பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 4

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

ராஜன் குறை


18. தமிழும், தமிழ் நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தினால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிடக் கலாசாரம் என்றும் எடுத்துக் காட்டி புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். ‘தமிழ் ‘ என்பதும், ‘தமிழர் கழகம் ‘ என்பதும் மொழிப் போராட்டத்திற்குதான் பயன்படுமேயொழிய இனப்போராட்டத்திற்கோ, கலாசாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. சரி, ஆரியர்கள் முதலில் தம் கலாசாரத்தைப் புகுத்திதான் நம்மை வெற்றிக்கொண்டார்கள்; நம் கலாசாரத்தைத் தடுத்துதான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாசாரத்தை மறந்து ஆரிய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டதால் தான் அவர்களுக்குக் கீழான மக்களாக — அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம் எனவே, அக்கலாசாரத்திலிருந்து விடுபடவேண்டுமென்றால், மொழிப்போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. கலாசாரத்தின் பேரால்– இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவர்ளாவோம்.

மொழிப்போராட்டம், கலாச்சார போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடமாட்டா; மேலும், இந்த இழிவால் அவதிப்படுபவர்கள் தமிழ்மொழி பேசுகிறவர்கள்– தமிழர்கள் என்பவர்கள் மாத்திரமல்லாமல்— சென்னை மாகாணத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும், அதாவது, வேறு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராஷ்டிரம் முதலிய மாகாணங்களிலும் இருக்கிறார்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும் தம்மைத் திராவிடர்கள் என்றுதான் கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்களும் திராவிடர்கள் தாம்.

(சென்னை ராபின்சன் பார்க்கில், 24-1-1950-ல் சொற்பொழிவு, ‘விடுதலை ‘ ’27-1-50)

19. நிற்க, இந்த பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கிற குறைபாட்டு ஆத்திரந்தான் ‘ நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன், அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்களல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணங்கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்ததால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடம் இருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும், ‘திராவிடன் ‘ என்ற சொல்லை விட்டு விட்டுத் ‘தமிழன் ‘ என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாமென்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, ‘நானும் தமிழன்தான் ‘ என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்துவிடுகிறான்.

(விடுதலை ‘அறிக்கை ‘ 11-10-1955)

20. திராவிட நாடு எது ? இதற்கு முன் — 1956க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நான் ‘திராவிட நாடு ‘ என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு, வடநாட்டானும், இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி, நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த கள்ளிக்கோட்டை மங்களூர் மாவட்டங்களும் மலையாளம், கன்னட நாடுகளுடன் சேரப்போகின்றன. இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித்தமிழ் நாடாக ஆகிவிட்டோம். ஆகவே இதை இப்பொழுது ‘தமிழ்நாடு ‘ என்று சொல்லலாம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தை செலுத்திப் பிரிந்து போய்விட்டார்கள். நாம் நிபந்தனையற்ற அடிமைகளாய் உள்ளோம்.

(திருவண்ணாமலையில், 19-8-1956ல் சொற்பொழிவு– ‘விடுதலை ‘ 29-8-1956)

21. நாம் இந்த நாட்டில் உரிமை உடைய மக்களாய் இருந்தும், சமுதாயத்தில் இழிந்தவர்களாகவும் பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம். இதை மாற்ற வேண்டிய முயற்சிகள் பல நடந்தும், நம் நிலையிலே சிறிதும் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் என்னவென்று யோசித்தோம், முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டாரைப் பார்த்தோம். அதன்படி ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால் அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக்கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது, அதே சமயத்தில் நம் நிலையைச் சிந்தித்துப் பார்த்தபோது ‘இந்து ‘ ‘இந்தியா ‘ என்று நமக்குப் புரியாத சொற்களை— நமக்குச் சம்பந்தமில்லாத மொழிகளைச் சொல்லிக்கொண்டு வந்தோமே தவிர, உண்மையான ஒற்றுமை ஏற்படத்தக்க முறையைக் கையாள வேண்டுமே என்ற சிந்தனை நம் தலைவர்களுக்குள் ஏற்படவே இல்லை.

(லால்குடியில், 23-5-1944ல் சொற்பொழிவு ‘குடிஅரசு ‘ 3-6-1944)

22. தமிழர் என்பது மொழிப்பெயர் திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிடமுடியாது, இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில் தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் — மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது. ‘தமிழர் ‘ என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று கூறிக்கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ்டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக்கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக் கொள்ள மாட்டோம்.

(நூல் : ‘மொழியாராய்ச்சி ‘ வள்ளுவர் பதிப்பகம், பவானி–1948)


3. தாழ்த்தப்பட்டவர்களை இயக்கமாக்குவதிலும், போராடச் செய்வதிலும் போதிய முளைப்புக் காட்டவில்லை:

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓரளவு நியாயமானது இதுவே எனத் தோன்றுகிறது. குறைந்தபட்சம் 1954க்குப் பிறகாவது அவர் தாழ்த்தப்பட்டவர் எழுச்சியில் கவனத்தைக் குவித்திருக்கலாமே என்று தோன்றுவது இயல்பு. ஆனால் இதிலும் அவரது அக்காலத்தில் நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வுசெய்துவிட்டுத்தான் எதையும் கூற முடியும். இருந்த போதும் ஒன்றைத் தெளிவாகக் காண முடிகிறது பார்ப்பன கருத்தியல் மேலாதிக்கம் அவர் விரும்பிய அளவு 1973 வரை தகர்க்கப்படவில்லை. என்பது (இன்றைய நிலைகுறித்து யோசிப்பது வாசகர் பொறுப்பு) எனவே பிரதான எதிரியை அவர் இறுதிவரை வெல்லவில்லை தாழ்த்தப்பட்டவரிடம் பேசும்போது அவர் உங்களை கொடுமைப்படுத்தும் பிற மேல்ஜாதியினர் என்றுதான் கூறுகிறார். தான் அத்தகையதொரு மேல்சாதியினன் என்பதையும், தனது இயக்கம் பெரும்பான்மை அத்தகைய மேல்சாதியினர் இயக்கம் என்பதையும் உணர்ந்திருப்பதற்கான தடயங்கள் அவர் பேச்சில் உள்ளன. வேளாளர், செட்டியார், முதலியார் எனப் பெயர் சொல்லித்தாக்காததைத் தவிர வேறு எந்த சமரசமும் அவர் செய்துக்கொள்ளாததுடன், உண்மை நிலைகளைத் திரித்துக் கூறுவது போன்றவற்றைச் செய்ததாக காணமுடியவில்லை. இன்றும் SC — BC ஒற்றுமைக் குறித்து பேசப்பட்டாலும் நடப்புலகில் அதற்கான அடிப்படைகளை உருவாக்குவது எப்படி என்பது சிக்கலான கேள்வியாகவே இருக்கும்போது பெரியாரிடம் மட்டும் ரொம்பவும் அதிகமாக எதிர்ப்பார்ப்பதற்கில்லை எப்போதுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரச்சாரம் அவரது பிரச்சாரத்தின் இன்றியமையாத பகுதியாக இருந்துவந்தது என்பதை மட்டும் இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட முடியும்.


23. நாங்கள் ஆதித்திராவிடர்களைப் பற்றி பேசும்போது, பார்ப்பனர்கள் மனவருத்தம் அடைவதில் அர்த்தம் உண்டு. ஆனால், பார்ப்பனரல்லாதார் மனவருத்தமடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. அது வெறும் முட்டாள்தனம், மானமற்ற தன்மையுமே ஆகும் ஏனெனில், தமது சமூகத்தில் பார்ப்பனர் என்கின்ற கூட்டத்தாராகிய 100க்கு 3 வீதமுள்ள ஜனத்தொகை நீங்கி, மற்ற ஜனங்களுக்கு இந்த நாட்டில் சூத்திரன் (அடிமை), ஆதிதிராவிடன் என்கின்ற பட்டமில்லாமல் வேறு எந்தப்பட்டத்தோடாவது யாராவது இருக்க முடியுமா ? இருக்கின்றார்களா ? என்று கருதியும், அனுபவத்தையும் கொண்டு பாருங்கள் ‘ சூத்திரன் என்கின்ற ‘காலத்தில் ‘ நீங்கள் பதியப்பட்டிருப்பதில் உங்களுக்குச் சிறிதளவாவது மானம் இருந்தால், பறையன் என்கிற பட்டம் போகவேண்டுமென்பதில் கடுகளவாவது வருத்தமிருக்குமா ?

பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் ‘ என்று கருதுகின்றீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்.

(நாகையில், 3-10-1931ல் சொற்பொழிவு — ‘குடியரசு ‘ 11-10-1931)

24. நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் ஆதித் திராவிடர் என்கின்ற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதித்திராவிட சமூகம் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாயிருக்கிறார்கள். இந்நிலைமை திராவிட சமுதாயத்திற்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடும், திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களேன்று வகுத்திருப்பதையும் நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால் ஆதித்திராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும் திராவிடர்களுக்கு ஆதித்திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும், பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எனது ஆசை.

(திருவாரூரில், 24, 258-1940ல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தலைமைச் சொற்பொழிவு — குடியரசு)

25. தவிர, இங்கு செய்யும் பிரசாரத்தை பார்ப்பனர்களுக்கும், அல்லாதவர்களுக்கும் போய்ச் செய்யட்டும் என்று அவர் சொல்லுகின்றனர். பார்ப்பனர்கள் நமது பிரசாரத்தினால் புத்தி திருந்தி விடுவார்கள் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். அவர்கள் தெரியாதவர்களாயிருந்தால் நியாயம் சொல்லலாம். நன்றாய்த் தெரிந்தே, எங்கு தங்கள் ஆதிக்கமும் சோம்பேறிப் பிழைப்பும் போய் விடுகின்றனவோ என்று சுயநலங்கருதி, குரங்குப் பிடிவாதமாய் இருப்பவர்களை நாம் எந்த பிரச்சாரத்தால் எப்படி மாற்றக்கூடும் ? பார்ப்பனரல்லாதவர்களோ– முக்கால்வாசிப்பேர் – பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்களாகவும், பாப்பானுக்குத் தாசிமகனாய் இருந்தாலும் சரி, பறையனுக்கு மேலே இருந்தால் போதும்– என்று முட்டாள்தனமாய் கருதிக்கொண்டு இருக்கிறவர்கள் என்றாலும், நம்மால் கூடியதைச் செய்துதான் வருகிறோம், எதற்கும் உங்கள் முயற்சியும், சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது.

(சென்னை நேப்பியர் பார்க்கில், 22-10-1929ல் சொற்பொழிவு ‘குடி அரசு ‘ — 27-10-1929)

26. தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமாய் என்னுடைய அபிப்ராயம் நீங்கள் தெரிந்ததேயாகும். தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு, மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. எப்படி என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்ச்சாதி மக்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்மைத் தன்மை அடைந்தவர்கள் என்றும்; அவர்கள் கடவுளாலேயே அந்தப்படி பிறப்புவிக்கப்பட்டவர்கள் என்றும்; அதற்கு மதங்களும், மத சாஸ்திரங்களுமே ஆதாரங்கள் என்றும்; கடவுள் செயலையோ, மதவிதிகளையோ யாரும் மாற்றக்கூடாதென்றும்; அவை மாற்றுதலுக்குக் கட்டுப்பட்டவையல்ல என்றும் சொல்லப்படக்கூடிய ஒரு பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது.

