சிட்டுக்குருவி

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

ரா. கணேஷ்


ஆறு வயதிருக்கும்
மாடி வீடு
சிவப்பு நிற சிமெண்ட் தரை
வழவழப்பாய்

உத்தரத்தில்
மின்விசிறி இல்லாத
எங்கள் வீடு

தேர்வுகள் மடிந்து போய்
விடுமுறைக் காலமது

சாப்பாட்டுக் கூடைக்கு
விடுமுறைக் காலமது
உத்தரத்தில் விசிறி போல்
காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்

கீச் கீச்சென்று
பாட்டும் சிறகடிப்புமாய்
கூட்டைக்கட்டியிருந்தன
என் சிகப்புக் கூடையில்
குருவிகள்

விண்ணில் பறப்பதும்
எங்களைப் பார்த்து வியப்பதும்
குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதும்
அழகாய் இருந்தது
அந்த குடும்பம்

நெல் மணிகள் இடுவதும்
என் பிஸ்கட்டை சா¢ பாதி
கொடுப்பதுமாய்
சுகந்து போனது விடுமுறை

“குருவிக்கூட்டைக் கலைத்தால்
குடும்பம் விளங்காது”
வேறு கூடை வாங்கிக் கொள்
என்றாள் அம்மா..

இன்று…
நகரத்தில்
என் வீட்டில்
மின்விசிறி உள்ளது
சங்கீதம் சீடி மூலம்
ஒலிக்கிறது
எங்கு தேடியும்
குருவிகளை மட்டும் காணோம்

நிசப்தம் என்னுள்
திரவமாய் இறங்கி
பயம் கொப்பளிக்கிறது… !


ganeshadhruth@yahoo.co.in
-ரா. கணேஷ்

Series Navigation

ரா.கணேஷ்

ரா.கணேஷ்

சிட்டுக்குருவி

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

சாந்தன்


1.

இளங்கோ தொண்ணூற்றைந்தில் இடப்பெயர்வோடு ஊரை விட்டுக்கிளம்பியவன்தான். சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, என்று கட்டங்கட்டமாக கனடா போய்ச்சேர்ந்து விட்டான். குடும்பத்தையும் பிறகு கூப்பிட்டாயிற்று. வயது இப்போ நாற்பதுக்கு மேலாகியிருக்கும், அவனுக்கு.

சின்ன வயதில் ஆள் நல்ல வடிவு. பெரிய தலை, பெரிய கண்கள், நல்ல சொக்கு. நல்லாய்ப்பாடுவான். குரலும் பெரிது; சில்வண்டுப்பயல். பாட்டென்றால் போதும், பார்க்கிறபோதெல்லாம் அதுதான்! தன்பாட்டில் உட்கார்ந்து, தலையையும் ஆட்டி ஆட்டி… விரும்பியவர்கள் நின்று கேட்டுக்கொள்ளலாம். எப்போதும் ஒன்ற்¢ரண்டு பேராவது நிற்பார்கள். ‘மருதமலை மாமணியே..’யை எப்படித்தான் அப்படி மூச்சுப்பிடித்துப் பாடுவானோ, ‘…வேலய்யா,ஆ,ஆ,ஆ…’ என்று இழுக்கையில், அந்தச் சின்ன நெஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து இப்படி இவ்வளவு காற்று வர முடியுமா என்று வியப்பாக இருக்கும்; பயமாயும். சொன்னாலுங் கேட்கான். ரேடியோவிலோ, ஒலிபெருக்கியிலோ ஒலிக்கும் பாட்டுக்களை ஒருதடவை கேட்டால் போதும்.

நல்ல சோழகம் வீசிக் கொண்டிருந்த ஒருநாள், பின் திண்ணையிலிருந்து லயித்துப் பாடிக் கொண்டிருந்தான் : ‘சிட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு…’
தம்மையறியாமலே வந்த சிரிப்பை, கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அந்தக்கணமே அடக்கிக்கொண்டு விட்டார்கள், குழந்தை மனதைக் குழப்பி விடக்கூடாதேயென்று.
அண்ணன் மட்டும் சொன்னான், ‘இளங்கோ, சிட்டுக்குருவிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை, எங்குந் தாராளமா இருக்கு. வேணுமெண்டா வா, பட்டணம், சுண்ணாகம், சாவகச்சேரி, எந்தச் சந்தையெண்டாலுங் கூட்டிக்கொண்டு போய்க்காட்டுறன்…!’
‘டேய், அவன் சின்னப்பிள்ளையோடை உனக்கென்ன பகிடி?’, அண்ணனைக் கண்டித்த கையுடனே அம்மா இளங்கோவைப் பார்த்துச் சொன்னா,
‘தட்டுப்பாடு இல்லையப்பு, கட்டுப்பாடடா. கட்டுப்பாடு!’
அடுத்தகணமே இளங்கோ திருத்திக்கொண்டு பாடத் தொடங்கி விட்டான்.

