திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

விருந்து

This entry is in the series 20100220_Issue

நட்சத்திரவாசி


எனது அவயங்கள் யாவையும் வெட்டி
உங்கள் முன் பரிமாற வைக்கப்பட்டிருக்கிறது
ரத்த வாடை வீசாத மொழுக்கான
தோல்களற்றவையவை
உங்களில் ஒருவன் சொல்லுகிறான்
முன்பும் இதனொரு சுவையை அறிந்தேயிருக்கிறேன்
பாலித்தீன் பைகள் போலிருக்கும்
மேலுறையை பிரித்தெடுத்துவிடுகின்றனர்
அப்போது தான் அந்த சர்ச்சை உருவாகியது
மாமிசங்கள் இல்லாத தலை எதற்கு
நீங்கள் அவயங்களை புசிக்காமலே
வாதிடுகிறீர்
விருந்துகளிலும்,வைபவங்களிலும்
கேட்காத பேச்சாக இருந்தது அது
ஒவ்வொருவரின் தட்டுகளிலும் இருந்த
அவயங்களுக்கு ஒப்ப
அவர்கள் கொலைவெறி தாக்குதல்களில்
அவயங்கள் விழத் தொடங்கின
எனது தலையை தட்டில் வைத்திருந்தவன்
தலையை மிதித்துக் கொண்டு விழுகிறது உடல்
கால்களற்றவன் தவழத்துவங்குகிறான்
கைகள் இரண்டையும் இழந்தவன்
நிலை குலைந்து போயிருந்தான்
ரொம்ப காலத்துக்கு பிறகு நான்
ஒரு விருந்தில் கலந்து கொண்டிருந்தேன்

Series Navigation

About நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி

View all 22 articles →

விருந்து

This entry is in the series 20010318_Issue

செசார் வயெஹொ (தமிழில் சுகுமாரன்)


இன்று எவரும் விசாரிக்க வரவில்லை
இந்த மாலை வேளையில்
என்னைப்பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை
ஒளியின் பிரகாச ஊர்வலத்தில்
ஒற்றைக் கல்லறைப் பூவைக்கூடப் பார்க்கவில்லை
என்னை மன்னியும், கடவுளே!
எவ்வளவு கொஞ்சமாக இறந்திருக்கிறேன் நான்.
இந்த மாலை வேளையில்
ஒவ்வொருவரும்
எதுவும் விசாரிக்காமல்
என்னைப் பற்றி எதுவும் கேட்காமல்
கடந்து போகிறார்கள்
அவர்கள் மறந்து போனது எதுவென்றும்,
வேறு எவருடையதோ எனத்
தவறுதலாக என் கையில் விட்டுப்போனது எதுவென்றும்,
எனக்குத் தெரியாது.
நான் கதவைத் தாண்டி வந்து
உரக்க அவர்களிடம் சொன்னேன்
‘நீங்கள் எதையாவது தொலைத்திருந்தால் அது இங்கே… ‘
ஏனெனில்
இந்த வாழ்க்கையின் எல்லா மாலை வேளைகளிலும்
எந்தக்கதவுகள்
என் முகத்தில் அறைந்து மூடும் என்று
எனக்குத் தெரியாது.
அந்நியமான ஏதோ ஒன்று என் ஆன்மாவைப் பீடிக்கிறது
இன்று எவரும் அருகில் வரவில்லை
இன்று
இந்த மாலை வேளையில் கொஞ்சம்
கொஞ்சமாக இறந்து போயிருக்கிறேன்.

***

CESAR VALLEJO

நவீன ஸ்பானிய மொழியின் நான்கு மகா கவிகளில் ஒருவர் – செசார் வ்யெஹோ. பாப்லோ நெருடா (சிலி), ஆக்டாவியா பாஸ் (மெக்ஸிகோ), நிக்கலஸ் கியன்(கியூபா) ஆகியோர் மற்ற மூவர்.

1892இல் பெரு நாட்டில் பிறந்த வயெஹோ, ஸ்பானிய செவ்விந்த பெற்றோரின் பிள்ளை. மற்றொரு ஸ்பானியக் கவிஞரான கார்சியா லோர்க்காவைப்போல தனது மரணத்தை முன் கூட்டியே ‘வெள்ளைக்கல் மீது கறுப்புக்கல் ‘ என்ற கவிதையில் எழுதிய வயெஹோ 1938இல் பாரீஸில் இறந்தார். அது வியாழக்கிழமை அல்ல. வெள்ளிக்கிழமை. புனிதவெள்ளிக்கிழமை.

***

வெள்ளைக்கல் மீது கறுப்புக்கல்

பெருமழையில் பாரீஸில் நான் இறப்பேன்
இப்போதே நினைவிலுள்ள ஒரு நாள்
நான் பாரீஸில் இறப்பேன். அது நிச்சயம்
ஒரு வேளை, அந்த நாள்,
ஓர் இலையுதிர் கால வியாழக்கிழமையாக இருக்கலாம்
இன்றுபோல.
அது ஒரு வியாழக்கிழமையாகவே இருக்கும்
ஏனெனில், இன்று, இந்த வியாழக்கிழமை
இந்த வரிகளை எழுதும்போது
என் கைகளை வலி குடைகிறது
இன்று போல ஒரு போதும்
முழுப்பாரத்துடன் என்னைத் தனியனாய் உணர்ந்ததில்லை.

செசார் வயெஹோ இறந்து போனான்.
அவன் எதுவும் செய்யவில்லை
எனினும்
அவர்கள் அவனை ஆணியறைந்தார்கள்
குறுந்தடிகளால், கயிறுகளால்
அவர்கள் அவனை மூர்க்கமாகத் தாக்கினார்கள்.
அவனுடைய சாட்சிகளோ,
வியாழக்கிழமைகள், கையெலும்புகள்,
தனிமை, மழை, வழிகள்…

***

நன்றி தாமரை

Series Navigation

About சுகுமாரன்

சுகுமாரன்

View all 38 articles →