பெண்களும், அறிவியலும்- அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை-2

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


(இதன் ஒரு பகுதி உயிர்மை மே 2005 இதழில் வெளியானது. முழுக் கட்டுரை என் வலைப்பதிவில்

http://ravisrinivas.blogspot.com/ மே 3ம் தேதி இடப்பட்டது)

மேரி க்யுரி இருமுறை நோபல் பரிசு (1903,11) பெற்றவர், அவரது மகள் 1935ல் நோபல் பரிசு பெற்றார்.

ஆனால் இருவருமே பிரெஞ்ச் அறிவியல் அகாதமியில் உறுப்பினராகக் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த அகதமிகளில் உறுப்பினர்களை பிற உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள்.1979ல்தான் பிரெஞ்ச் அறிவியல் அகதமியின் முதல் பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேரி க்யுரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது.முதல் தடவை மேரி எதுவர்த் பிரான்லி என்பவரை விட ஒரு வாக்கே குறைவாகப் பெற்றிருந்தார்.பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரான்லியினை தேர்ந்தெடுத்தனர்.அப்போது அவருக்கு வயது 65, மேரிக்கோ 36தான். மார்கரெட் சோமர்வில்லின் கணித ஆய்வுகள் பெரும் மதிப்பினைப் பெற்றன,ஆனால் அவரை இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினராகத்

தேர்ந்தெடுக்கவில்லை.கரோலின் ஹெர்ஷ்லின் ஆய்வுகளை அங்கீகரித்து ராயல் சொசைட்டி தங்கப் பதக்கம்

வழங்கியது.அவரை ராயல் ஐரிஷ் சொசைட்டி 1838ல் அவரது 88வது வயதில் வெளிநாட்டு உறுப்பினராகத்

தேர்ந்தெடுத்தது, ராயல் சொசைட்டி தேர்ந்தெடுக்கவில்லை. பிற அகதமிகளில் கிட்டதட்ட இதே போல்தான் இருந்தது.

அதே சமயம் சில ஆண் உறுப்பினர்கள் பெண்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்டினர்.முதல் உலகப் போருக்குப் பின் இத்தகைய கோரிக்கைகள் வலுப்பெற்றன.ராயல் சொசைட்டியில் பெண் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என வற்புறுத்தியவர்களில் இடதுசாரி விஞ்ஞானிகளான ஜே.டி.பெர்னாலும், ஜே.பி.எஸ்.ஹால்டேனும் முக்கியமானவர்கள். 1943ல் ராயல் சொசைட்டி இந்தியாவிலிருந்து ஆறு ஆண் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த போது பெண் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்காதது குறித்து ஹால்டேன் கேள்வி எழுப்பினார்.1940 முதல் 1945 வரை ராயல் சொசைட்டியின் தலைவராக இருந்த சர் ஹென்ரி டேலின் பெரு முயற்சியால் இரு பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமெரிக்காவில் 1925ல்தான் தேசிய அறிவியல் அகாதமியின் முதல் பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேரி க்யுரி உட்பட பல பெண் அறிவியலாளர்கள் பிற நாட்டு அறிவியல் அகாதமியில் அயல் நாட்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் பணியாற்றிய அல்லது தாய் நாட்டில் அந்த கெளரவம் தரப்படவில்லை.

1970களில்தான் நிலைமை மாறத் துவங்கியது.இதற்கு முக்கிய காரணம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பெண் உறுப்பினர்கள் ஒரளவேனும் இருந்ததால் அகாதமிகளில் பெண்களை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்தன.பெண் உறுப்பினர்களின் தெரிவுகள் கவனம் பெற்றன.

இதனால் பெண்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவது அதிகரித்தது.சில நாடுகளில் (உ-ம்: கிரீஸ்,ஸ்பெயின்,இத்தாலி) பெண்கள் முதன்முதலாக 1990களில்தான் உறுப்பினர்களாக அறிவியல் அகாதமிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெண்கள் உயர்கல்வி கற்பது 1870களுக்குப் பின் பல நாடுகளில் சாத்தியமானாலும் அறிவியல் துறைகளில் பெண்களுக்கு உயர்பதவிகள் பெரும்பாலும் எட்டாக்கனிகளாகவே இருந்தன.பல பெண் அறிவியலாளர்கள் உரிய அங்கீகாரம் பெறாமல் பலவேறு சிரமங்கள், பிரச்சினைகளிக்கிடையேதான் அறிவியலில் ஈடுபட வேண்டியதாயிற்று. சிலர் போதுமான தகுதிகள் இருந்தும் அறிவியல் ஆய்வுகள் சார்ந்த வேலைகள் கிடைக்காததால் அறிவியலுடன் ஒரளவு தொடர்புடைய வேலைகளையே செய்ய வேண்டியதாயிற்று. மெளன

வசந்தம் என்ற புத்தகம் எழுதிய ராசேல் கர்சான் இதற்கு ஒரு உதாரணம். பெண் என்றே ஒரே காரணத்தினால் பொருத்தமான வேலை கிடைக்காமல் அல்லாடியவர்கள் பலர். ஆனால் தாங்கள் பெண்கள் என்பதற்காக பாரபட்சம் காட்டப்பட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தவர்களும் உண்டு. நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் பார்பரா மக்ளிண்டாக்கின் வாழ்க்கை வரலாற்றினை எழுதிய எவ்லின் பாக்ஸ் கெல்லர்

மக்ளிண்டாக் சந்தித்த இடர்களை விரிவாக விளக்குகிறார்.மிகச் சிறந்த ஆய்வாளாராக இருந்த போதும்

நிலையான வேலை கிடைக்க அவர் சிரமப்பட வேண்டியிருந்தது. (குறிப்பு : மக்ளிண்டாக் குறித்து கெல்லர் எழுதியுள்ளவை சர்ச்சிக்கப்பட்டுள்ளன).

1970களில் கார்னிக் நூறு பெண் அறிவியலாளர்களை பேட்டி கண்ட போது பலர் அறிவியல் வாழ்வு குறித்து திருப்தியே தெரிவித்தனர், தாங்கள் நல்ல அறிவியல் செய்தததாகவே கருதுவதாகக் கூறினர். ஆனால் அவர்களில் பலருக்கு தாங்கள் ஒன்றாக குரல் கொடுத்திருந்தால் அல்லது முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் பாரபட்சங்களை குறைத்திருக்க முடியும் என்பது தோன்றவில்லை. அறிவியல் என்று வந்துவிட்டால் பிறவெல்லாம் இரண்டாம் பட்சம் என்று நினைப்பதில் தவறில்லை, ஆனால் அறிவியலில் ஈடுபடும் பெண்களின் பிரச்சினைகளைக் கூட அவர்களில் பலரால் அங்கீகரிக்க முடியவில்லை. இதனால் பெண் அறிவியலாளர்கள் கூட பெண்களை அறிவியலில் ஊக்குவிக்க வேண்டுமென்றால் அதற்கு தடையாக உள்ளவற்றை அகற்ற வேண்டும் என்ற உணர்வின்றி இருந்தனர். சமத்துவம் என்பது நடைமுறையில் எப்படி இருந்தது என்பதை

அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சர் சி.வி.ராமனின் ஆய்வுக்கூடத்தில் அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தவரும், இந்திய வானிலை ஆராய்ச்சி

துறையில் உயர் பதவி வகித்தவருமான அன்னா மணி தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது ராமன் தன் ஆய்வுக்கூடத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பழகுவதையும், விவாதிப்பதையும் எதிர்த்தார் என்று கூறியிருக்கிறார்.தான் பெண் என்பதால் எந்தவிதத்திலும் பாகுபாட்டினை எதிர் நோக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரே ஒரு ஆய்வாளருடன் ஒரு விரிவான உரையாடலுக்குப் பின் தான் பெண்களை தேர்ந்தெடுத்திருந்தால் ஒரு முன் மாதிரியாக இருந்திருக்கக் கூடும் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கான தேவையை அவர் அப்போது உணர்வில்லை. சமத்துவம் என்பது நடைமுறையில்

இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பெண்கள் அறிவியலில் ஈடுபடவும், ஈடுபட்டுள்ள

பெண் அறிவியலாளர்களை ஒன்றுதிரட்டவும் தேவை இருப்பதை அவர் போன்றவர்கள் உணரவில்லை. மாறாக தாங்கள் பெண் என்பதால் எந்த விசேஷ சலுகையும் கோரக்கூடாது, அதற்கு தேவையுமில்லை, ஏனெனில் அறிவியலில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை என்று கருதினர். ஆனால் வரலாறு இந்த சமத்துவம் எத்தனை போலியானது என்பதை நமக்குக் காட்டுகிறது.

