துப்புரவு

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

எஸ். ஜெயலட்சுமி


காலை மணி ஆறு ராஜ் டிவியில் கணேஷ், குமரேஷ் வயலின் வாசித்துக் கொண்டி ருந்தார்கள். காலை நேரத்தில் வயலின் இசை மனதுக்கு ரம்யமாக இருந்தது. வாசல் தெளித்து, பெருக்கிக் கோலம் போட்டாள் வனஜா. வெள்ளிக் கிழமை என்பது நினைவுக்கு வந்ததும் அழகாகச் செம்மண்ணும் இட்டாள். இதற்குள் •பில்டரில் டிகாஷன் இறங்கியிருந்தது. பாலைக் காய்ச்சி காபி குடித்துவிட்டு வீட்டின் பின்புறம் தெளித்த போது கவனித்தாள். அட நேற்றுக் கூடத் தெரியவில்லையே! சின்னதாக ஒரு மாங்கன்று தலையை நீட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு மிகவும் சந்தோஷமாக
யிருந்தது. அன்றொரு நாள் பொதிகையில் ‘இன்றைய விருந்தினர்’ நிகழ்ச்சியில் எக்ஸ்நோரா நிர்மல் சொன்னதை நினத்துப் பார்த்தாள் .நாமெல்லோரும் மாம்பழத்தைத் தின்று விட்டு கொட்டையைத் தூக்கி எறிகிறோம். அதை ஒரு விதையாகப் பார்ப்பதில்லை. எவ்வளவு உண்மை? அதிலிருந்து மாம்பழ சீசனில் மிகவும் ருசியாக இருக்கும் மாம்பழக் கொட்டைகளைத்
தூர எறியாமல் கொல்லைப்புற மண்ணில் ஊன்றி வைப்பாள்.

பொதுவாக அவர்கள் •ப்ளாட்டில் மரம் வளர்க்கக் கூடாது. ஆனால் சிறு செடிகள் வள்ர்க்கலாம்.
துளசி, கற்பூரவல்லி போன்ற செடிகள் வளர்க்கலாம் .இதற்கு முன் நாலைந்து மாங்கன்றுகளும் எலுமிச்சங் கன்றுகளும் வளர்த்து அருகிலுள்ள முருகன் கோவிலுக்குக் கொடுத்திருக்கிறாள். அங்கு அவை நன்கு வளர்ந்திருக்கின்றன. சர்க்குலேஷன் பத்திரிகை
போடுபவருக்கு வசதியாக முன் தினம் போட்ட பத்திரிகைகளை எடுத்து வைத்துவிட்டு பால் வாங்கப் புறப்பட்டாள்.சாலைத்தெருவில் நடக்கும் போது காற்று சுகமாக இருந்தது. பால்பாக்கெட்டை வாங்கிக் கொண்டு மெயின் ரோட்டை நோக்கி நடக்க ஆரம்
பித்தாள். இதற்குள் மெல்ல மெல்ல ஜன நடமாட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. எதிரே காய்கறி, வாழை இலைக்கட்டைச் சுமந்தபடி நாலைந்து பெண்கள். வண்ணார்பேட்டை பஸ் ஸ்டாப் பழக்கடையில் ஆரஞ்சு. பப்பாளிப் பழங்கள் வாங்கிய பின், தினமலர் ஆபீஸ் அருகில் பாலக் கீரைக்கட்டும் வாங்கினாள். சைக்கிளில் நுங்கு. இளநீர் தேங்காய். வெங்காயம் விற்பவர்கள் கூவி விற்க ஆரம்பித்து விட்டார்கள். அரசு சுற்றுலா மாளிகைக்குப் போகும் வழியிலிருந்த மரக்கன்றுகள் நன்கு துளிர்க்க ஆரம்பித்திருந்தன. கே.டி.சி
போக்குவரத்து ஊழியர்கள், எதிரேயிருந்த கடையில் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். இட்டிலியும் சாம்பார் வாசனையும் ஊழியர்களை ஈர்த்தது. பேராச்சி அம்மனுக்கு வெளியிலிருந்தவாறே ஒரு கும்பிடு போட்டு விட்டு வந்தாள் வனஜா.

