நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19
நாகரத்தினம் கிருஷ்ணா
Lifette quitte la plaine,
Mon perdi bonher a moue ;
Gie a moin femble fontaine,
Dipi mon pas mire, toue.
La jour quand mon coupe canne,
Mon fonge zamour a moue;
La nuit quand mon dans cabane,
Dans dromi mon quimbe toue
– Duvivier de la Mahautiere
ம்.ம்ம்…ம்..ம்ம்ம் ம் எக்காளம் முழங்குகின்றது பப்பரபர…பரபர..பரபர பறைகள் ஒலிக்கின்றன. டட்டங்.டட்டங். ம்..ம் .டட்டங் டட்டங்ம்.ம். பம்பைகளும், உடுக்கைகளும் சிலிர்த்துகொண்டு உறுமுகின்றன. காற்று, வெளி, ஆகாயம், பூமி, எப்பக்கம் பார்த்தாலும் வெள்ளை வெள்ளையாய்ப் பூதகணங்கள்.பேய்கள், பிசாசுகள், இரத்தக் காட்டேரிகள். நிணமும் இரத்தமும் எதிர்பார்த்து ஆட்டம்போடுகின்றன. துர்த்தேவதைகள் தங்கள் பெரியகண்களை விரித்து, தொங்கும் நாக்குடன் சிதறவிருக்கும் தலைகளுக்காக இடம்வலமாக அடவு பிடித்து முன்னேறி ஆரவாரம் செய்கின்றார்கள்.
வரிசைவரிசையாய் உயிரொட்டியிருக்கும் மானுடர்களின் கைகளையும் கால்களையும் இரும்புச்சங்கிலிகளிற் பிணைத்து, கறுப்பு நிற ராட்ஷஸ மனிதர்கள் இழுத்துவருகின்றார்கள். அடிமைகள் உடல் முழுக்க, ஒழுங்கற்ற இரத்தச் சுவடுகள்.. ஏற்கனவே அகழ்ந்திருந்த பள்ளங்களில் அவசரகதியில் அவர்கள் இறக்கப்பட, மண்ணிட்டு நிரப்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இப்போது தலைகள் குப்புறக் கவிழ்த்தத் தோண்டியாய், வரிசைவரிசையாய் மண்ணில் முளைத்திருக்கின்றன.
அண்டையில் தெரிந்த தலை தெய்வானையுடையது, பிறகு நீலவேணியுடையது. அடுத்து சில்வி, அதற்கடுத்து காமாட்சி அம்மாள், மசேரி, சில்வியின் சகோதரன் லூதர், தகப்பன் குரூபா, பொன்னப்ப ஆசாரி, சீனுவாசநாயக்கர்…இவனறிந்த மனிதர்கள், இவனறிந்த தலைகள்…
இதுவரையில் பார்த்திராத வெள்ளைக்குதிரைகள் நான்கு கால்களையும் ஏககாலத்தில் எழுப்பிப் பாய்ந்துவருகின்றன. கால்கள் மணலிற் பதிந்து எழுவதால், காற்றில் மண் வாரி இறைக்கப்படுகின்றது. எதிர்த் திசையில் தேவேந்திரனின் வெள்ளை ஆனையான ஐராவதமாகவிருக்கவேண்டும்., தும்பிக்கையை உயர்த்தி, வாயைமுடிந்தமட்டும் திறந்து, பிளிறிக்கொண்டு ஓடிவருகின்றது.
டமடமடமடம…
ஏக காலத்தில் தலைகள் சிதறுகின்றன. நரிகளும், நாய்களும் ஊளையிட்டுக்கொண்டு…நெருங்க, துர்த்தேவதைகள், பூதகணங்களின் துணைகொண்டு அவற்றை உ.. ஊ வென்று விரட்டுகின்றார்கள்..
கைலாசம் பதறிக் கொண்டு எழுந்தான்.
