சில்மிஷங்கள்

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

ருத்ரா


அந்த
சன்னல் சதுரத்தில்
சின்னக்குருவிகள்.
வேப்பங்கிளையில்
இலைகளின் ரம்பவிளிம்புகள்
தென்றலை
ராவிக்கொண்டிருந்த போதும்
எனக்குக் கேட்டதோ
எஃப்.எம்மின் இசைத்துண்டுகள்
எனும்
அல்வாத்துண்டுகள்.

தலையணையின்
‘கணவாய் ‘ இடுக்குகளில்
கனவு மிச்சங்கள்.
புரண்டு புரண்டு படுத்து
அந்த வானவில்லை
பிதுக்கி எடுத்தும்
பிசைவதற்கு அகப்படவில்லை.
ஏழுவர்ணத்தில் ‘ஜொள் ‘ விட்டு
அதில் ஓவியம் தீட்டி
பிக்காசோவின்
முகமற்ற முலைச்சித்திரங்களில்
முகம் புதைத்துக்கிடந்தேன்.

காலை வெளிச்சம்
என் முகத்தில் ஈயம் பூசியது.
பசக்கென்று
எழுந்து உட்கார்ந்தேன்.
தினம் தினம்
சூரியன் எனும்
இந்த சிவப்பு செர்ரிப்பழத்தை
தின்று தின்று
குதப்பி
அந்த சிவப்பு இனிப்பில்
எரிக்கும் லாவாவை
என் மீது கொப்புளிப்பது யார் ?

ஏதாவது
ஒரு காதலியின்
முகம் தேடி
அவள் மூச்சுள்
விதை தூவி
அவள் குரலுள்
பரல் தூவி
படுத்துக்கிடக்க வேண்டும்.

சிலம்புகள்
உடையும்போது
தெறிக்கட்டும்.
பார்த்துக்கொள்ளலாம்.
இவையெல்லாம்
வெறும் ரத்தங்களின்
சத்தங்கள்.
இன்று இளங்கோ எழுதியிருந்தால்
கோவலனுக்கு
ஊழ் வடிவில்
கற்பு தவறிய தண்டனையாய்
சிரச்சேதம் என்று
எழுதியிருக்க மாட்டார்.
எய்ட்ஸ் என்றே எழுதியிருப்பார்.
அக்கினி தேவனும்
நெருப்பால்
ரங்கோலிக்கோலம்
போட்டிருக்க மாட்டான்.

இப்போது
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின்
இளைஞனான
என் தோளில்
சிந்துபாத்தின் கடல்கிழவன் போல
ஒரு காதல் பிசாசு.
அந்த சினிமாப்பாட்டுகள்
என் காதுகளுக்குள்
அந்த காண்டா(மிருக) மணியை
அடித்துக்கொண்டே இருக்கின்றன.

அதனால்
என்னையே நான்
சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறேன்.
என்னை அவளும்
அவளை நானுமாய்
பிய்த்துத் தின்று கொண்டிருக்கிறோம்.

பீர் குடிக்க
தொட்டுக்கொள்ளும்
கறிமசாலாத் துண்டுகளாய்
எச்சில் ஒழுக எழுதும்
என் புதுக்கவிதைகளுக்கு
இசை அமைக்கும்
கீ போர்டுகள்
காமசுகத்தோடு
மின்சாரத்தில்
கர்ப்பம் தரித்தன.

குரோமஸோம்களின்
இந்த கூச்சல்களிலா
குயில் பாட்டுகள்
அரங்கேற வந்தன ?
அக்கினிக் குஞ்சு ஒன்றை
ஆங்கொரு பொந்திடை
இவர்களும் வைத்தனர்.
ஐயகோ!
வெந்து தணிந்தது
காடல்ல.
அந்த முண்டாசுக் கவிஞனின்
கவிதைகள் தான்.
உயிர் ஊறும் கவிதைகள் தான்
சாம்பலாகிப் போயின….
இவர்களது
காதல் ‘சில்மிஷங்களில் ‘.

இளைஞர்களுக்கு
கிச்சு கிச்சு மூட்ட
அன்னத்தூவிகளைக் கொண்டு
காதலன் – காதலி களின்
காதுகளை குடையுங்கள்
ஆட்சேபணையில்லை.

மயிற்பீலிகளை வைத்து
காதலியின் தொப்பூள்
பிரதேசங்களில் வருடிக்கொடுத்து
காதல் சூறவளிகளை
உருவாக்குங்கள்
ஆட்சேபணையில்லை.

இல்லாவிட்டால்
அதில் சூடேற்றி
முட்டைதொசைகள் கூட
வார்த்துக்கொடுங்கள்
ஆட்சேபணையில்லை.

அந்தக் ‘காமத்துப்பாலில் ‘
ஒரு ‘ஆவின் ‘ பண்ணைக்கே
செட்டிங் போடுங்கள்
ஆட்சேபணையில்லை.

ஆனால்
இளைஞர்களின்
ஆற்றலுக்கு
ஆப்பு வைக்கும்
உங்கள்
ஜிகினாத்தோட்டங்களை
சுட்டெரியுங்கள்.

இளைஞர்களின்
சிந்தனை ஊற்றுகளுக்கு
சவப்பெட்டி தயார் செய்து
ஆணியடிக்கும்
உங்கள் சினிமா எழுத்தாணிகளின்
சில்மிஷங்களை
விட்டொழியுங்கள்.

இளைஞர்கள்
ஆதாம்-ஏவாள் எச்சங்களாய்
இந்த ‘கோடம்பாக்கங்களையே ‘
சுற்றி சுற்றிவந்து
‘கீழ்பாக்கங்களாய் ‘
ஆகியதெல்லாம் போதும்.
‘கல்பாக்கங்களாய் ‘
கதிர் விரிக்கும்
விடியல்களை பாடுங்கள்!

====ருத்ரா
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா