சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

வாஸந்தி


கதாநாயகிகளுக்குத் தமிழ் தெரியவேண்டியதில்லை

தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று

‘தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த சுத்தத் தமிழ் ரத்தம் ஓடும் நடிப்புத் திறன் மிக்க பெண்களா நீங்கள் ? வேண்டாம் உங்களுக்கு இந்த அற்ப ஆசை–.தமிழ் சினிமாவில் கதா நாயகி வேடம் பூணும் ஆசை. ‘

ஏனாம் ?

‘உங்களைப் போட்டால் படம் விக்காது. மார்க்கெட் படுத்துவிடும் பெண்களா ‘.

எப்படிச் சொல்கிறீர்கள் ? எங்களுக்கு அழகில்லையா ?இளமை இல்லையா, அதுவே போதுமே ?

‘போதாது அம்மாடிகளா; தமிழ் பெண்ணுக்கு நிறம் பத்தாது. இப்ப எடுக்கறது கலர் படம் .ப்ளீர்னு ஜொலிக்கும் சிவப்பா இருந்தா. ஹீரோ கன்னத்தைச் சுண்டினா ரத்தம் தெரியணும். ‘

ஐய்யே- அந்தக் கருத்த ஹீரோ சுண்டினாத்தானே ? அவர் மண்ணின் மைந்தர்- ஹீரோயின் மட்டும் வானத்திலேந்து குதிக்கணுமா ?

‘அப்படித்தான் பெண்களா. சும்மா வாதாடிப் புண்ணியமில்லே. ஹீரோ கருப்பா இருந்தா பரவாயில்லே.

ஹீரோயின் கருப்பு கூடாது. அவனவன் கருப்புன்னா கல்யாணம் கட்டிக்கவே யோசிக்கிறான்; மூணுமணிநேர சினிமாவிலேயாவது கண் குளிர ஒரு செவத்த பொண்ணைப் பார்த்து சந்தோஷப் படட்டுமே ? ‘

நிறம் இருந்தா போதுமா சார் ? எங்க திறமையை சோதிச்சுத்தான் பாருங்களேன். பரதம் முறையாகப் பயின்றிருக்கிறோம்.

‘நல்ல கூத்து. காசு குடுத்து கொட்டகைக்கு வந்து குந்தரவன் பரதத்தைப் பாக்கவா வருவான் ? இப்ப எல்லாம் பேரில்லாத க்ரூப் டான்ஸ். அதுக்கு பயிற்சி தேவையே இல்லே. ‘

சரி, பரதம் வேண்டாம். நடிப்பு தேவைதானே ? கலை குழு நாடகங்கள்ளெ நடிச்ச அனுபவம் இருக்கு.

‘சொன்னா கோவிச்சுக்கப் படாது. அந்த நடிப்பெல்லாம் சினிமாவுக்கு பெண்ணுங்க ரோலுக்கு சரிவராது. ‘

நல்ல தமிழ் பேசுவோம், நல்ல உச்சரிப்புடன். எத்தனைக் கடுமையான வசன மானாலும் சுத்தமாப் பேசுவோம்.

‘போச்சுடா! அப்ப நிச்சயமா உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கமுடியாது பெண்களா போய்வாங்க ‘.

இப்ப டிரெண்டு மாறிப்போச்சு. ஆண்களுக்கே வசனம் குறைஞ்சு போச்சு.சும்மா பொம்மைகணக்கா வந்துட்டுப் போற ஹீரோயினுக்கு எதுக்கும்மா வசனம் ? கொஞ்சிப் பேசி காதல் சீன்லெ தலைக்காட்ட

நீங்க எதுக்கு மெனக்கடணும் ? அதுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் இருக்காங்க. இப்ப தமிழ் ஹீரோயின்களுக்கு வேலை ரொம்ப சுளுவு. தமிழே தெரியவேண்டியதில்லே! ‘

வெள்ளைத் தோல் வேணும்னு, தமிழ் தெரியாதவங்களை போடறதுனாலெதானே கதாநாயகிகளை

பொம்மைகளாக்கிட்டாங்க ?