வேடிக்கையென்னவென்றால், அவன் முதலிற் பாடியதிலிருந்த விஷயம் உண்மையாகிவிட்டது போலிருக்கிறது, இன்று!
என்னாயிற்று இந்தச் சிட்டுக்குருவிகளுக்கு? எங்கே போயின, எல்லாமே? அண்ணன் சொன்ன பட்டணம், சுண்ணாகம், சாவகச்சேரி- ஓரிடமும் ஒன்று கூட கண்ணிற் படுவதாயில்லை! ஏன், யாழ் குடாவில் எங்கணுமே! சிவனுக்கு வியப்பாக இருந்தது.

2.

லேகியம் மூலந்தான் சிட்டுக்குருவியோடு சின்ன வயதில் அறிமுகம் சிவனுக்கு! சரியாகச் சொன்னால், லேகிய விளம்பரம் மூலம்.

திண்டு திண்டாய்ப் புடைத்த தசைகளோடு, ஒரு கையைத் தொண்ணூறு பாகையில் மடித்து உயர்த்தி, மறு கையை நாரியின் பின்னால் வளைத்தபடி, ஒரு சின்ன ஸஸ்பென்டரோடு நிற்கும் ஒருவரின் படத்தின் கீழ், ‘யானைப் பயில்வான் சிட்டுக்குருவி லேகியம்’ என்று, வீட்டில் வாங்கிய பத்திரிகை, சஞ்சிகை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பக்கத்தில் வெளியாகியிருக்கும் அந்த விளம்பரம். ‘பாலர் மல’ரைத் தேடிப் பக்கங்களைப் புரட்டுகிற வேளைகளில் எப்படியோ சந்திக்கிற அந்த மனிதர்தான் பயில்வானாம்!
பேரே முதலில் அதிசயமாய்த் தானிருந்தது.

லேகியமென்பது அந்நியமில்லை, தெரிந்த விஷயந்தான்: பாட்டனாரின் மருந்து அறை அலுமாரியில், கறுப்பு, மண்ணிறம் என்று வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு போத்தல்களில் அடுக்கியிருக்கும் லேகியம். காய்ச்சும் வேளைகளில், மருந்துக் கொட்டில் மட்டுமன்றி, வீடு, வளவெல்லாம் நெய்யும் மூலிகையுமாய்க் காற்றெல்லாம் கலந்து மணக்கும். ஆனால், இதென்ன, சிட்டுக்குருவி? அது எப்படியிருக்கும்? எப்படியோ, குருவிதானே? குருவியிலா, லேகியம்?

அடுத்த தடவை அப்புவிடமே கேட்டான். பாட்டன் சிரித்துவிட்டுச் சொன்னார், ‘அப்பிடித்தான் ராசா சொல்றாங்கள்…’
‘குருவியிலை எப்பிடி அப்பு செய்யிறது?’
‘அதனுடைய இறைச்சியிலாயிருக்க வேணும்…’, அவருக்கும் லேகிய பாகம் சரியாகத் தெரிந்திருக்கவில்லை.
‘ச்சீ ! இறைச்சியிலையோ !’
‘ஏன், கோழி இறைச்சி சாப்பிடுகிற ஆட்கள் இல்லையா?’
‘சிட்டுக்குருவி எப்பிடியிருக்கும்?’
‘அடைக்கலங் குருவி, பலாக்கொட்டைக்குருவி- அதுகளைப் போல இருக்கும்… சின்னதா…’
தலையைச் சரித்துப் புருவத்தை நெரித்த பேரனைப் பார்த்து அப்பு மீண்டுங் கேட்டார்,
‘சரி, ராசாக்கு கரிக்குருவி தெரியுந்தானே?’
‘ஓ!’, என்றான், உற்சாகமாய். புதிதாய்க் கட்டியிருந்த ரேடியோ ஏரியல் கம்பியில் ஒவ்வொரு நாள் காலையிலும் வந்திருந்து, தன் பாட்டில் கன நேரம் பாடிக் கொண்டிருக்கும் கரிக்குருவி. பல்லுத் தீட்டுகிற போதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழக்கம்.
‘அதைப்போலத்தான். கொஞ்சம் சின்னன். கறுப்புக்குப் பதில், மண்ணிறமாயிருக்கும்.’

3.

அடுத்த சனிக்கிழமை பின்னேரம் பட்டணம் போனபோது சிவனுக்கு ‘சிற்றம்பலம் புத்தகசாலை’யில் வாங்க வேண்டிய ‘சர்க்கஸ் ராஜா’ நினைவாகவே இஇஇருந்தது. ஆனால், அப்பு புத்தகசாலைக்கு நாலைந்து கடைகள் முன்னதாகவே காரை நிறுத்திவிட்டு இஇஇஇஇறங்கினார். அவர் வழக்கமாக மருந்துச் சரக்குகள் வாங்குகிற இஇடமுமில்லை, இஇது. வெள்ளை மேல் துண்டைச் சரி செஇய்தபடியே, ‘இஇறங்கி வா, ராசா’, என்றார்.

