விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து
இரா.முருகன்
வைக்கோல் சந்தை கடந்து போனதோ?
காலடியில் பிரம்புக் கூடையும் துணி சஞ்சியுமாக அடுக்கி வைத்ததில் எதையோ தேடிக்கொண்டு தாமஸிடமிருந்து ரெண்டு அங்குலம் தூரம் விலகி உட்கார்ந்தாள் தெரிசா.
ஹே மார்க்கெட்டா, எப்பவோ போயாச்சே. இன்னும் பத்து நிமிஷத்தில் கிங்க்ஸ் கிராஸே வந்துடும். நீ மும்முரமா உன் துணிகளுக்கு உள்ளே என்ன தேடறே?
அவள் முணுமுணுப்பாகச் சொன்னாள். அவனுக்குக் கேட்க வேண்டியதில்லை. கிளம்பும் நிமிடத்தில் எடுத்த வெல்வெட் மார்க்கச்சையை எங்கே வைத்தாள்?
மூட்டை எல்லாம் ஜாக்கிரதையா முடிஞ்சு வச்சிருப்பே. அவிழ்த்துத் தேடறதையாவது என்கிட்ட விட்டுடு. என்ன தேடறேன்னு சொன்னா நானும் சகாயம் செய்யறேன்.
அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கும். தாமஸ் அவள் மார்பை வெறிக்கிறான்.
முப்பது வருடம் முன்னால், அம்பலப்புழை அம்பலத்தில் ஊட்டுப்புறையில் இலவசச் ஆகாரத்துக்காகக் காத்திருந்த விருதா ஆசாமிகளால் வெறிக்கப்பட்டவை அவளுடைய பிஞ்சு முலைகள். அதிலே ஒரு தடியன் மடி சஞ்சியில் இருந்து லட்டு உருண்டையை எடுத்து நாவால் நக்கி எச்சில் படுத்திக் கொண்டு அவளை விகல்பமாகப் பார்த்து மாரில் குப்பாயத்தைத் தூக்கச் சொன்னான். ஓடி வந்து அம்மா சிநேகாம்பாளின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள் அவள்.
கடங்காரி, எட்டும் பொட்டும் திகஞ்சும் நாணம் இல்லியா? இன்னும் முல குடிக்கற குஞ்ஞா என்ன? உனக்கே நாளைக்கு நாலஞ்சு குடிக்க இடுப்பிலே ஏறிடும். பொசைகெட்டவன் ஒருத்தன் அதுக்கும் பங்குக்கு வந்து கூடவே படுத்துப்பான். அது கூடாதே கண்ட கழுவேறிக்கெல்லாம் குப்பாயத்தையும் அடி வஸ்திரத்தையும் அழிக்கப் போறியாடி மிண்டை?
அம்மா தடித்த துணியில் புளியிலை போட்ட முண்டு ஒன்றை எடுத்து பிச்சோத்தி கொண்டு அதை ரெண்டாகக் கண்டித்தாள். அதை இழுத்துப் பிடித்து அவள் தோளில் குறுக்காகச் சுற்றி இடுப்பில் செருகிவிட்டாள்.
மேலே துணி ஒதுங்காம பாத்துக்கோடி மூதேவி. முழுக்க அரும்பிட்டா ஊர் கண் எல்லாம் அங்கே தான் வந்து சேரும்.
சொல்லியபடியே அவளை அணைத்து தலையில் வாஞ்சையோடு முத்தமும் கொடுத்த அம்மா. வெற்றிலையும் கர்ப்பூரமும் சதா நல்லதாக வாடையடிக்கும் அம்மாவின் அண்மை தெரிசாவுக்கு ஒரு வினாடி தட்டுப்பட்டு அப்பால் நகர அவள் கண்கள் நனைந்தன. நீ உன் கிருஷ்ணன் காலடிக்குப் போயிருப்பே அடி அம்மா.
வேதத்தில் ஏறியபோது அப்பா கிட்டாவய்யன் மதராஸ் பட்டணத்து துரைத்தன ஸ்திரிகள் உடுப்பென்று சொல்லி அங்கே கருப்புப் பட்டணத்திலே யாரோ துன்னல்காரனைக் கொண்டு உத்தேசமாகத் தையல் வேலை செய்து கொழகொழவென்று முழங்காலுக்குக் கீழே வழிந்து தரையைப் பெருக்கும் தோதில் நாலு பாவாடையும் மேலே போட்டுக் கொள்ள பட்டுச் சட்டையும் வாங்கிக் கொடுத்தான்.