(சீர்காழியில், 10-7-1935ல் சொற்பொழிவு – ‘குடி அரசு ‘ 28-7-1935)


பெரியாரும், எதிர்க்கலாச்சாரமும்:-

அரசியல் கிளர்ச்சிகளை மக்கள் தயாராக உள்ள அளவு நடத்தவேண்டும் என்று கருதிய பெரியார், மக்கள் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை மிகக் கடுமையாகத் தாக்கியே பிரசாரம் செய்கிறார். ‘கடவுள் என்பது பித்தலாட்டம் ‘ ‘கடவுளை நம்புபவன் முட்டாள் ‘ ‘அன்பே சிவம், சிவமே வெங்காயம் ‘ என்றெல்லாம் தொடங்கி ஏராளமான விஷயங்களில் அன்று பிரபலமாகும் சிந்தனையோட்டத்திற்கு எதிராக நின்று குரல் கொடுத்தும், இந்திய மரபு, கலாசாரம் போன்றவற்றை காட்டுமிராண்டித்தனம், முட்டாள்தனம் என்று இழித்துரைத்தும், விநாயகர் சிலை உடைத்தும், இராமர் படம் எரித்தும் இயக்கம் நடத்திய அவரை மக்களுக்கு வால் பிடிப்பவர் என்றெல்லாம் சொல்வதற்குமுன் எச்சரிக்கையுணர்வுடன் சிந்திக்க வேண்டும். இதிலெல்லாம் ஒரு கவர்ச்சி உண்டாகும், பரபரப்பூட்டி புகழ் பெறலாம் என்றால் இது அரசியல் புகழ்பெற மிகக் கடினமான வழியென்பதையும், இல்லாவிட்டல் எல்லோருமே இதைச் செய்யலாமே என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். என்றுமே கலகபூர்வமாக பேசுபவர்களும், நடப்பவர்களும் தங்கள் சுய அகந்தையின் பொருட்டும். அதிகப் புகழ் பெறவுமே அவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்றே ஆதிக்கம் சார்ந்த சக்திகள் வர்ணித்துக் கொண்டு வந்துள்ளன. இன்றைய நிலையில் மீட்புவாதம், மத புனர் நிர்ணயிப்புவாதம், ஏகாதிபத்திய, முதலாளீய மனிதாபிமானவாதம், நுகர்பொருள் கலாசாரம், உயர் தொழில் நுட்ப ஆதிக்கம், நலசாதீயம், ஆணாதிக்கம், பழைய புதிய தீண்டாமை வடிவங்கள், ஆதிக்கப் போட்டியில் உருவாக்கப்படும் சொல்லாடல்கள் ஆகிய அனைத்தையும் சமாளிக்க எதிர் கலாச்சார நடவடிக்கைகள் எதிர்நோக்கியிருக்கவேண்டிய நிலையில் பெரியாரிடமிருந்த இதற்கான கூறுகளைக் கவனமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது. நிலை பெற்றிருந்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள் போன்றவற்றை அவர் கடுமையாக மறுத்துப்பேசியதை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். வெகுஜன சொல்லாடல் களத்தில் அவருடைய பல உச்சரிப்புகளுக்கு முன்னோடிகள் யாருமிருந்தார்களென்றும் தோன்றவில்லை. (தமிழைப் பொறுத்தவரையில்) சிலவற்றைப் பார்ப்போம்.

நிலவிய பேச்சு X பெரியார் கூற்று

மனிதப் பிறவி உயர்வானது X மனிதப் பிறவி மிருகங்களைவிட இழிவானது.

பகுத்தறிவு மனிதனின் உயர்குணம் X பகுத்தறிவு மனிதனின் பலவீனம் அல்லது இழிகுணம். (அதாவது மனிதனை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்தும் அறிவிப் பண்புகள் என்ற அர்த்தத்தில்.)

பாவ, புண்ணியங்களுண்டு X பாவ, புண்ணியங்களில்லை.

மனித வாழ்க்கை இலட்சியமுள்ளது X மனித வாழ்க்கை இலட்சியமற்றது.

ஆன்மா, மறுபிறவி உண்டு X ஆன்மா கிடையாத மனித உடல் பொருண்மைத் தன்மையுடையதே.

மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் தேவை X மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

அந்நியராட்சி இழிவு X அந்நியராட்சி இழிவில்லை. இந்திய பார்ப்பனக் கலாசாரமே இழிவு.

தொழிற்சங்கம் தொழிலாளர் (தொழிலாளர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற X தொழிற்சங்கம் பிரச்சினையை கூலிப் வழி வகுப்பது பிரச்சினையாக மாற்றக்கூடியது தொழிற்சங்கத் தலைமை துரோகத்தனமாவதற்கு வாய்ப்புகள்

அதிகம்.

கற்பு உயர் ஒழுக்கம் X கற்பு தேவைக்கேற்றபடி, சமூகங்களால் உருவாகிக் கொள்ளப்படுவது பெண்ணுக்கு கற்பை நிர்பந்திப்பது மோசடி.

பிள்ளை பெற்று வளர்ப்பது வாழ்வின் இன்றியமையாத பகுதி X பிள்ளை பெற்று வளர்ப்பது அவசியமில்லை

(பெண் விடுதலைக்கு எதிரானது)

இவை மேலோட்டமாகக் கொடுக்கப்படுபவை. பல விஷயங்களில் அவர் கூற்றுகள் இடத்திற்கிடம் முரண்பட்டிருக்கும் அவருடைய பேச்சுக்களை ஆழமாக வாசிப்பதின் மூலம் பொதுவாக அவரிடம் வெளிப்படும் எதிர்கலாசாரத் தொனியை வெளிக்கொணரலாம். அவ்வாறு செய்வது இக்கட்டுரையை மிகவும் நீண்டதாக்கிவிடும் என்பதுடன், அது வாசகர்களுடன் இணைத்து செய்யும் கூட்டுச் செயல்பாடாக மாறுவதே பொருத்தம்.

இக்கட்டுரையில் கூறப்பட்டதை விட அவருடைய மேற்கொள்கள் அதிகம் உணர்த்தமுடியும். ‘பூணூல் போடுவதை சட்டப்படி குற்றமானதாக்க வேண்டும் ‘ ‘நாற்றுநடும் பாப்பாத்தியை கண்டதுண்டா ‘ போன்றவற்றில் கலாச்சாரப் புரட்சிக்கான, அடித்தளத்தையும், ‘திருமணத்தை சட்ட விரோதமானதாக்க வேண்டும் ‘ என்பதில் தீவிர கலகக் குரலையும் அடையாளம் காணுவதாயிருந்தால். பெண்கள், தாழ்த்தப்பட்டோர் பற்றிய அவர் கருத்துக்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டியிருப்பதல்ல.


27. உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும், பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம், என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள் அதாவது குழந்தைகளை பயமுறுத்த பெரியவர்கள் ‘பூச்சாண்டி ‘ ‘பூச்சாண்டி ‘ என்பதுபோல இவை எளியோரையும் பாமர மக்களையு, வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்து ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.

எப்படி குழந்தைப் பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அது போலவே தான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்க முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது.

28. உண்மையிலேயே ஒழுக்க ஈனம் என்பது ஒன்று உண்டென்றும், அது திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய என்றும் சொல்வதனால் அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாய் குடிகொண்டிருக்கும் இடங்கள், அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசீயவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும்.

(மேற்கோள் 2728 பக்கம் 15 17, பகுத்தறிவு மலர். 3,இதழ் 9, ஜனவரி 1,1938)

29. மாறன்: இன்னொரு கேள்வி. இப்போ காலத்திலே ஒழுக்கம் குறைஞ்சு வருது, அப்படின்னு எல்லோரும் சொல்றாங்க. அரசாங்கத்தின் தண்டனைக்குப் பயமிருக்கணும்; அல்லது ஒருவிதமான ஆண்டவன் நம்பிக்கையிருந்து பயப்படணும். இந்த ரெண்டும் இல்லாமப் போயிட்டதே இப்போ. இந்த ஒழுக்கம் நல்லா இருக்கிறதுக்கு என்ன வழி ?

பெரியார்: மன்னிக்கணும், அய்யா. இதை ஒன்றும் கட்டுப்படுத்த முடியாது, இனிமேல் எந்தக்காரணம் சொல்லியும் மக்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஒரு மட்டம் தாராளமாக போயி, மறுபடியும் அவங்க ஏதாவது இதுக்கு என்ன பண்றதுன்னு திரும்பினா உண்டே தவிர, இப்ப ஒழுக்கமா, நாணயமா, நேர்மையா மனுசன் யாராவது சிந்திக்க இப்ப வாய்ப்பு இல்லை எல்லோருக்குந்தான். அரசியலில் ஒழுக்கமா இருக்க முடியலே. எவனாயிருந்தாலும் மதத்திற்குக் கூட, காட்டிக்க முடியுதே தவிர, தத்துவப்படி நடக்க எவனாலும் முடியலே. ஒழுக்கம் ‘னு இன்னொருத்தனுக்கு சொல்றமே தவிர, அந்த வாய்ப்புக் கிடைச்சா நாமும் அந்தத்தவறு பண்ணத் தயாராயிருக்கோம். அனுபவத்திலே சொல்றேன். நான் அப்படி இருக்கும்போது சும்மா ஒழுக்கம்னு சொல்லி இன்னொருத்தனை ஏமாத்தறதிலே என்ன இலாபம் சொல்லுங்க.

மாறன் : சமுதாய நலவாழ்வுக்கு.

பெரியார் : என்ன நல்வாழ்வு ? சமுதாயத்துக்கு என்ன நல்வாழ்வு வரும் ‘ ? நீங்க பணக்காரன் ‘ நான் ஏழை. இவங்களுக்கு நல்வாழ்வு எங்கே வரும் ? இதையெல்லாம் காப்பாத்துறதா இருந்தா அதைத்தான் ஒழுக்கம்னு நினைக்கிறோம். உங்ககிட்டே பணம் திருடக்கூடாது நான், நீங்க வியாபாரி, என்னை மோசம் பண்ணி பணம் சேர்த்துடலாம்னு நினைக்கிறீங்க. அப்ப எப்படி ஒழுக்கம் வரும் ?

(5-1-1970ல் திருச்சி வானொலி ஒலிபரப்பு)

30. ஒரு பூச்சியின் செய்கைக்கு பாவம், புண்ணியம் உண்டானால்தான் ஒரு மனிதனின் செய்கைக்குப் பாவம், புண்ணியம் உண்டாக்க முடியும். மனிதனுக்குள்ள பகுத்தறிவு என்பது கடவுளால் ஒரு தனிப்பட்ட காரியத்துக்காகக் கொடுக்கப்பட்டது என்றால், ஒரு யானைக்குள்ள தும்பிக்கை, ஒரு நாரைக்குள்ள நீண்ட மூக்கு, ஒரு முள்ளம்பன்றிக்குள்ள செதில் முட்கள், தேளுக்குள்ள கொடுக்கும் பாம்புக்குள்ள விஷம் போன்றவைகளெல்லாம் கடவுளால் தனிப்பட்ட காரியங்களுக்காகக் கொடுக்கப்பட்டவை என்றுதானே சொல்ல வேண்டும் ? ஆதலால், ஒரு யானைக்குத் தும்பிக்கை விசேஷ உறுப்பாகவும், நீண்ட அவயவமாகவும் இருப்பதுபோலவே, மனிதனுக்கு பகுத்தறிவுக்குள்ள நரம்புக்கூட்டும் மூளையின் பரிணாம அதாவது அதிக சிந்தனா சக்திக்குள்ள உறுப்புகள் என்பவை விசேஷ உறுப்பாகவோ விசேஷ சக்தியாகவோ இருக்கின்றதென்பதேயல்லாமல், அதற்குமாத்திரம் ஒரு தனி விசேஷத்துவம் இல்லையென்பதே எனது அபிப்ராயம்.