அது ஒரு பெரிய பலசரக்குக் கடை. அப்புவைக்கண்டதும் கடைக்காரர் எழுந்தார், ‘வாங்கோ, பரியாரியார்…’
‘நான் இஇஇஇண்டைக்கு உங்களிட்ட ஒண்டும் வாங்கப் போறதில்லை, துரையர்,’
‘பரவாயில்லை, இஇஇஇஇருங்கோ,இஇ இஇருங்கோ’
‘இஇஇஇல்லை, இஇஇஇருக்கவும் நேரம் வராது… உங்கட கடையிலை என்ர பேரனுக்கு ஒரு சாமான் காட்டிப் போட்டுப் போகப்போறன்’
கடைக்காரருக்குப் புரியவில்லை. என்றாலும், ‘காட்டுங்கோ, வடிவா’ என்றார், சிரித்தபடியே.
பேரனுக்கும் புரியவில்லை.

‘இஇஇஇங்க பாரய்யா…’. என்று அப்பு காட்டிய இஇடத்தில், கடையின் அகலமான கதவுக்கு வெளியே ஒடுங்கிய திண்ணைச் சுவரில், ந்¢லைக்கு மேலே முட்டியொன்று மாட்டியிருந்தது.
கள்ளு முட்டி மாதிரித்தான். வளம் மாறி, வாய் சுவரோடு. சுண்ணம்பால் பொட்டுப் பொட்டாய்ப் பூசியிருந்தது. வயிற்றில் ஒரு ஓட்டை. அதன் வழியே வைக்கோல் போல ஏதோ நீட்டியபடி. பார்த்துக்கொண்டிருந்தபோதே ஓட்டையினுள்ளிருந்து ஏதோ எட்டிப்பார்த்தது.
குருவி! ஓட்டை விளிம்பில் தத்தி உட்கார்ந்தது.
‘இதுதான் சிட்டு!’ என்றார், அப்பு. கடைக்காரர் புரிந்து கொண்டவராய்ச் சிரித்தார். முட்டியினுள்ளே குஞ்சுகளோ…?
தெரிகின்றனவா என்று பார்த்தான்.ஒன்றும் தெரிவதாயில்லை…
‘பார்த்தாச்சா? போவமா?’
சிவன் மனமில்லாமலே தலையாட்டினான். டுர்ரென்று பறந்தது, சிட்டு. தெருவைத்தாண்டி, மிதந்தபடி ஒரு வட்டம் போட்டு, எதிர்க்கடை முற்றத்தில் போய் இருந்தது. அங்கே இது போல் இன்னும் ஐந்தாறு. கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார், அப்பு.
‘அதிலை போய்ப் பாப்பம்’, என்றான்.
தெருவைத்தாண்டி, சிட்டுகளை மிரட்டாத தொலைவில் நின்றார்கள். அவை சுறு சுறுப்பாயிருந்தன; ஒரு கணம் ஓயாமல் குனிவதும் நிமிர்வதுமாய். சின்னச் சொண்டால் எதையெதையோ பொறுக்கியபடி, கெந்திக்கெந்தி, கீச்சுக் கீச்சென்று! பிடித்து வைத்திருக்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது.

‘இந்தக்கடையிலை சிட்டுக்குருவி வாங்கலாமோ? தருவினமோ?’ தயங்கியபடி கேட்டான்.
‘அதைப் பிடிக்கவுமேலாது, வாங்கவுமேலாது’.
‘அப்ப எப்பிடி இந்தக் கடையிலை வந்திருக்கு?’
‘இப்பிடி ஒரு சுவரிலை, உயரமா, ஒரு ஓட்டை முட்டியை மாட்டிவிட்டமெண்டா, அதுகள் விரும்பினா வந்திருக்கும்.’
‘நாங்களும் வீட்டிலை ஒரு முட்டியை மாட்டி விடுவமோ?’
‘இங்கயிருந்து அவ்வளவு தூரம் வராதுகள்.’

அன்று, சர்க்கஸ் ராஜாவையும் மறந்தாயிற்று.

அடுத்தநாள் காலை, முதல் வேலையாய் வீட்டுக்கோடிச் சுவரில் களவாய் ஏணி சார்த்தி, அண்ணனும் சிவனுமாய் மாட்டி வைத்த முட்டி மட்டும், வெகு காலம் – அப்புவும் காலமாகி, அவர்களும் படிப்புக்கென்று கொழும்பு புறப்படும் வரை – வெறுமனே கிடந்தது; பிறகு ஒரு பொங்கலுக்கு முதல் நாள் தூசு தட்டும் போது யாரோ விழுத்தி உடைக்கும் வரை.

4

அடுத்த முறையும் சிட்டுக்குருவியை அப்புதான் காட்டித் தந்தார். இந்தமுறை அது தலைவாசலிலிருந்த அவருடைய கண்ணாடி போட்ட பெரிய புத்தக அலுமாரிக்குள்ளேயே இருந்தது.

தடித்த மட்டையும் இள மஞ்சள் நிற உறையுமாய் இருந்த ஒரு மொத்தப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார்,’நெடுகக் கதைப் புத்தகங்களைப் படிச்சுக் கொண்டிராமல், இதையும் படி…’

‘பாரதியார் பாடல்கள், முழுத்தொகுப்பு. சென்னை அரசாங்க வெளியீடு, 1953’ என்றிருந்தது.
‘ஓடி விளையாடு பாப்பா’ பாரதியார்தான்.