பாதிரியார் தெரிசா என்று நாமகரணம் செய்து முதல் திருப்பலி பிரசாதம் கொடுத்தபோது மண்டியிட்டு இருந்தவளுடைய பாவாடை நிலத்தை விட்டு எழுந்திருக்காமல் அவள் மட்டும் எழ கோவிலுக்குள் பெரும் சிரிப்பு. ஆனாலும் குழந்தைதானே. பாதிரியார் சிரித்தபடி அவள் தலையில் கைவைத்து ஆசீர்வாதித்தார்.
ஞாயிறாழ்ச்ச பிரார்த்தனைக்கு ஒரு மணி நேரம் முந்தி சங்கீர்த்தனம் சொல்லிக் கொடுக்கறேன். வந்துடு குட்டீ நீயும்.
அவர் பிரியமாகச் சொன்னபோது சும்மா தலையை ஆட்டினாள் தெரிசா. வீட்டில் நாமசங்கீர்த்தமாக அவள் பாடாததா?
அச்சுதம் கேசவம் ராம நாராயணம்
கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் பஜே
இங்கே அச்சுதனுக்குப் பதிலாக கிறிஸ்து மகரிஷி பெயரைச் சொல்ல வேணுமாக இருக்கும். போய் அதையும் கற்றுக் கொண்டு வந்துவிடலாம். சங்கீர்த்தன வகுப்புக்கு தவறாமல் போனாள் தெரிசா.
பாட்டுக்கு நடுவே பையன்கள் பார்க்கப் பார்க்க அவள் உடம்பிலிருந்து பிரிந்து ரெண்டு தனி மலைகளாக அந்த மார்பு வளர்ந்து நிற்கிற அசௌகரியம் தட்டுப்பட்டது தெரிசாவுக்கு. பிச்சோத்தி கிடைத்து, இதைக் கண்டிக்க முடியும் என்றால் அரிந்து எடுத்து பார்க்கிறவன் கையில் கொடுத்துவிட்டு ஆசை தீரப் பாத்துட்டு இரு என்பாள் தெரிசா. அப்புறம் அவள் எல்லோரையும் போல சாதாரணமாகி பாடவும், ஆடவும், நேரியல் இல்லாமல் ஓடித் திரியவும் செய்வாள்.
திரண்ட்டுகுளி, திரட்சை எல்லாம் வச்சுக்கக்கூடாது இங்கே வந்த அப்புறம்.,
அவள் பெரியவளானபோது ஜான் கிட்டாவய்யன் கிறிஸ்துநாதர் கனவில் வந்து ஆக்ஞாபித்ததுபோல் முகத்தில் வீர்ப்போடு அறிவித்தாலும் அக்கம்பக்கத்தில் வெல்ல உக்காரை இலையில் பொதிந்து கொடுக்கத் தவறவில்லை. சிநேகாம்பா வீடுவீடாகப் புட்டுப் போட்டுவிட்டு வரணும் என்றாள். புட்டு கடையில் அவித்து கூடை நிறைய விற்றுவிட்டு மீந்ததோடு படியேறி வந்து புது வியாபாரம் சூடு பிடித்ததைச் சொல்லிச் சிரித்தான் கிட்டாவய்யன்.
உங்களுக்கு விவஸ்தையே கிடையாது.
சிநேகாம்பாள் அவன் பஞ்ச கச்சத்தை உருவி விட்டபடி சிரிக்க, தெரிசாவும் அவள் தங்கை நிர்மலாவும் அந்தக் கலகலப்பில் சேர்ந்து கொண்ட அழகான சாயங்காலத்தை தெரிசா மனதில் பட்டுத் துணி நேரியலில் பொதிந்து வைத்திருக்கிறாள். அது யாரோடும் பகிர இல்லை. அவளுக்கு மட்டுமானது.
