This entry is in the series 20110306_Issue

குமரி எஸ். நீலகண்டன்



இடி மின்னலென
வானத்தில் யானையின்
போர் பிளிறல்.
ஒலியும் ஒளியுமென
வெளியெங்கும்
வளரும் மழைக்கான
ஆயத்தங்கள்.
மண்ணிலிருந்து சீறிப்
பாயும் மழை வாசம்.

குடையும்
ரெயின் கோட்டுமாய்
பிளாஸ்டிக் பைகள்
பொதிந்த கோப்புகளுமாய்
மழைக்கு ஒளிந்து
பயணித்த சில தூரங்களில்
மேலிருந்து கெக்கெ
கெக்கேயென சிரிக்கும்
வெயிலின் எச்சிலொளியின்
எக்காளத்தில்
என்னால் எதுவும்
செய்ய இயலவில்லை
வெயிலையும் வெறுமனே
வேறெங்கோ சல்லாபிக்கும்
மழையையும்.

Series Navigation