ஆண்கள் முன்னிறுத்தும், சமூகத்தில் நிலவும் விழுமியங்களை பெண்கள் கேள்விக்குட்படுத்தாது ஏற்கும் போது பிற பெண்களின் பிரச்சினைகளை உணரத் தவறுகிறார்கள்.ஏன் நானும் பெண்தானே, அப்புறம் உனக்கு மட்டும் எதற்கு சலுகை அல்லது விதிவிலக்கு என்று ஒரு துறைத்தலைவர், கருத்தரித்துள்ள அல்லது சிறு வயது குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படும் பெண்ணின் கோரிக்கைகளை செவிமடுக்கவே தயாராக இல்லாத போது அவர் இப்பிரச்சினைகள் எந்த அளவிற்கு பெண்கள் அறிவியலில் ஈடுபட தடையாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்.எனவே பெண் அறிவியலாளர்கள் பலர் தடைகளை எதிர்கொண்டாலும் ஒரு பெண்ணியக் கண்ணோட்டத்தில் அதை அணுகாத போது, தாங்கள் பெண்கள் அறிவியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படாமல், சமத்துவம் முழுமையாக நிலவுகிறது என்று நம்பும் போது தாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ பிற பெண்கள் அறிவியலில் ஈடுபட அவர்கள் உதவிகரமாக இருப்பதில்லை. இதற்கு பெண் என்பதற்காக தாங்கள் சலுகைகள் காட்டுகிறோம் என்று விமர்சிக்கப்படுவோமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.

பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் போது அவர்களின் இருப்பே அங்கீகாரம்

பெறாது, அவர்கள் குரல்களும் உரிய கவனம் பெறாது. ஆனால் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இது மாறும் வாய்ப்புண்டு. உதாரணமாக பெண்களின் எண்ணிக்கை 1% அல்லது 3% என்று இருக்கும் போது அவர்கள் மிகச்சிறுபான்மையினராகவே இருப்பர். அதே சமயம் அது 20% அல்லது 30%

என்றிருக்கும் போது அவர்களை புறக்கணிக்கப்பது கடினம். அதுவே 40%, அதற்கு மேல் என்றிருக்கும் போது தீர்மானிக்கும் சக்தி அவர்களிடமிருக்கும். எனவே பெண்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு உயராத போது அவர்களை புறக்கணிப்பது எளிது. ஆனால் எண்ணிக்கை மட்டும் போதுமானதல்ல,

நிறுவனங்களும் தங்கள் பங்கினையாற்ற வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுள்ளது. சிறு குழந்தை

கவனிப்பு வசதி, பிரசவகால விடுப்பு,பெண்களை பணி நிரந்தரம் செய்வதில் சில மாறுதல்கள், பெண் அறிவியலாளர்களை பணிக்கெடுப்பதில் ஊக்குவிப்பு போன்றவற்றை அறிவியல் ஆய்வுக்கூடங்கள், பல்கலைகழகங்கள் கடைப்பிடித்தால் பெண்கள் அறிவியலில் பங்கேற்பது அதிகரிக்கும். இதற்கு உதாரணமாக கிழக்கு ஐரோப்பிட்ய நாடுகளைக் கூறலாம். சோசலிச அரசுகள் சிறு குழந்தை கவனிப்பு வசதியினை அளித்தன. பின்னர் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின்னும் கூட அரசு இவ்வசதியைத் தரும் அல்லது அதற்கான மான்யம் வழங்கும் முந்தையைய கிழக்கு ஜெர்மனியில் பெண்கள் அறிவியலில் பங்கேற்பது அதிகமாக உள்ளது. அவர்கள் உயர்பதவிகளில் அதிகமாக இல்லை என்பது வேறி விஷயம்.

பெண்கள் அதிகமாக அறிவியலில் ஏன் இல்லை, அவர்கள் பங்கேற்ப்பினை ஏன், எப்படி அதிகரிக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் 1960களின் பிற்பகுதியில், 1970களில்தான் பரவலாகத் தொடங்கின.

இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டன. இவற்றின் அடிப்படையில் பெண்கள் அறிவியலில் பங்கேற்ப்பினை அதிகரிக்க உதவும் வகையில் சில கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும்

பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும் அறிவியலில் உயர்கல்வி பெறும் பெண்களில் எத்தனை பேர் அறிவியலினை ஒரு தொழிலாக தேர்வு செய்கிறார்கள், அவர்கள் அதில் எந்த அளவு முன்னேறுகிறார்கள் என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அமெரிக்கவை மட்டும் எடுத்துக் கொண்டால் புள்ளிவிபரங்கள் பெண்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்றே காட்டுகின்றன.

Ph.Ds earned by women in 2002 – U.S. ciitizens at all institutions

% total

physical sciences 29% 2997

engineering 19% 1890

life sciences 50% 5327

social sciences 60% 4901

humanities 50% 4139

education 67% 5265

total 51% 25935

Total is for men and women, excluding phds in business, management,and

other professional fields

Source – The Chronicle of Higer Education 3rd Dec 2004

ஆனால் பல்கலைகழகங்களில், ஆய்வுக்கூடங்களில் பெண்கள் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக உள்ள

விகிதம் குறைவாகவே உள்ளது. ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைகழகங்களில் ஆண் பேராசிரியர்களின் விகிதம் 70%க்கும் அதிகம்.புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உதவிப் பேராசிரியர்களில் 60% ஆண்கள். எனவே முனைவர் பட்டம் பெற்றப் பெண்கள் அதே விகிதத்தில் பல்கலைகழகங்களில் ஆசிரியர் வேலைகளில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.ஹார்வார்ட் தலைவருக்கு கடிதம் எழுதிய மூத்த பெண் ஆசிரியர்கள், கலை மற்றும் அறிவியல் புலங்களில் பணி நிரந்தம் செய்யப்ண்ட்ட 32 பேரில் 4 பேர்தான் பெண்கள் என்று குறிப்பிட்டனர்.கலிபோர்னியா பல்கலைகழத்தில் பெண்கள் பணிக்கு சேர்க்கப்படுவது 1990களில் வெகுவாக குறைந்த போது பெண் பேராசிரியர்கள் குரல் எழுப்பினர், மாநில சட்டசபை இது குறித்து கருத்தறிந்தது.தற்போது பெண்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெறும் ஊதியமும் ஆண் ஆசிரியர்கள், பேராசிரியர்களை விட குறைவாக உள்ளது.ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைகழகங்களில் பெண் துணைப் பேராசிரியர்களை விட ஆண் துணைப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட 23% அதிக வாய்ப்புள்ளது. அது போல் பணி நிரந்தரமான பின் பெண்களை விட ஆண்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பும் அதிகம். பல்வேறு கோணங்களில் இப்பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். ஏனெனில் பாலியல் ரீதியான வெளிப்படையான பாரபட்சம் இல்லாதது போல் தோன்றினாலும் பெண்களுக்கு எதிரான பல காரணிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் போது ஆண், பெண் எப்படி கருதப்படுகிறார்கள் என்பது.

மிச்சிகன் பல்கலைகழகத்தில் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் போது எப்படிபட்ட பாரபட்சங்கள், அவை நேரடியாகத் தெரியாவிட்டாலும் மறைமுகமாக உள்ளன என்பது குறித்து பேராசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. இதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து பயிலரங்குகள் நடத்தப்பட்டன. தேர்ந்தெடுக்கும் போது பொதுவான மதிப்பீடிற்குப் பதிலாக குறிப்பிட்ட அளவுகோல்களின் படி , உ-ம் பாடங்கள் கற்பிக்கும் திறன், ஆய்வுத் திறன் மதிப்பீடு செய்யுமாறு கோரப்பட்டது. இதன் விளைவாக பெண்களை தேர்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது. அறிவியல் மற்றும் பொறியியலில் 2001 ல் தேர்ந்தெடுக்கப்படவர்களில் பெண்களின் சதவீதம் 13 ஆக இருந்தது, 2003/2004ல் அது 39% ஆக உயர்ந்தது.