முதுகுப் புறத்தினை மணலிற் பரத்தி, கைகளை முடிந்தமட்டும் விரித்து, எண்ணங்களை அதன்போக்கிலே அைலையவிட்டு, மனச்சுமையோடு உறங்கிப் போனதில் விபரீத காட்சிகள். விழித்துக்கொண்டபோது உடல் வற்றலாகிக் கிடக்கின்றது. உடல் திகுதிகுவென்று எரிகிறது. வாய் வறண்டு, நாவில் வெண்பூஞ்சனமிட்டு கொழகொழவென்றிருக்கிறது. எதிரே கடலலைகளின் இரைச்சல். வாடைக்காற்று. திறந்த கண்களில், காத்திருந்த இருட்டு இடம்பிடித்து வழிகின்றது.
கைலாசம் எவ்விடத்திலிருக்கிறான் ? எப்படி அவ்விடம் வந்துசேர்ந்தான் என்பதனையும் யோசித்துப் பார்க்கிறான்.. காலையில் குவர்னர் காரியாலயத்தில் நடந்தகாட்சிகள் கண்முன்னே விரிகின்றன. விரிந்தமாத்திரத்தில், மனம் பாறையாய் கனக்கின்றது. மார்பைப் பிளந்து
தீக்குழம்பைக் கொட்டியிருந்தார்கள். அது தேகமுச்சூடும் பரவியதில் இவனெரிந்து கொண்டிருக்கிறான்.
கடலலைகள், வாடைக்காற்று, காதிலொலிக்கின்ற கடற் பட்சிகளின் கீச்சுகீச்சு அனைத்திற்கும் உள்ள சுதந்திரம் இவனைப்போன்ற சனங்களுக்கு மறுக்கப்படும் முகாந்திரந்தான் என்ன ? யோசிக்க.. யோசிக்க மனதில் வியாகுலம்.
நினைவுகூர்ந்து பார்த்ததில், சிறுபிராயத்தில் இதுமாதிரியான சம்பவங்களுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறான். இவன் சிந்தனையில் விரிந்த பூமியிலேகூட, இப்படியானப் பேதங்களைச் சந்தித்திருக்கிறான்.
உச்சிவேளையில் குளத்திலாடிவிட்டு, நுணாமரத்துக் கிளியும் கொடுக்காப்புளிப் பழமுமாக, மாடுமேய்க்கும் பையனோடு வீட்டிற்குத் திரும்பும்வேளை, வீட்டுப் பெரியவர் பையனை, மணலில் வெகுநேரம் முழங்காலிடச் செய்ததும், அச்சம்பவத்திற்குப் பிற்பாடு, கைலாசத்தை அவனிடம் அண்டவிடாமல் எச்சரித்துப் போட்டதும் ஞாபகத்தில் இருக்கின்றன. இவனுக்குச் சோறும்கறியும் கையொழுகும் கவளங்களாகக் கிடைக்க, மாடுமேய்க்குஞ் சிறுவன் மட்டையேந்தி, குத்துக்காலிட்டு, அரை வயிற்றோடு எழுந்து போயிருக்கின்றானே!….இவற்றுக்கான காரணத்தினைக் கேழ்க்கவேண்டுமென்று எண்ணி, காத்திருந்த ஒரு ராத்திரிதான் அவசர அவசரமாக காமாட்சி அம்மாள் முன்னே போக, தெய்வானையைக் கைப்பிடித்துகொண்டு, தோணியில் நடுக்கடல்வரை பயணித்து, பின்னர் கப்பலேறியது.
சமீபகாலமாகக் காமாட்சி தன்னுடைய தாயாக இருக்க முடியாது, என்கின்ற நினைப்பு அடிக்கடி இவனிடம் தோன்றிக் குழப்புகிறது. மிகவும் புத்திக் கலக்கத்தை ஏற்படுத்தும் இவ்வெண்ணமே தொந்தரையானதென ஒதுக்க நினைத்தான்.
முதன்முதலாக தெய்வானையையும் காமாட்சி அம்மாளையும் இந்தியாவில் இவனிருந்த வீட்டின் கூடத்துத் தாழ்வாரத்தில் வைத்து, நிழலாகத் தூக்கக்கலக்கத்தில் கண்டது, பசுமையாக மனதிலிருக்கிறது.