31. இதுபோன்ற எத்தனையோ ‘கெட்ட ‘ குணங்கள் மனித ஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடையதாயிருக்கிறது. ஆகையால் பகுத்தறிவின் ‘மேன்மையால் ‘ மனித ஜீவன் சிறந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும் என்பதே நமது கேள்வியாகும். மேலும் மேற்கண்ட காரணங்களாலும் மற்றும் பல காரணங்களாலும் மனித ஜீவன்களில் பெரும்பான்மையானவை, மற்ற ஜீவராசிகளை விட இழிவுத்தன்மை உடையவை என்பதும் நமது அபிப்பிராயம் ஆகும். சாதியின் பேரால் உயர்வு—தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத்தன்மை முதலான இழி குணங்கள் மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும் கடவுளின் பேரால் மேல் — கீழ் நிலை முதலாகிய அயோக்கிய தன்மைகள் மனித ஜீவனிடம் உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட—தீய — இழிவான, அயோக்கியதனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மற்ற ‘பகுத்தறிவில்லா ‘ ஜீவராசிகளை விட மனித ஜீவன் மூளை விசேஷம் முதலிய அவயவத்தை நன்மைக்காக பிரயோகித்துக்கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவ பிராணிகளைவிட உயர்ந்ததல்ல என்பதோடு —- பலவிதத்திலும் தாழ்ந்தது என்று சொல்ல வேண்டும்.

(30,31 ‘குடிஅரசு ‘ கட்டுரை — 3-9-1933)

32. தந்திரத்திலும் வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும், ஆட்சி செய்யும் அரசாங்கத்தை விட, துப்பாக்கியாலும் பீரங்கியாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது.

( பகுத்தறிவு—மலர்—4 இதழ் 3 – 1938 ஜ்ஊலை 1 இதழின் உள் அட்டையில் ஈ.வெ.ரா. மேற்கோள்)

33. நம் கடவுள் — சாதி காப்பாற்றும் கடவுள்

நம் மதம் — சாதி காப்பாற்றும் மதம்

நம் அரசாங்கம் — சாதி காப்பாற்றும் அரசாங்கம்

நம் இலக்கியம் — சாதி காப்பாற்றும் இலக்கியம்

நம் மொழி — சாதி காப்பாற்றும் மொழி

[நூல் : ‘சாதி ஒழிப்பு ‘ – 1961 – சென்னையில், 16-9-1961ல் சொற்பொழ்வு]

34. ஏனெனில், சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ இங்கும், அங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்துபோன பாகங்களைச், சுரண்டி, கூறுகுத்தி, மண்ணைக் குழைத்துச் சந்துபொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள்.

ஆனால், நம்மை பொறுத்தவரை, நாம் அம்மாதிரித் துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரனல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால் என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்படவேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடி அந்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நம்மால் இயன்றதை செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும், உடையவராய்க் காணப்படவேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.

இதனாலேயேதான், பலவற்றில் உலகமக்கள் உண்டு என்பதை இல்லையென்றும்; சரியென்பதைத் தப்பு என்றும்; தேவையென்பதைத் தேவையில்லையென்றும்; கெட்டது என்பதை நல்லது என்றும்; நல்லது என்பதை கெட்டது என்றும்; காப்பாற்றப்படவேண்டும் என்பதை ஒழிக்க வேண்டும் என்றும்; மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கூறுவோராக, செய்வோராகக் காணப்படவேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆனால் நம் போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்லப்பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும் பழிக்கப்படாமல்– குற்றம்சொல்லப்படாமல் இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்.

35 என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப்பிறவியானது ஒரு இலட்சியமற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான், பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பலவகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான். ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப்போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும் வரை இடையில் நடைபெறுபவைகள் எல்லாம் அவனின் சுற்றுசார்பு, பழக்க வழக்கம் இவைகளைப்பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சிய மற்ற வாழ்வு என்பது என் கருத்து. இதை அநேக அறிஞர்களும் ஒப்புக்கொண்டிருப்பதை பார்க்கிறேன். மேலும், இக்கருத்து யாராலும் மறுக்கமுடியாததாகும்.

பிறப்பும், இறப்பும் இயற்கையே. மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூற முடியுமா ? பிறந்து எதற்காக வாழ்கிறான், எதற்காக இறந்து போகிறான்– என்று யார் கூற முடியும் ? இதைக்கேட்டால் ‘அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் ‘ என்றுதான் கூறமுடியுமேதவிர, வேறு சரியான காரணம் கூற முடியுமா ? அவன் எந்த குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது பிள்ளைவேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால் — எதற்காக பிள்ளைவேண்டும் என்பதை கூற முடியுமா ? அவன் எந்த குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது தனக்கு பிள்ளை வேண்டுமென்று முயற்சிக்கிறான் என்று அவனைக் கேட்டால் கூட தெரியாது.

(திருச்சி, பெரியார் ஆசிரியப் பயிற்சி பள்ளியில், 17-3-1956ல் சொற்பொழிவு– ‘விடுதலை ‘ 21-3-1956 )

36. பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்குரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தாங்கள் ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறிகளாய்க் கருதிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக்கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள் ஆண்கள் இல்லாமலேயே வாழ முடியும் என்பதை ருசுப்படுத்திக்கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்த தொந்திரவு இல்லாததால், தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழமுடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளைபெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால்–அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகிவிடுகின்றது. எனவே, உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை எனும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்.

இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும்—நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனம் என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் —இந்த மார்க்கத்தைத் தவிர—வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதியுடையதாக இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்றும் சொல்லலாம்.

உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப் பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது—மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே, அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்ற போது, இந்த விஷயத்தில் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர, ‘பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது ‘ என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் ? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும் ? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் ? என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரை பெருகி வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.

( ‘குடிஅரசு ‘ தலையங்கம் 12-8-1928)


இறுதியில் சில வார்த்தைகள் :

1. இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் 27,28 & 32 தவிர அனைத்தும் திரு.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக்கொண்டு ‘சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி, வெளியிட்ட ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் ‘ என்ற நூலின் மூன்று தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவையே. அதுமட்டுமின்றி அவை கூற்றிடத்திலிருந்து (Context) பிய்த்தெடுக்கப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கப்படவேண்டும். முன்னமே சொன்னபடி எதையும் வழிந்து நிரூபிப்பது இதன் நோக்கமன்று. ஆர்வமுள்ள தோழர்கள் அத்தொகுப்புகளை ஆழமாகப் படிக்க வேண்டும். மேற்கோள்கள் இருக்கும் பக்க எண்களும் தரப்படவில்லை, முழுத் தொகுப்பையுமே படிப்பதுதான் பொருத்தம்.

2. இக்கட்டுரையின் முன்அநுமானங்களை ஏற்றுக்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் தமிழகத்தில் அறிவார்த்தமாகவும், சமூக ரீதியாகவும் செயல்படுபவர்கள் பெரியாருக்கு உரிய கவனத்தை அளிக்காமலிருந்தால் அது குருட்டுத்தனமென்பதையும், மாற்றத்துக்காக செயல் படுபவர்கள் பொதுக் கருத்தியலில் அவர் ஏற்படுத்திய உடைப்பை பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பது கைகளை வெட்டிக்கொண்டு வேலைசெய்வதென்பதையும் துணிச்சலாகக் கூறலாம் என்றே தோன்றுகிறது.


Series Navigation

ராஜன் குறை

ராஜன் குறை

பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 3

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

ராஜன் குறை


14. ஆங்கிலத்தில் ‘கேஸ்ட் ‘ ‘கிளாஸ் ‘ (caste/class) என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது தமிழில் ‘சாதி–வகுப்பு ‘ என்று சொல்லப்படுவனவாகும். சாதி–பிறப்பினால் உள்ளது; வகுப்பு—தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம், சாதி நிலை, அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது. மேல் நாட்டில் சாதி இல்லாததால், அங்கு பொதுவுடமைக்கு முதலில் வகுப்புச் சண்டை துவக்க வேண்டியதாயிற்று. இங்கு சாதி இருப்பதால் பொதுவுடமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்.

பார்ப்பானும், பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடமை வேஷம் போடுவதால், சாதிச் சங்கதியை மூடிவிட்டு, ஆகாத காரியமான–ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாத வகுப்பு (class) உணர்ச்சியைப் பற்றி பேசி — சாதியை ஒழிக்கப் பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்; சாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப்பார்க்கிறார்கள். பார்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிகாரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாகவேண்டும். இதிலேயே அரைப்பாகம் பொதுவுடைமை ஏற்பட்டுவிடும். அதாவது, சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும், சாதியினால் சுரண்டப்படுபவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.

பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பால பாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

( ‘குடி அரசு ‘ — தலையங்கம் — 25-3-1944)

15. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறத் என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திராவிடர் கழகத்திற்கு கவலையில்லை என்று சொல்லமுடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகிறது. பணக்காரத்தன்மைக்கு பார்ப்பனீயமும், மேல்சாதி–கீழ்சாதி தன்மையும், கடவுள்தன்மையும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக் கொண்டே இருப்பார்கள். சாக்கடையும், கொசுக்களையும் ஒழித்தால் தான் அழுக்கு தண்ணீரையும் மலேரியாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால் தான், திராவிடர் கழகம் ‘பணக்காரத்தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை ‘ என்று கருதி, இதைச் செய்கின்றது.

பணக்காரத்தன்மைக்கு எளிதில் எதிர்ப்பு கிடைக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்பு கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால் முதலில் சுலபமானதைச் செய்துக் கொண்டு பிறகு கஷ்டமானதை செய்துகொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

ஆகையால், நாம் இந்த கம்யூனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம், அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் சென்று நிற்கும்.

(சொற்பொழிவு— ‘விடுதலை ‘ 4-10-1951)

16. பொதுவாக, சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினை பலப்படுத்தி, சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த எந்திரத்தை கொண்டு வந்து அதோடு இணைத்து தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தக்கதும் ஆகும். என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன். போராடத் தோன்றியதாக தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம். ஒரு இயந்திரத்தை கழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம் போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி, பின்னால் அது உலகத்தையே ஒன்று படுத்த–உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மை சக்தியும் பெருமையும் வெளியாகும்.

( ‘குடி அரசு ‘ — தலையங்கம்– 17-2-1929)

17. நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம் ) சமூகத்துறையிலுள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரியின் முதல் அனேக செலவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமென்று கருதியதால் பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம். என்றாலும் அரசாங்கத்தார் தப்பபிப்ராயத்தைக் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறைப் பிரயோகம் ஆரம்பித்து விட்டார்கள் என்று உணர்கிறேன். இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்து கொண்டேன். ஆனால், ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின்மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும், சாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு சாதி, மதக்காரர்கள் மனம் புண்படும் படியோ, அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் சாதி மதக் கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்னும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்திரவும் மனக் கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும், முயற்சிகளும், நிலைமைகளும் இருந்ததால், நான் இந்தச் சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்.

சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம். என்றாலும், நம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ, திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை. ஆதலால், யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய் விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.