M.I.T யில் 2002-2004ல் பொறியியல் புலத்தில் 17 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது 44% ஆகும். பெண்களைத் தேர்ந்தெடுக்க தொழிற்த்துறை, தேசிய ஆய்வகங்கள் போன்றவற்றில் தேடுதல் செய்யப்பட்டது.M.I.T யில் 1999ல் பெண்களின் எண்ணிக்கை அறிவியல் புலங்களில் குறைவாக இருக்கிறது குறித்த அறிக்கை வெளியான பின் பெண்கள் பணிக்கு எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. பல பல்கலைகழகங்களில் பெண்களை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டங்கள், நிதி உதவியுடன் நடைமுறையில் உள்ளன. பல பல்கலைகழகங்கள் ஆண்டுதோறும் தங்கள் பல்கலைகழகங்களில் பல் வேறு தரப்பினர் இடம் பெறுவது குறித்து அறிக்கைகளை, புள்ளிவிபரங்களுடன் வெளியிடுகின்றன. போதிய பிரதிந்தித்துவம் இல்லாத தரப்பினர் அதைப் பெற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு சில பல்கலைகழகங்களில் குறிப்பிட்ட புலங்களில் பெண்கள் சேர்வதையும், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் ஆய்வு மேற்கொள்வதையும் ஊக்குவிக்க நிதி உதவி வழங்குகிறது.

இவையெல்லாம் பெண்கள் போதிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை. இவை இரக்கத்தினால் தரப்படும் சலுகைகளோ அல்லது கருணையினால் செய்யப்படும் முயற்சிகளோ அல்ல. சமத்துவம் என்பது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில் இது போன்ற முயற்சிகள் தேவை.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு முக்கியமானப் பிரச்சினை பெண்கள் ஆரம்பக் கல்வி கற்ற பின் அடுத்தக் கட்ட படிப்பினைத் தொடர்வது. ஆரம்பக் கல்வியுடன் நின்று விடும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பது தேவை. இந்தியாவை பொறுத்த வரையில் அறிவியல், பொறியியல் துறைகள் பெண்களுக்கு உகந்தவை இல்லை என்று சமூகரீதியாக கருதப்படுவதும் ஒரு தடையாக உள்ளது. முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் நிலையில் பெண்களின் எண்ணிக்கை, பட்ட மேற்படிப்பு படித்த பெண்களின் எண்ணிகையுடன் ஒப்பிடுகையில் 37% ஆகவே உள்ளது. சில துறைகளில் உ-ம் வேளாண்மை, பொறியியல்,விவசாயம் பல்கலைகழகங்களில் பெண் மாணவிகள் எண்ணிக்கை 20%க்கும் குறைவாகவே உள்ளது. இங்கு மாநிலங்களுக்கிடையே பெண் கல்வி, எழுத்தறிவில் பெரும் வேறுபாடு காணப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உயிரியதொழில் நுட்ப அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றில் அறிவிவலாளர்கள் மட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை 25%க் கும் குறைவென்றால், வேறு பல அமைப்புகளில் இது 15%க்கும் குறைவாகவே உள்ளது. பெண் அறிவியலாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வுகள், கருத்துக்கணிப்புகளிலிருந்து பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பலவகைப்பட்டவை என்பது புலனாகிறது. பல பெண்கள் தாங்கள் இரட்டை சுமையை, அதாவது வீட்டிலும் வேலை செய்வது, அலுவலகத்திலும் வேலை செய்வது சுமப்பதாகக் கூறுகின்றனர். ஆண்களை விட வீட்டு வேலைகளுக்கு அதிக நேரம், உழைப்பினை தாங்கள் செலவிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.ஒரு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்ட பெண்களில் 90% திருமனம் தங்கள் ஆய்வுப் பணிகளை பாதிப்பதாகக் குறிப்பிட்டனர். இதற்கு காரணம் திருமணமான பெண்களின் சமூகப் பொறுப்புகள்.

குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் கிடைக்கும் போது சுமை ஒரளவிற்குக் குறைந்தாலும், அனைவராலும் இதனால் பயன் பெறுகின்றனர் என்று கூற முடியாது. ஏனெனில் பல நகரங்களில் குழந்தைகளை கவனித்துக் கொள்வோர் எந்த அளவிற்கு பொறுப்பாக இருப்பார்கள் என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது. ஆய்வு நிலையங்கள், பல்கலைகழகங்களில் இவ்வசதிகள் இல்லாததும் ஒரு குறையாக உள்ளது. திருமணமான பெண்கள் திருமணமாகாத பெண்களுடன் ஒப்பிடப்படுகையில், சில அளவுகோல்களில், திருமணமாகாத பெண்களைவிட அதிகமாக செயல்புரிவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் திருமணமான பெண்களுக்கு சாதகமான சமூகச் சூழல் ஒரளவிற்கு நிலவுவதாகும். பல பெண் அறிவியலாளர்கள் திருமணம், குழந்தைப் பெற்றுக்கொள்தல், வளர்ப்பு போன்றவற்றால் தாங்கள் சில ஆண்டுகளேனும் அறிவியலில் ஈடுபட முடியாத நிலை உள்ளதையும், பல சமயங்களில் கூட்டுக் குடும்பச் சூழல் தங்களுக்கு பாதகமாக உள்ளதையும் குறிப்பிடுகின்றனர். பலருக்கு திருமனம் என்பது இடம் பெயர்விற்கு இட்டுச் செல்கிறது. இதுகாரணமாகவும் சில பிரச்சினைகள் எழுகின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சமூக்ச்சூழல், ஆய்வு நிலையங்களில் உள்ள சூழல் பெண்கள் அறிவியலில் ஈடுபட பெருமளவிற்கு சாதகமாக இல்லை. ஒரு பெண் அறிவியலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர் மட்டும் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல. அதற்கான சமூக காரணிகள் உள்ளன. எனவே பெண் அறிவியலாளர்கள் ஒன்றுபட்டு தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது.

பெண்களுக்கு எதிராக உள்ள நேரடி, மறைமுகக் காரணிகளை கண்டறிந்து அவற்றை நீக்க முயற்சி அவசியம். ஏட்டளவில் சமத்துவம் நிலவுவதாலோ அல்லது பெண்கள் அதிக அளவில் பட்டங்கள் பெறுவதாலோ மட்டும் இக்காரணிகள் மறைந்து விடாது. மாறாக பெண்கள் அறிவியலில் பங்கேற்பதை அதிகரிக்க பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமான முயற்சிகள் தேவைப்படும். ஒரு பெண் பேராசிரியர் சில பெண் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்து உதவுவது, அவர்கள் பொருத்தமான வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது உதவுவது, போன்று பலவிதங்களில் செயல்படுவதை mentoring என்று அழைக்கிறார்கள். இதனை ஊக்குவிக்கும் பல்கலைகழகங்கள் பெண் அறிவியலாளர்கள் வேலை தேடும் ஆரம்ப கட்டங்களில், பணி செய்யும் துவக்க காலங்களில் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை தீர்க்க mentoring உதவுகிறது என்பதால் அதை ஆதரிக்கின்றன. எனவே பெண்கள் அதிக அளவில் அறிவியலில் பங்கேற்க ஒற்றை தீர்வென்று ஏதுமில்லை. அமெரிக்காவில் செய்யப்படும் சில முயற்சிகள் இந்தியாவில் பெருமளவு பொருந்தாதவையாக இருக்கலாம். நிலவும் சூழல், சமூக அமைப்பு,விழுமியங்களைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை முன்னிறுத்த வேண்டும். மேலும் பெண்களிடையே பெண்கள் அறிவியலில் அதிக அளவில் பங்கேற்பதின் தேவை குறித்து விழிப்புணர்வும், தடைகளை சமாளிக்கும் வழிகள் குறித்த புரிதலும் அதிகரிக்க வேண்டும்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிவியலில் பெண்களில் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. இதை மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வினை சம்மர்ஸ் போன்றவர்களின் கருத்துக்களால் குறைத்துவிட முடியாது. ஒரு பல்முனைப் போராட்டத்தின் தேவையை இன்று பெண் அறிவியலாளர்கள் அதிகமாகவே உணர்ந்திருக்கிறார்கள். இதன் விளைவாக சம்மர்ஸ்களையும் மீறி சாதகமான மாற்ற்ங்கள் வரும். அதை எப்படி துரிதப்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும். அறிவியல் என்ற செயல்பாடு சமூகத்திற்கு வெளியே இல்லை. இதைப் புரிந்து கொண்டால் அறிவியலில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பது, உரிய இடத்தினைப் பெறுவது என்பது சமூக மாற்றத்தின் விளைவாகவும், காரணியாகவும் இருக்கும் என்பதை எளிதில் அறிய முடியும்.