மதராஸில் சர்வகலாசாலையில் சேர காளை வண்டியும், கட்டை வண்டியும், புதுசாக வந்த ரயில் வண்டியும் ஏறிப் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்த வேளையில் புடவைக்கு மாறி இருந்தாள் தெரிசா. வெறித்த கண்கள் இன்னும் துரிச்சு நோக்க புடவை மட்டும் காரணமில்லை என்று தெரிசாவுக்குத் தெரியும். கூடப் படிக்கிற யாரோ சொன்னபடி, வேப்பேரியில் ஒரு எமிலி டிசௌசா துரைசானியிடம் போனாள். அவள் கறுப்பி தான். ரெண்டு தலைமுறை முன்னால் வெள்ளைக்கார சோல்ஜர் பீஜதானம் செய்து கூவம் நதிக்கரையில் சிசுவாக வந்து விழுந்தவள்.
வெஸ்ட் தச்சுத் தரணுமா டியர்?
இல்லே, முலக் கச்சு.
அது டர்ட்டி வேர்ட். சொன்னா உள்ளே இருக்கப்பட்டது தான் நினைவு வந்து தொலைக்கும். வெஸ்ட் இல்லே பிரேசியர்னு சொல்லப் பழகிக்க.
சொல்ல, அணியப் பழகிக் கொண்டு லண்டன் வந்தாள். அதை அணிந்த அப்புறம் பார்வைகள் கூடினவே அன்றிக் குறைந்ததாகத் தெரியவில்லை.
பீட்டருக்கு அவள் கச்சு என்று சொல்வது ரொம்பப் பிடிக்கும். அவள் முயங்கும் முன் அதை சாவதானமாக அகற்றுவதை வெறியோடு பார்த்தபடி இருப்பான்.
நாற்பது நிறைந்தாலும் அவளுடைய ஸ்தனபாரம் இன்னும் எடுப்பாக இருக்கிறது என்பதில் தெரிசாவுக்கு ரகசியமாகப் பெருமைதான்.
தேவ ஊழியம் செய்யப் போகிற பெண்ணுக்கு வரும் நினைப்பா இது?
அம்பலப்புழை பாதிரியார் சங்கீர்த்தன வகுப்பை நிறுத்தி அவளைக் கேட்கிறாள். ஓரமாக உட்கார்ந்து வயலில் வாசிக்கும் மாத்துக் குட்டி தரக்கன் பாதிரியார் கண்ணில் படாது அவளை மடியில் போட்டு வாசிப்பது போல் அபிநயிக்கிறான்.
தட்ஸ் டூ குட்
தாமஸ் மாத்துக்குட்டியை பாராட்டுவது காதில் கேட்க நிமிர்ந்து பார்த்தாள் தெரிசா.
அவள் கொண்டு வந்திருந்த பிரம்புக் கூடை மூடி திறந்து பொறித்த அப்பளம் ஒன்று வெளியே உருண்டது. அது தரையைத் தொடுவதற்குள் குனிந்து பிடித்த தாமஸ் வெற்றிப் புன்னகையோடு அதை உதிர்த்துத் தின்ன ஆரம்பித்தான்.
இந்த மாதிரி இந்தியன் டெலிகசி எல்லாம் சமையல் செஞ்சு எடுத்து வருவேன்னு தெரிஞ்சிருந்தா, ரயிலை ரெண்டு மணி நேரம் மெல்லக் கிளம்பச் சொல்லி ரெயில்வே கம்பெனிக்கு டெலகிராம் கொடுத்திருப்பேனே. வாட் இஸ் திஸ் கால்ட்?
பப்படம். எந்த லஞ்சும் டின்னரும் இது இல்லாமல் நடக்காது கேரளத்துலே.
வாட் இஸ் கேரள்?
இந்தியாதான். தெற்கு மூலை. தமிழும் மலையாளமும் பேசற பகுதி.
தெரிசா இன்னொரு அப்பளத்தை எடுத்துக் கடித்தபடி பிரம்புக் கூடையை மூடிவைத்தாள்.
பீட்டருக்கு அந்த மொழி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கியா, இல்லே வேறே பலதும் உன் கிட்டே கத்துக்கிட்டானா? ஆல் சார்மிங் ஓரியண்டல் டிரிக்ஸ்.
டிரிக்ஸோடு நிறுத்தினான் நாசமாகப் போகிறவன். டிரிக்ஸ் ஆப் தி ட்ரேட் என்று சொல்லி அவளை அவிசாரி ஆக்காது விட்ட தாமஸ் நாஷ் மன்னிக்கப்பட்டான்.
கிங்க்ஸ் கிராஸ்.