( ‘குடி அரசு ‘ — அறிக்கை– 31-3-1935)

———————————————————————————————-

2. தேசிய இன விடுதலை என்பதில் உறுதியான நிலையெடுக்கத் தவறிவிட்டவர்;

தேசிய இனத்தைத் தமிழ்மொழி என்ற மொழியடைப்படையில் தீர்மானிப்பதா ? அல்லது திராவிட இன அடிப்படையில் தீர்மானிப்பதா ? ‘தமிழ்நாடு தமிழர்க்கே ‘ என்பதும் ‘திராவிட நாடு—-திராவிடர்க்கே ‘ என்ற கோஷமு மாறி மாறியே தொடக்கத்தில் ஒலிக்கின்றன, பின்னர் பெரியார் இன அடிப்படையில் கேட்பதே சரியானது உறுதி எனசெய்து விடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம்–மொழியடிப்படையில் ‘பார்ப்பான் நானும் தமிழ்தான் பேசுகிறேன் என்று வந்துவிடுவானே, என்பதுதான். பிற மூன்று மாநிலங்களில் யாரும் கோரவில்லையே என்று கேட்டதற்கு அவர்களுக்காகவும் நான்தான் பேசவேண்டும் என்று கூறிவிடுகிறார். பின்னர் மொழிவாரி மாநிலங்கள் 1956யில் பிரிந்தவுடன்— இனி திராவிட நாடு தமிழ்நாடுதான் எனத் தெளிவுபடுத்திவிடுகிறார். இதைக்காட்டிலும் மத அடிப்படையில் நாடு கோருவது ஜின்னாவுக்கு எளிதாகஇருந்தது. இருவருமே பிரிவினைக்கோரிக்கையை வைத்தது 1940யில் என்றாலும், ஜின்னாவைப்போல் உள்நாட்டு போர் நடத்தியாவது தனி நாடு பெரும் தீவிரமும், அதற்கான ஆதரவும் பெரியாருக்கில்லை. அது தவிர பெரியார் பாணியில் தொடர்ந்து பிரசாரம் செய்து, மக்களாதரவை உண்டாக்கி அதன் பின் வன்முறை இன்றி நாடு பிரிவினையைப் பெறுவதற்கு நீண்டகால அவகாசம் வேண்டும். காங்கிரஸ் பிரசாரம், காந்தியின் வெகுஜன செல்வாக்கு மிக்க ‘மகாத்மா பிம்பம் ‘ ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரியார் அன்றிலிருந்து இறுதிவரை ‘தனித் தமிழ்நாடு ‘ கோரிக்கையை எழுப்பிக் கொண்டுதானிருந்தார். இவை அனைத்தையும் விட இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் தனி நாடு கேட்பதற்கு அவர் காட்டிய ஒரே காரணம் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புதான். வடநாட்டுடன் இணைந்துள்ள வரையில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது என்பதையே அவர் ஒவ்வொரு சொற்பொழிவிலும் வழியுறுத்துகிறார். இந்தித் திணிப்பும்—எதிர்ப்பும் அவரது கோரிக்கைக்கு வலிவு ஏற்படுத்தினாலும், தேசிய இனப் போராட்டத்தை உருவாக்க இந்தச் சொல்லாடல் போதுமா என்பது சந்தேகமே. பெரியார் சுயமரியாதை இயக்க காலத்தில் தேசம், தேசியம், தேசாபிமானம் போன்றவைகளைக் கற்பிதங்களாக வர்ணித்திருக்கிறார். தேசியம் பேசுவதில் அவருக்கொரு உள்ளார்ந்த சிக்கல் இருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது எனவே அவரது பார்ப்பன எதிர்ப்பே தனிநாடு கோரிக்கையாக உருப்பெற்றது என்பதை மேற்கண்ட விவரங்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

———————————————————————————————————–

Series Navigation

ராஜன் குறை

ராஜன் குறை

பெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள் -2

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

ராஜன்குறை


(நிறப்பிரிகை 1993 ஏப்ரல்)

2. பார்ப்பன, புராண எதிர்ப்பு :

பார்ப்பன எதிர்ப்பையே அவர் சாதி எதிர்ப்பின் முதற்கட்டமாக வைத்தார் என்பது சரிதான். ஆனால் அவர் சாதி எதிர்ப்பை பார்ப்பன எதிர்ப்பாக குறுக்கினார் என்று சொல்வது மிகத் தவறான கணிப்பாகும். அவர் பேச்சுக்களைப் படிப்பவர்கள் ‘பறையன் என்பது இருக்கலாமா ? தீண்டத்தகாதவன் என்பது இருக்கலாமா, என்ற கேள்விகளை அவர் ஓயாமல் ஒலித்திருப்பதை சுலபமாகக் காண முடியும். அவர் செட்டியார், முதலியார், வேளாள சாதிகளைப் பெயர் சொல்லித் தாக்கவில்லையே என்பது அவரது செயல் தந்திரத்தை (Tatics) புரிந்துகொள்ளாத கேள்வியாகும். பெரியார் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தை 100-3-97 காலமென அழைக்கலாம். நூற்றுக்கு மூன்று பேரான பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97பேரை கருத்தியல் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி கல்வித்தகுதிகளையும், அனைத்துப் பதவிகளையும், அரசியலதிகாரத்தையும் ஆக்ரமித்தகாலம். அக்காலத்தைப் பேசும் எவரும் 100-3-97 யிலிருந்து தொடங்குவதைப் பார்க்க முடிகிறது. இதன் மற்றொரு புறரீதியான அடையாளம் இரயில் நிலைய உணவு விடுதிகளில் பார்ப்பனருக்கான இடம், மற்றவருக்கான இடம் எனப் பிரிந்திருந்தது பார்ப்பனரை எதிர்க்க வசதி படைத்த பிற மேல் சாதியினர் திரண்டிருந்தனர். நீதிக்கட்சி இருந்தது. பார்ப்பன மதத்தை எதிர்க்க சைவமதம் இருந்தது. ‘இந்துமத ஆபாசதர்சினி ‘ இருந்தது. ‘திராவிடன் ‘ என்று சொல் இருந்தது. சுயமரியாதை சங்கம் கூட இருந்தது. இந்த நிலையில் சாதி ஒழிப்பை செயல்படுத்த நினைத்த பெரியார் யாருடன் கூட்டுச் சேர்ந்து எந்த சொல்லாடலை பயன்படுத்திச் செயல்படுவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதை பாரபட்சமின்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவரது போர் முறையோ கடுமையான, மிகப் பரவலான நேரடிப் பிரசாரம் என்பதாகும். தக்க ஆதரவின்றி இது ஒரு நாளும் செய்ய முடியாதது. ‘பார்ப்பன மதம் ஒழிந்தால் சைவ மதம் மட்டும் இருக்க முடியுமா ? ‘ என்றும் ‘1000 முத்தையாச் செட்டியார்களுக்கு ஒரு சங்கராச்சாரி சமம் ‘ என்றும் சொல்வதிலிருந்து பார்ப்பனரின் கருத்தியல் மற்றும் குறியீட்டு முக்கியத்துவத்தை அவர் தெளிவாக உணர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. சாதீய ஏற்றத் தாழ்வுகளையும், தீண்டாமையையும், சாதீயத்தையும் முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும், முழுமையான சமத்துவம் நிலவவேண்டும் என்றும் கடும் பிரசாரம் மேற்கொண்ட அவரை ‘சாதி எதிர்ப்பை, பார்ப்பன எதிர்ப்பாகக் குறுக்கியவர் ‘ என்பது வரலாற்றுக்குச் செய்யும் துரோகமாகும்.

புராண, கடவுளர் எதிர்ப்பு:

புராணங்களை அவர் அணுகிய விதம் மலினமானது என்றும் அவற்றை இலக்கியங்களாகவும், மானுடவியல் பிரதிகளாகவும் பார்க்கவில்லை என்றெல்லாம் கூறப்படுகிறது. அன்று சமூகத்தில் செயல்படும் பிரதிகளாயிருந்த கதாகால்ட்சேபம், தெருக்கூத்து வில்லுப்பாட்டு, நாடகம், சினிமா என்று அனைத்திலும் ஆக்ரமித்திருந்த புராணங்களைக் கவிழ்த்துப் போட்டு கேலி செய்த அவருடைய செயல் முற்றிலும் கலகபூர்வமானது மட்டுமின்றி, பிரசார ரீதியாக மிகச் சிறந்த யுக்தியுமாகும். அவரது செயல் கரடு முரடானது என்றால், பக்குவமற்ற–கரடுமுரடான மதத்தை, பக்குவமற்ற கரடுமுரடான சமுதாயத்தில் எப்படி எதிர்கொள்வது ? இன்றுவரை தமிழில் பல அறிவு ஜீவிகளுக்குப் பெரியாரைக் கண்டால் இதனால் தான் அருவெறுப்பாக இருக்கிறது. இவர்களால் Cruditலை சகித்துக் கொள்ளவே முடியாது. ரொம்பவும் Sophisticated ஆனவர்கள். ஆனால் தீண்டாமையை சகித்துக்கொள்ள முடியும். உண்மையில் புராணங்களை நவீனப் படுத்தி, சமக்காலத்துக்கு ஏற்ற வகையில் தயார் படுத்தி வந்த முயற்சியை எதிர்த்து அவற்றின் மூல வடிவங்களின் (Rawness ஐ) கச்சாத் தன்மையை மீட்டவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். சாதீயமான ஜனநாயகமற்ற இறந்த காலத்திலிருந்து துண்டித்துக் கொள்வதற்கு இறந்த காலத்தின் அடையாளங்களாக, தொடர்ச்சிகளாக உள்ளவற்றை சகட்டுமேனிக்கும், வசதிப்பட்ட படியும் தாக்குவதென்பது மரபுகுறித்த விசாரணையை சமூகப்பரப்பில் தூண்ட முடியும் என்பதை பாரபட்சமின்றி சிந்திப்பவர்கள் புரிந்துக் கொள்வார்கள். அதே சமயம் பார்ப்பன ஒழுக்கவியல் கோட்பாடுகளுக்கும், பார்ப்பன புராணிகங்களுக்கும் உள்ள முரண்களில் அக்கோட்பாடுகளை முன்வைத்து புராணிகங்களை கேலி செய்து நிராகரிப்பதன் தேவை குறியீடுகள், புனைவுகள், மதிப்பீடுகள் இவற்றிற்கு இடையேயான சிக்கலான இணைப்பில் உருவாகிறது.


10. கொஞ்ச காலமாக சைவ சமயத்தின் பேரால் சிலர் போடும் கூச்சல் அளவுக்குமேல் போகின்றது.

சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாகவேண்டும் என்று அவர்கள் கட்சி சேர்க்கிறார்களாம். அரசியல் பிழைப்புக்காரர்கள் சிலர் அப்படித்தான்–அதாவது ‘சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும்; அதை ஒழிக்காவிட்டால் சுயராஜ்யம் தடைப்பட்டுப் போகும் ‘ என்று கூச்சல் போட்டார்கள்; கூலிகொடுத்தும் கூச்சல் போடச் சொன்னார்கள். அவ்வளவு கூச்சலையும் அடக்கிக் கொண்டு இப்போதும் நமது இயக்கம் தலை நிமிர்ந்து நிற்கின்றதையும் அரசியல்காரர்களில் பெரும்பாலோரும் இதை ஆதரிப்பதையும் பார்த்து ஒருவாறு அடங்கி விட்டார்கள். இப்போது சைவ சமயத்தார்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலர் கிளம்பி சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இந்தச் சைவ சமயத்தார்கள் என்பவர்கள்-சுயமரியாதை இயக்கம் பார்ப்பனீயத்தையும், பார்ப்பனர்களையும் கண்டிக்கும் பொழுதும் வைணவ சமயத்தையும் வைணவர்களையும் கண்டிக்கும் பொழுதும் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டு, நம்மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் புகழ் புராணமும், கவியும் பாடிக் கொண்டிருந்தார்கள்.

அதாவது, பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்து சங்கராச்சாரியாரைத் தாக்கி வரும்போது நமக்கு உதவியும் செய்தார்கள். பிறகு வைணவப் புராணங்களின் வண்டவாளங்களை வெளியாக்கும் போதும் நமக்கு உதவி செய்து வந்தார்கள். இது மாத்திரமல்லாமல், இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும், இந்துமதம் என்று சொல்லப்படுவது பார்ப்பன ஆதிக்கக் கொள்கைகள் கொண்டது என்றும் சொல்லும்பொழுது அதை ஆதரித்து அதற்கு வேண்டிய ஆதாரங்கள் உதவி வந்தார்கள்.