கைலாசம் அன்றைய இராத்திரியும் வழக்கம்போல படுக்கையில் மூத்திரம் போயிருந்தவன், விழித்திருந்தான். மெல்லியகுரலில் குசுகுசுவென்ற பேச்சு. கொஞ்சமாகக் கூன்போட்டிருந்த முதியவர் ஒருவர், ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியோடும், சிறுமியோடும் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். பெண்மணியின் கையில் துணிச் சிப்பமொன்று. வந்த மனிதர்மாத்திரமே நிறுத்தாமல் பேசிக்கொண்டுபோனார். அடுத்த சில நாழிகைகளில்வந்த மனிதர் புறபட்டுச்செல்ல, வீட்டுப் பெரியவர், புதியபெண்மணி, சிறுமி சகிதமாக, உக்கிராண அறை திசைக்காய்ச் செல்கின்றார்கள்.
மறுநாட்காலை மலம்கழித்துமுடித்த அவசரத்தில், கால் கழுவத் தண்ணீர் கேட்டு அம்மணமாக, நிற்கிறான். வீட்டிற்குப் புதியதாய் வந்த பெண்மணி வீட்டின் பின்புற வாயிற்படியின் கதவைத் திறந்துகொண்டு எட்டிப்பார்க்கிறார். அவரது முதுகுப் பின்னாலே பதுங்கியவளாக இரவு கண்டிருந்த சிறுமி. இவன் வெட்கப்பட்டு வீட்டின் பின்புறமிருந்த ஆடாதோடை வேலியிற் பதுங்கிக் கொண்டான்.
வீட்டிற்கு வந்திருந்த முதல்நாள் காலமே மண்சட்டியில் மோர்விட்டுக் கரைத்து காமாட்சி அம்மாள் இட்ட கம்மங்கூழ் அமுதமாகத்தானே இன்றுவரை இனிக்கின்றது.
‘கூச்சப்படாமல் சாப்பிடு ‘.. காமாட்சி அம்மாள் இவனிடம் பேசிய முதல் வார்த்தை.
காலையில் இவனிருந்த கோலத்தை நினைக்க, இவனுக்குக் கூச்சம் வரத்தான் செய்யுது. தலையைக் குனிந்துகொண்டே சாப்பிட்டு முடிக்கிறான். எழுந்தபோது, பெரியவர் எதிரே நிற்கிறார், அருகிலேயே இவன் இதுவரை அம்மாவென்று அழைத்துவந்த பெரியவர் பெண்சாதி.
‘கைலாசம் இந்த அம்மாள் உன்னுடைய தாயாராகவேணும். இச்சிறுமியானவள் உனக்குத் தங்கை. இனிமேல் நம்மோடு இருப்பார்கள் ‘..
முதன்முறையாக அவனது தாயாரென தெரியப்படுத்தபட்ட காமாட்சி அம்மாளைத் தலையை உயர்த்திப் பார்க்கிறான். கிராமத்து மந்தைவெளியிற் கண்டிருந்த எல்லையம்மன் வெள்ளைச் சேலையணிந்து நிற்பதான வடிவம். அருகிலேயே விரலைச் சூப்பிக்கொண்டு, விளக்கிவைத்துத்
தீபமேற்றிய குத்துவிளக்குப் பிரகாசத்துடன் தெய்வானை.
‘இவ்வளவு நாட்களாக, உங்களை அம்மா அப்பாவென்று அழைத்துக்கொண்டிருக்கின்றேனே ? ‘ என்கின்ற இவன் பார்வைக் கேள்வியின் நியாயத்தைப் பெரியவர் புரிந்துகொண்டிருக்கவேணும்.
‘சமுசயப்படவேணாம். எப்போதும்போல நாங்களும் உனக்கு தகப்பன் தாயார்தான். ‘
‘அவன் தகப்பனாரை உரித்துவைத்திருக்கிறான் ‘ வாஞ்சையாய் காமாட்சி அம்மாள் இவனை அருகில் அழைத்து உச்சி மோந்தபோது, சிகையில் ஊடுறுவிய உஷ்ணமூச்சு, இன்றைக்கும் கதகதப்புடன் பரவுகிறது.
