அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று
இரா முருகன்
வண்டி வியாபார நிமித்தம் நிறுத்தி வச்சிருக்கப்பட்டது. வந்தவன் போனவனுக்கு எல்லாம் வடிச்சு எடுத்துண்டு போய் சட்டமாப் படைச்சுட்டு வரதுக்கு இல்லே அது. மாப்பிள்ளை கேட்டால் கோபப்படுவார். உனக்கும் உன் அனுஜத்திக்கும் சகோதர வாஞ்சை பீறிட்டுண்டு வரதா என்ன ?
சோமநாதன் சத்தம் எகிறிக் கொண்டிருக்க, அலமேலு அக்கா குரல் தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தது பகவதிக் குட்டிக்குக் காதில் விழுந்தது.
ஐயோ, அந்த மாபாவி கிட்டன் எப்போலேருந்து எனக்கு அண்ணாவானான் ? அறுத்துப் போட்டுட்டு வேதத்துலே ஏறினதுக்கு அப்புறம் உறவாவது மண்ணாவது. அந்தத் தேவிடியா முண்டை சிநேகாம்பாளை நினைச்சாலே பத்திண்டு வரது. பகவதிக்குட்டிக்கு தாராள மனசு. ஏதோ சொல்லியிருக்கா. அதுக்காக என்கிட்டே இரைவானேன் ?
அலமேலு அக்கா சொன்னதைக் கேட்க பகவதிக்குத் துக்கமாக இருந்தது. ஆனாலும் அவளால் ஆகமுடிந்தது என்ன ? புருஷர்கள் இல்லையா இங்கே எல்லாம் எல்லோரும் எப்படி நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பது.
கல்யாணம் ஆகி அரசூர் வந்த பத்து வருடத்தில் சங்கரன் சொல்லி ஒரு வார்த்தை தட்டியது உண்டா அவள் ?
ஏன்னா அலமு அக்கா ஆத்துக்காரர் சோமநாதய்யர் இருக்காரில்லியோ.
சோமனுக்கு என்ன வந்தது ? மதுரையிலே சாப்பாட்டுக்கடை வச்சுண்டு வசதியாத்தானே இருக்கான் ?
சங்கரன் கேட்டபோது அவள் சும்மா இருந்தாள். சங்கரனுக்கு எல்லாம் தெரியும் என்பது அவளுக்குத் தெரிந்த சங்கதிதான்.
எல்லோரும் சோற்றுக்கடை போடுகிறார்களே, முன்னேற்றமாக வருகிறார்களே என்று சோமநாதனும் அம்பலப்புழையை விட்டுவிட்டு மதுரைக்குக் குடியேறி சோற்றுக்கடை போட்டான். கிட்டாவய்யன் வேதத்தில் ஏறிப் பரம்பரைச் சொத்தான காணியைப் பங்கு பிரித்துப் போன நாலாம் வருஷம் விருச்சிக மாதத்தில் அவன் செய்த காரியம் அது.
விசாலாட்சி மன்னி கதறக் கதற உறவை அறுத்துக்கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளையும், நிறைமாத சூலியான சிநேகாம்பாளையும் கூட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு கிட்டாவய்யன் பிரிந்து போன தினமும் ஒரு விருச்சிகம் முதல் தேதியில் தான்.
சபரிமலை அம்பலத்துக்குப் போக நான் வருஷா வருஷம் விரதம் ஆரம்பிக்கற தினம்டா கிட்டா இது. மாலை போட்டுண்டு வந்துடறேன். நாளைக்கு எங்கே கூப்பிடறியோ அங்கே வந்து எல்லாக் கையெழுத்தும் போட்டுத் தரேன். ஒரு நாள் பொறுத்துக்கோடா.
தமையன் துரைசாமி அய்யன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கிட்டாவய்யன் கேட்கிற வழியாக இல்லை. விருச்சிகம் பந்திரெண்டில் கொல்லத்தில் கடை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடும் செய்தாகி விட்டது. ஊருக்கு இப்போதே மூட்டை முடிச்சைக் கட்டாவிட்டால் எல்லாம் தாமதமாகி விடும். யாரோ எங்கோ மலை ஏறட்டும். இறங்கட்டும்.
துரையப்பா, அவனைப் போகவிடுடா. போகணும்னு முடிவு பண்ணிட்டான். கிட்டாவய்யன் இல்லை. இவா ஜான் கிருஷ்ணமூர்த்தி. போய்ட்டு வாங்கோ. க்ஷேமமா இருங்கோ எல்லோரும் எங்கே யாரா இருந்தாலும்.
