திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மகள்…

This entry is in the series 20050415_Issue

மோகனா. தி


நான் உன்னைப்
மடியில் தாங்குவதில்லை
மனதில் தாங்குகிறேன்.

உன் சிரிப்பில்,
என் கவலைகள்
புதைக்கிறேன்.

என் சந்தோஷம், துக்கம்
யாவும் உந்தன்
கைக்காட்டும் திசையில்.

அம்மா என்னும்
உன் ஒரு வார்த்தையில்
பிறக்கிறேன் மறுபடியும்.

உன் சிறு காயத்திற்கும்,
கலங்கி நிற்கிறேன்
சிறு குழந்தையாக.

உன் மழலையில்
என்னை மறக்கிறேன்.

உன் தோழிகள், எனக்கும் தோழியர்
நீ சொல்ல,
நான் ரசிக்கிறேன்.

இத்தனையும் செய்கிறேன்,
கனவில் மட்டும் –
மகளே, நீ மலடியின் மகளாய்
கற்பனை கருவறையில் பிரசவித்ததால்..

____

Series Navigation

About மோகனா. தி

மோகனா. தி

View all 1 articles →

மகள்

This entry is in the series 20030112_Issue

அபுல் கலாம் ஆசாத்


அகவை இவளுக் கைந்தினுங் கீழ்தான்
ஆயினும் நூறு முறையே – பல
தகவல் கேட்டுத் தலையைச் சாய்க்கும்
தினுசோ பாட அறையே!
அகமும் புறமும் ‘வால்’என் றழைக்கும்
அவளென் வானிற் பிறையே! – என்
மகளாய்ப் பிறந்து மனதைப் பூட்ட
மடிவளர் பாசச் சிறையே!

அக்கா ளின்மேல் அடுக்கிடு வாளே
யிரங் குற்றம் நித்தம் – தான்
சிக்கா திருக்கச் சிரித்து மழுப்பிச்
சிந்திடு வாளே முத்தம்
சுக்கா னிவளே கடைத்தெரு சென்றால்;
சுழிக்கும் முகத்தைச் சுற்றம் – அட
எக்கா ரணமோ இர்ண்டொரு நொடியில்
அவரைக் கவரும் கொற்றம்

எப்படிப் படித்தாள் இத்தனை பாடல்
‘எலி’யும் ‘நிலவு’ம் ‘லட்டு’ம் – நான்
தப்படி வைத்துத் தவிக்கின் றேனே
தலையில் கணினி குட்டும்
செப்படி செய்யும் குழந்தைப் பாட்டின்
சீரும் அசையும் சுவையும் – நாளை
அப்படிப் பாடல் இவள்தரு வாளா
இதயம் நிறையும் மட்டும் ?
—————————-

அபுல் கலாம் ஆசாத்
azad_ak@yahoo.com

Series Navigation

About அபுல் கலாம் ஆசாத்

அபுல் கலாம் ஆசாத்

View all 8 articles →