ஆலமரம்

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

எஸ் ஜெயலட்சுமி


மார்கழி மாதத்திற்கே உரிய குளிரும் வெயிலுமாக இருந்தது. அம்மாவும் நானும் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்தோம். போன் மணி ஒலித்தது. அம்மா தான் எடுத்தாள்.”யார் என்று கேட்டேன்.”ராஜத்தின் பிள்ளை குமார், சித்தி இருக்காளான்னு கேட்டான். இருக்கான்னு சொன்னேன். அதுக்குள்ள, ‘’இன்னொரு கால் வரது அப்பறம் பேசறேன்னு சொல்லி போனைவெச்சுட்டான்” சொல்லி விட்டு அம்மா பாத்ரூம் போய் விட்டாள். குமார் எதுக்காகக் கூப்பிட்டானோ தெரியலையே, சரி, அவனே கூப்பிடட்டும் என்று காத்திருந்தேன்.

குமாருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனியார் கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவாக இருக்கிறான். பொறுப்பான பையன் அவனுடைய திறமையால் கம்பெனியில் நல்ல பெயர்.அவனுடைய நல்ல பெயரால் நாலைந்து பையன்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறான். நிதானமும் பொறுமையும் அதிகம். இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு பொறுப்பும் பொறுமையும்
விவேகமும் இருப்பதைப்பார்த்து நானே ஆச்சர்யப்படுவேன். ‘’இவனுடைய நல்ல குணத்துக்கு ஏத்தபொண் வரணுமே என்று அம்மாவும் நானும் பேசிக்கொள்வோம்.’’குமார் யார் என்று சொல்லவேயில்லையே? என் ஒன்றுவிட்ட அக்கா பையன். என் பெரியப்பாவின் பெண் வயிற்றுப் பேரன். என் அப்பாவின் சதாபிஷேகத்திற்கு என் சகோதரர்கள் வருமுன் அவ்வளவு எற்பாடுகளையும் அவனே பார்த்துப் பர்த்துச் செய்தான். இன்னொரு அக்காவின் மூன்று பெண்கள் கல்யாணங்களையும் அவனும் அவனுடைய நண்பர்களுமாக ஜமாய்த்து விட்டார்கள். சமையல் காரர்கள் முதல் சம்பந்திகள் வரை எல்லோரையும்
நன்கு கவனித்துத் தேவையானால் பறிமாறவும் செய்தான். ‘சித்தி, இனிமேல் நாமே கல்யாண காண்டிராக்ட் எடுத்துக் கலக்கி விடலாம் என்பான். எல்லா விஷயங்களும் அவனுக்கு அத்துபடி. இப்ப எதுக்குக் கூப்பிட்டானோ தெரியலையே, என்று யோசிப்பதற்குள் மறுபடியும் போன் ஒலித்தது.குமார் தான்.

”சித்தி நான் குமார் பேசறேன். பெரிய சித்திகிட்ட சொல்ல வேண்டாங்கறதனால அப்ப சொல்லலை. அம்மா போயிட்டா ‘’ என்றான். ‘’என்னடா குமார்? எப்படி,?எப்படி? எப்போ? என்று பதறினேன். மத்யானம் தான். என்னன்னு எங்களுக்கே ஒண்ணும் புரியலை. ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணிண்டே யிருக்கேன்.” என்றான். அதற்குள் அம்மா,” என்னடி, என்னது, என்றாள்.” குமார் நாங்கள் வருகிறோம் என்று போனை வைத்துவிட்டேன்.அம்மாவிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னேன். ”என்ன அநியாயமா இருக்கு. வயசானவா நாங்கள்ளாம் குத்துக்கல் மாதிரியிருக்க சின்னக் குழந்தைகளெல்லாம் போறாளே என்று அம்மா அழ ஆரம்பித்தாள். அம்மா போட்டு வைத்திருந்த காபியைக் குடித்து விட்டு உடனே நாங்கள் இருவரும் கல்லிடைக் குரிச்சிக்குப் புறப்பட்டோம். நான் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தேன். அம்மா வழியெல்லாம் புலாம்பிக் கொண்டே யிருந்தாள். கட்டுப் படுத்த முடியாமல் பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே யிருந்தாள். ‘’ஆலமரம் போல அவ்வளவு பேரையும் தாங்கினாளே என்று புலம்பிக் கொண்டேயிருந்தாள்.