சாரட்டை நிறுத்திக் குதித்து இறங்கினான் வண்டிக்காரன். கையில் சாட்டையோடு ஜன்னல் கதவைத் திறந்து வைத்தபடி அறிவித்தான்.
வெளியே மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. நிலக்கரித் துகள்கள் கனமாகப் படிய, அந்த மழையும் கருத்த நீர்த் துளிகளின் தாரையாக இறங்கி கல் பாளம் இட்ட வீதி நடைபாதையை மினுக்க வைத்தது. நடந்து போனவர்களின் முகம் எல்லாம் கருப்பு பூசி இருந்தது. அதைத் துடைக்கக் கூட நேரமில்லாமல் ஏதேதோ சின்னத் தொழிற்சாலைகளில் உலையை ஊத, அணையாமல் காத்து இரும்பு அடிக்க, ஏதேதோ செய்து பிழைக்க எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தெரிசா போல், தாமஸ் போல் சுகமாகக் கிளம்பி தேவ ஊழியம் செய்ய சகல சவுகரியங்களோடும் பயணம் போகிற காசு உள்ள வர்க்கத்தில் பட்டவர்கள் இல்லை அவர்களெல்லாம். மழையில் நனைந்தபடி நின்று இரையும் இந்த வண்டிக்காரனும் கூடத்தான்.
யூஸ்டன் போகணும் நாங்க.
தெரிசா மழையின் சத்தத்தை அடக்க ஒலியைக் கூட்ட முயன்று தோற்றுப்போய்ச் சொன்னாள். அப்போது தாமஸ் பெட்டி படுக்கைகளை அடுக்கி வைத்தபடி வெளியே இறங்கத் தயாராவது கண்ணில் பட்டது.
தாமஸ், கிங்க்ஸ் கிராஸ்லே எதுக்கு இறங்கணும்?
இந்தப் பக்கம் பார்த்தா கிங்க்ஸ் கிராஸ். அந்தப் பக்கம் யூஸ்டன். நீ முன்னாலே நின்னு பார்த்தா இந்தியப் பேரழகி. பின்னழகிலே பிரஞ்சுக்காரி. அப்படித்தான்.
அவன் பிரஞ்சுக்காரியை செல்லமாகத் தட்டிவிட்டு அப்பளக் கூடையோடு இறங்க, வண்டிக்காரன் இந்த சிருங்காரத்தை ரொம்பவே ரசித்தான். புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதி என்று அர்த்தம் செய்தவனாக இருக்கும் என்று தெரிசா நினைத்தாள். உபத்திரவம் இல்லாமல் அவனுக்கு ஒரு நிமிடம் சந்தோஷத்தைத் தர தெரிசாவோ கர்த்தரோ உத்தேசித்தால் அவளுக்குப் பராதி ஒன்றும் இல்லை.
தெரிசா இறங்க தாமஸ் ஆதரவாகக் கை நீட்டினான். அவள் இறங்கியதும் வண்டிக்குள் திரும்ப ஏறி பொறுப்பாக எல்லா துணி சஞ்சி, தோல் சஞ்சிகளையும் தண்ணீர் போத்தலையும் கொண்டு வந்து கீழே வைத்தான்.
பழம் வச்ச கூடை? ஆப்பிளும் ஆரஞ்சும் எடுத்து வச்சிருக்கேன்.
தெரிசா சொல்ல இன்னொரு முறை வண்டிக்குள் தாவியேறினான். இருக்கை அடியில் தேடி எடுத்து இதுவா பார் என்றான். அது தெரிசாவின் முலைக்கச்சு. இந்த சனியன் எங்கே பழக்கூடையோடு? அவள் தேடத்தேடக் கிடைக்காமல்.
அதது அததுக்கான இடம்னு தெரிஞ்சு போய்ச் சேர்ந்துடும். உலக நடப்பு.
காதில் தத்துவம் சொல்லிக் கள்ளச் சிரிப்பு சிரித்தான் கசின். இன்னும் ஒரு வாரம் இவனைப் பொறுத்துக் கொள்ள வேணும், பீட்டருக்காக. தேவ ஊழியத்துக்காக.
