வீடு

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ராம்ப்ரசாத்


பசியில் இளைத்த பெருமரத்தின் செவிகளைச்
சுற்றிசுற்றி ரீங்க‌ரித்துக்கொண்டிருக்கிற‌து
தொலைந்து போன‌ த‌ன் வீட்டை
தேட‌த்துவ‌ங்கிய‌ வ‌ண்டொன்று…

வாஸ்து இங்கும் ச‌ரியில்லையோ என்ன‌வோ
ப‌ரிமாற‌ வேண்டிய‌ ஒரு ல‌யிப்பை
அச‌ட்டையாய் வீணாக்கிவிட்டு
அடுத்த‌ ம‌ர‌த்துக்கு தாவ‌
எத்த‌னிக்கிற‌து தன்னியல்பில்…

– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்

வீடு

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


கூரையில் பகல்நேர வெளிச்சத்திற்காகப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித்துண்டு வஞ்சகமின்றி நிலா வெளிச்சத்தைப் பாய்ச்சியதில் வீட்டின் நடுப்பகுதியில் விளக்கைப் போடாமலேயே நடமாட முடிந்தது.இருப்பது இரு அறைகள் கொண்ட வீடு.இதில் அப்பாவுக்கு ஒரு அறை.அம்மாவுக்கும் இவளுக்கும் சுதாவுக்கும் ஒரு அறை.இவர்களது அறை கொஞ்சம் பெரியது.அதில்தான் ஆடைகளையும்,சில பாத்திரங்களையும் இவளுக்கு மிகவும் பிடித்த வானொலிப் பெட்டியையும் வைத்திருந்தார்கள்.

இவளுக்குத் தூக்கம் வரவில்லை.என்ன முடிவெடுப்பது என்றும் தெரியவில்லை.நாளை தண்ணீர் எடுத்துவரப் போகும்போது இது சம்பந்தமாகப் பேசலாமா சரவணனிடம்? அவரென்ன? என்னை விரும்புகிறாரா இல்லை இந்த வீட்டை விரும்புகிறாரா எனக்கேட்டு விடலாமா?

மூத்த மகளின் 31 வயதுக்குப் பின்னர் ஒரு வழியாக அமைந்த வரன் சீதனமாகப் பணமும் நகையும் பெருந்தொகையாகக் கேட்பதில் தனியார் கம்பனியொன்றில் சாதாரண பியூனாக வேலை செய்யும் அப்பாவுக்கு வீட்டை விற்றுத் திருமணத்தை நடத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

அவரும்,அம்மாவும் பலநாட்கள் தூக்கமின்றித் தவித்து சேர்ந்து இம்முடிவுக்கு வந்திருந்தனர்.வீடு அப்பா வழி வந்தது.ஒரு மகளின் திருமணத்தை வீட்டை விற்றாவது ஒப்பேற்றிவிட்டால் வரும் மருமகன் இளையவளின் திருமணத்துக்கு எப்பாடு பட்டாவது உதவுவார் என்ற நம்பிக்கையை மலையாய்ச் சுமந்தனர் இருவரும்.

அவளும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள்.ஒருத்தி திருமணத்திற்காக இன்னொருத்தியும்,பெற்றவர்களும் நடுத்தெருவில் நிற்பதனை அவள் சிறிதேனும் விரும்பவில்லை.வேறொரு வரன் பார்க்கலாமென வாதாடித் தோற்றாள்.கெஞ்சிப் பார்த்தாள்.பெற்றவர்களின் முடிவில் எந்தச் சலனமும் இல்லை.எதுவும் செய்ய இயலாதவளாக சுதாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

காலம்,காலமாக பரம்பரைகள் பலகடந்து வந்து அப்பாவுக்குச் சொந்தமான புராண வீடதனை விற்பதொன்றும் இலகுவாக அமையவில்லை.பல ஓட்டைகள் கொண்ட கூரையும்,இப்பொழுதோ,அப்பொழுதோ என இடிந்துவிழப் பார்த்துக்கொண்டிருந்த சுவர்களும்,வீட்டிற்கான பெறுமதியை தங்களால் இயன்றவரை குறைத்துக் கொண்டிருந்தன.

இறுதியில் ஊர்ப் பெரியவரே விலையைக் குறைக்கப் பல காரணங்கள் சொல்லி வீட்டை வாங்கினார்.தெரு முச்சந்தியில் அமைந்திருந்த அந்த வீட்டை உடைத்து கடை அமைக்கலாமென்பது அவரது எண்ணமாக இருந்தது.அவரது எண்ணத்திற்கேற்ப அதிஷ்டமும் சேர்ந்ததில் அப்பாவின் இயலாமையால் போட்டி போட முடியவில்லை.இருப்பினும் ஊர்ப்பெரியவருக்கும் நெஞ்சின் ஒரு மூலையில் இரக்கமிருப்பதை திருமணத்திற்கும்,அதன் பின்னர் ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து அதில் தங்குவதற்கான அனுமதியும் அளித்தமை காட்டியது.வீட்டை விற்ற பணத்தில் திருமணச் செலவுக்கும் ஒதுக்கி,மணமகளுக்கான உடைகள்,நகைகளோடு,ஒரு சோடித் தங்கக் காதணி,அரைப்பவுனில் ஒரு சங்கிலி,ஒரு நல்ல சேலை தங்கைக்கும் கிடைத்தது.

நிலவு,கண்ணாடித்துண்டில் முகம் பார்த்துத் தாண்டிப் போயிருக்க வேண்டும்.அவ்விடத்தை மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது.அவளுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை.அருகிலிருந்த சுவரை மெதுவாகத் தடவிக்கொடுத்தாள்.சிறுவயது முதல் அவளைத் தாலாட்டிய வீடு.முதன்முதலாகத் தவழ்ந்து,நடந்து விழுந்த தரையிது.அவளை முழுவதுமாகத் தாங்கிச் சுமந்த நிலமிது.