அம்மா ராஜத்தை ஆலமரம் என்று சொன்னது எவ்வளவு பொருத்தமான வார்த்தை? நான் யோசிக்க ஆரம்பித்தேன். ராஜம் என் அக்கா மட்டுமல்ல. என் க்ளாஸ்மேட்டும் கூட.பெரியப்பா இருந்த கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை என்பதால் ராஜம் எங்கள் வீட்டிலிருந்து படிக்க வந்தாள். நானும் அவளும் ஒரே வகுப்பு. நாங்கள் இருவரும் ஒன்றாக ஆத்தங்கரைக்குப் போவோம்.
குடத்தைக் கவிழ்த்துப்போட்டுக் கொண்டு நீச்சல் அடிப்போம். சாயங்காலம் ஸ்கூலிலிருந்து வந்து கோவில் கிணற்றிலிருந்து குடிக்கத் தண்ணீர் குடத்தில் கொண்டு வருவோம். ராஜம் நன்றாகக் கோலம் போடுவாள். ரெட்டை இழைக் கோலம் போட அவள் தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

ராஜம் என்னை விட நல்ல கலராக இருப்பாள். டார்க் கலர்
சட்டை போட்டுக் கொண்டால் அவளுக்கு ரொம்ப எடுப்பாக இருக்கும். அம்மா எங்கள் இருவருக்கும் தாழம்பூ வைத்து தைத்து விடுவாள். அவளுக்கு தலைமயிர் நீளமாகயிருக்கும். எனக்கோ குட்டை முடி.சுருட்டையாக இருக்கும். எனக்கு சவுரி வைத்தால் தான் தலைமுடி நீளும்.அவளைப் போல் நீளமாக இல்லையே
என்று எனக்கு ஏக்கமாக இருக்கும். பரீ¨க்ஷகள் முடிந்து லீவு விட்டதும் நானும் அவளுடன் சேர்ந்து பெரியப்பா ஊருக்குப் போவேன்.பெரியப்பா வீட்டிற்குப் பின்னால் தாமிரபரணி ஆறு. அங்கே குளிக்கப் போனால் நேரம் போவதே தெரியாது. சாயங்காலம் சாதம் பிசைந்து ஒரு கும்பாக் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு போவோம். ஆத்தங்கரைப் படியில் உட்கார்ந்து கால்களைத் தன்ணீரில் நனைத்துக்
கொண்டு சாப்பிடுவோம். அவள் எங்கள் வீட்டில் இருந்த நாட்கள் என்றுமே மறக்க முடியாதவை!

நாங்கள் பெரியவர்கள் ஆன பிறகும் கூட எங்கள் குழந்தை களிடம். அந்த நாட்களைப் பற்றிச் சொல்லிச்சொல்லி அனுபவித்திருக்கிறோம். ராஜத்தின் அண்ணாவுக்குக் கல்யாணம் ஆனதும் அவள் அவனுடனிருந்து படிக்கச் சென்று விட்டாள். அவள் போன பின் வெகு நாட்கள் வரை அவளில்லாமல்
எப்படியோ இருந்தது. பள்ளியிறுதிப் படிப்பு முடிந்தவுடனேயே ராஜத்திற்குத் திருமணம் ! நெருங்கிய உறவிலேயே மாப்பிள்ளை.மாமியார் இல்லை. மாமனாருக்கும் உடல் நிலை சரியில்லை. வயதான பாட்டி வேறு. கல்யாணமாக வேண்டிய ஒரு நாத்தனார். வீட்டை நிர்வாகம் செய்ய ஒரு நல்ல பெண் வேண்டும் என்பதற்காகவே மாப்பிளை வீட்டிலிருந்து வலிய வந்து பெண் கேட்டுத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பை ராஜம் நன்கு நிறைவேற்றி
னாள். நாத்தனாரின் கல்யாணம் நன்கு நடந்தது. அவளுக்கு மூன்று பிரசவங்களும் பார்த்து அனுப்பினாள். அதற்குள் ராஜத்திற்கும் நாலு குழந்தைகள் ஆகியிருந்தது.
வயதான பாட்டியின் காலமும் கழிந்தது. மாமனார் டிமென்ஷியா என்ற நோயால் பாதிக்கப்பட்டதால் வெளியே போனால் வீட்டிற்கு வரத்தெரியாமல் திண்டாடுவார். அவரையும் எப்படியோ கடைசிக் காலம் வரை காப்பாற்றி விட்டாள்.

ராஜத்தின் கணவருக்கு மாற்றலாகிவிடவே அவர்கள் மதுரை போய் விட்டார்கள். கல்லிடைக்குறிச்சி வந்துவிடவே என் நினைவுகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு நனவுலகத்திற்கு வந்தேன். ராஜத்தின் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். மதுரையிலிருந்து வந்தபின் கடந்த இருபது வருஷங்களாக அங்கே இருப்பதால் நிறையப் பெண்கள் கூடியிருந்தார்கள்.அவர்கள்
பேசிக் கொண்டதிலிருந்து ராஜம் அந்த ஊர்ப்பெண்களுக்கு எவ்வளவு தூரம் உதவி செய்திருக்கிறாள் என்று தெரிய வந்தது. ஒரு மாமி சொல்லிக் கொண்டிருந்தாள், ”தனக்கு,வயசான ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கும் போது அக்கா பொண்ணுக்குத் தன்வீட்டு வாசலிலேயே பந்தல் போட்டுக் கல்யாணம் பண்ண எத்தன பேருக்கு மனசு வரும்? ராஜம் மாமியப்போல யாரு செய்வா?”என்று
அழுதாள். அதைக் கேட்டதும் அந்த அக்கா பாலா, ”எம்பொண்ணுக்கு எப்படி யெல்லாம் பாத்துப் பாத்துக் கல்யாணம் பண்ணினே. நா ஒனக்கு ஒண்ணுமே பண்ணலியே. என்று குமுறிக் குமுறி அழுதாள். குமாரின் நண்பர்கள் பலரும் ”மாமீ, மாமி, எங்களுக்கெல்லாம் இனிமே யாரு மொகம் பார்த்துச் சாப்பாடு போடுவா? காபி,குடிக்கிறயா? டிபன் சாப்பிடறயான்னு யாரு கேக்கப் போறா?”என்று
அழுதார்கள்.
‘’சித்திக்கு உதவிக்கு யாரும் இல்லைனு, மாமி தான் கண் ஆபரேஷன் செஞ்சு கூட்டிண்டு வந்து ஒரு மாசமா இங்க ஆத்திலவெச்சுப் பாத்துண்டா. நான் தான் அடுத்தாத்தில இருந்து பார்த்திருக்கிறேனே என்றாள் ஒருத்தி. இன்னொருத்தி.”தெருவிலே யார் வீட்டிலேயும் கல்யாணம் என்றாலும்
பிரசவம் என்றாலும் சாவு என்றாலும் மாமியின் பங்கு இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது என்றாள். மாமாவுக்கும்,உடம்பு சரியில்லாமல் போனபோதெல்லாம் மாமி கொஞ்சமா அலஞ்சிருக்கா என்றும் பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் சொன்னது உண்மை தான். ராஜத்தின் கணவர் ஷ¤கர் பேஷண்ட். முதலில் அவர் காலில் தான் பிரச்சனை ஆரம்பித்தது. ஒரு காலில் நாலு விரல்களையும் எடுக்கும் படி ஆச்சு. ஷ¤கர் பேஷண்டுக்கு காலில் பிரச்சனை வந்தாலே கஷ்டம் தானே? காரட்டில் அழுகல் வந்து விட்டால் வெட்ட வெட்ட அழுகல் உள்ளே போவது போல் கொஞ்சம் கொஞ்சமாக காலை மேலே
மேலே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு தடவையும் நாள் கணக்கிலும் மாசக் கணக்கிலும் ஆஸ்பத்திரி வாசம். அலைச்சல் பணச்செலவு! பணம் தண்ணீராகச் செலவழிந்ததே தவிர அவர் முழங்கால்வரை எடுத்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம். செயற்கைக் கால் பொருத்தினார்கள். இதற்கு நடுவில் பெண்ணுக்குக் கல்யாணம், பையனுக்குக் கல்யாணம் வேறு. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால் ராஜத்தைப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனேன்.
அவளுடைய தாழம்பூ நிறம்எங்கே? முகமெல்லாம் திட்டுத்திட்டா கறுப்பாக யிருந்தது. ஒட்டி உலர்ந்து போயிருந்தாள். உள்ளங்கையெல்லாம் கூட கருப்பாக இருந்தது ”என்ன ராஜம்? அடயாளமே தெரியலையே? ஒன் கலரெல்லாம் எங்க போச்சு?என்ன பிரச்சனை? டாக்டரிடம் காட்டக் கூடாதா? என்று கேட்டேன்.

டாக்டர் வீட்டுக்குத்தான் படையெடுத்துண்டே இருக்கேனே.! என்னவோ தெரியலை அடிக்கடி வயித்துவலி வரது. ரொம்ப டயர்டா இருக்கு” என்றாள். அவள் சொல்வதும் வாஸ்தவம் தான். எப்பவும் ஆஸ்பத்திரி வாசம் என்றால் யாருக்குமே அலுப்பாகத்தான் இருக்கும். ‘’ஆனா அப்படி விட்டு விட முடியுமா? நீ ஒன் ஒடம்ப பாத்துண்டாத் தானே ஒங்கொழந்தைகளையும் அத்திம்பேபேரையும் கவனிக்க முடியும்? என்று உரிமையுடன் கடிந்து கொண்டேன்.ஆனால் நான் சொன்னபடி அவளால் தன்னை கனித்துக் கொள்ள முடியவில்லை.அவள் கணவர் ஷங்கருக்கு ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே யிருந்ததால் தன்னைக் கவனித்து சரியான சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ஒரு வாரமாக உடம்பு ரொம்பவே முடியாமல் ஆகி விட்டதாம்

