சுவாசலயம்
புதியமாதவி

மெளனவெளியில்
என் இருத்தலை
நிச்சயப்படுத்தும்
சுவாசத்தைப்போல
சத்தமின்றி ஒலிக்கிறது
காற்றுடன் கைகோத்த
சங்கீதம்.
செவிப்பறைகள் தீண்டாத
ஒலியின் அலைகளில்
எழுதப்பட்டிருக்கிறது
இந்த சங்கீதத்தின் மொழி.
எப்போதும் என்னுள் இசைக்கும்
பின்னணி இசையாய்
என் சுவாசலயத்துடன்
உயிர்ப்பறவைக்கு மட்டும் கேட்கும்
உன்னத ராகத்தில்
பாடிக்கொண்டிருக்கிறது
அந்தப் பறவை.
பெயர் தெரியவில்லை.
பெயரிடவும் விருப்பமில்லை.
எனக்காகப் பாடுகிறதா ?
எல்லாமே கற்பனையா ?
விழிதிறக்க அச்சப்பட்டு
கண்மூடித்தடவிக்கொண்டிருக்கிறது
வெளிச்சத்தின் கைகள்.
கண்விழித்தால்
கண்ணில் பட்டுவிடும்
பட்டுப்போன மொட்டைமரங்களின்
நிழல்களில்லாத நிஜத்தைக் கண்டு.
—-
puthiyamaadhavi@hotmail.com