This entry is in the series 20060922_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



மரணமே! என்னருமை மரணமே!
திரைமூடி நிறைவேற்றுகிறாய்,
வாழ்க்கை முடிவுக்கு!
வருக! வருக, வந்தென் செவியில்
ஓதுக மெதுவாய்!
ஒவ்வொரு நாளும் நீ,
வருவாயென
வழிமேல் விழிவைத் துள்ளேன்!
வாழ்வின் இன்ப துன்பங்களைத்
தாங்கிக் கொண்டதும்
உனக்காக!
உள்ளத்தின் ஆழத்தி லிருந்து,
ஒருவரும் அறியாது,
உன்மீது ஓடிச் செல்கிறது,
என்னாசை!
இறுதி முறையாக
ஒருமுறை
என்மேல் விழட்டும், உன்
கடைக்கண் பார்வை!
உனக்கென்றும் சொந்தமாகும்,
என்னுயிர்!
மலர்களைப் பின்னிக் கோர்த்து
மாலை தயாராய் உள்ளது,
மணமகனுக்கு!
திருமணம் முடிந்த பிறகு,
மணப்பெண்,
பிறந்தகம் விட்டுத்
தனியாகத் தன்
பிரபுவைச் சந்திக்க செல்வாள்,
ஏகாந்தமான
இரவை நோக்கி!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 17, 2006)]

Series Navigation