சிறுவயது முழங்கை,கால் சிராய்ப்புகளுக்கு இதே சுவற்றின் சுண்ணாம்பைத் தொட்டுத் தடவியிருக்கிறாள்.சமையலறையில் படிந்திருக்கும் கருப்புக் கரியை விஷேட நாட்களில் விழிகளில் பூசியிருக்கிறாள்.அவளைப் பொறுத்தவரையில் இது அவளது விருப்பத்துக்குரிய ஒரு உயிர்.இது அவளோடு பேசும்.இவள் சொல்லும் கதைகள் எல்லாவற்றையும் கேட்கும்.சிரிக்கும்.அழும்.

சரவணன் அன்று முதன்முதலாகத் தந்த காதல் கடிதத்தை இந்த வீடு மட்டும் குறுகுறுப்பாய்ப் பார்க்க,இரகசியமாக இரவில் எழுந்து படித்து மகிழ்ந்திருக்கிறாள்.இனி எதுவும் அவளுக்குச் சொந்தமில்லை.

அக்கம்பக்கத்து வீட்டுத் தோழிகள் மணமகளின் இரு கரங்களுக்கும் மருதாணியிட்டுக் கொண்டிருந்தனர்.மருதாணியின்றிச் சிவந்திருந்தன அவளது விழிகள்.சிந்தனையோட்டம் சகோதரியைப் பற்றித் திரும்பியது.

பாடசாலைக் கல்வியைப் பாதியில் நிறுத்தியவள்,அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்தபடி இருக்கிறாள்.முன் துருத்திய பற்கள் குறையாக இருந்தது.இந்த லட்சணத்தில் வீடுமில்லையென்றால் எந்த ராஜகுமாரன்,எந்தக் குதிரையில் வருவான் இவளைப் பொக்கிஷமாக அள்ளிக் கொண்டு போக?அப்பாவைச் சொல்லிக் குற்றமில்லை.அம்மாவைச் சொல்லியும்தான்.

வீடு முழுக்க உறவினர் மற்றும் அயலவரின் மகிழ்ச்சி ஆரவாரம் நிறைந்திருக்க பெற்றவர்களின்,சகோதரியின் விழிகளில் துயரத்தின் சாயல் மிகக் கடுமையாகப் படிந்திருப்பதை சுதாவும் உணர்ந்தே இருந்தாள்.

திருமணம் நல்லபடியாக நடந்துமுடிந்தது.கழுத்தில் தாலி கட்டப்படும் சந்தர்ப்பத்திலும் வீடு பற்றிய எண்ணங்களே மிதந்திருந்தன அவளுக்கு.பலரிடமிருந்தும் மகிழ்ச்சியாக வாழ்கவென்ற ஆசிர்வாதங்கள் பல கிடைத்தபோதும் அத்தனையும், இழந்த அவளது வீட்டை மீட்டுத் தருமா என்ன?

மணமகளின் உடல் சுமந்திருந்த ஆபரணங்கள் மாமியாரின் முகத்தில் பெரும் புன்னகையைத் தீட்டின.தம்பதியினை வழியனுப்பி வைக்கையில் அப்பா,அம்மா,சுதாவின் விசும்பல்கள் மகளைப் பிரிவதற்கு மட்டுமேயானதல்ல எனவும் புரிந்தது அவளுக்கு.

சரவணனிடம் இன்று பகலே இதுபற்றிப் பேசப்போகிறாள்.திருமணத்திற்காக, ஆண்டாண்டு காலம் தன்னைச் சுமந்த வீட்டை விற்க நேர்ந்ததனைச் சொல்லப் போகிறாள்.நிர்க்கதியாகி நிற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவவேண்டுமெனக் கோரப் போகிறாள்.

சரவணன் என்ன சொல்வான்?ஒருமுறை ஏதோ தேவைக்காக இவளது ஊருக்கு வந்த சமயம் தண்ணீர் எடுத்துவர வெளியே வந்த இவளைப் பார்த்ததில்,அவனுக்கு இவளைப் பிடித்துப் போனது. பேசிய சிலநாட்களிலே அவ்வளவு முரடன் இல்லை என்பது தெரிந்து விட்டது.லொறி ட்ரைவராக வேலை செய்வதில் எப்படியும் மாதாந்தத் தேவைகளுக்கான பணத்தைச் சம்பாதித்துவிடுவான்.அதில் தான் மிச்சம்பிடித்து தனக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கி பெற்றோரை,அவர்களது இறுதிக் காலங்களில் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கனவாகச் சுமந்தலைந்தாள்.

பகல் அவனுடன் பேசியதில்,பிற்காலத்தில் நல்லதொரு நிலைமைக்கு வந்ததன் பிற்பாடு சொந்த வீடு வாங்கி அப்பா,அம்மாவைக் கூடவே வைத்துக் கொள்ளலாம் என்று அவன் அளித்த காதல் வாக்குறுதியை நம்பி, இரவானதும் புதுச் சேலையையும்,நகைகளையும் அணிந்துகொண்டாள்.தனக்கு மிகவும் பிடித்தமான வானொலிப்பெட்டியையும் தனது உடைகள் சுமந்த பையில் போட்டுக் கொண்டு,வீட்டின்,தெருவின் அனைத்து சந்தடிகளும் ஓய்ந்ததன் பிற்பாடு தெருமுனையில் காத்திருந்த சரவணனின் லொறியில் ஏறிக்கொண்டாள்.அது வீட்டைத் தாண்டிப்போகையில் ஏக்கமாக ஒருமுறை வீட்டைத்திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

தங்கை லொறி ட்ரைவருடன் ஓடிப்போன விடயம் மாப்பிள்ளை வீடுவரை போய்ச் சேர்ந்ததில்,மணமுடித்து இரண்டு நாட்களிலேயே வாழாவெட்டியாக வீடு வந்து சேர்ந்தாள் மூத்தவளான சுதா.

