தன்னம்பிக்கை

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்


வானம் ஏகும் பறவைகட்கு
வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
ஆற்றல் பெறும் வாழ்க்கை…!!!!!
எப்படி புரண்டாய்? எப்படி தவழ்ந்தாய்?
எப்படி நின்றாய்? எப்படி நடந்தாய்?
அப்படித் தானே முயல்வாய்
அனைத்திலுமாய்; ஆயுள் முழுவதுமாய்
உந்து சக்தி நிரம்பியுள்ள
உன்னிடம் உண்டு திறமைதான்;
நொந்து காலத்தை வீணாக்கினால்
நொடியில் பாயும் வறுமைதான்!!!!!
ஒவ்வொரு நொடியும் உன்றன்
உழைப்பால் மட்டும் நிரப்பு;
அவ்வளவும் திரும்பி கிட்டும்
அளவற்ற செல்வத்தின் பரப்பு
காலம் வருமென்று வீணாகக்
காத்திருக்க வேண்டா கனவுடனே
ஞாலத்தில் உயர்ந்தோர் யாவரும்
நாளும் உழைத்தே வென்றனரே

Series Navigation

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்

தன்னம்பிக்கை

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

அனந்த்


வாழ்க்கை என்பது குன்றும்தான்
… வளைந்து நெளியும் பாதையும்தான்
ஆழ்ந்து பரந்த ஆழியும்தான்
… அச்சம் விளைக்கும் அடவியும்தான்
சூழும் தடையைத் தனித்தனியாய்ச்
…சுட்டிச் சொல்வார் வழிபிறர்;நாம்
தாழா தெதிலும் முன்னேறத்
…தன்னம் பிக்கை தான்துணையாம்

அறிவு மிகுந்து அமைந்தாலும்
..அனுபவ ஞானம் அடைந்தாலும்
செறிந்த நண்பர் சேர்ந்தாலும்
…தேயா துழைப்பைச் சொரிந்தாலும்
உறுதி நெஞ்சில் இருந்தாலும்
.. .உடையா இதயம் படைத்தாலும்
அறுதி யாய்த்தன் னம்பிக்கை
… ஆமே அவற்றிற்(கு) ஆதாரம்

அஞ்சனை புதல்வன் கதைகேட்டோம்
…அறிவில், அனுபவம் ஆற்றலிலே
நெஞ்சத்(து) உறுதி நட்பினிலே
… நிகரில் லாத மாருதிக்குக்
கொஞ்சமும் அவைதாம் பயனற்றுக்
…குலைந்து நின்ற போதினிலே
வஞ்சப் பகையை வெல்லஒரே
…வழிதன் னம்பிக் கைஉணர்ந்தான்!

உம்திறன் கொண்டிவ் வுலகையெலாம்
… ஊர்வலம் வருவீர் எனச்சொல்ல
எம்பிக் குதித்து மயில்மீதில்
… ஏறிப் பறந்தான் ஆறுமுகன்
தும்பிக் கையா னோதன்னுள்
… சுதியோ(டு) ஒலிக்கும் மந்திரமாம்
நம்பிக் கையின் துணைகொண்டு
… நடந்தான், அடைந்தான் நற்கனியை!

காந்தி, *கெல்லர், நெப்பொலியன்
…கவிஞர், அறிஞர் கலைஞர்பலர்
ஏந்தும் தீபம் தம்திறனில்,
… எடுத்த முடிவில், செயல்முறையில்
ஆழ்ந்த நம்பிக் கையன்றோ ?
…அதன்ஒளி குன்றின் அனைத்தும்இருள்!
வாழ்ந்து காட்டிய மாந்தர்இவர்
… வழியினும் சிறந்த(து) ஏதுமுண்டோ ?

இன்றைய பாட சாலைகளில்
… இருக்கும் மாணவர் முன்னேற
இன்றி யமையாச் சாதனமாய்
… இருப்பது அவர்தம் ஆற்றலிலே
குன்றாத் தன்னம் பிக்கையெனக்
…கூறுவர் அறிவுரைத் துறையோர்**;நாம்
நன்றாய் வளர்த்தால் நம்பிக்கை
…நாளைய வாழ்விற்(கு) அடிகோலும்.

‘நான் ‘எனும் உணர்வே நமதுசெயல்
… நடுவே இழையும் உயிர்அதனால்
தான்அதன் தரத்தினை மேல்உயர்த்தும்
… தன்னம் பிக்கை நம்வாழ்வை
மேன்மேல் உயர்த்தும் வெற்றிதரும்
… வெவ்வே றான குணநலன்கள்
தாமே நம்மை வந்தடையத்
… தன்னம் பிக்கை முதல்தேவை!

முடிக்கும் முன்னே நினைவுறுத்த
… முனைவேன்: தன்னம் பிக்கையுளோர்
துடிப்பாய்ச் செயலில் இறங்குவர்பின்
… தோல்வி வரினும் தளராமல்
அடுத்த வழியை ஆராய்ந்தே
… அமைப்பார் தம்வாழ்(வு) அனைத்திலுமோர்
பிடிப்பாய் விளங்கும் தன்மதிப்பைப்
… பிறருக் காகப் பலிதாரார்.
====
குறிப்பு:
*ஹெலென் கெல்லெர் என்னும் கண்ணிழந்தும்
நம்பிக்கை இழக்காத அரிய பெண்திலகம்
**மாணவர் அறிவுரைத் துறை: student counselling
service.
ananth@univmail.cis.mcmaster.ca

Prof. V.S. Ananthanarayanan
Biochemistry Department
McMaster University
Hamilton, ON L8n 3Z5
tel: 905-525-9140 x-22783
web: http://www.fhs.mcmaster.ca/biochem/Faculty.htm

Series Navigation

அனந்த்

அனந்த்