‘ சும்மா ஆராய்ச்சியிலே இறங்கி என் நேரத்தை வீணாக்காதீங்க. பொம்மையோ ஊமையோ, அவங்களைப் போட்டா இளசுகளுக்குப் பிடிக்குது, படம் ஓடுது. இப்பல்லாம் படத்துக்குப் படம் முரட்டு

ஹீரோக்கள் தான். அதுக்குக் கான்ட்ராஸ்டா ஸாப்டா ஒரு அழகு பொண்ணு ஹீரோயினா இருந்தா எடுபடும். இரண்டு காரக்டரும் ஸ்ட்ராங்கா போச்சு, படம் ஊத்திக்கும்! ‘

இது ஒரு கற்பனை உறையாடல்தான்.ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தம்.தொன்னைக்கு நெய் ஆதாரமா நெய்க்கு தொன்னை ஆதாரமா என்கிற கேள்வியின் அபத்த மயக்கம் கோடம்பாக்கத்தை

பீடித்திருக்கும் அவலம்.தமிழ் சினிமாக் கதைக்குப் பெண் கதாப்பாத்திரம் பல்வேறு காரணங்களுக்காக உபரியாகிப் போய்விட்டது. கோடம்பாக்கம் ஒரு மாச்சோ உலகம். ஆண் மேலாதிக்கம், நிலப் பிரபுத்துவ மரபுகள்,பெண் அடிமைத்தனம், ஜாதிப் பெருமை ஆகிய பதிவுகள் இன்னும் மிக அழுத்தமாக உள்ள சமூகத்திற்கு ஆணின் மேலாண்மையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைகளை ஏற்பதில் சிக்கல் இருக்காது.தனிப்பட்ட குணாம்சத்தை காண்பிக்காத பெண் கதாப்பாத்திரங்களும் ஆண் ஆதிக்கக் கலாச்சாரத்துக்குப் பொருந்துபவர்கள்.ஆனால் பெண்ணின் சிவந்த நிறமே தமிழனுக்கு அழகின் அளவுகோல் என்பதால், கதாநாயகி சிவப்பாக இருக்கவேண்டும். நிறம் தானே வேண்டும் இதோ தருகிறோம் என்று படத் தாரிப்பாளர்கள் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் .வடக்கிலிருந்து இறக்குமதி துவங்கிற்று. தமிழ் கதா நாயகர்கள் பச்சைத்தமிழர்கள் . தமிழ் மரக்குடி பெருமைகளைப் பேசுபவர்கள்.மண்ணுடன் பொருந்தும் உருத்தாத நிறம் உள்ளவர்கள்.ஆனால் கதா நாயகியோ சுண்டியிழுக்கும் வெளுப்பு. பச்சை,பழுப்பு, கரு நீலக் கண்கள். செம்பட்டை முடி. மாநிற தமிழ் பெண்கள் நிறைந்த க்ரூப் டான்ஸில் பளீரென்று அன்னியமாகத் தெரிபவர்கள்.அந்த உருவத்துக்குத் தகுந்த மாதிரி பேச்சு.[அவர்களுக்குக் குரல் கொடுக்கும் தமிழ் பெண்கள்கூட நுனி நாக்குத் தமிழ் பேசுகிறார்கள் நிர்பந்திக்கப் பட்டவர்கள் போல. அந்தத் தமிழ் ஒரு வைரஸ். தொலைக்காட்சி தொகுப்பாளினிகளிலிருந்து கல்லூரி மாணவிகள் வரை தொற்றிக்கொண்ட நோய்.] அவர்களைத் தமிழ் ஆடியன்ஸ் கை கொட்டி வரவேற்கிறது.கேரளத்தில் மண்ணுக்குப் பொருந்தாத முகங்கள் கொண்ட, மொழியை சுத்தமாகப் பேசத் தெரியாத கதாநாயகிகளை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். வெள்ளைத்தோல் மோகம் கொண்ட தமிழர்களுக்கு அத்தகைய சின்னத்தனம் கிடையாது. வெளிமாநிலத்தவர் தமிழ் படங்களில் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்ஷேபமும் இல்லை. ஆரம்ப நாட்களில் இருந்து தமிழ் படங்களில் கொடிகட்டி பறந்த கதாநாயகிகள் தெலுங்கர்கள், மலையாளிகள்,கன்னடியர்கள். ஆனால் அவர்கள் தமிழ் கற்று தங்கள் குரலில் பேசினார்கள்.தொழிலுக்கும் தமிழ் மொழிக்கும் அவர்கள் தந்த மரியாதை அது. இன்றைய முன்னணிக் கதாநாயகிகளை ஒரு வரி ஒழுங்காகத் தமிழ் பேசச் சொல்லுங்கள் ? பேசவராது. ஏனென்றால் கற்க வேண்டிய ‘அவசியமில்லை. ‘அதனால் சிரத்தை இல்லை. அதனாலேயே, அலுங்காத வலுவில்லாத பாத்திரங்கள். இது ஒரு மாய ஏமாற்று வேலை. பிற மாநிலத்திலிருந்து வரும் மம்முட்டியும் ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ‘ என்று சுத்தமாக உச்சரிக்கக் கற்ற பிரகாஷ் ராஜும்