கடைசியாக, சைவ மதப் புராணங்கள் என்பவைகளின் முறையில் அவற்றின் யோக்கியதைகளை வெளியாக்க நேரிட்ட போது மாத்திரம், ‘சுயமரியாதை இயக்கம் சமயங்களுக்கு ஆபத்து விளைவிக்கின்றது, மோட்சத்திற்கு தடையாய் நிற்கிறது ‘ என்று சொல்ல வந்துவிட்டார்கள். எனவே, சைவ மதம் என்றால் என்ன ? அது பார்ப்பன மதம் அல்லாது வேறு தனி மதம் என்றோ, அல்லது தமிழ் மக்கள் மதம் என்றோ யாராவது சொல்ல முடியுமா என்பதை முதலில் கவனிக்க விரும்புகின்றோம்.

( ‘குடி அரசு ‘ – தலையங்கம் — 7-10-1928)

11. சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எதுஎது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இது நம் நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலுமே இவ்வாறே அமைக்கப்பட்டிருக்கின்றது.

முதலாவது கடவுள், மதம், விதி, சாதி, பணம், தொழில் முதலியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் — நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்துக்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேச முடியாது. ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும்; அதோடு மாத்திரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டுள்ளவைகளாகும்.

மேற்கண்டவை சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச சன்மார்க்கம் என்று சொல்வேன். இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம்பக்கச் சாமியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாகவும் இருக்கும். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார்– அடைந்த சமூகத்தார் அடைந்த தனிமனிதர்கள் யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள்; இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியடைந்துவிட்டார்கள்.

(பெருந்துறை சமீபம் கிரே நகரில், 26-01-1931-ல் சொற்பொழிவு- ‘குடி அரசு ‘ 19-2-1931)


பெரியாரின் அரசியல் இயக்கம் — தகவல்கள்:

இக்கட்டுரையை படிப்பவர்கள் பெரியாரின் அரசியல் வாழ்க்கை குறித்த தகவல்களை நினைவு படுத்திக் கொள்ளவும், இளைஞர்கள் அறிந்துக் கொள்ளவும், தெளிவு படுத்திக் கொள்ளவும் இப்பகுதி. மேலோட்டமானதாகவும், துல்லியமின்றியும் அமையும் இப்பகுதி, அடுத்து வரும் விவாதப் பகுதியினைப் படிக்க உதவும்பொருட்டுதான்.


17-9-1879 : ஈரோட்டில் பிறந்தார்.

1919 — 1925 : காங்கிரஸ் கட்சியில் பணி புரிந்தார். கள்ளுக்கடை மறியல், ஒத்துழையாமை இயக்கம், கதர் பிரசாரம், நிர்மாணத்திட்டம் முதலியவற்றில் தீவிர பங்கேற்பு. வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர தொடர்ந்து முயற்சி. 1924 — வைக்கம் போராட்டம். 1925ல் வகுப்புரிமைத் தீர்மானத்தை ஏற்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேற்றம்.

(25-11-1925)

1926–1930 : சுயமரியாதை இயக்கம் உருவாக்கம். குடி அரசு, திராவிடன், REVOLT பத்திரிக்கைகள் வாயிலாகவும், நேரடியாகவும், பரவலான கடும் பிரச்சாரம், சாதி ஒழிப்பே உடனடி இலட்சியமெனத் தெளிவு.

1931-1937: சமதர்மப் பிரச்சாரம். பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்ப்பு 1932 ஆம் ஆண்டு 11 மாதங்கள் உலகச் சுற்றுப்பயணம் (13-2-32 முதல் (19-5-32 ) வரை மூன்று மாதங்கள் ரஷ்யாவில் ) 1933-34 தீவிர சமதர்மப் பிரச்சாரம். 30-12-33 யில் கைது செய்யப்பட்டார். 34யில் அரசின் ஒடுக்குமுறை அதிகரிக்க சமதர்மப் பிரச்சாரம் தீவிரம் குறைக்கப்படுகிறது ‘1936யில் ஜீவா முதலானோர் இதைக் கண்டித்து வெளியேறுகிறார்கள். 1935 முதல் நீதிக் கட்சியைக் அதிகம் ஆதரிக்கத் தொடங்குகிறார். 1937 தேர்தலில் நீதிக் கட்சி படுதோல்வி அடைகிறது.

1938-1954 : 1938யில் இராஜாஜி தலைமையில் நடந்த காங்கிரசு அரசு இந்தியைக் கட்டாயப் பாடமாக்க அதை எதிர்த்து பெரியதொரு கிளர்ச்சியினை நடத்துகிறார். கிளர்ச்சியினிறுதியில் தனி நாடு கோரிக்கையுமெழுகிறது. இரண்டாண்டு சிறை தண்டனை பெறுகிறார். (டிசம்பர் ’39 விடுதலை) நீதிக் கட்சியின் தலைவராகிறார், தொடர்ந்து திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்துகிறார் 1944யில் நீதிக் கட்சி திராவிட கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது. அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட விதத்தைக் கண்டிக்கிறார். 1947–சுதந்திர தினத்தைக் துக்க நாளாக அனுசரிக்கும்படி கோருகிறார். இதில் அண்ணா கருத்து மாறுபாடு கொள்கிறார். 1949யில் தி.மு.க பிரிகிறது. பெரியார்– மணியம்மை திருமணத்தைத் தொடர்ந்து (17-9-49) 1950யில் வகுப்புரிமையை வலியுறுத்தி இயக்கம். 1952-காங்கிரசு சிறுபான்மை மந்திரி சபை அமைத்தது. மீண்டும் இராஜாஜி முதல்வர். அவர் அறிமுகப்படுத்திய குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து கடுமையான கிளர்ச்சி நடத்துகிறார்– 1954யில் இராஜாஜி பதவி விலகுகிறார்.

1954-1967 : 1954ல் காமராசர் முதல்வராகிறார். பெரியார் காமராசருக்கும், காங்கிரசுக்கும் ஆதரவு தருகிறார். 1956– மொழிவாரி மாநிலம் உருவாக்கம் தமிழ்நாடே திராவிட நாடு என்கிறார். 1957– அரசியல் நிர்ணய சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடத்தி சிறை செல்கிறார். 1960 — ‘தமிழ்நாடு தமிழருக்கே ‘ — அறிவிப்பு. இந்திய தேசப்படம் எரிக்கும் கிளர்ச்சி நடத்தி கைதாகிறார். இடையே 56யில் இராமர் பட எரிப்பை நிகழ்த்துகிறார். 66யில் இராமாயண எரிப்பு. 1967யில் காங்கிரஸ் தோல்வி. தி.மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுகிறது.

1968 – 1973 : தி.மு.க ஆதரவு — கர்பக்கிரகக் கிளர்ச்சி — அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் கோரிக்கை.

24-12-73 : வேலூரில் C.M.C. மருத்துவமனையில் மரணமடைகிறார்.


அவருடைய அரசியல் வாழ்க்கையில் அரசுப் பதவியேற்பது அவருக்குப் பிடிக்காத செயலாகவேயிருந்திருக்கிறது. இத்துணைக்கும் மக்கள் போராட முழுவதும் தயாராகாதபோது, அரசுச் சட்டங்களால் மாற்றங்களைக் கொண்டுவருவது எளிது என்று நம்புகின்றவர். ஆனால் அரசியலதிகாரத்தைத் தான் கைப்பற்றுவதை விரும்பாமல், எப்படியாவது ஏதோவொரு அரசாங்கத்தை மிரட்டி சட்டங்களைப் போட வைக்கலாம் என்றே கருதுகிறார். அதே சமயம் தலைமறைவு இயக்கம் வன்முறை போன்றவற்றையும் அவர் வெறுப்பவராகவே இருக்கிறார். தொடர்ந்த பிரசாரம் என்பதே அவர் தேர்ந்தெடுத்த அரசியல் பணி.


12. நான் அடிக்கடி கொள்கையில் மாற்றமடைபவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள் ? ஒரு மனிதன், அவன் பிறந்தது முதல் இன்று வரை திருடிக்க்கொண்டே இருக்கிற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா ? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் ‘ என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள் ? அதனால் உங்களுக்கு என்ன இலாபம் ? மாறுதல் முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா ? அதனால் மக்களுக்கு நன்மையா ? தீமையா ? என்பன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியதுதான் அறிவாளிகளின் கடமையாகும்.

மற்றும், பொது நன்மையை உத்தேசித்து– கஷ்டப்படுகிற மக்கள் நன்மையை உத்தேசித்து மாறினானா ? அல்லது சுயநலத்திற்கு — அக்கிரமமான இலாபமடைவதற்கு மாறினானா ? என்று பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர் மாறவேண்டியது அவசியமாகலாம். அதைப் பற்றிய கவலைஏன் ? யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்கு புத்தியும் கண்ணும் சரியாய் இருந்தால், மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது.

நான் பலதடவை மாறியிருக்கலாம்; பல குட்டிக்கரணங்கள் போட்டிருக்கலாம்; சுயநலத்திற்காகவும் போட்டிருக்கலாம்; பச்சோந்தியாகவும் இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன கெடுதி ? நாடகக் கொட்டகையில் நாடகம் பார்க்கின்ற போது ஒரு மனிதன் எத்தனை வேடம் மாறி மாறிப் போட்டு நடிப்பதை நீங்கள் காசு கொடுத்துப் பார்த்துவிட்டு, நடித்தவனையும் புகழ்ந்துக்கொண்டு போகின்றீர்களா, இல்லையா ?

கோயில் கட்டிய மக்கள், கோயிலை இடிக்க வேண்டியவர்களாகி விடுவார்கள். அகிம்சை பேசுபவர்கள் பலாத்காரத்தைப் பேச வேண்டியவர்களாகி விடுவார்கள். இராஜ விசுவாசிகள் இராஜத் துரோகிகள் ஆகிவிடுவார்கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளையடிக்கச் சொல்வார்கள். இப்படியாக, அபிப்பிராயங்கள் மாறிக்கொண்டு போகலாம். இவற்றையெல்லாம், அபிப்ராயங்கள் மாறியதாலேயே குற்றம் என்று சொல்லிவிட முடியாது. தங்களை ‘நல்ல சூத்திரர்கள் ‘ என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர் கால்களைக் கழுவிய தண்ணீருக்கு பவுன் கொடுத்துச் சாப்பிட்டவர்கள் இன்று ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி, என்றும் ‘பார்ப்பனர்கள் ஜாக்கிரதை ‘ என்றும் ஏன் சொல்லுகிறார்கள் ? இந்த மாற்றத்தால் இப்படிச் சொன்னவர்கள் அயோக்கியர்கள் ஆக முடியுமா ? தவிர, ‘சூத்திரன் பணம் வைத்திருந்தால், பிராமணர்கள் பலாத்காரத்தால் அதைப் பறித்துக் கொள்ளலாம், என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி இப்போது வெள்ளையர் தர்மத்தில் ‘தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் மாத்திரந்தான் பறித்துக் கொள்ளலாம் ‘ என்கிறதான மாறுதல் ஏற்பட்டுவிட்டது நாளை ஒரு சமயம் சமதர்ம காலத்தில், ‘பிராணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம் ‘ என்று ஏற்பட்டாலும், ஏற்படலாம். இம்மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போற்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே, நான் மாறுதல் அடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.

(நாகயில், 3-10-1931-ல் சொற்பொழிவு– ‘குடி அரசு ‘ … 11-10-1931)

13. ஆம்; பரிகாசம் செய்வார்கள்; நமக்கும் அது கொஞ்சம் மானக்கேடாகத்தான் தோன்றும். உண்மையாகவே அது மானக்கேடாகவும் இருக்கலாம். அந்த மானக்கேடு நடத்தை நானோ, நீங்களோ நமது தனிப்பட்ட சுயநலத்துக்காக அல்ல; சமூதாயப் பொதுநலத்துக்காகவே அடைகிறோம். நாம் நமது சமூதாய நலத்துக்காக உயிரைத் தியாகம் செய்வது என்பது எப்படியோ, அப்படித்தான் உயிரிலும் சிறந்தது என்று சொல்லும்படியான மானத்தைத் தியாகம் செய்வது ஆகும்.

