This entry is in the series 20050203_Issue

ஸ்ரீமங்கை


—-

துண்டித்த கோடுகளாய்
சுண்ணம் தீட்டிய நெடுஞ்சாலையின்
அகலத்தில் ப்ரமித்து
ஓரமாய் நடக்கிறேன்- நீ போதித்தபடி.

புகை கக்கிப்போன பேருந்தினின்று
விழுந்த காகிதத்தில்
காய்ந்த இட்லித்துண்டிற்கு
அடித்துக்கொள்ளும் காக்கைகள்,

என்றோ லாரியில் அடிபட்டு
உடல் ஊதி, கால்கள் விரைத்து
அழுகிய நாயின் சடலம்…

சுவாசம் அடக்கி இன்னும் வேகமாய்
நடக்க நடக்க,
மேலும் திணற வைக்கும்,
மனிதக்கழிவுகள்
என நீளும் குண்டும் குழியுமான
சாலையோரங்கள்
நடப்பதற்கு
நீ சொன்ன அளவிற்கு
அப்படியொன்றும் சுகமான பாதைகளில்லை.

எனினும்
சாலைநடுவில் சென்று
இவ்வனாதி நாய் போல் சாவதைவிட
பத்திரமான நடைபாதை பேதம்.
சற்றே சுகாதாரக் குறைவெனினும்…

நான் தவறாகச் சொல்கிறேனோ ?

அன்புடன்
ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com

Series Navigation