‘’ சங்கரா, இப்படி மோசம் பண்ணிட்டுப் போயிட்டாளேடா? என்று அம்மா போய் அத்திபேரிடம் அழுதாள். குமாரிடம் நின்று கூடப் பேச முடியவில்லை எங்களைக் கண்டதும் ஹோவென்று அழுதான். நான் அம்மாவ சரியா கவனிக்காம விட்டுட்டேனோ சித்தி?” என்று அழுதான். பாவம்,
அவன் தான் தன்னுடைய தாத்தா, சின்னத்தாத்தா, அத்தைப் பாட்டி என்று எத்தனை பேர்களைக் கூட்டிக் கொண்டு போய் அவர்களுக்கு கண் ஆபரேஷன், ஹெர்னியா ஆபரேஷன் எல்லாம் செய்து நல்ல படியாக அவர்களை அனுப்பி வைத்திருக் கிறான்! ஏன்? சமீபத்தில் கூட அவன் அக்கா மாமனார் மாமியார் இருவரையும் சென்னைக்குக் கூட்டிக் கொண்டு போய் அப்பல்லோவில் போய் காட்டி விட்டு வந்தானே! அம்மாவை கனிக்காமல் விட்டு விட்டோமோ என்ற ஆதங்கம். ராஜத்தைச் சுற்றி எத்தனை
மாலைகள்! ”மவராசி, பூவும் பொட்டுமா போயிட்டாங்களே என்று பால்காரி வந்து பெரிய குரலில் அழுதாள். வீட்டு வேலை செய்பவள் ”யம்மா இந்தப் புள்ளங்களையும் ஐயாவையும் யாரு பாத்துக்கப் போறாங்களோ தெரியலயே?” என்று ஓலமிட்டாள். திடீரென்று வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றதும் எல்லோர் கவனமும் அங்கு திரும்பியது.

‘’ எல்லாரும் கொஞ்சம் தள்ளிப் போங்கள்’’, என்று
சொல்லிக் கொண்டே டாக்டர்கள் வந்தார்கள். அரவிந்த் கண் ஆஸ்பத்திரி யிலிருந்து டாக்டர்கள் வந்திருந்தனர். அத்திம்பேர் சொன்னார். ராஜம் எற்கெனவே சொல்லியிருந்தாளாம். நம்மால் முடிந்த வரையில் அடுத்தவாளுக்கு உதவணும். அவளோட சித்தி சித்தப்பாவுக்கு கண் ஆபரேஷன் நடந்த போதே அவளுக்குத் தோன்றியதாம். தன்னுடைய கண்களையும் தானம் செய்ய வேண்டுமென்று. குமார்
தான் ஞாபகமாக போன் பண்ணி அவர்களை வரச்சொன்னான்”என்றார்.

ஒரு ஆலமரம் வீழ்ந்தாலும் அதன் விழுதுகளிலிருந்து இன்னொரு ஆலமரம் தழைக்கும் என்று நினைத்துக் கொண்டே.ன்.

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி

ஆலமரம்.

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

எம்.கே.குமார்.


அந்த வீட்டிற்கு தெரிந்தவர்களும் சொந்தக்காரர்களும் தனித்தனியாகவும் கூட்டமாகவும் வந்துகொண்டிருந்தனர். ஊரின் முக்கியமான ‘மீட்டிங் ஸ்பாட்களான ‘ அந்த பூவரசு மரத்தடியிலும் அந்த ஊருக்கே சிறப்பம்சமான வள்ளிமயில் டாக்கடையிலும் மற்றும் வழக்கம்போல குடிநீர்க்குழாய் அடியிலும் ஒவ்வொருத்தரும் அவரவர் சொந்த கதைகளோடு இந்தக்கதையையும் சேர்த்துக்கொண்டார்கள். சிலர் வழக்கம்போல் ஒவ்வொன்றாய் சொல்லிவிட்டு ‘ம்ஹும்….என்ன வாழ்க்கை ‘ என்று சலித்துக்கொண்டு குழாயடியில் உள்ள குடம் எப்போது நிறையப்போகிறதோ எனவும் ஒரு ஒற்றுப்பார்வை பார்த்துக்கொண்டார்கள். குழாயில் நீர் சொட்டுச்சொட்டாக அவர்களின் பேச்சுக்கு மனமிறங்கி அழுவது போல வழிந்துகொண்டிருந்தது.

வள்ளிமயில் டாக்கடையில் கடந்த ஒருசில நாட்களாக நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. எல்லாம் சேவுகப்பெருமாள் சேர்வை போட்ட கடைசி நேர பிச்சை. அவரைப்பார்க்க வருபவர்களெல்லாம் வள்ளிமயிலையும் வந்து பார்த்துவிட்டு அப்படியே ஒரு டாயையும் குடிப்பதுபோல் குடித்துவிட்டு ரெண்டு பன்னையும் வாங்கி சாப்பிடுவதுபோல் சாப்பிட்டுவிட்டு ‘பன்னுந்தீயும்………சூப்பருள்ளே……..ஏன்னுஞ்சொல்லு…..எல்லாம் வள்ளிமயிலுகைபட்ட பன்னுள்ளே… ‘என்று அவர்களே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டனர்.அவர்களின் அந்த நேர பேச்சை வள்ளிமயில் கேட்கிறாளா எனவும் அவர்கள் ஒற்றைக்கண்ணில் பார்த்துக்கொண்டனர்.அவர்கள் இப்படி பார்ப்பதை இப்போதெல்லாம் வள்ளிமயில் கண்டுகொள்வதே இல்லை. அதனால் தான் என்னவோ அவர்களுக்கு அதை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும்போல தோணுகிறது.

