ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….
தினேசுவரி, மலேசியா
நாம் நாமாக…….
இருத்தலில்
நாம் நாமாக
இல்லை………..
உணர்வுகளில்
உடைந்து
பாத்திரங்களின்
வடிவமாய்
நாம்
மாறிக் கொண்டிருக்கிறோம்……..
ஒவ்வொரு
நொடியும்
எல்லாமுமாய்
ஒழுக முடிகிறது
நம்மால்…..
நாமாக
மட்டுமே
முடியாமல்……….
–
ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்……..
இன்னும்
ஒட்டிக்
கொண்டிருக்கிறது
ஒரு கனவும்
கனவு கொடுத்த
ஆசைகளும்…..
கலாச்சார
வேலியில்
பாதி நசுக்கப்பட்டாலும்
பின் நவீனத்துவ
வாழ்க்கையில்
மீதி புதைக்கப்பட்டாலும்
இதயத் துடிப்பின்
முதுகுத் தண்டில்
எங்கோ ஒரு
மூலையில்
புகைந்துக் கொண்டுதான்
இருக்கிறது
ஒரு கனவும்
கனவு கொடுத்த
ஆசைகளும்…..
வித்திட்டவன்
ஆக்கிரமிப்பில்…
நிர்வாணமாக்கப்பட்ட
மனங்களின்
இயலாமையில்…
இளமை தின்று
முடித்த முதுமைகளில்….
நக்கரித்துக்
கொண்டிருக்கும்
நகர அதிர்வுகளில்….
கொஞ்ச கொஞ்சமாய்
களவாடப்பட்டு
போனாலும்….
பறவை இட்ட
எச்சம் போல்
இன்னும் எங்கோ
ஒட்டியிருக்கிறது
ஒரு கனவும்
கனவு கொடுத்த
ஆசைகளும்…………….
– தினேசுவரி, மலேசியா