This entry is in the series 20101121_Issue

ரசிகன்



காதல் சொல்ல வந்து
மௌனங்கள் சொல்கிறாள்!

கால்கள் நீட்டி
ஒன்றின் மேலொன்று போட்டு
கைகள் கட்டிக்கொண்டு
படகு முதுகில்
ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டாள்..

பூ விற்பவளோ
சுண்டல் விற்பவனோ மட்டும்
அவள் மௌனம் களைய அனுப்பப்பட்டவர்கள்!

வார்த்தைகள் மீட்டெடுக்க
அவள் பொறுமை இழப்பதும்
கரையை தொட்டுச்செல்ல
அலைகள் மீண்டெழுவதும்

தவிப்பு தான்
கடலுக்கும் காதலுக்கும்…

ஒரு முறை
என் பெயர் சொல்லி பார்க்கிறாள்!
அந்த மௌனம்
எனக்கு கேட்பதாய் இல்லை…

மறுமுறை
என் பெயர் சொல்லி அழைக்கிறாள்…
“என்ன?” என கேட்க முற்படும்
அந்த இடைவெளியை
அலைகள் நனைத்துப்போக

வினாடிகளின் நேரத்தில்
என் தோள் சாய்ந்து கொண்டாள்
முழுக்காதலையும்
என் உள்ளங்கையில் பிரசுவித்தபடி!

நான் காதலன் ஆகிறேன்…
மௌனம் மௌனமாகவும்
கடல் இன்னும் கடலாகவுமே இருக்கிறது!

-ரசிகன்

Series Navigation