தமிழில் பேச முயலும்போது, கதாநாயகிகளுக்கு அது ஏன் வலியுறுத்தப்படுவதில்லை ? வெறும் பொம்மை ரோலுக்கு ஏன் மெனக்கிடவேண்டும் ? அது சரி. தேசிய அளவில் சிறந்த நடிகை விருதுக்கும்

தமிழ் நாடு மெனக்கிடுவதில்லை. மொழியே பேசத் தெரியாதவர்களுக்கு எப்படி வரும் தேசிய விருது ?

தமிழ் சினிமாக்களுக்கு ஆங்கிலத் தலைப்பு வைத்தால் தமிழுக்கு ஆபத்து என்று அலறுபவர்கள்-

தும்பை விட்டு வால் பிடிப்பவர்கள்.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

வாஸந்தி


மனக்கதவம் தாள் திறவாய்….

வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,

ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி— ‘தமிழ் சாதி ‘–பாரதி

தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து கர்நாடகத்துத் தலைநகரமான பெங்களூருக்கு வந்ததிலிருந்து தமிழோசைக்கான ஏக்கம் என்னை வாட்டுகிறது என்றால் அது ஒரு சம்பிரதாயமான வாக்கியமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும். பெங்களூரின் மிக மோசமான சாலைகளும் போக்குவரத்து நெரிசல்களும் , அடிக்கடி எரிச்சலூட்டும் மின்சார வெட்டுகளும் என்னை சென்னை வாழ்வுக்குக்கூட ஏங்க வைக்கின்றன என்றால் சென்னைவாசிகள் அது மிகைப்படுத்தப்பட்ட ‘தமிழ் நாட்டுப் ‘ பற்றாக நினைப்பார்கள்.

ஆனால் இங்கிருக்கும் ஒரு விஷயம் என்னை அசர வைக்கிறது. கன்னட திரைப்படங்கள் மட்டுமே திரை அரங்குகளில் காட்டப்படவேண்டும் என்ற கோஷம் இங்கு எழுந்தபோது இது என்ன சின்னத்தனம் என்று மாய்ந்திருக்கிறேன்.அது கர்நாடகத்தின் வேருடன் ஒட்டாத பண்பு என்று புரிய வைக்கும் நிகழ்ச்சிகள் இங்கு நிறையக் காணக்கிடைக்கின்றன.