குறிப்புகள்

1, பெண்ணிய நோக்கில் அறிவியல் குறித்த விமர்சனங்கள், ஆய்வுகளை இக்கட்டுரையில் குறிப்பிடவில்லை. அதனளவிலேயே அது ஒரு விரிவான அலசலைக் கோருவது. இக்கட்டுரை ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் சில பரிமாணங்களை முன்னிறுத்தி விவாதிக்கும் முயற்சி.

2, சம்மர்ஸ் கூறியதை ஒரு பின்புலமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இச்சர்ச்சை குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன, இனியும் தொடரும். ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் அதை தொகுத்துக் கொண்டு எழுதுவதும் பொருத்தமாயிருக்கும் என்பதால் இக்கட்டுரையில் அச்சர்ச்சைக்கு ஒரள்விற்கு மேல் இடம் தரப்படவில்லை. இக்கட்டுரைக்கு தொடர்பில்லை என்பதால் சம்மர்ஸ் உலக வங்கியில் பணியாற்றிய போது முன் வைத்த சுற்றுச்சூழல் குறித்த கருத்தினையும், அதற்கான எதிர்வினைகளும் இக்கட்டுரையில் இடம் பெறவில்லை.

3, இக்கட்டுரையில் சில ஆய்வுகள், சான்றுகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.இந்த விஷயம் ஒரு நூலிற்குரியது என்பதால் விரிவஞ்சி கட்டுரையில் சிலவற்றைம் மட்டுமே குறிப்பிடுகிறேன். வேறு பல காரணங்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் சில, உ-ம் queen bee syndrome, சர்ச்சைக்குரியவை. அவற்றை கருத்தில் கொண்டு இக்கட்டுரையை எழுதவில்லை.

நூல்,கட்டுரைப் பட்டியல்

Margaret Alic – Hypatia ‘s Heritage: A History of women in science from antiquity through 19th Century-Boston:Beacon Press-1986

Henry Erkowitz and others – Athena Unbound: The Advancement of Women in Science and Technology – Cambridge University Press-2000

Etzkowitz, Henry and others. ‘The Paradox of Critical Mass for Women in Science. ‘ Science 266 (October 1994): 51-54.

Namrata Gupta ,Arun K.Sharma – Women Academic Scientists in India – Social Studies of Science Vol 32 No 5-6 – 2002

Robin Wilson – Women in Higher Education – The Chronicle of Higher Education – Dec 3, 2004

Richard Gallagher, Ivan Oransky – Women, Science and Academia- The Scientist-vol 19 no 7 April 11 2005

Abha Sur – The Life and times of a Pioneer – The Hindu – Sunday Magazine Oct 14 2001

Veena Poonacha – Uncovering the Gender Politics of Science Policies and Education – Economic and Political Weekly Jan 15 2005 www.epw.org.in

Patricia Campion, Wesley Shrum – Gender and Science in Development : Women Scientists in Ghana, Kenya and India-

Science, Technology and Human Values – Vol 29 No 4 2004

Greta Noordenbos – Women in Academies of Science : From Exclusion to Exception – Womens ‘ Studies International Forum-Vol 25 No 1 2002

Londa Schiebinger – The Mind Has No Sex – Women in the origins of modern science- Harvard University Press-1989

Londa Schiebinger- Has Feminism Changed Science-Harvard University Press-1999

E.F.Keller – A Feeling For Organism-The Life & Work of Barbara McClintock-W.H. Freeman-1983

Mary Terrall -Book Review: Pandora ‘s Breeches: Women, Science and Power in the Enlightenment-

European History Quarterly, Jan 2005; 35: 187 – 190.

R.Ramachandran- Sexism and Science , The Indian Situation – Frontline- Vol 22 No 6 March 12-25 2005

இணையமுகவரிகள் இப்பட்டியலில் தரப்படவில்லை.

—-

Series Navigation

பெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


(ஏப்ரல் 2005 உயிர்மை இதழில் வெளியானது. என் வலைப்பதிவில் இதை http://ravisrinivas.blogspot.com/2005_04_01_ravisrinivas_archive.html

என்ற முகவரியில் காணலாம் )

1

பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி.ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ்,சி.வி.ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் – அறிவியலில் பெண்கள் இல்லையா இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா.

ஜனவரி 2005ல் ஒரு கருத்தரங்கில் ஹார்வர்ட் பல்கலைத் தலைவர் லாரன்ஸ் ஸம்மர்ஸ் தெரிவித்த கருத்துக்கள் கடும் எதிர்வினைகளை உருவாக்கின. ஹார்வர்ட் பல்கலைகழக ஆசிரியர்கள் உட்பட

பலர் அவரை விமர்சித்தனர். தொடர்ந்து பத்திரிகைகளில் அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் கூட்டறிக்கைகள், கூட்டுக் கடிதங்கள் வெளியாகின்றன. தன் கருத்துக்களுக்காக வருந்துவதாக அவர் கூறியும் சர்ச்சை ஒயவில்லை. இப்போதும் சர்ச்சை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தான் பேசியது என்ன என்பதையும் வெளியிட்டு, தன் நிலைப்பாட்டினைத் தெளிவாக்கினார். ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர்கள், மூன்று பல்கலைகழகங்களின் தலைவர்கள் எனப் பலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர்.அவரை பதவி நீக்கம் செய்யமாட்டோம் என்று பல்கலைகழகத்தினை நிர்வகிக்கும் அமைப்பு கூறிவிட்டது. அவர் என்னதான் கூறினார். அவரது உரையில் மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. அவர் கூறியதை சுருக்கமாகச் சொன்னால், உள்ளார்ந்த திறன்கள், குடும்ப பொறுப்புகள், மற்றும் வேலைசார்ந்த காரணங்கள்தான் பெண்கள் அறிவியல், பொறியியற் துறைகளில் மேலிடங்களில் இஅட்ம் பெறாததற்கு காரணம், பாரபட்சமோ, சமூகமயமாதலோ அல்ல. இக்கருத்தினை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தேன், ஒரு விவாதத்தினை

உருவாக்கவே முன்வைத்தேன் என்று அவர் கூறினாலும் அதை பலர் ஏற்கவில்லை. ஏனெனில் அவரது முழுப் பேச்சினைப் படித்தவர்களுக்கு அவர் தன்னுடய பாரபட்சமான கருத்துக்களுக்கு அறிவியல் முலாம் பூசுகிறார் என்பது புரிந்துவிடும். சம்மர்ஸ் தன் உரையில் ஒரு சில பெண்களே அறிவியல் புலங்களில் இருப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறினார். குழந்தை(கள்), குடும்ப பொறுப்புள்ள பெண்களால் வாரத்திற்கு 80 மணி நேரம் உழைக்க முடியாதது அல்லது அப்படி உழைக்க அவர்கள் தயங்குவது, உயர்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கணிதம், அறிவியலில் சில பெண்களே ஆண்களை விட அதிக மதிப்பெண் பெறுகின்றனர், இதற்குக் காரணம் பாலினங்களுக்கிடையே உள்ள இயற்கையாக அமைந்த வேறுபாடு.