சட்டைப் பையில் வைத்திருந்த பெரிய தோல் பர்ஸில் இருந்து காசு எடுத்து வண்டிக்காரனிடம் கொடுத்தான் தாமஸ். வண்டிக்காரன் தொப்பியைக் கையில் பிடித்து காக்னியில் ஏதோ முனக, பை உள்ளே தேடி நாலு நாணயங்களை எடுத்து அவனிடம் அலட்சியமாக அளித்தான். அதையும் வாங்கிக் கொண்டு அவன் தொடர்ந்து இரைய கால் சராயில் இருந்து ஒரு பெரிய நாணயத்தை எடுத்து அதில் எச்சில் துப்பித் தரையில் எறிந்தான் தாமஸ்.
உன் பொண்டாட்டியோட கச்சை அவுத்து கோவண்ட் கார்டன்லே ஆட வச்சு காசு வாங்கினியா? ஸ்கர்ட் இருந்ததா அதையும் உருவிட்டாளா தேவிடியா?
காசைப் பொறுக்கிக் கொண்டூ சாரட்டில் தாவியேறி வேகமாக அதை விரட்டும்போது குனிந்து பார்த்துச் சொன்னான் வண்டிக்காரன். அவனுடைய காக்னி அதிசயமாக தெரிசாவுக்கு முழுக்க அர்த்தமானது.
சாரட்டுக்குப் பின்னால் இரைந்து கொண்டு தாமஸ் ஓடியபோது அவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் தரக்கேடாக இருந்ததை தெரிசா பொருட்படுத்தவில்லை என்று நடிக்க வேண்டிப் போயிற்று.
அவள் தோளில் மாட்டிய துணி சஞ்சியும், கையில் பழக்கூடையும் அதற்குள் செருகி வைத்த கருப்புக் கச்சுமாக கிங்க்ஸ் கிராஸ் புகைவண்டி நிலையத்தில் நுழைய, பின்னால் ஏதோ சத்தம்.
சேச்சி. ஆ முலக்கச்சு எண்டெ பெண் குஞ்ஞினு தரணே. திரட்சி ஆகிப் பத்து வருஷமாயிடுத்து. பசியும் தாகமுமா அலைஞ்சிண்டே இருக்கோம். வஸ்திரமும் இல்லே. அம்மே, மூகாம்பிகே. ரட்சிக்க மாட்டியா? சேச்சி. நீயாவது என்னைக் கவனியேன். அம்பலப்புழை தேகண்ட பிராமண குடும்பத்திலே வாக்கப்பட்ட ஸ்திரி நான். குப்புசாமி அய்யருக்கும் விசாலாட்சி அம்மாளுக்கும் மருமகளா வாச்சவள்.
யாரோ பெண் தமிழிலும் மலையாளத்திலும் விம்மும் குரல். தெரிசா ஒருவினாடி தயங்கி நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். கருத்த மழையும் பனி மூட்டமும் தவிர வேறே எதுவும் கண்ணில் படவில்லை.
ஸ்டேஷன் உள்ளே ரயில் வண்டி சத்தம் உயர்த்திக் குரல் கொடுத்து அழைத்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)
- சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்
- ஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்
- நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)
- “பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஒபாமா”
- நினைவுகளின் தடத்தில் – (21)
- தானத்தில் சிறந்தது உடல்தானம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5
- நகரத்தின் ஆன்மாக்கள்
- தாகம்
- ஒரு தினக் குறிப்பு
- அப்பாவின் சொத்து
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- உறவுச் சங்கிலிகள்
- குட்டி மகளின் ஞாபகம்
- நிழலற்ற பெருவெளி…
- நிலையின்மை
- மானிடவியல்
- மௌனித்த நேசம்
- தீபாவளி 2008
- கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி
- எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>
- இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
- வேத வனம் விருட்சம் 11 கவிதை
- மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி
- திசைமாறிய பறவைகளின் கூடு
- இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது ! (கட்டுரை : 3)
- ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!
- ஒரு பனை வளைகிறது !
- நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி
- திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்
- அட்மிஷன்
- ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
- “அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி
- கவிதை௧ள்
- நாம் காலாண்டிதழ்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து
- ” கண்ணம்மா என்னும் அழகி “
- விஸ்வநாதன் ஆனந்த்
- நனவாகும் கனவு
- ஒபாமா
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்
- கடலில் வீசப்பட்ட குழந்தை
- கோடி கொடுத்துத் தேடினால்
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- வரம்புகளை மீறி