தமிழ் இலக்கியவாதிகள் அறிவுஜீவிகள் எல்லோரும் ஒரு நடை கர்நாடகத்துக்கு வந்து இங்கு நடக்கும் இலக்கிய கூட்டங்களைப் பாருங்கள். திறந்த வெளியில் நின்று புதிய சுகந்த காற்றை சுவாசிப்பதுபோன்ற சுகானுபவத்தை பெறுவீர்கள். மொழி இனம் ஜாதி பேதங்கள் தலைத் தூக்காத இங்கிதமான இலக்கிய சூழலைக் கற்பனையாவது செய்து பாருங்கள். கர்நாடகத்துக்குப் பெருமை சேர்த்தவர் யாராக இருந்தாலும், அவரது தாய் மொழி வேறாக இருந்தாலும், ஆங்கிலத்தில் மட்டுமே புலமைக் கொண்டவராக இருந்தாலும் கர்நாடகத்தின் மகன் அல்லது மகள் என்று கொண்டாடும் கன்னடியரின், அரசு ஸ்தாபனங்களின் இயல்பு தமிழகம் உணராத பண்பு. கன்னடத்தில் எழுதிய

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்ற தமிழர் மிகச் சிறந்த கன்னட மொழி படைப்பாளி என்று இன்றும் கர்நாடகத்தின் தலைமகனாகப் போற்றப்படுகிறார்.[மகா கவி பாரதியும் உ.வே.சுவாமிநாத ஐயரும் தமிழில் எழுதியவர்கள். அவர்கள் அசட்டுத்தனமாக அந்தணகுலத்தில்

பிறந்ததற்காக தமிழகம் அநேகமாக ஓரம் கட்டிவிட்டது இங்கு எவருக்கும் தெரியாது] ஆங்கிலப் பேராசிரியரும் கன்னட ஆங்கில இலக்கியத்தில் புலமையும் மிக்க ஸி.டி.நரஸைய்யா என்ற தெலுங்கர் அண்மையில் மறைந்தபோது கர்நாடகம் தனது ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்துவிட்டதாக அரசியல் தலைவர்களும் இலக்கிய வாதிகளும் துக்கம் தெரிவித்தார்கள். கர்நாடக ராஜ்யோத்சவ விருது அவருக்கு ஏற்கனவே அளித்து அரசு கெளரவித்திருக்கிறது. கொங்கிணி பேசும் கிரீஷ் கார்நாடும், மராட்டி பேசும் , ஆங்கிலத்தில் எழுதும் சசி தேஷ்பாண்டேயும் கர்நாடகத்தின் செல்லப் பிரஜைகள். அவர்களது புத்தக வெளியீடுகள் வாசிப்புகள் கூட்டங்களுக்குத் திரளாக வரும் எழுத்தாள வாசகக் கூட்டம் பரவசத்தை ஏற்படுத்துவது. எல்லாரும் எல்லாக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்துப் பேசுகிறார்கள். வி.எஸ். நைப்பால் சசி தேஷ்பாண்டேயின் எழுத்தை விமரிசித்தார் என்பதற்காகவே அவர்

சமீபத்தில் பெங்களூர் வந்தபோது அவரது கூட்டத்தை இலக்கியவாதிகள் மட்டுமல்ல விசுவாசமிக்க வாசகர்களும் புரக்கணித்தார்கள்! இந்த அரவணைக்கும் பண்பே அகில இந்திய அரங்கில் அவர்களது மதிப்பைக் கூட்டும் முக்கிய காரணியாகத் தோன்றுகிறது.