எல்லோரும் அவரவர் பிரச்சனைகளோடு சேவுகப்பெருமாள் சேர்வை வாழ்க்கையையும் சேர்த்துக்கொண்டார்கள். பூவரசு மரத்தடியின் கீழ் நின்றிருந்த கூட்டத்தில் வெள்ளையுஞ்சொள்ளையுமாக நடுவில் நின்று கொண்டிருந்தார் தொண்டைமான் சேர்வை. ‘எவ்வளவு பெரிய மனுஷம்பா. நடந்து வந்தா பீமசேனா நடந்து வர்ற மாதிரி இருக்கும்..தோளு ரெண்டும் பெரிய சொளவு மாதிரி அசஞ்சி வீசி…….தொடை ரெண்டும் பெரிய யானை அசஞ்சி வர்ற மாதிரி நடந்து வருவாரு……….ச்சே…..என்ன நம்ம வாழுவு.. ‘ என்று வெறுத்துப்போய் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் மனம் ‘சீக்கிரமா சாவுடா….என் மைனரு வாழ்க்கையிலெ மண்ணள்ளிப்போட்டியல்ல சாவுடா. ‘ என நினைத்துக்கொண்டது. ‘பின்னே……..கோபம் வராதா ? வெள்ளையம்மா பின்னாடி நாயா அலைஞ்சி கடைசியிலே ஏமாந்தவராச்சே சேவுகப்பெருமாள் சேர்வைகிட்டே!

அவர் சொல்வது சரிதான். சேவுகப்பெருமாள் சேர்வை நடந்து வந்தால் கோயில்களில் செதுக்கி இருப்பார்களே துவாரபாலகன் அல்லது வீரபாகு… அது நடந்து வருவதுபோல் இருக்கும். கைகால்களில் செழித்துவளர்ந்த திரட்சியான சதை முடிப்புகள், ஒரு சின்ன கதாயுதத்தின் கனமான பாகம் போல காட்சி அளிக்கும். நெஞ்சின் மேல் இரண்டு தேக்குமரத்தால் ஆன கதவுகள், அவர் நடந்து வரும்போது திடும் திடும் என திறந்து மூடுவதுபோல் மேலும் கீழும் அசையும். இத்தகைய சிறந்த ஆண்மைத்தனமான ஆண்மகனை பார்க்க என்ன ? கட்டித்தழுவ எந்தப்பெண்ணுக்கும் ஆசை வருவது இயல்பின்றேல் வேறென்ன இருக்கமுடியும். அதைத்தான் சேவன்னா செய்துகொண்டார்.

குடிநீர்க்குழாயில் இப்போதும் கூட்டம் குறைவதாய் இல்லை. அதேபோல சொட்டிக்கொண்டிருந்த தண்ணீரும் அதிகமாகவில்லை.கூட்டத்தில் ஒவ்வொருத்தரும் ‘இச்சுக் ‘ கொட்டிக்கொண்டிருந்தார்கள். அது சேவன்னாவுக்காக இல்லையென்றும் நாம் சொல்லிவிடமுடியாது..ஏனெனில் சேவன்னா திடுமென இறந்து போய்விட்டால் அந்த வீட்டிற்கே ரெண்டு மூணு நாளைக்கு

தண்ணி சரியாய்ப்போய்விடும் வேறு யாரும் பிடிக்க முடியாது. அதனால் தானே இந்த வேகாத வெயிலிலும் இந்த குழாயடியில் நின்று கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என அவரையும் நினைத்துத்தான் இச்சுக்கொட்டுகிறார்கள்.

டாக்கடையில் இருந்து ஒருசில இளவட்டங்கள் குழாயடியையும் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘என்ன மாப்புளே….சேவன்னாவத்தானே பாக்கவந்தீகெ… ‘ என அங்கிருந்த ஒரு சிலர் புதிதாய் அந்த ஊருக்கு வந்தவர்களை கலாய்த்துக்கொண்டு ‘என்னப்பா…..உங்க அக்கா தங்கச்சிகள்ளே யாரும் சேவன்னா வைப்பாக்கவல்லியா ‘ என கேட்டுக்கொண்டு ஊர்ப்பாதையையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த ஒரு நாய் ஒன்று மிகுந்த எதிர்பார்ப்போடு அப்படிப்பேசுபவரின் கையையும் வாயையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தது எப்படியாவது அந்தப்பன்னின் ஒருசில உதிரிப் பாகங்களாவதாவது கீழே விழாதா என்று.

தொண்டைமான் சேர்வை இப்போது சில விசாரணைகளை அருகிலிருந்தவர்களிடம் நடத்திக்கொண்டிருந்தார்.

‘என்னப்பா……கொட்டுக்கெல்லாம் சொல்லிட்டாங்களா…..அப்புறம் ரெண்டாவது மருமவன் மருதையிலே கம்பவுண்டரா இருக்கானே சொல்லி ஆளு அனுப்பி விட்டாங்கள்ளே……இல்லாட்டி போயி கருவூருலே போனு இருக்காம் பேசி சொல்லிப்புட்டு வந்திருங்க. நம்ம வீட்டுலெ இன்னக்கின்னு பாத்து போனு கெட்டுப்போயிருச்சிப்பா. அப்புறம்………… ‘ யாரோ தன் பின்னால் இருந்து சுரண்டுவதை அறிந்து தன் பேச்சை நிறுத்தி, ‘என்னப்பா……. ‘ என காதை வலதுபக்கம் திருப்பி அங்கு நின்றிருந்த அவரின் வாய் விடும் மெல்லிய காற்றின் மொழி அறிந்து பொருள் உணர்ந்து ‘அப்படியா! ‘ என ஊருக்கு வரும் கல் ரோட்டின் முடிவைப்பார்த்தார்.