( ‘விடுதலை ‘ -அறிக்கை -20-11-1966)


பெரியார்-அரசியல் இயக்கத்தின் மீதான் விமர்சனங்கள் :

1. பொது உடைமை இயக்கப் பாதயை அரசுக்குப் பயந்து கைவிட்டவர் :

சுயமரியாதை இயக்கத்திற்கும்- சமதர்மத்திற்கும் நிகழ்ந்த ‘மணமுறிவு ‘ ஏற்படுத்திய கசப்பு இன்றுவரை நீங்காததை கவனிக்க முடிகிறது. பெரியாரின் சிந்தனைகளை ஊன்றிப் பார்த்தால் இதில் பிரச்சினை எதுவுமில்லையென்பது எளிதில் விளங்கும். பெரியார் ஒரு ஜனநாயகப் புரட்சியாளர். இந்திய சமூகங்கள் போன்றவற்றில் ஜனநாயகப் புரட்சி நடைபெறுமுன்பே, சமதர்மப் புரட்சியும் பொதுவுடமையும் சாத்தியம் என நினைப்பதோ, அல்லது முதலில் எவ்வகையான இயக்கத்தை உருவாக்க வேண்டுமென்பதில் குழம்புவதோ அரசியல் தெளிவின்மையாகும். பாராளுமன்ற ஜனநாயகம் வந்ததை உண்மையான ஜனநாயகம் என்றோ ஜனநாயகப் புரட்சி என்றோ சொல்ல முடியாது என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்படுவதே. அப்படியென்றால் உண்மையான ஜனநாயகப் புரட்சி என்றால் என்ன ? என்று மார்க்சீய—லெனினீய பரிசோதனைக் கூடங்களில் இன்றும் தீவிரமான ஆய்வுகள் நடக்கின்றன. டாக்டர் அம்பேத்கரும், பெரியாரும் தெளிவாக அசலான ஜனநாயகப் புரட்சி களங்களில் நின்றவர்கள். பல்வேறு பாதைகளில் இன்று பலரும் அவர்களிடம் வந்து சேர்வதை பார்க்க முடிகிறது. வராமலே போவதற்கு, காலதாமதமாக வந்து சேர்வது நல்லதுதான். அடையாளப் பிரச்சனைகளை விட்டுவிட்டால்.

பெரியார் சமதர்மப் பிரசாரத்தை மட்டுப்படுத்திக் கொள்வதையும், அதற்கான காரணங்களையும் பகிரங்கமாக அறிவிக்கிறார். அரசின் நிர்பந்தத்தின் பேரில்தான் இதைச் செய்வதைச் சொல்கிறார். எந்தவித தயக்கமும், ஒளிவு மறைவுமின்றி அப்படி அறிவிக்க முடிந்தத்தற்குக் காரணம் அவருக்கிருந்த தெளிவு தான். வகுப்புரிமையை ஏற்காத காங்கிரஸ்தான் பிரதான எதிரி கடும் பிரச்சாரத்தின் மூலமாகவே அதை எதிர்க்க முடியும். அரசை பகைத்துக் கொண்டால் அது சாத்தியமில்லை. பெரியார் அரசியல் வாழ்வின் தொடக்கமுதலே அவரது உடனடி குறிக்கோள்கள் வகுப்புவாரி உரிமைகள்— இட ஒதுக்கீடு போன்றவைதான். இடையில் பொதுவுடைமைச் சிந்தனைகளால் கவரப்பட்டு அவற்றையும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அவை மிகத் தொலதூர இலட்சியங்கள் என்பது அவருக்குத் தெரியும். பிரச்சினை வந்ததும் அதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தன்னுடைய பிரதான, உடனடி இலட்சியமான வகுப்புவாரி உரிமைகளுக்கு வருகிறார். ஆனால் வாழ்நாளின் இறுதிவரை பொதுவுடமை சிந்தனைகளுக்கு எதிராகவோ, முதலாளீயம் காந்தீயம் போன்றவற்றை ஆதரித்தோ அவர் பேசியதில்லை. அவரைப் பிடிக்காதவர்கள் அவர் 1934-36ல் எடுத்த நிலைகளை சந்தர்ப்பவாதம், பிழைப்பு வாதம் எனலாம்; பிடித்தவர்கள் அதை யுத்த தந்திரம், செயல் தந்திரம் என்று புகழலாம் என்பது தவிர இந்த விவாதத்தில் எந்த ஒரு சத்துமில்லை என்று பெரியார் பாணியிலேயே கூறிவிட்டு மேலே நகர வேண்டியதுதான்.


Series Navigation

ராஜன் குறை

ராஜன் குறை

பெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள்

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

ராஜன்குறை


(நிறப்பிரிகை 1993 ஏப்ரல்)

முன்னுரையாகச் சில முக்கியமான குறிப்புகள் :

இக்கட்டுரை ஆய்வு நடந்தபின் எழுதப்படுவதல்ல. ஆய்விற்கான தயாரிப்பாக எழுதப்படுவது. இதில் கூறப்படும் கருத்துக்கள் ஆய்வின் முடிவுகள் (Findings) அல்ல, ஆய்விற்கான முன் அனுமானங்கள் (Hypothesis).

பெரியாரின் ஐம்பது ஆண்டு கால இயக்கத்தின் களம் மிக விரிவானது. அவருடைய உச்சரிப்புகள் அன்றாடம் தலையங்கங்களாக, கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் பதிவுகளாக, சிறு பிரசுரங்களாக வெளியானவை. இவற்றிற்கான எதிர் வினைகளும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஏராளமாகப் பதிவாகியுள்ளவை. இவை மட்டுமின்றி அக்காலக் கட்டத்தில் பதிவுகள் அனைத்தையும் நுட்பமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்வதின் மூலமாகவே பெரியாரியம் என நாம் செய்யக்கூடிய வரையறை முற்றிலும் சரியானதா; பெரியாரின் இயக்கம் அவ்வரையறைக்குப் பொருந்துமாறு முற்றிலும் இருந்ததா; பெரியாரியம் அனைத்து மக்களின் விடுதலைக்கு அன்று எவ்வளவு தூரம் உதவக்கூடியதாக இருந்தது; இன்று எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்; போன்ற கேள்விகளுக்கு உறுதியான விடைகளைப் பெற முடியும். ஆயின் அத்தகைய விரிவான ஆய்வினை உடனடியாக மேற்கொள்ளும் சாத்தியமில்லாததால் பெரியாரின் உச்சரிப்புகளையும், இயக்கத்தையும் ஓரளவு பரிசீலித்து சிந்தித்துப் பார்த்ததில் உருவாகிய சில முன் அனுமானங்களை மிதக்க விடுவதன் மூலம் ஆய்வினை ஒரு கூட்டுச் செயல்பாடாக மாற்ற இக்கட்டுரை விளைகிறது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த, இயக்கம் சாராத சிந்தனையாளர்கள் பெரியார் பற்றிய அவர்களது சேகரிப்புகளையும், கணிப்புகளையும் வெளியிட இக்கட்டுரை தூண்டுதலாக அமைய முனைகிறது.

இக்கட்டுரையில் தரப்படும் பெரியாரின் மேற்கோள்கள் எதையும் நிருபிப்பதற்காகத் தரப்படுவதல்ல. முன் அனுமானங்களுக்கான தூண்டுதல்களே அவை. எனவே அந்த அனுமானங்களை மறுக்க விரும்புபவர்கள் பதட்டமின்றி, நிதானமாக ஆய்வு நோக்கிலும், விவாதப்பூர்வமாகவும் கருத்துக்கள் வைக்கலாம். ஆய்வின் போக்கிலும், விவாதங்களினுடாகவும் அனுமானங்கள் உறுதிப்படலாம், மாற்றமடையலாம் அல்லது கைவிடப்படலாம்.


01. நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலே தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையென்றால் அது நியாயமும், ஒழுங்குமாகாது.

(திருப்பூரில் சொற்பொழிவு — ‘புரட்சி ‘ 17-12-1933.)


பெரியாரியம் — வரையறையும், விளக்கமும் :

வரையறை :

1. சாதிப்படி நிலையமைப்பை தகர்ப்பதே, சாதி ஒழிப்பே இந்திய சமூகத்தின் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பிரதான அரசியல் நடவடிக்கை.

2. சாதிப்படி நிலை அமைப்பை கருத்தியல் ரீதியாக பலமுனைகளிலும் தாக்குவதும், பொதுக் கருத்தியலாக நிலை நிற்கும் சாதீயக் கருத்தியலை வெகுஜனச் சொல்லாடல் களத்திலேயே முறியடிப்பதும் சாதி ஒழிப்பிற்கான செயல்முறை, இதற்கு முனைப்புத் தரும்படியாக அமையக்கூடியவை குறியீட்டழிப்புப் போராட்டங்கள்.

3. சாதீயப் படிநிலை அமைப்பின் மேல் அடுக்கு மட்டுமல்ல பார்ப்பன சாதி என்பது. அதற்கான சட்டகம் (Frame) பார்ப்பனின் இருப்பே, பார்ப்பனியத்தின் இருப்பிற்கான பொருளியல் அடிப்படை.

4. பார்ப்பனனைத் தனிமைப் படுத்துவது, பார்ப்பன விலக்கம் ஆகிய முதற்கட்ட நடவடிக்கையில் வெகுஜன ஈடுபாட்டின் மூலமே சாதீய சட்டகத்தை குலைப்பது மட்டுமின்றி, சாதீயத்தை வெகுஜன சொல்லாடல் களத்தில் சுலபமாக ஒழிக்க முடியும்.

[இங்கு பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் பெரியாரால் பயன்படுத்தப்படாதவையாக இருக்கலாம். ஆனால் சமகால அரசியல் சிந்தனைகளுடன் பரிச்சயம் கொண்ட நாம் சொற்றொடர்கள் மூலமாகவே அவர் சிந்தனைகளை அடையாளப்படுத்த இயலும், இதற்கான அடிப்படை அவருடைய சொற்களிலேயே இருப்பது அவரை வாசிப்பவர்களுக்கு புலப்படும்].

விளக்கம் :

1. சாதிப்படி நிலை தகர்ப்பே, சாதி ஒழிப்பே உடனடி அரசியல் நடவடிக்கை :

சாதிப் படி நிலையைத் தகர்க்க சாதிச் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் வகுப்புவாரி உரிமைகள், இடஒதுக்கீடு ஆகியவற்றைக் கோருவது, சாதி ஒழிப்பிற்காகக் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்வது ஆகியவை பெரியார் தொடர்ந்து வலியுறுத்திய நடைமுறைகள். இந்திய சமூகத்தை இவ் வகையில் ஜனநாயகப் படுத்தியபிறகே பிற வேலைகளை மேற்கொள்வது பொருத்தம் என்பதைத் தெளிவாக உணர்ந்தும், வெளிப்படுத்தியுமிருக்கிறார். டாக்டர் அம்பேத்கர் அவர்களும் இதே கருத்தினை அவருக்கேயுரிய வழியில் வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் கூற்றுக்களை முன்வைத்து ஜாதி ஒழிப்பை ஜனநாயகப் புரட்சி என்ற கோணத்தில் விளக்கி அ. மார்க்ஸ் சமீபத்தில் மக்கள் கல்வி இயக்கம் வெளியிட்ட ‘டாக்டர் அம்பேகரின் போர்க்குரல் ‘ என்ற பிரசுரத்தில் எழுதியுள்ளது இவ்விஷயத்தில் தெளிவைத் தரும்.

இந்தியத் தன்னிலை என்பது, சாதீயத்தன்னிலையாகவே உள்ளது. அதாவது ஒரு மனித உயிரியின் கல்வி, தொழில், உணவு, உடை, மணமுறை இன்னும் சொன்னால் அதன் அசைவுகள், நடவடிக்கைகள் அனைத்துமே சாதியால் நிர்ணயிக்கப்பட்டதாகவே இருக்கின்றன.

