சுயமோகிகளுக்கு…..
இப்னு ஹம்துன்

இயலாமையின்
வெப்பங்களிலிருந்து கசிகிறது
தான்மை
உடைபட்ட கொப்புளத்தின்
சீழினைப் போல.
எல்லாமறிந்தவனென்னும்
போர்வையை
இழுத்துப் போர்த்திக்கொள்ள
இழித்து சொல்லவேண்டியிருக்கிறது
ஏதேனும் அறிந்தவர்களை.
அங்கத இலக்கியத்தில்
தஞ்சமடைந்த படி
காழ்ப்பு மனம்
தன் குரூரப்பற்களின்
குருதி துடைக்கிறது.
நேற்றைய மன்னர்களின்
சமாதிகளைத் தோண்டியெடுத்து
தனக்கான
நாளைய வீதிகளை
சமைத்துக்கொள்ளத்துடிக்கிறது
தற்கிலி குணம்.
எழுத்தின் மேல் கவியும்
நோயறிவால்
இருண்டு விடுகிறது
எழுதுகோல்களின் சுய வெளிச்சமும்.!
(தான்மை – ‘Ego’
தற்கிலி – தனக்குத்தானே ‘கிலி’ ஏற்படுத்திக்கொள்வது. தாழ்வு மனப்பான்மை)
fakhrudeen.h@gmail.com