பொருளடக்கத்தைப்புரட்டிக்கொண்டிருந்தபோது, ‘சிட்டுக்குருவி’ என்றிருந்தது. புரட்டினான்.
‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே’, என்ற முதலிரு வரிகளும் அரை நூற்றாண்டாய் சிவன் மனதில் பொளிந்து போய்க் கிடக்கின்றன – காலத்துக்குக் காலம் பொருளையும் புரிதலையும் மாற்றிக் கொண்டு!

5

இன்னொரு சிட்டுக்குருவியும் அப்போது நெடு நாளாய் நாவில் நடமாடியது. ஏன், இருந்திருந்து விட்டு இப்போதுந்தான்!
‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி,சேதி தெரியுமா?’
படம், ‘டவுன் பஸ்’ஸா? பாடியது ராஜேஸ்வரியா? சரியாய் நினைவில்லை. றெக்கோர்ட் கூட இருந்தது வீட்டில். இசைத்தட்டைச் சுழல விட்டு விட்டுப் பாட்டுப் பெட்டியின் முன் எல்லாம் மறந்து குந்தியிருப்பார்கள், அண்ணன், தம்பி, சிவன், எல்லாரும்.

6

உண்மையில் இவர்களை வரவேற்றவையே சிட்டுக்கள்தான்! வெறுமையாகிக் கிடந்த வீட்டில் குரல்கள் எதிரொலிக்க, வேலையாட்கள் லொறியிலிருந்து சாமான்களை இறக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஜன்னல் மேலிருந்த சுவர்க் காற்றோட்டைக் கல்லுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தபடி ஒன்று, ‘வாங்கோ, வாங்கோ’ என்பதே போலக் குரல் காட்டிக் கொண்டிருந்தது. திறந்திருந்த கதவின் வழி லாகவமாய் வளைந்து வந்து, மின் விசிறி மேல் உட்கார்ந்த இன்னொன்று, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே, சுவரிலிருந்ததுடன் சேர்ந்து குரல் கொடுத்தது.

திருகோணமலை வீடு நகருக்குள்ளேயே இருந்தது. வலு வசதிதான்- வீட்டிற்கு முன்னால் ஆறடி அகலத்திற்கு மட்டுமேதான் மண்ணைப்பார்க்க முடிந்தது, என்பதைத் தவிர. வளவே கிடையாது, வளவெல்லாம் வீடு. முழுவதும் சீமெந்து, சிவப்பாய்.

ஜன்னல்களுக்கு இரண்டங்குல சதுரக்கம்பி வலை அடித்திருந்தது. அந்தக்கம்பிகளிலும், புதிதாய் வெள்ளையடித்திருந்த சுவர் விளிம்புகளிலும் ஆங்காங்கு, வெள்ளையும் சாம்பலுமாய் புள்ளியே போல் ஒட்டிக் காய்ந்திருந்த அவை என்ன? சிட்டுக்களின் உடனிருப்புக்கு இப்படியும் ஒரு பரிமாணமோ?

ஒரு விடுமுறை நாளன்று பிற்பகல், சாப்பாட்டின் பின் பாயைத் தட்டி விட்டுச் சிவன் சரிந்த போது, மேலே கூரை விசிறியின் அடிக்கோப்பையில் வைக்கோல் தும்புகள் சில நீட்டிக்கொண்டிருந்தது கண்ணிற் பட்டது. எழுந்தோடி, மெல்லச்சுழன்று கொண்டிருந்த விசிறியை நிறுத்தினான். கோப்பைக்குள்ளிருந்து மெல்லிய கீச்சொலிகள் கேட்ட மாதிரி.
அதன் பிறகு அந்த விசிறியின் விசையில் கை வைத்த நினைவேயில்லை.

இவர்களுக்குச் சிட்டுக்கள் புதிதாயிருந்தாலும், அவைகளுக்கு ஆட்கள் புதிதாய்ப் பட்டதுபோல் தெரியவில்லை. வீடு முழுவதும் அப்படி ஒரு சுதந்திரம், ஒரு சுவாதீனமான புழக்கம்; தங்களின் இடத்தில் இவர்களை அநுமதித்த பாங்கு. ஒரு கணமும் ஓய்வே காட்டாத துடினம்; சக்தியின் துளியாய்த் தெறித்த சின்னச் சீவன்கள்.

‘இதுகள் சரியான அரிகண்டம் உங்களுக்கு?…’ ஊரிலிருந்து வந்திருந்த யாரோ சொன்னார்கள், ஒரு தடவை. ‘சீ, பாவம்!…’ அம்மா சொன்னா, ‘குழந்தைகள் மாதிரி, நல்ல பய்ம்பல். வீட்டுக்கும் ஒரு கலகலப்புத்தானே…’

வேலை இடமாற்றம் ஊரோடு என்றிருந்திருந்தால், ஒரு பெட்டிக்குள் நாலைந்தை எப்படியோ பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்த்திருக்கலாந்தான்; ஆனால், மீண்டுங் கொழும்பிற்கே திரும்பவேண்டியிருந்தது.