இவ்வாறாக தேர்வுகளற்ற, நிர்ணயிக்கப்பட்ட வாழ்வில்; சமூக தளத்தில் இயக்கம் முற்றிலும் குறுக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திரம், ஜனநாயகம் போன்ற விஷயங்கள் சாதி உயிரிக்கு முற்றிலும் அந்நியமானவையே. சமத்துவம் என்ற பேச்சிற்கே இடமில்லை மிகக் கொடூரமான, கட்டுறுதி மிக்க சமூக ஒழுங்கு அமைப்பு சாதீயத்தால் நிலைப்பெற்றிருப்பதை பல்வேறு சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். அதிகாரம் என்பது அரசிடம் மட்டும் குவிந்திருப்பதல்ல, பல்வேறு மட்டங்களில் சமூக, மனித உறவுகளில் விரவி இருப்பது என்பன போன்ற சிந்தனைகளைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட சாதிச் சமூகமென்பது அதி—நிர்வாக, அதி–அரசாங்க (Super–bueracratic, Super–Governmental Structures) அமைப்பாக செயல்படுவதாகவும் கணிக்க முடியும். இந்நிலையே சாதீயத்தை நமது பிரதான எதிரியாக்குகிறது.

2. பார்ப்பன எதிர்ப்பே, சாதி எதிரிப்பின் பிரதான அம்சம்:

பார்ப்பன சாதி, சாதிச் சமூகத்தின் மேலடுக்காக இருப்பது மட்டுமல்லாமல், சாதீயத்திற்கான குறியீட்டு அர்த்தத்தையும், நியாயத்தையும் வழங்குவது. இன்று வரையிலும் பார்ப்பன இருப்பை முன்னிலைப்படுத்தியே எந்த ஒரு சாதியும் தனக்குக் கீழுள்ள சாதியின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சொல்லாடலை உருவாக்கிக்கொள்கிறது. சாதீயத்தை நிலைப்படுத்த உதவும் மறுஜென்மம், சாத்திரங்கள், கடவுளர்கள் போன்ற புனைவுகளை தொடர்ந்து மறு உற்பத்தி செய்தும், பிரசாரம் செய்தும் வந்தவர்களும் பார்ப்பனர்கள் தாம். சாதிப்படி நிலை அமைப்பு பார்ப்பன முன் மாதிரியின்றி பெரிதும் பலவீனப் பட்டுவிடும். சாதிச் சின்னங்களை சட்ட விரோதமென அறிவிக்கவேண்டாமா வென்று 1950ல் பெரியார் கேட்பதலிருந்து சமூக உளவியல் குறியீடுகளின் பங்கினை அவர் கணித்திருப்பது புலனாகும்.

3. பொதுக் கருத்தியலே எதிரி; வெகுஜனச் சொல்லாடல் களமே போர்க்களம்:

சாதீயம் சமூகத்தில் நிலைபெற்றுவிட்ட ஒரு கருத்தியலாகும். மனித உயிரிகள் தன்னை இன்ன சாதியென்றும், இவர்களைவிட உயர்ந்தவன், இவர்களை விடத் தாழ்ந்தவன் என்றும் இயல்பாகவே ஏற்றுக் கொண்டு நம்புகின்றன. மிகுந்த தாழ்ந்த சாதியென அடையாளமிடப்பட்டவரும் கூட தங்கள் நிலையை நியாயமென ஏற்றுக் கொண்டு நம்பி அனுசரிக்கும் படியாக பொதுகருத்தியல் ஆழமாகவும், அகலமாகவும் நிலைபெற்றுவிட்டது. எனவே பெரியார் மிகப்பரவலான, கடுமையான பிரசாரத்தின் மூலம் இக்கருத்தியலை முறியடிப்பதே தனது யுத்த தந்திரமெனக் கொண்டார். இப்பிரசாரத்திற்கு ஏற்றவாறே தனது அனைத்து அரசியல் நிலைபாடுகளையும் வைத்துக் கொண்டார். அவரது சமரசங்களைப் பற்றிப் பேசும்போது, அவரது இந்த அரசியலடிப் படையை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் பேச்சுரிமை, எழுத்துரிமை எதையும் அனுமதிக்காத ஒரு பாசிச அரசில், பொதுக் கருத்தியலையே தனது இருப்பிற்காக நம்பியிருக்கிற அரசில் பெரியாரின் போர்முறை பயனற்றது. அவர் வெறுத்த ரகசியமும், பலாத்காரமும் அங்கு இன்றியமையாதவை. அத்தகைய நிலையில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை அவரது பன்முகப் பிரசாரங்களில், வெளிப்படும் ஆழ்ந்த சிந்தனைகளின் சாயலில் தேடிப் பார்க்கலாம். இக்கட்டுரையின் எல்லைக்குள் அம்முயற்சி அடங்காது.

1. ஆகையால், முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவு தெரிந்துவிட வேண்டும். இரண்டாவதாக, ஒரு மனிதனுக்குக் கீழோ, மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்குமேல், சாதி வித்யாசத்திற்கு ஆதாரமுள்ளவைகளை அடியோடு அழிக்க முயலவேண்டும். அப்படிச் செய்யாமல் உயர்வு, தாழ்வைப் போக்கிவிடலாமென்று கருதுதல் நுனிமரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும். சாதி ஆசாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சாதியை மதத்திலிருந்து பிரித்துக் கவ்வ வேண்டும். இப்படி பிரிப்பதற்கு முடியாத வரையில் சாதியும், மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியேயாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும், மதத்தையும், பிணைத்துக் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக்கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால், சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்துச் சாம்பலாக வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, மதமானது வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான். ஆனால் இந்த வேதம், கடவுளுடன் சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதிலும் பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் தலையிலும் கைவைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவுதான் கொடுக்கும். இதில்தான் பெருத்த சங்கடப்படக்கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக்கூடாது. எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வராது. இப்படி நாம் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் எல்லாவற்றையும் சேர்த்துக் கொளுத்தும்போது உண்மையில் ஏதாவது சத்து இருந்தால் அது அழியாது. இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்து போகுமேயென்றால். அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தை பொசுக்கும்போது வேதமும் பொசுங்கிப் போவதாய் இருந்தால் அந்த வேதம் என்பது இப்போதே வெந்துபோகட்டும். வேதத்தை ஓட்டும் போது கடவுளும் ஓடி விடுவாரென்றால் அந்தக் கடவுள் என்பது இந்த நிமிஷத்திலேயே ஓடி விடட்டும். அப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.

(திருச்சியில், 29-9-1929ல் சொற்பொழிவு— ‘திராவிடன் ‘ தினசரி— 5-10-1929 )

2. சுதந்திரம் அடைந்த நாட்டிலே பார்ப்பனர்கள் ஏன் இருக்க வேண்டும் ? சூத்திரர்கள் ஏன் இருக்க வேண்டும் ? பஞ்சமர் ஏன் ? என்று கேட்டிருக்கிறீர்களா ? அப்படிக் கேட்டால் வகுப்புத் துவேசமா ? கூறுகிறார்களே வகுப்புத் துவேஷம் என்று ‘

ஜனவரி 26ஆம் தேதி முதற்கொண்டு பார்ப்பான் இருக்கக்கூடாது; இருந்தால் ஆறு மாதம் கடுங்காவல் என்று சட்டம் எழுத வேண்டாமா ? இன்றும் பார்ப்பான் தன்னைப் பார்ப்பான் என்று பூணூல் போட்டுக்கொண்டிருக்கிறான் ‘.

சாதியை ஒழிக்கத் திட்டம் எழுதுகிறார்களே, சர்க்கார் ‘ இனிமேல் சாதியைக் குறிக்கும் சின்னத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவேண்டாமா ? அதற்கு ஒரு சட்டம் செய்ய வேண்டாமா ? இன்னமும் ஏன் பூணூல் இருக்கிறது ? ஏன் இன்னமும் பூணூலை ஒப்புக்கொள்ள வேண்டும், இந்த சர்க்கார் ?

(செங்கற்பட்டில் 5-11-1950ல் சொற்பொழிவு ‘விடுதலை ‘ 12-11-50)

3. ஆகவே, இந்த ஆட்சி சமத்துவ ஆட்சி அல்ல; சுதந்திர ஆட்சி அல்ல; ஒரு சுரண்டல் ஆட்சி என்றுதான் நாங்கள் சொல்கிறோம். எங்கள் நாடு எங்களுக்கு வந்துவிடுமேயானால் கட்டாயம் இன்றைய தினம் நாங்கள் சொல்லுகின்ற இந்த உத்தரைப் போடுவோம். இந்த நாட்டிலே எவனாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருந்தால் ஒரு வருடம் ஜெயில் என்று சட்டம் செய்வோம்.

(செங்கற்பட்டில், 5-11-1950ல் சொற்பொழிவு – ‘விடுதலை ‘ 12-11-1950)

4. மார்க்ஸ் நினைத்திருப்பாரா, இந்த நாட்டில் பார்ப்பனர்கள் என்கிற சதிகாரர்கள் செய்து வருகிற கொடுமைகளையும், புரிந்து வருகிற ஆதிக்கத்தையும், நடத்துகிற சதித்திட்டங்களையும் மற்றும் இந்த நாட்டின் சொந்த மக்கள் பிறவிச் சூத்திரர்களாக்கப்பட்டு, வேசி மக்களாய்க் கருதப்படுகிற நிலைமையையும் பற்றி ? அதற்கு ஏற்ற மதம், சாஸ்திரம், கடவுள் பற்றி ? ஆதலாலேயே, அவர் அந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி நிலவி வந்த முதலாளித்துவம், அதன் ஆதிக்கமுறைகள், அவைகளுக்கு மதம் அளிக்கும் ஆதரவு பற்றிச் சொல்லிப் போனாரே தவிர, இந்த நாட்டைப் பற்றி– பாவம், அவர் என்ன கண்டார் ?

ரஷியாவில் என்னை அதிசயமாகக் கேட்டார்களே ‘ ரஷியாவில் ஒரு மாணவன் என்னைப் பார்த்து, ‘என்ன, உங்கள் நாட்டிலே மகாராஜாக்கள் இருக்கிறார்களாமே ‘ அதுபோலவே பறையர் இருக்கிறார்களாமே ‘ அவர்களெல்லாம் எப்படி இருப்பார்கள் ? ‘ என்று அதிசயமாகக் கேட்டான். (அதாவது மகாராஜா, பறையர் இருக்கிறார்களாமே ‘ என்று) நான் சொன்னேன் — ‘அதோடு மட்டுமல்ல— பார்ப்பானும் அதாவது பிராமணன் என்பவனும் எங்கள் நாட்டில் இருக்கிறான் ‘ என்றேன்.

அவனைப் பற்றியும் சொன்னேன்; அதற்கு அவன் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டான். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், அந்த நாட்டிலே இதைப் பற்றித் தெரியாது. அப்படி இருக்கும்போது அதுதான் ‘வேதவாக்கு ‘ ‘ஞான சூத்திரம் ‘ என்று சொன்னால், என்ன அர்த்தம் ?

(பொன்மலையில், 10-9-1952ல் சொற்பொழிவு– ‘விடுதலை ‘ 20-9-1952)

5. நமது நாடு இன்றைக்கும் சாதி அமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே, நமது நாடு இன்றும் மத அமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அது போலவே, நமது நாடு இன்றும் பொருளாதார பேத அமைப்பிலேயே இருந்து வருகிறது.

இவற்றையெல்லாம் விட மோசம், மிக மிகக் கீழ்த் தரமான மூட நம்பிக்கை அமைப்பிலேயே நம் நாடு இருந்து வருகிறது.

இந்த நிலையில், மக்களுக்குப் போதிய கல்வி இல்லாத அமைப்பில், கல்வியிலும் பேதநிலை உள்ள கல்வி அமைப்பில் நமது நாடு இருந்து வருகிறது.