துப்புறவுத் தொழிலாளர்கள் வண்ண மயமான குப்பை சேகரிக்கும் டிரம்களில் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாகக் காய்கறி வாங்கும் கடையில் வெண்டைக்காய் பொறுக்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று பெரிதாக யாரோ அதட்டும் குரல் கேட்டது. கடையை அடுத்திருந்த கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் ஒரு மாநகராட்சிப் பெண் துப்புரவுத் தொழிலாளி. அவளுக்கு சுமார் நாற்பது வயதிருக் கலாம். இரட்டைநாடி சரீரம். நீலநிற யூனி•பார்ம் புடவையை நேர்த்தியாக உடுத்தியிருந்தாள். வெள்ளிக்கிழமை என்பதாலோ என்னவோ முகத்தில் கொஞ்சம் அதிகமாகவே மஞ்சள் பூச்சு. இழைய வாரிக் கட்டிய கொண்டையில் சுற்றிய மல்லிகைப் பூ. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. மேலே
விபூதி. ஒரு கெளரவமான தோற்றம். அவள் கையில் நீண்ட பெரிய குப்பை அள்ளும் கரண்டி இல்லா விட்டால் அவளை யாரும் ஒரு துப்புறவுத் தொழிலாளி என்று கண்டு பிடிக்கவே முடியாது

”இவங்க மனசுல என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்காங்க? பெரிய வீட்டில குடியிருந்தா போறுமா? இப்படியா குப்பய ஓடயில போடுவாங்க? இவங்க எல்லாம் படிச்சவங்க .ம்ம்… நாங்களும் மனுசங்க தானேன்னு நெனச்சுப் பாக்க வேண்டாம்? நீங்களே பாருங்க எதையல்லாம் ஓடயில போட்டுருக்காங்க
பாருங்க” என்று சொல்லிக் கொண்டே ஓடையிலிருந்த குப்பைகளை வெளியே எடுத்துப் போட்டாள். சாக்குத்துண்டுகள், துணி, தகர டப்பா மூடிகள், வைக்கோல் சுருணை. இப்படி எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட்டாள். அங்கே நிற்க முடியாமல் துர் நாற்றம் வீசியது. ஓடையிருந்த பெரிய வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் நைட்டியோடு வெளியே வந்தாள். தலைமுடி கலைந்திருந்தது. இன்னும் பல் கூடத்தேய்க்கவில்லை என்று தோன்றியது.

அவ்வளவு தான். அந்தத் துப்புரவுத் தொழிலாளி, ”ஏம்மா ,நீயெல்லாம் பொம்பிளையா? இப்படித்தான் குப்பய ஓடயில போடுவியா? வண்டில வந்து குப்பய எடுத்துக்கிட்டுப் போறமில்லியா?
அதுல போட வேண்டியதானே. நாங்களாவது படிக்காத கூமுட்டைங்க. நீங்கள்ளாம் படிச்சவங்க தானே? என்று பொரிந்து தள்ளினாள். இதப்பாரு இன்னொரு தடவை ஓடைல இப்படி குப்பை கெடந்திச்சின்னா நா க்ளீன் பண்ண மாட்டேன். துப்புறவுத் தொளிலாளின்னா ஒங்களுக்கு அவ்வளவு எளக்காரமா? நாங்க ஒரு நா
க்ளீன் பண்ணலேன்னா ஊரே நாறிப் போயிரும் தெரியுமா? இனிமேயாச்சும் துப்புரவா இருங்கம்மா”.

சொல்லி விட்டு அவள் போய் விட்டாள்.வனஜாவும் கடையிலிருந்தவர்களும் திகைத்துப் போய் நின்றார்கள். வெகு நேரம் வரை அவள் குரல் ஒலித்துக் கொண்டே யிருந்தது.

=======================================

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி