This entry is in the series 20100926_Issue

ப.மதியழகன்



மரங்களிலிருந்து துளித்துளியாய்
மழைநீர் விழுந்து கொண்டிருக்கும்
பறவைகள் தன்னுடைய
உடலிலிருந்து மழைநீர் அகல
றெக்கைகளை சிலிர்த்துக் கொள்ளும்
பேய் மழைக்கு வழிவிட்டு
ஆங்காங்கே ஒதுங்கிய
பொது ஜனங்கள்
அடுத்த மழைக்கு முன்பாக
வீடு வந்து சேர்ந்திட எண்ணி
துள்ளல் நடை போடுவார்கள்
தண்ணீர் வரத்து குறைந்ததால்
காகித கப்பல்கள் எல்லாம்
தரை தட்டி நிற்கும்
மழை நின்ற பிறகும்
மாடிகளிலிருந்து தண்ணீர்
இன்னமும் வடிந்து கொண்டிருக்கும்
மழையால் இயல்பு வாழ்க்கைக்கு
எவ்வளவோ இடர்பாடுகள்
நேர்ந்தாலும்
இன்னொரு மழைக்காக
உள்ளம் ஏங்கித் தவிக்கும்.

Series Navigation