாய்.
பாக்கெட்டாக வாங்கிக் கொண்டாள். பெரிய வர்த்தியாய்த் தந்தான். ”சின்ன வர்த்தி போதும்” என்றவளிடம், அது வித்துப் போச்சு, எனப் பொய் சொல்ல வேண்டியிருந்தது. கரெண்ட் வந்து விடக் கூடாதே என்று இருந்தது.
”தீப்பெட்டி இருக்கா?” என்றாள். இல்லை, என்றான். ”ரெண்டு குச்சி கூடப் போதும்” – நான் சிகெரெட் குடிக்கறதில்லை, என்றான் பவ்யமாய்.
ஆனால் மெழுகுவர்த்தியுடன் தீப்பெட்டி விற்பது நல்ல யோசனையாத்தான் இருந்தது.
தண்ணீர்ப் பாக்கெட் வாங்கிய கடைவாசலில் நிறையப் பேர் மெழுகுவர்த்திகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் அருகேபோய் நின்றுகொண்டு விறுவிறுவென்று அங்கேயே நிறைய விற்றான். கடைக்காரன் ஒரு பார்வை பார்த்தான்.
மெழுகுவர்த்தி வேணுமா அண்ணே? மொத்தமா வாங்கி வெச்சிக்கிட்டா நல்லா வியாபாரம் ஆகும் இல்லே? – என்று நட்புடன் புன்னகைத்தான்.
”எவ்வளவு இருக்கு?”
பாதிக்கு மேல வித்திட்டேன், என்று இன்னொரு பொய்யும் சொன்னான்.
”மீதி மொத்தமும் குடு” என்றான் கடைக்காரன்.
நம்ம கிட்ட கடன் கிடையாது அண்ணாச்சி.
”அட இந்தா” என்று விற்பனை விலையில் தன் லாபத்தைக் கணக்குப் பண்ணி குறைத்து முழு சரக்கும் வாங்கிக் கொண்டான் அண்ணாச்சி.
உற்சாகமாய் இருந்தது. சைக்கிளை மிதித்தபடி வண்டியை வேகமாய் மிதித்தான்.

வீட்டுக்குள்
பாடம் படிக்கிறது குழந்தை
நிலா நிலா ஓடிவா

ரெண்டு தெரு தாண்டியதும் பொதுத் தொலைபேசி. நின்றான்.
அண்ணே?
”என்னடா?” என்றான் அண்ணன் மறுமுனையில்.
மெயினை ஆன் பண்ணலாம் அண்ணே – என்றான் சிவநேசன்
——————————————————————-

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்