தில்லியில் ஞான பீடப் பரிசு ஆலோசனைக்குழுவில் இருந்த ஒரு அறிஞர் என்னிடம் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் வர்க்கத்தைப்பற்றி குறை சொன்னது நினைவுக்கு வருகிறது. ஞான பீட பரிசுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள் சரியாகப் பரிந்துரைக்கப் படுவதில்லை என்றார். பரிந்துரை என்பது மற்றவர்களால் – அறிஞர்களால் , சக எழுத்தாளர்களால் செய்யப்படவேண்டியது.தமிழுக்கு வருபவை மிகக் குறைவாக, சிரத்தை இல்லாமல் எழுதப்பட்டவையாக, சில சமயங்களில் மோசமான ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாக இருப்பதை என்னிடம் காண்பித்தார். எழுத்தாளரின் எழுத்து இந்தியிலோ ஆங்கிலத்திலோ மற்ற மொழியிலோ கிடைக்காத பட்சத்தில், குறைந்தபட்சம் பரிந்துரையாளரின் வலுவான சிபாரிசு தேர்வுசெய்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கும் என்றார். மலையாளத்திற்கும் கன்னடத்திற்கும் வந்திருந்த பரிந்துரைகள் மிக அசத்தலாக இருந்ததை நான் பார்த்தேன். சக எழுத்தாளர்கள் எழுதியிருந்த பாராட்டுகளும் அச்சில் வந்திருந்த விமரிசன பாராட்டுகளும் படைப்புகளின் மொழிபெயர்ப்புடன் மிகத் தரமாக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தன.

தமிழுக்கு ஞானபீடப் பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று கூட்டத்துக்குக் கூட்டம் நாம் அங்கலாய்ப்போம். வடக்கத்தியானின் சூழ்ச்சி என்று பொருமுவோம். இந்த ஆண்டு நமக்குக் கிடைத்தே விட்டது.

ஆனால் அதைக் கொண்டாடக்கூட நமக்குத்தெரியாது. நமக்கு அரசியல் பேசித்தான் பழக்கம். என்றோ கிடைத்திருக்கவேண்டிய விருது அது என்றாலும், விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் இல்லாவிட்டாலும் எழுத்தாளரின் அரசியல் நமக்கு முக்கியமாகிவிடும். தமிழுக்கு அவர் ஆற்றிய பணியைவிட அவரது எழுத்தில் இருக்கும் பரந்துபட்ட பார்வைக்கெல்லாம் நோக்கம் கற்பிக்கப்படும். கருப்பு அல்லது வெள்ளை என்கிற சமாச்சாரம் கூட இங்கு இல்லை. நமக்கு எல்லாமே கருப்பாகத்தெரிவதால் மற்ற வண்ணங்களுக்கு எண்ணங்களுக்கு இந்த அகண்ட பரப்பில் இடம் உண்டு என்கிற பிரக்ஞை நமக்கு இல்லை. அவர் திராவிட இயக்கத்தின் விமர்சகரா ?வட மொழியான சம்ஸ்க்ருதம் தனக்குப் பிடித்த மொழி என்கிறாரா ? அப்படியானால் அவர் தமிழ் விரோதி. அவர் பார்ப்பன வகுப்பினரை அல்லது இந்து மத ஸ்தாபனங்களை ஆதரிப்பதுபோல் எழுதியிருக்கிறாரா ? தமிழினத்துக்குச் செய்யும் துரோகமல்லவா அது! கிழிக்கவேண்டும் அவரை. முதலாவது பார்ப்பனரல்லாத ஒருவர் அப்படி எழுதக் காரணமென்ன ? உள் நோக்கம் நிச்சயமாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை..

தமிழகத்தின் சாபக்கேடு இது. மொழிப்பற்று போய் அதை ஜாதி அரசியல் ஆக்கிரமித்து வெகு காலமாகிவிட்டது. செத்த பல்லியையே திரும்பத் திரும்ப அடிக்கும் சூரத்தனம் மட்டுமே இந்த அரசியலில் வெளிப்படுவது. எல்லா சன்னல்களையும் மூடிக்கொண்டு அறைக்குள் அடிக்கும் பேடித்தனம். பாப்பாப்பட்டியிலும்

கீரிப்பட்டியிலும் ஜனநாயக விரோத சக்திகள் ஆட்டிப்படைப்பதன் பின்னணியில் இருக்கும் காரணிகள் என்ன என்று இலக்கிய விமர்சகர்களும் தமிழ் பாதுகாவலர்களும் ஏன் பகிரங்கமாக விவாதிப்பதில்லை ?

தமிழர்களின் முக்கியத்துவங்கள் இடம் மாறித்தான் போய்விட்டன.

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி