This entry is in the series 20010910_Issue

பாரதிராமன்


படிக்கிறவனின் புத்தகத்தைப் பிடுங்கு

எழுதுகிறவனின் எழுதுகோலைப் பறி

பேசுகிறவனின் குரல்வளையை இறுக்கு

கேட்கிறவனின் செவிகளைச் செவிடாக்கு

காண்கிறவனின் கண்களைக் குருடாக்கு

வரைகிறவனின் வண்ணங்களை வீசி எறி

இசைக்கிறவனின் கருவிகளை எடுத்தெறி

இயற்கையைச் சிதை
செயற்கையை விதை
உறவுகளை உடை
உண்மைகளை ஒளி

புரட்சி என்பார்கள்
புத்தியில்லை என்பார்கள்
பரவாயில்லை
காசை மட்டும் காபந்துசெய்.

காணாமற் போக்கியவைகளையும்
காணாமற் போனவைகளையும்
காணாது கழித்தவைகளையும்
காணக் கூடாதவைகளையும்
காண முடியாதவைகளையும்
கண்டு தரும் காசு
கவலையை விடு.

—————————————————————-

Series Navigation