-எம்.ரிஷான் ஷெரீப்,

மாவனல்லை,

இலங்கை.


msmrishan@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

வீடு

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

வைகைச் செல்வி



மூலை முடுக்கெல்லாம்
சிலந்தி வலை பின்ன
காலை விரித்தபடி
நண்டோடும் வலைக்குள்.

மண்ணுக்குள் புழுக்கள்
மரப் பொந்தில் ஆந்தை.
விண்ணில் சிறகடிக்கும்
பறவைக்குச் சிறுகூடு.

காட்டுக்குள் உப்புக்
கடலுக்குள் பல்லுயிர்கள்.
நாட்டு நாய் வாழும்
நிம்மதியாய்த் தெருவில்.

ஓதுவார் யாருமின்றி
ஒற்றுமை தேன்கூட்டில்.
யாதும் ஊர்தானே
பூச்சிக்கும் எறும்புக்கும்?

செங்கல்லும் சுண்ணாம்பும்
சின்னஞ்சிறு குடிசைகளும்
மங்காத சலவைக்கல்
மாளிகையும் நிலைத்திருக்க. . . .

சாதி மதச் சுவர்களுக்குள்
மூச்சு முட்டி வெப்பத்தால்
சோதியாக எரியுதம்மா
பாழும் மனிதக் கட்டைகள்!


vaigai_anne@yahoo.com

Series Navigation

வைகைச் செல்வி

வைகைச் செல்வி

வீடு

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

தேவமைந்தன்


வாழ்வதற்காகத்தான் வீடு
திடப்பொருள்களுக்கு அல்ல.
குறிப்பாக எஃகு நிலைப் பேழைகளுக்கு.
அதிலும் குறிப்பாக ஓரம் மழுக்காத
கொடூரம் ததும்பும் கட்டில்களுக்கு.
மேலும் குறிப்பாக
தூசி புழுதி காவாத
உயரமான அடுக்குகளுக்கு.
மரச்சாமான்கள் உயிருடன் இருந்து
நமக்கு இதமான தோழமை தந்தாலும்
அவற்றின் மிகையும் கூடத்தான்
வீட்டுக்கு அன்னியம்
முழங்கால் மூட்டைப் பெயர்க்கும்
இழுவை மேசைகள்
வீட்டின் நிம்மதிக்கு ?வில்லன் ?கள்.
மழுமழு என்று முகம் பார்க்கலாம்
தரையோ, கனத்த வீட்டார்க்கு
?சீரியலில் ? வரும் வகைமாதிரி வில்லி.
சரி, விடுங்கள்!
தனிமனிதத்துவம்
தன்னலமும் கூடிய அவசங்களுக்கு
எப்படிக் கவிதையானது
இடம் தரலாகாதோ
அப்படித்தான்
மேற்படிப் பொருள்களுக்காக அல்ல
வீடு-
மனிதர் வாழத்தான்.
****
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்

வீடு

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

றகுமான் ஏ. ஜமீல்


பறவைகளினதும்
பாம்புகளினதும்
கூடுகள் பற்றிய கனவுகள் போலவே
எங்களது கனவும்
வீடாகவே இருந்தது.

அப்பா கொல்லன் உலையில்
ஆயுளைக்காய்ச்சி
அம்மா பன்பிடுங்கி
தன்னை இழைத்து
நான் பிறதேசமொன்றில்
குப்பைகொட்டி
ஒவ்வொரு கல்லாய் சேர்த்து
பார்த்து பார்த்து
நிர்மாணித்த எங்கள் வீடு.

குடி புகுந்து
இரவு அகலவிரித்து உறங்கி
முற்றத்து மல்லிகைக் கொடியில்
மொல்லென படர்ந்திருக்கும்
பனிக் குடங்களை முகத்திலுதறி
சிலிர்க்கும் அதிகாலை.

கடல் விரண்டு
ஊரைச் சுருட்டி உதறி
எங்கள் வீடிருந்த தடத்தில்
தூரத்து வீடொன்றின் இடிபாடும்
கனவுகளும் சிதறிக் கிடந்தது.
கூட்டி எடுக்க முடியாத படி.

கடல் முன்றலில்
இராட்சத பாம்புபோல்
நீண்டு படுக்கும் சாலையின்
சிறு துண்டென புதைந்துகிடக்கிறது.
எங்களது வீடும் கனவும்.

றகுமான் ஏ. ஜமீல், இலங்கை

Series Navigation

றகுமான் ஏ. ஜமீல்

றகுமான் ஏ. ஜமீல்

வீடு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

தீபம்கோபி


அறும்பு மழலைகளின்
குறும்புகள் குதூகலிக்கும்!
அன்பு இதயங்களின்
ஆனந்தத்தில் மனம் திளைக்கும்!
சிறுசிறு கவலைகள்
சிரிப்பலையில் சிதைந்துபோகும்!
துளித்துளி சந்தோஷம்
தூறலாய் தூவிடும்!
இளமையும் முதுமையும்
இணைந்து உறவாடும்!

இல்லம் இதுவென்று
மனம் மகிழ்ந்தாடும்….!

விடுமுறை கொண்டாட்டம்
விடிந்ததும் தொலைந்திடும்…
திசைக்கொண்றாய் உறவுகள்
தேடலை தொடங்கிடும்….!
ஆனாலும்….
இன்பத்தின் வரவை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
என் வீடு….!

– தீபம்கோபி,சிங்கப்பூர்.

Series Navigation

தீபம் கோபி - சிங்கப்பூர்.

தீபம் கோபி - சிங்கப்பூர்.

