This entry is in the series 20030911_Issue

பி.கே. சிவகுமார்


வயல்வெளிகளினூடே
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும்
உன் காலடி பார்க்கின்ற
ஞாபகங்கள்

அவ்வப்போது
பெருத்துக் கொழுத்த
எலிகள் விருந்தாகவும்
நோஞ்சானாய் சிறுத்துக்
கருத்த எலிகள் பசிக்காகவும்
வந்து மாட்டுவதுண்டு
விழுங்குவதற்கு முன்
எல்லா எலிகளின்
கண்களின் பரிதாபத்திலும்
உன் ஞாபகங்கள்

சிலவேளைகளில்
இணைத் தேடி காத்திருக்கும்
சாரைகளின் மீது
நஞ்செனும் விந்து பாய்ச்சிருக்கிறேன்
பிணையும்போதும்
இணைந்து பிரியும்போதும்
உன்னுள் என்னை இழந்த
ஞாபகங்கள்

அவ்வப்போது
தலைக்குமேலே வட்டமிடும்
கருடன்களிலிருந்து
தப்பிக்க ஓடியிருக்கிறேன்
புதர்கள் தேடி.
அப்போதெல்லாமும் கூட
உன் பின்னே ஓடிக்
களைத்த ஞாபகங்கள்

எப்போதோ சிலமுறை
கீரியின் பாதையில்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
சீறிச் சீறி சண்டையிட்டபோதும்
விஷம் கக்கி கக்கி
ரத்தம் சிந்த பின்வாங்கியபோதும்
உன்னை வெல்ல முயன்று
தோற்றுப்போன ஞாபகங்கள்

எத்தனை முறை
என்னை மறந்து
உன்னை மறக்கத் தோலுரித்தாலும்
ஒவ்வொரு சட்டையிலும்
திட்டு திட்டாய்
உன் ஞாபகங்கள்

pksivakumar@att.net

Series Navigation