குப்புசாமி அய்யன் சுவரை வெறித்துக் கொண்டு சொன்னான் அப்போது.
விசாலாட்சி பெருங்குரலெடுத்து அழுது யாரும் பார்த்ததில்லை. இப்போது பார்த்தார்கள். கிட்டாவய்யன் கிறிஸ்தியானி ஆனதில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. பிள்ளைத் தாய்ச்சியான சிநேகாவையும் சிற்றாடை கட்டின இரண்டு பெண்குட்டிகளையும் இப்படிப் பழகிய இடத்தை விட்டுப் பறித்துக் கிளப்பிக் கொண்டு போகிற துக்கத்தைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.
அக்கா, எனக்கும் போக என்ன இஷ்டமா ? அதுவும் இப்படி வாயும் வயறுமா நிக்கற ஸ்திதியிலே ? அவரானா பிடிவாதம் பிடிக்கறார். கொஞ்ச நாள்தான் பொறுத்துக்கோங்கோ. எல்லோருமா இங்கே திரும்பிடுவோம்.
விசாலாட்சி அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள். அவளுக்கு என்னமோ தோன்றியது அதெல்லாம் நடக்கிற விஷயம் இல்லை என்று. இந்தப் பெண் குழந்தைகள் அடுத்து அச்சனோடு கூட குரிசுப் பள்ளிக்குக் குடை பிடித்துக்கொண்டு நடப்பார்கள். சிநேகா வயிற்றில் இருக்கப்பட்டது ஆணோ, பெண்ணோ பிறந்தது முதல்கொண்டு அப்படியே வளரும். பின்னால் ஏதோ ஒரு தினத்தில் சிநேகாவும் குரிசு பிடித்தபடி ஞாயிறாழ்ச்சை காலை நேரத்தில் பள்ளிக்குப் போவாள்.
பங்கு பிரித்து முடித்தபோது கிட்டாவய்யன் உடனடியாகத் தன் காணியை விற்றுக் காசாக்கிக் கொண்டான். குப்புசாமி அய்யன் சிநேகிதன் கருநாகப்பள்ளி சங்குண்ணிதான் அவன் நிலத்தை வாங்கியது.
கிட்டாவய்யன் போன அடுத்த வருடமே, அவன் தமக்கை லட்சுமியும், ராமேந்திரனும் கண்ணூருக்குப் புறப்பட்டுப் போனார்கள். அங்கே அடுக்களைப் பணிக்கு ஒரு தம்புரான் நிறையப் பணம் கொடுத்துக் கூப்பிட்ட காரணத்தால் ராமேந்திரன் கிளம்பினான்.
அடுத்துப் போன அலமேலுவும் சோமநாதனும் தான் மதுரையில் சோற்றுக்கடை போட்டது. மைத்துனன் கிட்டாவய்யன் போல் வரவேண்டும் என்று எதிர்பார்த்து ஆரம்பித்த வியாபாரம் முதலுக்கே நஷ்டமாக முடிந்தபோது மூன்று பிள்ளைகளையும், அலமுவையும் வைத்துக் காப்பாற்ற வழியேதும் தெரியாமல் அலமுவை பகவதியைப் பார்க்க அனுப்பி வைத்தான் சோமநாதன். அவள் வந்த விவரம் எல்லாம் தெரிந்தே தான் பேசினான் சங்கரன்.
அத்திம்பேருக்கு நம்ம கடையிலே ஒரு இடம் கொடுத்தா ஒண்டிப்பார்.
பகவதி தயங்கித் தயங்கித் தெரிவித்தாள் அப்போது.
சின்னக் கடை. அங்கே நான் உக்காந்தாலே பிருஷ்டத்தை அப்படி இப்படித் திரும்ப முடியலே.
அட ராமா, இங்கேன்னா இங்கே இல்லே. மதுரையிலே தாணுப்பிள்ளை கைலாச யாத்திரையானதுக்கு அப்புறம் வேறே யாரையுமே காரியஸ்தனாப் போடலியே. அங்கே இவரை இருக்கப் பண்ணக் கூடாதா ? கணக்கு வழக்கு எல்லாம் படிச்சிருக்கார் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே.
அந்த இடத்தில் சென்னைப் பட்டணம் தெலுங்கு பிராமணனை நியமிக்க சங்கரனும் கருத்தானும் சேர்ந்து முடிவு எடுத்திருந்தார்கள். ரங்கூனுக்கு வியாபாரத்தை விருத்தியாக்கக் கிளம்பிப்போன இன்னொரு பாகஸ்தன் சுலைமான் தெலுங்கனைக் கப்பலேற்றி உடனே அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தான்.