7

நாலாண்டு முடிய, எப்படியோ ஒரு படியாய், யாழ்ப்பாணத்தோடு வந்த போது போருங் கூடவே வந்திருந்தது.
மெல்ல மெல்லத் தொடங்கி, குண்டும் ஷெல்லுமென்று அது மூர்க்கங் கொண்ட வேளையில், இருப்பு என்பதே நாளாந்தப் பிரச்சினையாகி விட்டிருக்கும் காலத்தில், வேறெந்தச் சிந்தனைதான் இருந்திருக்க முடியும்?

வெறிச்சிட்டுப் போய்க் கிடந்த பட்டணத்தில், ஏதோ வேலையாய், வேர்க்க விறுவிறுக்க சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்த ஒரு பகல் போதில், முன்னர் ‘சிற்றம்பலம் புத்தகசாலை’ இருந்த இடத்தைத் தாண்ட நேர்ந்த வேளையில்தான், சிட்டுக்கள் மீண்டும் சிவன் மனதில் சிறகடித்தன.
கண்டே கனகாலம் என்பதும் நினைவில் உறைத்தது.

இல்லாமல் போய்விட்ட இந்தக் கட்டடங்களோடு, இல்லாமலாகினவோ, அவையும்?
சரி, பட்டணந்தான் போகட்டும், ஊரோடு, ஊர்மனைகளோடு ஏன் வரவில்லை? சிட்டுக்கள் – குறைந்த பட்சம், அநேகமாக – நகர வாசிகள் என்ற தன் ஊகம் சரிதானோ?

என்றாலும், நினைவு வரும்போதெல்லாம்,போய்வருகிற இடங்களிலெல்லாம், நோட்டம் விட்டான்.
ம்ஹ¥ம், இல்லை; ஓரிடமுமே. எங்கேதான் போயிருக்கும், எல்லாம்?

இருந்தாற் போல ஒரு நாள் தோன்றிற்று : மைல் கணக்கில் கூரைகளையும் சுவர்களையுமே குலுங்க வைக்கும் இந்த அதிர்வுகளைத் தாங்காது அழிந்து பட்டிருக்க வேண்டும், அவை!

அப்படித்தானிருக்கும்! ஐந்தாறு ஆண்டு கால அவதானிப்பில், வேறெந்த சாத்தியமும் விளங்கியதாயில்லை.

8

அதைப் படித்தபோது அதிசயமாயிருந்தது. ‘எங்கே போயின, இந்தச் சிட்டுக்கள்?’ என்ற தலைப்புடன், ‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதியில், ‘டெய்லி நியூ’சில் ப்¢ரசுரமாகியிருந்தது அந்தக் கடிதம்.

அதே வேளை ஒரு ஆறுதலும். ‘என்னைப் போன்ற அந்த மற்ற மடையன் யார்?’ என்ற நினைவுடன் படித்தார் சிவன். ‘முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு காண முடிந்தவற்றை இப்போது எங்குமே காண முடியவில்லையே, என்னாயிற்று ?’ என்று அதிசயமும் ஆதங்கமுமாய் இருந்தது , அந்தக் கொழும்பு வாசி யின் கடிதம் முழுவதும்.

படித்த பின், குண்டும் ஷெல்லும் சண்டையுந் தந்த சத்ததையும் அதிர்வையுந் தாங்காது, அழிந்தோ, புலம் பெயர்ந்தோ போய் விட்டன என்ற தனது ஊகம் தவறென்று பட்டது. ச்¢ட்டுக்களை இல்லாமலாக்கி விடுகிற அளவுக்கு கொழும்பிலும் அதன் அயலிலும் சத்தங்கள் கேட்டிருக்கவில்லையே?…

இரண்டு வாரங்களாகியிராது, பதில் போல ஒரு கடிதம். நியூஸீலந்திலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். யாரோ, பெரேரா. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர் என்று தெரிந்தது. ‘அந்தச் சிட்டுக்கள் வேறெங்கும் போகவில்லை, இங்கு வந்திருக்கின்றன’, என்றார், பெரேரா. இலங்கையின் சூழலுங் கால நிலையும் அவற்றிற்கு ஒத்துக்கொள்ளாது போய் விட்டிருக்கலாம் என்ற தனது ஊகத்தையுங் குறிப்பிட பெரேரா மறக்கவில்லை.

ஒப்புக்கொள்ள முடியாமலிருந்தது, இலங்கையிலிருந்துதான் சிட்டுக்கள் நியூஸ்£லந்திற்குப்போயிருக்க வேண்டுமென்பதில்லை.
‘அவை உலகளாவியவை, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பெரும்பகுதி அவற்றின் இயல்பான வாழ்விடங்கள்’ என்று செந்தூரன் முன்பொருமுறை சிவனுக்குச் சொல்லியிருந்தார், ‘அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, எங்கும், அவை பரவியோ,பரப்பப்பட்டோ இருந்தன…அமெரிக்காவில் ஒரு பீடை கொல்லியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிட்டு, பிறகு அதுவே ஒரு பீடை என்று சில மாநிலங்களில் அழிக்கப்பட்டது, தெரியுமா, உனக்கு?’