வீடு

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

நா.கண்ணன்


பனியில் சிறுத்து
இலைகள் உதிர்த்து
மலையில் நிமிர்ந்து
வானை முட்டிய மரத்தின்
நுனியில் நின்றது
அந்த
ஒற்றைக்கூடு.
ஒரு குடும்பம் வாழ்ந்த
வீடு!
வாழ்வு சுருங்கி
சுயம் அடங்குதலும்
சுழற்சியே.
மீண்டும் ஒரு வசந்தம்
வரும்.
வலசை போன பறவை
வரும்.
ஒற்றைக் கூட்டின்
தனிமையை முறிக்க
முட்டை ஒன்று
இரண்டு உயிர்த்தெழும்.
ஒற்றைக்கூடு
அப்போது
மீண்டுமொரு
வீடு ஆகும்.
—-
====
Kannan ‘s musings (almost updated daily)….

(TSCII 1.7)
(in Unicode)
(in Unicode) – Pasura Madal

Series Navigation

நா.கண்ணன்

நா.கண்ணன்

வீடு

This entry is part [part not set] of 8 in the series 20000716_Issue

கோகுல கண்ணன்



என் சரணாலயத்தில்
அவ்வப்போது பறவைகள்
குடிகொள்கின்றன

பறவைக்கூடுகளால்
ஆக்கப்பட்ட கூடென
எத்தனை பெருமையெனக்கு

அதிரும் வீடு
இடையற்ற படபட
சிறகடிப்பில்
மொழிமீறிய
தீராத உரையாடலில்

பறவைகளின் அன்பளிப்பென
சேமித்து வைக்கிறேன்
கழன்றுவிழும் சிறகுகளை

சிறகு முளைத்த நந்தவனமாய்
பூத்துக்குலுங்கும் வீடு
ஒரு நாள்
பூமியின் ஈர்ப்பை
இலகுவாய் உதறி
காற்றின் கரம்பற்றி
அந்தரவெளியில் தாவியேறும்

நான் காத்திருக்கிறேன்

பறவைகளின் முடிவற்ற கருணையில் உதிரும்
அந்த ஒற்றைச் சிறகுக்காக

இசை

****************************
காற்று தவிக்கும் நுண்நடுக்கத்தில்
நெஞ்சம் ததும்பி
கால்கள் தரைதப்ப
காற்றலைபுரளும் வெளிதனில்
கலைந்து கலைந்து
பிளவுற்று விரியும் ப்ரக்ஞையுடன்
பிரளயத்தின் வேகத்தில்
புல்லாய் பணிந்திருப்பேன்
நீலத்தின் குளிர்ச்சி
விழிவழி நுழைய
கபாலத்தின் தகிப்பு
கரைந்து வழிய
லேசான நம்பிக்கையில்
காற்றின் தோள்தழுவி
வெளியெங்கும்
பரவி பரவி

முடிவில்லா பள்ளத்தின்
அடர்ந்த இருள் சதுப்பில்
உதிர்கிறேன்
வெறி செலுத்தும் புரவியின்
விசையோடு

மெளனத்தின் முஷ்டி
ப்ரக்ஞையில் வீழ்கிறது
தீர்க்கமாய்
முன்னறிவிப்பற்ற
மூர்க்கத்துடன்

மெதுவாய்
மெதுவாய்
நம்பிக்கையின்மையுடன்
களைப்புடன்
சிதறி கிடக்கும்
என்னை
சேகரித்து
சரியான பகுதிகளை
ஏறக்குறைய
சரியான இடத்தில்
பொருத்தி
மீண்டும் வந்து சேர்வேன்
உன் பாடலின்
தொடக்கத்திற்கு.

**

Series Navigation

கோகுல கண்ணன்.

கோகுல கண்ணன்.

வீடு

This entry is part 2 of 2 in the series 20000406_Issue

காஞ்சனா தாமோதரன்


அவள் தூண் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நல்ல தேக்கில் கடைந்தெடுத்து மேற்பூச்சுப் பளபளப்பு இன்னும் போகாமல் நின்றது தூண். உச்சியிலும் அடியிலும் கல்லில் செதுக்கிய தாமரை இதழ்கள். சிறு வயதில் இவற்றை இரு கைகளாலும் கட்டப் பார்த்துத் தோற்றது ஞாபகம் வந்தது. ஒரு தூணிலிருந்து அடுத்த தூணுக்கு ஒரே தாவில் தாவ வேண்டும். அவள் எப்போதும் ஜெயிப்பாள். நான்கு பக்கமும் தூண்களுள்ள திண்ணைகள். ஒவ்வொரு மூலையிலிருந்தும் அரை வட்டங்களாய் ஆறு படிகள். கீழே இறங்கினால் இரண்டு அடுக்கு உயரக் கூரையுள்ள முற்றம். குறுக்கும் நெடுக்குமாய் கட்டம் போட்டு, நடுவில் வட்டத்துக்குள் செந்தாமரை செதுக்கிய குளிர்சிவப்பு சிமெண்டுத் தரை. படங்களில் வரும் ராஜாவின் கொலு மண்டபம் போல்.