பிராமணன் கப்பலேற மாட்டானே என்று சங்கரன் சந்தேகத்தைக் கிளப்ப, ஆமா அய்யர் சாமி, அப்படி ஏறினா கப்பலே தலைகீழாக் கவுந்துபோயிடறதே என்றான் கருத்தன் கள்ளச் சிரிப்போடு.
தெலுங்கு அய்யன் மதுரைக்கும் வரமுடியாது, ரங்கூனுக்கும் வரத் தோதுப்படாது. சென்னை பட்டணத்திலேயே தொடர்ந்தால் சரி. இல்லாவிட்டால் வேறே உத்தியோகம் பார்த்துக் கொள்வதாகத் தீர்மானமாகச் சொல்லவே அந்த யோசனையைக் கைவிட வேண்டி நேர்ந்தது. தெலுங்கனுக்குத் தெரிந்த வியாபார நெளிவு சுளிவு கருத்தானின் வாப்பா தஸ்தகீர் ராவுத்தருக்கே அத்துப்படியானதில்லை என்று ராவுத்தரே சொன்னதால் ஏற்பட்ட மதிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு அது.
சோமநாதய்யன் அப்புறம் சங்கரனின் மதுரைக் காரியஸ்தனானான். நாலைந்து மாதம் தவித்துத் தண்ணீர் குடித்து இப்போது இரண்டு வருஷமாக உற்சாகமும் நம்பிக்கையுமாக வியாபாரத்தை விருத்தி பண்ணிக்கொண்டிருக்கிறான்.
பகவதியின் இரண்டாம் பெண் கல்யாணியின் காதுகுத்துக் கல்யாணம் என்று முந்தாநாள் அலமேலுவும் சோமநாதனும் வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்தில் சங்கரனின் கடைப்பக்கமாக அதி நவீனமான ஒரு சாரட் வண்டி உருண்டோடிக் கொண்டு வந்தது.
பக்கத்து அரண்மனைக்காரன் ஜமீன்தார் ராஜமானியம் உயர்ந்து புது வண்டி பூட்டியிருக்கிறான் என்று சங்கரன் அசிரத்தையோடு பார்க்க, வண்டி அவன் கடை வாசலில் நின்றது.
உள்ளே கிட்டாவய்யன். குடும்பம்.
சங்கரனுக்குத் தெரிந்த கிட்டாவய்யன் இல்லை இது. நீளமான சட்டையும், அரையில் பஞ்ச கச்சமும் மார்பில் வெளியே தெரியும் சிலுவையுமாக இருந்த ஜான் கிட்டாவய்யன் சகலத்துக்கும் காற்றில் குரிசு வரைந்தபடி இருந்தான். அவனுடைய ஒரே மகன் கையிலும் காலிலும் ஆறு விரலோடு சூட்டிகையாகக் கடைக்கு முன்னால் வைத்திருந்த தலையாட்டிப் பொம்மைத் தலையைத் திருகி எடுக்க ஆரம்பித்தான். அது எப்போதோ இயக்கம் நின்றுபோய் தூசியும் துப்பட்டையுமாகக் கிடந்தது.
தூசி எல்லாம் சுவாசத்திலே ஏறினா ஜலதோஷம் வரும்.
வண்டிக்குள்ளே இருந்து இறங்கின சிநேகாம்பாள் மன்னி முன்னைக்கிப்போது பெருத்திருந்தாள். கழுத்தில் தாம்புக்கயிறு போல் ஏகத்துக்கு சொர்ணம் மாலையாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குக் கூட்டிப் போனபோது அவள் பகவதியிடம் மதுரைக் கோயில் குங்குமத்தை நீட்டினாள்.
இவா எல்லாம் கோயில் குளம்னு எங்கேயும் போறதில்லே. சதா பாதிரி சங்காத்தம், குரிசு பஜனைதான். நம்மால முடியுமோடி பொண்ணே ?
அவள் அப்படியே தான் இருந்தாள். சுற்றி நிகழ்ந்த எதுவும் அவளைப் பாதித்ததாகப் பகவதிக்குத் தெரியவில்லை. இல்லை பணம் பெருக்கும்போது அதெல்லாம் போதத்திலேயே வராது போலும் என்று பகவதி நினைத்துக் கொண்டாள்.