செந்தூரன் இந்தச் சிட்டுக்கதையை அப்போது சொல்ல வேண்டி வந்தது அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு வெளி நாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவரிடம் ஆல்பங்களைக் காட்டிக் கொண்டிருந்தபோது, இருபதாண்டுகளுக்கு முந்திய அந்தப் படமும் அவர் பார்வையில் பட்டது.

9

அந்தப்படத்தை யூசு·ப் எடுத்தார்.

லெனின்கிராத் சிட்டுக்கள் எப்படி அந்தப் படத்தில் தெளிவாக இருக்கின்றனவோ, அதை விடத் தெளிவாக சிவன் மனதிலும் இன்னமும் அவை இருக்கின்றன.

மீண்டும் சென்.பீற்றேர்ஸ்பேர்க் ஆகிவிட்ட லெனின்கிராத், இவர்கள் போன வேளையில் லெனின்கிராத் ஆகவே இருந்தது. இரண்டாளுயரச் சிங்கங்களிரண்டு இரு புறமும் கம்பீரமாக நிற்கிற வாசலோடு அரண்மனை போலிருந்த அந்த ருஷ்ய மியூஸியமென்கிற கலைக் கூடத்தைப் பார்த்துவிட்டு, தங்கமுலாமிட்ட வேலிகளுக்கப்பால் பூஞ்செடிகளும் பசுமரங்களுமாய்ப் பொலிந்து கிடந்த புஷ்கின் சதுக்கத்தில் வரிசையாய்க் கிடந்த வாங்குகளிலொன்றில் போய் உட்கார்ந்தார்கள். மற்ற நண்பர்கள் வர வேண்டும்.

கலைக் கூடத்திற்குப் புறங்காட்டி நின்ற அழகான புஷ்கின் சிலை. முன்னால் நீண்ட பாதை. கோடை கால இளம் பகல். நிலவாய் எறித்த வெய்யில்.
‘என்ன அற்புதமான இடம்! வாழ்நாள் முழுதும் இப்படியே உட்கார்ந்து விடலாம்!’ என்றார், யூசு·ப்.
‘அங்கே பார்த்தீர்களா?’
மற்ற இருக்கைகளில் உட்கார்ந்திருக்கிறவர்களைச் சுற்றிச் சிட்டுக்களும் புறாக்களுமாய்ச் சிறகடித்துக்கொண்டிருந்தன.

‘நாங்களும் வாங்கலாம்’
பறவைத் தீனிப் பொட்டலத்தை வாங்கி வரும்போதே சடபட ஒலியுடன் காற்று முகத்தில் மோதச் சூழ்ந்து கொண்டன புறாக்கள்.
ஒன்று தோளிற் கூட உட்காரப் பார்த்தது, துணிந்து.
தானியத்தை விசிறிய பிறகுதான் எட்டியிருந்த சிட்டுக்கள் கிட்ட வந்தன. புறாக்கள் போலன்றி – என்னதான் உணவுக்கும் உறையுளுக்கும் மனிதனில் தங்கியிருந்தாலும் – அவனோடு உறவு பாராட்டாது, சிட்டுக்கள் விலகியிருப்பதாகவே பட்டது. பிடிப் பிடியாய் வீசினான்…
அதே துள்ளல், அதே துடிப்பு !
எந்த வித்தியாசமுமில்லை; எங்களூர் சிட்டுக்கள் போல் அதே அளவு, அதே நிறம்…

‘அப்படியே இருங்கள் சிவா ‘ என்று சொல்லி விட்டு யூசு·ப் அந்தப் படத்தை எடுத்தார்.

அங்காவது இப்போது சிட்டுக்களிருக்குமா?

10

அதிர்வுகள் கொஞ்சம் அடங்கிய காலம் வந்தது, அதிசயம் போல. ஏதோ கனவாய் ஒரு இடைவெளி. ஏ9 திறந்தது. எந்தத் தடங்கலுமின்றி, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வேனிலேயே போய் வர முடிந்தது! கிட்டத் தட்டப் பதினைந்து ஆண்டுகளின் பின்னர்!
ஆக, போக வர இவ்விரண்டு இடங்களில் செக்கிங் என்று இறங்கி ஏற வேண்டும். இவ்வளவு நாளும் கப்பலென்றும் பிளேனென்றும் பட்ட பாட்டோடு பார்க்கையில் இறங்கி ஏறுவது பெரிதா, என்ன?

அப்படிப் போய்த் திரும்பிய முதல் பயணத்தில், ஓமந்தையில் சோதனைக்காக இறங்கி, வரிசையில் நின்ற வேளையில்தான் சிவன்அவற்றைக் கண்டார்.

பயணிகளின் பொதிகள், பெட்டிகளை வைத்துச் சோதிக்கிற கொட்டிலில், கூரையோடு, அங்கங்கே சின்னன் சின்னனாய்க் கடதாசிப் பெட்டிகள். ரோர்ச் பற்றறிப் பெட்டிகள் போல இருந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு விரற் கடை ஓட்டை. நூலாலோ, கயிற்றாலோ வளையோடு சேர்த்துக் கட்டியிருந்தது.