தாத்தா அந்த ஊருக்கு ராஜா மாதிரிதான் இருந்தார். பஞ்சாயத்து இருந்தாலும் வழக்கு தீர்க்க ஊர் சனங்கள் தாத்தாவிடம்தான் வருவது. வயல் வரப்புத் தகராறில் அண்ணன் தம்பி ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட இதே முற்றத்தில் நின்றது ஞாபகம் இருக்கிறது. ஊரே கூடி விட்டதே அன்றைக்கு. மாட்டுப் பொங்கல் அன்றைக்குப் பசுவும் கன்றும் இந்த முற்றத்தில்தான் வந்து நிற்கும். லச்சுமிப் பசு ஒரு கொம்பு பச்சை, ஒரு கொம்பு சிவப்பு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் பூமாலை, பனங்கிழங்கு மாலை, பக்கத்தில் கன்றுக்குட்டி என்று அம்சமாய் இருக்கும். பாட்டி அதற்கு தீபாராதனை காட்டுவாள். அது அந்த முற்றத்தில் சாணம் போட்டு ஆசீர்வதிக்கக் காத்திருப்பாள். லச்சுமிப்பசுவும் ஏமாற்றாது. ராசியான முற்றம். ஊர் அம்மன் கொடையில் கும்பக்காரியின் முதல் ஆட்டம் முற்றத்தில்தான். நாதஸ்வரக்காரரின் குழலில் காசுச் சரம் கண் சிமிட்டும். மேளக்காரர் முன்னும் பின்னுமாய் ஆடி ஆடி அடிக்கும் வேகத்தில் அவர் கொண்டை அவிழ்ந்து கூந்தலும் ஆடும். நையாண்டி மேளம். பம்பை. பெண் வேசம் கட்டும் கனியான். ஸாட்டின் காலுறை தெரிய பாவாடை சுழலப் பம்பரமாய்ச் சுற்றும் கும்பக்காரி. திண்ணைத் தூணைப் பிடித்துக் கொண்டு இதையெல்லாம் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கும். வளர்ந்ததும் கும்பக்காரி ஆகலாம் என்ற ஆசை வரும். சின்னையா ஆசாரி நகை சுற்றித் தரும் ரோஜா நிறத் தாளை ஈரப்படுத்தி உதட்டுக்குச் சாயமேற்றி, சொம்பைத் தலை மேல் வைத்து, பாவாடை சுழல, கண்ணாடிக்கு முன் கரகாட்டக்காரியாய் நடிக்க வைக்கும்.

பூசை அறையில் அபிஷேகப் பன்னீர் விபூதியின் மணமும் கலையாமல் கிடந்த வருடங்களின் வாசமும் சேர்ந்து அடித்தது. இருண்ட மூலையில் பச்சையும் ரோஜாவும் பூசிய இரும்புப் பெட்டி. அதன் மேல் லக்ஷ்மிதேவி பொற்காசுகளைத் தாராளமாய் நீரில் இறைப்பதைப் பார்த்து இரண்டு யானைகள் வாய் பிளந்து நின்றன. இன்னொரு மூலையில் கிராமஃபோன் பெட்டியும் இசைத்தட்டுகளும். பூசை அறையில் இவை எப்படி வந்தன. அவள் இசைப்பெட்டி பக்கம் உட்கார்ந்து கொண்டாள். கிராஃபைட் கனத்தது. பாகவதர். பட்டம்மாள். சின்னப்பா. எம். எஸ். இன்னும் நிறையவே. ஊசியை ஒழுங்காய்ப் பொருத்தி கிராமஃபோனை இயக்கினாள். ‘என் ஜீவப்ரியே ஷ்யாமளா… ‘ வயிற்றில் ஏதோ பிசைந்தது. ஒரு பாட்டின் பின் எவ்வளவு ஞாபகங்கள். அப்பாவும் பெரியப்பாவும் வண்ணக் காகிதங்களால் பெரிய பட்டங்கள் செய்வார்கள். நீண்ட தென்னை ஈர்க்குகளை வளைத்து அதற்கு மேல் காகிதத்தை ஒட்டி. பெரியம்மா மைதா மாவுப் பசை காய்ச்சித் தருவாள். அவளும் மற்ற பிள்ளைகளும் மொண்ணைக் கத்தரிக்கோலால் மிச்சத் தாள்களை வெட்டி எறிந்து விளையாடுவார்கள். பச்சையும் சிவப்பும் மஞ்சளும் சிரிப்பும் முற்றமெங்கும் சிதறும். முன்கட்டில் ஆம்பிள்ளைகள் கிணற்றுப் பக்கத்தில் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் பட்டம் விடுவதில் போட்டி. அவள் பெரியவளாகும் வரைதான் முன்கட்டுக்குப் போனதெல்லாம். உயரத்தில் பறக்கும் தன் பட்டத்தை அப்பா அவளிடம் ஐந்து நிமிடம் தருவார். அப்பாவின் பட்டத்தை விட்டு விடக் கூடாது. பயத்தில் இறுகப் பிடிப்பாள். நூல் விரலை வெட்டும். அப்பாவின் கைவட்ட அணைப்பில் நின்று காற்றின் படபடப்பை உள்ளங்கைக்குள் உணர்வது சுகமாய் இருக்கும். அப்பா. அவரை ஒரு மனிதராகத் தெரிந்து கொள்ளவே இல்லை. அப்படி வளரவில்லை. ‘ஷ்ஷ்ஷ்யாஆஆஆம……. ‘ கிராமஃபோன் சுற்றும் வேகம் குறைந்து அபஸ்வரமாய் இழுத்தது. அதை நிறுத்தி விட்டு எழுந்தாள்.

