சிதைந்த நம்பிக்கை
Published February 19, 2004 • By
கவிநயா
கவிநயா

உனக்காகப் பல கோடி
தீபங்கள் ஏற்றி வைத்தேன்
உள்ளே இழுத்து விட்ட
ஒரே மூச்சில் அணைத்து விட்டாய்
வரவேற்க வண்ண வண்ணக்
கோலங்கள் போட்டு வைத்தேன்
நுழைகையிலே கால்களினால்
மிதித்துக் கலைத்து விட்டாய்
நீ நடக்கும் பாதையெங்கும்
பூ விரித்துக் காத்திருந்தேன்
நடந்து வரும் போதே நீ
நசுக்கிக் கசக்கி விட்டாய்
கனவு பல தேக்கி வைத்து
கற்பனையில் வாழ்ந்த என்னை
சட் டென்று எழுப்பிடவே
சாட்டை அடி தந்தாயோ ?
—