ஒருசில நாட்களிலேயே காமாட்சி அம்மாளைத் தாயாகவும், தெய்வானையைத் தங்கையாகவும், கைலாசத்தின் பால்யவயது சுலபமாக ஒப்புக்கொண்டது.
அடுத்த சிலகிழமைகளிலேயே:
கைலாசமும், தெய்வானையும் காமாட்சியின் மடியில் உட்கார போட்டிப் போட்டுக்கொண்டார்கள்.சந்திரன் தெரிந்த இரவுகளில், காமாட்சி அம்மாளின் இடுப்பிற் சிரமத்துடன் உட்கார்ந்து, பிள்ளைகள் இருவரும் பாற்சோறு உண்டார்கள். இராமாயண பாரதக்கதைகளோடு, சில இரவுகளில் வேதாளக் கதைகளையும்கேட்டு காமாட்சி அம்மாளின் மடியிற் தூங்கிப் போனார்கள்.
சித்திரைவெயிலில், பிள்ளைகள் இருவரும் நாவற் பழம் தேடிச் சென்றார்கள். பொறுக்கியெடுத்து ஊதித் தின்றார்கள் ஈச்சம்பழம் பறித்து பங்கு போட்டுக்கொண்டார்கள். ஐப்பசி, கார்த்திகை மழையில் நனைந்து ஏரியில் வெள்ளம்வருவதைப் பார்க்க ஓடினார்கள். ஓடைத்தண்ணீரில் சேரிச் சிறுவர்கள் மீன் பிடிப்பதை தோளில் கைபோட்டு வேடிக்கைப் பார்த்தார்கள். சின்னதாய்ப் பள்ளம் செய்து, தண்ணீர்விட்டு அவர்கள்கொடுத்த உயிர் மீன்கள் நீந்தும் அழகைக் கைத்தட்டி ரசித்தார்கள்.
அவ்வீட்டில் இருந்தவரை, அதிகம் வெளியில்வராமல் வீட்டிலேயே அடங்கிக் கிடந்த காமாட்சி அம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு வலம்வரப்பழகி, ஒரு ராத்திரி துணிமூட்டையுடன் மூவருமாக பல்லக்கில் பயணித்து, தோணியிலேறி, கப்பலில் யாத்திரை செய்து….
டமடம.. டமடம டமடம….
கிறேயோல் மக்களின் றபாணம்.. கடலைகளின் இரைச்சல், உப்பங்காற்று, இருட்டு.. வரிசைக் கிரமமாக இவனுக்குள் பிரவேசிக்க, சில்வியின் ஞாபகம் சேர்ந்துகொள்கின்றது. மெல்ல எழுந்து நடக்கவாரம்பித்தான்.
இவன் மனதிலுள்ள மொத்தத்தையுந் துடைத்துவிட்டுச் சில்வி உட்கார்ந்து கொள்கிறாள். சில்வியின் தோளில் முகம்புதைக்க வேண்டும். இன்றைக்குக்காலமே நடந்ததை, அவளிடம் சொல்லவேண்டும், இதயமும் உடலும் ஒரு சேரத் துடிக்கின்றது….
பண்ணைத் துரைமார்கள், காலைமே கூட்டம்முடிந்து, குவர்னரோடு அமர்ந்து விருந்தினை முடித்துச்செல்ல மதியம் வெகு நேரமாகிவிட்டது. கூட்டம் நடந்த திடலியே கைலாசத்தை நிற்கவைத்திருந்ததைக் குறித்து, அங்கிருந்த எவரும் கவனத்திற் கொண்டதாகக் காணோம். பறங்கியர்கள் உணவு மேசைகளில் உட்கார்ந்தால், சடுதியில் எழுந்திருக்க மாட்டார்கள்.