வேறு வார்தைகளில் சொன்னால் பெண்களுக்கு எதிரான பாரபட்சமோ அல்லது நிறுவனங்களின் செயல்பாடுகள், கொள்கைகள், அறிவியல், பொறியியலில் பெண்கள் அதிக அளவில், குறிப்பாக உயர் பதிவிகளில் இடம் பெறாததற்கு காரணமல்ல. இயற்கையாகவே பெண்கள் சிலவற்றில் ஆண்களை விட திறன் குன்றியவர்கள். சம்மர்ஸ் ஒரு சாதாரண நபராக இருந்து இதைக் கூறியிருந்தால் இவ்வளவு தூரம் சர்ச்சை எழுந்திராது. அவர் உலகில் முதலிடத்தில் உள்ளதாக கருதப்படும் பல்கலையின் தலைவர்.இதற்கு முன்பு அமெரிக்க அரசிலும், அதற்கு முன்பு உலக வங்கியிலும் உயர்பதவிகள் வகித்தவர்.

இந்த இயற்கையாகவே பெண்கள் …. என்பதற்கு வரலாறே உண்டு. பெண்கள் அறிவியல் செய்வதற்கு படைக்கப்படவில்லை என்ற வாதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் நிலவியது. இயற்கையாகவே வெள்ளை நிறத்தவர் அல்லது ஐரோப்பியர்,அமெரிக்கவர் பிற இனத்தவரை விட அறிவில் மேம்பட்டவர்கள். இயற்கையாகவே மனிதரில் வேறுபாடு உண்டு, அதன் விளைவாக என்னதான் முயற்சி எடுத்தாலும் ஒரு சில இனத்தவர்

வெள்ளையவர் போல் புத்திசாலிகளாக முடியாது. இந்த இயற்கையாகவே என்ற வாதத்தினை இயற்கையா அல்லது சூழல்,வளர்ப்பா என்ற சர்ச்சையின் (nature vs nurture) ஒரு பகுதியாகக் காணலாம். அனைவரும் சமம் என்று கூறும் போது நாம் பாலின ரீதியாகவோ அல்லது இன ரீதியகவோ யாரும் பிறக்கும் போதே யாரையும் விட உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் இல்லை என்று கொள்கிறோம். அதாவது இயற்கையையிலே சிலர் உயர்ந்தவர்கள், சிலர் தாழ்ந்தவர்கள் என்ற வாதத்தினை ஏற்பதில்லை. மேலும் சரியான சூழலும், போதுமான வசதிகளும் தரப்பட்டால் வறியவர்கள், படிப்பறிவில்லாத பெற்றோரின் குழந்தைகள்,பெண்கள் – இவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி சமூகத்தில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் என்பதை நிரூபிக்கமுடியும். அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது பாரபட்சங்களும், போதுமான வாய்ப்புகள் தரப்படமால் இருப்பதுதான் காரணம். இத்தடைகளை நீக்குவது மட்டுமல்லாது, இதுவரை போதுமான பிரதிந்தித்துவம் பெறாதவர்களுக்கு சில சலுகைகள் தரப்படவேண்டும், குறைந்தபட்சம் பாகுபாடுகள் எந்த விதத்தில் இருந்தாலும் அவை நீக்கப்பட வேண்டும். இன்னொரு தரப்பின் வாதம் இது போன்ற ‘சலுகைகள் ‘ தேவையேயில்லை, ஏனெனில் அனைவரும் சமமன்று. சிலர் பிறப்பிலேயே சில விசேஷத் திறன்களைப் பெற்றிருப்பவர். அதனால் அவர்கள் வாழ்வில் முன்னேறுவர். திறனற்றவர்கள் பின் தங்கி இருப்பதில் வியப்பில்லை. இதுதான் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. ஏற்றதாழ்வுகளுக்கு முக்கியமான காரணம் இதுதான்.

எனவே ‘தகுதியற்றோருக்கு ‘ சலுகைகள் வழங்குவது இயற்கைக்கு முரணனாது. இது போன்ற வாதங்கள் புதிதல்ல என்றாலும் பல்வேறு கட்டங்களில் இவ்வாதங்கள் அறிவியல் பூர்வமானவை என்று நிரூபிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை சமூக டார்வினியக் கோட்பாட்டுடன் சேரும் போது சமூகத்தில் வெற்றி, தோல்வி என்பதற்கு பரிணாம பரிமாணம் தரப்படுகிறது. கால்ங்காலமாக இவை இனவாதத்தினையும், காலனியாதிக்கதினையும், ஜாதி பாகுபாட்டினையும், ஆணாதிக்கத்தினையும் இன்ன பிற

பாகுபாடுகளையும் நியாயப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு உதாரணமாக 1990களில் வெளியான The Bell Curve (Hernstein & Murray, 1994) என்ற நூலினை கூறலாம். இந்நூலாசிரியர்கள் அறிவுத்திறனை பரிசோதிக்க செய்யப்பட்டும் ஆய்வுகள்,சோதனைகளின் அடிப்படையில் அமெரிக்க-ஆப்ரிக்கர்கள் அறிவுத்திறன்களில் (வெள்ளையரை விட) மட்டமானவர்கள் என்றும், இதற்குக் காரணம் மரபணு ரீதியானது என்றும் வாதிட்டனர். இவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதரவாக பல புள்ளிவிபரங்களையும், சோதனை முடிபுகளையும் முன் வைத்தனர். ஆனால் இதை விமர்சித்தவர்கள் இவர்கள் ஆய்வு முடிவு, முடிபுகளைக் கையாண்ட விதம், பயன்படுத்திய புள்ளியல் முறைகளைக் கேள்விக்குள்ளாக்கினர். அப்படிப்பட்ட முடிவிற்கு, அதாவது அமெரிக்க-ஆப்ரிக்கர்கள் அறிவு ரீதியாக திறன் குறைந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்பது இவர்கள் வாதம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் அமெரிக்க ஆப்ரிக்கர்கள் இயற்கையாகவே திறன் குறைந்தவர்கள் என்றால் அவர்கள் முன்னேறமடையமாதற்கு காரணம் இயற்கையான இந்த வேறுபாடு என்று கூற முடியும். மேலும் அப்படி இயற்கையாகவே திறன் குன்றியோருக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னிரிமை தருவதோ சரியல்ல, ஏனெனில் எவ்வளவுதான் முயன்றாலும் இயற்கையாக அமைந்த பாகுபாட்டினை மாற்ற முடியாது. இது போன்ற வாதங்கள் பல்வேறு விதங்களில் முன் வைக்கப்படுவதுடன், இவற்றில் இயற்கை என்பது ஒரு மாற்றவியலாத, முக்கிய காரணியாகக் காட்டப்படுவதுதான. இந்த இயற்கை என்பது பல்வேறு வகைகளில் முன்னிறுத்தப்படுகிறது – மரபணுரீதியான வேறுபாடுகள் என்பது அதில் ஒன்று.

2

1879ல் பெண்களின் மூளை அளவு சிறியது, எனவே அவர்களது அறிவாற்றல் குறைவானது என்று எழுதிய ஒரு ஆய்வாளர் பெண்களின் அறிவாற்றிலினை ஆராய்ந்த உளவியலாளர்கள் அவர்கள் அறிவாற்றல் குன்றியவர்கள், அவர்களது அறிவாற்றல் ஒரு சிறு குழந்தையின் அறிவாற்றலுடன் ஒப்பிடத்தக்கது என்று எழுதியதுடன் ஒரு சில பெண்கள் அறிவாற்றல் அதிகம் பெற்றிருப்பது ஒரு விதிவிலக்காகவே கொள்ளப்படவேண்டும் என்று வாதிட்டார். எனவே அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான கல்வி தருவதோ, ஆண்களின் இலக்குகளை அவர்களுக்கு நிர்யிணப்பதோ சரியல்ல என்பது அவரது வாதம்.