என்னதான் பிரியம் இருந்தாலும் வேதம் மாறிப்போனவனைக் குடும்பத்தோடு வீட்டில் இருக்க வைத்தால் ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்கள் ஊரில் என்று தோன்ற, சங்கரன் அவர்களை நாலு தெருத்தள்ளி ஒரு காலி மனையில் தங்க வைத்தான். ஊரில் விற்க வருகிற மனையெல்லாம் அவன் தான் இப்போது வாங்கிக் கொண்டிருக்கிறான்.
ஜான் கிட்டாவய்யன் சென்னைப் பட்டணத்தில் ஒரு சுவிசேஷக் கூட்டத்துக்காகக் குடும்பத்தோடு போய்க் கொண்டிருக்கிறான். அது முடித்து, சென்னைப் பட்டணத்தில் சாப்பாட்டுக் கடை போடவும் உத்தேசமாம்.
அலமேலு சிநேகாம்பாளோடோ தமையன் கிட்டாவய்யனோடோ முகம் கொடுத்துப் பேசவில்லை. சோமநாதனும் தான்.
சிநேகா சாவக்காட்டுக் கிழவனுக்கு எதைக் காட்டினாளோ, அவன் கள்ளுக் குடித்த குரங்கு மாதிரி லகரி ஏறி இவாளுக்குப் பணமாக் கொட்டி இறைக்கிறான் என்று அலமேலு சொன்னபோது பகவதி அவள் வாயைப் பொத்தினாள்.
அக்கா, எதுக்குத் தூஷணை பண்ணணும் பிறத்தியாரை ?
நான் என்ன சொல்றது ? ஊரோடு வழிச்சுண்டு சிரிக்கறாளாமே. கொல்லத்திலே போய்க் கேட்டுப்பாரு. அதான் பட்டணக்கரைக்குக் குடும்பத்தோடு சவாரி விடறான்.
எல்லா ஊரும் எல்லாரையும் பற்றியும் பேச ஏதாவது வைத்திருக்கிறது. கொட்டகுடித் தாசியோடு சங்கரன் தொடுப்பு வைத்திருக்கிறதாகப் பகவதி காதுக்கும் கேட்கிறது. தாசி பெற்ற ஒரு பெண்குழந்தை சங்கரனுக்குப் பிறந்தவள் என்றார்கள் ஊரில். பகவதியின் மூத்த பிள்ளை சாமிநாதன் கூடத்தான் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள் அவள். பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் குழந்தை முகத்தில் சங்கரனின் சாயலைத் தேடி பகவதி தோற்றிருக்கிறாள். குழந்தையிடம் கேட்க முடியுமா ? இல்லை, கொட்டகுடித் தாசி வீட்டுப்படியேறி அவளைக் கேட்க முடியுமா ?
பொண்ணே, இந்தாத்துப் புருஷா எல்லாம் அலையப்பட்டவா. வாச்சதும் பெத்ததும் எல்லாம் தான். இவனைப் பத்திரமாப் பாத்துக்கோ.
கல்யாணி அம்மாள் படுத்த படுக்கையாகவே இருந்து பகவதிக்கு மூத்த பிள்ளை பிறந்ததற்கு அடுத்த மாதம் உயிரை விட்டபோது பகவதியைக் கூப்பிட்டுச் சொன்னது இது.
நான் திருப்புத்தூர் வரைக்கும் போய் ஒரு வியாபார விஷயம் பேசிட்டு வரேன். சாயங்காலம் மதுரை திரும்பணும். தயாரா இரு. வண்டிக்கு வேலை இருக்கு. எந்தப் பன்னாடைக்கும் சேவகம் பண்ண இல்லை இது.
சோமநாதய்யன் சத்தம் போட்டு அறிவித்துப் போனது காதில் விழ பகவதி உள்ளே வந்து என்ன அலமு அக்கா என்று அப்பாவியாக விசாரித்தாள்.
அந்த அவிசாரிக்குச் சாப்பாடு கொண்டு போறதுக்கு வண்டியை அனுப்பணும்னியாமேடி பகவதி ? வண்டியும் மாடும் வைக்கோலும் எல்லாம் உங்காத்துச் சொத்துதான். ஆனாலும் மாப்பிள்ளைக்குச் சொல்லாம நீயே தீர்மானிச்சுக் காரியம் நடத்தறது சரியோடி பொண்ணே ?
சரியில்லையோ என்ன எழவோ அக்கா. அங்கேயும் குழந்தைகள் இருக்கு. சொந்தம் தான் வேண்டாம். விருந்தாளியா வந்திருக்கறவாளைப் பட்டினி போடணும்கிறியா ?
பகவதி வாசலுக்குப் போய் சாமா அடே சாமா என்று சத்தமாக விளிக்க, வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவள் மகன் ஓடி வந்தான்.
ஐயணை வண்டியிலே இந்தப் பாத்திரத்தை எல்லாம் எடுத்திண்டு போய்.
அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் குஷியாகக் கிளம்பினான்.
அத்தை, நானும் போறேனே.
கூட விளையாடிக்கொண்டிருந்த தோழன் சொன்னான்.
மருதையா. உங்க அம்மா திட்டுவாங்க. நீ அரண்மனைக்குப் போ.
பகவதி அந்தச் சிறுவனிடம் சொன்னாள்.
ராஜாவுக்குக் காலம் தப்பிப் பெய்த மழை போல் வயோதிகத்தில் அடியெடுத்து வைக்கும்போது பிறந்த குழந்தை. அவன் மட்டும் இல்லாவிட்டால், துரைத்தனம் ஜமீன் நிர்வாகத்தை அடிமடியில் கைவைத்துப் பிடுங்கிக் கொண்டிருக்கும் என்பதால் ராணியும் ராஜாவும் ஏகத்துக்கு பிரியத்தைப் பொழிந்து வளர்த்ததில் வயதுக்கு மீறின கடோத்கஜனாக வளர்ந்திருந்தான் அவன்.
ஆத்தா ஒண்ணும் சொல்லாது. நீங்க அதுங் காதுலே ஏன் போடுறீக ?
மருதையன் உப்பின கன்னத்தில் சிரிப்பை அடக்கியபடி சொல்லிவிட்டு ஓடியே போனான். ஐயணையைத் தள்ளிக் கொள்ளச் சொல்லி வண்டியை வேகவேகமாக ஓட்டிக் கொண்டு போனவன் அவன்தான்.
மருதையா, எங்க மாமா மகன் கடையிலே தலையாட்டி பொம்மையைத் திரும்ப நகர வச்சுட்டான் தெரியுமோடா ?
சாமிநாதன் பெருமையோடு சொன்னான். ஒரு நாள் பழக்கத்தில் ஜான் கிட்டாவய்யனின் பிள்ளை வேதையனோடு நெருங்கி இருந்தான் அவன்.
அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல் இருக்கு தெரியுமா ?
சாமிநாதன் இன்னொரு தகவலையும் தோழனுக்கு அறிவித்தான்.
கீழே ஒண்ணா ரெண்டாடா என்றான் மருதையன்.
சின்னப் புள்ளைங்க பேசற பேச்சா சாமி இது ?
ஐயணை சத்தம்போட ஆரம்பித்தது இருமலில் முடிய வண்டிக்கூட்டில் சாய்ந்தபடி தூங்க ஆரம்பித்தான்.
நாலு பாஷை பேசுவானாம். களரின்னு ஏதோ யுத்தமெல்லாம் தெரியுமாம். ஆனா வெளவால் மட்டும் கெட்ட பயம்.
சாமிநாதன் சொன்னபோது வண்டியைக் கிட்டாவய்யன் குடும்பம் தங்கியிருந்த வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தான் மருதையன்.
(தொடரும்)
eramurukan@yahoo.com
*அடுத்த இதழில் முடிவுறும்*
- தனக்கான நிகழ் காலங்கள்
- காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்
- சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12
- புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று
- வடு
- கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)
- கதை 01 – அலீ தந்த ஒளி
- வாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்
- மதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்!
- அன்புடன் இதயம் – 12 – நெருப்பு
- தொடரட்டும் பயணம்…!!!
- இயன்றது
- ஜென் கதை ஒன்று
- நான்
- நண்பன்
- சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு
- மெக்ஸிக்க மணித்துளிகள்
- பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2
- இருபது/இருபது
- வேதனையின் நிழல்…
- கடிதங்கள் மார்ச் 25 2004
- முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்
- நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –
- ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்
- தாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)
- கடலைப்பருப்பு அல்வா
- கேரட் அல்வா
- பேரீச்சம்பழ மிட்டாய்
- வட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)
- தாமதமான காரணம்
- திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்
- ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்
- இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை
- மானுடம்
- புத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்
- அனிதா கவிதைகள்
- இட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்
- ஞாயிற்றுக்கிழமை மின்விசிறி
- கேட்க முடியா ஓசை
- தொடர்ந்து வரும் நட்பு..
- தரிசானாலும் தாயெனக்கு!
- காதல் பொதுவானது
- வாழ முற்ப்படுதல்.