சங்கிலித் தொடராகப் பேச்சு..பேச்சு. வழக்கம்போலக் குவர்னர் லாபூர்தொனே தீவில் குறுகியகாலத்தில் செய்த சாதனைகைளை அவரது காதுபுளிக்கப் புகழ்ந்தார்கள். பிறகு பேச்சு, மன்னர் – பதினைந்தாம் லூயி பக்கம் திரும்பியது, பிறகு புதுச்சேரி கவர்னர் துப்ளெக்ஸ், பிறகு கிறித்துவ குருமார்களின் ஆலோசனையின்பிறகாரம் மலபார்களை மதம்மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்றபடிக்கு ஏதேதோ பேசிவிட்டு, கடைசியில் மேசையில் மிச்சமிருந்த மதுவைக் குறித்து, வார்த்தையாட, இவன் பொறுமை இழந்திருந்தான்.
‘குவர்னர்பெருமான் ஷமிக்கவேணும். என்னை அவசரநிமித்தமாய் அழைத்த சேதியென்ன ? ‘. இவனது கேள்வி அவர்களிடையேயான உரையாடலை அறுத்துக்கொண்டு விழுகிறது.
அடுத்தகணம், வாக்கியங்கள் முற்றுப்பெறாமல் காற்றில் வெற்றிடத்தில் நிற்கின்றன. வார்த்தைகள் விழுங்கப்படுகின்றன. வாய்வரைச்சென்ற மது கோப்பைகள் இடையில் நிறுத்தப்பட்டு, தீனிமேசைக்குத் திரும்புகின்றன. முட்கரண்டிகளும் கத்திகளும் ஓய்வு கொண்டன. தட்டுகள் அருகே வைத்திருந்த புதுச்சேரி இறக்குமதிக் கைக் குட்டைகள், உண்டவாயை ஒத்தியெடுக்கின்றன. துரைமார்களின் பெண்சாதிகள், கைலாசத்தின் குரலில் அசம்பாவிதம் கற்பித்துக்கொண்டு, அஞ்சியவர்களாய்த் தங்கள்தங்கள் புருஷன்மார்களின் கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள்.
குவர்னருக்கும் அவன் வார்த்தை கோபமூட்டியிருக்கவேண்டும்..
‘உமக்கு ஏதேனும் அவசர காரியங்கள் இருக்கின்றதோ ? ‘ கோபத்தை ஒளித்துக்கொண்டு அமைதியாகக் கேட்கிறார்.
‘அவன் தங்கையைப் பெர்னார்குளோதனிடம் அழைத்துப் போகவேண்டியிருக்கும். பெர்னார் புதுச்சேரிக்குப் செலவுமேற்கொண்டுள்ளான்தானே ? பிறகு வேறு எவருக்காகப் பிரயாசைப்படுகிறான் ? ‘ வழக்கம்போல ‘லா வீல்பாகு ‘வில் பண்ணை வைத்திருக்கும் வெள்ளைப்பன்றி ‘போல் அஞ்ஞெல் ‘ தன்குணத்தின்படி உளறுகிறான்.
இவன் புறப்பட்டபோது, தாயார் காமாட்சி அம்மாள் செய்திருந்த எச்சரிக்கை ஞாபகத்திலிருந்தபோதிலும், அமைதிகாக்க இயலவில்லை.
போல் அஞ்ஞெல் கூறிய விஷ வார்த்தைகள் அவனைச் சீண்டிப் பார்க்கின்றன..
‘பிரபு.. நான் பேசுகையில் வலிய என் விஷயத்தில் வீல்பாகு துரை குறுக்கீடு செய்கிறார். அவரை என் விடயத்திற் தலையிடவேணாமென்று மேன்மைதங்கிய குவர்னர் திட்டம் செய்யவேணும். எதுவென்றாலும் குவர்னர் அவர்களிடம் பதிலுரைக்க அடிமை சித்தமாயிருக்கிறேன். ‘
மறுபடியும், போல் அஞ்ஞெல் பேசுவதற்கு வாய்திறக்கிறான். குவர்னர் வேண்டாம் என்பதாகச் சைகை செய்கிறார்.
‘கைலாசம்..! தீவில் உள்ள சனங்கள் பிரான்சு முடியாட்சிக்கு ஊழியம்பண்ண கடமைப்பட்டவர்கள். அம்மக்களின் வாழ்க்கைக்கு பங்கம் நேர்ந்துவிடக்கூடாது. தீவின் சுபிட்சத்திற்கு இரவு பகலாய் நாமனைவரும் உழைப்பதும் நீ அறிவாய். இப்படியான வேளையில், சாயந்தர வேளைகளில் கிறேயோல் மக்களிடம் நமது பண்ணை முதலாளிகள் குறித்து அவதூறு சொல்வதாகவும், தூஷணம் பேசுவதாகவும் கும்பெனிக்குச் செய்திகள் வருகின்றன. அந்த முகாந்தரம் குறித்து விசாரிக்கவே நாம் அழைத்தோம். குற்றம் ருசுவானால் தண்டிக்கப்படுவாய் என்பது தெரியாதா ? ‘
‘பிரபு..! குற்றம் ருசுவாகும் பட்சத்தில், தண்டனை எதுவாயினும் ஏற்பதற்கு சித்தமாயிருக்கிறேன். துரைமார்களில் சிலர் எங்கள் குடும்பத்தின்மீது ஏதோ வன்மங்கொண்டு முறையிட்டிருக்கவேணும். நீங்கள் அதனை நம்பாதேயுங்கள். தீரவிசாரியுங்கள் ‘
‘போகட்டும்.. கும்பெனிக்கு நீ விசுவாசமாகவிருப்பது உண்மையானால், இனியாகிலும் இப்படியான முறைப்பாடுகள் வாராமல் பார்த்துக்கொள்ளவேணும். ஜாக்கிரதை, இப்போதைக்குப் நீ போகலாம். ‘ என குவர்னர், வழக்கம்போல ஆளும் வெள்ளயர்களை நியாயவான்களாகவும், கறுப்பர்களும், மலபார்களும் குற்றவாளிகளாகவும் பார்க்கின்ற மனத்துடன் எச்சரித்து அனுப்பியிருந்தார்.
கடலைகளின் முழக்கம் தொடர்ந்துவர. உலர்ந்த ஈரக்காற்றுடன், உப்பின் மணமும் கவிச்சியும் சேர்ந்த காற்றினை வாங்கிக்கொண்டு நடக்கிறான். கடலாமைகள் சோம்பேறித் தனத்துடன் மண்ணைப் பறித்து முட்டையிட்டுவிட்டு நகர்வதைக் கவனித்துக் காத்திருந்த நரிகள் சந்தோஷத்துடன் குறிவைத்து ஓடிவருகின்றன..அவைகளை அசட்டை செய்தவண்ணம் முன்னேறுகிறான்.
டமடமடம.. டமடமடம..
கைலாசம் கிறேயோல் மக்களின் குடிசைகளை நெருங்கியிருந்தான்.
தீப்பெட்டிகளாய் கபான்கள் எனப்படும் அவர்களது குடிசைகள். கறுப்பின மக்கள் வட்டமாகக் குழுமியிருக்க, மத்தியில் மரக்கிளைகளும், மிலாறுகளும் தீயில் சடசடவென எரிந்து கொண்டிருக்கின்றன. அத்தீக்கிடையிலே, தீயெட்டும் உயரத்தில், சீவிய மரக்கொம்பில் சொருகப்பட்டிருந்தக் காட்டுப்பன்றியொன்று வாட்டப்படுகிறது.. இடைக்கிடை,விலங்கின் கொழுப்புருகித் திரவ நிலையிற் கனலைத் தீண்ட, கோபமுற்று முன்னிலும் வேகமாகத் தீ, காட்டுபன்றியைச் சூழ்ந்து கொள்கிறது. ராட்சத உடலுடன் நீண்ட கால்சராயுடன் கறுப்பு மனிதர்கள். அவர்களில் இருவர் றபாணம் என்கின்ற தீவின மக்களின் பறையொன்றை வாசிக்கின்றார்கள். அருகிலேயே ஒருவன் வியர்க்க வியர்க்க, கழுத்து நரம்புகள் புடைக்கப் கிறேயோல் மொழியில் பாடிக்கொண்டிருக்கிறான்:
கருணைக் கடலே ஆண்டவனே
காட்டுவாயா என் தேசத்தை…
கண்ணுகெட்டாத் தேசத்தை
காணுமாசையில் சோர்ந்து நிதம்
ஆழ்கடல் தவிக்கும் கறுப்பரின
அபயக் குரலும்கேட்பதுண்டோ ?