அவை ஒவ்வொன்றின் மேலும், உள்ளும் இருந்து பறக்கிற சிட்டுக்கள்! அந்தச் சூழலின் இறுக்கத்தையே இல்லாமலாக்கிக் கொண்டிருந்த சிட்டுக்கள்… அங்கு நிற்க வேண்டியிருந்த வேளை முழுதும் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘இங்கே இருந்திராத குண்டும் ஷெல்லுமா?…’

இவர்களிடம் எப்படிக் கேட்பது? என்ற தயக்கம் மட்டும் இல்லாமலிருந்திருந்தால், எப்படியோ ஒரு பெட்டியைக் கேட்டு வாங்கி வந்திருக்கலாம்…

11

‘அங்கு கேட்டுப் பார்க்கலாம்! -இருந்தாற்போல் அந்த யோசனை வந்தது.

படிக்கிற காலத்தில் பட்டணம் போகிற வேளைகளில், அந்த இடத்தில் ஒரு பெரிய அரசமரம் நின்றது. தெருக்கரையிலிருந்து நாலடி தள்ளி. அடி மரத்தில் ஆளுயரத்தில், வெள்ளைத் தீந்தையால் ஒரு பஸ் படமும் , பஸ்ஸின் முன்னால் ஒரு பெரிய ஆச்சரியக் குறியும் வரைந்திருந்த ஒன்றரை அடிக்கு ஒரு அடி கறுப்புத் தகரம் ஆணியால் அடித்திருந்தது.

அரசின் கீழேயிருந்த ஒரேயொரு ஓட்டுக்கட்டிடத்தில் இரண்டு கடைகள். பட்டணப் பயணத்தைச் சைக்கிளில் மேற் கொள்ளும்போது அநேகமாய் ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது இரண்டிற்காகவுமே இறங்கவேண்டியிருந்த கடைகள் அவை. முன்னால் பித்தளை பொய்லரும் அதன் கீழ் மறைத்த அடுப்பும், அருகில் வடை, வாய்ப்பன், சூசியம் அடுக்கிய கண்ணாடிப்பெட்டியுமாய் இருந்த தேநீர்க்கடை ஒன்று. அடுத்தது, சரஞ்சரமாய் ரயர்களைக்கட்டித்தொங்க விட்டு, கீழே தகரப் பீப்பாயொன்றில் அழுக்குத்தண்ணீரோடு இருந்த சைக்கிள் கடை.

பதினைந்து ஆண்டு கால வெளியூர் வாழ்வின் பின்னர் திரும்பிய போது, இரண்டு கடைகளுமே பூட்டப்பட்டுக் கிடந்தன. அடித்திருந்த தகரம் பிடுங்கப்பட்ட அரசு நின்றது.

இன்னும் இரண்டு வருடப் போரின் பின், அந்த அரசுமில்லை. கடைகள் இருந்த இடத்தில் மட்டும் ஒரு பெரிய கற் குவியல். கற் குவியல் மட்டும் கன நாளாய்க் கிடந்தது, அதன் மேல் பூண்டுங் கொடியுமாய்ப் படர்ந்து மூடி.

கனவு போல் வந்த அந்த இடை வெளிக் காலத் தொடக்கத்தில் ஓர் நாள், குவியலாய்க் கிடந்த கல் லொறியில் ஏறிக் கொண்டிருந்தது. யாரோ இடத்தைத் துப்புரவு செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு மாதமாகியிராது, வெளித்துச் சுத்தமாய்க் கிடந்த காணிக்கு அழகாய்க் கம்பி வேலி போட்டு, அருகோடு, ‘பூஞ்சோலை’ என்றொரு பெயர்ப்பலகை. உள்ளே, காணியின் நீளப்பாட்டில், ஒரு புறமாய், பத்துப் பன்னிரண்டு அடி அகலத்தில் ஒரு பச்சை வீடு! மீதி இடமெல்லாம், சட்டிகளில், நிற நிறமாய்க் குரோட்டன்களும், கடதாசிப் பூஞ் செடிகளும்.
‘பச்சை வீட்டில், நிச்சயம் வெளியூர்த்தாவரங்கள் தானிருக்கும்’ என நினைத்தபடி தாண்டிப்போனார்.

அடுத்த வாரம் அந்த வழியாய்ப் போனபோது, ‘பூஞ்சோலை’ பெயர்ப்பலகையோடு அருகில் இன்னொரு பலகை. ‘வளர்ப்புப்பறவைகள் விற்கப்படும்’.

வேலியினுள்ளே வீடு போலக் கூரை அடித்து, உள்ளே தேங்காய் மட்டைப் பொந்துகளுமாயிருந்த ஒரு பெரிய வலைக்கூண்டில், பச்சை, மஞ்சள், நீலமென்று சிறகடிக்கும் லவ் பேட்ஸ் வடிவாய்த் தெரிந்தன. வேலி, வாசலெல்லாந் தாண்டிக் காதில் தொடர்ந்த கலகலப்பொலிகள்…

‘அங்கு கேட்டுப் பார்க்கலாம்!’

12

பைக்கை ஓரமாய் விட்டுக் கைப்பிடிப்பூட்டைப்பூட்டிக்கொண்டு சிவன் உள்ளே போனார்.

‘வாங்கோ, ஐயா…’ என்ற இளம் பெண்ணிடம் லவ் பேட்ஸ் கூண்டைக் காட்டினார்.
‘இதுகளை விட வேறென்ன பறவைகள்¢ருக்கு?’

