This entry is in the series 20110508_Issue

லதாமகன்


விருப்பமற்று அலைந்துகொண்டிருக்கிறது
புக விரும்பமில்லாத நீர்
வெட்டிவிடப்பட்ட தக்கையின்
இடைவெளிகளில்
ஆதியில் ஊறிய வன்முறையுடன்
சிப்பி மூடிக்கொண்டிருக்கிறது
தன்னுள் விழுந்து
ஒற்றைத் தூசியின்
உறுத்தலில் ஊறும் அன்னிச்சை நீருடன்
எப்போதும்
உப்பாகாத மீனின் அலைவை
வன்மமற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
செதில்களையுரசும் அலை
கோடுகள் தாண்டா சத்தியங்களுடன்
அதே கடலில்தான் மிதக்கிறது
மனிதர்களைச் சுமந்த தோணி
இதில் எதிலும்
பட்டுக்கொள்ளாததாய் இருக்கிறது
சிலர் வணங்கும் கடல்.

o

அழுக்குகளைக் களைவதாகச் சொல்லி
ஊருக்குள் வந்தபோது
அதை நாம் அறிந்திருக்கவில்லை.
உப்பும் மீனும்
பாசியும் உணவும்
சதையும் மணலும்
தந்துகொண்டிருந்தபோதும்
அதை நாம் அறிந்திருக்கவில்லை
சில உயிர்களைத் தின்றபோதும்
வன்முறையைக் கற்றுக்கொடுத்த போதும்
பிரிவினையைத் தூண்டியபோதும்
எல்லைகளை வகுத்த போதும்
நாம் அதை அறிந்திருக்கவில்லை

இல்லை என்பதை நாம் அறிந்திருக்காதவரை
இருந்துகொண்டுதான் இருக்கும்
எல்லைகளுக்குள் அடங்கும் கடல்.

– லதாமகன்

Series Navigation