கடவுளே! கருணைக்கடவுளே!
கடவுளே! கருணைக்கடவுளே!
ஓ..ஓ..*
கிறேயோல் மக்களின் ஆட்டமும் பாட்டும் இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கிறது..
டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்.டுட்டுட்டு டுடும்..டும்டும்டும்டும்டும்டும்டும்டும்….
முழங்கால்களுக்கு மேலே ஒரு ஆடையும், மார்பு மறைக்கும் முண்டுமாக இருந்த பெண்களிற் சிலர் அவ்விசைக்கேற்ப அக்கூட்டதிற்கெதிரே ஆடுகின்றார்கள். கால்களை மாற்றிமாற்றி முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் றபாணாத்தின், டுட்டுட்டு டுடும் டுட்டுட்டு டுடும் வாசிப்பிற்கேற்ப பொருத்தமாய் அடவுபிடிக்கின்றார்கள். இடைச் செருகல்களாக இடுப்பையும், மார்பையும் சீராகக் குலுக்க, டமடமடம…. என றபாணம் சிலிர்த்துக்கொண்டு முழங்குகிறது. பெண்களின் இளமார்பில் தவித்துக்கொண்டிருந்த முண்டு, அவிழ்த்துத் தெறிக்கிறது. அவர்களின் இளமைப்பருவத்துக் கறுத்த உடல், தீயொளியில் பளப்பதைப் பார்த்ததில், ஆண்களின் மனம் கலைந்திருக்கிறது. ஆடிக்களித்து சோர்ந்து உட்காரும் பெண்களுக்கு மாற்றாக, உட்கார்ந்திருக்கும் பெண்கள் எழுந்திருந்து ஆட்டத்தினைத் தொடர மீண்டும். டமடமடமடம..
ஆட்டம் முடித்த பெண்கள் தங்கள் மார்பு முண்டுகளைப் பொறுக்கிக்கொண்டு, அவர்களுக்கு விருப்பமான ஆண்களுடன் உரசிக்கொண்டு உட்கார, காமத்தீயின் ஜுவாலை பொறுக்க முடியாத ஆண்கள், அவர்களை இழுத்துக்கொண்டு இருட்டில் ஒதுங்குகின்றார்கள். அவர்கள் பின்னே ஓட முயற்சித்த சிறுவர்களை, பெரியவர்கள் சிரித்தவாறு தடுத்து நிறுத்துகின்றனர்.. ஒரு சில ஜோடிகள் பொறுமை இழந்து அங்கேயே கட்டித்தழுவிக் கொள்கின்றன.
கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சில்விக்கு கைலாசத்தின் எதிர்பாராத வருகை ஆச்சரிய மூட்டியிருக்கவேண்டும். எதிர்கொண்டு ஓடிவருகிறாள். இறுகத் தழுவிக் கொள்கிறாள். மனிதர்களற்ற இடமாக தேர்வுசெய்து இருட்டில் ஒதுங்குகிறார்கள். கைலாசத்தின் உடலொட்டிய மணல், அவளது கறுத்தத் தேகத்தில் ஆங்காங்கே ஒட்டமுயன்று உதிர்ந்து விழுகின்றன. இவனது மார்புக் காம்பில் சில்வியின் பற்கள் ஆழமாய்ப் பதிந்து இறக்கிய போதையில், அவளை மெல்ல தன்னிடமிருந்துப் பிரிக்கமுயன்று தோற்று, அவ்விளையாட்டைத் தொடர்ந்து அனுமதிக்கிறான். மனதிற்கும் உடலிற்கும் ஒருசேரச் சுகம்கிடைத்த சந்தோஷத்தினைப் பெருக்கிக்கொள்ளும் வித்தையில் இருவருமே திணறுகிறார்கள்.