‘அட…வாங்க!… வாங்க!! உங்களுக்குத்தான் சொல்லி ஆள் அனுப்பனும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன் மாப்ளே.!! அதுக்குள்ளே நீங்களும் வந்திட்டாங்க.! தங்கச்சியும் வந்திருக்கா! நல்லது வாங்க போயி….சேவன்னாவைப்பாப்போம் ‘

‘இல்லே தோவன்னா! இன்னக்கி கட்சிலேயிருந்து ஒரு முக்கிய கூட்டம் போடுறாங்க திருச்சிலே! அதுக்குத்தான் கெளம்பிக்கிட்டு இருந்தேன்..திடார்ன்னு பாத்தா போனு! இந்தமாதிரி நம்ம சேவன்னா சீரியஸ்ன்னு. அப்புறம் எப்படி ? நமக்கு ரொம்ப வேண்டியவரு. அதுவும் நான் மொதல்லே எம் மெல் ஏக்கு நிக்கும்போது நம்ம சேவன்னா எவ்வளவு பாடுபட்டாரு ஏந்தம்பிமாதிரி.! அதுக்காகவாவது நா வந்து கடைசியா பாக்கவேணாமா ? என்ன சொல்லுறீங்க.. ? இல்லாட்டி நம்ம சாதி சனமே நம்மளெ மதிக்குமா சொல்லுங்க…. ‘ என நடந்துகொண்டே பேசிக்கொண்டுபோனார்.

அவரின் பின்னால் அவரின் மனைவி கோமதிஅம்மாள் கண்களில் அரும்பிய நீர்க்குவியலை மனதால் கட்டுப்படுத்திக்கொண்டு உள்ளுக்குள் அழுதுகொண்டே நடந்தார். அவரின் நடையில் ஒரு தளர்வும் அதேசமயம் ஒரு அவசரமும் தெரிந்தது.

‘ம்ம்ம் தள்ளுங்கப்பா! எம்மெல்லியே ..வாராரு ‘ என ஒருவர் சொல்லிக்கொண்டு முன்னே செல்ல, அந்த நல்ல விசாலமான, இருபுறமும் திண்ணை எடுக்கப்பட்ட, உள்ளே மூன்று செவ்வக அறைகளாக ஆக்கப்பட்டிருந்த அந்த ஓட்டு வீட்டுக்குள் கூட்டத்தினரின் ஒரு சில வணக்கங்களையும் கொடுத்து வாங்கிகொண்டு புன்னகை சிந்தி எல்லோரிடமும் நல்லாயிருக்கீங்களா என நலம் விசாரித்துக்கொண்டும் வினவிக்கொண்டும் அந்த சேவன்னா எனப்படும் சேவுகப்பெருமாள் படுத்திருக்கும் அறையின் உள்ளே நுழைந்தார்…..எம்.எல்.ஏ.

அந்த அறையில் ஒருவித அமைதியும் அதே சமயம் ஒருவித புழுக்கமும் இப்போது சேர்ந்துகொண்டது. ‘சரிப்பா..ஏன் எல்லோரும் உள்ளே நிக்கிறீங்கே ? கொஞ்சப்பேரு வெளியே போங்க….காத்தாவது வருமுல ‘ என எம் எல் ஏ சொல்ல, ஆண்கள், அங்கு பெண்கள் நின்றிருந்த பகுதியைப்பார்க்கத்தொடங்கினார்கள்.பெண்கள் யாவரும் அங்கிருந்து நகராமல் எம்மெல்லியே என்ன பேசப்போறாரு என கேட்க ஆவலோடு, ஒருவித அமைதியை பதிலாக அந்தப்பார்வைகளுக்கு தந்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டார்கள். உள்ளே நின்றிருந்த வயதுப்பெண்கள் ஒருசிலர் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக வெளியே வந்தார்கள்.

‘ஏம்பா எங்க மூத்தவன் முத்து ? ‘ என எம் எல் ஏ வினவிக்கொண்டு கூட்டத்தினரில் ஒருசிலரை தேடுவதுபோல் ஒரு பார்வை விட்டார்.

சேவன்னாவின் மூத்த மகன் முத்து இப்போது அவர் அருகில் வந்து ‘வணக்கம்ப்பா. ‘ என்றான்.

‘அப்பாகிட்டே பேசுப்பா ‘ என அவர் சொல்ல, முத்து, ‘அப்பா…….அப்பா….. ‘.என கொஞ்சம் நிறுத்தி, ‘பெரியப்பா வந்திருக்காக….நம்ம எம்மெல்லியே பெரிய்யப்பா. ‘ என மெதுவாக ஆனால் கொஞ்சம் அவசரமாக பதட்டமாக அவரின் நெஞ்சுக்கு அருகில் போய் சொன்னான்.