எனவே சம்மர்ஸ் கூறியது முற்றிலும் புதிது அல்ல.பெண்கள் இத்தகைய ‘பேருண்மை ‘களை பல முறை, பல வடிவங்களில் கேட்டுள்ளனர். ஆனால் இந்த வாதங்களுக்கு எதிரான ஆய்வுகள், வாதங்கள் இன்று மிக வலுவாக உள்ளன. ஒரு சில ஆய்வுகள் ஆண்கள், பெண்களிடையே திறன்களில் வேறுபாடு இருப்பதாகக் கூறினாலும், அவை சர்சிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக டோரின் கிமுரா என்ற பேராசிரியர் 2002 ஆண்டு எழுதிய கட்டுரையில் ஆண்கள், பெண்களின் மூளைகள் வெவ்வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார். 3, 4 வயதுடைய ஆண் குழந்தைகள் மனரீதியாக உருவங்களை சுழற்றுவதில் பெண் குழந்தைகளை விட திறன்மிக்கவர்கள் என்று குறிப்பிட்டுகிறார்.மேலும் காமிலா பென்போ என்ற பேராசிரியர் கணிதத் திறன் என்பதில் உயிரியல் ரீதியான காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறுவதை சுட்டிக் காட்டுகிறார்.மழலையர் பள்ளியிலிருந்து, ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளின் கணித, மற்றும் வெளிரீதியான (spatial) திறன்களை ஆராயும் மிசைல் மாசோக்கா என்ற ஆய்வாளர் இவற்றில் ஆண், பெண் குழந்தைகளிடையே உள்ள வேறுபாடு மிக்ககுைறைவு என்பதுடன் இவ் வேறுபாடுகள் தொடர்வதில்லை என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்.

யு சையி என்ற சமூகவியல் பேராசிரியர் இதுவரை ஆண், பெண் குழந்தைகள் சோதனைகளில் பெறும் மதிப்பெண் வேறுபாட்டிற்கு இயற்கை அல்லது உள்ளார்ந்த திறன்கள் என்பது சரியல்ல என்கிறார். இரட்டைக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வுகள் பல பாலினத்தினை கருத்தில் கொள்வதில்லை என்கிறார். மேலும் தர்க்க ரீதியாக சம்மர்ஸ் கூறுவது சரியல்ல என்று கூறும் இவர் பெண்கள் கணிதத்தில் பெரும் தேர்ச்சி பெற்றாலும் கூட கணிதம்,அறிவியல் துறைகளை வேலைக்காக மேற்கொள்வதற்கான சாத்தியம் குறைவு என்கிறார். கணிதம்,அறிவியல் துறைகளில் உயர் பதவிகளில் பெண்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் இயல்பாகவே அவர்களுக்கு உள்ள திறன் குறைவு என்பது சம்மர்ஸின் வாதம். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல், பொறியியல் துறைகளின் பெண்களின் பங்கேற்ப்பு தொடர்ந்து கூடியபடித்தான் உள்ளது. இயல்பான திறன் அல்லது மரபணு காரணம் என்பது காரணமென்றால் இது சாத்தியமே இல்லை. ஏனெனில் நமது மரபணுகளில் சில பத்தாண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வாதிடவே முடியாது. மாறாக பெண்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது போன்றவைதான் காரணிகளாக இருக்க முடியும் என்பது இவர் கருத்து.க்யுபாவில் பெண்கள் அறிவியல், பொறியியல் துறைகளில் உயர் பதவிகளில் அதிகம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ரிச்சர்ட் லெவின்ஸ் 1959 ல் மனித மூலக்கூறு தொகுப்பில் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டுவிட்டதா என்று கேட்கிறார். 1959ல் க்யுபாவில் புரட்சி காரணமாக ஆட்சி அதிகாரம் மாறியது.

எனவே சம்மர்ஸ் கூறியதை கேள்விக்குள்ளாக்குவோர் இதில் ஒரு ஒருமித்த கருத்து இல்லை என்பதுடன், பல ஆய்வுகள் ஆண்,பெண் திறன்கள் வேறானவை என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொன்னால் இயல்பாக வேறுபாடு இருப்பதாக கூறும் ஆய்வுகளால் சிலவற்றை திருப்திகரமாக விளக்க முடியவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். மேலும் பெண்கள் பங்கேற்ப்பிற்கு தடையாக உள்ள சமூக ரீதியான, அமைப்பு ரீதியான காரணிகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்பதை வலியுறுத்துகிறார்கள்.

இதன் பொருள் மரபணு ரீதியான வேறுபாடுகளை முற்றிலும் மறுப்பதல்ல.மாறாக மரபணுக்கள் அறிவாற்றல் போன்றவற்றை தீர்மானிக்கும் காரணிகள் என்ற நிர்ணயவாதத்தினை ஏற்க முடியாது என்பது. மாறாக மரபணுக்களை விட புறக் காரணிகளான சூழல்,சமூக நிலை போன்றவையே அறிவாற்றலை வளர்ப்பது, வெளிப்படுத்துவது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மரபணுக்களைக் காரணம் காட்டி பாகுபாடு செய்வது சரியல்ல, மாறாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகள், வசதிகள் தரப்பட வேண்டும். காலங் காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சலுகைகள், வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்ய முடியும். சமூக அறிவியல் ஆய்வுகளை கொள்கை முடிவுகளை எடுக்க பயன்படுத்தும் போது இந்த ஆய்வுகளின் போதாமைகள், வரையறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சில ஆய்வுகள் மூலம் இவை காரணி அல்ல என்று அறிய நேர்ந்தாலும் வேறு காரணிகள் என்ன என்பதை அறிய மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும். அது மட்டுமின்றி அமுல் செய்யப்பட்ட கொள்கை முடிவுகள் உண்மையிலேயே விரும்பிய பயன்களை விளைவித்தனவா என்பதையும் ஆய வேண்டும். உதாரணமாக பெண்கள் அறிவியலில் அதிகமாக பங்கேற்கும் வகையில் ஒரு திட்டம் வகுக்கப்படுகிறதென்றால், அது அமுல் செய்யப் படும் போது ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் அறிய வேண்டும். ஏனெனில் அத்திட்டம் சில அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். நடைமுறையில் அவ்வானுமானங்கள் சரிதானா அல்லது எதிர்பார்த்திராத காரணிகள் காரணமாக விளைவுகள் திருப்திகரமாக இல்லையா என்பதையும் அறிய வேண்டும்.

ஒரு சிக்கலான சமூக பிரச்சினைக்கு ஒற்றைத் தீர்வையோ அல்லது ஒற்றைக் காரணியையோ முன்னிறுத்துவது கவர்ச்சிகரமாக இருக்கலாம்.ஆனால் யதார்த்தம் வேறு விதமாக இருக்கும். எனவேதான் பெண்ணியமும், அறிவியலும் குறித்து அனைத்தையும் வெறும் ஆணாதிக்கம் என்ற ஒற்றைக் காரணி மூலம்

விளக்கிவிட முடியாது. ஏனெனில் சமத்துவம் நிலவுவதாகக் கருதப்படும் சூழலிலும் கூட வேறு சில காரணிகள் காரணமாக பெண்கள் அதிகமாக பங்கேற்பது சாத்தியமின்றிப் போகலாம். உதாரணமாக ஒரு நிறுவனம் ஆண்-பெண் பாகுபாடின்றி பணிக்கு ஆட்களை தகுதி அடிப்படையில் எடுப்பதாகக் கூறினாலும் தனியே தங்கி பெண்கள் வேலைக்கு செல்ல வசதிகள் இல்லாத போது, அதாவது பெண்களுக்கான தனி விடுதிகள் போன்றவை இல்லாத போது, தனியே தங்கும் பெண்களுக்கு வீடுகள் கிடைக்காத போது, பெண்களால் அந்த வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள இயலாது போய்விடும். பல்கலைகழகங்களில் பெண்கள் உயர்கல்வி பயில் வெறும் அனுமதி அல்லது இடம் மட்டும் கிடைத்தால் போதாது. அதை பயன்படுத்திக் கொள்ள விடுதிவசதிகளும் தேவை. ஆகையால் பெண்கள் அறிவியலில் அதிகம் பங்கேற்கவகை செய்ய வேண்டுமென்றால் பாரபட்சங்களை நீக்குவது முதல் படி, அது மட்டுமே விரும்பிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.