இரண்டு எட்டு உள்ளே போய். ‘அண்ணை…’ என்றாள்.

‘சொல்லுங்கோ?…’ என்றபடி வந்தவனிடமும் அதே கேள்வியை முன்வைத்தார்.
‘உள்ள வாங்கோ’, பச்சை வீட்டினுள்ளே போனான்.
‘இது, கனறீஸ்…’
கனறீஸ்?..
சீவியத்தில் கண்டேயிராத பறவைகள்! செத்தேன் சிவனே என்றிருந்தன.
‘…இது, ஆபிரிக்கன் லவ் பேட்ஸ்’, மற்றக் கூண்டின்முன்னே போய் நின்று ஒரு மூலையில் முடங்கியிருந்தவற்றைக் காட்டினான்.

ஏதாவது கேட்கவேண்டுமே என்பதற்காக, ‘சோடி என்ன விலை?’ என்றார்.
‘கனறீஸ், நாலு…, ஆபிரிக்கன் பதினைஞ்சு…’ சிவனுக்குத் தலை விறைத்தது; அது யாருக்குப் பிழை என்ற கேள்வியும் கூடவே.
‘நாலாயிரம், பதினையாயிரம்?…’ இயல்பாகக் கேட்பவர் போலக் கேட்டார்.
‘பாத்துக் குறைச்சுப் போடலாம்…’ என்றான்.
‘வேறை ஏதாவது வகை இருக்கா?’
‘இல்லை, இதுகளுக்குத்தான் இப்ப டிமாண்ட்…’
இவற்றை வாங்குகிறவர்களைப் பார்த்தால் அடிக்கலாமா, சிரிக்கலாமா என்கிற அடுத்த குழப்பம்!
இதுதான் மாற்றமா? இது வளர்ச்சியா, வீக்கமா? வெளிநாட்டுப்பண வரத்து நன்றாய்த்தான் வேலை செய்கிறது…
‘அப்பிடியா?…’ என்று ஆர்வந் ததும்பக் காட்டும் ஒரு கேள்வியுடன் தொடர்ந்து,
‘உங்களிட்ட சிட்டுக்கள் இருக்குமா?’ என்றார்.
‘என்ன?’ கடைக்காரனின் புருவங்கள் நெரிந்தன.
‘சிட்டு, சிட்டுக்குருவி?…’
‘……!.’

இந்தத் தோற்றமும் அந்த பைக்கும் இல்லாதிருந்தால் அந்த மாதிரி வாயை மூடிக்கொண்டு சிவனை அவன் விட்டிருப்பானா, தெரியவில்லை.

13

மின்னஞ்சலைத் திறக்கையில்தான் அந்தச் செய்தித்தலைப்பு அவர் கண்ணில் பட்டது அண்மையில்:
‘செல்பேசிகளின் அலை வீச்சுப் பாதிப்பால், அமெரிக்காவில் சில பகுதிகளில் தேனீக்கள் அற்றுப்போய் விட்டன’.
ஓகோ!… சிட்டுக்களும் அப்படியிருக்குமோ?

கேள்வி எழ முன்னரே, இருக்க முடியாது என்ற மறுத்தானும் கூடவே சிவன் மனதில் எழுந்தது:
யாழ்ப்பாணத்திலும் ஏனைய வடக்கிலும் செல்பேசி புழக்கத்திற்கு வர ஆறேழு ஆண்டுகள் முன்னரே சிட்டுக்கள் மறைந்தாயிற்று, அது ஒன்று. இலங்கைத்தீவு முழுவதிலுமே செல்பேசி பரவலாகி விட்ட பின்னும் ஓமந்தையில் சிட்டுக்களை அவர் கண்டிருக்கிறார் என்பது மற்றது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, நியூஸீலந்தில் இருந்திருக்காத செல்லா?…

இல்லை, காரணம் அதுவல்ல …
எதுதான், பின்னே?

14

வேறு யாருக்கு என்றாலும் இப்படி ஒரு குறுஞ் செய்தியை சிவனால் அனுப்பியிருக்க முடியாது, நவாஸை விட :
‘சென்னையிலோ, தமிழ் நாட்டில் வேறெங்குமோ அண்மைக் காலத்தில் சிட்டுக்களைக் கண்டதுண்டா?’

ஐந்து நிமிடமாகியிராது, கீச்சொலி கேட்டது. அழுத்தி விட்டுப் பார்த்தார் :
‘இல்லை, செல்பேசித் தொடர்புகளால் பாதிப்புற்று அவை அழிந்து விட்டன என்று சொல்கிறார்கள்.’

அதை மறுதலிக்கக் கூடியதாய் சிவன் நினைக்கிற வாதங்களை தபாலிலோ, பேச்சிலோதான் முன் வைக்க முடியும்…

என்னதானிருந்தாலும் எஸ் எம் எஸ் அனுப்பியதற்கும் அதற்குப் பதில் வந்ததற்குமிடையில் ஐந்து நிமிடங் கூட இராது.


sayathurai@yahoo.com

Series Navigation

சாந்தன்

சாந்தன்