சேவன்னாவின் முகத்தில் ஏதாவது ஒரு அசைவு தெரிகிறதா என எல்லோரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘ம்ம்..ம்ம்.. ‘ என ஒரு சில முனங்களோடு அவர் முகத்தில் வேறு எதுவும் தெரியவில்லை.

‘நேத்து ராவுலே இருந்து இப்புடித்தானுக மொனகுறாரு. ஆனா கால்லாம் சில்லுன்னு இருக்கு. சீவன் கால்லாம் போயிருச்சி. இடுப்பு வரைக்கும் கீழே எதுவும் இல்லெ. பச்சத்தண்ணியா இருக்கு! ஆவி நெஞ்சுக்கும் தொண்டைக்கும்தா இழுத்துக்குட்டுருக்கு! ‘

இப்போது முத்து இன்னும் கொஞ்சம் உட்கார்ந்து காதுக்கருகில் குனிந்து ‘அப்பா……..அப்பா! ‘ என ஒரு மாதிரி அழுகைக்குரலோடு அவரைக்கூப்பிட்டு. ‘அப்பா….பாருங்கப்பா!நம்ம பெரியப்பா வந்திருக்காக. கூட நம்ம கோமு சின்னம்மாவும் வந்திருக்காக… ‘ என சொன்னான்.

திடுமென அவர் முகத்தில் எளிதில் உணரமுடியாவண்ணம் சின்னதாய் ஒரு உயிர்ப்பு! எல்லோரும் அதனை ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருக்க அந்த சேவன்னாவின் முகத்தில் இப்போது ஒருவித வித்தியாசமான ‘தான் உயிர் பிழைக்கமாட்டோமென நினைந்து வரும் ‘ இயலாமை கலந்த அந்த முக பாவம் திடுமென வந்து போனது. அதுவே மெல்ல விலகி,

‘அப்பா…அப்பா! கோமு சின்னம்மா வந்திருக்காங்கப்பா ‘

‘அப்பா….அப்பா! ‘

திடுமென பெண்கள் பகுதியில் இருந்து ஓரிரு அழுகைக்குரல்கள் தொடங்கின.

சேவுகப்பெருமாள் சேர்வை மெல்ல பறந்து கொண்டிருந்தார். அவரின் வாய் மட்டும் ‘ஆ……ல்லல்ல…..ம்ம்……ர்…ம்ம்.ர்ழா ‘….ல்லா.ம்மா….ர்ரக்…..ம்ம். ‘என குழறியது.

‘முத்து..யேய் கேளுப்பா! என்னமோ சொல்லா வார்ராரு கேளு! ‘

முத்து காதை அருகில் வைத்துக்கேட்டான்.

‘ஆ..ல்ல்……..ல…….ம்ம……..ர்………..ர……..ம்ம்ம் ‘

‘ம்ம்..எல்லாம் ஆச்சுப்பா! ரெடி பண்ணுங்க. ‘ எம்.எல்.ஏ குரல் கொடுத்தார்.

***************

‘என்ன கொழுந்தனாரே கையி ரொம்ப நீளூது.. ‘ தன் மார்புக்கு அருகில் வழிமறித்திருக்கும் சேவன்னாவின் கைகளை தட்டி கொஞ்சம் கோபத்தோடு கேட்டாள் கோமதி.

‘கையி மட்டும் நீளமில்லே கோமு. ‘

ம்ம். வாயிம் ரொம்ப நீளம்தான். பேசாம வீடு போயி சேருங்கொ! அப்பாகிட்டே சொன்னேனா, அறுத்து காக்கைக்குப்போட்டுருவாங்க நாக்கை ‘

‘என்ன கோமு ? நா என்ன அன்னியனா ஒன்னை கட்டிக்கப்போறவென். கடைசிவரைக்கும் ஒங்காலடிக்கு கீழே உக்காந்து ‘

‘ காலடிக்கு கீழே உக்காந்து எம்மொகத்தே பாப்பீகளாக்கும்!! ரொம்பதான் ‘

அன்றிலிருந்து பத்தாவது நாள் இருவரும் ஆலமரத்தடியில், பேச்சில் துவங்கி………..ம்ம்ம்.

ஆலமரம் மட்டும் கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களின் விடலை வாழ்க்கையை!

******

‘இந்தா போறாங்களே இந்த அம்மா யாருப்பா ? ‘

அவ்வூருக்கு புதிதாக வந்தவர்களில் யாரோ ஒருவன் அருகிலிருந்தவனிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘அட….இவுங்கதாம்பா எம்மெல்லியெ சம்சாரம். சாகக்கெடக்குறாரெ அவரு பொண்டாட்டியோட தங்கச்சி. மொதல்லே இவருக்குத்தான் கட்டுறதா இருந்துச்சி ‘ என உள்ளூர்க்காரன் ஒருவன் மெல்லியகுரலில் பதில் சொன்னான்.