இவ்வளவு பேத நிலை அமைப்பு உள்ள நாட்டில் — ஜனநாயகம் என்றால் இதன் பொருள் என்ன ? நாட்டில் ஒரு பெரும் சூதாட்டம் நடந்து வருகிறது. சூதில் வலுத்தவன் ஆட்சியாக நடந்து வருகிறது என்று தானே கொள்ளவேண்டும் ?

( ‘விடுதலை ‘ — தலையங்கம் — 11-3-1967)

6. இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தில் வேறு எங்கும் இல்லாததும், மனிதத் தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் —- அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத்தன்மையும் நாகரீகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப் போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும்– முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம். அவைகளில் முதலாவதது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பல கோடி ஜன சங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புலுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே— அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்கவேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் — எந்தக் காரணத்தை முன்னிட்டும் — இந்தியாவில் இனி அரை நிமிடம் கூட இருக்க விடக் கூடாதவைகளாகும்.

[ ‘பகுத்தறிவு ‘ — கட்டுரை — 1938, இதழ் 10, மலர் 3]


நினைவு கொள்ளப்படும் பெரியார் :

பொதுவாக மக்கள் பரப்பில் பெரியார் குறித்த உடனடி நினைவுகளாக உள்ளவை எவையென்று பார்த்தால் நாத்திகமும், பார்ப்பன, புராண எதிர்ப்பாகவுமே இருக்கின்றன. இவற்றை இங்கு சிறிதளவு பரிசீலிக்க வேண்டும்.

1. நாத்திகம்: தீவிரமாக நாத்திகப்பிரச்சாரம் மேற்கொண்டதில் உலக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெரியாருக்குண்டு என்று கூறப்படுவது உண்மையே. ஆனால் அவருடைய நாத்திகம், சாதி ஒழிப்பை முன்னிட்டே வலியுறுத்தப்பட்டது என்பதை பலமுறை கூறியுள்ளார். இதன் பொருள் அவர் நாத்திகம் போலித்தனமானதென்பதில்லை. அவர் வாழ்வின் இறுதி நாட்களில் தீவிர நாத்தீகப் பிரச்சாரத்துடன் ‘அனைத்துச் சாதியினர் அர்ச்சகராதல் ‘ ‘கர்ப்பக்கிரகப் பிரவேசம் ‘ போன்றவற்றிற்கான போராட்டத்தை நடத்தியதை சிந்திக்க வேண்டும். நாத்திகத்தை மட்டும் வலியுறுத்துவதானால் ஆலயம் குறித்த போராட்டமெதற்கு ? சாதீயக் கருத்தியலை, சுரண்டலை கடவுள் நம்பிக்கை காத்து நிற்பதாலேயே அவர் தீவிர நாத்தீகப் பிரச்சாரம் மேற்கொண்டதை கட்டுரையின் மேற்கோள். 1–ல் காணலாம். இதுபோன்று பல்வேறு சமயங்களில் அவர் தெளிவுபடுத்தியிருப்பதை அவர் உச்சரிப்புகளை படிப்பவர் கவனிக்கலாம். இங்கு பிரச்சினை என்னவெனில் ஒரு சாதி ஒழிப்புப் போராளியை வெறும் நாத்திகப் பிரசாரகராகச் சுருக்கிப் பார்க்கும் வரலாற்றுத் தவறை செய்யக்கூடாது என்பதுதான் மற்றபடி நவீன மேற்கத்திய சிந்தனைகளையொத்த சிந்தனைப் போக்குகள் அவரிடமிருந்ததற்கான தடயங்கள் அவர் உச்சரிப்புகளிலுள்ளன.

உதாரணமாக அவரது இறுதிச் சொற்பொழிவில் ஆத்திகத்துடனான ஒரு உரையாடல் தன்மையினை அங்கீகரித்துப் பேசுகின்ற பாங்கினை கவனிப்பவர்கள் அவர் முரட்டுத்தனமாகவும் நாத்திகம் பேசியதாகக் கூறுவது பிழையானது என்பதை உணரலாம். [மேற்கோள் 7]


7. கடவுள் சங்கதியை எடுத்தால் ஒருவனுக்கு ஒருவன் நம்பிக்கைக்காரனும், நம்பிக்கை இல்லாதவனும்—- அவனை இவன் முட்டாள் என்று தான் சொல்லியாகணும்; இவனை அவன் முட்டாள் என்றுதான் சொல்லித்தானாகணும்; ஆனாலும் நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாய் வைத்துக் கடவுள் சங்கதியை பேசுகிறதினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்; மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள் கொஞ்சம் கடுமையாய்த்தான் பேசுவார்கள் — நம்மைவிட மோசமாக.

உதாரணமாகச் சொல்லுவேன்; நாலாயிரப்பிரபந்தம் பாடின ஆழ்வார்கள் — தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள்— இந்தப் பயலகள் சொன்னதைவிட நாங்கள் அதிகமாய்ச் சொல்லுகிறதில்லை. அதை மனதிலே வைத்துக் கொள்ளுங்கள். நாம், இவனைத்தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பயல்கள் சொன்னாற்போல, அவர்கள் பெண்டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை. நீங்கள் நினைக்கணும் ‘ என்னடா, இப்படிச் சொல்லுகிறானே என்று சிலபேருக்குக் கோபம் இருக்கும்.

ஆனால் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் பாடியிருக்கிறவன், ‘கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் கொல்ல வேணும்; அதுதான் கடவுள் பக்தனுக்கு அடையாளம் ‘ அப்படியென்று பாடியிருக்கிறான். தேவாரம் பாடியவன், ‘கடவுள் இல்லை ‘ என்கிறவன் பெண்டாட்டிகிட்டேயெல்லாம் நான் படுக்கணும்; கடவுளே, எனக்கு அந்த வசதி பண்ணிக் கொடு ‘ ‘ என்று கேட்டு இருக்கிறான். யார் என்று கேட்பீர்கள்; பேர் கூடச் சொல்லுவேன். சம்பந்தர் என்கிற ஒரு பக்தன்–பக்தனாம் அந்த அயோக்கியப் பயல் ? அவன் சொல்லியிருக்கிறான் ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிகிட்டேயெல்லாம் நான் படுக்கணும் ‘ என்று கடவுளைக் கேட்கிறான்; இசைத்துவை ‘ என்று (கேட்கிறான்).

நாலாயிரப் பிரபந்தத்திலே ஓர் ஆழ்வார்—- தொண்டரடிப்பொடி என்கிறவன்— ‘கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு, வெட்டு ‘ ‘ என்கிறான். இது பாட்டிலே நடந்தது. காரியத்திலே எவ்வளவு நடந்திருக்கிறது தெரியுமா ? ‘

[சென்னை தியாகராய நகர்— 19-12-1973]

ஆத்திக—நாத்திகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது ஒரு பயனற்ற விஷயம் என்றே தெரிகிறது. ஏனெனில், ஆத்திகமும்—-நாத்திகமும் 100க்கு 90 பேர்களின் அபிப்ராயங்கள் பழக்க வழக்கங்களால், பிறர் சொல்லிக் கொடுப்பதால், சேர்க்கையால் ஏற்படுவதையே ஒழிய, ஒரு இயற்கை உணர்ச்சி அல்ல. அன்றியும் பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவைகளைப்போல இயற்கையால் ஏற்படும் எண்ணமல்ல. அதைப்பற்றி மனிதன் கவலைப்பட வேண்டியதில்லை; அது இன்று ஒரு ஆராய்ச்சி விஷயமாகி நாகரீக விஷயமாகவும் பேசப்பட்டு வருகிறது. மனிதனுக்குக் கட்டும், காவலும் சட்டமும், போலீசுமாகத்தான் இருக்கின்றனவே ஒழிய கடவுளோ, நரகமோ, சாஸ்திரமோ, ஒழுக்கமோ கட்டிக் காப்பாற்றிவிடவில்லை; அனுபவத்திலும் எவனும் அவற்றின் மீது எந்த பொறுப்பையும் சுமத்துவதுமில்லை.

ஆனால், ஆத்திக—நாத்திகம் என்பது பயனற்ற பிரச்சினையாகும். மற்றும், அது அவனுடைய சொந்தபுத்தி, யோசனையைப் பொருத்ததாகும்.

ஆதலால் நமது வாழ்வில் ஏற்பட வேண்டிய இன்ப–துன்பங்களுக்கும், முற்போக்குக்கும். மாறுதலுக்கும் ஆத்திக—நாத்திகத்தைக் கொண்டுவந்து குறுக்கே போட்டுக்க்கொண்டு யாரும் கஷ்டப்படவேண்டியதில்லை.

நம்மைப் பொறுத்தவரை எந்த அளவில் ஆத்திகத்தில் பிரவேசிக்கிறோம் என்று நினைப்பீர்களானால். வாழ்க்கையின் நலன்களை கடவுளின் மீது பொறுப்பேற்றுவதும், கடவுளுக்காகச் செல்வங்களை, மக்களின் வாழ்க்கைக்குரிய பொருள்களை பாழாக்குவதையும் பொறுத்த அளவில்தான் பிரவேசிக்கின்றோம்.

மற்றபடி, எவன் எத்தனை கடவுளை எந்த விதமாக நினைத்துக் கொண்டாலும், வணங்கினாலும், அவற்றோடு பேசினாலும், அதுவாகவே ஆகிவிட்டாலும் நமக்கு அக்கறை இல்லை.

உலகத்தைப் பொது என்றும், உலகப்பொருள்கள் போக போக்கியங்கள் யாவருக்கும் சமம் என்றும் மனிதன் எண்ண வேண்டும். இதற்குக் கடவுள் குறுக்கிடாமல் இருந்தால் கடவுளைப் பற்றிய வேலை நமக்கு இல்லை; அதைப் பற்றிய கவலையும் நமக்கில்லை. ஆகையால், அதை ஒரு பெரிய பிரச்சனையாக வைத்துக் கொண்டு எவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை.

[புதுக்கோட்டையில், 7-10-1934ல் சொற்பொழிவு– ‘பகுத்தறிவு ‘ 14-10-1934]

9. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்கவழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும்–மனிதனுக்குக் கடவுள், மத உணர்ச்சிகளை உண்டாக்கி விடுகின்றன. அவை எப்படி இருந்தபோதிலும் எங்களுக்கு கவலை இல்லை. அந்த ஆராய்ச்சியில் நாங்கள் சிறிதும் காலத்தையோ, புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்திற்குத் தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது, மனித சுதந்திர சுக வாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாகவுள்ள புரோகிதக்கூட்டத்தார், மதத்தின் பேரால்—- கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள், எங்கள் தொண்டிற்கு, கொள்கைகளுக்குச் சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்கச் சக்தியற்ற கோழைகள் கடவுளையும், மதத்தையும் பற்றிக் குழப்பமாகப் பேசி, அவைகளை குறுக்கே கொண்டுவந்து போட்டு விடுகிறார்கள்.

மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு—தாழ்வு, சாதிபேதம் ஒழிந்து, ஆண்டான்—அடிமைத் தன்மை மாறி ஆணும் பெண்ணும் சகலதுறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் சாதிபேதமும் ஒழிந்தால் தமது உயர்வும் தம் பிழைப்பும் கெடுமென்று எண்ணிப் பாடுபடாது வாழ்ந்துவரும் பார்ப்பனர்கள் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைக் கொண்டு வந்து குறுக்கே போட்டு எங்களைத் தடைப்படுத்தும் போது, அவை எவையாயினும் மனிதசமூக ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திர வாழ்விற்கும் கேடு செய்வதாயிருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிறோம்.

[ஆய்வுக்கவுண்டன் பட்டியில், 23-1-1938ல் சொற்பொழிவு– ‘குடி அரசு ‘ 30-1-38]


Series Navigation

ராஜன் குறை

ராஜன் குறை