பின் கட்டின் திறந்த முற்றத்தில் வானவெளி வெறுமையாய்த் தெரிந்தது இப்போது. கீச்சிடும் சிட்டுக் குருவிகள் உள்ளும் வெளியுமாய்ப் பறந்து கொண்டிருந்தன. மேலே இரும்பு வலைச் சட்டத்தில் முல்லைக்கொடி வெயிலுக்கு நிழலாய் இருக்கும் அந்த நாளில். வெங்கலப் பல்லாங்குழித் தட்டில் புளியமுத்தும் அத்தையின் சிரிப்பும் சேர்ந்து கலகலக்கும். அடுப்பங்கரை அம்மியும் கிணற்றடித் துணி துவைக்கும் கல்லும் சேர்ந்து தாளம் போடும். பெரியம்மாவின் கைமணமும் உடைமர விறகும் வாசப்புகையாய். அம்மாவும் அத்தையும் எல்லா பிள்ளைகளுக்கும் சீதாப்பழம் பிய்த்துக் கொடுத்தவாறே சொல்லும் ஊர்க்கதைகள். அடுப்பங்கரையிலிருந்தே பெரியம்மா நடு நடுவே கதைகளுக்கும் உப்பு உறைப்பு சேர்ப்பாள். பால் உறியில் ஏறப் பார்க்கும் கள்ளப்பூனையைப் பழமொழி போட்டு விரட்டுவாள். நடுவே வேலையாள் கொண்டு வரும் சாமான்களையும் வாங்கி வைப்பாள். சாமான் அறை அதற்கே உள்ள வாசத்தோடு இருக்கும். விட்டத்தில் தொங்க விட்டிருக்கும் வாழைத்தாரும் வெங்கல அரிசிப்பானைக்குள் பழுக்க வைத்திருக்கும் மாங்காயும் வழவழத்த இடுப்புயர சாடியில் ஈரம் கசகசக்கும் கல் உப்புமாய்ச் சேர்ந்து ஒரு கதம்ப வாசம். ‘மதினி, தொண்ட காயுது, ‘ என்று அப்பா வந்து நிற்கும்போது இரண்டு உப்புக்கல் போட்டு கடுகும் கறிவேப்பிலையுமாய்த் தாளித்துக் கொட்டி செம்பு நிரம்ப மோர் கொடுப்பாள். சுறுசுறுவென்று பெரியம்மா. அவள் தாளிக்கும் வாசக் கடுகு மாதிரியே.

முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் பேச்சி புளி குத்திக் கொண்டிருப்பாள். பாட்டியும் அவள் பக்கத்தில். புளிய ஓடு, புளியமுத்து, புளி என்று மூன்று குவியல்கள். வீட்டுக்குப் பின்புறம் கொஞ்சம் தள்ளி உள்ள புளியந்தோப்புப் புளி. ‘நட்டப் பகல்ல அங்கன போய் நிக்காத தாயீ. பிசாசி உலாவுற நேரம் பாரு. ‘ வடித்த காதில் பாம்படங்கள் ஆட, பரம்பரை பரம்பரையாய் உழைத்துப் போட்ட உரிமையில் பேச்சி அவளை அதிகாரம் செய்வாள். அதற்குப் பிறகு அவளுக்கு எந்த நேரமுமே அங்கே போக பயம்தான். நடுப்பகலில் அங்கே உலவும் பிசாசு மற்ற நேரம் மட்டும் எங்கே போகுமாம். பெரியம்மா பையன் புளியமரக் கிளையில் தடியான வடம் போட்டு ஊஞ்சலாடுவான். உயர உயர. அவள் புளியங்காயை உப்பு தொட்டுத் தின்றபடி, பிசாசின் கொலுசுச் சத்தத்துக்காக காதைத் தீட்டிக் காத்திருப்பாள். புளிப்பும் பயமும் சேர்ந்து முதுகுத் தண்டை நடுக்கும். புளியமரத்தில் மோகினி. ஒற்றைப் பனைமரத்தில் முனி. பேச்சி மட்டும்தான் முனியைப் பார்த்தவள். அதே கதையை விதவிதமாய்ச் சொல்வாள். ஒவ்வொரு தடவையும் முனியின் உயரமும், அதைப் பார்த்த மறு நாள் ரத்தம் கக்கிச் செத்தவர்கள் கணக்கும், கதையின் நீளமும் கூடிக் கொண்டே போனது. மூன்று பனை உயரத்தில் தொடங்கிய முனி கடைசியில் ஆறு பனை உயரத்திற்கு வளர்ந்து விட்டிருந்தது. ஊர்க்கதைகள் அவ்வளவும் பேச்சிக்கு அத்துப்படி. அந்த வடக்கு வீட்டுக்காரன் பெண்டாட்டியைப் போட்டு அடிப்பது. பாவம், ஐந்தாவதும் பெட்டைப் பிள்ளை. சின்ராசு வீட்டுக்காரி ஏன் தினம் மாந்தோப்புக்குப் போகிறாள். அந்தச் சிங்கப்பூர்க்காரன் சின்ராசுவின் மாந்தோப்பை மட்டும் குத்தகைக்கு எடுக்கவில்லை போல. பட்டணத்துக்குப் படிக்க அனுப்பின செல்லம்மா அங்கே தானாகவே மாப்பிள்ளை தேடிக் கல்யாணம் பண்ணினது. அவன் சாதி சனம் யார். தெரியாது. உலகம் எங்கே போய் எப்படி முடியுமோ. பேச்சி வக்கணையாய்ச் சொல்வதில் உலக நடப்பு கொஞ்சம் புரியும்.

பாட்டி வேறு மாதிரி கதைகள் சொல்வாள். ஆழமான வெங்கல வட்டிலில் சோற்றை உருண்டை பிடித்துக் கொடுத்தபடி எத்தனை கதைகள். அப்போது மின்சார இணைப்பு கிடையாது. அரிக்கேன் விளக்கின் ஒளியில் பாட்டி சொல்லும் ஒவ்வொரு கதையும் பெரிய நிழலாய் விரியும். கேள்விகளும். சீதை பாவம். அவளுக்கு அவ்வளவு பொறுமையா. எத்தனையோ பொறுத்த அப்புறம்தானே தாங்க முடியாமல் அவள் பூமிக்குள்ளே போனாள். அவள் உண்மைதானா. சீதையை விட ஊர்மிளா பாவம். அவளைத் தனியாக மாளிகையில் விட்டுட்டு லக்ஷ்மணர் அவர்பாட்டுக்குக் காட்டுக்குப் போகிறாரே. அப்புறம், இந்தக் கிருஷ்ணர் நல்லவரா. நல்லவராக இருந்தால் கர்ணனை அப்படிப் பண்ணியிருப்பாரா. ஆனால், கடவுள் கெட்டவராக இருப்பாராக்கும். அவருக்கு எல்லாம் தெரியாதா என்ன. பலராமன் வாசுகியிடம் உண்டாகி அப்புறம் எப்படி ரோகிணிக்குப் பிறந்தார். முல்லைக் கொடிக்கு அந்த ராஜா தேரைக் கொடுத்தது வீணில்லையா. கொடிக்கு ஒரு வெறும் கொம்பைக் கொடுத்து தேரை விற்று நிறைய ஏழைகளுக்குச் சாப்பாட்டு போட்டிருக்கலாம், படிக்க வைத்திருக்கலாம். மனுசன் நிலாவில் போய் இறங்கினானாம். நிலா முழுக்க வெறும் கல்லும் மண்ணும்தானாம். சரி, நிலா வேண்டாம். கதையில் வருகிற மாதிரி ஏழு கடலும் ஏழு மலையும் தாண்டினால் உண்மையில் என்ன வரும். எல்லா பதிலும் தெரியாது. சோற்றுருண்டையில் பாட்டி கை மணத்து ருசிக்கும். கண்ணுக்குத் தெரியாத முல்லை வாசம் மாமரக் காற்றில் மிதந்து வரும். உலகம் ரகசியமும் ருசியும் மணமும் நிறைந்ததாய்த் தெரியும். அவளுக்காகக் காத்திருக்கும் கேள்விகளும் பதில்களும் நிறைந்த உலகம்.

பின்கட்டுக் கிணறு அமைதியாய்க் கிடந்தது. தண்ணீர்ப்பூச்சிகள் குமிழி போட்டன. துணிதுவைக்கும் கல் மேல் உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் மஞ்சள் அரைக்கும் சின்னக் கல். எத்தனையோ பேர் மஞ்சள் உரசியதன், மஞ்சள் பூசினதை நிறுத்தியதன் ஞாபகச் சின்னம். இந்தக் கிணறும் வயலின் நடுவே உள்ள பெரிய கிணறும் பூமிக்கடியில் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதாய் சில நாட்கள் அவள் பயந்திருக்கிறாள். பெரிய கிணற்றில் ஆவி இருந்தால் அது பூமிக்கடியே பறந்து இந்தக் கிணற்றுக்கு வந்து பயமுறுத்தலாம். பெரிய கிணறு அகலமும் ஆழமும் உள்ள பாசிப்பச்சை நீள்சதுரம். பக்கத்திலேயே நீர் இறைக்க எஞ்சின் அறை, தொட்டி. அந்தக் கிணற்றில்தான் பெரியம்மா மகன் குதித்துச் செத்துப் போனான். கருப்புக்கட்டி காய்ச்சும் நாள் அது. குழி அடுப்பு மேல் பெரிய அண்டாவில் கொதித்துக் கெட்டியான பதநீர்ப் பாகைத் தேங்காய்ச் சிரட்டைகளில் ஊற்றிக் கொண்டிருந்தாள் பேச்சி. பாட்டி கொஞ்சம் பாகைத் தனியாய் எடுத்து அதில் தேங்காய்ப்பூ தூவிக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கும் அத்தைக்கும் தேங்காய்க் கருப்புக்கட்டி பிடிக்கும். பெரியம்மாவும் அம்மாவும் தேங்காய் துருவிக் கொண்டு நார்க்கட்டில் மேல். தங்கையா வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான். ‘நம்ம சின்னப்பூ இருக்காவள்ளா… ‘ மேலே சொல்ல முடியவில்லை. நீந்தத் தெரிந்தவன். நீந்தவில்லை. விளையாட்டுக்காகக் குதித்தவன் தண்ணீர் அடி பட்டு மயக்கம் போட்டு முங்கி விட்டான் என்றார்கள். அவன் உடம்பை அலங்கரித்து மூலை நாற்காலியில் சார்த்திப் படம் பிடிப்பதிலிருந்து இழவு கேட்க வந்து, இராத்தங்கல் போட்டவர்களின் சாப்பாடு வரை எல்லாவற்றையும் பெரியம்மாவே கவனித்துக் கொண்டாள். பெரியப்பாவைத் தேற்றிக் கரையேற்றினாள். அழவேயில்லை. என்றைக்குமே.

பெரியம்மா வித்தியாசமானவள். ‘சிவகனி சிவகனிதான், ‘ என்று பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறாள். ஏன் என்பது புரிய கொஞ்சம் வயது வேண்டியிருந்தது. தாத்தா ஊருக்கு ராஜா மாதிரி என்றால், பெரியம்மாதான் ஊருக்கு ஆலோசனை சொல்லும் மந்திரி மாதிரி. பின் தோட்டத்தில் வழக்கமாக ஒரு பெண்கள் கூட்டம் நிற்கும். தங்கள் குடும்பக் கவலை பற்றிப் பேசிப் போக. பக்கத்தில் உட்கார்ந்து கவனிக்கையில், அவளால் எப்படி மற்றவர் கவலைகளைப் பொறுமையுடன் கேட்டு வழி சொல்ல முடிகிறது என்று ஆச்சரியமாய் இருக்கும். எவ்வளவு நல்லவள் என்று நினைக்க வைக்கும். எல்லாருக்கும் ஏன் நல்லவளாக இருக்க விரும்புகிறாள் என்றும், பிறர் கவலைகளில் தன் கவலையை மூழ்கடித்திருப்பாளோ என்றும் அப்புறம்தான் தோன்றியது. அப்படி பெரியம்மாவைப் பற்றி நினைப்பது தப்பு என்றும் தோன்றியது. கல்யாணமாகி இரண்டு வருஷத்தில் தாலியறுத்து வீட்டுக்குத் திரும்பிய அத்தை முதலில் போனது பெரியம்மாவிடம்தான். பாட்டிக்குக் கஷ்டமாக இல்லையா. பாட்டிக்கு அது இயல்பாய்த் தெரிந்த மாதிரி இருந்தது. அத்தையை விட்டு அவளையே எடுத்துப் பார்க்கலாம். அம்மா அவளை வளர்க்கும் பொறுப்பையுமே பெரியம்மாவிடம் விட்டு விட்டாள் என்று தெரியும். பெரியம்மா பிள்ளையாக இருப்பதில் தனக்கும் சந்தோஷம் என்று அப்புறம் புரிந்தது. அம்மா நிழலாய்த்தான் தெரிந்தாள். குறுகுறுவென்ற ஒரு சின்ன குற்ற உணர்வு. இன்னமும் கூட.