‘அப்போ எம்மெலியெ அவருக்கு தம்பியா ? ‘

‘அட! வெவரங்கெட்டவன்ப்பா நீ! அது அவரு அண்ணன்! பெரியப்பா..பையன் ‘

கேட்டவனுக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது.

வள்ளிமயில் ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.

***********

பெண்கள் எல்லோரும் உரக்க அழ ஆரம்பிக்க, கோமதி அம்மாள் எழுந்து ஆலமரத்தை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

***

yemkaykumar@yahoo.com

Series Navigation

எம்.கே.குமார்

எம்.கே.குமார்

ஆலமரம்

This entry is part [part not set] of 8 in the series 20000625_Issue

பாவண்ணன்


மனிதநிழல் தீண்டாத மனவெளியின்

மண்பிளந்து நிற்கிறது ஆலமரம்

முளைக்குள் வேர்பதித்து

முகில்வெளியில் கிளையசைத்து

விழுதைச் சுழற்றுகிறது அந்த மரம்

ஆதரவாய் முகம்தடவி

அழுதவரிச் சுவடழிய

அன்புடன் தீண்டும் விரல்

அந்த மரம்

எரிக்கும் கோடையில் அலைந்துழன்றபின்

அடிமரத்தின் மடிதேடி

இளைப்பாறும் என் உடல்

மார்தழுவும் காற்றில்

மனப்பாரம் கரைந்தகல

என்மீது படரும் இனிய நிழல்

அண்டத்தில் துளிர்த்தது அம்மரம்

ஆதிமனிதனின் வயது கொண்டது அம்மரம்

ஏரிக்கரையில் நிற்கும் மரமல்ல அது

அடையாற்றில் நிற்கும் மரமுமல்ல அது

எந்தத் தோப்பிலும் அந்த மரம் இல்லை

இந்த உலகத்திலேயே அந்த மரம் இல்லை

ஆலமரம்

ஒரு கனவு

கனவென்னும் ஆணியில் தொங்கும் சித்திரம்

அந்த மரத்தடியில் சாய்ந்தபடி

ஆகாயத்தைப் பார்க்கிறேன்

சாயங்கால மேகங்களிடமும்

சரியும் சூரியனிடமும் உரையாடுகிறேன்

கவியும் இருள், நிலவு

கண்சிமிட்டும் விண்மீன்களுடன் கைகுலுக்குகிறேன்

கனிந்த மனநிலையில்

காற்றிடம் என் கவிதையைச் சொல்கிறேன்

விழுதுகளின் விரல்பற்றி

வரட்டுமா என்று விடைபெறுகிறேன்

தென்பெண்ணை

பாவண்ணன்


வந்ததும் தெரியவில்லை

வற்றியதும் தெரியவில்லை

ஊதாரி போல

ஊரைப் பார்த்து வெறிக்கிறது ஆறு

கூத்தாடித் திரிந்தபடி

தானே தொலைத்துவிட்டு

பாழ்மணலில் வெயில்மின்ன

பைத்தியம் போல் தத்தளிக்கிறது

தண்ணீர் வழிந்தபோது

தளுக்கிக் குலுக்கியதெல்லாம்

கனவாக மாறிக்

கற்பனையாய்ப் போய்விட்டது

சகிக்கவில்லை இப்போது

ஊரைப் பார்த்து

ஒப்பாரி வைத்தபடி

மணலைச் சுழற்றி

மார்பில் அறைந்தபடி

ஆறாத துக்கத்தில் அலைகிறது

பொசுக்கும் வெப்பம் தாளாமல்

புரளும் போதெல்லாம்

வானத்தை நோக்கி முறையிடுகிறது

மேகங்களைக் கண்டதுமே

கண்ணுக்குத் தெரியாத கைகளை நீட்டி

காப்பாற்ற வேண்டிக் கதறுகிறது

ஆற்றின் ஈரம் வற்றியதால்

ஆற்றோரச் செடிகள் கருகிவிட்டன

பச்சை நாணல் புதர்கள்

பதறிக் கதறி உயிர்விட்டன

காலைச் சூரியனோ

மாலைச் சூரியனோ

தகதக்ககும் பிம்பத்தைக் காட்டாத

ஆற்றின் கரைகளை

ஆசையுடன் நாடுவதில்லை மக்கள்

வற்றாமல் வைத்துக் கொள்ளும் விதம்

ஆற்றுக்கும் தெரியவில்லை

மனிதனுக்கும் தெரியவில்லை

மண்ணாகிப் போன ஆற்றின் வயிற்றில்

சாராய உலைகள் எரிக்ின்றன

பாலத்தின் மறைவில்

ஆணும் பெண்ணும் ஒதுங்குகிறார்கள்

குறுக்குப் பாதைகளில்

மாடோட்டி வருகிறார்கள் சிறுவர்கள்

ஆதரவற்ற ஆற்றின் தோற்றம்

மனசைக் கசிய வைக்கிறது

ஒரே ஒரு பெருமழை போதும்

இதன் கண்களுக்கு உயிர் வந்துவிடும்

எப்படியாவது

ஓடிக்கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும்

இந்த ஆற்றை ஒரு கடல்போல.

 

  Thinnai 2000 June 25

திண்ணை

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்