பகுதி விகுதியானதேன் ?
கரு.திருவரசு

மண்ணளந்து விண்ணளந்து
மனமளந்து வாழ்ந்தவன்
பொன்னளந்து புகழளந்து
பொருள்வளத்தில் ஆழ்ந்தவன்
தன்னலத்தால் நிலைதளர்ந்து
தனிநலத்தைப் பேணியே
கண்ணிழந்த காவியத்துக்
கதையளந்த காட்சியோ!
வல்லினந்தான் இடையினத்தால்
வலிவிழந்து போனதும்
மெல்லினமாய் உருபுகெட்டு
வேற்றுமையிற் சாய்ந்ததும்
மெல்லமெல்லச் சார்புமற்று
மெய்உயிர்கள் சிதைந்ததும்
நல்லியல்கள் திரிபடைந்து
நடைபயின்ற சேதமோ!
வகுத்தவழி கொள்கைகள்தாம்
வயிற்றின்வலி ஆக்கமோ
பகுத்துணராப் பண்புகள்தாம்
பாதைமாற்றுத் தேக்கமோ
தொகுப்பதிலே நுண்மையில்லா
தொய்வுகள்தாம் வீக்கமோ
பகுதியான நிலையிழிந்து
விகுதியான தாக்கமோ!
***********************************************************************************************************
thiruv@pc.jaring.my