ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு;
வித்யாசாகர்

பெண்ணின் அடையாளத்தை
சிவந்து காட்டும் பொட்டு;
வெற்றியின் உச்சத்தை
பறையறிவிக்கும் –
ஒற்றை திலகம் பொட்டு;
குடும்ப பெண்களின் அழகிற்கு
இன்னொரு –
ஆபரணம் துறந்த அழகு பொட்டு;
நெற்றிக் குளிர்ச்சியில் –
புத்தி திருத்தும் –
செஞ் சூரணம் பொட்டு;
ஸ்டிக்கரில் ஒளிந்து
மடிந்து போன –
கலாச்சார சீர்குலைவு பொட்டு;
பத்தோ இருபதோ காசுக்கு
பிழைப்பு நடத்தும் ஏழைகளின்
ஒற்றை வியாபாரம் பொட்டு;
நீட்டியும்
சுருக்கியும்
குறுக்கியும்
வண்ண வண்ணமாய் ஒளிர்ந்துக் கொண்டாலும்
பழைய சாந்து பொட்டின் வாசனை மட்டும் –
நாசிகளை நனைத்துக் கொண்டே மறைகிறது!
—————————————————————————–