கைலாசத்தின் பரந்த மார்பிலிருந்து விடுபட்ட சில்வியின் கண்கள் எதிற் திசையைக் கவனிக்கின்றன.. இருட்டில் ஒருஜோடி கண்கள்.
முதலில் பிரமையாகவிருக்குமோ அவளது மனம் நினைத்தது. ஆனால் அக்கண்கள் மெல்ல இவர்களை நெருங்கிருந்தது. மணலிற் தன்கையை அளைய கல்லொன்று கிடைக்கிறது. ஜோடிக் கண்களைக் குறிவைத்துக் கல்லை எறிகிறாள்.
அவ்வுருவம் ‘ஐயோ ‘வென தலையைப் பிடித்துக்கொண்டு விழ., நடந்தது என்னவென்று அப்போதுதான் உணர்ந்திருந்தான். இருவரும் விலகி யெழுந்தனர். குரல்கேட்டு, ஆட்டத்தை நிறுத்திவிட்டு இவர்களது திசைக்காய் இரண்டொருவர் தீப்பந்தங்களுடன், ஓடிவருகின்றனர்.
திடாரென்று ‘பிடியுங்கள் அவனை ‘ என எதிர்த் திசையில் மற்றவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்கள் கூச்சலிடுந் திசையிலிருந்து, மற்றுமொருவன் கிழக்காக ஓடி இருட்டில் மறைவதைக் கண்டார்கள்
கல்லடிபட்டட வேதனையில் முனகிக் கொண்டிருந்வனை, சில்வியும், கைலாசமும் மற்றவர்களும் நெருங்கியிருந்தார்கள். ஒருவன் தீவட்டியை விழுந்து கிடந்தவனின் முகத்தருகே நீட்ட, இடதுகரத்தை, தலையில் இரத்தம் சொட்டுமிடத்திற், அழுத்திப் பிடித்திருந்தான். வலது கையில் ஈட்டி.
‘யார் ? ‘ ‘யார் ? ‘ சுற்றிலும் குரல்கள்.
‘லூதர், சில்வியின் தமையன் ‘ என பதில் வந்தது.
/தொடரும்/
*Monsieur Bon Dieu, toi bien gentil
Ramenez moi dans mon pays
Et viens Bon Dieu, vine au secours
Moi pas pouvoir nager toujours
Pays trop loin pour arriver
Et pauvre negre tout fatigue
Monsieur Bon Dieu !
Monsieur Bon Dieu !
Oh !Oh !Oh ! -Le grand voyage du pauvre negre
Germaine Sablon – Orchestre Wal-Berg – Texte d ‘Edith Piaf
- வலிமிகாதது
- இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை
- கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?
- உலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 1
- உள் முகம்
- கட்டுகள்
- ‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘
- பிறந்த மண்ணுக்கு – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19
- ஆக்கலும் அழித்தலும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)
- மலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5
- தேனீ – சாதீய கட்டமைப்பு
- மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
- தமிழவன் கவிதைகள்-ஐந்து
- சொல்லின் செல்வன்
- கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்
- .. மழை ..
- உன்னில் உறைந்து போனேன்…
- புத்தரும் சில கேள்விகளும்
- சலிப்பு
- நீ எனை தொழும் கணங்கள்….!
- சன்மார்க்கம் – துன்மார்க்கம்
- சில குறிப்புகள்
- அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்
- வேடம்
- வாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்
- கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்
- கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு
- கம்பராமாயணம் குறுந்தகட்டில்
- ராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்
- கடிதங்கள் – மே 13, 2004
- சொல்லவா கதை சொல்லவா…
- ஞானப்பல்லக்கு
- புதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)
- கந்தர்வனும் கடைசிக் கவிதையும்
- விதி
- சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,
- எங்களை அறுத்து
- இரு கவிதைகள்
- வடு
- திடார் தலைவன்
- விபத்து
- வெள்ளத்தில்…
- அரவணைப்பு
- உள்ளும் புறமும் எழிற் கொள்ளை
- கடவுளின் மூச்சு எப்படிப்பட்டது
- அன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்
- இந்தியா ஒளிரக்கூடும்…
- காதல் தீவு