பெரியம்மாவால் பின்கட்டுக்கும் முன்கட்டுக்கும் இடையே பாலமாக இருக்க முடிந்தது. அடுத்த கிராமத்துக்கு வண்டி கட்டிப் போய் சினிமா பார்க்க. தாத்தா நூறாயிரம் கேள்வி கேட்பார். என்ன கதை. யார் நடித்தது. பிள்ளைகளை உருப்பட வைக்கும் படமா. சினிமாக் கொட்டகையில் கண்டவன் பார்வையும் குடும்பப் பெண்கள் மேல் படணுமா. பெரியம்மா நின்று பதில் சொல்வாள். புடவை, நகை வாங்க. தாத்தா இங்கேயும் மூக்கை நுழைப்பார். தாவணித் துணி அழுத்தமாக இருக்கட்டும். இப்போது வருகிற நைலக்ஸ் எல்லாம் குடும்பத்துக்கு ஒத்து வராது. முன்பக்கம் நிறைய சுருக்கு வைத்துக் கட்டும்படி மூன்று கெஜ நீளம் இருக்கட்டும். அப்புறம், தங்க நகை உருண்டு திரண்டு இருந்தால்தான் அழகு. ஸ்டைல் என்ற பேரில் அதிக வேலைப்பாடு செய்த நகை வாங்க வேண்டாம். அதில் செம்புக் கலப்பு அதிகம். அவள் முகமும் வாடாமல், அதே சமயம் அதிகச் செம்புக் கலப்பு இல்லாத நகையாய்ப் பார்த்துச் செய்யச் சொல்லுவாள் பெரியம்மா சின்னையா ஆசாரியிடம். சைக்கிள் ஓட்டப் பழக வேண்டாம். அதெல்லாம் பெண் பிள்ளைக்கு எதற்கு. பெரியம்மா மகன் மட்டும் சைக்கிள் விட்டால் போதும். ‘நீ வளர்ந்தப்புறம் பெரீய கலெக்டரம்மா ஆகி ராணி மாதிரி ப்ளெசர் கார் விடுவியாம். ஒண்றையணா சைக்கிள் எதுக்கப் ‘பூ. தாத்தா வேண்டான்னுட்டாகள்ளா. அழாத ‘ப்பூ. என் தங்கக்கட்டில்லா. ‘ அவளைத் தேற்றியதும் பெரியம்மாதான். பள்ளி இறுதியாண்டில் மாநிலத்தில் இரண்டாவதாகத் தேறி பத்திரிகைகளில் படம் வந்தது. ‘இவா மேல படிச்சா இவளக் கட்ட எவனும் கெடைக்க மாட்டான். ‘ ‘இஞ்சினீர் சுக்குநீர்னு என்ன படிப்பு. அது ஆம்பளப் படிப்பு, ஆம்பள காலேஜு. இவா அங்க போய் படிக்கது இவளுக்கு நல்லதில்ல. பேரு கெட்டுப் போச்சுன்னா இவள அப்புறம் எவன் கட்டுவான். ‘ அவளுள் ஏதோ சுருண்டு பொசுங்கும். கட்ட எவனாவது வேணும். அது ஒன்று மட்டும்தானா தானா வாழ்க்கை. பெரியம்மா இதை எப்படிச் சமாளித்தாளோ. அவள் இறுதியில் பொறியியல் கல்லூரியில். மாப்பிள்ளை கிடைக்குமுன் வேலை கிடைத்தது. முன்கட்டு முணுமுணுப்புகள். திரும்பவும் பெரியம்மா. மாப்பிள்ளையும் கிடைத்தார் சில வருசங்கள் கழித்து. முன்கட்டு பின்கட்டு என்பது பழங்காலம் என்றார். சம்பளத்துக்காக வேலை பார்க்க அவசியம் இல்லை, அவள் விருப்பப்படி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். மனைவி, தாய், பன்னாட்டு நிறுவனத்தின் டைரக்டர் என்ற பாரத்தைச் சேர்த்துத் தாங்க முடியுமா என்ற கேள்வியைக் காலப்போக்கில் கேட்டது அவள்தான். ‘கட்டினவர் ‘ கேட்கவில்லை. ‘நீ எல்லாமா இருக்கணுங்கது அவசியமோ முக்கியமோ இல்ல. உனக்கு எது அவசியம், எது சரின்னு படுதோ அத உன்னால செய்ய முடியணும். அதான் முக்கியம், ‘ என்றாள் பெரியம்மா. சுதந்திரம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்ற பெரியம்மா. அதையே அன்புடன் அங்கீகரிக்கும் அவர்.

பெரியம்மா. பாட்டி. அம்மா. அத்தை. பேச்சி. பின்கட்டு உறவுகள். எவ்வளவு இதமாய். அன்பாய். ஆதரவாய். உறுதியாய். அவள் இன்றைய அவளாய் இருப்பதற்கான வேர்களாய்.

புளியந்தோப்பில் ஒரு பறவை ‘நீ-யோ-நா-னோ ‘ என்று பாடியது. அவள் வேலிப்படலைத் தள்ளி வீட்டைச் சுற்றிய வெளித்தோட்டத்தில் நடந்தாள். முன்கட்டும் பின்கட்டும் நடுமுற்றமும் இணைந்து வீடு முழுமையாய்த் தெரிந்தது அங்கிருந்து.

காஞ்சனா தாமோதரன்.

Thinnai 2000 February 6

திண்ணை

Series Navigation<< அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்