பெண்களைப் பொருத்தவரை அவர்கள் பங்கேற்ப்பிற்கு பல காரணிகளும் தடையாக உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும், குடும்ப நிர்வாகம் செய்யவும் படைக்கப்பட்டார்கள் என்ற கருத்து.இதன்படி பெண்களின் விதியை அவர்கள் உடலே தீர்மானித்துவிட்டது. இதற்கு மாறாக செயல்படுவது என்பது இயற்கைக்கு முரணானது, சமூக அமைப்பிற்கே எதிரானது. ஆண்டவன் பெண்களை இப்படித்தான் படைத்திருக்கிறான் என்ற வாதத்தினை மறுக்கும் பெண்ணியவாதிகள்

சொல்வது Biology is not destiny. ஆனால் குழந்தை மணம் முதல் பல கொடுமைகளை நியாயப்படுத்த பெண்களின் இந்த உடல் குறித்த கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது சரி அல்லது அவர்களின் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டதோ நியாயம் என்ற வாதங்கள் காலங்காலமாக மதவாதிகளால் தெய்வ வாக்காகவும், தீர்க்கதரிசிகளின் வாக்காகவும் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் பெண்களிற்கு மூளை உள்ளது, பல திறன்கள் அவர்களிடம் இருப்பது என்பதை ஏற்பதில்லை. அப்படியே ஏற்றாலும் அவைகளை குடும்பம் என்ற வட்டத்திற்குள் பயன்படுத்தலாம் என்றே கருதினர். உதாரணமாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்திய பலர் அது குழந்தை வளர்ப்பிற்கு உதவும், அறிவுள்ள குழந்தைகள் பெற, குடும்ப நிர்வாகத்திற்கு உதவும் என்பது போன்ற காரணங்களை முன்வைத்தனர். அதாவது பெண் கல்வி என்பது குடும்பத்திற்கும், கணவனுக்கும் பயன்படும் என்பதால் அதை ஏற்கலாம் என்றனர். மேலும் கல்வி கற்ற பெண் என்பவள்

வேலைக்குப் போவது என்பதோ, நிதி ரீதியாகவும், வேறு வகைகளில் சுதந்திரமாக செயல்படுவது என்பதும் அவர்களைப் பொருத்த வரை தேவையற்றவை. எனவே திருமணம் செய்து வைக்கப்படும் முன் பெண் கல்வி பெறலாம் என்று கருதப்பட்டது. இப்படிப்பட்ட குறுகிய பார்வைகள் இன்று நகைப்புக்குரியவையாக தோன்றினாலும் போன நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் இவை வெகுவாக விவாதிக்கப்பட்டவை. இதைக் கூட ஏற்க இயலாத பிற்போக்குவாதிகள் இருந்தார்கள்.

பொதுவாகவே பொதுக்களன் , தனிக்களன் என்ற பாகுபாடு நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் உள்ளது. காலங்காலமாக நிலவிய கருத்தின்படி பொதுக்களன் என்பது ஆண்களுக்கு உரியது, அங்கு பெண்களுக்கு சமமான இடமில்லை. தனிக்களன் என்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடமுண்டு. ஆனால் இங்கும் பெண்களின் இடத்தினை தீர்மானிப்பது ஆண்கள்தான். பொதுக்களன் என்பதை பலர் கூடுமிடம், பலர் உரையாடும்,விவாதிக்கும் இடம், சந்தை போன்ற இடங்கள், அரங்கங்கள், கல்வி நிலையங்கள் என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.தனிக்களன் என்பதை வீடு,தனி நபர் இடம், அனுமதியின்றி பிறர் நுழைய முடியாத இடம் என்று கொள்ளலாம். ஆனால் மதரீதியாகவும், இன்ன பிற வகைகளில் பெண்களின் நடமாட்டங்கள் குறித்து பல விதிகள் பெண்கள் தனிக்களனில் இருப்பதையே வலியுறுத்துவதுடன், அதுதான் முறை,தர்மம் என்று கூறுகின்றன. இதில் முக்கியமாக பெண்களின் உடைகள் குறித்த விதிகள் இதை முன் வைத்து பொதுக்களனில் பெண்கள் பங்கேற்ப்பதை கிட்டதட்ட தடை செய்கின்றன. இவ்விதிகள் எல்லா சமூகங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால் பொதுக்களனில் பங்கேற்கும் உரிமைகள் பெண்களுக்கு பல விதங்களில் கட்டுப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை என்பது கடந்த ஆண்டின் துவக்கத்தில் சில நாடுகளில்தான் தரப்பட்டது.இன்றும் எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. இந்த பொதுக்களன், தனிக்களன் என்ற பாகுபாடு பெண்களுக்கு உரிய இடம் வீடு என்பதை ஏதோ ஒரு வகையில் வரையறை செய்யும் போது, பொதுக்களனில் பெண்கள் எந்த அளவு பங்கேற்கலாம் என்பதையும் பெண்களின் குடும்ப வாழ்க்கையுடன் தொடர்புடைய வகையிலே தீர்மானிக்கிறது. பெண்களின் தனிப்பட்ட,சமூகரீதியான எல்லைகள் இப்படி வகைப்படுத்தப்படும் போது உயர்கல்வி, அறிவியல் பயிற்சி போன்றவை பெண்களுக்கு நூற்றாண்டுகளாக மறுக்கப்படுவது இயற்கையாக சித்தரிக்கப்பட்டது. சமத்துவம் என்ற குரல்கள் எழுந்த போதும் கூட பெண்களுக்கான உரிமைகளுக்கான போராட்டம் பல சவால்களையும், பிற்போக்கான கருத்தியல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதே சமயம் பெண்களுக்கு தரப்பட்ட உரிமைகள் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் பெற போதுமானவையாக இருந்தன என்று கூறமுடியாது.உதாரணமாக இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டிருந்தாலும் மக்களவை, மாநில சட்டசபைகளில் பெண்களில் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வந்தபின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் எண்ணிக்கை கூடியது. எனவே பொதுக்களனில் பங்கேற்கும் உரிமை தேவை, ஆனால் அது மட்டுமே பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் பெற்று தரும் என்று கருத முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை கூடினாலும் அதன் காரணமாகவே அறிவியல்,பொறியியல் துறைகளில் உயர்பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை

வெகுவாக அதிகரிக்கும் என்று கூற முடியாது. இது ஏன் என்பதை இன்னொரு பகுதியில் விளக்குவோம்.

3

இன்றுதான் இப்படி என்றால், வரலாற்றில் பெண் அறிவியலாளர்கள் முற்காலங்களில் இருந்திருக்கிறார்களா, அறிவியலில் பெண்களின் பங்களிப்பு என்ன என்பது போன்ற கேள்விகள் எழுவது சகஜம். பொதுவாக பாடநூல்கள், வெகுஜன புரிதல் அறிவியலில் சிலரை பங்களிப்பினை மட்டும் முன்னிறுத்தினாலும் அறிவியலின்

வரலாறு, அறிவியலை ஒரு சில மேதைகளின் உழைப்பினால், அறிவாற்றலால் மட்டும் உருவான ஒன்று என்று சித்தரிப்பதில்லை. ஒரு ஆர்க்கிமிடிய புள்ளியிலிருந்து அறிவியல் செய்வதில்லை. பெண்களின் பங்களிப்பு குறித்த அக்கறைகள் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு குறித்து போதுமான தகவல்கள் இல்லை. பெண்கள் ஆதிகாலத்தில் விவசாயத்திலும், வேட்டையாடுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளனர். புதிய பயிரின வகைகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ஆனால் முதல் பெண் அறிவியலாளர் யார் என்பது நமக்குத் தெரியாது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் பண்டைய கிரேக்கத்தில் பெண் தத்துவஞானிகள் இருந்திருப்பது தெரியவருகிறது. உபநிடதங்களிலிருந்து கார்கி என்ற பெண் தத்துவஞானி இருந்திருப்பதும் தெரிகிறது.

ஹிப்பேஷியா – இவர் கணித அறிஞர், தத்துவஞானி.இவர் கருவிகளை உருவாக்கியவர். தியொன் என்ற கணிதவியலாளரின் மகளான இவர் கணிதமும், இயற்கைத் தத்துவமும் கற்பித்தார்.கணிதம், வானியல் குறித்து நூல்களுக்கு உரைகள் எழுதியிருக்கிறார்.சமகால தத்துவஞானிகளிடம் உரையாடியவர். நீர் வடிகட்டும் கருவி, கன அடர்த்தியை அளக்கும் கருவி உட்பட மூன்று கருவிகளை உருவாக்கியவர். எகிப்தில் அலெக்சண்டிரியா நகரில் வசித்தார்.அப்போதைய மத்தியதரைக் கடல் பகுதியில் இயற்கைத் தத்துவத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த தத்துவவாதிகளில் ஒருவராக கருதப்பட்டார். சுதந்திர சிந்தனைக்கும், பகுத்தறிபிற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். தவறாக சிந்திப்பது சிந்திக்காமலே இருப்பதை விட மேலானது என்பதால் சிந்திக்கும் உரிமைக்கு முக்கியத்துவம் கொடு என்று எழுதினார். இவர் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு காரணங்கள் சரியாகத் தெரியவில்லை. சிரில் என்ற கிறிஸ்துவ பிஷப்பின் ஆதரவாளர்களால் இவர் கொல்லப்பட்டார் என்றும், உள்ளூர் அரசியல் காரணங்களால் கிறிஸ்துவர்கள் இவரைக் கொன்றனர் என்றும் கூறப்படுகிறது.கிறிஸ்துவர்களால் இவரது தத்துவம், புகழ் ஆகியவற்றை ஏற்க இயலவில்லை, மேலும் இவர் பெண்ணாக வேறு இருந்ததும் இவர் மீது பொறாமை ஏற்பட காரணமாக இருந்தது. எனவே சிரில் தன் ஆதரவாளர்களை கும்பலாக அனுப்பி அவரை கொலைச் செய்தான் என்று குறிப்புகள் கூறுகின்றன. தேவாலயத்தில் இவர் கொலைச் செய்யப்பட்டார் என்றும் குறிப்புகள் கூறுகின்றன. ஹிப்பேஷியா பிளாட்டோவின் தத்துவங்களின் அடிப்படையாகக் கொண்ட நவபிளாட்டோனியத்தை முன்னிறுத்தியவர்.ஏக இறைக்கொள்கை கொண்ட கிறித்துவர்கள் இவரைக் கொன்றிருக்கிறார்கள். பெண்ணியவாதிகளுக்கு ஹிப்பேஷியா மிக முக்கியமானவர்.எனவே பெண்களும்,தத்துவமும் குறித்த ஒரு ஜர்னல் ஹிப்பேஷியா என்ற பெயரில் வெளியாகிறது. அவரது நூல்கள் அழிக்கப்பட்டன, அலெக்சாண்டிரியாவில் இருந்த பெரும் நூலகம் தீக்கிரையானது.எனவே எஞ்சியிருப்பவை அவர் குறித்த குறிப்புகளும், வேறு தகவல்களும்தான். ஆனால் 18ம் நூற்றாண்டில் அவர் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்பட்டார். எனினும் அவரைக் குறித்த சில முக்கியமான நூல்கள் 1990களில்தான் வந்தன. இன்று ஹிப்பேஷியா ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறார்.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் உயர்குடிகளைச் சேர்ந்த பெண்களும், அறிவியலாளர்களின் மனைவிகள்,சகோதரிகள்,மகள்கள் அறிவியலில் ஆர்வம் காட்டினர். பரிசோதனைகள் முக்கியத்துவம் பெறத்துவங்கின. பெண்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. மாறாக அவர் விதிவிலக்குகளாகவும், அச்சம் ஏற்படுத்தும் பெண்களாகவும் கருதப்பட்டனர். உதாரணமாக எமிலி டெ சாட்லெட் பெண்ணாக இருப்பதை குறையாகக் கொண்ட

ஆண் என்று குறிப்பிடப்பட்டார்.மேரீ பால்ஸ் லவாசியர் பெண் உடலில் ஆண் மனது கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டார். பெண்கள் தங்கள் பல்வேறு வேலைகளுடன் அறிவியலிலும் ஈடுபட்டனர். ஆனால் மேதைகளின் சாதனைகள் அவர்களின் தனிப்பட்ட சாதனைகளாக கருதப்படும் போது பெண்கள் ஆற்றிய பங்கிற்கு உரிய மரியாதை இல்லை. உதாரணமாக நட்சத்திரங்களை பட்டியலிட்ட பெருமை ஹெவெலியஸிற்கு கிடைத்தது. ஆனால் இரவுகளில் அவருடன் சேர்ந்து உழைத்த அவர் மனைவி எலிபெத்தாவின்

பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை பெரும்பான்மையான பல்கலைகழகங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இத்தகையப் படிப்பிற்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என்ற கருத்தும் நிலவியது. அவர்களின் சிறிய மூளைக்களுக்கு அறிவியல் உகந்ததல்ல எனவும், அவர்களுக்கு அறிவாற்றல் இல்லை எனவும் கருதப்பட்டது. மேலும் பல்கலையில் படிப்பது அவர்கள் உடல்நலத்திற்கு உகந்தது அல்ல எனெனில் உயர்கல்வி அவர்களது இனப்பெருக்க திறனைப் பாதிக்கும் என்றும் வாதிடப்பட்டது. 18ம் நூற்றாண்டில் மத்தியதர வர்க்கம் வலுப்பெற்றது. உயர்குடிப் பெண்கள் சலூன்கள் என்ற பெயரில் விவாத அரங்குகளை நடத்திய போது அது சமூக விரோதச் செயலாகவும், பெண்மைக்கே இழுக்கு எனவும் விமர்சிக்கப்பட்டது. மேலும் அறிவியல் ஆய்வு என்பது ஆண்தன்மையுள்ள செயல்பாடு அதில் பெண்களுக்கு இடமில்லை எனவும், அவ்வாறு பெண்கள் அறிவியலில் ஈடுபடுவது பெண்கள் ஆண்களாகவதற்கு ஒப்பானது என்றும் காரணங்கள் கூறப்பட்டன.பெண்களின் வேலை குடும்ப நிர்வாகம், குழந்தைகளுக்கு கல்வி என்று வரையரை செய்த பின் பெண்களின் இடம் வீடு என்று வகுக்கப்பட்டது.

18ம் நூற்றாண்டில் ஆண்-பெண் இயற்கை பாகுபாடுகள் குறித்து ஏராளமாக பேசப்பட்டது.பெண்கள் தனிக்களன், உணர்ச்சிகள்,உணர்வுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஆண்கள் பொதுக்களன்,பகுத்தறிவு, ஆய்ந்தறிதலுடன் தொடர்புபடுத்தப்பட்டனர். இந்த எல்லையை மீறும் பெண்கள், அதாவது பொதுக்களனிற்கு செல்ல விழையும் பெண்கள் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை பெற்றவர்களாகிவிடுவார்கள் என்ற அச்சம் நிலவியது.ஆண் பெண் சமத்துவம் என்பதற்கு பதிலாக ஆணும் பெண்ணும் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள் என்பதால் ஒத்திசைவே சாத்தியம் சமத்துவம் அல்ல என்று வாதிடப்பட்டது. மேலும் அப்போது பல்கலைகழகங்களில் செய்யப்படுவதே அறிவியல், பொழுபோக்கு,ஆர்வம் காரணமாக வீட்டிலிருந்து பெண்கள் செய்பவை அறிவியல் அல்ல என்றும் கருதப்பட்டது. இது போன்ற பல காரணங்களால் பெண்கள் அறிவியலில் உரிய இடம் பெறாமல் போனது. மேலும் பெண்களின் சாதனைகள் மதிக்கப்பட்ட போதும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.உதாரணமாக தேசிய அறிவியல் அகாதமிகளில் பெண்கள் உறுப்பினராவது என்பது மிக அபூர்வமாகவே இருந்தது.

—-

Series Navigation